Logo

பயணம்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6729

பயணம்

டி.பத்மநாபன்

தமிழில் : சுரா

றுதியில் பேருந்து வந்தது.

சாய்ந்து கிடந்த சாலையின் தூரத்து எல்லையில் பேருந்து மெதுவாக தோன்றியபோது, முதலில் நம்புவதற்கு சிரமமாகத்தான் இருந்தது. பேராம்ப்ரயிலிருந்து பாலுஸ்ஸேரி வழியாக கோழிக்கோட்டிற்குச் செல்லக் கூடிய, நான் பயணம் செய்ய வேண்டிய பேருந்துதானே அது! எட்டு மணிக்கு பேருந்து புறப்பட வேண்டும். ஆனால், பத்து மணி தாண்டியும், பேருந்தைக் காணவில்லை.

இன்று... ஒருவேளை பேருந்து இல்லாமலிருக்கலாம். வழியில் நீர் புகுந்திருக்கலாம், நேற்று வரை பேருந்து இருந்தது. இப்படித்தான் ஆட்கள் எல்லோரும் கூறுகிறார்கள். நேற்று வரை பேருந்து இருந்தது. இன்று... எப்படி கூற முடியும்? ஒரு வேளை வழியில் நீர் உள்ளே நுழைந்திருக்கலாம். கிழக்கு திசையில் கரு மேகங்கள் சூழ்ந்தால் போதும். இங்கே தானாகவே நீர் வந்து புகுந்து கொள்ளும். அப்படித்தான் இருந்தது இங்குள்ள நிலைமை.

சாலையின் அருகில் இருக்கும் நீர் நிலையைக் கடந்து செல்லும்போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்த இடிந்து போன பாலத்தின் வழியாக கடந்து செல்லும்போது... (நீங்களெல்லாம் நகரத்திலிருந்து வருபவர்கள். இந்த நம்முடைய கிராமத்தைப் பற்றி உங்களுக்கெல்லாம் என்ன தெரியும்?)

'ஆனால், நீங்கள் கண்ணூருக்கல்லவா போக வேண்டும்?'

மேனன்தான் கேட்டார்.

(மேனனை முதல் தடவையாக சென்னையில் வைத்துத்தான் பார்த்தேன். ஒரு சாயங்கால வேளையில் கைலியை உடுத்தி, ஒரு இளைஞனையும் அழைத்துக் கொண்டு அப்ப நாயர் வந்தார்.)

'மாதவ மேனன்-பேட்டூர் கன்வென்ஷன் முடிந்து, திரும்பி வருகிறார்.'

மிகவும் நல்லது என்ற எண்ணத்துடன் நான் புன்னகைத்தேன்.

'இரண்டு மூன்று நாட்கள் நம்முடன் இருப்பார்.'

'வெரி வெல்!'

(போடா, உன்னுடைய ஒரு...)

மாதவமேனன் மீண்டும் கேட்டார்: 'நீங்கள் பய்யோளியின் வழியாக போகக் கூடாதா? அதுதானே நல்லது?'

நான் ஆச்சரியத்துடன் அவரையே பார்த்தேன்.

'சகோதரரே! நீங்க என்ன சொல்றீங்க?'

ஆனால், அதற்குப் பிறகு நான் நினைத்தேன்: 'ஓ... பய்யோளியிலிருந்து இங்கே எப்படி வந்தேன் என்பதைப் பற்றி இவர்களிடம் கூறவே இல்லையே!'

அப்போது யாரோ சொன்னார்கள் : 'பேருந்து வராமல் இருக்காது.'

நான் எதுவும் கூறவில்லை.

வானத்தில் ஈரமான மேகங்கள் போய்க் கொண்டிருந்தன. காற்று நிறைந்த, சாம்பல் நிறத்திலிருக்கும் ஒரு பாயைப் போல வானம் இருந்தது. சில இடங்களில் பனிக்கட்டியால் ஆன ஒரு பெரிய கோபுரத்தைப் போலவும் அது இருந்தது. மேகங்களுக்கு நடுவில் இருந்த இடைவெளியின் வழியாக சூரியனின் கதிர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வந்து கொண்டிருந்தன. எவ்வளவோ நாட்களுக்குப் பிறகு முதல் தடவையாக வெளிச்சத்தைப் பார்க்கிறேன்.

கட்சி அலுவலகத்தின் வாசலில்தான் நாங்கள் நின்றிருந்தோம். வெளிச்சத்தைப் பார்த்ததும், நான் சாலையில் வந்து நின்றேன். என்னுடைய ஈரமான ஆடைகள் இந்த இளம் வெயிலில் சற்று உலர்வதாக இருந்தால், உலரட்டும்!

நான் மனதிற்குள் ஒரு சிரிப்பைத் தவழ விட்டவாறு நினைத்தேன். இந்த வாழ்க்கை எந்த அளவிற்கு வினோதமானதாகவும் துயரம் நிறைந்ததாகவும் இருக்கிறது!

நேற்று காலையில் வீட்டிலிருந்து எப்போதும் போல கிளம்பியபோது, குறும்ப்ரநாடு தாலுக்காவில் வெள்ளத்தில் சிக்கி நீந்துவதற்குத்தான் போகிறேன் என்பதை நான் சிறிதாவது நினைத்திருப்பேனா?

அதே போல... பரிமாறப்பட்ட சோற்றையும், குழம்பையும் மூடி வைத்து விட்டு, கிணற்றின் கரைக்கு நீர் எடுப்பதற்காகச் சென்ற அப்பநாயரின் தம்பி?

இறப்பதற்காகத்தான் செல்கிறோம் என்பதை அவர் நினைத்திருப்பாரா?

மரணம் ஒரு வாரண்ட் சேவகனைப் போல எந்தச் சமயத்திலும் உள்ளே நுழைந்து வருகிறது.

கங்காதரனை நான் பார்த்ததில்லை- உயிருடன் இருந்தபோதும், மரணத்திற்குப் பிறகும்! ஆனால், கங்காதரன் அப்பநாயரின் தம்பியாக இருந்தார். என்னைப் பொறுத்த வரையில் அது போதும்.

ஒரு அரசியல்வாதி எப்படி ஒரு நல்ல மனிதராகவும் இருக்க முடியும் என்பதை கங்காதரன் குறும்ப்ரநாட்டின் மக்களுக்குக் காட்டினார்.

நான் மிகவும் முன்பே அந்த இளைஞரின் கீர்த்திகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், என்னால் பார்க்க முடியவில்லை.

குறும்ப்ரநாடு தாலுக்காவில் இருக்கும் மக்கள் இன்னும் சிறிது காலம் அந்த இளைஞரை நினைத்துக் கொண்டிருப்பார்கள்.

நான் அந்த இளைஞருக்காக கண்ணீர் சிந்துகிறேன்!

நேற்று காலையில் அலுவலகத்திற்குக் கிளம்பினேன். அப்போது சங்கரன் வந்து சொன்னார்: 'கேள்விப்பட்டீர்களா? அப்பநாயரின் தம்பி இறந்து விட்டார்.'

'என்ன?'

அந்த செய்தி மேகமே இல்லாத வானத்திலிருந்து இடி விழுந்ததைப் போல இருந்தது.

'நீர் எடுக்கும்போது, பலகை உடைந்து கிணற்றுக்குள் விழுந்து விட்டாராம்...'

நான் அதிர்ச்சியடைந்து நின்று விட்டேன். அப்பநாயரின் தம்பி விழுந்து மரணமடைந்து விட்டார். அப்பநாயரின் தம்பி...

மரணம் எவ்வளவு வேகமாக வருகிறது!

'ஒருவேளை... இன்று இல்லாவிட்டாலும் நாளை நானும் மரணமடையலாம். கனமான இதயத்துடன் நான் ஸ்டேஷனை நோக்கி நடந்தேன். சாயங்காலமே திரும்பி வர முடியும் என்பதால், யாரிடமும் எதுவும் கூறவில்லை.

வடகரையில் வண்டியை விட்டு இறங்கியவுடன், பேருந்து நிலையத்தை நோக்கி வேகமாக நடந்தேன். உண்மையிலேயே கூறுவதாக இருந்தால்- அது ஒரு ஓட்டமாகவே இருந்தது. கற்களும் மேடுகளும் மழை நீரும் நிறைந்திருந்த அந்த கிராமத்து பாதையின் வழியாக ஓடியபோது, வழியில் எனக்காக காத்து நின்று கொண்டிருந்த சிரமங்களின் ஒரு மெல்லிய எச்சரிக்கை மட்டுமே அது என்பதை நான் நினைத்துப் பார்த்தேனா?

பேருந்து புறப்பட்டு நின்று கொண்டிருந்தது. தார்ப்பாயை வைத்து மூடியிலிருந்ததால், அதற்குள் கூட்டம் அதிகமாக இருக்கிறதா அல்லது இல்லையா என்பதையெல்லாம் பார்க்க முடியவில்லை. நான் வேகமாக குடையை மடக்கி விட்டு, எப்படியோ அதற்குள் நுழைந்து விட்டேன். அதற்குள் வெளிச்சமில்லை. காலியாக கிடந்த ஒரு இருக்கையில் சற்று நிம்மதியுடன் உட்கார்ந்தபோது, பேருந்து சிறிது தூரம் போய் விட்டிருந்தது.

பேருந்து பழையதாகவும், ஒழுகக் கூடியதுமாக இருந்தது. அதன் இருக்கைகள் நார்களால் செய்யப்பட்டிருந்தவையாகவும், அழுக்கு படிந்தவையாகவும் இருந்தன. சிறிதும் நிற்காத ஒரு நீரோட்டம் மேலே இருந்து கீழ் நோக்கி வந்து கொண்டிருந்தது.

அந்த சுவாசம் விட சிரமப்பட வைக்கும் மரக்கூட்டிற்கு உள்ளே இருந்த மெல்லிய வெளிச்சத்தில் என்னுடைய வெள்ளை நிற கதராடைகளில் இருந்த அழுக்கை என்னால் நன்கு காண முடிந்தது. இன்னொரு சூழ்நிலையாக இருந்திருந்தால், எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்திருக்கும். ஒன்று அழுக்கானால், மாற்றுவதற்கு இன்னொன்று வேண்டுமே!

உண்மையிலேயே கூறுவதாக இருந்தால்- எனக்கு நேற்றும் முதல் தடவையாக சிறிது கவலை உண்டானது. வெளுத்த ஆடையில் அழுக்கு படிந்திருப்பதைப் பார்க்கும்போது எனக்கு அப்படி தோன்றுவதுண்டு.


ஆனால், அடுத்த நிமிடத்திலேயே ஒரு சிரிப்புடன் நான் நினைத்துப் பார்த்தேன். இங்கு ஒரு இளைஞர் காலம் வருவதற்கு முன்பே மரணமடைந்திருக்கிறார். அப்படியென்றால், என் ஆடையில் அழுக்கு படிந்ததுதான் விஷயமே!

எனக்கு வெட்கமாக இருந்தது.

சுயநலத்திலிருந்து மனிதன் எந்தக் காலத்திலும் விடுதலை பெறவே முடியவில்லையே!

நடத்துநர் வந்தார்.

நான் சொன்னேன்: 'ஒரு பேராம்ப்ர...'

அவர் சந்தேகத்துடன் என்னையே பார்த்தார்.

'நீங்கள் எங்கேயிருந்து வர்றீங்க?'

நான் கூறினேன்: 'கண்ணூரிலிருந்து... என்ன?'

'பேராம்ப்ரவிற்கு பேருந்து இல்லை, இது தச்சங்குன்னு வரைதான் போகும்.'

அதை நான் எதிர்பார்க்கவில்லை.

சிறிது நேரம் திகைப்படைந்து அமர்ந்து விட்டு, ஒரு முட்டாளைப் போல நான் சொன்னேன்: 'தச்சங்குன்னு...!'

நடத்துநர் டிக்கெட் புத்தகத்தை எடுத்துக் கொண்டே கேட்டார்: 'கிழிக்கட்டுமா?'

எனக்கு முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு வயதான முஸ்லீம் பெரியவர் கூறினார்:

'இடிந்த கடவுக்குள் நீர் புகுந்து மூன்று நாட்களாகி விட்டன...'

'குலப்பச்சாலில் இருந்து பேருந்து கிடைக்கும்.'

குலப்பச்சால், தச்சங்குன்னு, பேராம்ப்ர...

பேராம்ப்ர, இடிந்த கடவு, குலப்பச்சால்...

குலப்பச்சால்...

தச்சங்குன்னிலிருந்து இடிந்த கடவிற்கு நடப்பதற்கு நாங்கள் நான்கைந்து பேர் இருந்தோம். அவர்களில் யாரும் பேரம்ப்ரய்க்கு செல்லக் கூடியவர்களாக இல்லை. மூன்று பேர் பய்யோளிக்குச் செல்லக் கூடியவர்கள். இரண்டு பேர் இரிஞ்ஞத்திற்கு. அவர்களில் அந்த வயதான முஸ்லீம் பெரியவரும் இருந்தார். மழையில் நாங்கள் கால்களை நீளமாக வைத்து, வேகமாக நடந்தோம். பாதையில் நீர் இல்லை.

வயதான முஸ்லீம் பெரியவர் கூறினார்:

'கையில் இருக்குற கொஞ்சம் தேங்காய்களைக் கொடுக்கலாம் என்று பார்த்தால், வாங்குறதுக்கு ஆள் இல்லை.'

'தேங்காயே இல்லைன்னு நினைச்சுகோங்க.'

'அப்படியே இல்லைன்னாலும், இந்த வெள்ளத்தில் பறிக்கிறதுக்கு யார் இருக்காங்க? கொண்டு போறதுக்கு யார் இருக்காங்க?

இரிங்ஙத்திற்குச் செல்ல வேண்டிய ஆள் சொன்னார்:

'ஒரு ஆள் ஒரு காரியத்திற்கு உதவி செய்யிறதா சொன்னாரு. மூணு நாட்களாக போய்க் கொண்டிருக்கிறேன். பார்க்க முடியல.'

பய்யோளிக்குச் செல்ல வேண்டிய ஆள் சொன்னார்:

'இந்த வருடம் என் வீடு இடிஞ்சு விழுந்திடும்!'

அவருடைய குரலில் அடக்க முடியாத கவலை நிறைந்திருந்தது.

நான் எதுவும் கூறவில்லை. மழை பெய்து கொண்டிருந்தது. மண் அட்டைகள் முனகின.

நான் நினைத்துப் பார்த்தேன்: எல்லோருக்கும் அவரவர்களுக்கென்று இருக்கக் கூடிய பிரச்னைகள் இருக்கின்றன. அவர்கள் அவை எல்லாவற்றையும் கூறுகிறார்கள்.

நானோ?

எனக்கும் பிரச்னை இல்லையா?

ஆனால், அதை என்னால் வெளிப்படையாக கூற இயலாது, நேற்று... நான் நீண்ட பெருமூச்சை விட்டேன்.

கங்காதரனுக்கு பிரச்னைகள் இல்லை. எல்லாவற்றிலிருந்தும் விடுதலை கிடைத்திருக்கிறது.

ஒரு வகையில் பார்த்தால் மரணம் எவ்வளவு நல்லது!

தூரத்தில் நதி தெரிந்தது. நான் காலை நீட்டி வைத்து, வேகமாக நடந்தேன்.

சாயங்கால விரைவு பேருந்திலோ இல்லாவிட்டால் இரவு வண்டியிலோ நான் திரும்பி வர வேண்டும்.

ஒரு பாறைக்கும் புதருக்கும் அருகில் பாதை வலது பக்கமாக திரும்பி, படிப்படியாக சரிந்து, நீரில் போய் முடிந்தது.

நான் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு நின்றேன். எனக்கு முன்னால் நீர் நிறைந்து காணப்பட்டது. நீர்... நீர்...

அந்த இக்கட்டான சூழ்நிலையில் காணப்பட்ட நீரையே பார்த்துக் கொண்டு சிறிது நேரம் நின்றபோது, என்னுடைய கால்கள் சோர்வடைந்து, பார்வை சக்தி குறைந்து, சரீரமெங்கும் தளர்ச்சி உண்டானது.

மேலே இருண்ட வானம். கீழே விடாது ஓடிக் கொண்டிருக்கும் வெள்ளம். அவற்றுக்கு மத்தியில் மனிதன் முற்றிலும் செயலற்றுப் போயிருந்தான்.

நான் யாரிடம் என்றில்லாமல் கேட்டேன்:

'இதுதான் இடிந்த கடவா (உடைந்த ஏரியா?)?'- இடிந்து விழப் போகும் தன்னுடைய வீட்டைப் பற்றி கூறி, வேதனைப்பட்டுக் கொண்டிருந்த அந்த இரிங்ஙத்தைச் சேர்ந்த மனிதர் சொன்னார்:'

'பத்திரம்... நீரோட்டமும், ஆழமும் உள்ள இடம். இரண்டு வருடத்துக்கு முன்பு ஒரு ஆள் இறந்து விட்டார்...'

எனக்கு மேலும் களைப்பு உண்டானது.

கிழக்கு திசையிலும், மேற்கு திசையிலும் இருந்த வீடுகளும், தெற்குப் பகுதியிலிருந்த கடைகளும் தெரியக் கூடிய தூரம் வரை நீரில் மூழ்கிக் கிடந்தன. எனக்கு முன்னால் இருந்த கடையின் வாசலில் நீர் வளையமிட்டு மோதிக் கொண்டிருந்தது. கடை மூடப்பட்டுக் கிடந்தது. கடையின் மேற்கு திசையில் சற்று தள்ளி, முக்கால் பகுதி கீழே சாய்ந்து விழுந்திருந்த ஒரு மரத்திற்கு முன்பு சிலர் படகை எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.

சாலைக்குக் குறுக்கே சுமார் ஐம்பதடி நீளத்தில் நீர் மிகவும் பலமாக ஓடிக் கொண்டிருந்தது.

'வாங்க...  உங்களுக்கு இடத்தைப் பற்றி உறுதியாக தெரியாது, வெறுமனே குழம்பிப் போய் நிற்காதீங்க. எங்களோட ஊருக்கு வந்து...'

அந்த கைகள் இரும்பைப் போல இருந்தன.

நாங்கள் நீரைக் கிழித்துக் கொண்டு மற்றவர்கள் நின்றிருந்த இடத்தை நோக்கி நடந்தோம்.

'இப்ராஹிம், படகு இல்லையா?'

'தெரியலையே, ஆஜிக்கா.'

இரண்டு மணி நேரமாக இந்த நீரில் எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறோம்.

தேங்காய் பறிப்பதற்காக போயிருக்கிறாராம்.

'அவனுடைய பெரிய செயல்தான்!'

'அப்படிச் சொல்லாதீங்க...'

'பிறகு... என்ன சொல்றது? அவனோட... யாராவது அழைப்பதற்கு போயிருக்காங்களா?'

தூரத்தில் நீரைத் தொட்டுக் கொண்டிருக்கும் தென்னை மரத்தின் உச்சிகளுக்கு மத்தியில் ஒரு படகு நீங்கி வருவது தெளிவற்று தெரிந்தது.

'ஏய் பு....'

அந்த குரல் அங்கு எல்லா இடங்களிலும் எதிரொலித்தது.

'அது வேறு ஏதோ படகு...'

குளிர்.

இருட்டு.

கடவுளே!

'இரண்டு மணி நேரமாக இந்த நீரில் நிற்க ஆரம்பித்து...'

மீண்டும் யாரோ பெரிய வெறுப்புடன் கூறினார்கள். நாங்கள் மொத்தம் பதினைந்து பேர் இருந்தோம்.

நான் எனக்குள் கூறிக் கொண்டேன்:

'இன்று சேராம்ப்ரயை அடைய முடியும்னு தோணல.'

யாரிடம் என்றில்லாமல் நான் கேட்டேன்:

'இங்கே எப்போதும் படகு இருக்கும்ல?'

நீரில் நின்று கொண்டிருப்பதைப் பற்றி குறைப்பட்டுக் கூறிய மனிதர் சொன்னார்:

'இது ஒரு ஏரி இல்லை சார்...'

அவர் தன்னுடைய பலவீனமான குரலில் குலுங்கிக் குலுங்கி சிரித்தார்.

'ஆனால், இங்கு ஒரு ஏரிக்கு இருக்க வேண்டிய எல்லா தகுதிகளும் இருக்கின்றன.'

'சரிதான்....'

அவர் சொன்னார்:

'இந்த வழியா போவது உங்களுக்கு இது முதல் தடவையாக இருக்க வேண்டும்.'

நான் கூறினேன்:

'இல்லை... கடந்த டிசம்பரில் வந்திருக்கிறேன்.'

'அன்று வெள்ளப் பெருக்கு உண்டாகவில்லை.'


'வருடத்தில் இரண்டு வாரங்கள்தான் இந்த சிரமம்...'

'அது ஒரு சிரமமாக இல்லாமலிருக்கலாம்,'

'இல்லை... அப்படி இல்லைன்னு நான் சொல்றேன். ஆனால்...'

'ஒரு 'ஆனா'லும் இல்லை.'

'இந்த முறை நீர் வேகமாக வற்றிப் போகக் கூடிய அறிகுறி தெரியவில்லை.'

'ஏய்... பு...'

'இப்ராஹிம்...'

'என்ன ஆஜிக்கா?'

'பதினாறில் வந்த வெள்ளப்பெருக்கு ஞாபகத்துல இருக்குதா? இது அதே மாதிரிதான்...!'

'நாங்கள் வரி கட்டுறோம். 'செஸ்' கொடுக்குறோம். கேட்பது எதையும் கொடுக்குறோம். ஆனால், எங்களுடைய அனுபவம் இதுதான்...'

'நாம் குறும்ப்ரநாட்டுக்காரர்கள்தானே?'

'ஏன்? நாங்கள் எல்லாரும் மலபாரைச் சேர்ந்தவர்கள்.'

'நாம இந்தியர்கள்.'

'அந்த அளவிற்கு பரந்த மனதுடன் சிந்திப்பதற்கு என்னால முடியல.'

'வேண்டாம்...'

அதிக கோபத்துடன் அவர்கள் அரசாங்கத்தை விமர்சிக்க ஆரம்பித்தார்கள்.

நான் நினைத்தேன்: இவர்கள் எல்லோரும் கலைஞர்கள். ஆனால், இவர்களுக்கிடையே ஒரு 'இக்னேஷியோ ஸிலோனி' இல்லை. இருந்திருந்தால், முதல் தரமான ஒரு புதினம் கிடைத்திருக்கும்.

மண் அள்ளும்போது ஒரு சிறுவன் உயிருடன் குழிக்குள் சிக்கிக் கொண்டதைப் பற்றியும், இரண்டு சிறிய குழந்தைகளும் அறிவு வளர்ச்சியில்லாத ஒரு தாயும் நீரில் அடித்துச் சென்றதைப் பற்றியும் யாரோ கூறிக் கொண்டிருந்தார்கள்.

கடையின் பின் பகுதியிலிருந்த ஒரு வாழை மரம் சாய்ந்து நீரில் மிதந்து சென்றது. இன்னொன்று கீழே சாய்வதற்கு எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருந்தது. அதன் மேற்பகுதியில் நனைந்து கனமான சிறகுகளுடன் இருந்த ஒரு காகம் கவலை நிறைந்த குரலில் கரைந்து கொண்டே, ஓரக் கண்களால் நான்கு பக்கங்களிலும் பார்த்துக் கொண்டிருந்தது.

குளிர் என்னுடைய எலும்புகளுக்குள் நுழைந்து கொண்டிருந்தது.

என்னுடைய முழங்கால்கள் வலித்தன.

நான் ஒரு கனவு கண்டேன்.

கனவிலும் நீர்தான். விசாலமான, கரை காண முடியாத நீர் பரப்பு. அதில் சிறிய ஒரு படகும், களைத்துப் போன சில பயணிகளும். அவர்கள் பதைபதைப்புடன் வானத்தைப் பார்த்தார்கள். அப்போது அதோ... தூரத்தில் வானத்தின் விளிம்பில் அலகில் ஆலிவ் மரத்தின் கிளையுடன் ஒரு புறா கண்களில் படுகிறது!

நோஹாவின் பெட்டகம்!

ஒரு உரத்த சத்தமும் ஆரவாரமும் கேட்டன. படகு வந்து சேர்ந்தது. நான் நீண்ட பெருமூச்சை விட்டேன். அப்பாடா!...

ஈரமானதாகவும், இருண்டு போனதாகவும் இருந்த வானத்திற்குக் கீழே, முழங்கால் வரை இருக்கக் கூடிய நீரில், படகிற்காக காத்துக் கொண்டு நின்றிருப்பது என்ற பொது பிரச்னையை எல்லோரும் சேர்ந்தும், நம்பிக்கையுடனும் சந்தித்த குழுவினர், படகு வந்தவுடன், நான்... நான்... முதலில் என்பதைப் போல சண்டை போட ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்திற்கு முன்பு அரசாங்கத்தை விமர்சித்தவர்களும் அவர்களுக்கு மத்தியில் இருந்தார்கள்.

நான் சோர்வுடன் விலகி நின்றேன். அந்தச் சிறிய படகில் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து ஏறினால், அது மூழ்கும் என்பது உறுதி. ஆனால், யாரும் அதை நினைக்கவேயில்லை.

பாதி ஆட்களாவது இறங்கினால்தான் தான் படகைச் செலுத்த முடியும் என்று படகோட்டி பிடிவாதம் பிடித்தார்.

'நாம அடுத்த முறை போவோம்'- முஸ்லீம் பெரியவர் கூறினார்.

'பிரச்னை வேண்டாம்...'

கொஞ்சம் ஆட்கள் படகிலிருந்து இறங்கினார்கள். அவர்களுக்கு பெரிய அளவில் மனக் கவலை இருந்தது. ஆனால், வேறு வழியும் இல்லை.

படகு திரும்பி வந்து எங்களையும் ஏற்றிக் கொண்டு அக்கரையை அடைந்தபோது, நேரம் மதியத்தைத் தாண்டி விட்டிருந்தது. படகோட்டியின் அதிகமான கூலியைக் கொடுத்த பிறகு - நிறைய தர்க்கமும் வாதமும் நடந்து கொண்டிருந்தன- நாங்கள் மீண்டும் நீரின் வழியாக நடந்தோம். நிலத்திலும் வயல்களிலும் நீர் புகுந்திருந்தது. பெரும்பாலான வீடுகளிலிருந்து ஆட்கள் வெளியேறியிருந்தார்கள். தென்னை மரங்கள் நிறைந்த விசாலமான நிலங்களில் இங்குமங்குமாக குடிசைகள் விழுந்து கிடந்தன.

தென்னை மரங்களுக்கு மத்தியில் பார்த்தபோது, நீரைத் தவிர வேறு எதுவுமே கண்களில் தெரியவில்லை. இந்த நீர் அனைத்தும் எங்கிருந்து வருகிறது என்று நான் ஆச்சரியத்துடன் நினைத்துப் பார்த்தேன்.

நீர் உள்ளே நுழைந்து போகும் சத்தம் காதில் கேட்டது.

பூட்டப்பட்டிருந்த ஒரு பெரிய வீட்டின் வாசலில் இருந்தவாறு, சிலர் நெருப்பு பற்ற வைக்க முயற்சித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவர்களுக்கு மத்தியில் பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் வயதானவர்களும் இருந்தார்கள்.

அந்த அடுப்பிலிருந்து நெருப்பு அல்ல- புகைதான் வந்து கொண்டிருந்தது.

பதைபதைப்பு நிறைந்த அந்த முகங்களை நான் இப்போதும் பார்க்கிறேன்.

கனோலி ஏரியின் பாலத்தைக் கடந்து, பய்யோளி கடை வீதியை அடைந்தோம். கடை வீதி உயிரற்று கிடந்தது.

முஸ்லீம் பெரியவர் விடை பெற்றுக் கொண்டு கிளம்பிச் சென்றார். கடை வீதி முடிவடைந்ததும், நீரும் முடிந்தது. பிறகு... உயர்ந்த இடம். ஆனால், இதுவரை நீரின் வழியாக நடந்ததால், கால்கள் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டன. முழங்கால்களுக்குக் கீழே, சொல்லப் போனால்- கால்கள் பலவீனமான இரண்டு மரத் துண்டுகளைப் போல ஆடிக் கொண்டிருந்தன. நீர் நுழைந்த ரப்பர் ஷூக்கள் 'ப்லகும்' என்று ஓசை உண்டாக்கிக் கொண்டிருந்தன. ஷூக்களுக்குள் நீர் மட்டுமல்ல- சேறும் மணலும் சிறுசிறு கற்களும் கூட இருந்தன. அவற்றுடன் உரசி, தோல் கிழிந்து வேதனை தர ஆரம்பித்தது.

எனினும், ஷூக்களைக் கழற்றி கையில் பிடித்துக் கொண்டு இருக்கவும் வழியில்லாமலிருந்தது. சாலையில் முற்களும், கூர்மையான கற் துண்டுகளும் இருந்தன.

நான் களைப்புடன் நடந்தேன். நம்பிக்கையும், பக்தியும் இருந்தால் நெருப்பின் மீது கூட நடப்பதற்கு முடியும் என்று கூறுவார்கள். ஆனால், எனக்கு நம்பிக்கையுமில்லை, பக்தியுமில்லை. எனினும் தோல் உரிந்த காலில் மணல் உரசியபோது உண்டான வேதனையைத் தாங்கிக் கொண்டே நடப்பதற்கு என்னால் முடியாதா?

(நெருப்பின் மீது ஆட்கள் நடக்கும் ஒரு காட்சி இருக்கிறது, ஒரு திரைப் படத்தில். 'எலிஃபென்ட் வாக்'கா?

ஞாபகத்தில் இல்லை.

... நல்ல நடிகர் க்ரெகரிபெக். ஜோஸஃப் காட்டனும் நல்ல நடிகரே. ஜோஸ் ஃபெரர் அருமையான நடிகர். டூ யூ ஹியர் மீ? முலான் ரூஷ்? ஆனால், க்ரெகரிபெக்! அழகான தோற்றத்தைக் கொண்டவர், நல்ல உடலமைப்பைக் கொண்டவர், கம்பீரமானவர்... ரோமன் ஹாலிடே...

ஆட்ரி ஹெப்போனை மோட்டார் பைக்கிற்குப் பின்னால் ஏற்றிக் கொண்டு, நான் ரோம் நகரத்தின் தெருக்கள் வழியாக....)

சாலையின் மீது சில இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்திருந்தன.

நான் சிந்தித்தேன்:

ரோம் நகரத்தில்....


ஆனால், மீண்டும் நீரைப் பார்த்தேன். கிழக்கு திசையிலிருந்த மலைகளிலிருந்து மேற்கு திசையில் கண் பார்வை போகக் கூடிய தூரம் வரை நீர் பரந்து கிடந்தது. சாலையின் இரண்டு பக்கங்களிலுமிருந்த வேலிகளின் மேற்பகுதி சில இடங்களில் நீருக்கு மேலே தெரிந்தது.

அந்த கடலின் கரையில் ஒரு செயலற்ற மனிதனைப் போல நான் நின்றிருந்தேன்.

'இதுதான் குலுப்பச்சால்...'

நான் எதுவும் கூறவில்லை. அது குலுப்பச்சாலாக இருக்கலாம். ஜிப்ரால்ட்டராக இருக்கலாம். வைதரணியாக இருக்கலாம். என்னைப் பொறுத்த வரையில், அனைத்துமே நீர்தான். ஆனால், அப்ப நாயர் எதற்கு இங்கு வந்து வசித்தார்? இந்த பிரளய பூமியில்?

'இங்கு நீரோட்டம் குறைவு. ஆனால், நீர் அதிகம் இருக்கு...'

'இன்னைக்கு எதுவும் சாப்பிடல. இல்லையா?'

'நடக்கலாம்... என்ன?'

நாங்கள் நடந்தோம்.

பொதுவாகவே நீர் முழங்கால் வரைதான் இருந்தது. நீரோட்டமும் குறைவுதான். ஆனால், சில இடங்களில் ஆழமும் நீர் போக்குவரத்தும் இருந்தது. இடுப்பு வரையும், மார்பு வரையும் நீருக்க மத்தியில் பதைபதைப்புடன் நடந்தபோது, எனக்குத் தெரிந்தே என்னுடைய கால்களை இழுத்துக் கொண்டு போவதற்கு நீர் முயற்சித்துக் கொண்டிருந்தபோது, நான் நினைத்தேன்: இங்கு இப்போது மரணமடைந்து விழுந்தால், என்னை யாராலும் அடையாளம் தெரிந்து கொள்ள முடியுமா? மேற்கு திசையிலிருக்கும் ஒரு மண் மேட்டில் எங்காவது என்னுடைய பிணம் மோதிக் கிடக்கும். இல்லாவிட்டால் ஒரு சவுக்குக் காட்டில் கிடந்து, அது அழுகிப் போய் கிடக்கும். முதலில் பார்ப்பவன் என்னுடைய கைக் கடிகாரத்தையும், பேனாவையும் நன்றியுடன் எடுத்துக் கொள்ளாமல் இருக்க மாட்டான். அவன்... பிறகு... எப்போதாவது...

'இங்கு இதுவரை யாரும் இறந்தது இல்லை.'

விழப் போகும் வீட்டைப் பற்றி பெருமூச்சு விட்டு பேசிக் கொண்டிருந்த அந்த மனிதர் சொன்னார்.

'இதோ... நான் இறந்து கொண்டிருக்கிறேன்.'

நான் வெறுப்புடன் சொன்னேன்.

எல்லோரும் சிரித்தார்கள். ஆனால், அந்தச் சிரிப்பில் ஏதோ பரிதாப உணர்ச்சி கலந்திருந்தது.

நீர் முடிவடைந்த திசையில் ஒரு மேடு இருந்தது. மேடு தாண்டியவுடன், சில கடைகள் தென்பட்டன. என்னுடன் இருந்தவர்கள் சொன்னார்கள்: 'நீங்கள் இங்கேயே நில்லுங்க. இங்கே இருந்துதான் பேருந்து புறப்படும்.'

அவர்கள் எல்லோரும் புறப்பட்டார்கள்.

விழப் போகும் வீட்டைப் பற்றி கூறி வேதனைப்பட்டுக் கொண்டிருந்த அந்த வயதான மனிதர் மிகவும் சிரமப்பட்டு நடந்து போய்க் கொண்டிருந்தார். நான் மெதுவான குரலில் சொன்னேன்:

'நண்பரே, வேகமாக நடங்க... வேகமா... உங்களுடைய வீடு ஒருவேளை கீழே விழுந்து கிடக்கலாம்.'

நான் நீண்ட பெருமூச்சை விட்டேன்.

என் வீடு?

என்னுடைய வீடும் மண்ணால் ஆனதுதான். ஆனால்...

காலையில் வீட்டை விட்டு புறப்படும்போது நினைத்தேன்! சாயங்காலமே திரும்பி வர வேண்டும். வர முடியும். எனினும், என்ன நடந்தது? இப்போதே நேரம் மூன்றரையைத் தாண்டி விட்டிருந்தது. இன்னும் எவ்வளவோ மைல்கள் தூரத்தில் இருக்கிறது இந்த பேராம்ப்ர என்று கூறக் கூடிய இடம்.

இன்றே அங்கு போய்ச் சேர முடிந்தால்!

வடகரையிலிருந்து புறப்பட்டபோது, சட்டையில் சிறிது அழுக்கு புரண்டிருந்ததை மிகவும் முக்கியமான விஷயமான நினைத்தேன். அந்தச் சட்டையை இப்போது பார்க்க வேண்டும். ஆனால், இங்கு அறிமுகமானவர்கள் யாருமில்லை... இருந்திருந்தால்...

நான் செயலற்ற நிலையில் இருந்தேன்.

நனைந்து வழிந்து கொண்டிருக்கிறது. நனைந்து வழியட்டும்.

அழுக்கு படிந்திருக்கிறது. அழுக்கு படியட்டும். மேலும் படியட்டும்.

அங்கிருந்த ஒரு தேநீர் கடைக்குள் நுழைந்து, நான் பலவீனமான குரலில் சொன்னேன்:

'ஒரு தேநீர் கொடுங்க... நல்லா சூடா இருக்கணும்.'

பாதி உடை அணிந்தவனும், ஒரு நோயாளியைப் போலவும் இருந்த அந்த கடைக்காரன் சொன்னான்:

'இங்கே பால் இல்லையே!'

இங்கு தண்ணீராவது இருக்கிறதா என்று நான் கேட்கவில்லை.

ஜப்பானிலிருந்து நீண்ட நாட்களுக்கு முன்பு வந்த கண்ணாடி குவளைகள்தான் அங்கு இருந்தவை. பயன்படுத்தி சேதமடைந்த குவளைகள்! அதே போல அந்த மனிதனுக்கும் சேதம் உண்டாகியிருக்கிறது. அந்த கண்ணாடி குவளைகள் விழுந்து உடைவதைப் போல அவனும் ஒரு நாள் உடைந்து போவான்.

நான் அவனுடைய அடுப்பைப் பார்த்தேன். அங்கு நெருப்பே இல்லை.

ஆள் யாருமில்லாத கடையின் வாசலில் நின்று கொண்டு வேலை இல்லாத இளைஞர்கள் 'நாயும் புலியும்' விளையாடிக் கொண்டிருந்தார்கள். சொறி பிடித்த, அவலட்சணமான குழந்தைகள் சிலையைப் போல அசையாமல் இருந்தார்கள். மஞ்சள் நிற தவளையைப் போல இருந்த ஒரு பெண், வயிறு வீங்கிய ஒரு குழந்தையை வைத்தவாறு சாலையில் ஓரத்தில் வெறுமனே நின்று கொண்டிருந்தாள்.

அலைந்து திரிந்து கொண்டிருக்கும் தெரு நாய்கள்... கோழிகள்.

எங்கும் ஓசை இல்லை... அசைவு இல்லை.

பிரியத்திற்குரிய என்னுடைய குறும்ப்ரநாடு தாலுக்காவே!

'பேராம்ப்ரய்க்கு இனி எப்போ பேருந்து?'

'இரண்டு மணிக்கு ஒன்று போனது. இனி ஐந்தரைக்குத்தான்.'

எனக்கு சோர்வு தோன்றவில்லை.

(சோர்வு என்று சொன்னால், என்ன?)

'இங்கேயிருந்து எவ்வளவு மைல்கள் இருக்கும்?'

'ம்... ஒரு பத்து மைல்கள்.'

'ஆறு... ஏழு... எட்டு...'

யாருக்கும் உறுதியாக தெரியவில்லை.

நடக்கலாம்... நடக்கலாம்.

தென்னையும், மாமரங்களும், பலாவும், பனை மரமும் உள்ள நிலங்கள், தேவாலயங்கள், நீரற்ற குளங்கள், பாம்புக் புற்றுகள், பிணம் அடக்கம் செய்யப்பட்ட இடங்கள், ஆள் இல்லாத வீடுகள், கருங்கல் பாறைகள், படிப்பகங்கள், ஆரம்பப் பள்ளி, காவல் நிலையம்- எல்லாவற்றையும் தாண்டி, பத்மநாபன் என்ற நான் மாலை நேரத்தில் பேராம்ப்ரயை அடைந்தேன்.

(மனிதர்களையும் தெரு நாய்களையும் நான் வழியில் பார்த்தேனா?)

பய்யோளி வழியாக நான் போயிருக்கக் கூடாதா என்று மாதவ மேனன் கேட்கிறார்.

நண்பரே...

என்னுடைய சரீரம் தளர்ச்சியடைந்து, மனம் நடுங்கிக் கொண்டிருக்கிறது.

முடியாது..

அப்ப நாயர் எங்கே?

ஓ... அப்ப நாயர் எதுவும் கூறவில்லை. வெள்ளை அடிக்கப்பட்டிருந்த சுவரையே பார்த்துக் கொண்டு அப்பநாயர் வெறுமனே நின்று கொண்டிருக்கிறார். வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் ஆரவாரத்துடன் பின்னோக்கி தள்ளிய அப்பநாயர்! என் அப்ப நாயர்!

அப்ப நாயர் களைத்துப் போயிருக்கிறார். நேற்று இரவு படுத்தபோது, கூறினார்:

'நீங்கள் வருவீர்கள் என்று நான் உறுதியாக நினைத்தேன்.'

நான் எதுவும் கூறவில்லை.

'நீங்கள் கங்காதரனைப் பார்த்ததில்லையே!'

தேம்பித் தேம்பி அழுதார்.

எனக்கு தம்பி இல்லை!

மேகங்களுக்கு மத்தியில் மேலும் வெளிச்சம் தெரிந்தது.


இப்போது என்னுடைய சட்டையில் அழுக்கு இல்லை. அது அந்த அளவிற்கு ஈரமாகவும் இல்லை. இரவில் துவைத்து காய வைத்த பிறகு, இரண்டு தடவைகள் இஸ்திரி போடப்பட்டிருக்கிறது.

நான் கூறி அல்ல.... கூறவும் மாட்டேன்... ஆனால், அப்பநாயர்...

கடந்த முறை இங்கு வந்தபோது...

அப்பநாயரால் சைக்கிள் ஓட்ட முடியவில்லை. (நீங்கள் தோற்றது அங்கு மட்டும்தானே?) நான் சொன்னேன்: 'நீ இங்கேயே நில்லு. நாங்கள் போய் வருகிறோம்.' பாலகிருஷ்ணன், கோவிந்தன், நான். நாங்கள் முழங்கால் வரை மட்டுமே நீர் இருக்கும் காட்டாற்றயும், வாய்க்காலையும் கடந்து மலையின் மீதும் அடிவாரத்தின் வழியாகவும் சென்றோம்.

அடர்த்தியான காடு!

திரும்பி வந்தபோது, இரவாகி விட்டிருந்தது. ஆனால், வானத்தில் நட்சத்திரங்களும் பூமியில் மலர்களும் உள்ள, டிசம்பர் மாதத்தின் ஒரு இரவு. வெளியூரிலிருந்து வந்து குடியேறி வைத்திருந்த ஒருவனின் கடையிலிருந்து மெழுகுவர்த்தி வாங்கி பற்ற வைத்து, சிரட்டைக்குள் வைத்து, சைக்கிளின் முன்னால் கட்டினோம்.

சகோதரா, நீங்கள் திருவல்லாவிலிருந்தா வந்தீங்க? இல்லாவிட்டால், சங்ஙனாசேரியிலிருந்தா?

என் பத்ரோஸ் அண்ணே, அந்த விளக்கை முழுசா இந்தப் பக்கம்...

(கோவிந்தன் திருவிதாங்கூரின் மொழியைப் பின்பற்றி பேசினார்.)

முடியவில்லை.

எல்லோரும் சிரித்தார்கள்.

நாங்கள் பாடினோம்.

'முதுகாடின் வீரரே! தீரரே!...'- பேராம்ப்ரயை அடைந்து, கோவில் குளத்திற்குச் சென்று குளித்து திரும்பி வந்தபோது, பால கிருஷ்ணனும் வர்க்கியும் கோவிந்தனும் அப்ப நாயரும் மேனனும் இருந்தார்கள்.

என்ன ஒரு உற்சாக ஆரவாரமாக இருந்தது!

பேருந்து புறப்பட்டது.

நான் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டேன். அப்பநாயர் பேருந்தின் அருகில் வந்து கையைப் பிடித்து அழுத்தியவாறு கேட்டார்:

'எப்போது பார்ப்போம்?'

'பார்ப்போம்...'- என்னால் வேறு எதுவும் கூற முடியவில்லை.

பேருந்து நகர்ந்தது. ஆனால், எனக்கு முன்னாலிருந்து முரட்டுத்தனமான ஆளாக இருந்தாலும், அன்பு நிறைந்த அந்த முகம் மறையவே இல்லை.

ஒரு இருபது வருட காலத்தின் நினைவுகள்...

பாறையின் வெளிப்பகுதியையும், சந்தனத்தின் உட்பகுதியையும் கொண்டிருக்கும் ஒரு மனிதர்.

நிறைய அன்பு வைத்திருந்தவர்.

நான் நீண்ட பெருமூச்சை விட்டேன்.

பேருந்து புதியதாகவும், சுத்தமானதாகவும் இருந்தது. அது சோர்வாக இல்லை. ஆட்களும் குறைவாகவே இருந்தார்கள். உயர்ந்த சாலையின் வழியாக பேருந்து சீறிப் பாய்ந்து போய்க் கொண்டிருந்தது.

சில திசைகளில் மட்டுமே நீர் இருந்தது. அதுவும் செருப்பின் அடிப்பகுதி அளவிற்கே. பேருந்து போகும் போது, சுவாரசியமான ஒரு சத்தத்துடன் நீர் இரண்டு பக்கங்களிலும் தெறித்துக் கொண்டிருந்தது.

பாலுசேரி வழியாக கிழக்கு திசை நோக்கி போவது முதல் தடவை.

நடத்துநர் சொன்னார்: 'பாலத்தைத் தாண்டினால், உள்ளியேரிமுக்கு. அங்கு கனெக்‌ஷன் பேருந்து இருக்கும்.'

சிதிலமடைந்த பாலத்தின் வழியாக உயிரைப் பணயம் வைத்து நடந்தபோது, போடப்பட்டிருந்த மரப் பலகைகள் 'கடகட' சத்தத்துடன் மேலே உயர்வதும் கீழே இறங்குவதுமாக இருந்தன.

அதிக சுத்தத்துடனும், நல்ல உடல் நலத்துடனும், சந்தோஷத்துடனும் இருக்கக் கூடிய மனிதர்களை உள்ளியேரி முக்கில் சந்தித்தேன். வெள்ளப் பெருக்கு அங்கு எந்த இடத்திலும் கேடுகள் உண்டாக்காமலிருந்தது.

பேருந்து தயாராக நின்றிருந்தது.

நல்ல பேருந்து.

சிறிது தூரம் சென்றதும், கழுத்தில் பாசியும், கையில் மரப்பெட்டிகளும், ஊன்று கோலும், சுமையும் என்று சிலர் ஏறினார்கள். அவர்கள் 'கலபில' என்று சத்தம் உண்டாக்கி கொண்டும், ஒரு கெட்ட நாற்றத்தை (என்ன நாற்றம் அது?) பேருந்திற்குள் பரவச் செய்து கொண்டும் இருந்தார்கள்.

நான் நினைத்தேன்: கோழிக்கோட்டை அடையும்போது இரண்டரை மணி ஆகி விடும். பிரதாபன் நீதிமன்றத்தில் இருப்பான். கேசவன் அண்ணன் ஒரு வேளை வீட்டில் இருந்தால் போதும், ராதாவும் சுமங்கலி அண்ணியும் இருப்பார்கள். குழந்தைகளும் இருப்பார்கள். பிறகு... எல்லோரையும் பார்த்து விட்டு, சாயங்கால விரைவு பேருந்தில் திரும்பி வர முடியுமா? இல்லாவிட்டால் இறுதி வண்டிக்கு...

பேருந்து திடீரென்று நின்றது. சாலையில் சிறிது தூரத்திற்கு பெரிய அளவில் சேறு இருந்தது.

'எல்லாரும் கொஞ்சம் இறங்கணும்...'

'கொஞ்சம் தள்ளி விடுங்க...'

நாங்கள் பேருந்தைத் தள்ளி, நகரச் செய்து, சேற்றைத் தாண்ட வைத்தோம். அப்போதுதான் எங்களுக்கு மத்தியில் ஒரு முழுக்கால் சட்டை அணிந்த ஒரு மனிதர் இருக்கிறார் என்பதே எங்களுக்கு தெரிந்தது. அவர் தன்னுடைய புதிய ஷூக்கள் சேற்றில் படாமல் இருப்பதற்காக பகீரத முயற்சி செய்து கொண்டிருந்தார்.

எனக்கு இரக்கம் உண்டானது.

இங்கு... இதோ ஒரு மகாத்மா.

அவரை என்னுடைய முதுகில் ஏற்றி நான் அந்தப் பக்கம் போகச் செய்வேன். ஆனால், எனக்கு சக்தி இல்லையே! என்னுடைய கால்கள் பலவீனமானவை. முழங்கால்களில் ஊசி உள்ளே நுழைவதைப் போல வேதனையாக இருந்தது. இல்லாவிட்டால் நான் அந்த மனிதரை...

இப்படி சிந்தித்துக் கொண்டிருந்தபோது, பெரிய ஒரு சம்பவம் நடைபெற்றது.

சாலையின் ஓரத்தில் வயதான பாதி உடை அணிந்த ஒரு பெண்ணும் ஒரு இளைஞனும் சேர்ந்து ஒரு இளம் பெண்ணை தாங்கி பிடித்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.

அவர்கள் பேருந்தை நிறுத்தினார்கள். நடத்துநர் வெளியே இறங்கி, அந்த இளைஞனுடன் பேசிக் கொண்டிருந்தபோது அந்த இளம் பெண் தன் தாயின் தோளில் தலையைச் சாய்த்துக் கொண்டிருந்தாள். தாய் பதைபதைப்புடன் பேருந்தின் உள்ளே பார்த்து, ஈரமான கண்களைத் துடைத்தவாறு, நீண்ட பெருமூச்சை விட்டாள்.

அவர்கள் கோழிக்கோட்டில் இருக்கும் மருத்துவமனைக்குச் செல்பவர்கள்.

ஒரு அதிர்ச்சியுடன் நான் கேட்டேன்: 'கக்கோடி கடை வீதியில் நீர் புகுந்திருக்கிறது. பேருந்து போகாதே!'

'ஆனால், அவளுக்கு...' - அந்த இளைஞனின் தொண்டை இடறியது.

'உங்களால் நீரைக் கிழித்துக் கொண்டு நடக்க முடியாது.'

'கடவுள் ஒரு வழி...'

'என் பெருமாளே!'

அந்தச் சிறிய குடும்பம் பேருந்திற்குள் ஏறியது.

என்னுடைய கையில் பேராம்ப்ரயிலிருந்து கோழிக்கோட்டிற்கு கிழிக்கப்பட்ட ஒரு த்ரூ டிக்கெட். கக்கோடி கடை வீதியில் நீர் புகுந்திருப்பதைப் பற்றி உள்ளியேரிமுக்கில் நின்றபோது நடத்துநர் புதிய பயணிகளிடம் கூறி இருக்கலாம். ஆனால், நான் கேட்கவில்லை. நான் வேறு என்னவோ சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

கோழிக்கோடு தாலுக்காவில் ஒரு வெள்ளப் பெருக்கு உண்டாகும் என்று நான் நினைத்ததில்லை.

இனி இப்போது... மீண்டும் நீருக்கு மத்தியில் நடக்க வேண்டும். கால் உரசி, தோல் உரியும். 'ப்லகும்' என்று ஆகும். முழுவதும் ஈரமாகி வழியும். சாயங்காலம் கோழிக் கோட்டை அடைய முடியாது.

பய்யோளி வழியே செல்வதற்கு தயங்கி...


மற்றவர்களின் செயல்களில் தலையிடுவதற்கு எப்போதும் ஆர்வத்தை வெளிப்படுத்தக் கூடிய ஒரு கூட்டம் அந்த தாயையும் மகனையும் கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தது.

எனக்கு கோபமும் சோர்வும் உண்டாயின. ஒரு ஆள் கோழிக்கோட்டில் இருக்கும் டாக்டர்களின் திறமையைப் பற்றி ஒரு கருத்தரங்கம் ஆரம்பித்தார். இன்னொரு ஆள் தன்னுடைய மாமாவின் மகளின் கணவரின் தாயின் குணமாகாத வயிற்று வலியை ஒரு நாட்டு வைத்தியர் எப்படி ஒரு சாதாரண வித்தையைக் காட்டி குணமாக்கினார் என்பதை விளக்கி கூறிக் கொண்டிருந்தார். விளக்கி கூறிய பிறகு, அவர் பதைபதைப்பிற்குள்ளான அந்த தாய்க்கு அறிவுரை கூறுகிறார்:

'நீங்கள் இந்த உடல் நலக் கேட்டிற்கு எந்தச் சமயத்திலும் டாக்டர்களைத் தேடி போகாதீங்க.'

தொடர்ந்து அருகில் அமர்ந்திருந்த ஆளிடம் கேட்கிறார்:

'என்ன குறுப்பே, அப்படித்தானே?'

குறுப்பு கூறுகிறார்: 'சந்தேகம் இருக்கா?'

அப்போது இன்னொரு ஆள்...

தாய், தன் மகளை வருடிக் கொண்டிருந்தாள்.

அந்த இளம் பெண்ணின் முகம் எனக்கு தெளிவாக தெரிந்தது. அவளுடைய அகலமான கண்களும் உதடும் மிகவும் அழகாக இருந்தன. ஆனால், அந்த இளம் பெண்ணின் முகத்தில் இரத்தம் இல்லாமலிருந்தது. அவள் மூச்சு விடும்போது, சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள்.

வேதனையுடன் நான் நினைத்துப் பார்த்தேன்: அமைதியானவனும், அன்பு நிறைந்தவனுமான ஒரு விவசாயியின் மனைவி பதவியை அலங்கரிக்க வேண்டிய இந்த இளம் பெண் வாழ்வின் ஓட்டத்தில் ஒரு நோயாளியாக ஆகி விட்டாளே!

பேருந்து நின்றது.

இனி நீர்...

நடக்க வேண்டும்.

ப்லகும் ப்லகும்...

ஓ!

முதலில் சிரமமாக இல்லை. சிறிது தூரம் நீர்... பிறகு நீர் இல்லாமல்... அப்படித்தான் இருந்தது. நாங்கள் ஒரு பெரிய சுற்றுலா குழுவினரைப் போல ஒன்றாகச் சேர்ந்து நடந்தோம். எங்களுக்கு எதிரிலும் ஆட்கள் வந்து கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொரு முறை நீர் முடியும் போதும், அந்த தாயும் மகளும் எங்களுடன் இருக்கிறார்கள் அல்லவா என்று நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவர்கள் ஏழைகளாக இருக்கலாம். அனாதைகளாகவும் இருக்கலாம். கோழிக்கோட்டு மருத்துவமனையின் முதலைகள்...

முதலில் அவர்கள் எங்களுடன்தான் இருந்தார்கள். பிறகு... ஓ... நான் அவர்களைப் பார்க்கவே இல்லை.

அடைக்கப்பட்டிருந்த ஒரு கடையின் வாசலில் நின்று கொண்டு அடர்த்தியான இருட்டைப் போல இருந்த ஒரு இளம் பெண் ஒரு துணியால் ஆன தொட்டியை ஆட்டியவாறு, 'அம்மாவின் அன்புச் சொத்தே...' என்று பாடியபோது, என்னுடைய இதயம் இனம் புரியாத எதையோ நினைத்து கவலைப்படவும், என் கண்கள் ஈரமாகவும் செய்தன. பாடு... என் பிரியமான தங்கையே, பாடு...

கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சாலையைக் கிழித்துக் கொண்டு நீர் பலமாக ஓடியது.

கக்கோடி கடை வீதியில் வாழ்க்கை நின்றிருக்கவில்லை. அங்கிருக்கும் வங்கிகளிலும், பேக்கரிகளிலும், ஆயுர்வேத கடைகளிலும் வர்த்தகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

பாலத்திற்கு அருகில் பேருந்து காத்து நின்றிருந்தது. ஆனால், அங்கு அடைந்த பிறகுதான் அது வேறு நிறுவனத்தின் பேருந்து என்பதும், நான் போக வேண்டிய பேருந்து போய் விட்டது என்பதும் எனக்கு தெரிய வந்தது. வேண்டுமென்றால், நான் அதில் போகலாம். ஆனால், என்ன காரணமோ, நான் போகவில்லை.

அந்த பேருந்தும் போய் விட்டது.

என்னுடன் வந்த யாரும் இப்போது இங்கே இல்லை. நான் மட்டும். முடியாது... முடியாது... ஆகாயம் தெளிகிறது.

காற்றும், மழையும் இல்லை. எனினும்......

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.