Logo

ஒரு நல்ல பாம்பு

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6650
oru nalla pambu

டத்தை விரித்து சீறிக்கொண்டு ஆடுகிற ஒரு பயங்கரமான நல்ல பாம்பு. அவனைப் பார்த்தாலே பயமாக இருக்கும். பொதுவாக எந்தப் பாம்பைப் பார்த்தாலும், பயப்படுவது நல்லது. இரவு நேரங்களில் எரிகிற பந்தங்களுடன் கிராமவாசிகள் நடந்து போவார்கள். அவர்கள் கையில் ஒரு கொம்பு வேறு இருக்கும். இப்படி அவர்கள் நடந்து போவதைப் பற்றிக் கேட்டால், நகரத்தில் உள்ளவர்கள் சிரிப்பார்கள்.

வெளிச்சமும், வாகனங்களும், தேவையில்லாத ஆர்ப்பாட்டங்களும் கிராமங்களில் கிடையாது. வயலும், மாடும், குண்டும், குழியும், வரப்பும், குளமும், தென்னைமரத்தாலான பாலங்களும், காடுகளும்- இவைதான் கிராமத்தில் உள்ளவை. எலி, தவளை, கோழிக்குஞ்சுகள் போன்றவை பாம்புகளுக்கு மிகவும் விருப்பமான உணவுப் பொருட்கள். எலிகள் என்றால், கண்டபடி அவற்றுக்கு பொந்துகள் இருக்கும்.

கிராமப் புறங்களில் பாம்பைப் பார்க்க முடியாத நாளே இருக்க முடியாது. பாம்புகளைப் பற்றி பல்வேறு வகையான கதைகள் கூறப்படுவதுண்டு. அந்தக் கதைகளை கிராமத்து மக்கள் முழுமையாக நம்பவும் செய்கிறார்கள். பாம்புகளுக்கு பகை உண்டு. யார்மீது விரோதம் தோன்றுகிறதோ, அவர்கள் எங்கே இருந்தாலும் தேடிப்போய் அவர்களைக் கொத்தும். இந்தக் கருத்தை வலியுறுத்துவதற்காக பல கதைகளை வேறு கிராமத்து மக்கள் சொல்ல ஆரம்பிப்பார்கள். ஆனால், உண்மை என்ன தெரியுமா? பாம்புகளுக்கு புத்தி என்று ஒன்று கிடையாது. கேட்கும் சக்தியும் பார்க்கும் சக்தியும் மிகமிகக் குறைந்த அளவிலேயே இருக்கும். இப்படி இருக்கிறபோது கெடுதல் செய்தவர்களை எப்படி ஒரு பாம்பால் யார் என்று கண்டு பிடித்துப் பழிவாங்க முடியும்? சொல்லப்போனால், பழைய போலீஸ் முறையைத்தான் பாம்புகளும் பின்பற்றுகின்றன. திருடன் கையில் கிடைக்காவிட்டால், கண்ணில் படுகிறவனை தூக்குமரத்தில் தொங்கவிடுவது! உண்மையிலேயே தன்னை வேதனைப் படுத்தியவனை அல்ல- முட்டை இட்டுக் கொண்டிருக்கிற காலத்தில் அந்த வழியே யார் நடந்து போனாலும் அவர்களைப் பாம்பு பாய்ந்து கொத்தும். இதுதான் உண்மை. இது இல்லாமல் வெளியே சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் கதைகள் எல்லாமே கட்டுக் கதைகள்தாம். மூடத்தனமான நம்பிக்கைகள் தாம். அதற்காக அப்படியே இந்த விஷயத்தை விட்டுவிட முடியுமா? உடனே நம்முன் வேகமாக வந்து நிற்கும் புராணங்கள்! இதிகாசங்கள்!

அதனால் ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன்.

இதை விதி என்றோ, பகை என்றோ, எதிர்பாராமல் நடந்தது என்றோ- எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

ஸ்ரீஜித் கூனன் குஞ்ஞெறுக்கன் ஒரு பெரிய பணக்காரர். அவர் பாம்பு எதற்காவது கெடுதல் பண்ணியிருக்கிறாரா என்று தெரியவில்லை. நமக்குத் தெரிய வருவது ஒன்றே ஒன்றுதான். அது- கூனன் குஞ்ஞெறுக்கனுக்கு கூன் இல்லை என்பதுதான். என்ன காரணத்தால் கிராமத்து மக்கள் அந்த மனிதரை அப்படி ஒரு பட்டப்பெயர் வைத்து அழைக்க ஆரம்பித்தார்கள் என்பதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.

அவருக்கு கூர்மையான கண்கள். அகன்ற மார்பு. ஆறடி உயரம். நல்ல கருத்த நிறம். இதுதான் கூனன் குஞ்ஞெறுக்கன். அவர் யாரைப் பார்த்தாலும் "அடியே...’’ என்றுதான் அழைப்பார். பெண்களை அல்ல- ஆண்களை.

வாழ்வதற்குத் தேவையான எல்லா வசதிகளும் அவரிடம் இருக்கின்றன. அவருக்கென்று இருக்கும் ஒரு வயலின் ஓரத்தில் சாலையை ஒட்டி இருக்கிறது அவரின் வீடு. இரண்டு அறைகளையும், சமையலறையையும், பெரிய ஒரு வராந்தாவையும் கொண்ட வீடு அது. வீட்டில் அவருடன் அவரின் தாயும், மனைவியும், மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள்.

கூனன் குஞ்ஞெறுக்கன் எப்போதும் படுப்பது வராந்தாவில் இருக்கும் கட்டிலில்தான். அந்தப் பகுதி ஒரு கோணியால் மறைக்கப்பட்டிருக்கும்.

சரியாக பகல் பதினொரு மணி ஆகிவிட்டால், கூனன் குஞ்ஞெறுக்கன் கள்ளு குடிக்க ஆரம்பித்து விடுவார். அதற்காக காலை பொழுது புலர்ந்தது முதல் அவர் வேறு எதையும் இதுவரை சாப்பிடவில்லை என்று அர்த்தமில்லை. அவர் காலையில் படுத்திருக்கும் பாயை விட்டு எழுந்தவுடன், ஒரு பெரிய டம்ளர் நிறைய சாராயத்தை ஒரே மடக்கில்  குடிப்பார். அதுதான் அவரைப் பொறுத்தவரை பெட் காஃபி. பிறகு ஒரு பீடியை உதட்டில் வைத்துப் புகைத்தவாறு காலைக்கடன் கழிக்க வெளியே புறப்படுவார். அந்த பீடியில் கொஞ்சம் கஞ்சாவும் கலக்கப்பட்டிருக் கும். கஞ்சாவும், சாராயமும், கள்ளும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும்? இவன் ஒவ்வொருவனும் தனித் தனியாக இருந்தாலே படு கில்லாடிகள்தான்! எல்லாரும் ஒன்று சேர்ந்தால்... பஹுபஹு தான்! இந்த நிலையில் ஏதாவதொரு நல்ல பாம்பை "அடியே...’’  என்று கூனன் குஞ்ஞெறுக்கன் அழைத்து, அதனால் ஏதாவது பிரச்சினை வந்திருக்குமா என்றெல்லாம் கிராமத்து மக்களுக்குத் தெரியாது. நான் சொல்வது புரிகிறதா? உரிய நேரம் வந்துவிட்டால் அவர் கள்ளு குடிக்க ஆரம்பித்து விடுவார். இந்த நேரம் முதல் கள்ளு குடிக்கும் மனிதர்கள் கிராமத்தில் நிறைய பேர் இருக்கிறார் கள். அவர்கள் கள்ளு குடித்து முடித்து, அவரவர் வழியில் போவார்கள். எல்லா இடங்களிலும் மனிதர்களுக்கு ஏதாவது வேலை நிச்சயம் இருக்கும் அல்லவா? ஆனால், கூனன் குஞ்ஞெறுக்கனைப் பொறுத்தவரை, அவருக்கு வேலை என்று எதுவும் கிடையாது. பன்னிரன்டு மணியாகிறபோது, சாலையில் இறங்கி நிற்பார். யாரையாவது சாலையில் பார்த்தால் ஸ்ரீஜித் கூனன் குஞ்ஞெறுக்கன் உரத்த குரலில் கேட்பார்:


“அடியே! எங்கே போறடி?''

இப்படி வார்த்தைக்கு வார்த்தை "அடியே’’ போட்டு பேசுவது அவரின் வழக்கமாகவே ஆகிவிட்டது.

பெண்களைக் கண்டால் தான் அணிந்திருக்கும் ஆடைகளை அவிழ்த்துப் போட்டு ஆடுவார்.

கூனன் குஞ்ஞெறுக்கன் பொதுவாக வீட்டிற்குப் போய்ச் சேரும்போது இரவு ஒன்பதுமணி ஆகிவிடும்.

கட்டிலில் இருக்கும் பாய் அசையும் சத்தம் கேட்டதும், அவரின் மனைவி வாசலைத் திறந்து விளக்கையும் தண்ணீரையும் எடுத்துக் கொண்டு அவரிடம் வருவாள். சாப்பிட்டு முடிந்ததும், அவர் படுத்து உறங்க ஆரம்பித்து விடுவார்.

அவருக்கு மனைவியைக் கண்டால் பயங்கர பயம். அதனால் வீட்டில் இருக்கிற சமயத்தில் மிகவும் அமைதியான மனிதராக அவர் இருப்பார்.

கூனன் குஞ்ஞெறுக்கனைப் பற்றி நிறைய புகார்கள் போயிருக்கின்றன. தற்போது மட்டும் ஐந்தாறு அடிதடி வழக்குகள் அவர்மேல் இருக்கின்றன. கிராமத்தில் ஒன்றிரண்டு போலீஸ்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மனதில் உண்டாகும் சில கவலைகளால், கொஞ்சம் கள்ளு குடிப்பார்கள். தாங்கள் வாங்கும் சம்பளத்தில் அல்ல அவர்கள் கள்ளு குடிப்பது. ஆதலால், அவர்களைப் பற்றி இங்கு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. கூனன் குஞ்ஞெறுக்கன் பட்ஜெட்டில் இந்தப் போலீஸ்காரர்களும் இருக்கிறார்கள். கண்ணில் காணும் தெய்வம் என்பது மாதிரி, இந்த போலீஸ் காரர்கள்தானே கண்ணில் காணும் அரசாங்கமாக இருப்பவர்கள்!

அப்போது புகார் கொடுத்தவர்கள் என்ன செய்வார்கள்? "உன்னை பாம்பு கடிக்கட்டும்’’ என்று அந்த கிராமத்து மக்கள் கூனன் குஞ்ஞெறுக்கனைப் பார்த்து சாபமிடுவார்கள். கிராமத்தில் பாம்புகளுக்குப் பஞ்சமே இல்லையே! ஆனால் அவர்கள் நினைத்தது மாதிரி ஒரு பாம்புகூட அவரைக் கடிக்கவில்லை. ஏதோ வேலை நிறுத்தம்போல- சொல்லப்போனால், பாம்பு கிராமத்தில் உள்ள யாரையுமே கடிக்கவில்லை. என்ன காரணம்? ஒருவேளை, கிராமத்தில் இருந்த பாம்புகளெல்லாம் வேறு எங்காவது போய் குடியேறி விட்டனவா என்ன? மொத்தத்தில்- கிராமத்து மக்கள் நினைத்தது மாதிரி எதுவும் நடக்கவில்லை. கண்ணில் காணும் அரசாங்கம் ஒரு மாதிரி என்றால் பாம்புகளின் போக்கு இந்த மாதிரி இருக்கிறது!

கூனன் குஞ்ஞெறுக்கன் சாலையில் ஊர் மக்கள் யாரையும் பார்க்க முடியாமல் போனால், அவர்களின் வீடுகளில் ஏறி இடுப்பில் கை வைத்தவாறு பந்தாவாகக் கேட்பார்:

“என்னடி!  உன்னை வெளியிலேயே காணோம். இங்க உட்கார்ந்துக்கிட்டு என்னடி பண்றே?''

அவர் இப்படிக் கேட்கிறபோது, கேட்கப்படும் மனிதர் எந்த பதிலும் கூறாமல் மவுனமாக இருப்பதுதானே உத்தமம்! அப்போது கூனன் குஞ்ஞெறுக்கன் என்ன செய்வார்? அவர் சொல்லுவார்:

“வெளியே ரோட்டு பக்கம் வாடி...''

சொன்னதோடு நிற்காமல், வீட்டில் இருக்கும் ஆளை வலிய இழுத்து சாலைக்கு கொண்டு போய், அவருக்கு நான்கு உதைகள் கொடுத்து அனுப்புவார். இது எல்லாமே ஒருசில நிமிடங்களில் முடிந்துவிடும்.

இப்படித்தான் அந்த கிராமத்து மனிதர்களின் வாழ்க்கை நீங்கிக் கொண்டிருந்தது. வழக்கம்போல சூரியன் உதிக்கிறான். என்றைக்கும்போல அவன் மறையவும் செய்கிறான். அதற்குமேல் சிறப்பாகக் கூறும் அளவிற்கு அங்கு ஒன்றும் நடக்கவில்லை. அப்படியே எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா என்ன? ஒருநாள் விசேஷம் நடக்கத்தான் செய்தது. அந்த விசேஷத்தைப் பார்த்தவள்- கூனன் குஞ்ஞெறுக்கனின் மனைவிதான். உண்மையிலேயே அன்று எந்த அளவிற்கு அவள் பயந்துபோய்விட்டாள் தெரியுமா? இரவு ஒன்பது மணி தாண்டியிருக்கும். கூனன் குஞ்ஞெறுக்கன் வரவேண்டிய நேரம்தான். வராந்தாவில் இருந்த கட்டிலில் பாய் அசையும் சத்தம் கேட்டது. வழக்கம்போல கூனன் குஞ்ஞெறுக் கனின் மனைவி விளக்கையும் நீரையும் எடுத்துக் கொண்டு வாசல் கதவைத் திறந்தாள். என்றைக்கும் நடந்தது அல்ல அன்று நடந்தது.

“அய்யோ... அம்மா!'' என்றொரு அலறல். வயதான தாய் எழுந்தாள். குழந்தைகள் எழுந்தன. எல்லாரும் ஓலமிட்டார்கள்.

சம்பவம் நடைபெற்ற வீடு கூனன் குஞ்ஞெறுக்கனின் வீடாயிற்றே! ஆதலால், கிராமத்து மனிதர்கள் யாரும் வீட்டுப் பக்கம் வரவில்லை. அப்போதும் ஓலமும் கூப்பாடும் தொடர்ந்து கொண்டிருந்தன.

கட்டிலில் கிடந்தது கூனன் குஞ்ஞெறுக்கன் இல்லை. விரிக்கப்பட்ட பாயில் உடலை நிமிர்த்திக் கிடந்தது- ஒரு பெரிய நல்ல பாம்பு! அவன் மெதுவாகத் தலையை உயர்த்தி படத்தை விரித்து சீறியவாறு ஆடினான்.

அன்று இரவு கூனன் குஞ்ஞெறுக்கன் வீட்டிற்கே வரவில்லை. அதற்குப் பிறகும்கூட அவர் வீட்டுப் பக்கமே வரவில்லை. இரவு ஒன்பது மணி வாக்கில் கிராமத்து மனிதர்களில் யாரோ ஒருசிலர் கூனன் குஞ்ஞெறுக்கனைக் கொலை செய்து சாலையில் போட்டிருந்தார்கள்!

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.