Logo

மரணமற்ற மனிதன்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 5989
maranamatra manithan

சேக்கெ என்ற கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்றது. ஆனால், பரவலான அர்த்தத்தில் பார்க்கப்போனால், அது ஒரு கிராமம் அல்ல. வசதிக்காக காட்டுவாழ் மனிதர்களின் அந்தக் குடியிருப்புப் பகுதியை கிராமம் என்று கூறிக் கொள்வார்கள். அந்த காட்டுவாழ் மனிதர்களும் கிராமம் என்ற பெயரை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், கிராமத்தின் தலைவரை நாகரீகமான முறையில் அவர்கள் காம்படா என்று அழைத்தார்கள்.

உயரமான மரக் கால்களை ஊன்றி, மேற்கூரை அமைத்து, மலை வாழையால் வேயப்பட்ட உயரமான குடிசைகளில் அவர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அடுப்பும் நெருப்பும் அந்தக் குடிசைகளுக்குள் இருந்தன. எப்போதும் பனி விழுந்து கொண்டிருந்த அந்த இமயமலைப் பகுதிகளில் நெருப்பைச் சுற்றிலும் படுத்து உறங்கத்தான் முடியும். குடிசையில், குழைத்த மண்ணால் உருவாக்கப்பட்ட அடுப்பில் விறகை வைத்து எரியச் செய்து, இங்குமங்குமாக தாயும் பிள்ளைகளும் அண்ணனும் தம்பிமார்களும் சுருண்டு படுத்து தூங்கிக் கொண்டிருப்பார்கள்.

அடர்த்தியான காடுகளில் வசிக்கக் கூடிய இந்த ஆதிவாசிகளின் குடியிருப்புகளுக்கு இந்திய ராணுவத்தின் ஒரு சிறிய பிரிவு சென்றிருந்தது. சிறிய பிரிவு என்று எதற்காகக் கூற வேண்டும்? அவர்கள் மொத்தம் பதினான்கு பேர் இருந்தார்கள். ஏதோ "ஃபீல்ட் சர்வேயிங்” கம்பெனியிலிருந்து ஒரு கேப்டனும் ஒரு நாயக்கும் மூன்று சிப்பாய்களும் சிக்னல்ஸிலிருந்து ஒரு ரேடியோ மெக்கானிக்கும் ஒரு ஆப்பரேட்டரும், அவர்களுக்கு உதவுவதற்காக அஸ்ஸாம் ரைஃபில்ஸிலிருந்து ஆறு சிப்பாய்களும் ஒரு ஹவில்தாரும். விருப்பமிருந்தால் பதினான்கு பேர் இருக்கிறார்களா என்று கணக்குப் போட்டு பார்க்கலாமே! இவர்கள் தவிர, இவர்களுடன் ஆதிவாசிகளின் மொழியைத் தெரிந்திருக்கும் மொழிபெயர்ப்பாளரும் இருந்தார்.

வட கிழக்கு எல்லைப் பகுதிகளில் இருக்கும் மலைச் சரிவுகளிலும் அடர்ந்த காடுகளிலும் வசிக்கும் இந்த ஆதிவாசிகளின் குடியிருப்பு களுக்கு அவர்கள் பயணித்துக் கொண்டிருந்தார்கள். காடுகளிலும் மலைகளிலும் நதிகளின் கரைகளிலும் என்று அவர்கள் ஒன்றோ ஒன்றரையோ வருடங்கள் இருந்தார்கள். எனினும், அவர்கள் எதற்காக அந்த இடங்களில் வந்து தங்கியிருக்கிறார்கள் என்று பலருக்கும் சந்தேகம் இருந்தது. எல்லையை உறுதி செய்து சர்வே எடுப்பதற்காகவும் திபெத் வழியாக தேவையற்ற நோக்கங்களுடன் வெளி நாட்டினர் கடந்து வருகிறார்களா என்பதைக் கண்டு பிடிப்பதற்காகவும் வந்து தங்கியிருக்கிறார்கள் என்ற கருத்து அவர்களிடையே இருந்தது. இந்தியாவின் நான்கு எல்லைகளுக்குள் வசித்துக் கொண்டிருக்கும் அந்த நாகரீகமற்ற மனிதர்களுக்கு, சுதந்திர இந்தியாவின் வாழ்த்துகளும் மரியாதைகளும் கிடைத்திருக்கின்றன என்று தோன்றியது. ஏனென்றால், ஒவ்வொரு கிராமத்திற்கும் ஏராளமான பரிசுப் பொருட்களையும் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான வெள்ளை நிற உப்பையும் இந்த ராணுவப் பிரிவினர் தனிப்பட்ட கவனம் செலுத்தி கொண்டு சென்றிருந்தார்கள். ஒரு நாள் அஸ்ஸாம் ரைஃபில்ஸில் பணியில் இருந்த மொழி பெயர்ப்பாளர் தித்தோரிவா, கிராமத்தின் வயதான மனிதர்களிடம் பேசி ராணுவப் பிரிவின் மிகப் பெரிய சுமைகளைத் தூக்கிச் செல்லக் கூடிய ஆட்களைத் திரட்டினான். அவர்கள் நீண்ட நாட்களுக்கு பத்திரப்படுத்தி வைத்திருக்க வேண்டிய உணவுப் பொருட்களையும் கூடாரங்களையும் கேன்வாஸ்களையும் எடுத்துக் கொண்டு சென்றார் கள். இன்னும் சொல்லப்பேனால், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானங்கள் அவர்களுக்குத் தேவையான அவசியப் பொருட்களை அவர்கள் இருக்கும் இடங்களில் பாராசூட்களில் போடுவார்கள். எல்லைப் பகுதிகளில் சேவையில் ஈடுபட்டிருக்கும் காலம் வரை இந்தப் பட்டாளக்காரர்களின் குடும்பங்களுக்கு கடிதத் தொடர்புகள் நடத்திக் கொண்டிருந்தவர்களும் பணம் அனுப்பிக் கொண்டிருந்தவர்களும் அவரவர்களுடைய யூனிட்டைச் சேர்ந்த கமாண்டர்கள்தான்.

"உங்களுடைய மகன் நாட்டிற்காக மிகப் பெரிய பணியைச் செய்து கொண்டிருக்கிறார். தைரியமாக இருங்கள்.”

"உங்களுடைய தைரியமான கணவர் நாட்டிற்குச் சேவை செய்வதற்காக தியாகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அறியும்போது உங்களுக்கு மதிப்பு உண்டாகும். நலமாக இருக்க வாழ்த்துகள்!'

ராமச்சந்திரனின் தாய்க்கும் நலம் விசாரித்து கடிதங்கள் கிடைத்துக் கொண்டிருந்தன. அவனோ, சேக்கெ என்ற கிராமத்தில் ஜுரத்தால் பாதிக்கப்பட்டு அங்கும் போக முடியாமல் இங்கும் போக முடியாமல் படுக்கையில் படுத்திருந்தான்.

வீட்டிற்கு தன்னைப் பற்றி யாராவது ஏதாவது எழுதுகிறார்களா என்று ராமச்சந்திரனுக்குத் தெரியாது. தெரிந்திருந்தாலும் அவனுடைய எதிர்ப்பிற்கு உரிமை இல்லை என்று நம்பலாம். அவன் எப்போதும் தன் தாயை ஏமாற்றிக் கொண்டிருந்தான். ஒரு பாராசூட் வீரனின் வாழ்க்கையைப் பற்றி அவனுக்கு வேண்டியவர் களுக்கு எதுவுமே தெரியாது. அவன் பரந்து கிடக்கும் வெட்ட வெளியில், விரியும் சில்க் குடையில் தொங்கியவாறு இறங்கிக் கொண்டிருப்பான். நான்கு நாட்களுக்கு முன்னால் தான் நலமாக இருப்பதாக அவன் எழுதிய கடிதத்தை அப்போது அவனுடைய தாய் வாசித்துக் கொண்டிருப்பாள். பாராசூட்டில் மெதுவாக இறங்கும் போது அவன் இந்த தமாஷான விஷயத்தைப் பற்றி நினைத்துப் பார்ப்பான்.

சுருண்ட தலைமுடியையும் நடுத்தர உயரத்தையும் மங்கலான நிறத்தையும் கொண்டிருக்கும் அந்த இளைஞன் எதற்கும் எப்போதும் தயாராக இருப்பான். எல்லா பிரச்சினைகளிலும் சற்று தலையிட்டுப் பார்க்கக் கூடிய ஆர்வம் அவனுடைய கருப்பு நிறக் கண்களில் தங்கி நிற்பதைப்போல தோன்றும். ஹவில்தார் கங்கா பிரசாத்திற்கு இந்த விஷயம் நன்றாகத் தெரியும். அதனால் தான் செல்லக்கூடிய இடங் களுக்கெல்லாம் ராமச்சந்திரன் தன்னுடன் வரவேண்டும் என்று அவன் வற்புறுத்திக் கூறுவான். ஸ்பெஷல் முகாம்களுக்கு ஹவில் தாருடன் இயல்பாகவே ராமச்சந்திரனும் பயணிக்க வேண்டியது வந்தது.

வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ்வதற்கு அவன் ஆசையுடன் இருந்தான். மரணத்தை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு விளையாடும்போது மட்டும்தான் அந்த பாழாய்ப்போன இளைஞனுக்கு சந்தோஷமே உண்டாகும். தன் தாயின் நூறாயிரம் மனக் குறைகள் அவனுக்கு முன்னால் கிடந்தன. "உன் முகத்தைப் பார்த்து விட்டு நான் கண்களை மூட வேண்டும்' என்று அவள் கூறுவாள். "நான் இப்போது என்ன சாகப் போகிறேனா?” என்று உடனே அவன் கேட்பான்.

ராமச்சந்திரன் இறந்துவிடுவான். கேப்டனும் ஹவில்தாரும் நண்பர்களும் நம்பிக்கையை இழந்து விட்டிருந்தார்கள்.

மாதக் கணக்காக ஆபத்தோ விபத்தோ இல்லாமல் அவர்கள் பயணம் செய்தார்கள். அடுக்கடுக்காக இருக்கும் மலைகளில் ஏறி இறங்கி, நதிகளைக் கடந்து, கிராமங்களை விட்டு கிராமங்களுக்குப் பயணம் செய்தார்கள். இயற்கையுடன் சேர்ந்து மனுதர்களும் மாறி விட்டிருந்தார்கள். நன்கு பழகிவிட்ட அனைத்து சமூக மரியாதை களையும் மோகன்வார்டி புகை வண்டி நிலையத்திலேயே விட்டு விட்டு வந்து விட்டார்கள்.


பிறகு பல வண்ணங்களையும் கொண்ட அடர்த்தியான துணியால் உண்டாக்கப்பட்ட மார்புக் கச்சைகளை அணிந்திருக்கும் பெண்கள் பெரிய கத்தியைக் கொண்டு நிலத்தைக் குத்திக் கிளறி சேறாக ஆக்கி நாற்று நடுவதைப் பார்த்தார்கள். இரண்டு பக்கங்களிலும் மூக்கில் ஓட்டை போட்டு வளையம் அணிந்து பெரிதாக்கப்பட்ட அவர்களுடைய முகம் முழுவதும் பச்சை குத்தி அலங்கோலமாக்கப்பட்டிருந்தது.

காட்டுவாழ் மனிதர்களின் குடியிருப்பை அடைந்தவுடன் தித்தோரிவா, காம்படாவை அழைப்பான். பட்டாளக்காரர்கள் வந்திருக்கும் தகவலை கிராமம் முழுவதும் ஏற்கெனவே தெரிந்து கொண்டிருப்பார்கள். இந்த ஆதிவாசிகளுக்கு அவர்களுக்கென்றே உள்ள தகவல் பரிமாற்ற முறைகள் இருந்தன. நிர்வாண கோலத்தில் இருக்கும் ஆண்கள் குடிசைகளை விட்டு வெளியே வருவார்கள். பெண்கள் அங்கு எங்கும் இருப்பது மாதிரியான ஒரு அடையாளமும் இருக்காது. ஆக்கிரமிப்பு எண்ணம் கொண்ட நாகரீக மனிதர்களுக்கு பயந்து பெண்கள் குடிசைகளுக்குள் மறைந்து கொண்டு இருப்பார்கள்.

முதலில் டிட்டாச்மெண்ட்டிற்கென்று இடத்தைப் பிடிக்க வேண்டும். சம நிலையில் இருக்கும் நிலத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் கொண்டு வந்திருக்கும் கருவிகளைப் பயன்படுத்தி காட்டு வாழ் மனிதர்கள் காட்டை வெட்டி நிலத்தைச் சீர் செய்து மரக் கொம்புகளை ஊன்றி கொம்புகளைப் பரப்பி கட்டில்கள் உண்டாக்கு வார்கள். இன்னொரு இடத்தில் பொருட்களை வைக்கக் கூடிய வசதியை உண்டாக்குவார்கள். அவர்கள் நெருப்பை மூட்டி, ஊற்றுக் களில் இருந்து எடுத்துக் கொண்டு வரப்பட்ட நீரைக் கொதிக்க வைப்பார்கள். ராமச்சந்திரனும் கங்கா பிரசாத்தும் வயர்லஸ்ஸைத் திறந்து தங்களுடைய அப்போதைய நிலையையும் சூழ்நிலையையும் தலைமை அலுவலகத்திற்கு அறிவிப்பார்கள்.

மொழி பெயர்ப்பாளரின் உதவியுடன் கேப்டன் ஹண்டுவும் காம்படாவும் பேசிக் கொள்வார்கள். டிட்டாச்மெண்ட் அங்கு இரண்டோ மூன்றோ நாட்கள் தங்கவேண்டும். விறகும் நீரும் வேண்டும். ஆதிவாசிகள் வேட்டைக்குப் போவதாக இருந்தால், மான் மாமிசம் கிடைத்தால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் டிட்டாச்மெண்ட் நாளையே புறப்பட்டு விடும். சுமைகளைத் தூக்கிச் செல்வதற்கு கூலிக்காரர்கள் வேண்டும். இன்றைய ஆட்கள் தங்களு டைய கிராமத்திற்குத் திரும்பச் செல்கிறார்கள். கிராமத்தின் தலைவன் எல்லா உதவிகளையும் ஒத்துழைப்பையும் அளிப்பதாக வாக்குறுதி அளிப்பான். அவனுக்கு தனிப்பட்ட வகையிலும், கிராமத்திற்குப் பொதுவாகவும் வெள்ளை நிற உப்பையும் துணிகளையும் பரிசுப் பொருட்களாகக் கொடுப்பார்கள்.

எல்லா ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்ட பிறகு, கேப்டனும் ஹவில்தார்களும் நாயக்கும் வட்டமாக உட்கார்ந்து குடிப்பார்கள். "ரேங்க்” பற்றிய எல்லா வேறுபாடுகளும் அப்போது இல்லாமற் போய் விட்டன. குடித்து நிதானத்தை இழந்தவுடன், ஹவில்தார் கங்கா பிரசாத் கேப்டனின் மடியின்மீது விழுவான். அவன் அழுது கொண்டிருப்பான்.

“ஸாப்... என் தங்கமான ஸாப்..''

“என்ன கங்கா பிரசாத்?''

“என் தங்கமான ஸாப்.. நாங்கள் எந்த அளவிற்கு அதிர்ஷ்டசாலிகள்! உங்களைப்போன்ற ஒருவருடன் வேலை செய்யக் கூடிய அதிர்ஷ்டம் எங்களுக்குக் கிடைத்ததே!''

அவன் கேப்டனின் வளர்ந்த நரைத்த தாடியைத் தடவ ஆரம்பிப்பான். தாறுமாறாக வளர்ந்திருக்கும் தாடியின் முடிகளைக் கிள்ளி வேதனை உண்டாகும்படி செய்வான். ஹவில்தாரின் கன்னத் தில் தொடர்ந்து கண்ணீர் வழிந்து கொண்டிருக்கும். ராமச்சந்திரன் இந்த புதிய உத்தியைப் பற்றி ஆச்சரியப்பட்டிருக்கிறான். கங்கா பிரசாத் மிகச் சிறந்த காக்கா பிடிப்பவன் என்று அவனுக்குத் தெரியும். புதிய இடத்தில் புதிய உத்தி!

ராமச்சந்திரன் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற விஷயத்தை கங்கா பிரசாத் தெரிந்து கொண்டான்.

“என்ன தங்கமான ஸாப்!'' அவன் தேம்பியவாறு அழைத்தான்.

“என்ன?”

“என் ராமச்சந்திரனைப் பாருங்க. என்ன ஒரு ஜவான்! என்ன ஒரு மெக்கானிக்! அவன் தொட்டால் எப்படிப்பட்ட செட்டும் பாட ஆரம்பித்து விடும். ஸாப். எனக்கு அவனைப் பற்றித் தெரியும். அவன் இல்லாமல் நான் ஒரு வயர்லெஸ் செட்டையும் ஏற்றுக் கொள்மாட்டேன். நீங்கள் ராமச்சந்திரனை நினைக்க வேண்டும். அவனுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும். அவன் கைமீது கோடுகள் வைக்கப்பட்டு நான் பார்க்க வேண்டும். எனக்கு இருப்பது அந்த ஒரே ஒரு ஆசைதான். ஸாப், நீங்க எவ்வளவு நல்லவர்!''

கேப்டன் ஹண்டுவின் தலைக்குள் வெப்பம் உண்டாகி இருக்க வேண்டும். இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், அவரவர்கள் தங்களுடைய ஆட்களைப் பிடித்து வைக்கப் பயன்படுத் தும் குறுக்கு வழிகளைப் பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும்.

“சரி... பிரசாத்ஜி...''

கேப்டன் கூறுவார்.

“ஏய் ஹவில்தார் கோச்... நாயக் பாபுராம்... காதில் விழுந்ததா? நீங்கள் எல்லா சிப்பாய்களின் பெயர்களையும் எழுதி இன்றே என்னிடம் தர வேண்டும். நம்முடைய மதிப்பு மிக்க இந்தப் பதவியைவிட்டு போவதற்கு முன்னால், அவர்களையெல்லாம் பதவி உயர்வு அளித்து மேலே கொண்டு செல்ல வேண்டும். ராமச்சந்திரனும் ஹம்ஸராஜூம் பிக்குவும்... அவர்கள் எல்லோரும் கோடு வைத்துக் கொள்ளட்டும். அழக்கூடாது! என் கங்கா பிரசாத், நீ அழுவதைப் பார்க்கும்போது எனக்கு என் தந்தையின் ஞாபகம் வருகிறது. பிறகு, நானும் அழுது விடுவேன். ஒரு கேப்டன் அழுகிறான் என்றால், அது எந்த அளவிற்கு கேவலமான விஷயமாக இருக்கும்!'

அஸ்ஸாம் ரைஃபில்ஸைச் சேர்ந்த பிக்குவும் சர்வே செய்யும் ஹம்ஸராஜும் காட்டுவாழ் மனிதர்களின் மொழியில் சண்டை போட ஆரம்பித்திருந்தார்கள்.

“அபு அலமா!''

“அலுது அலுது அலு... ஆயா...''

பிக்குவிற்கு முழுமையாகக் கூறத் தெரியாது. உப்பைக் கொடுத்து பெண்களை வசீகரிக்கலாம் என்று அவன் தன் நண்பனுக்கு ஆலோசனை கூறுகிறான்.

அடுப்பிற்கு விறகை வெட்டித் தரும்போது ஒருவன் "டப் டப்” என்று ஆரம்பித்து "லெஃப்ட் ரைட்'டில் முடிந்த ஒரு பாடலை உண்டாக்கி பாடினான். எல்லாரும் ஒரு நாளைய களைப்பையும் பல நாட்களின் கவலைகளையும் மறந்து விட்டிருந்தார்கள்.

இருட்ட ஆரம்பித்தவுடன், ஆதிவாசிகள் கிராமத்திற்கு அருகில் விறகை வைத்து நெருப்பு பற்ற வைத்தார்கள். வேட்டைக்குச் சென்றவர்கள் திரும்பி வருவதற்கான நேரமாகி விட்டது. அவர்கள் மாமிசத் துண்டுகளை நெருப்பில் சுட்டவாறு கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நெருப்பைச் சுற்றி நடனமாடிக் கொண்டிருந்தார்கள். முதலில் எடுத்தவுடன் உங்களுக்கு பயம் தோன்றும். மனித மாமிசத்தைச் சாப்பிடும் ஏதோ காட்டு வாழ் மனிதர்களைப் பற்றிய நினைப்பு வரும். அஸ்ஸாம் ரைஃபில்ஸைச் சேர்ந்த சிப்பாய்கள் குண்டுகள் நிறைக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் காவல் காத்துக் கொண்டு நிற்கிறார்களே என்று மனதில் சமாதானம் நிலவச் செய்யலாம். அவர்கள் அம்பு, வில் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடியவர்கள்.


அவரவர்கள் தாங்கள் வெட்டி எடுத்த மண்டை ஓடுகளை காட்சிப் பொருளாக வைத்திருக்கும் மனித இனத்தைப் பற்றி எப்போதோ படித்த விஷயங்கள் நினைவுக்கு வரும். காட்டுவாழ் மனிதர்களின் ஆட்டமும் பாட்டும் ஆரவாரங்களும் கூக்குரல்களும் முடியும்போது, நீங்கள் போர்வையை மூடிக் கொண்டு கட்டிலில் படுத்து வானத்தையும் நட்சத்திரங்களையும் கண்களை அகல விரித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பீர்கள். உறக்கத்தில் பயப்படக் கூடிய கனவுகளைக் கண்டு, வாய்விட்டு கூப்பாடு போடுவீர்கள்.

மறுநாள் இருப்பிடங்களில் இருந்து மரப் பட்டைகளால் ஆன ஆடைகளைக் கொண்டு நாணத்தை மறைத்திருந்த பெண்கள் பதுங்கிப் பதுங்கி எட்டிப் பார்ப்பதைப் பார்க்க முடிந்தது. அவர்களுடைய வெண்மையாகவும் கொழுத்து தடித்தும் இருந்த கால்கள் கடைந்தெடுத்த அழகை வெளிப்படுத்தின. ராணுவப் பிரிவு ஒன்றோ இரண்டோ நாட்கள் அந்த இடத்தில் தங்கியிருப்பதாக இருந்தால், இந்தப் பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாவதற்கு இடம் இருக்கிறது. அவர்களுடைய சதைப் பிடிப்பான மார்பகங்களும் ரத்த நிறத்தில் இருந்த உதடுகளும் சிவந்த கன்னங்களும் நீல நிறக் கண்களும் மாறி மாறி பார்க்கும்போது... நீங்கள் அவர்கள் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க ஆரம்பித்து விடுவீர்கள். ஆரம்பத்தில் பதைபதைப்பு அடைவீர்கள். அவர்கள் ஆண்களுடன் சேர்ந்து பட்டாளத்தைச் சேர்ந்தவர்களுடன் பழகுகிறார்கள். கால் முதல் தலை வரை உரோமத்தால் ஆன துணியால் மூடப்பட்டு, முகம் நிறைய வளர்ந்திருக்கும் தாடி உரோமங்களுடன் இருக்கும் அந்த நாகரீக மனிதர்களும் ஆச்சரியப்படத்தக்க நிலையில் உள்ள மனிதர்கள்தான், ஆக்கிரமிப்பதற்காக வந்தவர்கள் அல்லர் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டியதிருந்தது. அவர்களுக்கும் அது ஆச்சரியத்தை அளிக்கக் கூடிய ஒரு விஷயமாக இருந்தது. எப்போ தும் குளிர் நிறைந்திருக்கும் அந்த இமயமலைப் பகுதிகளில் இருக்கும் மனிதர்களுக்கு தாடி உரோமம் இல்லாமலிருந்தது. சில நேரங்களில் புருவம்கூட இல்லாத முகங்களும் இருந்தன. அழுக்கில் புரண்ட தங்கத்தைப் போன்றிருந்த அவர்களுடைய மேனியும், உரோமங்களைக் கொண்டவர்களும் ஆடைகள் அணிந்தவர்களுமான புதிய மனிதர் களுடைய சரீரமும் எவ்வளவுதான் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டாலும், அந்த பெண்களிடம் உண்டான ஆர்வம் சிறிதும் மறையவே இல்லை.

பெண்களுடன் தனிப்பட்ட முறையில் பழகக் கூடாது என்ற பலமான உத்தரவு இருந்தது. ஆதிவாசிகளுக்கு மத்தியில் விபச்சாரமும் பலாத்காரமும் மிகப் பெரிய குற்றச் செயல்களாகக் கருதப்பட்டன. ஆனால், விருப்பப்பட்ட பெண்களை நீங்கள் எல்லாருக்கும் தெரியும் படி தழுவலாம். பட்டாளக்காரர்களிடமிருந்து பெரும்பாலான பொருட்களை அவர்கள் இதுவரை பார்த்ததே இல்லை. ஹாவர் ஸாக்குகளின் பித்தளை பக்கில்களைப் பிய்த்து தர வேண்டுமென்று அவர்கள் கையால் சைகை செய்து கெஞ்சிக் கேட்பார்கள். காதில் கட்டித் தொங்க விடுவதற்குத்தான். அலுமினியத்தால் ஆன சோப்பு டப்பாவை ஒருத்தி கேட்டாள். உப்பைப் போட்டு வைப்பதற்குத்தான். அவர்களை சந்தோஷப்படுத்தி விட்டால் போதும்; அந்த எந்தவித தொந்தரவுகளையும் தராத பெண்கள் ஆட்டுக் குட்டிகளைப் போல உங்களுடன் வந்து சேர்ந்து கொள்வார்கள். அப்போது பட்டாளக் காரர்கள் அவர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டு, அவர்களை கிச்சுக் கிச்சு மூட்டி சிரிக்கச் செய்து, முத்தம் கொடுத்து, மார்புடன் சேர்த்து இறுக்கமாக அணைத்துக் கொள்வார்கள்.

சொல்லப்போனால், டிட்டாச்மென்ட் மறுநாளே புறப்பட இருக்கிறது. கிராமத்தின் தலைவன் சுமை தூக்குபவர்களை அழைத்துக் கொண்டு வந்தான். பெண்களும் இருந்தார்கள். அவர்கள் மரப் பட்டையையோ பின்னப்பட்ட புற்களையோ கொண்டு நாணத்தை மறைத்திருப்பார்கள். பட்டாளக்காரர்கள் அவர்களையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். கீழே பார்ப்பார்கள்!

“என் தம்பிரானே!''

“நில்லு... நில்லு...'' கேப்டன் உரத்த குரலில் கூறினார்.

மொழிபெயர்ப்பாளர் இடையில் புகுந்து கேட்டான்: “என்ன?''

“அவர்களுக்கு கொஞ்சம் துணிகளைத் தர வேண்டும்.''

கிராமத்தின் தலைவன் பெண்களை அழைத்துக் கொண்டு குடிசைகளுக்குத் திரும்பச் சென்றான். பட்டாளக்காரர்களும் ஆண்களும் அமர்ந்து பழைய துணிகளைக் கொண்டு சிறிய ஆடைகளை அதற்குப் பிறகு தைப்பார்கள். அடுத்த கிராமத்திற்குச் சென்றால், கிராமத்தின் தலைவனிடம் சுமைகளைத் தூக்குவதற்காக வரும் பெண்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு, அவர்களுக்காக முந்தைய நாளே சிறிய ஆடைகளைக் கொடுத்தனுப்பி விடுவார்கள். பெண்கள் இடுப்பையும் மார்பையும் மறைத்துக் கொண்டு பட்டாளக் காரர்களுக்கு மத்தியில் சுமைகளைத் தூக்கிக் கொண்டு நடந்தார்கள். அவர்கள் மீண்டும் அடுக்கடுக்காக இருந்த மலைகளில் ஏறி இறங்கினார்கள். ஊஞ்சலைப் போல ஆடிக் கொண்டிருந்த மூங்கிலால் ஆன பாலங்கள் தொங்கிக் கொண்டிருந்த நதிகளைக் கடந்து சென்றார்கள். தொலை தூரத்தில் நீல நிற வான விளிம்பில் வெள்ளித் துண்டுகளைப்போல இமயமலைத் தொடர்கள் தெரிந்தன. எப்போதும் மழை பெய்து கொண்டோ பனி விழுந்து கொண்டோ இருக்கும். பாதை முழுவதும் பாறைகளின் இடுக்குகள் வழியாக ஊற்றுகள் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தன. குண்டுகள் நிரப்பப்பட்ட ரைஃபில்களைத் தோளில் அணிந்திருந்த பட்டாளக்காரர்கள் ஐந்தோ ஆறோ சுமை தூக்குபவர்களுக்கு இடைவெளி விட்டு பாதங்கள் பதித்து நடந்து சென்றார்கள். அவர்கள் தங்களு டைய கேடு கெட்ட நிலைமையை நினைத்து மனதில் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். தங்களுடைய குடும்பங்களைப் பற்றிய ஆழமான சிந்தனைகளில் மூழ்கியவாறு, அவர்கள் வழி தெரியாமல் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

எப்போதும் ராமச்சந்திரன்தான் முன்னால் செல்வான். வாரங்களும் மாதங்களும் கடந்த பிறகும் இந்த வாழ்க்கைமீது நெருக்கம் அதிகரித்துக் கொண்டேதான் வந்திருக்கிறது. வசதிகள் ஒரு முறைதான் கிடைக்கும். கிடைத்த வசதிகளை மிகவும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கையை இருக்கும் நிலையிலேயே பார்த்து அறிந்து கொள்ளக் கூடிய தன்னுடைய செயலை அவன் எந்தச் சமயத்திலும் தளர்ந்து போவதற்கு சம்மதித்ததே இல்லை.

வேகமாகப் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் ஒரு நதியின் மூங்கிலால் ஆன பாலத்திற்கு முன்னால் ஒருநாள் கேரவன் (பயணக் குழு) திகைப்படைந்து நின்று விட்டது. இந்த ஆதிவாசிகள் மூங்கில் வளையங்களாகப் பின்னி, தொட்டிலைப்போல இரண்டு கரைகளிலும் நின்று கொண்டிருக்கும் மரங்களில் கட்டித் தொங்க விடப் பட்டிருந்த அந்த பாலம் காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. நீரலை அசைய, பாய்ந்து கொண்டிருந்த நதியிலிருந்து கிளம்பிய நுரையும் குமிழ்களும் தொங்கிக் கொண்டிருந்த மூங்கில் பாலத்தின்மீது வேகமாக மோதித் தெறித்துக் கொண்டிருந்தன. கேப்டன் ஹண்டு தன்னுடைய பட்டாளக்காரர்களின் முகத்தைப் பார்த்தார். அவர்களோ, கால் சுவடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ராமச் சந்திரன் முன்னோக்கி வந்தான். கேப்டன் தன்னுடன் இருந்த அந்த ஒரே ஒரு மதராஸியை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்.

“கடக்கலாமா?'' கேப்டன் கேட்டார்.

“ஜி, ஸாஹேப்.''

குறும்புத்தனம் நிறைந்த அவனுடைய கண்கள் பிரகாசிப்பதை கேப்டன் பார்தார்.


“நான் கடக்கட்டுமா?'' ராமச்சந்திரன் கேப்டனிடம் கேட்டான். புன்னகைப்பதற்காக மலர்ந்த அவனுடைய உதடுகளுக்கு நடுவில் சற்று அகலமான முன்வரிசைப் பற்கள் தெரிந்தன. வெறும் ஆர்வத்தால் மட்டும் பாலத்தைக் கடக்கப் போவதைப் பார்த்துக் கொண்டு அவன் நின்றிருந்தான். கேப்டன் வாய் முழுக்க சிரித்தார்.

“கடந்து செல்.''

ரைஃபிலைத் தோளில் அணிந்து சரி செய்து கொண்டு ராமச்சந்திரன் மரத்தில் ஏறி, மூங்கில் வளையத்தின்மீது கால்களை எடுத்து வைத்தான். எலிப்பொறியின் ஞாபகம்தான் வந்தது. ஆள் தடுமாறி கீழே விழுந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மிகவும் நெருக்கமாகப் பின்னப்பட்ட அந்த வளையம் ஆட்டத்தை ஆரம்பித்தது. நிமிர்ந்து நிற்க முடியாது. பாதியாக குனிந்த அவன் ஒரு அடி எடுத்து வைத்து கீழே மிதித்தான்.

நதியின் நடுப்பகுதியை அடைந்தபோது, அவன் தன்னையே மறந்து விட்டிருந்தான். பாலம் ஊஞ்சலைப்போல ஆடிக் கொண்டிருந்தது. தவிட்டு நிறத்தில் நதி நுரையுடன் பாய்ந்தோடிக் கொண்டிருந்தது. அப்போது அவன் தன் தாயைப் பற்றி நினைத்துப் பார்த்தான். தூக்கம் வருவது வரை அவனுடைய தாய் அவனை தொட்டிலில் படுக்க வைத்து ஆட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். அவனோ வேண்டுமென்றே உறங்காமல் படுத்திருப்பான். அவனுடைய அன்னை கதைகள் கூறுவாள். உறங்கிவிட்டால் பாதி கதையைத்தான் கேட்க முடியும் என்பதற்காக தொட்டிலை ஆட்ட சம்மதிக்க மாட்டான். அவனுக்கே தெரியாமல் உடல் வளர்கிறது, மனம் விசாலமாகிறது. ஓ... நாசம்! எந்தவொரு முடிவுமே இல்லாத ஊஞ்சலாட்டம் இது! என் அன்னையே! அந்தக் கரையை அடைந்த வுடன் அவன் முழுமையாக வியர்த்து குளித்திருந்தான்.

ராமச்சந்திரனை அடியொற்றி ஒவ்வொருவராக அவர்கள் நதியைக் கடந்தார்கள். இந்தக் கரையை அடைந்தவுடன் ஒவ்வொரு வரும் கீழே விழுந்தார்கள். வேகமாக பாய்ந்தோடிக் கொண்டிருந்த நதியைப் பார்த்தபோது, அவர்களுடைய மனம் நடுங்க ஆரம்பித்தது. அந்தப் பக்கமாகக் கடக்க வேண்டும். ஹே! இனி முடியாது.

ஓய்வெடுத்து விட்டு, உணவு சாப்பிட்டு முடித்து அவர்கள் மீண்டும் புறப்பட்டார்கள். நதிக்கரையின் வழியாக அவர்கள் நடந்தார்கள். நடக்கும்போது சிரமங்கள் மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டு வந்தன. செங்குத்தான மலையில் இருந்த பாதையில் மெதுவாக நகர்ந்து ஏறினார்கள். மலையின் இடுக்கின் வழியாக நதி சீறிப்பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தது. மலையின் ஆழமான பள்ளங்களில் வளர்ந்திருந்த மஞ்சள் நிறப் பாசிகள் பிரகாசித்துக் கொண்டிருந்தன. மலையின் கூர்மையான நெற்றியின் வழியாக கவனமாகப் பார்த்து அடிகளை எடுத்து வைக்க வேண்டும். ஒரு சிறிய வரப்பை விட அகலம் குறைவான இடைவெளியில் பூட்ஸ் அணிந்த கால்களால் தட்டுத் தடுமாறி நடக்கும்போது, அவர்களுடைய தொடை நடுங்க, அவர்கள் தலை குனிந்து நின்றிருந்தார்கள். இடையில் எல்லாரும் நின்றார்கள்.

என்ன வேண்டும்?

ராமச்சந்திரன் பின்னால் பார்த்தான். அவனுக்குப் பின்னால் சுமைகளைத் தூக்கியிருப்பவர்கள். கேப்டனையோ ஹவில்தாரையோ பார்க்க முடிகிறதா என்று சாய்ந்து கொண்டே பார்த்தான். பார்க்க முடிந்தது. கேப்டன் ஹண்டு கையை விரித்துக் காட்டினார். அவருடைய முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளை என்ன காரணத்தாலோ பார்க்க முடியவில்லை.

நடக்கலாமா?

கேப்டன் கையால் சைகை காட்டினார். ராமச்சந்திரன் கீழே பார்த்தான். நதி சத்தம் எழுப்பிக் கொண்டு பாய்ந்து கொண்டிருந்தது. செங்குத்தான மலைச்சரிவில் நின்று கொண்டு கீழே பார்த்தபோது, மிகவும் வேகமாகச் சுற்றக் கூடிய ஒரு மிகப் பெரிய ஃப்ளைபல்ட்டைப் போல இருந்தது.

“நான் நடக்கிறேன்!''

அவன் கையைக் காட்டினான். ரைஃபிலைப் பிடித்துக் கொண்டு அவன் காலை எடுத்து வைத்தான். மிகவும் வேகமாக சுற்றக் கூடிய ஒரு மிகப் பெரிய ஃப்ளைபல்ட்டிற்கு மேலே காலை எடுத்து வைத்து நடப்பதைப்போல இருந்தது. சீறிப் பாய்ந்து கொண்டிருந்த நதி யையோ செங்குத்தான மலைச் சரிவையோ அவன் பார்க்கவில்லை. வரப்பை விட அகலம் குறைவான மலையின் நெற்றியில் இருந்த பாதையைப் பற்றி நினைக்கவில்லை. ரைஃபிலை இறுககையில் பிடித்துக் கொண்டு அவன் ஒரு அடியை எடுத்து வைத்தான். அடி தவறி விட்டது என்பதை அவன் அறியவில்லை. ஒரு வேகம் தோன்றியது. அப்போது வெட்ட வெளியில் பாராசூட்டில் குதித்தபோது தோன்றியதைப்போல அவனுடைய மனம் மலையின் நெற்றியின் வழியாக மேலே பறந்து சென்றது.

ராமச்சந்திரன் விழுந்ததை கேரவன் முழுவதும் பார்த்தது. அடி தவறி தலை குப்புற விழுந்ததைத் தொடர்ந்து அவன் வேகமாகக் கீழ் நோக்கி உரசியவாறு இறங்கிக் கொண்டிருந்தான்.

சுய உணர்வு வந்தபோது அவன் மல்லாக்க படுத்திருந்தான். எவ்வளவோ முறை பாராசூட்டில் குதித்திருப்பதால், அவனுடைய ஐந்து புலன்களுக்கும் பக்குவம் வந்து சேர்ந்திருந்தது. விமானத்தின் படியில் கால் இடறினால், உடனடியாக கிளி பறந்து போய் விடும். சில்க் குடை மெதுவாக விரியும்போதுதான் காலில் படும் சணலின் ஞாபகமே வரும். உடனே கைகள் பரபரக்கின்றன... அவன் எல்லாவற்றையும் ஞாபகப்படுத்திப் பார்த்தான். அப்போது நதியின் பயங்கரமான சத்தமும் இரைச்சலும் காதுகளில் எதிரொலித்தன. அவன்மீது படும் கயிறைப் பற்றிய புரிதல் அவனுக்கு இருந்தது. அதனால் முழுமையான சுய உணர்வுடன் கயிறின் முனையில் இருந்த முடிச்சை அவன் இறுகப் பற்றிக் கொண்டான். கைகளுக்கு பலமில்லை. என் தாயே! அப்போதும் அவன் தன் தாயை நினைத்தான். மீண்டும் ஒருமுறை விரல்கள் அழுத்திப் பிடித்தன. சுமை தூக்குபவர்கள் அவனை மிகவும் மெதுவாகப் பிடித்து மேலே கொண்டு வந்தார்கள். மேலே வந்து சேர்ந்தபோது, அவன் நன்கு நனைந்து விட்டிருந்தான். மெதுவாக நகர்ந்தபோது பைத்தியம் பிடித்திருப்ப தைப்போல தோன்றியது. நதியின் இரைச்சல் சத்தம் அவனுடைய காதுகளில் பெரிதாக முழங்கிக் கொண்டிருந்தது.

அவர்கள் அன்று சேக்கெ என்ற கிராமத்தை அடைந்தார்கள். சுமைகளைத் தூக்கிக் கொண்டிருந்தவர்கள் நிலத்தைக் கொத்தி சீர் செய்து, மரக்கொம்புகளைக் கொண்டு கட்டி கட்டில்கள் அமைத்தார்கள். ராமச்சந்திரனுக்கு படுத்தால் போதும் என்றிருந்தது. சுமை தூக்குபவனிடம் சைகை செய்து அவன் தன்னுடைய கம்பளிக் கட்டை வாங்கினான். சுமை தூக்கியவனே கட்டிலில் கம்பளியை விரித்தான். ஆடைகளைக்கூட கழற்றாமல் அவன் கட்டிலில் விழுந்தான்.

தித்தோரிவாவுடன் சேர்ந்து கிராமத்தின் தலைவன் கேப்டனைப் பார்ப்பதற்காக வந்தான். அவன் வெட்டப்பட்ட புற்களைக் கொண்டு இடுப்பை மறைத்திருந்தான். அவனுடைய உருண்டு கொழுத்த சதைப் பிடிப்பான கைகளில் அம்பும் வில்லும் இருந்தன.

கேப்டன் "வணக்கம்” சொன்னபோது, தித்தோரிவா, “கேப்டனும் டிட்டாச்மென்ட்டும் இந்தியா என்ற பெரிய நாடும் கிராமத்தின் தலைவனையும் அவனுடைய கிராமத்தையும் வாழ்த்துகிறார்கள்' என்று கூறினான்.


வயதான கிராமத்தின் தலைவனின் எச்சரிக்கை நிறைந்த கண்கள் சந்தோஷத்தால் படபடத்தன. கேப்டன் பல வண்ணங்களைக் கொண்ட சில்க் துணித் துண்டுகளை எடுத்து பரிசாகத் தந்தபோது, “இவை அனைத்தும் இந்தியா என்ற பெரிய நாட்டின் மிகப் பெரிய மனிதர்கள்மீது அன்பு வைத்திருக்கும் ... யின் பரிசுப் பொருட்கள்'' என்று தித்தோரிவா கூறினான். கிராமத்தின் தலைவனின் சிறிய கண்களில் நீர் நிறைந்து விட்டது. கேப்டன் ஒரு கோணிப்பையை கிழவனிடம் சுட்டிக் காட்டினார். சந்தோஷத்தால் உணர்ச்சிவசப்பட்ட கிழவன் குடிசைகளை நோக்கி கண்களைச் செலுத்தினான். மரக்கால்களில் உயர்த்தப்பட்டிருந்த குடிசைகளில் இருந்த பெண்கள் ஆர்வத்துடன் பட்டாளக்காரர்களைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். கிராமத்தின் தலைவன் அனைத்து உதவிகளையும் ஒத்துழைப்பையும் அளிப்பதாக வாக்குறுதி அளித்தான். அவன் கேப்டனுடன் சேர்ந்து சுமை தூக்குபவர்கள் சீர் செய்து கொண்டிருந்த இடத்தைப் பார்ப்பதற்காக நடந்தான். “இப்போது கிராமத்தில் ஆண்கள் இல்லை. அனைவரும் வேட்டைக் காகச் சென்றிருந்தார்கள். அவர்கள் வந்த பிறகு உங்களுடைய ஆசைக்கும் தேவைக்கும் ஏற்றபடி எதையும் செய்யலாம்'' என்று கூறினான் கிராமத்தின் தலைவன்.

சிறிய வில்களையும் அம்புகளையும் இறுகப் பிடித்துக் கொண்டு நிர்வாண கோலத்தில் இருந்த குழந்தைகள் சற்று தூரத்தில் நின்று ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு தங்களுக்கென்றிருந்த சிந்தனைகளில் மூழ்கிய அவர்கள் உயர்ந்த மரக் கிளைகளில் இருந்த விருப்பமான இலைகள்மீது குறி வைத்து அம்பு எய்து விளையாட ஆரம்பித்தார்கள்.

உணவு தயாரானவுடன் கேப்டனும் ஹவில்தார்களும் குடிப்பதற்காக உட்கார்ந்தார்கள். ஹன்ஸராஜ் தூங்கிக் கொண்டிருந்த ராமச்சந்திரனுக்கு அருகில் சென்று பார்த்தான். ஆழ்ந்த தூக்கமாக இருந்தது! அசைவு இல்லை... பேச்சு இல்லை. மூச்சு கூட இல்லை என்று தோன்றியது. பாவம்... மிகவும் களைத்துப் போய் விட்டிருக்க வேண்டும்.

ஹன்ஸராஜுக்கு அந்த மதராஸி நண்பன்மீது பிரியம் இருந்தது. அவர்களுடைய கூட்டத்தில் ஒரே ஒரு மதராஸிதான். அதற்காக அவனுக்கு எந்தவொரு கூச்சமும் இல்லை. எப்போதும் உற்சாகமும் எச்சரிக்கையும் நிறைந்த இப்படிப்பட்ட மனிதர்கள் உடன் இருக்கும் போது அவரவர்கள் மனதில் தங்கியிருக்கும் கவலைகள் மறந்து போய் விடுகின்றன.

நண்பனை சிறிது நேரம் பார்த்துக் கொண்டு நின்றிருந்தபோது ஹன்ஸராஜுக்கு ஏதோ சந்தேகம் உண்டானது. இப்படி ஒரு தூக்கமா? அப்போது அவன் சுபார்ஜின் நதியைப் பற்றியும் மண்ணுக்கும் கீழே போன செங்குத்தான மலைச்சரிவைப் பற்றியும் நினைத்துப் பார்த்தான்.

கடவுள்!

அது கடவுளின் கருணையாக இருந்தது.

இடையில் ராமச்சந்திரன் அசையவும் முனகவும் செய்தான். பாதியாகத் திறந்த சிரிப்பின் வழியாக எச்சிலும் கபமும் வெளியே வந்தன.

“ராமச்சந்திரன்!'' திடீரென்று அழைத்தான். அதைத் தொடர்ந்து அவன், ராமச்சந்திரனின் நெற்றியை மெதுவாகத் தொட்டான்.

ஓ!

கை தெறித்து விடும்போல இருந்தது.

அவனுக்கு பயங்கரமான காய்ச்சல்.

“ராமச்சந்திரன்!'' அவன் நின்று கொண்டே அழைத்தான்.

ஹவில்தார் கங்கா பிரசாத் கேப்டனின் மடியின்மீது விழுந்தான். அவன் அழுது கொண்டே முன்பு செய்ததைப்போல பொன்னைப் போன்ற ஸாபிடம் தன்னுடைய முடிவற்ற புகழுரைகளை வெளியிட் டுக் கொண்டிருந்தான்.

“ஸாப்... பாருங்க... என் ராமச்சந்திரனைப் பாருங்க. நான் சொன்னேன் அல்லவா? இவன்தான் என் உயிர்...''

அப்போது ஹன்ஸராஜ் ராமச்சந்திரனை அழைப்பது கேட்டது. கேப்டனும் ஹவில்தார் கோம்புவும் திரும்பிப் பார்த்தார்கள். கங்கா பிரசாத்துக்கு எதுவுமே புரியவில்லை.

“என் ராமச்சந்திரனைப் பாருங்க ஸாப்! இவன் ஒரு பட்டாளக்காரன். இவன்தான் நம்முடைய உயிர். இவன்தானே..''

கேப்டன் எழுந்தார். ஏதோ விபரீதம் இருக்கிறது என்று தெளிவாகத் தெரிந்தது. அவர் ராமச்சந்திரனின் கட்டிலை நோக்கி அமைதி யாக நடந்தார்.

அவர்கள் ஒவ்வொருவராக அவனைத் தொட்டுப் பார்த்தார்கள். அழைத்தார்கள். அசைத்தார்கள். இல்லை... அசைவில்லை. பேச்சு இல்லை.

கடவுளின் விதி!

ஹன்ஸராஜ் அருகிலிருந்த கட்டிலில் படுக்கையை விரித்துப்படுத்துக் கொண்டான். அஸ்ஸாம் ரைஃபில்ஸைச் சேர்ந்த சிப்பாய் கள் அவனுடைய கட்டிலுக்கு அருகில் காவல் காத்துக் கொண்டு நின்றிருந்தார்கள். அவன் முனகும்போதெல்லாம் அவர்கள் பதை பதைப்புடன் குனிந்து பார்த்தார்கள். இல்லை... அவன் கண் விழிக்கவேயில்லை.

அவன் அதே நிலையில் பதினான்கு நாட்கள் படுத்திருந்தான். சுய உணர்வு வந்தபோது வாய் கசக்கிறது என்று எடுத்தவுடன் அவனுக்குத் தோன்றியது. ஆனால், கசப்பு அல்ல. எரிச்சலாக இருக்க வேண்டும். துப்ப வேண்டும் என்று தோன்றியது. சிரிப்பின் வழியாக எச்சில் வெளியே வந்தது. வெறுப்பும் வேதனையும் இருந்தன. துடைப்பதற்காகக் கையைத் தூக்கினான். கைகள்! கையை தூக்க முடியவில்லை. கைகள் இல்லையா? அசைத்துப் பார்த்தான். இருந்தன. அசைந்தான். அப்போது உடலைப் பற்றிய நினைப்பு வந்தது. மொத்தத்தில்- கட்டி லில் ஒடுங்கிக் கொண்டு படுத்திருந்தான். கால்களை அசைத்துப் பார்த்தான். இல்லை. அசைக்க முடியவில்லை. என் கால்கள்! என்ன இதெல்லாம்? கண்களை விழித்துப் பார்க்கலாம். கண்கள் விழிக்கவில்லை. எதிலோ ஒட்டிக் கொண்டதைப்போல... எனினும், எதையோ பார்க்கிறோம் என்று தோன்றியது. எதுவும் தெளிவாகத் தெரிய வில்லை. ஒரு மூடல் இருந்தது. இளம் நீல நிறமோ மஞ்சள் நிறமோ கலந்த மூடல் மஞ்சளாக உலகம் தெரிந்தது.

கட்டில் அசைவதைப்போல தோன்றியது. தூங்குவதற்காகப் படுத்தால், அம்மா வந்து பார்த்துக் கொண்டிருந்தாள். போர்வையை சரி செய்து, கட்டிலில் கையை ஊன்றி குனிந்து நின்று கொண்டு தன் மகனின் அமைதியான முகத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு இருந்து விட்டுத்தான் அம்மா தூங்குவதற்கே செல்வாள். அம்மா வந்து கட்டிலை அசைத்திருக்க வேண்டும். அம்மாவைப் பற்றி நினைத்ததும், அவனுடைய சோர்வடைந்து போயிருந்த கண்கள் திறந்தன.

ஓ!

அவன் ஒரு பேரழகு படைத்த தேவதையின் நீல நிறக் கண்களில் கண் விழித்தான். அவளுடைய பொன்னைப்போல பிரகாசித்துக் கொண்டிருந்த கன்னங்கள் சிவந்து, நீல நிறக் கண்கள் ஒளிர்ந்தன. ராமச்சந்திரனுக்கு தன் முகத்தைத் துடைக்க வேண்டும்போல இருந்தது. ஏதோ இனிமையான கனவைக் கண்டு கொண்டிருக்கி றோமோ என்று அவன் நினைத்தான்.

அவனுடைய சோர்வடைந்த கண்கள் திறந்தபோது அவன் மேலும் சற்று குனிந்து கொண்டு பார்த்தான். அவளுடைய கண்கள் முழுக்க ஆர்வமும் சந்தோஷமும் நிறைந்திருக்கும் ஆச்சரியப்பட்ட நிலையில் தன்னையே பார்த்துக் கொண்டிருந்தன. அவனுடைய தளர்ந்து போய் காணப்பட்ட கன்னங்களில் அவள் மிகவும் மெதுவா கத் தன்னுடைய விரல்களைக் கொண்டு வருட ஆரம்பித்தாள். அவன் முழுமையாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தான்.


அவள் மிகவும் மெதுவாக அவனுடைய தாடையைத் தடவி, அழகாக சிரிப்பைத் துடைத்தாள். சொல்லப்போனால், அவளுக்கு அழ வேண்டும்போல இருந்தது.

“என்னை தெரியவில்லையா?''

இல்லை. அவள் கேட்கவில்லை. ஆனால், அவளுடைய கண்களில் அந்த உள்ளே எழுந்து கொண்டிருந்த கேள்வி எழுதி வைக்கப்பட்டி ருந்தது. அன்பு நிறைந்த விரல் முனையால் அவள் அவனுடைய மனதின் வீணைக் கம்பிகளை மீட்டி தட்டி எழுப்பிக் கொண்டிருந்தாள்.

“என் தேவா, கண் விழியுங்கள்... கண் விழியுங்கள்...''

இந்த இனிமையான கனவில் இருந்து கண் விழிப்பதற்காகவோ என்னவோ, ராமச்சந்திரன் சிறிது நேரம் மேலும் கீழும் மூச்சு விட்டான். ங்ஹே! இடுப்புப் பகுதியும் மார்பும் வலிக்கின்றனவே! எனினும், திடீரென்று சுய உணர்விற்கு வந்த அவனுடைய மூளை தனக்கு முன்னால் குனிந்து கொண்டு நின்றிருந்த அவளுடைய முழு உருவத்தையும் அடையாளம் கண்டு பிடித்தது. அவளுடைய பொன்னுக்கு நிகரானதும் நிர்வாணமானதுமான உடலில் அவனு டைய கண்கள் நிலைகுத்தி நின்றன. அந்த கடைந்தெடுத்த அழகில் மூழ்கிய இதயம் புன்னகைத்தது.

ஓ!

அவன் தன்னைப் பார்த்து விட்டான் என்பதையும், யார் என்று அடையாளம் தெரிந்து கொண்டான் என்பதையும் உணர்ந்தபோது, அவளுடைய ரத்தம் ததும்பிக் கொண்டிருந்த விரல் நுனிகள் அவனு டைய கன்னங்களில் மெதுவாக ஊர்ந்து, சிலிர்ப்படைந்தன. பதினான்கு நாட்களாக அவள் அவனை பத்திரமாகக் கவனித்துக் கொண்டிருந்தாள். ஆபத்தில் சிக்கிக் கொண்ட அந்த வெளியூர்க்காரனை அவனுடைய ஆட்கள் கண்டு கொள்ளவில்லை. ஒரு ராணுவ வீரனின் உயிரைவிட மிக உயர்வான சேவையைச் செய்ய வேண்டும் என்பதற்காக அவர்கள் முன்னோக்கிச் சென்றார்கள். ஒரு நாள் அவனை நெருப்பில் எரிப்பதற்குக்கூட கேப்டன் தீர்மானித்து விட்டார். கிராமத்தின் தலைவனிடம் விறகுகளை வெட்டிச் சேர்க்கும்படி கூறியபோது, சம்பவம் இன்னொரு வழிக்குத் திரும்பியது. “அவனை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் முன்னோக்கிச் செல்லுங்கள்!''

கிழவனான கிராமத்தின் தலைவன் தன் மனைவியையும் மகளையும் ராமச்சந்திரனை பத்திரமாகக் கவனித்துக் கொள்வதற்காக அனுப்பி வைத்தான். அதற்குப் பிறகு தாய்க்கு வேலைகள் இருந்தன. மகள் அவனைப் பார்த்துக் கொண்டாள். அழுக்குகளைக் கழுவி சுத்தம் செய்து, விரிப்பைச் சலவை செய்து விரித்தாள். அந்த நாகரீக மற்ற மனிதக் கூட்டத்திற்கு பெண்- ஆண் வேறுபாடு எந்தச் சமயத்தி லும் சுவரென எழுந்து நின்றதில்லை. அவர்கள் சமுதாயத்தில் சரி நிகர் உயிர்களாக இருந்தனர்.

அவன் கண் விழித்து விட்டான் என்ற விஷயம் தெளிவாகத் தெரிந்தவுடன், அவள் மகிழ்ச்சியால் துள்ளி எழுந்தாள். “கிலோ! ஹிலோ!''

அவளுடைய கிளிக்குரலை மட்டும் அவன் கேட்டான். “கண் விழிங்க... எழுந்திருங்க'' என்று அவள் கூறுவதை அவன் புரிந்து கொள்ளவில்லை. முழுமையான சுய உணர்வுடன் அவளுடைய மெல்லிய சிவந்த உதடுகளையே அவன் உற்றுப் பார்த்துக் கொண்டே படுத்துக் கிடந்தான்.

மெல்லிய காலடிச் சத்தம் கேட்டது. யார் அது என்று சாய்ந்து பார்க்க வேண்டும்போல இருந்தது. கழுத்தைச் சாய்க்கக் கூடாது. தான் எங்கு இருக்கிறோம் என்று அவன் நினைத்துப் பார்த்தான். காதில் முழக்கம் கேட்டது. மரத்தின் பச்சை நிறத்தின்மீது தங்கத்தை உருக்கி ஊற்றி விட்டதைப்போல.. இந்த உலகம் நிறைய தங்கத்தை வாரி இறைத்திருப்பதைப்போல... தெளிவான முடிவுகள் கிடைக்க வில்லையே!

“அபு... அபு கிலாய்..'' சந்தோஷத்துடன் அவள் கட்டிலை விட்டு எழுந்து நின்றாள். அரை நிர்வாண கோலத்தில் இருந்த அவளுடைய மார்பகங்கள் பெருமூச்சு விட்டதில் உயர்ந்து தாழ்ந்து கொண்டிருந்தன. ஹன்ஸராஜ் ஓடி வந்தான்.

“கண் விழிச்சாச்சா?'' இடையில் புகுந்து அவன் கேட்டான்.

“கிலாய்...'' அவளுடைய கிளிக்குரல் எழுந்தது.”என் ராமச்சந்திரன்...'' என்று அழைத்தவாறு ஹன்ஸராஜ் ஓடி வந்தான். தளர்ந்த நிலையில் கண்களை விழித்துக் கொண்டு படுத்திருந்த தன் நண்பனை இடுப்பில் கையை வைத்துக் கொண்டு அவன் பார்த்துக் கொண்டு நின்றான். நீண்ட நேரம் கடந்த பிறகுதான் அவனுக்கு ஞாபகமே வந்தது.”நீர் குடிக்கணுமா?''

ராமச்சந்திரன் எதுவும் வாய் திறக்கவில்லை. முனகக்கூட இல்லை. அவனுடைய மூளையில் ஒன்றோடொன்று பிணைந்து கிடக்கும் நினைவுகள் சண்டை போட்டுக் கொண்டிருந்தன. முழு சக்தியையும் பயன்படுத்தக் கூடிய ஒரு ஹை பவர் ட்ரான்ஸ்மீட்டரில் இருக்கும் கணக்கற்ற வயரிங்கைப்போல அவனுடைய மூளையின் ஒவ்வொரு நரம்பிலும் மின் சக்தி பாய்ந்து கொண்டிருந்தது.

ஹன்ஸராஜை அவன் அடையாளம் கண்டு கொண்டான். அப்போது காதுகளில் சத்தம் எதிரொலிப்பதைப் போல தோன்றியது. பைத்தியம் பிடித்த சுபார்ஜின் நதியின் பயங்கரமான சத்தமும் இரைச்சலும் காதுகளில் முழங்கிக் கொண்டிருப்பதைப் போல தோன்றியது. ஆச்சரியப்பட்ட நிலையில் அவன் கேட்டான்: “என் ரைஃபில் எங்கே?''

ஹன்ஸராஜ் திகைத்துப் போய் நின்றான். “ரைஃபிலா?''

அவனே அப்போதுதான் நினைத்துப் பார்த்தான். மலைச் சரிவில் விழுந்தபோது, ரைஃபில் காணாமல் போயிருந்தது. யாருக்கும் அதைப்பற்றிய நினைப்பே இல்லை. பதினான்கு நாட்கள் சுய உணர்வு இல்லாமல் ஜுரத்தால் பாதிக்கப்பட்டுப் படுத்திருந்த ராமச்சந்திரன் இதோ கண் விழித்தவுடன் ரைஃபிலைக் கேட்கிறான். மனிதனின் மூளையைப் பற்றி முடிவற்ற ஆச்சரியத்துடன் அவன் நினைத்துக் கொண்டு நின்றிருந்தான்.

ஹன்ஸராஜ் வந்தவுடன் சற்று விலகி நின்றிருந்த அந்த வன தேவதை, அவர்கள் ஏதோ பேச ஆரம்பித்தவுடன் எதையோ நினைத் ததைப் போல அங்கிருந்து ஓடினாள். பிறகு கூட்டமாக ஆட்கள் பேசிக் கொண்டிருப்பது காதில் விழுந்தது. கிராமம் முழுவதும் அவனைப் பார்ப்பதற்காக வந்து கொண்டிருந்தது. கிராமத்தின் தலைவனும் அவனுடைய மனைவியும் அவனுடைய அழகான மகளும் முன்னால் நடந்து வந்தார்கள். அவர்கள் அபு என்றும் கிலாய் என்றும் ஜிஞ்ஜிங் என்றும் நமக்குப் புரியாத நூற்றுக்கணக்கான சொற்களை, மூச்சுக்கூட விடாமல் உச்சரித்துக் கொண்டிருந்தார்கள். கிளிகளின் கூட்டத்திற்குள் கற்களை எறிந்து விட்டதைப்போல அதைப் பார்க்கும்போது தோன்றும்.

கிராமத்தின் தலைவன் ராமச்சந்திரனையே நின்று பார்த்துக் கொண்டே, மேலே பார்த்து வணங்கினான். தான் கொண்டு வந்தி ருந்த ஒரு திரவத்தை அவனுடைய வாயில் ஊற்றினான். அப்போது அவன் எந்தவித மறுப்பும் கூறாமல் அதைக் குடித்தான். வாயில் இருந்த கசப்பும் எரிச்சலும் இல்லாமற் போய் விட்டதைப்போல தோன்றியது. கொஞ்ச நாட்களாகவே அவன் ராமச்சந்திரனுக்கு மருந்துகளையும் பாலையும் கொடுத்துக் கொண்டு வந்தான். வாழ்க்கையிலேயே மிகப் பெரிய செயலைச் செய்து முடித்த சந்தோஷத்துடன் அவன் திரும்பிச் சென்றான். அப்போதும் அன்பு நிறைந்த அந்த இளம் பெண் அவனுடைய கட்டிலை உரசியவாறு நின்று கொண்டிருந்தாள்.


அஸ்ஸாம் ரைஃபில்ஸைச் சேர்ந்த மூன்று சிப்பாய்களையும் ராமச்சந்திரன் அடையாளம் தெரிந்து கொண்டான். பிக்கு அவனிடம் என்னவோ பேசிக் கொண்டிருந்தபோது, மீண்டும் சுய உணர்வு இல்லாமற் போனது. ஆனால், அதற்குப் பிறகு அங்கு கனவுகள்தான். கண் விழித்தபோது, அவனால் எல்லா விஷயங்களையும் நினைவில் கொண்டு வர முடிந்தது.

சீறிப் பாய்ந்து கொண்டிருந்த நதியில் அவன் காகிதப் படகு விட்டு விளையாடிக் கொண்டிருக்கிறான். நதியின் கரையின் வழியாக நீண்ட தூரம் நடந்தபோது, கடலின் மிகப் பெரிய ஆர்ப்பரிப்பு கேட்கிறது. அவன் கடலுடன் நதி சேரும் இடத்தைப் பற்றி நினைத்துப் பார்த்தான். துடுப்போ படகோ இல்லாத காகிதத்தாலான சிறிய படகு அந்த இடத்தில் மூழ்கி விடும் என்பதை அவனால் நினைத் துப்பார்க்க முடியும். மூழ்கட்டும்! அதையும் பார்க்கலாமே! கடலின் நீலப் பரப்பில் அலைகள் அசைந்து கொண்டிருப்பதையும் பார்க்கலாம். அவனுடைய படகு அந்த இடத்தில் போய் சேர்ந்தது. படகு மூழ்கிக் கொண்டிருக்கிறது. பாராசூட்டில் குதித்ததை திடீரென்று நினைத்துப் பார்த்தான். கண்களைத் திறந்து பார்த்த போது, அந்த காட்டு தேவதை அவனையே பார்த்துக் கொண்டு மேலும் கீழும் மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். ஒரு வேளை அவள் அழுதிருக்க வேண்டும். அவனுடைய கண்கள் தெளியத் தெளிய, அவளுடைய முகம் சிவப்பாக ஆகிக் கொண்டிருந்தது. சந்தோஷத்தால் உந்தப்பட்டு அவள் மெல்லிய புன்சிரிப்பைத் தவழ விட்டாள்.

அவள் தினமும் அவனுடைய கட்டிலுக்கு அருகில் இருப்பாள். அவளுடைய தந்தையும் தாயும் இடையில் அவ்வப்போது வந்து பார்த்து விட்டுப் போவார்கள். அவர்கள் கொடுக்கும் எரிச்சலான திரவத்தையும் பாலையும் அவன் சந்தோஷத்துடன் குடித்துக் கொண்டிருந்தான்.

எழுந்து அமர்வதற்கான பலம் கிடைத்தவுடன், அவளுடைய கொழுத்து உருண்டிருந்த கைகளால் தாங்கப்பட்டு அவன் எழுந்து உட்கார்ந்தான். ஓ! வெளியே வெப்பம் நிறைந்த காற்று வீசிக் கொண்டிருந்ததை அவன் உணர்ந்தான். அவளுடைய சதைப் பிடிப்பான தோள்மீது சாய்ந்திருந்தபோது, சற்று தூங்க வேண்டும் போல அவனுக்கு இருந்தது. அப்போது அவன் மனதில் நினைத் தான்: "என் இதயமே!”

அந்த காட்டு தேவதையின் சதைப் பிடிப்பான ஸ்பரிசத்தில் அவனுடைய மனம் மயங்கிக் கிடந்தது. உடலில் சிலிர்ப்பும் புத்துணர்ச்சியும் உண்டாயின. தன்னுடைய மெலிந்துபோன கைகளை அவனால் பார்க்க முடியவில்லை. அவை தன்னுடையவை அல்ல என்று அவனுக்குத் தோன்றியது. மெலிந்து போன, தோல் உரிந்த, தோலில் சொறி பிடித்த கைகள்... எவ்வளவு பார்க்க சகிக்காதவையாக ஆகி விட்டிருக்கின்றன!

அவள் அவனுடைய தேவைகளை நன்கு தெரிந்து கொண்டிருந்தாள். தன்னுடைய தோள்மீது சாய்ந்து படுத்திருக்கும் அவனுடைய உடலில் இருந்து அவள் பேன், ஈரு ஆகியவற்றைக் கிள்ளி எடுத்து நகத்தில் வைத்து நசுக்கினான். அவன் தொட்டுக் காட்டியவுடன், அவள் உரோம தொப்பியைக் கழற்றுவதற்கு அவனுக்கு உதவினான்.

ஓ!

அவள் திகைத்துப் போய் நின்று விட்டாள். அவனுடைய நெஞ்சு முழுவதும் உரோமங்கள் வளர்ந்திருந்தன. அவளுக்கு அதன் காரணம் தெரியவில்லை. சிலிர்ப்படைந்து அவள் நின்று கொண்டிருந்தாள்.

அவனுக்கு சற்று உடல் நலம் திரும்ப கிடைத்து தனியாக எழுந்திருக்க முடியும் என்ற சூழ்நிலை உண்டானவுடன், ஹன்ஸராஜ் எல்லா விஷயங்களையும் அவனிடம் கூறினான். ராமச்சந்திரனுக்கென்றே தனிப்பட்ட விமானம் வந்து சேர்ந்திருந்தது. அவர்கள் மருந்துகளையும் தெர்மா மீட்டரையும் பாராசூட்டில் கீழே எறிந்தார்கள். விமானத்தின் இரைச்சல் சத்தம் கேட்டவுடன், காட்டு வாழ் மக்கள் குடிசைகளுக்குள் சென்று ஒளிந்து கொண்டார்கள். மருந்து களை பலமாக உதடுகளுக்குள் ஊற்றிப் பார்த்தார்கள். அது வெளியே வந்து கொண்டிருந்தது.

சுவாசம் நிற்கப் போகிறது. நிற்கிறது. நின்றது. கேப்டன் கிராமத்தின் தலைவனிடம் விறகு கேட்டார். "நடப்பது நடக்கட்டும். எங்களுக்கென்று சொந்தமான சிகிச்சை இருக்கிறது' என்றான் கிராமத்தின் தலைவன். அவர்கள் எருமையை அடித்து வேக வைத்து, பயங்கரமான அக்னி குண்டத்திற்குச் சுற்றிலும் நடனமாடிக் கொண்டும் செண்டைகள் அடித்துக் கொண்டும் இருந்தார்கள். கேப்டனுக்கு முன்னோக்கி செல்வதற்கான தகவல் வந்து சேர்ந்தது. அஸ்ஸாம் ரைஃபில்ஸைச் சேர்ந்த மூன்று சிப்பாய்களையும் ஹன்ஸராஜையும் அங்கேயே இருக்கும்படி கூறினார்.

“நான் இறக்க மாட்டேன்.''

ராமச்சந்திரனுக்கு சிரிப்பு வந்தது.

மரணம் என்ன மூன்று சீட்டு விளையாட்டா? அப்போது அவனுக்கு அதுவரை தோன்றாத பயம் தோன்றியது. தன் தாய் கூறிய விஷயங்கள் என்னென்ன என்பதை அவன் நினைப்பதில் மூழ்கினான்.

கட்டிலில் அசைவே இல்லாமல் ஒடுங்கிக் கொண்டு படுத்திருக்கும்போது, அவனுடைய மனதில் ஒன்றோடொன்று தொடர்பே இல்லாத எவ்வளவோ சிந்தனைகள் வந்து மோதிக் கொண்டிருந்தன. காட்டுவாழ் மனிதர்களின் குடிசைகளுக்கு அருகில் சிறிய கால்களைக் கொண்ட, வெளுத்த நிறத்தில் நிர்வாண கோலத்தில் இருந்த சிறுவர்கள் சிறிய வில்களைக் கொண்டு குறி தீர்மானித்து அம்புகளை எய்து பழகிக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான். இளம் வயதில் அவனுக்கு வேட்டையாடுவதில் அதிகமான ஆர்வம் இருந்தது. தன்னுடைய வளர்ப்பு நாயுடன் சேர்ந்து வெளியேறி அவன் நடந்து திரிவான். பிறகு, தென்னை மட்டைகளின் வழியாகக் குதித்தோடிக் கொண்டிருக்கும் அணில்களை கவணை பயன்படுத்தி கல்லால் அடித்து விழச் செய்வதும், சேம்பின் விதையை பூமிக்குள்ளிருந்து தோண்டி எடுக்கும் எலியின் இருப்பிடங்களை நாயைப் பயன்படுத்தி அழிப்பதுமாக இருப்பான். ஒரு நிமிடம்கூட அவன் வெறுமனே இருக்க மாட்டான். அவனுடைய அன்னைக்கு அவனை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அதனால் இடையில் அவ்வப்போது அழைத்துக் கொண்டே இருப்பாள். அவன் தென்னை மரத்திற்குக் கீழே நின்று கொண்டிருப்பான். அப்போது ஒரு நாள் அவனுடைய தாய்க்கு கோபம் வந்து விட்டது. “டேய்... ஊர் சுற்றி மகனே!'' என்று கத்தினாள். பிறகு, அவளே அமைதியாகவும் ஆகி விட்டாள். ஆண் பிள்ளையைப் பெற்ற வயிறு அமைதியானது.

கட்டிலை விட்டு எழுந்து தட்டுத் தடுமாறி நடக்க வேண்டும்போல இருந்தது. வழுக்கி எங்கே விழுந்து விடுவோமோ என்ற பயம் இருந்தது. அப்போது அந்த காட்டு தேவதை குடிசையை விட்டு வெளியே வருவாள். அவள் அவனுடைய இதயத்தில் நிறைந்து விட்டிருந்தாள். கழுத்து வரை தொங்கிக் கொண்டிருந்த அவளுடைய கருத்த, அடர்த்தியான கூந்தல் சிவந்து போயிருந்த கன்னங்களில் பரவிக் கிடந்தன. அவள் வரும்போதெல்லாம் குடிப்பதற்கு எதையாவது கொண்டு வருவாள். அந்த ஆதிவாசிகளுக்கு மிகவும் வீரியமாக இருக்கும் மதுவைத் தயாரிப்பதற்குத் தெரியும்.


வேக வைத்த புல்லை ஈரம் காய்வதற்கு முன்பே வாழையிலையிலோ மரத்தாலான சிறிய பெட்டியிலோ நிறைத்து, குளிர்ச்சியான இடத்தில் கட்டித் தொங்க விட்டு, அதிலிருந்து எடுக்கப்படும் இந்த சாராயத்தில் பச்சை மருந்துகளைக் கலந்து அவனுக்காக அவளுடைய தந்தை கொடுத்து அனுப்புவதை அவள் கொண்டு வந்து தருவாள். தந்தை கொடுத்தனுப்பினாரா, தாய் கொடுத்து விட்டாளா என்பதை அவளிடமிருந்து தெரிந்து கொள்ளலாம். அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வதில்லை. வார்த்தைகள் தெரியாது. அவளுடைய அகலமான நீல நிறக் கண்களும் மெல்லிய, துடித்துக் கொண்டிருக்கும் சிவந்த உதடுகளும் ரத்த வண்ணத்தில் இருந்த விரல் நுனிகளும் வார்த்தைகளை விட தெளிவாகப் பேசின. தந்தையையும் தாயையும் அடையாளம் சொல்லக் கூடிய அவளுடைய சைகைகள், நாகரீக மனிதர்களாக இருப்பதால் நமக்கு ஆபாச மாகத் தோன்றும். பெண்- ஆண் இனத்தின் மிகவும் முக்கியமான வேறுபாட்டை அவள் சைகைகளால் செய்து விளக்கிக் கூறுவாள். அவளுக்கு அப்படிச் செய்வதில் நாணமோ கூச்சமோ இல்லை. பழகிப் போய்விட்ட காரணத்தால், அவனுக்கு அதில் இருந்த ஆபாசம் புதுமை அற்றதாக இருந்தது.

முதல்நாள் அவளுடைய தோளைப் பிடித்துக் கொண்டு அவன் அங்கு ஒவ்வொரு அடியாக வைத்து நடந்தான். தன்னுடைய தெறித்து நிற்கக் கூடிய நிலையில் இருந்த சதைப் பிடிப்பான மார்பகத்தை நோக்கி அவள் அவனை இறுகப் பிடித்து அணைத்துக் கொண்டிருந்தாள். மரத்தின் நிழலில் இருந்த பாறையின்மீது அவள் உட்கார்ந்து கொண்டிருக்க, அவளுடைய சதைப்பிடிப்பான மடியில் அவன் தன்னுடைய தலையை வைத்துக் கொண்டு படுத்திருந்தான். அவளுடைய நீல நிறக் கண்களைப் பார்க்கும்போது, தன்னுடன் இரண்டறக் கலந்து விட்ட ஒரு ஆன்மாவை அவனால் காண முடிந்தது. அவளுடைய கதைகள் பேசும் கண்கள் ஒரு மனதின் முழு வெளிப்பாடுகளையும் அவனிடம் கொண்டு போய் சேர்த்தது.

தூரத்தில் மலைச்சரிவுகளில் அரை நிர்வாண கோலத்தில் இருந்த பெண்கள் கத்திகளைப் பயன்படுத்தி நிலத்தைக் கொத்திக் கிளறி, நெல் விதைக்கவோ, விளைந்த கதிர்களை அறுக்கவோ செய்து கொண்டிருப்பது தெரிந்தது. எப்போதும் விதைக்கலாம், எப்போதும் அறுவடை செய்யலாம். விளைந்த நெல்மணிகளை கதிருடன் அறுத்து மூங்கில் பெட்டிகளில் போட்டு அடைத்து, அதே வயலில் அவற்றை அவர்கள் வாழையிலைகளைக் கொண்டு மூடி வைப்பார் கள். தேவையானதை அன்றன்று அதிலிருந்து எடுத்துக் கொள்வார்கள். மரத்தாலான உலக்கையும் மரக்கட்டையில் நெருப்பை வைத்து துளைத்து உண்டாக்கிய உரலும் அவர்களிடம் இருந்தன. அரிசியை மூங்கிலாலான பெட்டிகளில் வைத்து அடுக்கி, சுற்றிலும் நெருப்பு வைத்து வேக வைத்து எடுத்து, வாழையிலையில் கொண்டு வந்து கொட்டும் அவர்களுடைய சாதம் புட்டைப்போலவே இருக்கும்.

அவள் அவனுக்காக எதை வேண்டுமானாலும் கொஞ்சம் கொண்டு வருவாள். அவனுடைய உரோமங்கள் நிறைந்த மார்பிலிருந்து அவள் தினமும் ஈரையும் பேனையும் கிள்ளி எடுப்பாள். அவனுடைய உடலில் இருந்த சொறியையும் படையையும் இல்லாமற் செய்ய வேண்டும். அவள் அப்போதும் "அடி” என்றும் "கிலாய்' என்றும் மட்டுமே கூறுவாள். "பாபுஜி, எழுந்திருங்க' என்பதுதான் அதற்கு அர்த்தம் என்பதை அவன் புரிந்து கொண்டிருந்தான். மிகவும் சிரமப்பட்டு கைகளால் சைகைகள் செய்து கேட்டு அவளுடைய பெயரை அவன் தெரிந்து கொண்டான். பின்னி!

வேட்டைக்குச் சென்றவர்கள் திரும்பி வந்தவுடன் அவள் திரும்பிச் செல்வாள். வலை வைத்துப் பிடித்த காட்டெருமைகளை மலைக் கொடிகளைப் பிரித்து உண்டாக்கிய கயிற்றில் கட்டி, நான்கு பக்கங்களிலும் நின்று வட்டமிட்டவாறு அவர்கள் கிராமத்திற்குக் கொண்டு வருவார்கள். உயரம் குறைவான, சிறிய கால்களைக் கொண்ட அந்த மனிதர்களுக்கு மிருகங்களை உயிருடன் பிடித்தால் மட்டுமே வேட்டையாடுவதில் சந்தோஷம் உண்டாகும் என்பதைப் போல தோன்றும். பிறகு, விறகை வைத்து நெருப்பு எரித்து, எருமையின் கழுத்திற்கு நேராக இரும்புக் கம்பியை இறக்குவார்கள்.

மூங்கில் பெட்டிகளிலிருந்து எடுக்கப்பட்ட மினுமினுப்பான சாதத்தை, மூங்கிலின் சிறு கிளைகளை வெட்டித் துண்டு துண்டாக்கி, பின்னி, மடித்து உண்டாக்கப்பட்ட பாத்திரங்களில் பரிமாறுவார்கள். காய்ந்த மிளகாயை நெருப்பில் சுட்டுத் தூள் தூளாக்கி, பெரும் நிதியைப் போல மூங்கில் பாத்திரங்களில் பாதுகாத்து வைக்கப் பட்டிருக்கும் கல் உப்பைச் சேர்த்து, சுட்ட மாமிசத் துண்டுகளுடன் அவர்கள் நெருப்பைச் சுற்றி அமர்ந்து கொண்டு சாப்பிடுவார்கள். சாப்பிட்டு முடித்தவுடன், மூங்கில் பாத்திரங்களில் இருந்து பஞ்சப் புற்களைக் காய்ச்சி எடுக்கும் மதுவைப் பருகி ஆடவும் பாடவும் ஆரம்பித்துவிடுவார்கள்.

போர்வையைக் கொண்டு மூடி, தூங்குவதற்காகப் படுத்திருந்த ராமச்சந்திரன் அவர்களுடைய சமூக வாழ்க்கையைப் பற்றி நினைத் திருக்க வேண்டும். என்ன ஒரு பொருத்தம்! என்ன ஒரு எளிமை! தூக்கம் வரும்போது அவன் பின்னியைப் பற்றி நினைத்திருப்பான். அவளை எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி, இளம் நீல நிறத்தில் புடவையை அணிவிக்கவும் செய்திருந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்திருப்பான். அதே நேரத்தில் எப்படி இருக்கும் என்று சில நாட்களாகவே அவன் கனவு கண்டு கொண்டிருக்கிறான். பிறகு, அவளுடன் சேர்ந்து தன்னுடைய கிராம பஞ்சாயத்து பாதை யின் வழியாக நடந்து செல்லும்போது... தூக்கம் இனிய கனவுகளைக் காட்டின.

இந்தச் சூழ்நிலையில் ஆதிவாசிகளுக்கு மத்தியில் ஒரு திருமணம் நடைபெற்றது. கிராம சபை கூடி, அரை நிர்வாண கோலத்தில் இருந்த மணமக்களை அங்கு அழைத்துக் கொண்டு வந்தது. தரையில் நெருப்பு குண்டத்திற்கு அருகில் ஹோமமோ பூஜையோ நடந்தது. தொடர்ந்து கிராமத்தின் தலைவனின் உத்தரவுப்படி மணமகள் பூஜை செய்யப்பட்ட ஒரு பிடி மண்ணை எடுத்து மணமகனிடம் தந்தாள். அவன் அதை உண்ண வேண்டும். அதற்குப் பிறகு மணமகன் ஒரு பிடி மண்ணை எடுக்கிறான். மணமகளிடம் தருகிறான். அத்துடன் மணமகனின் வீட்டைச் சேர்ந்தவர்கள் மணமகளின் பெற்றோர்களுக்கு நஷ்ட பரிகாரம் என்ற வகையில் இரண்டு எருமைகளைக் கொடுத்த பிறகு, மணமகன் மணமகளைத் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துக் கொண்டு செல்கிறான்.

அவள் அவனுக்கு சொந்தமானவளாக ஆகிவிட்டாள். இந்த பூமி இருக்கும் வரை அவர்கள் ஒன்றாக இருப்பார்கள். இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், மண்ணுடன் கலக்கும் வரை அவன் அவளுக்குச் சொந்தமானவன்.

அவனுக்கு தலைப்பாகையும் சிறகும் வைத்த பிறகு, ஒருநாள் முன்னோக்கிப் போயிருந்த ராணுவப் பிரிவு திரும்பி வந்தது. அவன் வெளியே நடந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் கேப்டனுக்கு ஆச்சரியமும் சந்தோஷமும் உண்டாயின. ஹவில்தார் கங்கா பிரசாத் உரத்த குரலில் அழ ஆரம்பித்தான்.


“கடவுளுக்கு நன்றி. இனி நாம் திரும்பிச் செல்வோம்!''

அவன் அங்கிருந்து கிளம்பியாக வேண்டும். மூன்றாவது நாள் அவர்கள் புறப்பட்டார்கள். சுமை தூக்குபவர்களுடன் ராமச்சந்திரன் நடந்து வந்து சேரவில்லை. அதனால், வேறொருவனுடன் அவளை முன் கூட்டியே அனுப்பி வைப்பது என்று முடிவெடுத்தார்கள்.

அவன் புறப்பட்டபோது, கிராமம் முழுவதும் புறப்படும் இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தது. உரத்த குரலில் அழுத மகளை கையில் பிடித்தவாறு கிராமத்தின் தலைவனும் அவனுடைய மனைவியும் அவர்களுக்கு முன்னால் பதைபதைப்புடன் நின்று கொண்டிருந்தார்கள்.

கேப்டனும் நண்பர்களும் ஆச்சரியத்துடன் விழித்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.

அவன் புறப்பட்டு விட்டான். அவன் போகப் போகிறான்.

அவள் வாய் விட்டு உரத்த குரலில் கூப்பாடு போட்டு, தன் பெற்றோர்களின் பிடியில் இருந்து விலகி தரையில் விழுந்து உருண்டு, தலையில் அடித்துக் கொண்டிருந்தாள். ராமச்சந்திரன் கண்களை அகல விழித்துக் கொண்டு நின்றிருந்தான். என்ன செய்ய வேண்டும்? என்ன கூற வேண்டும்?

“பின்னீ...'' அவன் அழைத்தான். மார்பு அடைத்து விட்டிருந்தது.

“சலே ஜாவ் ஓ'' கேப்டன் உரத்த குரலில் கத்தினார்.

“நான் புறப்படட்டுமா?''

அவனால் நடக்க முடியாது.

அப்போது அவள் தரையிலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துக் கொண்டு அவனுக்கு அருகில் ஓடிச் சென்று, அவனுக்கு நேர் எதிரில் நின்றாள். அவள் அழவில்லை. அவளுடைய கருப்பு நிறக் கூந்தல் நெற்றியிலும் கன்னத்திலும் கண்ணீருடன் ஒட்டிக் கிடந்தது. கண்ணீர் நிறைந்திருந்த அவளுடைய நீல நிறக் கண்களையே அவன் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தக் கண்களில் எரிந்து கொண்டிருந்த காதலின் பிரகாசமான கொழுந்து அவனை சுட்டெரித்துக் கொண்டிருந்தது.

நடுங்கிக் கொண்டிருந்த கைகளுடன் அவள் நீட்டிய மண்ணை அவன் தன்னுடைய கைகளில் வாங்கினான். அதற்குப் பிறகும் அவள் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். அவன் அந்தப் பார்வையின் ஆழமான அர்த்தத்தைப் புரிந்து கொண்டதும், ஒருபிடி மண்ணை எடுத்து வாய்க்குள் போட்டான். உப்பின் ருசி நாக்கில் பட்டதும், அதிர்ச்சியடைந்து விட்டான். அது அவளுடைய கண்ணீரின் ருசி!

தொடர்ந்து அவன் முன்னோக்கி காலடியை எடுத்து வைத்தபோது, அமைதியாக கண்ணீரைச் சிந்திக் கொண்டிருந்த அவளுடைய வயதான பெற்றோர்கள் அவளைப் பிடித்து இழுத்தார்கள். அவள் முரண்டு பிடித்து ஓட முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

என் அன்னையே! அவன் முன்னோக்கி நடந்தான். வழியெங்கும் அவனுக்கு அவளுடைய அழுகைச் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. அடுத்த தங்குமிடத்தில் தூங்குவதற்காகப்படுத்தபோது, அவன் அவளைப் பற்றி நினைத்துப் பார்த்தான். நிமிடங்கள் நகர்ந்து கொண்டிருந்தன. பொழுது புலரும் நேரத்தில் அவன் கனவு கண்டான். அவள் அவனுடைய கட்டிலில் தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். திடீரென்று இதயம் துடித்தது. அவன் உடனடியாக எழுந்து அவளைக் கட்டிப் பிடிப்பதற்காகக் கைகளை நீட்டினான். அவளுடைய உருவம் ஒரு கோட்டைப் போல சிறிதாகி, வெட்ட வெளியில் கரைந்து போவதை அவன் பார்த்தான்.

“நான் ஒரு ஆவி'' அவளுடைய கிளிக்குரல் கேட்டது.

ஓ!

இடது பக்க நெஞ்சு வெடித்து விட்டதைப்போல தினமும் கண்களை மூடி விட்டால், இதே கனவைக் கண்டு கொண்டிருந்தான்.

நீங்கள் ராமச்சந்திரனைப் போய் பார்க்கலாம். எப்போதும் அமைதியாக உட்கார்ந்து கொண்டு ஓவியம் வரைந்து கொண்டிருப்பான். வட கிழக்கு எல்லைப் பகுதிகளுக்குச் சென்ற ராணுவப் பிரிவின் அனுபவங்களை அவன் தன்னுடைய ஓவியங்களிலும் வண்ணங்களிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான். வாழ்க்கையில் அவனுக்கு இனி வேறு எந்த ஆசையும் இல்லை. அதனால் எப்போதும் வரைந்து கொண்டிருக்கிறான். அதற்கான அர்த்தம் என்ன என்பதை ராமச்சந்திரன் உடனடியாகக் கூற மாட்டான். கேட்டுப் பாருங்கள்... அவன் விழித்துக் கொண்டுபார்ப்பான். அவனுடைய கண்கள் நிறைவதை நீங்கள் பார்க்கலாம். பிறகு, மேஜையைத் திறந்து, ஒரு பொருளை எடுத்துக் காட்டுவான். நீங்கள் சற்று பாருங்கள். காய்ந்த மண் அது!

இந்த பூமி இருக்கும் காலம் வரை அவர்கள் ஒன்றாகி விட்டவர்கள். மரணத்தைத் தழுவி மண்ணுடன் சேர்ந்த பிறகும், அவன் அவளுக்குச் சொந்தமானவன்தான்!

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.