Logo

ஒற்றையடிப் பாதைகள்

Category: புதினம்
Published Date
Written by sura
Hits: 5983
ottraiyadi-pathaigal

ம்பியாரின் மகள் வந்து நுழைந்ததே ஒரு சிறிய கோபத்துடன்தான்.

       விமான நிலையத்தில் யாரையும் காணோம். பழக்கமான ஏதாவது முகம் இருக்கிறதா என்று தேடி இவ்வளவு நேரமும் வரவேற்பறையில் சுற்றித் திரிந்து பார்த்தாள். கடைசியில் ட்ராலியைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்து காத்து நின்றிருந்தாள். அங்கும் யாரையும் காணோம். பிறகு ஒரு சிறிய போராட்டத்திற்குப் பிறகு எப்படியோ டாக்ஸியை ஏற்பாடு செய்து பொருட்களை ஏற்றும்போது டயோட்டாவும், பெரிய ஒரு சிரிப்பும், தலைக்குப் பின்னால் சொறியலுமாக டிரைவர் அச்சுதன் நாயர் வந்து நின்று கொண்டிருந்தார்.

பிறகு டாக்ஸியில் இருந்து சாமான்கள் முழுவதையும் இறக்கி இன்னொரு காரில் ஏற்றும்போது டாக்ஸிக்காரனின் நாக்கில் உண்டான எரிச்சல் சிறிதும் குறையவில்லை. ஒரு நோட்டை கையில் வைத்து நீட்டியதற்கு, அவன் ‘சூ’ என்று சீறினான்.

வண்டியை ஓட்டும்போது அச்சுதன் நாயரின் பழையப் புராணத்தைச் சிறிது நிறுத்துவதற்கு அவள் மிகவும் படாத பாடுபட்டாள். முப்பது வருடங்களாக வேலை பார்ப்பதன் வரலாறை இரண்டரை மணி நேரங்களில் சுருக்கிக் கூறுவதற்கு அவரும் மிகவும் சிரமப்பட்டார். இரண்டு பெரிய கொட்டாவி விட்டப் பிறகும், அவர் தன் கதையை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து, சிறிதும் கவலையே படாமல் உரத்த குரலில் அவள் அதை நிறுத்தச் சொன்னாள்.

வீட்டை அடையும்போது, முன்பக்க வாசலில் சிறிய ஒரு ஆட்களின் கூட்டம் இருந்தது.

அதைப் பார்த்தவுடன், சுதாவிற்கு எரிச்சல் உண்டானது. தன்னுடைய பழைய கைத்துப்பாக்கி எங்கே என்று அவள் நினைத்தாள். அதை எடுத்து வானத்தை நோக்கி மூன்று முறை சுட்டு குண்டுகளைப் பொழியச் செய்து, அவர்கள் எல்லோரையும் விரட்டியடிக்க வேண்டும் என்று அவள் நினைத்தாள். அடுத்த நிமிடமே நம்பியாரின் மகள் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டாள். அவர்களை விரட்டுவதற்குக் கைத்துப்பாக்கி போதாது. ஒருவேளை, அந்த பழைய ரைஃபில் சரியாக இருக்கலாம். டிஷ்க்கு... டிஷ்க்கு... டிஷ்க்கு...

நம்பியார் நீட்டிய கைகளுடன் ஓடி வந்தார். கட்டிப்பிடிக்க முயன்றபோது, மகள் உதடுகளைக் கோணலாக ஆக்கிக் கொண்டு அவரிடமிருந்து விலகினாள்.

“கார்ட் ஆஃப் ஹானருக்கு முன்னால் யாருக்காவது மாலை போட்டிருக்கலாம். சிவப்பு கம்பளமும் கண்ணில் தெரியவில்லை.”

நம்பியார் அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.

“நீ எப்படி வந்தே மகளே? பயணத்தில் ஏதாவது பிரச்சினை உண்டானதா?”

“குதிரைமீது ஏறி வந்தேன் அப்பா” - மகள் சொன்னாள். “எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு வர்றேன்ல. நம்முடைய ஆடம்பரத்தைக் கொஞ்சம்கூட குறைக்க வேண்டாம் என்று நினைத்தேன்.”

அதைக் கேட்காததைப்போல அவர் அவளை இறுக அணைத்துக் கொண்டு வரவேற்பறையை நோக்கி நடந்தார். அப்போது ஆட்களின் கூட்டம் முழுவதுமாக மெதுவாக நடந்து வந்து அங்கு குழுமியிருந்தார்கள். கம்பெனியின் இயக்குனர்கள் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள், உயர்ந்த பதவியில் இருப்பவர்கள், சில உறவினர்கள், அவர்கள் தங்களுடைய பதவியையும் சம்பளத்தையும் இரத்த ரீதியான நெருக்கத்தையும் அனுசரித்து பொருத்தமான இடங்களில் நின்றிருந்தார்கள்.

“பலம், வயது ஆகியவற்றை அனுசரித்து வரிசையாக நிற்கும்படி சொல்லியிருக்கலாமே அப்பா?” - மகள் தன் தந்தையின் காதில் சொன்னாள். “அறிமுகப்படுத்துவதற்கு எளிதாக இருக்கும். தேவைப்பட்டால் ஒரு இருபத்தொரு மரியாதை வெடிகளையும் வெடிக்கவும் செய்யலாம்.”

“அதை முன்னாடியே வெடிக்கச் செய்தாகிவிட்டது மகளே” - தந்தை தாழ்ந்த குரலில் சொன்னார். “நம்முடைய கோவிலில் - நீ திரும்பி வர்றதைச் சொல்லி, சரியாக இருபத்தொரு வெடிகள் வெடிக்கச் செய்தேன். நானே எண்ணினேன்.”

அந்தச் சடங்குகள் அனைத்தும் முடிந்து, மகளுடைய கோபம் சற்று குறைந்துவிட்டது என்று தோன்றியபோது, நம்பியார் மெதுவான குரலில் சொன்னார்.

“என்னால் விமான நிலையத்திற்கு வர முடியவில்லை. இரண்டு வெளிநாட்டுக்காரர்களுடன் காலையிலேயே ஒரு மீட்டிங் இருந்தது. அவர்கள் இரண்டு நாட்களாக இங்கு குளிக்காமலே தங்கியிருந்தார்கள். ஒரேயடியா என்கிட்ட அந்த வெள்ளைக்காரர்கள் ஒட்டிக்கிட்டாங்க. அவர்களிடம் பேச வேண்டியதையெல்லாம் பேசி அவர்களை அனுப்புறதே பெரிய பாடாப் போச்சு... பிறகு... பெங்களூர்ல இருந்து உண்ணி இன்னைக்கு வர்றான். இதோ... இப்போ அவனுடைய விமானம் வந்து இறங்கியிருக்கும்.”

“அப்படியா?” - மகள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. “அதற்குத்தான் அச்சுதன் நாயர் அங்கே வந்திருந்தாரே... பட்டத்தைப் பறக்க விட்டுக் கொண்டு.”

“பட்டம் பறக்க விட்டாரா? நம்ம அச்சுதன் நாயரா? நீ என்ன சொல்றே?”

“விமானம் வர்றதைப் பார்த்துக் கொண்டு கண்களை மேலே வச்சிக்கிட்டு நின்னப்போ அவர் பட்டங்களையும் பார்த்திருக்கார். விமானம் கண்களில் படல. சரி... பட்டங்களையாவது பார்த்துக் கொண்டு இருக்கலாம்னு நினைச்சிருக்கணும். அப்போ ட்ராலியைத் தள்ளிக் கொண்டு நான் வெளியே வர்றேன். விமானம் வந்து இறங்கினதையே அவர் பார்க்கல...”

நம்பியார் சிரிப்பை அடக்க முயன்றார்.

“இல்லை அப்பா. எல்லா இடங்களிலும் சரியான நேரத்திற்கு விமானங்கள் வந்தன. இந்த அளவுக்கு சரியான நேரத்துக்கு வந்திருக்க வேண்டியது இல்லை.”

பிறகு அங்கு கூடியிருந்தவர்கள் மெதுவான சிரிப்புடன் ஒருவகை மரியாதை வார்த்தைகளுடன், மனமே இல்லாமல் பிரிந்து போக ஆரம்பித்தவுடன் அவர்கள் உள்ளே சென்றார்கள்.

சிறிய ஒரு ப்ரீஃப் கேஸை மட்டும் தூக்கிக் கொண்டு அச்சுதன் நாயர் பின்னால் வந்தபோது, நம்பியார் கேட்டார்.

“அப்படின்னா... இவளுடைய மற்ற சுமைகள்...”

அதற்கு பதில் கூறினாள் சுதா.

“அவற்றை எல்லாம் கெஸ்ட் ஹவுஸுக்கு அனுப்பிட்டேன் அப்பா.”

“கெஸ்ட் ஹஸுக்கா?” - நம்பியார் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்து நின்றார். “அது ஏன் மகளே?”

“அங்கேதான் நான் இனிமேல் தங்கப் போறேன் அப்பா?”

நம்பியார் தன் தலையை சொறிந்தார்.

“எனக்கு எதுவும் புரியல...”

“ஃப்ளோரிடாவில் இருந்து புறப்படுவதற்கு முன்பே நான் நிறைய சிந்தித்தேன். எங்கேயாவது கொஞ்ச நாட்களுக்காவது தனியா ஒரு கூடு அமைக்க வேண்டியது இருக்குமேன்னு. அப்போ எந்தவிதத்தில் பார்த்தாலும் கெஸ்ட் ஹவுஸ்தான் சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தேன். அதாவது உங்களுக்கும், எனக்கும், நம்முடைய நிறுவனங்களுக்கும், எல்லோருக்கும்... பெரிய ஏரியும், சற்று முன்னால் ஆறும், ஆற்றில் இறங்க துறையும், ஓடித் திரியவும், தேவைப்பட்டால் தலை குப்புற விழவும் பெரிய புல்வெளியும்...”


“இருந்தாலும் அது தேவையில்லைன்றதுதான் என் எண்ணம்” - தந்தையின் முகம் வாடியது. “மகளே, இங்கே நாங்க எல்லாரும் இவ்வளவு காலமா உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். இப்போவாவது திரும்பி வரணும்ன்ற நல்ல எண்ணம் உனக்கு உண்டானதோ என்ற விஷயத்தை நினைச்சு சந்தோஷப்பட்டுக் கொண்டு இருக்குறப்போ...”

“ஓ... அதைப்பற்றி பரவாயில்லை. நான் இங்கேதானே இருக்கேன். கம்பெனியின் கெஸ்ட் ஹவுஸுக்கும் வீட்டுக்கும் இடையில் என்ன வித்தியாசம் இருக்கு?”

“எவ்வளவோ வித்தியாசம் இருக்குல்ல மகளே. அதை விருந்தினர்கள் இல்லம் என்றுல்ல சொல்றோம். விருந்தினர் என்று சொல்றப்போ...”

“ஒரு அர்த்தத்தில் பார்த்தால், ஒரு விருந்தாளியின் வருகைதான். ஊர் சுற்றும் பறவைகளின் சில பைத்தியக்காரத்தனமான பழக்க வழக்கங்களைப் பற்றி நான் கொஞ்சம் படிச்சிருக்கேன்.”

“அமெரிக்காவில் நீண்ட காலம் வசித்த காரணத்தால், அந்த மாதிரி உன்னால் நடக்க முடியுது. அப்படித்தானே மகளே?”

“இப்படிப்பட்ட சென்டிமென்டான வார்த்தைகளை உங்களிடமிருந்து கேட்பேன்னு நான் நினைக்கவே இல்லை அப்பா.”

“எதுவுமே இல்லைன்னாக்கூட ஆட்கள் என்ன சொல்லுவாங்க?”

“ஆட்களிடம் போய் வேலைகளைப் பார்க்கச் சொல்லுங்க அப்பா. இல்லாவிட்டால்கூட அவர்கள் என்ன சொல்வாங்க? நம்பியார் குடும்பத்தில் அப்பாவுக்கும் பொண்ணுக்குமிடையில் சண்டைன்னு பேசிக்குவாங்க. அவ்வளவுதான்” - சுதாவிற்கு சிரிப்பு வந்தது. “அந்த அளவிற்கு நம்முடைய குடும்ப வியாபாரத்தின் இப்போதைய நிலைமை ஆகிவிட்டது அல்லவா? முகலாயர்களின் காலத்தை விட மிகவும் மோசமாகிவிட்டது இல்லையா? தந்தைக்கும் மகனுக்கும் இடையில், அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில், ஒன்றுவிட்ட தம்பிமார்களுக்கு இடையில்- அடியும் பிடியும், நீதிமன்ற வழக்குகளும், பாகம் பிரிக்கும் விஷயங்களும்.. அங்கே கிடைக்கிற வர்த்தக மாத இதழ்களில் இப்படிப்பட்ட கிசுகிசுக்கள் மட்டுமே இப்போது இருக்கின்றன. அவை எதுவும் இல்லாவிட்டால், நான்கு பேர்களுக்குத் தெரியாமலே போயிருக்கும்.”

அவர்கள் அலுவலக அறைக்கு முன்னால் வந்திருந்தார்கள். கதவை மரியாதை நிமித்தமாகத் திறந்து வைத்துக்கொண்டு, முதுகை வளைத்துக் கொண்டு நம்பியார் சொன்னார்.

“வலது காலை எடுத்து வைத்து உள்ளே வா மகளே. பழைய நம்பிக்கைகள் எதையும் நாமே மீறக்கூடாது. இனிமேல் பெரும்பாலான நேரம் வேலை செய்யப் போறது இந்த அறையில்தானே. வீட்டின் அலுவலக அறை வெள்ளைக்காரர்களின் கேம்ப் அலுவலகத்தைப் போல இருக்கும்.”

அதற்குள் சுதா அறைக்குள் வந்திருந்தாள்.

“அய்யோ.. தவறுதலா நடந்துட்டேன்னு நினைக்கிறேன் அப்பா. முதல்ல வச்சது இடது காலா இருக்கும்னு நினைக்கிறேன். அதற்காக இரண்டாவது ஒருமுறை நுழைவது சரியாக இருக்காது. அப்படித்தானே அப்பா? இனிமேல் முறை தெரியாத சிலர் இடது காலை முன்னால் வைத்து நுழைஞ்சாலும் நுழையலாம். சில நேரங்களில் வேறு மாதிரியும் இருக்கலாம்.”

“பரவாயில்ல.. என் மகளுக்கு எந்த சமயத்திலும் தவறு உண்டாகாது” - தன்னுடைய அறைக்கு முன்னால் மகளை இறுக அணைத்துக் கொண்டு சிறிது நேரம் நம்பியார் நின்றிருந்தார். அவளுடைய கன்னங்களிலும் நெற்றியிலும் அவர் முத்தமிட்டார்.

“உன்னுடைய இந்த ஆடைகள் கண்களைப் பறிக்குதே மகளே” - அவர் அவள் அணிந்திருந்த ஆடைகளைப் பார்த்தார். இளம் நீல நிறத்தில் இருந்த ஜீன்ஸும், சிவப்பு நிற மேலாடையும், அதன்மீது இருந்த நீலநிற ரவிக்கையும்...

“நீ ரொம்பவும் மாறியிருக்கே. நான் போன தடவை அங்கே பார்த்த பிறகு, நிறைய...”

“இவற்றையெல்லாம் அவிழ்த்து மாற்றப் போகிறேன் அப்பா, இல்லாவிட்டால் ஒரே வெப்பம்..”

“என் பழைய ரமணிக்குட்டியை அதேபோல பார்க்க விரும்புறேன். ரமணியின் அதே சாயலில் முண்டும் மேற்துண்டும் அணிந்து, நெற்றியில் சந்தனம் பூசி, கூந்தலில் துளசி இலைகளை வைத்து..”

நம்பியாரின் கண்களில் நீர் அரும்பியது.

“எது எப்படி இருந்தாலும்.. உன்னுடைய அந்தக் கூந்தலை அறுத்திருக்கக் கூடாது. எந்த அளவிற்கு அழகான, அடர்த்தியும் நீளமும் கொண்ட கூந்தலாக இருந்தது! ரமணியின் கூந்தலைப் போலவேதான்..”

நம்பியார் சோஃபாவில் உட்கார்ந்து தன் மகளை அருகில் அமர வைத்து, நெற்றியை வருடினார்.

“தலைமுடியை வளர்ப்பதற்கு ஃப்ளோரிடாவில் சட்டப்படி தடை எதுவும் இல்லையே?” நம்பியார் சிரித்தார்.

“அப்படி எதுவும் இல்லை அப்பா. கூந்தலை கவனமா பார்த்து வளர்ப்பது என்பதே பெரிய பிரச்சினை. தலை வாரணும்.. சுத்தமா வச்சிருந்தாலும் ஒரு தோட்டத்தைப் பார்த்துக்குற மாதிரி கவனம் செலுத்தி பார்க்கணும். யாருக்கு அதற்கெல்லாம் நேரமும் வசதியும் இருக்கு? தேவையில்லாத ஒரு சுமையை சுமந்து திரிந்துகொண்டு என்ன பிரயோஜனம்? அப்பா, தெரியும்ல? தேவையில்லாத விஷயங்களை முன்கூட்டியே அங்கே இருக்குறவங்க வெட்டி எறிஞ்சிட்டுத்தான் வேறு வேலையைப் பார்ப்பாங்க.”

“அதற்காக அதைக் கூலி கொடுத்து பண்ணிக்கணுமா மகளே? இப்படி கூந்தல் இருக்குறதுக்கு கடவுளின் அருள்தான் காரணம் என்ற நினைப்பு இருக்க வேண்டாமா? பெண் பிள்ளைகளின் அழகுன்னு சொல்றதே கண்களும், சிரிப்பும், மூக்கும், கூந்தலும்தான்..”

அதற்குள் சுதா அறையை ஒருமுறை சுற்றி நடக்க ஆரம்பித்திருந்தாள்.

“நைஸ்.. அறை மிகவும் அழகா இருக்கு! திட்டமிட்டு அமைக்கப்பட்ட சட்டங்களும், பழைய ஃபர்னிச்சர்களும், பழைய ஓவியங்களும்.. மொத்தத்தில்.. ஒரு விக்டோரியன் காலத்தைப் பார்த்த உணர்வு..”

“அப்படியென்றால் எதற்கு தேவையற்ற ஆடம்பரம் என்றுதானே சொல்றே மகளே? அதைப் பணம் கொடுத்து வாங்கிவிட முடியாதே. பிறகு.. கம்பெனியில் என்னுடைய அறையும் கிட்டத்தட்ட இதே மாதிரிதான் இருக்கணும். என்னதான் நவநாகரீக விஷயங்கள் வந்து சேர்ந்தாலும், அந்தப் பழைய பொருட்களின் அழகு எந்த சமயத்திலும் கிடைக்கவே கிடைக்காது. சுற்றிலும் ஈட்டி மரத்தால் ஆன சட்டங்களும்.. சுவரில் பழைய பெரிய மனிதர்களின் எண்ணெய் சாய ஓவியங்களும்.. மூலையில் ஒரு அடுப்பும்.. பார்ப்பதற்கு எவ்வளவு அழகா இருக்கும்.”

பெரிய ஒரு ஓவியத்திற்கு முன்னால் போய் நின்றிருந்தாள் சுதா.

“இந்த ஓவியத்தை நீ பார்த்திருக்க மாட்டே” நம்பியார் சொன்னார்.

“தாத்தா.. நம்ம ஊரிலேயே முதல் முதலா வெளிநாட்டுக்குப் போய் படித்த மனிதர். சின்னப் பிள்ளையா இருந்தப்போ பார்த்தது நினைவில் இருக்கு. கோட்டும் சூட்டும்.. பெரிய மீசையும்.. சிவந்த நிறமும்.. சரியாக சொல்றதா இருந்தால்.. துரையேதான்” சுதா மீண்டும் சோஃபாவிற்குத் திரும்பினாள்.

“இங்க பார்ப்பவை எல்லாம் உண்ணியின் ரசனைப்படி அமைந்தவை. அவனுடைய விரல் அடையாளம் நம்ம கம்பெனியிலும் எல்லா இடங்களிலும் இருக்கும்..”

“ம்” - அவள் மெதுவாக முனகினாள். “அப்படின்னா, உண்ணி அத்தான் இனிமேல் போறதா இல்லைன்னே முடிவு பண்ணியாச்சு.. அப்படித்தானே?”


“இனி எதற்கு மகளே அதெல்லாம்? எனக்கு முடியாத நிலை... உங்க இரண்டு பேருக்கும் வனவாச காலம் முடிஞ்சிடுச்சுல்ல? இனிமேல் இரண்டு பேரும் ஒண்ணு சேர்ந்து எல்லாவற்றையும் கவனமா பார்த்து நடத்திக்கோங்க. உண்ணியைப் பொறுத்தவரையில் நல்ல திறமையானவன். எல்லா விஷயங்களிலும் அவனுக்குத் தெளிவான பார்வை இருக்கு. இதோ.. இப்போ அவனுடைய மனம் முழுவதும் ஒரு புதிய திட்டத்தைப் பற்றிய சிந்தனைதான். இல்லாவிட்டாலும், இப்போது இருக்கும் லைனில் வளர்ச்சி முழுமையடையிற நிலைக்கு வந்திடுச்சு. அதிகம் தாமதமாவதற்கு முன்னால் களத்தை மாற்றிக் கொண்டு நடப்பதுதான் புத்திசாலித்தனம். ஜெர்மனியுடன் கூட்டு சேர்ந்து தொழில் பண்றதுக்கு எம்.ஓ.வில்கூட கையெழுத்து போட்டாகிவிட்டது. அதற்குப் பொருத்தமான ஒரு இடத்தையும் வாங்கியாச்சு - கர்நாடகாவில். கொஞ்சம் நினைச்சுப் பார்க்கிறப்போ, நம்முடைய தொழில் ஏற்பாடுகள் மூன்று மாநிலங்களிலும் பரவிக் கிடப்பது நல்லது என்று மனதிற்குப் பட்டது. எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் இட முடியாதே. இப்போதிருக்கும் காலத்தில் எங்கு எப்போது பிரச்சினைகள் வந்து சேரும் என்று யாருக்குத் தெரியும்?”

“சரிதான்” - அவள் விருப்பமே இல்லாதது மாதிரி முனகினாள். “அப்பா, அதைப்பற்றி நீங்க இதுவரை எனக்கு எதுவும் எழுதவில்லையே. ஃபோன் பண்றப்போகூட சொல்லவே இல்லை.”

“அதுதான் நீயே இங்கே வர்றயேன்னு நினைச்சேன்.”

“இருந்தாலும் பெரிய ஒப்பந்தங்கள் ஆகுறப்போ, என்னிடமும் ஒரு வார்த்தை சொல்றதுல என்ன பிரச்சினை?”

நம்பியார் எதுவும் கூறாமல் முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் தன் பேச்சைத் தொடர்ந்தார்.

“அது இருக்கட்டும் மகளே. இந்த ஆடைகளை மாற்றிவிட்டு குளிக்கப் பார். வியாபாரிகளிடம் இருக்கும் மோசமான குணத்தைப் போல யாரைப் பார்த்தாலும் முதலில் பேசுவதற்கு ஒரே ஒரு விஷயம்தான் இருக்கு. வியாபாரம்.. தந்தைக்கும் மகளுக்கும் இடையில் வியாபாரம்ன்ற விஷயம் நுழைவது என்பது மிகவும் சேர்வைத் தரக்கூடிய ஒன்றே.”

சுதா எழுந்தாள்.

“நான் கெஸ்ட் ஹவுஸுக்குப் போறேன் அப்பா.”

“அதெல்லாம் எதற்கு மகளே? என்னால புரிஞ்சிக்க முடியலையே.”

“பத்து இருபது வருடங்களாகத் தனியாகத்தானே இருக்கிறேன்? ஊட்டியில் பள்ளிப் படிப்பு, டெல்லியில் கல்லூரிப் படிப்பு, பிறகு.. சிறிது நாட்களுக்கு இங்கு ஒரு இடைவேளை.. மீண்டும் டெல்லியில். அதற்குப் பிறகு யூஎஸ்ஸில் ஏழு வருடங்கள். எல்லா இடங்களிலும் நான் தனியாகத்தானே இருந்திருக்கிறேன். அப்பா, இப்போ தனியாக இருப்பதுதான் சந்தோஷம் தரக்கூடிய விஷயமாக இருக்கு. பிறகு... கொஞ்சம் ஃப்ரெண்ட்ஸ் இருந்தாங்க.. எல்லா இடங்களிலும். அதுவும் மிகவும் குறைவாக...”

“இருந்தாலும்” - தந்தை இடையில் புகுந்து என்னவோ கூறத் தொடங்கினார்.

“அப்பா, நீங்க எனக்கு தந்த ஒரு வாக்குறுதி ஞாபகத்தில் இருக்கிறதல்லவா? எதை செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டியது நான்தான். அதாவது- வேண்டாம் என்று நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் யாரிடமும் ஒரு வார்த்தைகூட சொல்லிக் கொள்ளாமல் நான் திரும்பிப் போய்க் கொண்டே இருப்பேன். ஒருவேளை, உங்களிடம்கூட கூறாமல் போனாலும் போகலாம். அந்த நிபந்தனையின் பெயரில்தான் நான் வருவதற்கே சம்மதித்தேன்.”

“சரி, இருக்கட்டும் மகளே. நான் எதுவும் சொல்லலையே” நம்பியாரின் கண்கள் அடுத்த நிமிடம் கண்ணீரால் நிறைந்தன.

“இங்கே வர்றேன்னு கேள்விப்பட்டப்போ, மனதுக்கு மிகவும் சந்தோஷமா இருந்தது. இவ்வளவு பெரிய மாளிகையில் நான் மட்டும் தனியாக இருக்க வேண்டியதில்லையே என்று நினைத்தேன். எழுபத்து இரண்டாவது வயதில் தனியாக இருக்க வேண்டியதுதான் சூழ்நிலை என்றால், அது ஒரு மிகப்பெரிய சாபம்தான். பார்க்குறப்போ எல்லோரும் இருக்கிறார்கள் என்பது மாதிரி இருக்கும். ஆனால் யாருமே இங்கு இல்லை.”

“பரவாயில்லை.. நான் இங்கேதானே இருக்கேன். அப்படியொண்ணும் அதிகமான தூரத்தில் இல்லையே.”

“உண்ணியிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு..”

“அது எதற்கு?” சுதாவின் முகம் கறுத்தது. “இதுல அவருடைய பங்கு என்ன இருக்கு?”

“என்ன ஆனாலும்.. என்ன ஆனாலும்.. அவன் உன்னுடைய..” நம்பியார் திடீரென்று நிறுத்தினார். மகளின் முகம் இருண்டு மேகம் படர்வதை அவரால் பார்க்க முடிந்தது.

“இல்லை.. இனி.. அவசியம் என்று நினைத்தால் இரண்டு நாட்கள் வேணும்னா அங்கே.. கெஸ்ட் ஹவுஸிலேயே தங்கிக்கோ. தேவையான ஏற்பாடுகளை செய்துதரச் சொல்லி நான் ராமன் குட்டிக்கிட்டே சொல்றேன். ஒரு மாறுதலுக்காக இருக்கட்டும். அதற்குப் பிறகு மற்ற விஷயங்களைத் தீர்மானிப்போம். சரியா?”

“எதுவும் தீர்மானிப்பதற்கு இல்லை அப்பா.. கெஸ்ட் ஹவுஸே போதும்” மகளின் குரல் உறுதியானதாக இருந்தது.

எதுவும் பேசாமல் வெளியேறும்போது நம்பியார் மனதிற்குள் நினைத்துக் கொண்டார். இது யாருடைய குணம்? தாத்தாவின் குணமா? பெரிய மாமாவின் குணமா? எது எப்படியோ- ரமணியின் குணம் அல்ல. பெண்மையைப் பற்றிய அவருடைய கருத்துக்கள் அனைத்தும் ரமணியிடமிருந்து தொடங்குகின்றன. அங்கேயே முடியவும் செய்கின்றன.

அவர்கள் முன் பக்கத்தை அடைந்திருந்தார்கள்.

“நாம கொஞ்சம் கெஸ்ட் ஹவுஸ் வரை போகலாம். அச்சுதன் நாயர்” நம்பியார் ஓட்டுனரிடம் கூறினார்.

அச்சுதன் நாயர் பின்பக்கக் கதவைத் திறந்து பிடித்துக் கொண்டு நின்றிருந்தபோது, சுதா சொன்னாள்-

“வேண்டாம் அப்பா. நானே போய்க் கொள்கிறேன். உங்களுக்கு அலுவலகத்தில் முக்கிய வேலைகள் இருக்கும் பட்சம், நான் தொந்தரவு தர விரும்பல..”

நம்பியார் திகைத்துப் போய், அவள் காரில் ஏறுவதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.

“கொஞ்ச நேரம் கழித்து நான் கம்பெனிக்கு வர்றேன் அப்பா” கையை வீசிக்கொண்டு சுதா சொன்னாள்.

முன்னால் இருந்த புல்வெளியைச் சுற்றி விட்டு, வளைவில் திரும்பி, கார் கேட்டைக் கடந்து போவதையே பார்த்தவாறு நம்பியார் அதே இடத்தில் நின்றிருந்தார்.

2

“குட் மார்னிங்!”

           “யார், உண்ணி அத்தானா?” சுதா சுழலும் நாற்காலியில் சற்று நகர்ந்து உட்கார்ந்தாள். “கதவைத் தட்டி இருக்கலாம். உட்காரும்படி நான் சொல்லவில்லை.”

உண்ணியின் முகம் சற்று சிறிதானது.

“வைஸ் சேர்மனின் அறை. வைஸ் சேர்மனுக்கு முன்னால் இருக்கும் நாற்காலி. ஸாரி... நான் மறந்து விட்டேன். நாற்காலியில் உட்கார்ந்திருப்பது சேர்மன் இல்லையே. இரண்டுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருக்கிறதே!”

அதை சிறிதும் விரும்பாதது மாதிரி தூரத்தில் எங்கோ பார்த்துக் கொண்டு சுதா சொன்னாள்.

“லண்டனில் படித்தவர்களுக்கு இப்படிப்பட்ட சிறிய மரியாதைகளை சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. பிரிட்டிஷ்காரர்களுக்கு இப்போ எஞ்சி இருக்குறது அது மட்டும்தான். அந்தப் பழைய காலனிய புகழைப் பேசிக் கொண்டிருப்பதும், எலிஸபெத்தின் ஆங்கிலமும், பிறகு கொஞ்சம்... இம்பெக்கபில் மேனர்ஸும், அதற்கேற்ற ஆடைகளும்...”


சுதாவின் முகத்தில் இப்போதும் அதே பாறையைப் போன்ற இறுக்கம் இருந்தது. பேனாவின் முனைப் பகுதியைக் கடித்தவாறு அவள் என்னவோ யோசித்துக் கொண்டிருந்தாள்.

மேஜைமீது இருந்த பேப்பர் வெயிட்டை வெறுமனே சுழற்றியவாறு எதுவும் பேசாமல், அவளுடைய அசைவுகளையே உற்றுப் பார்த்துக் கொண்டு உண்ணியும் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தான்.

சிறிது நேரம் கழித்து, சற்று தயங்கிக் கொண்டே அவன் சொன்னான்.

“அங்கிள் மிகவும் வருத்தத்துல இருக்கார்னு நினைக்கிறேன்.”

“ஏன்?” அவள் தலையை உயர்த்தினாள்.

“சுதா, நீ வர்ற விஷயத்தைக் கேள்விப்பட்டு, கொஞ்ச நாட்களாகவே அவர் முற்றிலும் மாறிப் போயிருந்தார். ஒரு வகையில் சொல்றதா இருந்தால், அவர் துள்ளிக் குதித்து நடந்து கொண்டிருந்தார். ஆனா, இப்போ நீ தனியா கெஸ்ட் ஹவுஸில்...”

“அதுவும் தங்கி இருக்கக்கூடிய ஒரு இடம்தானே?”

“இந்த அதிர்ச்சி வைத்தியம்லாம் யாருக்காக? தெரியாமல் கேட்கிறேன்.”

“ஒரு அதிர்ச்சியும் இல்லை. வைத்தியமும் இல்லை. அப்படி தோணுச்சு. அவ்வளவுதான். இப்படிப்பட்ட சிறிய தீர்மானங்களுக்குப் பின்னால் பெரிய ஒரு திட்டத்தைப் போடக்கூடிய குருட்டு புத்தி எதுவும் எனக்கில்லை.”

“இருந்தாலும், அங்கே அங்கிளை தனியா விட்டுட்டு.”

“சில வருடங்களாகவே அப்பா தனியாகத்தானே இருந்தார். அதே மாதிரி நானும் இப்போ பழகிவிட்டிருக்கேன்.”

உண்ணி விஷயத்தை மாற்றப் பார்த்தான்.

“பயணம் சுகமாக இருந்ததா?”

“ஓ... என்ன சுகம். யாருமே இல்லாமல், ஒரு வட்டத்திற்குள் சிக்கிய எறும்பைப்போல வானத்திலேயே எத்தனையோ மணி நேரங்கள்! கடல்களைக் கடக்கும்போது, கடிகாரத்தின் முள்ளைத் திருப்பி நேரத்தைப் பின்னோக்கியும் முன்னோக்கியும் நகர்த்தி... ஒரு வகையில் பார்க்கப் போனால் மிகப்பெரிய கோமாளித்தனம்தான். பாதி உலகம் தூங்கிக் கொண்டும், எஞ்சிய பாதி கண் விழித்துக்கொண்டும் இருக்க, இரண்டையுமே செய்ய முடியாமல் தெறித்துக் கொண்டிருக்கும் தலையுடன் கண்களை விழித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன்.”

உண்ணியின் கண்கள் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.

“சுதா, நீ ரொம்பவும் மாறிப் போயிட்டே - எல்லா வகைகளிலும்...”

“என்னை முப்பத்தைந்து வயது கொண்ட ஒரு பெண்ணின் வடிவத்தில் பார்க்க வேண்டியதிருக்கும் என்று எந்தச் சமயத்திலும் நீங்க மனதில் நினைச்சிருக்க மாட்டீங்க. அப்படித்தானே.”

“ஓ... அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. இருந்தாலும் வேறு யாரையோ பார்ப்பதைப்போல... அந்த நீளமான தலைமுடி முழுவதையும் வெட்டி குட்டையாக்கி... அத்தையிடம் இருந்ததைப்போல இருந்த அழகான முடி...”

“சுமையாக இருப்பதாக உணரக்கூடியவற்றை நேரம் கிடைக்கிறப்போ நீக்கி விடுவதுதானே நல்லது! மற்றவர்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரும் பெரிய ஒரு சுமையை சுமந்து கொண்டு திரிய வேண்டும். வேறு எந்தவொரு வேலையும் இல்லாமல் அதை இப்படி தடவி கவனம் செலுத்தி, அலங்கரித்துக் கொண்டு நடக்க வேண்டும். அந்தக் காலமெல்லாம் கடந்து போய்விட்டதே! அன்று பெண்களுக்கு வேறு வேலை இல்லாமலிருந்தது.

“அப்படியா? எனக்குத் தெரியாது” - உண்ணி தன் தோள்களைக் குலுக்கினான். “இருந்தாலும் ஒரு விஷயத்தை மட்டும் நான் கவனித்தேன். மனிதன் என்னதான் மாறினாலும், ஏதாவது பழைய கயிறு ஒன்று எங்கேயாவது கிடக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சுதா, உன்னுடைய விஷயத்தில், இப்போ ஒண்ணே ஒண்ணு எஞ்சி நிற்கிறது... அந்தப் பழைய மொழி. அதன் எல்லா வாசனைகளையும் கொண்டு. இவ்வளவு வருடங்கள் கடந்தோடிய பிறகும் அந்த உச்சரிப்பில்கூட எந்தவொரு மாறுபாடும் உண்டாகவில்லை.”

“சில நேரங்களில் அதன் சுமையை உணர்வது உண்டு. இருந்தாலும் என்ன காரணமோ தெரியவில்லை... அந்த சுவை என்னிடமிருந்து போகவில்லை. அது எனக்குள்ளேயே தங்கிவிட்டது. பிறகு... நம்பியாரின் மகளான என்னிடம் அதுவாவது எஞ்சியிருக்கட்டுமே என்று நினைத்தேன். சொல்லப் போனால் அங்கு பிறந்து வளர்ந்த மலையாளிகளின் பிள்ளைகளும் பல நேரங்களில் மலையாளத்தில் பேச வேண்டிய சூழ்நிலை வரும்போது என்னுடைய இந்த மொழியைக் கேட்டு அவர்கள் சிரியோ சிரி என்று சிரிப்பார்கள்.”

சுதா திடீரென்று தன் பேச்சை நிறுத்தினாள். எதையோ நினைத்துக் கொண்டு சிறிது நேரம் அவள் உட்கார்ந்திருந்தாள். அவளுடைய நடவடிக்கை திடீரென்று மாறுவதையும் முகம் இருள்வதையும் உண்ணி கவனித்தான்.

“இங்கு சில புதிய திட்டங்களைப் பற்றி முடிவு செய்யப் போறதா கேள்விப்பட்டேன்.”

“பேப்பர்லதான் இருக்கு” உண்ணி சொன்னாள். “இருந்தாலும் நினைத்ததைவிட விஷயங்கள் வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கின்றன. பிறகு... நம்ம நாடாச்சே! இந்த அளவுக்காவது விஷயங்கள் நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்றால், அதற்குக் காரணம் யாரோ செய்த புண்ணியம்தான்.”

“ம்” சுதா மெதுவான குரலில் முனகினாள். “நமக்கு கொஞ்சமும் அறிமுகமே இல்லாத லைன். நான் திரும்பி வருவதற்கு முடிவு செய்த சூழ்நிலையில்... என்னிடம் ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்க வேண்டும். இடையில் அவ்வப்போது அப்பா தொலைபேசியில் என்னுடன் பேசத்தானே செய்கிறார்?”

உண்ணி அதைக் கேட்டு ஒரு மாதிரி ஆகிவிட்டான்.

“அங்கிள் சொல்லி இருப்பார்னு நினைச்சேன்.”

“இங்கே ஒரு ஆள் கூறுவது மட்டும்தானே அப்பாவுக்கு வேத வாக்கியமா இருக்கு! ஒரு பக்கம் பெரிய ஒரு பொறுப்பை என்னிடம் தரவேண்டும் என்று நினைக்கிறார். அதே நேரத்தில் எனக்குப் பின்னால் இருந்து கொண்டு சில பெரிய முடிவுகளையும் எடுக்கிறார்.”

“அப்படியொண்ணும் இல்லை” - உண்ணி சற்று தயங்கிக் கொண்டே கேட்டான். “சுதா, இதில் உனக்கு ஏதாவது எதிர்ப்பு?”

“வெறும் எதிர்ப்பு இல்லை, விருப்பமே இல்லை. அவ்வளவுதான். அது மட்டுமல்ல என் மனதில் வேறு சில திட்டங்கள் இருக்கின்றன. நிர்வாக விஷயங்களைப் பற்றி நானும் கொஞ்சம் படிச்சிருக்கேன்... எவ்வளவோ பணத்தை செலவழித்து...”

அவளுடைய குரலில் கலந்திருந்த கிண்டல் தன்னை நோக்கித் தான் என்ற விஷயம் உண்ணிக்கு நன்றாகத் தெரியும். ஹார்வர்டின் பின்புலத்தை அவள் எந்த சமயத்திலும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.

எனினும், அவன் விளக்கிக் கூற முயன்றான்.

“சுதா, நீ என்ன சொல்றே? எம்.ஓ.வில் கையெழுத்துப் போட்டாகி விட்டது. எல்லா பேப்பர்களும் நகர்ந்து விட்டன. ஃபைனான்ஸ், மெஷினரி இறக்குமதி ஆகிய விஷயங்களில் ஒப்பந்தம் போட்டு முடித்த நிலையில் இப்போ... இந்த கட்டத்தில் நாம் ஒரு பெரிய பப்ளிக் இஷ்யூ சம்பந்தப்பட்ட விஷயத்தை மெர்ச்சன்ட் பேங்கர்ஸுடன் பேசிக் கொண்டிருக்கும்போது...”

“எந்தப் பேப்பர்களாக இருந்தாலும், தேவைப்பட்டால் அவை கிழித்து எறியப்பட வேண்டியவைகளே உண்ணி அத்தான்” சுதாவின் உதடுகள் துடித்தன. “அப்படிப்பட்ட சில பேப்பர்களை ஒரு காலத்தில் நானும் கிழித்து எறிந்திருக்கேனே. உண்ணி அத்தான், உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும் கையெழுத்தைத்தான்.”


தனக்குள் ஏதோ ஒன்று நெளிந்து கொண்டிருப்பதை உண்ணியால் உணர முடிந்தது. சிறிது நேரம் முகத்தைத் தாழ்த்திக் கொண்டு உட்கார்ந்துவிட்டு, அவன் மெதுவாக எழுந்து சாளரத்திற்கு அருகில் போய் நின்றான். ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து, வெறியுடன் புகையை விழுங்கினான்.

“அந்த சாளரத்தை மூடுங்க” பின்னால் சுதாவின் குரல் கேட்டது. “ஏசியைக் கொஞ்சம் ஆன் செய்தால் நன்றாக இருக்கும். இஃப் யூ டோன் மைன்ட்... பிறகு... என்னுடைய அறையில் யாரும் சிகரெட் பிடிப்பதை நான் விரும்பவில்லை தெரியுதா?”

எதுவும் பேசாமல் அவன் ஜன்னல்களை இழுத்து அடைத்தான். ஏ.சி.யை ஆன் செய்தான். வேறு வழியில்லாமல் சிகரெட்டைக் குத்தி அணைத்து, ஆஸ்ட்ரேயில் போடும்போது அவன் சற்று திரும்பி பார்த்தான். சுதாவின் கண்கள் அப்போதும் மேஜைமீது இருந்த பேப்பர்களில்தான் இருந்தன.

“நிற்க வேண்டாம், அங்கே உட்காரலாமே” முகத்தை உயர்த்தாமலே அவள் சொன்னாள். “பேப்பர்களின் முக்கியத்துவம் என்பதைப் பற்றி சொல்றப்போ, என்னால் அதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இந்தப் பேப்பர்கள் என்று கூறப்படுபவை நாம் எல்லோரும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் எழுதி தயார் பண்ணுபவைதானே? அப்படி இருக்கும்போது- அந்த சூழ்நிலைகள் மாறும்போது, சிலவற்றையாவது கிழத்து எறிய வேண்டும். நெருப்பில் எரியச் செய்ய வேண்டும். வேறு சிலவற்றை சட்டத்திற்கு ஏற்றபடி வாசகங்கள் எழுதி அழித்துவிட வேண்டியதிருக்கும் அல்லவா?”

“என்ன சொல்றே?” - அவனுடைய முகம் வெளிறிப் போனது. தயங்கித் தயங்கித்தான் அவன் பேசினான். அவனுக்குள் வேறு ஏதோவொன்று ஓடிக் கொண்டிருந்தது. “பெரிய அளவில் நம்பிக்கைகள் கொண்ட நம்முடைய மிகப்பெரிய லட்சியத் திட்டம் இது. இந்த அளவிற்கு முன்னோக்கிச் சென்றிருக்கும் நிலையில், ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு மெஷினரிகளும் ஆர்டர் செய்யப்பட்டுவிட்டன. இன்டஸ்ட்ரியில் நம்முடைய குரூப்பின் பெயரும் இமேஜும்... சற்று அதிகமான பணத்தையும் இதுவரை முதலீடு செய்திருக்கிறோம். இந்த நிலைமையில் அதையெல்லாம் அங்கிளால் தாங்கிக் கொள்ளத்தான் முடியுமா?”

“அப்பாவை வெறுமனே விடுங்க” - சுதாவின் குரல் உயர்ந்தது. “அப்பாவைப் பற்றி எனக்கு நல்லாத் தெரியும். இதையும் இதன் இரண்டு மடங்கையும் தனி மனிதனாக சந்திக்கக்கூடிய தைரியம் அப்பாவுக்கு இருக்கு.”

“இருந்தாலும் இதற்குப் பின்னால் இருக்கும் சில மனிதர்கள்...”

“அதாவது- முக்கியமாக நீங்கள்... அப்படித்தானே? அப்பாவை முன்னால் நிறுத்தி, பின்னால் இருந்து கொண்டு அம்பை விடும் தைரியசாலி...”

அவளுடைய பார்வையை சந்திக்க முடியாமல், அவன் எதிர் திசையிலிருந்த சோஃபாவில் போய் உட்கார்ந்தான். கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுத்தித் துடைக்கும்போது, ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துப் புகைக்க வேண்டும் என்ற ஆசை அவனுக்கு உண்டானது. அவள் என்னவெல்லாம் கூறுகிறாள்? அவளுக்குள் என்னதான் ஓடிக் கொண்டிருக்கிறது?

“உண்ணி அத்தான், உங்களுக்கு அதிகமாக வியர்வை வருதே? முன்கூட்டியே ஏ.சி.யை ஆன் செய்திருக்கலாம்ல? அடைந்து கிடக்கும் அறைதானே? கொஞ்சம் நல்ல காற்றும் வெளிச்சமும் உள்ளே வரட்டும்ணு நினைச்சேன். நம்மைப் போன்ற தொழில் செய்பவர்கள் காற்று, வெளிச்சம், பசுமை ஆகியவற்றுக்கு எதிரிகளாக இருக்கணும் என்பதுதானே இப்போது நாட்டு நடப்பாக இருக்கிறது” - அவள் சிரித்தாள்.

சிறிது நேரம் கழித்து மிகவும் தாழ்ந்த குரலில் அவன் கூறுவதை சுதா கேட்டாள்.

“சுதா, நீ இப்போத்தானே வந்திருக்கே! மெதுவாக அமைதியாக இருந்து கொண்டு இந்த புதிய ப்ராஜெக்ட்டுகளை பற்றிப் படித்து...”

“எதையும் படிப்பதாக இல்லை...”- அவளுடைய குரல் உடனடியாக வந்து மோதி நின்றது.

“இனிமேல் இந்த விஷயத்தில் எந்தவொரு முயற்சிகளையும் எனக்குத் தெரியாமல் செய்ய வேண்டாம். இப்பொழுதே சரியான ஒரு லைனை எடுத்தால், மேலும் பேப்பர்களின் சுமைகளில் இருந்து நீங்க தப்பிக்கலாம் உண்ணி அத்தான்.”

“சுதா, அங்கிளிடம் சிறிது டிஸ்கஸ் பண்ணிவிட்டு...” தன்னுடைய குரல் நடுங்குவதை உண்ணி உணர்ந்தான்.

அவளோ அதைக் கேட்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை.

“உண்ணி அத்தான், கிழிக்க வேண்டிய பேப்பர்களை நீங்களே தனியாக உட்கார்ந்து கிழித்தெறிவதுதான் நல்லது. இந்த பொயட்டிக் ஜஸ்டிஸ் என்று கூறும்போது, அது மிகவும் கண்மூடித்தனமான ஒன்றாகிவிடும் இல்லையா? ஒருமுறை சற்று அதிகமான பேப்பர்களை நான் கிழித்துவிட்டேன். இனிமேல் உண்ணி அத்தான் உங்களின் முறை. அது சக்கரத்தின் ஒரு பெரிய சுற்றாக இருக்கலாம். எனினும் என்னுடைய மனதில் வேறு சில ப்ராஜெக்ட்டுகள் இருக்கின்றன.”

“அதாவது...?”

“கெமிக்கல்ஸ், பெட்ரோ கெமிக்கல்ஸ்... இவை எதுவும் நம்முடைய குரூப்பிற்கு சிறிதுகூட தேவையில்லை. அப்படிப்பட்ட லைன்களை விட்டு நாம் விலகியே இருக்க வேண்டும். இயற்கையில் விஷத்தைக் கலப்பதற்குத் தான் வேறு ஏராளமான ஆட்கள் இருக்கிறார்களே, நம்பியார் குடும்பமும் அதில் பங்கு பெற வேண்டாம்.”

“பொல்யூஷன் விஷயத்தில் எல்லா ஏற்பாடுகளையும் நாம் ஏற்கனவே செய்திருக்கிறோம்.”

“வேண்டாம்...” - சுதா கையை உயர்த்தினாள். “அவையெல்லாம் எந்த அளவிற்கு நடக்கும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். சட்டத்தை மீறி நடப்பதற்கான ஓட்டைகளைக் கண்டுபிடிப்பதற்கு நம்முடைய ஆட்கள் மிகவும் திறமைசாலிகள். அதனால் மாசுக் கட்டுப்பாடு பேப்பரிலேயே இருந்துவிடும்.”

“அப்படி சொல்ல முடியாது. அந்த விஷயத்தில் தேவையான வேலைகள் முடிக்கப்பட்டுவிட்டன.”

சுதா அதைக் காதில் வாங்காத மாதிரி கூறினாள்.

“அமெரிக்காவில் வசித்துக் கொண்டிருக்கும் ஒரு ஆந்திரக்காரரை எனக்கு நன்றாகத் தெரியும். பெயர் சத்யநாராயணா. கம்ப்யூட்டரில் ஒரு ஜீனியஸ் என்றே சொல்லலாம். அவருடைய பன்னிரண்டு வயதான மகன் கம்ப்யூட்டர் விஷயத்தில் அவரைவிட திறமைசாலி. ஒரு சாஃப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனத்தைப் பற்றி நான் அவருடன் பேசியிருக்கிறேன். ஒன்று- பெங்களூர். இல்லாவிட்டால் நம்முடைய மாநிலத்தில் எங்காவது படித்த சில மாணவர்களுக்கு வேலை கிடைத்தது மாதிரியும் இருக்கும். குறிப்பாக நம்முடைய இளம்பெண்களுக்கு பிறகு... பொல்யூஷன் பிரச்சினை இல்லாத சில ஹைடெக் ப்ராஜெக்ட்டுகளும் மனதில் இருக்கின்றன. அங்கு இருக்கும் என்.ஆர்.ஐ.களின் உதவி தேவைப்படும் அளவிற்குக் கிடைக்கும். பணம், டெக்னாலஜி எந்த பிரச்சினையும் இல்லை. இந்தத் துறைக்குள் நுழைவதற்கு பலருக்கும் பெரிய விருப்பம் இருக்கிறது. அதை செயல்படுத்துவதற்கு இங்கு ஒரு நல்ல குரூப் இருந்தால் போதும்.”

“திடீரென்று இப்படியொரு மாறுதல் உண்டாகும்போது” - உண்ணி இடையில் புகுந்து சொன்னது சுதாவிற்கு சிறிதும் பிடிக்கவில்லை என்று தோன்றியது. அவள் அவனுடைய முகத்தையே வெறித்துப் பார்த்தாள்.


“இந்த குரூப்பின் பெரிய பாலிஸி விஷயங்கள் போன்றவற்றை ப்ரமோட்டர்கள் முடிவு செய்வதுதானே சரியாக இருக்கும்? அதாவது- சேர்மனும் வைஸ் சேர்மனும் சேர்ந்து... மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஒரு சப்போர்ட்டிங் ரோல் இருக்கலாம். அஃப்கோர்ஸ்... தே ஆர் பெய்ட் ஃபார் இட்.”

உள்ளே யாரோ மிகவும் ஆழத்தில் குத்தியதைப்போல் உண்ணி உணர்ந்தான். அவன் வேகமாக உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தான். உள்ளுக்குள் பலத்த எரிச்சல் உண்டானது. கோபத்தையும் தன்மீது உண்டான வெறுப்பையும் அடக்குவதற்கு அவன் படாத பாடு பட்டான்.

“எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு. ஒன்றிரண்டு அப்பாயின்ட்மென்ட்கள்...”

“என்னுடன் பேசிக் கொண்டிருப்பதைவிட அவை மிகவும் முக்கியமானவை என்றால் போங்க...”

உண்ணி சற்று தயங்கியவாறு நின்றான். சுதாவின் பார்வை தன்மீது ஆழ்ந்து பதிந்து கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான். அந்தப் பார்வையின் முனை எங்கேயோ போய் குத்திக் கொண்டிருந்தது. அதன் வெப்பம் மேலே பரவிக் கொண்டிருந்தது.

அவன் அங்கிருந்து சீக்கிரம் போக வேண்டும் என்று நினைத்தான்.

“அவர்கள் காத்திருப்பார்கள்.”

“ம்... அப்படின்னா போங்க” - அவள் அலட்சியமாக சொன்னாள். “யாரையும் காத்திருக்க வைக்கக்கூடாது தேவையில்லாமல் ஒரு முறை கையை விட்டுப் போன நேரம் திரும்பவும் வரவே வராது.”

எதுவும் கூறாமல் தலையைக் குனிந்து கொண்டே வெளியேறும்போது, அவனுடைய மனதிற்குள் ஒரே ஒரு எண்ணம் மட்டுமே இருந்தது.

ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து இழுக்க வேண்டும்.

அதற்குப் பிறகு அங்கிளைப் போய் பார்த்தால் போதும்.

அவன் தன் பாக்கெட்டிற்குள்ளிருந்து சிகரெட் பாக்கெட்டை வெளியே எடுத்தான்.

3

“சரி... என் மகளே. இறுதியில் வீட்டில் டின்னர் சாப்பிடவாவது ஒத்துக் கொண்டாய் அல்லவா? அதற்காக இப்போது நான் எந்தக் கடவுளுக்கு நன்றி சொல்வது?”

மகள் சிரித்தாள்.

“இன்னைக்கு மட்டும்தான், புரியுதா?”

“போதும்... இப்போதைக்கு இன்னைக்கு நடக்குறது நடக்கட்டும். நாளைய விஷயம் நாளைக்கு... சரிதானே? தன் சொந்த தந்தையை இப்படி நல்ல செயல்வடிவில் இருக்கும் ஜாமீன் தந்து, ப்ரஃபஷனில் நிற்க வைக்கலாம் என்றால், அது ஒரு நல்ல விஷயம்தானா? வெளிநாடுகளில் இருந்து நாம் எப்படிப்பட்ட பெரிய பெரிய விஷயங்களையெல்லாம் தெரிந்து கொள்ள முடிகிறது? சிவ சிவா... சரி... அது இருக்கட்டும். அங்கே ராமன் குட்டியின் சமையல் என் மகளுக்குப் பிடிக்கிறதோ என்னவோ? ராமன் குட்டி மனது வைத்தால், சமையல் பிரமாதமாக இருக்கும். இருந்தாலும், மனதை அங்கு வைப்பதா இங்கு வைப்பதா என்ற தடுமாற்றம் ராமன் குட்டிக்கு... அவனுடைய போக்கு எப்போதும் ஒரே பக்கம்தான்...”

“மதியம் சாப்பிட்டேன். சுவையாக இருந்தது. முருங்கையிலைப் பொரியலும், மாம்பழக் குழம்பும், மாம்பழ ஊறுகாயும்... அவற்றை சாப்பிட்டு எவ்வளவு காலம் ஆகிவிட்டது.”

“ராமன் குட்டியின் அவியல் புகழ் பெற்றதாச்சே!”

“சொன்னார்.”

“ராமன் குட்டி மீனும் வைப்பான். தெரியுமா? அருமையாக... கிராமத்து பாணியில்...”

“கொஞ்ச நாட்களாகவே நான் அதை சாப்பிடுறது இல்லை அப்பா.”

“அப்படியா?”-நம்பியாருக்கு அது ஆச்சரியத்தைத் தரும் ஒரு விஷயமாக இருந்தது. “பிறகு எப்படி அங்கு இருக்குறே? இரண்டு வருடங்களுக்கு முன்னால் நான் அங்கே வந்தப்போ...”

“அதற்குப் பிறகு நிறுத்திட்டேன். அதன்மீது இருந்த ஆர்வம் போய்விட்டது. வெஜிட்டேரியனாக மாறினால் பெரிய பிரச்சினை இல்லை. உணவு சுத்தமாக இருந்தால் மனமும் சுத்தமாக இருக்கும் என்று எங்கேயோ படித்திருக்கிறேன். அதனால் மட்டுமல்ல... அந்த அளவிற்குக் குறைவான அழுக்கு உள்ளே போனால் போதும் என்று நினைத்தேன். இயற்கையில் இருந்து இயல்பாகக் கிடைக்காததே, ஒரு வகை அழுக்குதானே.”

“நீ கூறுவது அனைத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்று கூறுவதற்கில்லை. நான் ஒரு கிராமத்து மனிதன் ஆயிற்றே. வயதும் அதிகம் ஆயிடுச்சு! இப்போது உங்களுடைய தலைமுறை கூற வேண்டியது. அதை நாங்கள் வாயைத் திறந்து வைத்துக் கொண்டு கேட்க வேண்டியதுதான். அதுதான் சரியானது. இந்த அறிவாளிக் கிழவன் என்று சொல்வதெல்லாம் பொய். வயதானவர்களை சகித்துக் கொள்வது என்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம்.”

சுதாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“அப்பா, இந்த வித்தையெல்லாம் என்னிடம் வேண்டாம். வெளியே போய் படிக்கவில்லை என்பதென்னவோ உண்மைதான். எத்தனை முறை உலகத்தைச் சுற்றி இருக்கிறீர்கள்? எவ்வளவு நாடுகள். எத்தனை வகைப்பட்ட மக்கள்! அப்பா, எங்களைப் போன்ற மூன்று தலைமுறைகளை விற்ற பணம் உங்களின் கையில் இருக்கிறதே.”

“அதற்காக கருணாகரன் நம்பியார், கருணாகரன் நம்பியார் இல்லை என்று ஆகிவிடாதே! எனக்கு, எனக்குள் இருக்கும் அந்தப் பழமையான மனிதரைத்தான் பிடிக்கும். அந்தப் பழைய ஃப்யூடல் பெருச்சாளியை...”

“எனக்கும் இந்த அப்பாவைத்தான் பிடிக்கும்” - மகள் அடுத்த நிமிடத் தன் தந்தைக்கு அருகில் வந்து உட்கார்ந்து, அவருடைய தோளில் கையைப் போட்டுக் கன்னத்தில் முத்தமிட்டாள். “அறிந்தே செய்யும் இந்த சிறுபிள்ளைத்தனமான விளையாட்டிலும் ஒரு சுவாரசியம் இருக்கத்தான் செய்யுது. இதைப்போன்ற ஒரு அப்பா கிடைப்பதற்கு நான் முன் பிறவிகளில் எவ்வளவோ புண்ணியங்கள் செய்திருக்க வேண்டும்.”

“உன்னைப் போன்ற ஒரு மகளை...”

“ரியலி..?”

உண்மையான ஆச்சரியத்துடன், நம்பிக்கையே வராததைப் போல, அவள் அவருடைய கண்களையே பார்த்தாள். “அப்பா, உண்மையாகவே அப்படி சொல்றீங்களா? உங்களிடமிருந்து கிடைப்பதில் நூற்றில் ஒரு பங்கையாவது திருப்பித்தர என்னால் இதுவரை முடிந்திருக்கிறதா?”

“குடும்ப உறவுகளில் அளவு, எடை எதையும் பார்க்கக்கூடாது மகளே. அவை அனைத்தும் வெள்ளைக்காரர்கள் செய்தவை. குடும்பத்தின் இனிமையை எந்த சமயத்திலும் வெள்ளைக்காரர்களால் அனுபவிக்க முடியாது. முடிந்தவரையில் மனதைத் திறந்து கொடுக்கிறேன். கேட்டு வாங்க முயற்சிக்காமல் கிடைப்பதை நிறைவுடன் பெற்றுக்கொள்ள வேண்டும். விஷயம் அதுதான். ஏராளமான ஆட்கள் இருக்கக்கூடிய குடும்பத்தில் வளரும்போது, சிறுபிள்ளைப் பிராயத்தில் பெரிய மாமா எங்களுடைய பார்வையில் மிகப்பெரிய சக்கரவர்த்தியாக இருந்தார். நிறைய கஸின்களுடன், ஒருவரோடொருவர் சண்டை போட்டுக்கொண்டு, அன்பு செலுத்தி... இப்படி ஒன்றாக சேர்ந்து ஆடு, கோழி, வாத்து ஆகியவை வளர்வதைப் போன்ற ஒரு வளர்ப்பு... எந்தவித சூழ்நிலையுடனும் அனுசரித்துப் போகக்கூடிய பொறுமையும் சகிப்புத் தன்மையும் கிடைத்தது அந்தக் கூட்டுக் குடும்ப அமைப்பில் இருக்கும்போதுதான்... நம்முடைய ஜாயின்ட் ஃபேமிலி அமைப்பு தகர்ந்துபோனது வெள்ளைக்காரர்களின் பாதிப்பாலும் நகரமயமாக்கலினாலும்தான். இப்போதைய சிறுசிறு குடும்பப் பகுதிகளில் எல்லோரும் மிகவும் சுயநலம் கொண்டவர்களாக ஆகிவிடுகிறார்கள். மற்றவர்களுக்காக அவனவனும் தன்னுடைய சிறு சிறு சுகத்தையும்கூட விட்டுத்தரத் தயாராக இல்லை என்பதுதான் உண்மை.”


“அப்பா, நீங்க சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. என்னுடைய சுகத்திற்காகத்தான் நான் இங்கு தங்கியிருக்காமல், தனியாகத் தங்கி இருக்கிறேன் என்று நீங்க நினைக்கிறீர்களா?”

நம்பியார் எதுவும் பேசவில்லையென்றாலும், அந்த முகத்தில் எழுதப்பட்டிருப்பதை வாசித்துப் புரிந்து கொள்வதற்கு சுதா அப்படியொன்றும் கஷ்டப்படவில்லை.

“மற்றவர்களிடம் அனுசரித்துப் போக வேண்டியது இருக்குமே என்பதற்காக இல்லை. இருந்தாலும் என்ன காரணத்தாலோ தனியாக இருக்க வேண்டும் என்றொரு ஆசை.”

“இங்கேயும் தனியாகத்தானே இருக்கப் போறே! நாங்கள் யாரும் தேவையில்லாமல் வந்து தொந்தரவு கொடுக்கப் போவது இல்லையே. அந்த மேலே இருக்கும் மாடி முழுவதையும் எடுத்துக்கோ. தேவைப்பட்டால் அதையே உன் சாம்ராஜ்யமா வச்சுக்கோ. ஒரு காவலாளியைக்கூட நிற்க வைக்கிறேன் - யாரும் மேலே வராம பார்த்துக்குறதுக்கு அது போதாதா?”

“அந்தக் காரணத்தால் அல்ல. ஒரு வகையில் பார்க்கப் போனால் தேவையில்லாத சில பழக்க வழக்கங்கள்... அப்படித்தானே? சரி, அங்கேயே இருந்து பார்க்குறேன். பிறகு யோசிப்போம்.”

“எல்லாம் உன் விருப்பம். பிறகு நான் என்ன சொல்றது?”

மகள் தன் தந்தையின் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அப்பா, நான் உங்களை மிகவும் கவலைப்படச் செய்துவிட்டேனா?”

“ஓ... அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. உண்மையாகச் சொல்லப் போனால் அப்படியொன்றும் ரமணி போன பிறகு தோன்றவே இல்லை. எல்லாம் ஒரு மாதிரி போய்க் கொண்டு இருக்கு. பிசினஸ் விஷயங்களை உண்ணி பார்த்துக் கொள்வான். நான் ஒரு மேற்பார்வை மட்டும் பார்த்துக் கொண்டால் போதும். அவன் திறமைசாலி. மரியாதை தெரிந்தவன். பிறகு... இங்கே இருக்கும் விஷயங்கள் இருக்கின்றனவே. அவற்றைப் பார்த்துக் கொள்ள அச்சுதன் நாயரும் தேவகியம்மாவும் போதுமே.”

சுதா எழுந்தாள்.

“அப்பா, நான் உங்களுக்குக் கொஞ்சம் மது ஊற்றித் தரட்டுமா? பழைய பழக்கத்தை நிறுத்திவிடவில்லை அல்லவா? உங்களுக்காக என்றே நான் ஒரு பொருளை எடுத்து வச்சிருக்கேன்.”

“பழக்கம் எதையும் நிறுத்தி விடவில்லை மகளே. சாப்பாட்டுக்கு முன்னால் இரண்டு ஸ்காட்ச். அது ஒரு பழக்கமாகிவிட்டது. இனிமேல் அதுவும் இல்லாமல் போனால் இந்த வாழ்க்கைதான் எதற்கு? இரவில் தூக்கம் வர வேண்டாமா? எனக்கு ஒரு ஆசை இருக்கு. இறக்கும் வரையில் அவ்வப்போவாவது கொஞ்சம் பால் பாயாசம் குடிக்கணும். பிறகு இரவில் இரண்டு... இறுதியில் சாகக் கிடக்கிறப்போ, கங்கை நீருக்குப் பிறகு, குறைந்தது ஒன்றாவது... ஒன் ஃபார் ரோட்! அதற்குப் பிறகு மேலே செல்லும் பயணம் சந்தோஷமானதாக இருக்கும்.”

கலை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கண்ணாடிக் குவளையில் அவள் ஒளிர்ந்து கொண்டிருக்கும் மதுவை ஊற்றும்போது, ஐஸ் கட்டிகளை இடும்போது, அதையே பார்த்தவாறு நம்பியார் கூறினார்.

“சில நேரங்களில் எல்லாவற்றையும் உங்க இரண்டு பேரிடமும் ஒப்படைத்து விட்டு, ரிஷிகேசத்திற்கோ வேறு எங்கோ போய் சில நாட்கள் இருந்தால் என்ன என்று தோணும். எதற்கு, யாருக்காக இந்த கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும்? செய்யும் வேலையில் முன்பு மாதிரி ‘த்ரில்’ எதுவும் கிடைக்கவில்லை என்னும்போது, வயதான ஒரு உணர்வு...”

தெளிவான பார்வையுடன் சுதா நினைத்துப் பார்த்தாள். அவளுடைய தந்தை மிகவும் மாறி விட்டிருக்கிறார். எல்லோருக்கும் தெரியக்கூடிய மிகப்பெரிய குரூப்பின் தலைவர்... தொட்டவற்றையெல்லாம் பொன்னாக்கக்கூடிய விரல்கள்... கொள்கைகள் விஷயத்தில் உறுதியான நிலைப்பாடு இருக்கும் காரணத்தால் சிறிதும் குறைவே இல்லாமல் பெரிய ஒரு இமேஜை பத்திரமாகக் காப்பாற்றி வைத்திருக்க நிரந்தரமாக அவரால் முடிந்திருக்கிறது.  அதனால அவருக்கு எங்கும் ஒரு சிம்மாசனம் கிடைத்தது... கேட்காமலேயே சரியாக சொல்லப் போனால், இந்தத் தொழில் உலகத்தின் பிதாமகனாக இருப்பவர் அவர். இந்தத் துறையில் புதிதாகக் கால் வைப்பவர்கள் முதலில் அறிவுரைகள் கேட்டு வருவது அவரிடம்தான். எனினும் இப்போது எப்படியோ, எங்கேயோ அவருடைய தந்தையின் லட்சியத்தின் முனை ஒடிந்து விட்டதைப்போல தோன்றுகிறது. மனிதனின் லட்சியத்திற்கு எல்லையே இல்லை என்று ஒருமுறை கூறிய அதே தந்தைதான்...

கண்ணாடிக் குவளையை டீப்பாயில் வைத்தபோது, தன்னையே அறியாமல் அவள் கேட்டுவிட்டாள்.

“அப்பா, இந்த வெறுப்பு நிறைந்த பேச்சை என்னால் கொஞ்சம் கூட புரிந்து கொள்ள முடியவில்லை. அடைய வேண்டியவை அனைத்தையும் அடைந்து விட்டோம் என்று தோன்றுகிறதா?”

“அதென்ன மகளே அப்படிச் சொல்றே... தொழில்கள் உண்டாக்குவதும், அவற்றை நடத்திக் கொண்டு செல்வதும் கிரியேட்டிவிட்டியின் பகுதி ஆயிற்றே! நான் எப்போதும் கிரியேட்டிவ்வாக இருந்தவன் ஆயிற்றே! அதன் முனையை ஒருவனால் அடைக்க முடியுமா? அது ஒரு பெரிய காதல் உறவு ஆயிற்றே! இடையில் அவ்வப்போது தளர்ச்சி உண்டாகலாம். எனினும் அதற்குப் பிறகும் திரும்பி வராமல் இருக்க முடியாதே! ஒருவேளை, அதற்குக் கிடைக்கும் சந்தோஷம் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம். இது வாழ்க்கை ஆயிற்றே!”

“என்ன காரணமோ தெரியவில்லை... அப்பா, உங்களுடைய பேச்சில் பழைய உற்சாகத்தைப் பார்க்க முடியவில்லை. எல்லா விஷயங்களிலும் தேவையற்ற ஒருவகை திருப்தி தெரிகிறது. ஒருமுறை திருப்தி தோன்றி விட்டால், எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தம் ஆகிவிடும். போதாது, போதாது என்று தோன்றும்போது தானே புதியது ஏதாவது உண்டாகும்?”

“சரியாக இருக்கலாம். சில நேரங்களில், சில விஷயங்களில் வேண்டிய அளவிற்கு சென்ஸ் ஆஃப் டைரக்ஷன் கிடைக்காமல் போய்விடுகிறது. பிசினஸ் என்று வரும்போது கணக்கு கூட்டல்கள் தவறாக ஆகலாம். சரியாகவும் ஆகலாம். அது தொழிலின் பகுதிதானே! ஆனால், நான் அதை சொல்லவில்லை. நம்முடைய மனதிற்குள் ஒரு பார்வை இருக்குமே! காலத்தைத் தாண்டி போகக்கூடிய ஒரு பார்வை சக்தி. அதைக் கொண்டுதானே எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும். அது சில நேரங்களில் தெளிவாகத் தெரியாமல் போய்விடும். பிறகு... உள்ளே கிடைக்கும் இன்ட்யூஷன்! சிறிதுகூட நினைத்திருக்காத நேரத்தில் உள்ளே இழுத்துக் கொண்டு யாரோ அழைத்துக் கூறுவார்கள். இப்போது, முன்பைப்போல அந்த உள் அழைப்பு கேட்பதில்லை. இந்த அளவிற்கு வந்தாகிவிட்டது அல்லவா? இனி போதும் என்பது மேலே உள்ள தீர்மானமாக இருக்கலாம். பிறகு... இன்னொரு விஷயம் இருக்கு.”

நம்பியார் தன் பேச்சை சிறிது நிறுத்தினார். கண்ணாடிக் குவளையை காலி செய்துவிட்டுத் தொடர்ந்தார்.


“இன்றைய காலகட்டத்தில் கொஞ்சம் அக்ரஷன் எல்லா விஷயங்களிலும் கட்டாயம் தேவைப்படுகிறதே. உன்னைப் போன்றவர்கள் இளம் வயதில் இருக்குறப்போ, அதை மிகவும் எளிதாகத் தர உங்களால் முடியும். கடந்த காலத்தின் சுமை இல்லாமல் ஒவ்வொன்றைப் பற்றியும் சிந்திக்க வேண்டியது வந்தால், வேகமாக பாய்ந்து செல்ல வேண்டியதிருக்கும் அல்லவா? வரலாற்றில் வெற்றி பெற்ற பல தீர்மானங்களுக்குப் பின்னால் இத்தகைய இன்ட்யூஷனை ஒட்டிய தாவல் கட்டாயம் இருக்கும்.”

“ஆனால், இளமையின் தாவல் எல்லா விஷயங்களிலும் சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாதே?”

சுதா இரண்டாவது முறையாக மதுவை ஊற்றினாள். நம்பியார் தலையை உயர்த்திப் பார்த்தார்.

“மகளே, நீ எந்த அர்த்தத்தில் அதைச் சொன்னே?”

“எல்லா அர்த்தங்களிலும்.”

“நம்முடைய புதிய ப்ராஜெக்ட்டை பற்றிக் குறிப்பாக உணர்த்துறியா?”

ஐஸ் கட்டிகளில் பொன் நிறத்தைக் கொண்ட திரவம் படர்வதைப் பார்த்துக் கொண்டே அவள் தலையை ஆட்டினாள்.

“உண்ணிக்கு மிகவும் விருப்பமான ப்ராஜெக்ட் அது. அடுத்த வாரம் அவன் ஃப்ராங்க் ஃபர்ட்டுக்குப் புறப்படத் தயாராக இருக்கிறான்.”

“வேண்டாம் என்று சொல்லுங்க...” - அவள் முகத்தில் அடித்ததைப்போல அதைச் சொன்னாள்.

“என்ன மகளே, இப்படிச் சொல்றே?” நம்பியார் ஒரு அதிர்ச்சியுடன் அவளுடைய முகத்தையே வெறித்துப் பார்த்தார். “இவ்வளவு வேலைகளையும் செய்து முடித்தப் பிறகு...”

“லாபம் குறைவாக இருக்கும். பரவாயில்லை. இந்த சன்ரைஸ் இன்ட்ஸ்ட்ரி வேறொன்றுக்கு மாறிப் பார்ப்பதில் தவறே இல்லை. எது எப்படி இருந்தாலும், இன்னும் கொஞ்சம் சிந்திக்க வேண்டியது இருக்கும்.”

“உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா? மகளே, நீ என்ன சொல்றே? இந்தக் கட்டத்தில் வேண்டாம் என்று விட்டு விடுறதுன்னா, அது என்ன சாதாரண விஷயமா? இண்டஸ்ட்ரியில் நம்முடைய பெயர், என்னுடைய தனிப்பட்ட இமேஜ், நம்முடைய பலதரப்பட்ட கமிட்மென்ட்ஸ், அதன் நஷ்ட பரிகாரங்கள்... வழக்குகள், கூட்டம் அவை வேறு...”

“அவற்றைப் பற்றி மட்டுமே நம்மால் சிந்திக்க முடியும். எல்லாவற்றுக்கும் ஒரு வழி இல்லாமலா இருக்கும்?”

நம்பியார் ஒட்டுமொத்தமாக இடிந்து போய் உட்கார்ந்திருந்தார். கண்ணாடிக் குவளையில் கசப்பான திரவத்தை ஒரே இழுப்பில் தொண்டைக்குள் இறக்கிய அவர் கெஞ்சுகிற குரலில் சொன்னார்.

“இன்னொரு பெக் மகளே... சின்னதா போதும்.”

“வேணுமா அப்பா? வழக்கமானதுதானே?”

“வேணும். என்னவோ போல இருக்கு.”

“நான் வேதனைப்பட வச்சிட்டேனா அப்பா?”

“இல்லை மகளே... இல்லாவிட்டாலும் சின்ன பிள்ளைகள் நெஞ்சில் மிதிக்கிறப்போ, தாய்க்கும் தந்தைக்கும் வேதனை தோன்றுவது இல்லையே!”

“அப்பா, என்னை மன்னிச்சிடுங்க. நான் அப்படியெல்லாம் மனசுல நினைக்கவில்லை தெரியுதா?”

“பரவாயில்லை. ஒரு சின்ன பெக் ப்ளீஸ்...”

அதையும் அவளுடைய தந்தை ஒரே இழுப்பில் உள்ளே கொண்டு போவதை ஆச்சரியத்துடன் அவள் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

உணவு சாப்பிட உட்காரும்போது, நம்பியார் சிறிது நேரத்திற்கு எதுவும் பேசவில்லை.

அவள் மெதுவாகப் பரிமாற ஆரம்பித்தாள். தன் தந்தையின் முகத்தைப் பார்க்காமலே.

“உண்ணியைப் பார்த்தியா மகளே?” நம்பியார் திடீரென்று கேட்டார்.

“ம்.”

“அவனால் விமான நிலையத்திற்கு வர முடியவில்லை. பெங்களூரில் இருந்து வந்த விமானம் தாமதமானதுதான் காரணம்.”

“அப்படியா?”

“ஒண்ணு கேட்கட்டுமா! நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக் கொண்டீர்களா? என்னவோ மாதிரியான பேச்சும் முக்கலும் முனகலும்...”

“சண்டை போடுவதற்கான வயது எப்பவோ தாண்டிப் போயிடுச்சே!”

“கடந்து போனவற்றைப் பற்றி இப்போது நினைத்துப் பார்த்து ஒரு பிரயோஜனமும் இல்லை. அவை ஒவ்வொன்றும் முடிய வேண்டிய விதத்தில் முடிந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டால் போதும்.”

“இல்ல... இங்கு எல்லோரும் கமிட்மென்ட்டைப் பற்றி - வாக்குறுதியைக் காப்பாற்றுவதைப் பற்றி பேசுவதைக் கேட்டேன்.” - அவள் தான் சொல்லிக் கொண்டிருந்ததை திடீரென்று நிறுத்தினாள்.

பிய்த்த சப்பாத்தித் துண்டை அதே நிலையில் கையில் பிடித்துக் கொண்டு, தந்தை தன் மகளின் கண்களையே உற்றுப் பார்த்தார். அந்தப் பார்வையின் கூர்மையிலிருந்து அவளால் விலக முடியவில்லை.

சிறிது நேரம் கழித்துத் தாழ்வான குரலில் அவள் கேட்டாள்.

“தெரேஸா இப்போ” - கேட்டு முடித்த பிறகு, அதைக் கேட்டிருக்க வேண்டாம் என்ற அவளுக்குத் தோன்றியது. எப்படியோ நாக்கில் இருந்து அந்தக் கேள்வி வந்துவிட்டது.

“மான்செஸ்ட்டருக்குத் திரும்பிப் போயிட்டாள். நான் அப்பவே எழுதியிருந்தேனே.”

“ஓ..” அவள் ஆர்வமே இல்லாத மாதிரி முனகினாள். தந்தையின் நீளமான கடிதங்களில் ஏதோ ஒரு வாசகம்... ஒருவேளை, அப்போது அது முழுமையாக மனதில் பதியாமல் போயிருக்கலாம். இல்லாவிட்டால் அதை எப்படி அவள் மறந்திருப்பாள்? முதல் சில நாட்களுக்கு தெரேஸா ஒரு பெரிய புள்ளியாக மனதிற்குள் புகைந்து கொண்டு நின்றிருந்தாளே. பிறகு சுதாவின் மனதில் அவள் தானாகவே எப்படியோ இல்லாமற் போய்விட்டாள்.

“எல்லாம் ஒரு பரிதாபப்பட வேண்டிய விஷயம் என்று மட்டும் நினைத்தால் போதும்” - அவளுடைய தந்தை விளக்க முயற்சித்தார்.

“பரிதாபப்பட வேண்டிய வயசு ஒண்ணும் இல்லையே அப்போ?”

“கடல்களுக்கு அப்பால் எவ்வளவோ தூரத்தில் தனியாக இருக்கும் வாழ்க்கை... தினமும் காணும் கொஞ்சம் மனிதர்கள்... அப்படிப்பட்ட சூழ்நிலையில், சில நேரங்களில் தேவையற்ற நெருக்கம் உண்டாவது சாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்றுதான். சாமர்த்தியசாலிகள் தங்களுடைய காரியம் முடிந்தவுடன், அதிலிருந்து ஓடிவிட முடியும். பாவங்களிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள். மனதில் பெரிய தயார் நிலைகள் எதுவும் இல்லாமல் இருக்கும் சில முடிவுகள்... எது எப்படியோ... எல்லாம் முடிந்துவிட்டனவே.”

சுதாவிற்கு சிரிக்க வேண்டும்போல் இருந்தது.

“அப்பா, நீங்க சொன்னதைப் போன்ற அந்த வாழ்க்கையை நானும் கொஞ்சம் பார்த்திருக்கிறேனே. கடல்களுக்கு அப்பால் தூரத்தில் தனியாக இருக்கும் வாழ்க்கை... தினமும் காணும் கொஞ்சம் மனிதர்கள்... ஆர்வத்தைத் தூண்டும் கொஞ்சம் மனிதர்கள்... ஒருவேளை உண்ணி அத்தான் பார்த்ததைவிட மிகவும் அதிகமான காலம்... அதில் அதிகமாக ப்ரோவோக்கிங் ஆன சூழ்நிலைகள்.”

நம்பியார் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் தடுமாறினார்.

“என்னால் எதுவும் பேச முடியவில்லை மகளே. உனக்கு என்னை விட அதிகமான அறிவு இருக்கு. உலக அனுபவமும் நான் உனக்கு சொல்லித் தருவதற்கு என்ன இருக்கிறது? ஆனால் ஒன்றை மட்டும் நீ மறந்துவிடக் கூடாது. சொல்லப் போனால், ஒரு காலத்திலேயே இந்த ஏடாகூடமான விஷயங்களையெல்லாம் நீ எப்பவோ இல்லாமல் செய்திருக்கலாம். அவனுக்கு அப்போ ஏகப்பட்ட ஆசை நடக்க வேண்டிய விஷயங்கள் அந்தந்த நேரத்தில் நடந்திருந்தால்... அப்போ நீதான் ஒவ்வொன்றையும் சொல்லி தட்டி உருட்டிக் கொண்டு போயிட்டே.”


“அப்போ எனக்குள் சில தெளிவான திட்டங்கள் இருந்தன. சொல்லப் போனால், நான் எந்த சமயத்திலும் காதல் வயப்பட்ட ஒரு பெண்ணாக இருந்தது இல்லை. இனிமேலும் காலம் இருக்கே. எதற்கு அவசரம் என்று நான் நினைத்தேன். பிறகு... படிப்பினால் உண்டான பிரஷர்... இறுதியில் கைவிட்டுப் போன பிறகு தாங்கிக் கொள்ள முடியவில்லை...”

தனக்குத் தெரியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்ட அவள் கண்களைத் துடைத்துக் கொள்வதை தந்தை பார்த்தார்.

சிறிது நேரத்திற்கு இரண்டு பேராலும் எதுவும பேச முடியவில்லை. சற்று கடந்த பிறகு தாழ்ந்த குரலில் அவள் கூறுவதை தந்தை கேட்டார்.

“என்ன இருந்தாலும் இவை அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட விஷயங்கள். அவற்றை கம்பெனி விஷயங்களுடன் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். சரியா? நான் சொல்ல வேண்டியதை நேரடியாகவே உண்ணி அத்தானிடம் கூறியிருக்கிறேன். இனி இருக்கும் விஷயங்களை மற்றவர்கள் தீர்மானித்தால் போதும்.”

நம்பியார் கைகளைக் கழுவுவதற்காக எழுந்தார். தந்தையின் முகம் மிகவும் வாடிப்போய் இருப்பதை மகள் பார்த்தாள். உடலும் மிகவும் ஒடிந்து போய் காணப்பட்டது. தோள்கள் மிகவும் இறங்கிப் போய் தெரிந்தன.

“அப்பா, சமீபகாலமா உடற்பயிற்சி சிறிதுகூட இல்லைன்னு தெரியுதே.”

“இந்த வயதில் என்ன உடற்பயிற்சி வேண்டியிருக்கு மகளே?”

“அதிகாலை நேரத்தில் இருக்கும் அந்த நீண்ட நடையும், யோகா பயிற்சியும்...”

“கொஞ்ச அளவில் நம்முடைய காம்பவுண்டிற்குள்ளேயே நடக்கிறேன். பிறகு... யோகா என்று சொல்றப்போ, சட்டதிட்டங்களுக்குள் இருக்குறது மாதிரி எதுவும் இல்லை. குளித்து முடித்து, கொஞ்ச நேரம் பூஜை அறைக்குள் நுழைந்து சப்பணம் போட்டு கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருப்பேன். அவ்வளவுதான். வேணும்னா அதை தியானம் என்று கூறிக் கொள்ளலாம். எல்லாவற்றையும் மறந்துவிட்டு அமைதியாக உட்கார்ந்திருத்தல்... இல்லாவிட்டாலும் இனி அதிக காலம் உயிருடன் இருப்பேன் என்று படவில்லை. ஜாதகத்தின்படி மூன்றோ நான்கோ வருடங்கள்... அதுதான் போனஸாக இருக்கும். சட்டத்திற்கு வெளியே ஒரு இலவசம்!”

தன்னுடைய தொண்டை அடைப்பதைப்போல சுதா உணர்ந்தாள். இவ்வளவு நாட்கள் கடல்களைத் தாண்டி அவள் இருந்தாள். இப்போது அருகில் வந்திருக்கும்போது, எதையோ இழப்பதற்கு அவள் தயங்கினாள். சிறு பிள்ளை பிராயத்தில் ஆற்றின் கரையில், ஈர மணலில் தன் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்த சிறுமியின் பத்திர உணர்வு... விரல் நுனியில் அந்த உள்ளங்கையின் வெப்பம்... நீருக்குள் இரண்டு அடிகள் எடுத்து வைத்தபோது, தந்தை பின்னால் இருந்துகொண்டு இழுக்கிறார்.

“அவ்வளவு போதும் மகளே, அதற்கு மேலே போனால் ஆழம்.”

பிறகு எப்போதோ வழி தவறிய ஒரு இளம்பெண் ஆழமான ஆற்று நீருக்குள் நடந்து இறங்கிக் கொண்டிருந்தபோது, பின்னால் இருந்து பிடித்து இழுக்க அவளுடைய தந்தை இல்லை.

தேவகியம்மா பாத்திரங்களை எடுக்க வந்தபோது, சுதா கேட்டாள்...

“உதவி செய்யணுமா தேவகியம்மா?”

“வேண்டாம் மகளே. இங்கே நான் இருக்கேனே.”

“அச்சுதன் நாயர் இருக்காரா?”

“வெளியே உட்கார்ந்து, அப்பவே சாப்பிட்டாச்சு.”

“அப்படியென்றால் நான் புறப்படுறேன் அப்பா. நேரம் அதிகமாகிவிட்டது.”

சோஃபாவில் சாய்ந்து கிடந்தார் நம்பியார்.

“இந்த இரவு நேரத்தில் போக வேண்டுமா மகளே?”

“போகணும் அப்பா. சிறிது நேரம் பாட்டு கேட்கணும். சிறிது நேரம் வாசிக்கணும்.”

“அவற்றை இங்கேயே பண்ணலாமே?”

“வேண்டாம் அப்பா. தனியா இருப்பதன் சந்தோஷம் தெரிந்துவிட்டது. இனிமேல் அதை மாற்றுவது என்பது மிகவும் கடினமானது.”

“சாப்பிட்டு முடித்தப் பிறகு, கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போகலாமே?”

“என்னை கொண்டு போய் இறக்கிவிட்டப் பிறகு, அச்சுதன் நாயர் போய் படுக்கலாமே?”

“சரி... உன் விருப்பம். நான் சொல்றதுக்கு என்ன இருக்கு?” தந்தை முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

அவள் காருக்குள் ஏறுவதையும், பெரிய ஒரு இரைச்சலுடன் வண்டியின் பின்னால் இருக்கும் கண்கள் விலகி விலகி இருட்டில் கரைந்து போவதையும் பார்த்துக் கொண்டே அவர் தூணில் சாய்ந்து கொண்டு நின்றிருந்தார்.

‘அப்படியென்றால், அனைத்தும் இவ்வளவுதான். அப்படித்தானே?’ - அவர் தனக்குள் கூறிக் கொண்டார்.

இதற்காகத்தான் அவர் இவ்வளவு நாட்களையும் எண்ணிக் கொண்டு காத்திருந்தார். ஒரு காரணமும் இல்லாமல் வெறுமனே விரல்களை மடக்க, நிமிர்த்திக் கொண்டு அவர் அப்படி அமர்ந்திருந்தார். நாட்களை எண்ணிக் கொண்டிருந்தபோது அவர் நம்பியது தன்னுடைய விரல்களை மட்டுமே. ‘இந்த விரல்கள் எந்த சமயத்திலும் என்னை ஏமாற்றாது’ தனக்குள் அவர் கூறிக் கொண்டார்.

சிறிய மண்ணால் ஆன கிண்ணத்தில் குண்டுமணிகளை இட்டு, எண்ணிப் படிக்கும் சிறுமியின் ஆர்வத்துடன் அவர் திரும்பத் திரும்ப எண்ணினார். ஒவ்வொரு முறையும் ஒரு எண் வந்தது.

கனம் நிறைந்த ஒரு நிழல். அதை மதிக்காமல் தாண்டிப் போகும் சிவப்பு வண்ணம் படர்ந்த பாதம். ஈரம் இல்லாத மணலில் சிறு அடையாளத்தைக்கூட பதிக்காமல் அது தாண்டிப் போகிறது.

தரையில் உட்கார்ந்து தயிர் கடையும்போது, அந்த வழியே வந்த வழிப்போக்கன் கேட்கிறான்- “என்ன, என்றைக்கும் இல்லாமல் இப்படி?” அப்போது அவர் சிரிக்க முயற்சிக்கிறார். வரப்பில் ஒற்றைக் காலில் தவம் இருக்கும் கொக்கின் முன் தலையில் வைக்க சிறிது வெண்ணெய்.

ஆமாம்... சிறிது வெண்ணெய்.

அவர் கண்களை மூடினார்.

4

ரு பறவையின் அழுகையைப் போல வரவேற்பறையின் அழைப்பு மணி ஒலித்தது. கதவைத் திறந்தபோது, வாசலில் சற்று தயங்கியவாறு உண்ணி நின்றிருந்தான்.

“உள்ளே வரலாமா, எப்படி?” - தயக்கத்துடன் அவன் கேட்டான். “போன் செய்து பார்த்தேன். கிடைக்கவில்லை. அப்பாயின்ட்மெண்ட் இல்லாமல் வருவது...”

நினைத்திராத அந்த வருகை சிறிதும் பிடிக்கவில்லையென்றாலும் சுதா தலையை ஆட்டினாள்.

“ம்... வாங்க. இல்லாவிட்டாலும் நான் யாருக்கும் இரவு நேரத்தில் அப்பாயிண்ட்மென்ட் தருவது இல்லை. ஒரு வகையில் பார்க்கப் போனால், அந்த ஸ்டேஜ் எல்லாம் தாண்டி விட்டது என்று வைத்துக் கொள்ளலாம் வயசாயிடுச்சுல்ல...”

வரவேற்பறையில் இருந்த சோஃபாவில் உட்கார்ந்திருந்தபோதும், உண்ணியின் முகத்தில் தெரிந்த திகைப்பு சிறிதும் மாறவில்லை. ஆரம்பமே மிகவும் சோர்வைத் தரும் ஒன்றாக அமைந்துவிட்டதைப்போல் திடீரென்று அவனுக்குத் தோன்றியது. சமீபகாலமாக அப்படித்தான். எப்போதும் நாக்கில் இருந்து தேவையில்லாததெல்லாம் நேரம் காலம் தெரியாமல் உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கிறது.


“மன்னிக்கணும். நான் இந்த ஆடைகளை மாற்றிவிட்டு வருகிறேன்” - சுதா திரும்பி நடந்தாள்.

இளம் ரோஸ் நிறத்தில் இருந்த ஒரு மெல்லிய கவுனை அவள் அணிந்திருந்தாள். ராமன் குட்டி தன்னுடைய கிராமத்திற்குப் போய்விட்டதால், இந்த இரவு வேளையில் அது இருந்தால் போதும் என்று அவள் நினைத்திருந்தாள்.

“இல்லாவிட்டால் வேண்டாம்...” அவள் திரும்பி வந்தாள். “இங்கே இப்போது... வேறு யாரும் இல்லையே.”

அவள் எதிரில் இருந்த சோஃபாவில் சாய்ந்து உட்கார்ந்தாள்.

உண்ணியின் கூர்மையான பார்வை தன்னுடைய உடலின் வழியாக நகர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து, அவள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

“என்ன, நான் ஆடைகளை மாற்றிவிட்டு வரணுமா?”

“ஏய் வேண்டாம்” - தவறு நடந்துவிட்டதைப்போல அவன் சிரிக்க முயற்சி செய்தான்.

“பிறகு... என்ன?”

“ஒண்ணுமில்ல...”

“என்ன... இந்த இரவு நேரத்தில் ஃபோன்கூட செய்யாமல்...?”

“ஃபோனில் கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த வழியே போனபோது கொஞ்சம் நுழைஞ்சு பார்க்கலாமே என்று நினைத்தேன். சுதா, நீ ஃப்ரீயா இருப்பியான்னு சந்தேகமா இருந்தது.”

“கம்பெனி கெஸ்ட் ஹவுஸாக இருந்தாலும், இங்கு... இப்போது நான் மட்டுமே இருப்பேன் என்ற விஷயம்... உண்ணி அத்தான், உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஒரு பெண் தனியாகத் தங்கியிருக்கும் இடத்தைத் தேடி வரும்போது, சில சிறு சிறு விஷயங்களைப் பின்பற்றுவது நல்லது அல்லவா? குறைந்தபட்சம் ஒரு ஃபோன் தகவல்.”

“மன்னிக்கணும். அந்த அளவுக்கு நான் திட்டம் போட்டு வரவில்லை. இந்த வழியே போனபோது... அது இருக்கட்டும் சுதா, உனக்கு பிரச்சினைன்னா நான் போயிடுறேன்.”

“எது எப்படியோ... நீங்க வந்துட்டீங்க... இங்கே நுழைஞ்சு உட்காரவும் செய்துட்டீங்க. அந்த அளவுக்கு ஆனபிறகு வெளியே போகச் சொல்ற அளவுக்கு மரியாதைக் குறைவாக நடக்க நான் கத்துக்கல. பிறகு... என்ன இருந்தாலும் என்னுடைய முறைப்பையன் ஆயிற்றே.”

சுதாவின் முகத்தில் இதற்கு முன்பில்லாத ஏதோவொன்று வெளிப்படையாகத் தெரிந்தது. இனிமேலும் அங்கு இருப்பது அந்த அளவிற்கு நல்லதாக இருக்காது என்று அவனுக்குத் தோன்றியது.

அவள் திரும்பவும் கேட்டாள்.

“பிறகு... என்ன கொஞ்சமும் எதிர்பார்க்காமல்..?”

“ஓ.. அப்படியொண்ணும் இல்ல..” அவன் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தான்.

“இல்ல... இப்படி இரவு நேரத்தில் வந்து நுழைஞ்சிட்டு, ஒண்ணுமில்லைன்னு சொன்னா எப்படி? என்னிடம் டிஸ்கஸ் பண்றதுக்காக, அந்த அளவுக்கு ஏதாவது அவசரமான விஷயம் இருக்கும் என்று நினைத்தேன்.”

“அப்படியொண்ணும் இல்ல” - அவன் சற்று நிறுத்தினான். அவளுடைய முகத்தையே உற்றுப் பார்த்துவிட்டு, அவன் சொன்னான். “இருந்தாலும், நீ நேற்று சொன்ன விஷயத்தைப் பற்றி பிறகு நான் சிந்தித்துப் பார்த்தேன்.”

“எந்த விஷயம்?”

“நம்முடைய புதிய ப்ராஜெக்டைப் பற்றி.”

“நம்முடையது என்று சொல்ல வேண்டாம். உங்களுடையது என்று கூறுவதுதானே சரியாக இருக்கும்?”

“சுதா, நீ ஏதோ தவறுதலா நினைக்கிறேன்னு தோணுது. நான் அது சம்பந்தப்பட்ட எல்லா பேப்பர்களையும் கொடுத்து அனுப்புறேன். எந்தவித முன் முடிவும் இல்லாமல், அதை விரிவாக படித்துப் பார்த்தேன்னா நல்லது. அதற்குப் பிறகு, தேவைப்பட்டால் நம்முடைய கன்சல்ட்டன்ஸை வைத்து ஒரு பிரசன்டேஷன் நடத்துவோம். பப்ளிக் இஸ்யூவிற்காக மெர்ச்சன்ட் பேங்கர்ஸும் ப்ராஜெக்டை நல்ல முறையில் படிச்சு முடிச்சிருக்காங்க. அவர்களுடன் ஒரு செஷன்.”

“போதும், போதும்” -சுதாவிற்கு சிரிப்பு வந்தது. “இந்த கம்பெனிக்காக... பாவம் உண்ணி அத்தான், நீங்கள் எப்படியெல்லாம் கஷ்டப்படுறீங்க?”

“உரிய நேரத்தில் நாம இதை செயல்வடிவில் கொண்டுவர வேண்டும் என்பது அங்கிளின் மிகப்பெரிய விருப்பமாக இருந்தது நல்ல பலன்கள் இருக்கக்கூடிய லைன். இந்தப் புதிய ஜெர்மன் டெக்னாலஜியைப் பயன்படுத்தும், இந்த அளவிற்கு கெப்பாசிட்டி உள்ள ஒரு யூனிட் இந்தியாவிலேயே முதல் தடவையாக இதுதான். இப்போது குஜராத்தில் ஏதோ அதைப்பற்றி பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன்.

அதற்கு முன்பே, நாம்... ஃபாரின் கரன்ஸி கடன் விஷயத்தைக்கூட சரி பண்ணியாச்சு. மெஷினரி இறக்குமதி செய்வதற்கான எல்ஸி ஓப்பன் செய்யப் போறோம். அடுத்த வாரம் நான் ஃப்ராங்ஃபர்ட்டிற்கு...”

“அந்த விஷயத்தை நான் அப்பாவிடம் கூறிவிட்டேனே?”

“அங்கிள் சொன்னார். சுதாக்குட்டி, அதனால்தான் அந்த விஷயத்தை உன்னிடம் நேரடியா...”

சுதாக்குட்டி.. அவள் சிரிப்பை அடக்க முயற்சித்தாள். இப்படி அழைத்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன.

“முப்பத்தைந்து வயதான என்னை எந்த வகையில் குட்டியாக உங்களால் பார்க்க முடிகிறது உண்ணி அத்தான்? ஒண்ணு- மிஸ் சுதா நம்பியார் என்று குறிப்பிடலாம். இல்லாவிட்டால் வயது அதிகமான கஸின் என்ற முறையில் வெறும் சுதா என்று சொல்லலாம். முதல்ல சொன்னதுதான் அதிகப் பொருத்தம் உள்ளதாக இருக்கும்னு தோணுது.”

“சுதா.. நான்..”

சுதா எழுந்து கையைப் பின்னால் கட்டிக்கொண்டு அங்குமிங்குமாக நடக்க ஆரம்பித்தாள்.

“உண்ணி அத்தான், நான் ஒரு ட்ரிங் ஊற்றித் தரட்டுமா?”

“பார்த்தப்பவே நான் நினைச்சேன். இங்கே வர்றதுக்கு இந்த அளவுக்கு தைரியம் இருக்குறது நல்லதுல்ல.. நான் சொல்றது சரிதானே?”

உள்ளுக்குள் ஏதோ மூலையில் இருந்து கூர்மையான வார்த்தைகளைப் பொறுக்கிப் பொறுக்கி அவனுடைய முகத்தின்மீது எறிவதில் என்ன காரணத்தாலோ அவள் அதிகமான சந்தோஷத்தைக் கண்டாள். ஒரு கிறிஸ்துமஸ் கால இரவு வேளையில், அப்பார்ட்மெண்ட்டிற்குச் செல்லும் வழி முழுவதும் மூடிவிட்டிருந்த பனிப் படலத்தின் வழியாக கால்களை இழுத்துக் கொண்டு நடக்கும்போது தலை சுற்றும் தெளிவே இல்லாமல் இருந்தது. ஏதோ அறிமுகமில்லாத இளைஞனின் தோள்மீது சாய்ந்து கொண்டு மேலும் கீழும் மூச்சு விட்டுக் கொண்டே நடக்கும்போது, உள்ளுக்குள் எங்கோ தந்தையின் கடிதத்தின் ஒன்றிரண்டு வாசகங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. அத்துடன் புதிய ஒரு பெயரும்- தெரேஸா.

தெரேஸா.. தெரேஸா.. தெரேஸா..

பிடிவாதமாக அன்று அவளுக்கு ஒரு முகத்தைக் கொடுக்க அவள் நினைத்தாள். சிவப்புப் புள்ளிகள் விழுந்த முகம், இருட்டைத் துளைத்து நுழையக்கூடிய பூனைக் கண்கள். செம்பட்டை நிறத்தில் தலைமுடி. சுத்தமில்லாத உதடுகளும் பற்களும். கழுத்தின் ஒரு பக்கத்தில் பார்க்க சகிக்காத ஒரு மரு. சிறிதுகூட இனிமை இல்லாத ஒரு கரடுமுரடான குரல்.

அதுதான் தெரேஸாவாக இருக்க வேண்டும். அப்படி மட்டுமே அவள் இருக்க முடியும்.

உண்ணி அத்தானின் தாழ்ந்த குரலைக் கேட்டு அவள் திடுக்கிட்டு, பேந்தப் பேந்த விழித்தாள்.

“நான் சொன்னது எதுவாவது காதில் விழுந்ததா?” - அவன் கேட்டான்.


சிறிதும் தன்னம்பிக்கை இல்லாத குரல்.. அந்தப் பழைய தலையை உயர்த்தி, நெஞ்சை விரித்துக் கொண்டு நின்றிருந்ததும், உதட்டைக் கடிதத் திருட்டு சிரிப்பும், பெரிதாக ஒலிக்கும் குரலும் எங்கே போயின? பெரிய கொலைகளை செய்யக்கூட அஞ்சாதவர்கள் என்று கருதப்பட்டவர்கள் இப்படித்தான் கடைசியில் ஆகி விடுவார்களா?

உள்ளுக்குள் அரும்பிய சிரிப்பை அடக்குவதற்கு அவள் படாதபாடு பட்டாள்.

உண்ணி தொடர்ந்து சொன்னாள்.

“இன்று மதியம் மெஷினரி சப்ளை செய்பவர்கள் அழைத்திருந்தார்கள். ஃப்ராங்க் ஃபார்ட்டில் இருந்து, காலதாமதம் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் அவர்கள் பக்கம் இருக்கிறது. உரிய நேரத்தில் எல்ஸி. ஓப்பன் பண்ணாமல் இருந்தால் விலை அதிகமாகிவிடும்.

சுதா சற்று நகர்ந்து உட்கார்ந்தாள்.

“நான்தான் ஏற்கனவே சொல்லிட்டேனே. இந்த விஷயத்துக்காக யாரும் ஜெர்மனிக்குப் போக வேண்டிய அவசியமே இல்லைன்னு... அது இருக்கட்டும்... உண்ணி அத்தான், இனியும் ஜெர்மனியைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு இருக்க வேண்டிய தேவையே இல்லையே. முன்பு அங்கேதான் பல தடவை நீங்க போயிருக்கீங்களே.”

“அங்கிள் உறுதியாக எதையும் கூறவில்லை.”

“இனிமேலும் அப்பா வேறு குரலில் பேசுவதற்குத் தயாராக இருந்தால், நான் அதைப்பற்றி எதுவும் கூறுவதற்கில்லை. அது உங்களுடைய விஷயம்.”

“எம்.ஓ.யூ. கையெழுத்துப் போட்டது அங்கிள்தான்” - உண்ணியின் குரலில் ஒரு பதற்றம் தெரிந்தது. “இனிமேல் கால்களை பின்னால் எடுத்து வைத்தால், அவர்களுக்கு நாம் பெரிய அளவில் நஷ்ட ஈட்டைக் கொடுக்க வேண்டியதிருக்கும். அவர்களுக்கு மட்டுமல்ல... பல ஒப்பந்தங்களையும் ரத்து செய்வது என்பது சாதாரண விஷயமல்ல. எவ்வளவு நஷ்டம் வரும் என்பதைக் கணக்கு போட்டுக்கூட பார்க்க முடியாது. வழக்கு, ஆர்ப்பாட்டம், அவமானம்.. இவை வேறு.”

அவை அனைத்தையும் அவள் ஒரு சிறிய சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான்.

“உண்ணி அத்தான், நஷ்டம், லாபம் - இவையெல்லாம் இயல்பாக இருக்கக்கூடியதுதானே? வியாபார விஷயத்தில் மட்டுமல்ல.. மனிதர்களின் விஷயத்திலும் ஒரு இடத்தில் உண்டாகக்கூடிய நஷ்டம் சில வேளைகளில் இன்னொரு இடத்தில் லாபமாக அமைந்துவிடும். எனக்கு அப்படித்தான் தோணுது. நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஏதோ ஒரு லெவலிங் ஃபோர்ஸ் இந்த இயற்கையில் இருக்கு. இயற்கை உண்டாக்கும் மாறுதல்களை மிகவும் கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா உண்ணி அத்தான்? நம்மால் பார்க்க முடியாத ஏதோ சக்கரம் திரும்பவும் சுற்றி வருவதை அனுசரித்து, ஒவ்வொரு பருவத்தின் வருகையும் செல்கையும் ஒன்றின் முடிவுக்கும் இன்னொன்றின் ஆரம்பத்திற்கும் முன்னால் இருக்கும் அந்த சிறிய இடைவெளி.. மிகவும் இயல்பாகவே நடந்து கொண்டிருக்கும் ஒரு மாற்றம்..

சற்று நிறுத்திவிட்டு சுதா தொடர்ந்து சொன்னாள்.

“இல்லாவிட்டாலும்.. உண்ணி அத்தான், உங்களைப் போன்று வேலைகள் அதிகமாக வைத்திருக்கும் ஒரு மனிதருக்கு கண்களையும் காதுகளையும் திறந்து வைத்துக்கொண்டு இயற்கையை கவனிப்பதற்கு நேரம் எங்கே இருக்கிறது? நான் சொல்றது சரிதானா? சிறிது நேரமாவது தனியாக இருக்க முடியாதவர்களால் மட்டுமே அது முடியும். கண்கள் இருந்தால் மட்டும் போதாது. பார்க்கவும் வேண்டுமே.”

அவன் தலையை குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தான். ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து இரண்டு முறை இழுத்தவாறு அவன் முணுமுணுத்தான்.

“இந்த  விஷயங்கள் எதுவுமே எனக்குப் புரியல. சுதா, நீ மிகவும் மாறிட்டே.”

சுதாவின் முகம் திடீரென்று சிவந்தது.

“எனக்கு முன்னால் இருந்து கொண்டு யாரும் சிகரெட் புகைப்பது எனக்கு விருப்பமான ஒன்று அல்ல என்று ஒருமுறை நான் சொல்லியிருக்கேன். மற்றவர்களுடைய விருப்பத்தையும் விருப்பமின்மையையும் பார்த்து செயல்படும் பழக்கம் இல்லாமல் இருக்கலாம். அப்படித்தானே?” - அவளுடைய குரல் மிகவும் கடுமையாக இருந்தது. அதில் பெரிய அளவில் வெறுப்பு கலந்திருப்பதை அவனால் உணர முடிந்தது.

காலில் இருந்து தலைவரை அவனுக்கு எரிச்சல் ஏறியது. ஒருவகையில் அதை அடக்கிக் கொண்டு, அதிகரித்துக் கொண்டிருந்த எரிச்சலுடன், என்னவோ கூற நினைத்து, உடனே அவன் அதை தனக்குள்ளேயே விழுங்கியும் விட்டான். அவன் ஒரு சிகரெட்டை ஆஷ்ட்ரேயில் வைத்து அணைத்தான். அவள் அதை குரூரமான சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் மீண்டும் கழுத்தை சொறிந்து கொண்டே வார்த்தைகளுக்காகத் தடுமாறிக் கொண்டிருந்தான்.

திடீரென்று மெதுவாக அடி எடுத்து வைத்த அவள் அவனுக்கு முன்னால் அதிக தூரத்தில் இல்லாமல் ஒரு காலை ஸ்டூலின் மீது வைத்துக் கொண்டு நின்றாள்.

கூர்ந்து பார்த்தபோது உண்ணியின் வெப்பம் நிறைந்த பார்வை தன்னுடைய உடல் முழுவதும் படர்ந்து கொண்டிருப்பதை அவள் பார்த்தாள்.

“என்ன உண்ணி அத்தான்?”

“ம்.. ஒண்ணுமில்லே..” அவனுடைய குரலில் மெல்லி நடுக்கம் இருந்தது.

“அது இல்ல.. என்னவோ இருக்கு.. முகம் என்னவோ மாதிரி இருக்கு.”

“ஒண்ணுமில்லைன்னு சொல்றேன்ல..” - அவன் கோபத்துடன் சொன்னான்.

“அது இல்ல.. எது இருந்தாலும் திறந்து சொல்லுங்க. தயங்க வேண்டாம். தெரியுதா?” - அவளுடைய முகத்தில் சிவப்பு நிறம் படர்ந்து கொண்டிருந்தது.

“ஒண்ணுமில்ல...” மீண்டும் கூறியபோது தன்னுடைய குரலுக்கு சிறிதும் கம்பீரமே இல்லை என்பதை உண்ணி உணர்ந்தான்.

“உண்மையாகவே எதுவும் தோணலையா?”

அவளுடைய முகத்தில் கொல்லக்கூடிய சிரிப்பு படர்ந்து விட்டிருந்தது. “உண்ணி அத்தான், எது எப்படி இருந்தாலும் ஒரு காலத்தில் நான் உங்களுடைய ஃப்ளேம் ஆக இருந்தது உண்மைதானே. அப்போது எந்த மாதிரியான வரிகளை எல்லாம் நீங்க எழுதினீங்க? கல்லூரி ஆண்டு மலரில் இருந்து திருடிய வரிகள்.. அந்த நான் உங்களின் கனவுகளை நெருப்பு பிடிக்க வைத்தேன். ‘ஹைலி இன்ஃப்ளெமபில்- கவனமாகக் கையாள வேண்டும்’ என்ற ஸ்டிக்கரை என்னுடைய நெற்றியில் ஒட்டி இருக்க வேண்டும். அப்படித்தானே? இப்போது அந்தப் பழைய நெருப்பெல்லாம் எங்கே போனது? ஒரு முப்பத்தைந்து வயதுப் பெண்ணுக்கு நெருப்பு பிடிக்கச் செய்யும் ஆற்றல் குறைவாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? அது அவ்வளவு சரியாக இருக்கும் என்று கூறுவதற்கில்லை - சிலருடைய விஷயங்களில்.”

“சுதா, நீ என்ன சொல்றே?” அவன் பொறுமை இல்லாமல் சொன்னான்.

“அன்று இந்தக் கண்களுக்கு என்ன கூர்மை இருந்தது. யாரையும் வீழ்த்தும் சக்தி படைத்த கண்கள். அப்பாவின் பாரம்பரிய வீட்டின் படிகளுக்குக் கீழே இருட்டில் அன்று என்னை முதல் தடவையாக முத்தமிட்டபோது... பிறகு.. தனியாக இருக்கும்போதெல்லாம் கடிதத்திலும் தொலைபேசியிலும் சொல்லக்கூடிய அந்த சில கெட்ட வார்த்தைகள் இருக்கின்றனவே.


அவற்றில் இருந்த ஆபாசமும் வெறியும் பொறுமையின்மையும் அந்த வயதில் எனக்கு அந்த அளவிற்குப் புரியவில்லை. வெறுமனே ‘அய்யே.. அய்யே.. என்ன இது?’ என்று சொல்லி விலகி நின்று கொண்டிருந்தேன். உண்ணி அத்தான், அப்போதைய உங்களுடைய ஒவ்வொரு அசைவுகளிலும் அசிங்கமான ஒரு ஆபாசம் இருந்தது என்பதை பின்னால்தான் நான் புரிந்து கொண்டேன். என்னுடைய முறைப் பையன் ஆயிற்றே. வழிபடக்கூடிய, ஆசையைத் தூண்டும் ஒரு விளையாட்டு பொம்மையாக மட்டுமே நான் இருந்தேன். அதனால் அந்த பதைபதைப்பு, கோமாளித்தனம் எல்லாவற்றையும் நான் பொறுத்துக் கொண்டேன். உரிமை உள்ள மனிதரின் - எப்போது வேண்டுமானாலும் கைப்பற்றக்கூடிய அதிகாரம் என்பது மட்டுமே நான் அதைப் பார்த்தேன். இல்லாவிட்டால் - தன்னை விட கூர்மையான பெண்ணின்மீது அதிகாரத்தை செலுத்தக்கூடிய முயற்சி. ஒரு வகையான காம்ப்ளெக்ஸ்.”

உண்ணி கடிகாரத்தைப் பார்த்தான். அவனுக்கு எப்படியாவது அங்கிருந்து தப்பிக்க வேண்டும்போல இருந்தது.

“நேரம் அப்படியொன்றும் அதிகம் ஆகவில்லையே?” - சுதா சொன்னாள். “அது இருக்கட்டும்.. ஒரு விஷயத்தைக் கேட்கட்டுமா?”

அவள் மேலும் சற்று முன்னால் நகர்ந்து அவனுக்கு மிகவும் அருகில் வந்து நின்றாள்.

“இப்போ.. இப்போ.. உண்ணி அத்தான், உங்களுக்கு என்மீது மோகம் தோணுதா? மனதைத் திறந்து சொல்லுங்க. டூ யூ வான்ட் டூ ஸ்லீப் வித் மீ?”

“சுதா, என்ன இது? போதும்.. போதும்..” - அவன் காதுகளை மூடிக் கொண்டான்.

“இல்ல.. நான் இப்போதும் ஒரு கன்னிப் பெண்தான் என்பதை நீங்க நம்புறீங்களா? நம்முடைய பாரம்பரியமான குடும்பத்தை சேர்ந்த பெண்களின் கற்பு என்ற அந்தப் பெரிய விஷயத்தை அளந்து பார்க்கும்போது, நான் இப்போது எங்கு நின்று கொண்டிருக்கிறேன்? மைதானத்திற்கு வெளியிலா, உள்ளேயா? இவ்வளவு காலமா மிகவும் சுதந்திரமாக இருக்கும் ஒரு சமூகத்தில் தனியாக வாழ்ந்ததற்காக, நெருப்பில் இறங்கும் சம்பவம், தொடுவதற்கு முன்பு தேவைப்படும். அப்படித்தானே? நம்முடைய ஸ்ரீராமன்களுக்கு அப்படியெல்லாம் கூறக்கூடிய அதிகாரம் இருக்கத்தானே செய்கிறது? பழைய நெருப்பு குண்டத்திற்குப் பதிலாக இப்போது மண்ணெண்ணெய் ஸ்டவ். அவ்வளவுதான்..”

எதுவுமே கூற முடியாமல் அவன் திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தான். ஒரு சிகரெட் புகைக்க வேண்டும் என்ற ஆசையுடன் கைகளைப் பிசைந்து கொண்டிருந்தபோது, அருகில் அமர்ந்திருந்த சுதாவின் சத்தத்தைக் கேட்டு அவன் அதிர்ச்சியடைந்தான்.

“ஒரு ட்ரிங் வேண்டும் என்று தோணுது.. அப்படித்தானே?”

அவன் ஒரு முட்டாளைப்போல் தலையை ஆட்டினான்.

“எனக்கு அது புரிந்துவிட்டது” சுதா உரத்த குரலில் சிரித்தாள். “ஆண்களுக்கு கொஞ்சம் தைரியம் வருவதற்கு மது வேண்டும்.. இல்லையா? எது எப்படியோ.. ஒரு பெண்ணைக் கையாள்வதற்கு மது வேண்டும் என்றால், அது நரம்புகளின் பலவீனத்தைக் காட்டவில்லையா? அதுவும், இந்த வயதில்.. அது இருக்கட்டும். இதற்கு முன்னால் என்ன சாப்பிட்டீங்க?”

“விஸ்கி.”

“அப்படியா? ஆன் தி ராக்ஸ்.. இல்லாவிட்டால்.. சோடாவா?”

“தண்ணி போதும்.”

“சரி..”

கண்ணாடிக் குவளையை நிறைத்து அவனுடைய கையில் கொடுத்துவிட்டு, அவள் எதிரில் சோஃபாவில் வந்து உட்கார்ந்தாள்.

தொடர்ந்து மீண்டும் கூறத் தொடங்கினாள்.

“அப்போது நான் ஏற்கனவே எதை சொல்லி நிறுத்தினேன்? ஆ.. என் புனிதத்தன்மை.. கன்னித்தன்மை பற்றி விஷயம்.. இல்லையா? அப்படியென்றால் நான் மனம் திறந்து கூறுகிறேன். நமக்கு இடையில் என்ன மறைவு விளையாட்டு? உண்ணி அத்தான், அதிர்ச்சியடைய வேண்டாம் தெரியுதா? என் கன்னித்தன்மையெல்லாம் எப்பவோ போய்விட்டது. அந்த கிறிஸ்துமஸ் கால இரவு வேளையில்.. சுற்றிலும் பனிப்படலம் மூடிக் கிடந்தபோது, அன்று முதல் தடவையாக பார்த்த ஏதோ ஒரு இளைஞனுக்கு நான் அதைக் கொடுத்துவிட்டேன். ஊரிலிருந்து என் தந்தையின் கடிதம் வந்த நாள்.. அதிலிருந்து அதுவரையில் கேட்காத புதிய ஒரு பெயரை நான் கேட்ட நாள்.. முழுமையாகப் பனி மூடிவிட்டிருந்த தெருவில் என்னுடைய அப்பார்ட்மெண்ட்டிற்கு செல்லக் கூடிய பாதையைக் காட்டிய இளைஞன் சிறிய ஒரு அதிகார தோரணையுடன் அறைக்குள் தள்ளிக் கொண்டு வந்தபோது, நான் தடுக்க முயற்சிக்கவில்லை. ஏதோ ஒரு ஆள்.. மதுவின் போதையில் வீங்கிப்போன முகம்.. அதற்கு முன்பும் பின்பும் நான் அந்த மனிதனைப் பார்க்கவே இல்லை. எது எப்படியோ.. அத்துடன் தயக்கம் போய்விட்டது. அதற்குப் பிறகு எத்தனையோ தடவை யார் யாரோ நண்பர்கள்.. எங்கெல்லாமோ வைத்து. ஒரு வகையில் பார்க்கப் போனால்.. முதல் மரக்கொம்பைத் தாவி கடந்து விட்டால், அதற்குப் பிறகு இருப்பவை அனைத்தும் ஒரே மாதிரிதான்.. இல்லையா?”

பற்களைக் கடித்து நெறித்து, கைகளை சேர்த்து பிசைந்து கொண்டிருந்தான் அவன்.

“உண்மையை மனம் திறந்து கூறுவதில் தவறே இல்லை உண்ணி அத்தான். எனக்கு செக்ஸ் மிகவும் பிடித்த ஒரு விஷயம். அதை சரியாக எஞ்ஜாய் பண்ணவும் செய்கிறேன். என்னுடன் பணியாற்றிய ஒரு பஞ்சாபி பையன் தான் எனக்குக் கிடைத்ததிலேயே பொருத்தமான ஜோடியாக இருந்தான். அவன் என்னைவிட ஐந்து வயது இளையவனாக இருந்தான். ஆனால், அவனுடைய கையில் என் உடல் உண்மையாகவே ஒரு வினோதமான இசைக் கருவியைப்போல இருந்தது. ஹீ வாய் டெரிஃபிக். அவனுடன் சேர்ந்து ஒருமுறையாவது உறங்கிய இளம் பெண்ணால் இந்தப் பிறவியில் அவனை மறக்கவே முடியாது. ஆனால் சில நாட்கள் கடந்த பிறகு என்மீது அவனுக்கு தீவிரமான காதல் உண்டாக ஆரம்பித்தது. அழுகையும் புலம்பலும் காதலை வெளிப்படுத்தும் செயலும் சம்மதிக்கவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பயமுறுத்தலும்.. அத்துடன் நான் அவனை கத்தரித்து விட்டேன். அப்படிப்பட்ட ஆழமான காதலர்களை என்னால் சிறிதுகூட சகித்துக்கொள்ள முடியாது-.”

“நான் கிளம்பட்டுமா? நேரம் அதிகம் ஆயிடுச்சு” - அவன் வேகமாக எழுந்தான். புட்டியில் இருந்து இன்னும் கொஞ்சம் மதுவை குவளைக்குள் ஊற்றி, நீர்கூட கலக்காமல் ஒரே இழுப்பில் குடித்து முடித்த அவன் சிரிப்பைத் துடைத்தான்.

“ஒரு நிமிடம் நில்லுங்க.”


சுதா முன்னால் வந்த நின்றாள். அவனுடைய கண்களையே உற்றுப் பார்த்துக்கொண்டு கேட்டாள்.

“உண்மையை சொல்லுங்க. இங்கு யாரும் இல்லை. இப்போ என்மீது மோகம் தோணுதா? மனதைத் திறந்து சொல்லுங்க. தயங்க வேண்டாம். என்ன இருந்தாலும் உங்களுடைய பழைய ஒரு ஜுவாலைதானே நான். படுக்கையில் நான் நல்ல பங்காளியா இருப்பேன் என்று பலரும் கூறியிருக்கிறார்கள். ஒரு விஷயத்தை நினைக்கும்போது மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கு. உண்ணி அத்தான், எல்லோரையும் விட அதிகமான உரிமைகளைக் கொண்ட உங்களுக்கு மட்டும் அதற்கான கொடுப்பினை இதுவரை கிடைக்கவில்லை. வெறும் வார்த்தைகளில் கலந்திருந்த ஆபாசத்தில் இருந்து கிடைத்த சுகம் மட்டுமே மிச்சம். எந்த சமயத்திலும் என்னை அடிமைப்படுத்த என் தந்தையின் செல்ல மருமகனான உங்களுக்கு முடியவில்லையே.”

திடீரென்று அவன் தோளில் கையை வைத்தாள். அவனுடன் சேர்ந்து நிற்க முயன்றாள்.

கையை விலக்கி அவளிடமிருந்து விலகி நிற்கும்போது உள்ளுக்குள் இருந்து வந்த ஏதோ கோபமான வார்த்தைகளை தனக்குள்ளேயே விழுங்குவதற்கு முயன்றான் அவன்.

கதவை இழுத்துத் திறந்து, எப்படியோ அவன் வெளியே வந்துவிட்டான். பின்னால் அப்போதும் அவளுடைய உரத்த சிரிப்பு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. பாதி சுய உணர்வு போய்விட்டதைப்போல் அவள் சத்தம் போட்டு சொன்னாள்.

“இல்ல.. அவசரம் ஒண்ணும் இல்ல. தெரியுதா? வேண்டும் என்று அவசியம் தோணுறப்போ சொல்லுங்க. நான் இங்கேதானே இருக்கேன்.”

கதவை சேர்த்து அடைத்துவிட்டு, அவன் நின்று மேலும் கீழும் மூச்சுவிட்டான். தூணில் ஓங்கி இடித்துக் கொண்டே அவன் கத்தினான்.

“தேட் ப்ளடி பிச். அவனவனைப் பற்றி அவள் என்ன நினைச்சுக்கிட்டு இருக்கா? இன்டீஸன்டாக பேசக் கூடாதுன்னு நினைச்சு விலகிப் போனால், தானே வலிய வந்து பேசிக்கிட்டு இருக்கிறாளே!”

கோபம் ஏறிய தலையுடன் இரவைக் கிழித்துக் கொண்டு, எங்கு போகிறோம் என்றே தெரியாமல் வண்டியை ஓட்டிக்கொண்டு போன போதும், அவளுடைய அந்த கொல்லக்கூடிய சிரிப்பு தன்னைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருப்பதைப்போல அவன் உணர்ந்தான்.

2

ந்தையும் மகளும் அலுவலக அறையில் அமர்ந்திருந்தார்கள்.

“நீ அவனை அளவுக்கு மீறி கிண்டல் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்” - மகளுடைய முகத்தில் எதையோ தந்தை தேடிக் கொண்டிருந்தார்.

அவள் சிரிக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

“இதற்கு கிண்டல் என்றா சொல்வது? என்ன கனம் குறைவான சொல். ஏன், உண்ணி அத்தான் ஏதாவது சொன்னாரா?”

“அந்த அளவுக்கு தெளிவா எதையும் சொல்லல. இருந்தாலும் அவனுடைய நடவடிக்கைகளில் என்னவோ அர்த்தம் நிறைந்த பிரச்சினைகள் இருப்பதைப்போல தோன்றியது.”

“என்ன பிரச்சினை?” சுதா கையை விரித்தாள். “எனக்குத் தெரியலையே. என்னைப் பொறுத்தவரை சொல்ற அளவுக்கு ஒரு பிரச்சினையும் தெரியவில்லை.”

“உண்ணி மிகவும் விரக்தி அடைஞ்சு போயிருக்கான். எப்போதும் அவனிடம் இருக்கக்கூடிய சுறுசுறுப்பும் உற்சாகமாக பேசுவதும் இப்போ இல்லவே இல்லை. அவனுடைய மனதிற்குள் என்னவோ அடி விழுந்திருப்பதைப்போல தெரியுது. எதையும் தெளிவா சொல்லவில்லையென்றாலும், அவனுடைய மனதிற்குள் என்னவோ இருந்துகொண்டு வேதனையைத் தந்து கொண்டு இருக்கு. சந்தேகமே இல்லை.”

சுதாவிற்கு அப்போதும் சிரிக்க வேண்டும்போல தோன்றியது.

“அப்பா, உங்களுக்கு வெறுமனே தோணியிருக்கலாம். அந்த அளவுக்குத் தேவையே இல்லாமல் உள்ளுக்குள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் குணத்தைக் கொண்டவர் இல்லை உண்ணி அத்தான். எல்லா விஷயங்களிலும் ஒவ்வொருவருக்கும் என்னென்ன வேண்டும் என்பதைப் பற்றி அவருக்குத் தெளிவான அறிவு உண்டு. எல்லா காரியங்களையும் சரியான நேரத்திற்கு முடிக்கவும் செய்வார். சிறு வயதில் இருந்தே நான் இதைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கேன். அந்தப் பிடிவாதமும், முகத்தை ஒரு மாதிரியா - கோணலா வைத்துக் கொள்வதும், இறுதியில் நினைத்த இடத்திலேயே கொண்டுபோய் காரியத்தை முடிப்பதும் ஒரு காலத்தில் பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும். அந்த விஷயங்களில் உண்ணி அத்தானுக்கென்றே சொந்தமாக ஒரு ஸ்டைல் இருந்தது. எமன் தொட்ட பாம்பு என்று பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன். தெரியுதா அப்பா? இப்போ உண்ணி அத்தானின் நிலைமை அப்படி ஆயிடுச்சு. இந்த தெரேஸாவின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மான்செஸ்ட்டரில் எமன் அனுப்பி வைத்த ஆட்களோ என்னவோ.”

நம்பியாரால் மகளுடன் சேர்ந்து சிரிக்க முடியவில்லை. சுதாவோ குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தாள். அவளால் சிரிப்பை சிறிதுகூட அடக்க முடியவில்லை.

“எது எப்படி இருந்தாலும் இந்தப் போக்கு எனக்கு சரியாக தோணல” - நம்பியாரின் முகத்தில் முகமூடி போடப்பட்ட மிடுக்கு தெரிந்தது. “உங்களுக்கிடையே ஏதாவது கருத்து வேறுபாடுகள் இருந்தால், அதை வெளிப்படையாக சொல்லி விடுறதுதான் சரியாக இருக்கும். என்ன இருந்தாலும், அவனும் என்னோட பையன்தானே. சிறுவயதில் இருந்தே அவன் என்கூடத்தான் இருக்கான். சின்ன வயசா இருக்குறப்பவே அவனை சிங்கப்பூக்காரர்கள் இங்கே கொண்டு வந்து விட்டுட்டாங்க. அதற்குப்பிறகு அவன் வளர்ந்தது என் மடியில் படுத்துதான். மாலதி இறக்குறப்போ உண்ணிக்கு பன்னிரண்டு வயது. அதனால்தானோ என்னவோ அவனுக்கு மிகவும் நெருக்கம் என்னுடன்தான். நீ எப்போதும் பெரிய பிடிவாதக்காரியாகவும் குறும்புத்தனம் பண்ணக் கூடியளாகவும் இருந்தே. உன்னுடன் சேர்ந்து பிடிவாதம் பிடித்து நிற்கக்கூடிய தகுதி தனக்கு இல்லைன்னு அவனுக்கு சிறு வயதா இருக்குறப்பவே தெரியும். அதனால்தான் அவனுடைய விஷயத்தில் நான் எப்போதும் அதிகமான கவனத்தை செலுத்தினேன். நீ பிடிவாதம் பண்ணி படிப்பதற்காக வெளியே சென்றபோது, அவனும் மிகவும் பின்தங்கிப் போய்விடக்கூடாது என்ற விஷயத்தில் நான் உறுதியாக இருந்தேன். அதனால்தானே தவிர, அவன் கேட்டு அல்ல நான் அவனை லண்டனுக்கு அனுப்பி வைத்தது. உங்களுக்கிடையே இருக்கும் கம்பேட்டிபிலிட்டியில் உயர்வு, தாழ்வு இருக்கக்கூடாது என்று நான் நினைத்தேன்.

“அங்குதான் நீங்க தப்பு பண்ணிட்டீங்க அப்பா” இடையில் புகுந்து சொன்னாள்.

“நீ சொல்றது ஒருவேளை சரியாக இருக்கலாம். என்னை யாரும் படிக்க வைக்கவில்லையே மகளே. சுற்றிலும் பார்க்கக் கிடைத்த வாழ்க்கையிலிருந்து ஒவ்வொன்றையும் நானே படித்துத் தெரிந்து கொண்டேன். இருபது சதவிகிதம் மட்டும் தேர்ச்சி பெறும் சாதாரண அரசாங்கப் பள்ளிக்கூடத்தில் மலையாள மீடியத்தில் படித்தேன். பிறகு ஒவ்வொரு நாளும் ஆறாறு மைல்கள் வீதம் நகரத்திற்கு நடந்து பேருந்தைப் பிடித்து, கல்லூரிக்குச் சென்றேன். இறுதியில் வெறும் ஒரு மூன்றாவது வகுப்பு பி.ஏ., பட்டத்துடன் பம்பாய்க்கு வண்டி ஏறினேன். அதெல்லாம் ஒரு கதை.


ஆனால், இங்கு கண்களில் தெரிபவை அனைத்தையும் உருவாக்கிய பிறகு, தொட்ட ஒவ்வொன்றிலும் அதிர்ஷ்டம் கிடைத்தபோது தலையை கம்பீரமாக உயர்த்த முடிந்தது. இப்போதும் என் தலை நேராகத்தான் இருக்கிறது. பலரும் கைகளைத் தட்டிக் கொண்டாடும் பெரிய பெரிய சாதனைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் பித்தலாட்டங்களைப் பற்றி எனக்கு மிகவும் நன்றாகத் தெரியுமோ.”

இவை அனைத்தும் பல முறைகள் கேட்டவைதான். சுதா வேகமாக விஷயத்தை மாற்றப் பார்த்தாள்.

“எது எப்படி இருந்தாலும் என் மனதில் சில ப்ராஜெக்ட்டுகள் இருக்கின்றன. அதை நான் உண்ணி அத்தானிடம் குறிப்பாகக் கூறியிருக்கிறேன்.”

நம்பியார் தாடையில் கையை வைத்துக் கொண்டு சிறிது நேரம் யோசனையில் ஈடுபட்டிருந்தார்.

“இந்த கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் ஏற்றுமதி என்று சொல்றப்போ, அது நமக்கு சிறிதும் தெரியாத ஏரியாவாயிற்றே மகளே? மனதிற்குள் நினைத்துப் பார்க்கக்கூட முடியாத ஒரு திட்டத்திற்குள் கால் வைக்கிறோம் என்றால்- அதன் வரும், வராதது ஆகியவற்றைப் பற்றி எதுவுமே நமக்குத் தெரியாதே.”

“அறியாமல் இருப்பதைப் பற்றிய பயம்.. அப்படிததானே?”

“அப்படியொண்ணும் இல்லை. ஒரு காலத்தில் எதைப் பற்றியும் நான் தெரியாமல்தானே இருந்தேன். ஆனால், தலைக்குள் விழுந்த ஒரு வெளிச்சக் கீற்று. அதுதானே எனக்கு எப்போதும் வழியைக் காட்டிக் கொண்டிருக்கிறது.”

அதைக் கேட்காதது மாதிரி, தூரத்தில் எங்கேயோ பார்த்துக் கொண்டு சுதா கூற ஆரம்பித்தாள்.

“முடிவே இல்லாமல் பரந்து கிடக்கும் காங்கிரீட் வனத்தில் நீண்ட காலம் இருந்துவிட்டது காரணமாக இருக்கலாம்- மனதிற்குள் தேவையற்ற சில ஆசைகள். தெளிந்த ஆகாயம், தெளிந்த நீர், நான்கு பக்கங்களிலும் பச்சை நிறம், குன்றும் மலையும். ஏராளமான பச்சை மரங்கள் அடர்த்தியாக நின்று கொண்டிருக்கும் பள்ளத்தாக்கு, பரந்து கிடக்கும் புல்வெளிகள்.. எனக்கு ஒரு ஆசை இருக்கிறது. ஒரு நல்ல மழைக் காலத்தில் காட்டின் நடுவில் இருக்கும் பங்களாவின் அறையில் தனியாக, கண்ணாடி ஜன்னல் வழியாக மழை பலமாகப் பெய்து கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டே ஒரு இரவு முழுவதும் கண்களை விழித்துக் கொண்டு இருக்க வேண்டும். மழைக்காலத்தில் ஓட்டின்மீது ஒலிக்கும் பறை சத்தம், குளிர்காலத்தில் முடியை அவிழ்த்துப் போட்டு ஆடுதல், சிங்க மாதத்தில் கழுவி சுத்தமான புலர்காலைப் பொழுதில் கண்களைத் திறக்கும் காக்கா மலர்கள்..”

“பழைய நினைவுகள்.. அப்படித்தானே?” - நம்பியார் சிரித்தார். “கேட்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கு. மிகவும் அதிகமான தூரத்தில் இருக்கும்போது பழைய நினைவுகளுக்கு அடர்த்தி அதிகமாக இருக்கும். எது எப்படியிருந்தாலும் சந்தோஷம்தான். இந்த அளவுக்கு என் மகளுக்கு மிகவும் அருமையாக மலையாளம் பேச முடிகிறதே.”

“எவ்வளவு வருடங்கள் ஆனாலும், எங்கு வசித்தாலும் உள்ளுக்குள் இருக்கும் அந்த எட்டு வயது சிறுமியின் பிடியிலிருந்து தப்பிக்க முடியும் என்று தோன்றவில்லை. அன்றைய மிகவும் சிறிய ஆசைகளும், முடிவே இல்லாத கனவுகளும்.. சில நேரங்களில் தோணுவதுண்டு. அதே புனிதத் தன்மையை வாழ்நாள் முழுவதும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்க முடிந்தவர்கள் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலிகள்.”

“மகளே, ஒரு விஷயத்தை மறந்துவிடக் கூடாது” - நம்பியார் சொன்னார். “இவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று நினைத்தது நீதான். நான் எவ்வளவோ சொல்லியும், படிப்பு முடிந்த பிறகுகூட நீ அங்குதான் இருக்கணும்னு நினைச்சே. ஒவ்வொரு இடங்களிலும் போய் இருந்தே. திரும்பி வரவேண்டும் என்று தோன்றும் அளவிற்கு எவ்வளவோ சம்பவங்கள் நடந்தன. உன்னுடைய சினேகிதியின் அப்பார்ட்மெண்டில் பட்டப் பகலில் நீக்ரோக்கள் பலவந்தமாகப் புகுந்து அங்கிருந்த எல்லா பொருட்களையும் திருடிவிட்டு, அவளுக்கும் தொந்தரவுகள் தந்தப்போ, நீ வரவேண்டும் என்று நினைத்தாய் அல்லவா? அங்கிருக்கும் சட்டம், ஒழுங்கு சூழ்நிலைகள் மிகவும் மோசமாக இருக்கிறது என்று நீதான் சொன்னே. அதற்குப் பிறகும் நீ அங்குதான் இறுகப் பிடித்துக் கொண்டு இருந்தே.”

சுதாவிற்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை.

“அது இருக்கட்டும். நாம் அந்த விஷயத்தில் இறுதியாக ஒரு முடிவு எடுத்தே ஆகவேண்டும். அடுத்த வாரம் போர்ட் மீட்டிங் இருக்கு. சில விஷயங்களில் முடிவு எடுக்க வேண்டியதிருக்கிறது. நீ வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் கூட்டம் அன்றைய தினத்தில் வைக்கப்பட்டிருக்கு.”

“நான் எதுவும் கூறுவதற்கில்லை அப்பா. என் மனதில் எந்தவொரு குழப்பமும் இல்லை. இதற்குமேல் ஒரு மீட்டிங்கும் விவாதமும் எனக்குத் தேவையில்லை.”

“இது பிடிவாதமாச்சே மகளே.”

“கொஞ்சம் பிடிவாதம் இருக்குறது நல்லதுதானே அப்பா? பிறகு.. ஒரு முப்பத்தைந்து வயது பெண் பிடிவாதம் பிடிக்கிறாள் என்னும்போது, அதற்குப் பின்னால் ஏதாவது இல்லாமல் இருக்குமா?”

“உண்ணியுடன் இன்னொரு முறை வேணும்னா..”

“அதற்கான அவசியம் இல்லை.”

“நான் மிகுந்த தர்மசங்கடத்தில் இருக்கேன் மகளே.”

அவர் கையை நீட்டி அவளுடைய உள்ளங்கையை அழுத்தினார். அது தன் தந்தையின் பதினெட்டாவது முயற்சி என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும். அதனால் அவள் மெதுவாகக் கையை இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர முயற்சித்தாள்.

“என்னை மன்னிச்சிடுங்க. இப்படியெல்லாம் நடக்கும் என்று முன்கூட்டியே தெரிந்திருந்தால்..” - சுதா திடீரென்று நிறுத்தினாள்.

“முன்கூட்டியே தெரிந்திருந்தால்..?”

எதுவும் கூற முடியாமல் அவள் முகத்தைத் தாழ்த்திக் கொண்டாள்.

“முன்கூட்டியே தெரிந்திருந்தால் நீ திரும்பி வந்திருக்க மாட்டாய். அப்படித்தானே?” - தந்தையின் கண்கள் தனக்குள் ஆழமாகச் செல்வதை அவள் அறிந்து கொண்டாள்.

அவள் அப்போது எதுவும் சொல்லவில்லை.

தந்தைக்குத் தன் தொண்டையே அடைத்துக் கொண்டுவிட்டதைப்போல இருந்தது. உள்ளுக்குள் இருந்து என்னவோ வேகமாக வெளியே வந்து கொண்டிருந்தது. என்னவோ கூற வேண்டும்போல அவருக்கு இருந்தது. சிறுபிள்ளையாக இருக்கும்போது தன்னுடைய கையில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி.. அவளுடைய பிடிவாதத்திற்கு முன்னால் எப்போதும் தான் தோல்வியைத் தழுவினாலும், இப்போது அவள் கம்பீரமாக நின்று கொண்டு தன்னுடைய கருத்தை முகத்தை நோக்கி உறுதியான குரலில் கூறும்போது, அவருக்கு என்னவோ போல் இருக்கிறது.

“வெளியே போய் படித்ததால்தான் இப்படியெல்லாம் ஆயிட்டே அப்படித்தானே? நீ ஆசைப்பட்டதைப்போல சொந்தக் காலில் நிற்கக்கூடிய பலமும் தன்னம்பிக்கையும் கிடைத்துவிட்டன என்பது மட்டுமல்ல.. வேண்டியவர்களின் முகத்தைப் பார்த்து குரூரமாக பேசுவதற்கும் சிறுதுகூடத் தயக்கம் இல்லாத நிலை வந்திருக்கிறது” - இதைச் சொல்லி முடித்தபோது, இதைச் சொல்லியிருக்க வேண்டாம் என்று அவருக்குத் தோன்றியது.

தன் தந்தையின் முகம் மங்கலாகி இருள்வதையும், குரல் தடுமாறுவதையும் மகள் தெரிந்து கொண்டாள். சற்று தயக்கத்துடன் அவள் சொன்னாள்.


“எனக்கு வருத்தமாகத்தான் இருக்கு. நீங்கள் என்னை தூரத்தில் படிக்க விட்டிருக்கக்கூடாது என்று சில நேரங்களில் தோன்றும். ஊட்டிக்கும் டெல்லிக்கும் பிறகு ஹார்வர்டுக்கும் போய் என்ன கிடைத்தது? இங்கேயே இருப்பவற்றைப் படித்து ஒரு நல்ல மகளாகவும் மனைவியாகவும் தாயாகவும் ஆகி..” - அவளுடைய தொண்டை இடறியது. தடுமாறிய குரலில் அவள் தொடர்ந்து சொன்னாள். “அப்பா, என்னைப் பற்றிய உங்களின் எல்லா கணக்கும் தவறாகிவிட்டதா?”

நம்பியார் மெதுவாக எழுந்தார். அவளுடைய தோளில் கையை வைத்து தனக்கு மிகவும் நெருக்கமாக அவளை நிற்க வைத்தார்.

“இல்லை மகளே. அப்படி யாரைப் பற்றியும் அதிகமாகக் கணக்குப் போடக்கூடாது என்ற வாழ்க்கை எனக்கு கற்றுத் தந்திருக்கிறது. மாமரத்தின் கிளையில் இருக்கும் மாம்பிஞ்சுகளும் வாசலில் தடுமாறியபடி நடக்கும் குழந்தைகளும் ஒரே மாதிரி என்று யாரோ கூறியிருக்கிறார்களே. எல்லாம் ஒரு மழை மேகத்தைப் போலத்தான்.. உண்மையாக சொல்லப் போனால், நாம் எல்லோரும் எப்படி ஆவோம்? என்னவாக ஆவோம்? எல்லாம் நாம் சம்பாதித்தவை என்று வீர வார்த்தைகள் பேசுவதில் என்ன இருக்கிறது? நம்முடைய ரத்தத்தில் சில பொருட்கள் கலந்திருக்கின்றன. கால காலங்களாக, குருக்களான முன்னோர்கள் காரணமாக அவர்கள் மூலம் கிடைத்த சில குணங்களும் தேவையற்றவைகளும்... அவை இல்லாமற் செய்வது என்றால், அது அந்த அளவிற்கு எளிதான விஷயமல்ல. வட இந்தியாவில் இருக்கும் பழக்கவழக்கத்தைப் பார்த்திருப்பேல்ல. மூத்தவர்களைப் பார்க்குறப்போ, காலைத் தொட்டு நெற்றியில் வைக்கும் பழக்கம்.. சிலர் காலை நீட்டிப் படுத்து வணங்குவதையும் பார்க்கலாம். என்ன அழகான பழக்கம் அது. அதைப் போன்றதுதான் நெற்றியில் கையை வைத்து ஆசிர்வதிப்பதும்.. பெரியவர்களின் ஆசி என்ற விஷயம் நம் எல்லோருக்கும் நிறைய பலத்தைத் தரத்தானே செய்கிறது? ஒரு வகையில் கூறுவதாக இருந்தால், வம்ச பரம்பரைகளின், கோத்திர எச்சங்களின் பலம்!”

“எனக்குப் புரியுது அப்பா. பேசிக் கொண்டிருக்கும்போது, பல நேரங்களில் எடுத்தெறிந்து பேசுவது மரியாதை இல்லாததால் அல்ல. எப்படியோ அது பழக்கமாகிவிட்டது. இந்த ஓப்பன்னஸ் ஃப்ரூட்டலி ஃப்ராங்காக பேசுவது.. எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை. இன்றைய காலத்தில் வாழ்வதற்கு கொஞ்சம் பணிவு இருக்கத்தான் வேண்டும். அப்படித்தானே?”

“அது இருக்கட்டும். நான் வெளிப்படையாகக் கேட்கிறேன். இந்த ப்ராஜெக்ட் விஷயத்தில், உன்னுடைய கருத்துக்களுக்கு ஒரு மாறுதலும் இல்லையா?”

“இல்லை அப்பா” அவளுடைய குரல் உறுதியானதாக இருந்தது.

“இது இறுதி முடிவா?”

“ஆமாம்.”

“அப்படியென்றால்.. அதனால் எனக்கு உண்டாகும் அவமானம்..”

“அதைப்பற்றி எனக்குத் தெரியாது. எனக்கு உடன்பாடில்லாத எந்த விஷயத்திலும் நம்பிக்கை வைக்க என்னால் முடியாது.”

“ஒரு வியாபாரி தன்னுடைய வார்த்தைகளைக் காப்பாற்ற கடமைப்பட்டவன் என்பதை நீ நம்புகிறாயா? இல்லை.. வெள்ளைக்காரர்களின் மணி கட்டப்பட்ட மேனேஜ்மெண்ட் பள்ளிக்கூடங்கள் கற்றுக் கொடுத்து வெளியே அனுப்புவது வேறு விதத்தில் இருக்குமோ என்னவோ.”

“வார்த்தை” - அவள் ஒரு நிமிடம் சிந்தித்தாள். “கொஞ்சம் எத்திக்ஸ் பார்ப்பது நல்லதுதான். ஆனால், ஒட்டுமொத்த பயன் என்ன என்பதைக் கணக்கிட்டுப் பார்க்குறப்போ, சில தந்திரங்கள் நிறைந்த செயல்களை செய்ய வேண்டியது வரும். புத்திசாலித்தனமான ஒரு பின்வாங்கலையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.”

“மகளே, அங்குதான் நீ தப்பு பண்ணுகிறாய். அதாவது- இறுதியில் பயன் இருக்க வேண்டும் என்பதற்காக கொள்கைகளையே மாற்றிக் கொள்ளலாம் என்று கூறுகிறாய். அப்படித்தானே? வாக்கு சொன்னவர்களிடம் நீதிமன்றத்தில் போர் புரியலாம். சில நேரங்களில் வெற்றி பெறவும் செய்யலாம். அதே மாதிரி.. அதே மாதிரி..”

“இது ஒரு மேனேஜ்மெண்ட் தியரி ஒண்ணும் இல்லை. கொஞ்சம் நடைமுறை அறிவு. அவ்வளவுதான்.”

தந்தை சிறிது நேரம் சிந்தித்துவிட்டு தன் மகளின் கண்களையே வெறித்துப் பார்த்தார்.

“அப்படியென்றால் நாம கொஞ்சம்கூட முடியாது மகளே. என்னைப் பொறுத்தவரையில் வியாபாரத்தில் சாதாரண மரியாதைகளுக்கு மிகவும் கீழே மட்டுமே லாப-நஷ்ட கணக்குகள் வரும். ஒருவேளை நம்மை விட்டு போய்க் கொண்டிருக்கும் ஒரு பழைய தலைமுறையின் இறுதிக் கண்ணிகளில் ஒன்று என்று மட்டும் நினைத்துக் கொண்டால் போதும். ஒரு ஓல்ட் பான்டிக்குட்.”

சுதாவால் எதுவும் கூற முடியவில்லை.

நம்பியார் மீண்டும் அவளுடைய கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“ஒருவேளை, முன்னால் வைத்த காலை பின்னோக்கி எடுக்க வேண்டாம் என்று நான் இறுதியில் தீர்மானித்தால்..?”

“அதை உண்ணி அத்தானின் வெற்றியாக மட்டுமே நான் எடுத்துக் கொள்வேன். ஒரு அர்த்தத்தில் என்னுடைய வெட்கக்கேடான தோல்வியாகவும் அது இருக்கும்.”

“அதாவது- இதற்கு நடுவில் ‘நான்’ என்ற தேவையற்ற கதாபாத்திரம் எந்த இடத்திலும் வரவில்லை என்று அர்த்தம்.”

“அப்படியொண்ணும் நான் சொல்லலையே.”

“பார் மகளே” - தந்தையின் முகம் வழக்கத்திற்கு மாறாக சிவப்பதையும், குரல் கனத்து ஒலிப்பதையும் அவள் பார்த்தாள். “தேவையில்லாமல் நாம் நாடகம் விளையாடி எந்தவொரு பயனும் இல்லை. இது வியாபார உலகம். ஒரு தடவை தயங்கி நின்றுவிட்டால், பிறகு பிடித்து ஏறுவது மிகவும் கஷ்டமான விஷயமாக செய்திகள் அங்கும் இருக்கும். அது போதுமே.”

எதையும் பேச முடியாமல் தலையில் கையை வைத்துக் கொண்டு சோஃபாவில் நிலைகுலைந்து விழுந்தார் நம்பியார்.

உரத்த சத்தங்களுடன் வெளியே நடந்து செல்லும் மகளை முகத்தை உயர்த்திப் பார்க்கக்கூட அவரால் முடியவில்லை. அவருடைய உள் மனம் அழுதுகொண்டிருந்தது. ஒன்றையும் இரண்டையும் சொல்லி காரியங்களை இந்த அளவில் கொண்டு வந்து நிறுத்துவாள் என்று எந்த சமயத்திலும் அவர் நினைத்ததில்லை. அப்படியே இல்லையென்றாலும் இது அவளுடைய துருப்புச் சீட்டு. அதில் அவரை வீழ்த்த முடியும் என்பதை அவள் நன்றாக அறிந்திருந்தாள். அவளுக்குள்ளே இருக்கும் அந்தப் பழைய பிடிவாதக்காரியான சிறுமிக்கு அது நன்றாகத் தெரியும்.

“ஷீ ஈஸ் ஹோல்டிங் மீ டூ ரான்ஸம். நான்சென்ஸ். மகளானால் என்ன.. யாராக இருந்தால் என்ன.. யாரும் என்னை இந்த அளவிற்கு எளிதாகக் கார்னர் பண்ணியது இல்லை” - அவர் தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டார்.

எழுந்து கையை நீட்டி இன்டர்காமின் பொத்தானை அழுத்தினார்.

“கொஞ்சம் தேநீர் கொடுத்தனுப்பு. நல்ல கடுப்பத்தில் இருக்கணும். இரண்டு கப்புகளும்.”

பிறகு உண்ணியை அழைத்தார்.

“கொஞ்சம் இங்கே வா. சீக்கிரம் வரணும்.”                


“சரி அங்கிள். இதோ வர்றேன்” உண்ணி வருவதற்காகக் காத்திருந்தபோது, சிறிய ஒரு வருத்தத்துடன் நம்பியார் நினைத்துப் பார்த்தார். ‘இவன் காட்டும் அன்பைக்கூட என்னுடைய மகள் என்மீது காட்டவில்லையே!’

வரப்பில் ஒற்றைக் காலில் தவம் இருக்கும் கொக்கின் முன்தலையில் வைப்பதற்கு சிறிது வெண்ணெய்.

தயிர் கடைந்து கடைந்து கைகள் பலமாக வலிக்க ஆரம்பித்திருக்கின்றன. இறுதியில் அது ஒரு வீணான வேலை என்று ஆகிறதோ.

2

சுதாவிற்கு ஜானுவை உடனடியாக அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

வரவேற்பறையின் கதவுக்கு அருகில் ஓரத்தில் சாய்ந்தவாறு தாங்க முடியாத வெறுப்புடன் அவள் நின்றிருந்தாள். அவளுடன் கையில் தூங்கியவாறு ஐந்தாறு வயது கொண்ட ஒரு சிறுவன்..

ராமன்குட்டி விருப்பப்படாத மாதிரி பார்த்துக் கொண்டிருந்தான்.

“சின்னம்மா, உங்களைப் பார்க்கணும்னு பிடிவாதம் பிடிச்சாங்க. உங்களை நல்லா தெரியும்னு சொன்னாங்க.”

சிறிது நேரத்திற்கு எதுவுமே புரியவில்லையென்றாலும், திடீரென்று தலைக்குள் என்னவோ மின்னியது.

‘கீழேக்களத்தில்’ வீட்டைச் சேர்ந்த ஜானு.

சுதா ஓடிச்சென்று அவளுடைய கையைப் பற்றிக் கொண்டாள்.

“அய்யோ... என் ஜானு, எனக்கு உன்னைக் கொஞ்சம்கூட அடையாளமே தெரியல. இது என்ன கோலம். உனக்கு என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா?”

நீர் வற்றிய முகம். மெலிந்து உலர்ந்து காணப்படும் கை, கால்கள். முடியில் நிறைய நரை விழுந்திருந்தது.

ஜானு சிரிக்க முயற்சித்தாள்.

“சின்னம்மா, நீங்க வந்திருப்பதைக் கேள்விப்பட்டேன். வந்து பார்க்கணும்னு தோணிச்சு. பார்க்க முடியுமான்னு சந்தேகமா இருந்தது.”

“விளையாடுறியா? எது எப்படி இருந்தாலும் ‘சின்னம்மா’ என்றெல்லாம் கூப்பிட வேண்டாம் ஜானு. அந்தப் பழைய பேரே போதும். இல்லாவிட்டால் சிறு வயதில் சண்டை உண்டாகுறப்போ நீ அழைக்கற அந்த செல்லப் பெயர் ஞாபகத்துல இருக்குதா?”

ஜானு வாயை மூடிக்கொண்டு சிரிப்பை அடக்கினாள்.

“ஞாபகத்துல இருக்குதா?”

அவள் தலையை ஆட்டினாள்.

“அதுதான் நல்ல பெயர். ‘குசும்பி பாரு’ன்னு கூப்பிடுவேயில்ல. அப்போ நான் பெரிய குசும்புக்காரியாகத்தான் இருந்தேன் இல்லையா? இப்போ பெரிய பெண்ணா ஆன பிறகு, குசும்புத்தனம் பத்து மடங்கு அதிகமாயிடுச்சுன்னு எல்லோரும் சொல்றாங்க.”

“ஏய்.. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. அதெல்லாம் சிறு வயதில் நடந்த தமாஷான விஷயங்கள். அர்த்தத்தை அறிந்து அழைத்ததா என்ன?”

“சரி.. இருக்கட்டும். நீ வா” -சுதா அவளுடைய கையைப் பற்றினாள். “நாம் அங்கே போய் இருப்போம். பார்த்து எவ்வளவு காலம் ஆயிடுச்சு.”

“வேண்டாம் நான் இங்கேயே இருக்கேன். பரவாயில்லை.”

“போடீ..” சுதா அவளைப் பிடித்து இழுத்து டைனிங் டேபிளுக்கு அருகில் கொண்டு சென்று உட்கார வைத்தாள். “ராமன்குட்டி, தேநீர்..” அவள் உரத்த குரலில் சொன்னாள். “ஏதாவது தின்பதற்கும் கொண்டு வாங்க.”

ராமன்குட்டி வந்து எட்டிப் பார்த்தான். விருப்பப்படாத மாதிரி முகத்தை ஒரு மாதிரி வெட்டிக் கொண்டு சமையலறையை நோக்கிச் சென்றான்.

“நீ எப்படி இப்படி ஆயிட்டே ஜானு?” நாற்காலியை நெருக்கமாகப் போட்டுக் கொண்டு அவள் ஜானுவின் தோளில் கையை வைத்தாள். “என்னைவிட இரண்டு வயதுதானே நீ மூத்தவள்? என்ன, உடம்புக்கு ஏதாவது சரியில்லையா?”

“வயசாயிடுச்சுல்ல சுதாக்குட்டி. பிறகு.. குடும்பச் சுமை..”

“உனக்கு எத்தனை பிள்ளைகள்? இது மூத்ததா?”

“இவன் எல்லாருக்கும் இளையவன். மூத்தது ரெண்டும் பெண் பிள்ளைகள். பதினைந்தும் பன்னிரெண்டும் வயது.”

“உன் பெயர் என்ன? - சுதா சிறுவனின் தாடையைப் பிடித்தபோது, வெட்கத்தால் நெளிந்த அவன் தன் தாயின் பின்னால் போய் நிற்க முயற்சித்தான்.

“ராசப்பன்..” - ஜானு பாசத்துடன் சொன்னாள். “ஒரு ஆண் குழந்தைக்கு எவ்வளவோ நாங்கள் ஆசைப்பட்டோம்.”

இப்போது எவ்வளவோ வருடங்கள் ஆகிவிட்டன. முன்பு ஊட்டியிலிருந்து விடுமுறையில் வரும்போதெல்லாம் ஜானு தேடி வருவாள். யாருக்கும் தெரியாமல் மேற்குப் பக்கத்தில் இருக்கும் திண்ணையின் அருகில் வந்து மெதுவாகக் கூப்பிடுவாள். கையில் ஒரு சிறிய பொட்டலம் எப்போதும் இருக்கும். வறுத்த முந்திரிப் பருப்போ, வறுத்த புளியங்கொட்டையோ, இல்லாவிட்டால் மாம்பழத் துண்டோ.. இப்படி ஏதாவது.. உரம் வைக்கப்பட்டிருக்கும் அறையின் மறைவில் முன்பைப்போல மறைந்து உட்கார்ந்து கொண்டு கல் விளையாட்டு விளையாடுவார்கள். பாட்டி பார்த்தால் சண்டை போடுவாள். டெல்லிக்குப் போன பிறகு, அவளைப் பார்க்கவே இல்லை என்பதை நினைத்துப் பார்த்தாள் சுதா. போவதற்கு முன்னால் விடைபெறுவதற்காக அவளுடைய வீட்டிற்கு சுதா போயிருந்தாள். அந்த சமயத்தில் திருமணம் முடிந்து அவள் எங்கோ தன்னுடைய வசிப்பிடத்தை மாற்றியிருந்தாள். பார்க்க முடியவில்லை.

“எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கும் ஒரு பையன் இங்கே.. கம்பெனியில் இருக்கான். அவன் சொல்லித்தான் சீமையில் இருந்து நீ வந்திருக்கிற விஷயமே தெரிஞ்சது சுதாக்குட்டி..”

“அது நல்லதாப் போச்சு. எது எப்படியோ ஜானு, உன்னைப் பார்க்க முடிந்ததே! சரி.. அது இருக்கட்டும். உன் ஆளு யார்? எங்கே வேலை?”

“எங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் வீடு. நகரத்தில் ஒரு கம்பெனியில் காவலாளி வேலை. அங்கேயே தங்கிக் கொள்கிறார். வாரத்துல ஒருமுறை வருவார். கிடைக்கும் வருமானத்தில் நகரத்தில் குடும்பத்துடன் வாழ முடியுமா?”

“ஆள் எப்படி?” சுதா அவளுடைய தோளைப் பிடித்து குலுக்கினாள்.

ஜானுவின் முகத்தில் திடீரென்று வெட்கம் பரவியது.

“ஒண்ணுமே சொல்ல வேண்டாம். என்னைப்போல இல்லை அவர். நல்ல உயரமும் அதற்கேற்ற தடிமனும். பெரிய மீசை. அவரை அச்செடுத்த வார்ப்புதான் லட்சுமிக்குட்டி. மூத்த மகள். இவன் என்னை மாதிரி..”

பாசத்துடன் அவள் மகனின் தலையை வருடுவதைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தபோது தனக்குள் ஏதோ குடைவதைப்போல சுதா உணர்ந்தாள்.

“நீங்கள் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டீர்களா?” அவள் கேட்டாள்.

“ஏய்.. அப்படியொண்ணும் இல்லை. திருமணம் முடிந்த பிறகு விருப்பப்பட்டோம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். எங்களைப்போல இருப்பவர்களுக்கு இது பெரிய விஷயமாச்சே. சுதாக்குட்டி, நிரந்தரமான வேலை உள்ள மனிதர், முடியாதப்போ துணைக்கு ஒரு ஆள். அதுதானே வேணும்?”

“அப்படியென்றால் உன்னுடைய பழைய ஆள்?” -சுதாவின் கண்களில் ஒரு கள்ளத்தனமான சிரிப்பு மலர்ந்தது. “வேலிக்கு அருகிலும் ஆற்றின் கரையிலும்..”

ஜானு சிரித்தாள். முகத்தைத் தாழ்த்திக் கொண்டாள்.

“அதெல்லாம் அந்த வயதால் உண்டாவதுதானே? அந்த ஆளின் தந்தை தாலுகா அலுவலகத்திலிருந்து மாறுதல் பெற்றுப் போனபிறகு, நான் அந்த ஆளைப் பார்க்கவே இல்லை. எங்கேயாவது பெரிய மனிதராக வாழ்ந்து கொண்டிருப்பார்”- தன்னையே அறியாமல் ஜானுவிடமிருந்து ஒரு பெருமூச்சு வந்ததை சுதா கவனித்தாள்.


“நீயும் உன் கணவரும் சண்டை போட்டுக் கொள்வதுண்டா?”

“அதெல்லாம் நடக்கத்தான் செய்யும். விடுமுறை எடுத்துக் கொண்டு வர்றப்போ, பாதி நாள் சண்டைதான் நடக்கும். சில நேரங்களில் எனக்கு அவர் பேசுவதைக் கேட்டால் எரிச்சல் வரும். ஒரு பண்பாடே இல்லாத மனிதரைப்போல தோணும். ஒருவகையில் பார்க்கப் போனால் இரண்டு பேரும் இரண்டு இடங்களில் இருப்பது நல்லதுதான் என்று சில நேரங்களில் தோணும்.”

சுதா சிரிக்க முயற்சித்தாள்.

ராமன்குட்டி தேநீர் கொண்டு வந்து வைத்தான். ஒரு தட்டில் பூ போட்ட கேக் துண்டுகள் இருந்தன. முதலில் சற்று தயங்கினாலும் பிறகு ஜானுவின் மகன் ஆவலுடன் அதைத் தின்று தீர்ப்பதை சுதா ஆர்த்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இங்கேயிருந்து போரடித்துக் கொண்டிருக்க வேண்டாம். வேணும்னா, நாம ஆற்றின் கரைவரை நடந்துவிட்டு வருவோம். இந்த காம்பவுண்டைத் தாண்டினால் ஆறுதான். நீரில் இறங்குவதற்குப் படித்துறை இருக்கு. அங்கே போய் கொஞ்ச நேரம் உட்காருவோம்.”

“வேண்டாம் சுதாக்குட்டி..” - ஜானு தயங்கினாள்.

“சுதாக்குட்டி, நீ என்னுடன் வெளியே.. யாராவது பார்த்தால்.. வேண்டாம்.. அது சரியாக இருக்காது. சிறு வயதில் ஒன்றாக சேர்ந்து விளையாடுவோம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு, நான் என்னுடைய நிலையை மறக்கக்கூடாதே. நிற்க வேண்டிய இடத்தில் நிற்க வேண்டும் - எல்லோரும்.”

என்ன கூறுவதென்று தெரியாமல் சுதா வெறுமனே அவளுடைய கைகளைப் பிடித்து மெதுவாக அழுத்தினாள். விரல்களில் சொடக்கு போட்டாள். எந்த அளவிற்கு சுறுசுறுப்பான பெண்ணாக அவள் இருந்தாள். காலம் ஏராளமான காயங்களை உண்டாக்கியிருக்கும் அந்த முகம் வேறு யாருடைய முகமோ என்று தோன்றியது. பழைய ஜானுவை ஒரு நடுத்தர வயதுப் பெண்ணின் வடிவத்தில் எந்த சமயத்திலும் கற்பனை பண்ணிப் பார்க்கக்கூட அவளால் முடியவில்லை.

“கேட்பது சரியா என்று தெரியவில்லை” - ஜானு தயங்கித் தயங்கி கேட்டாள். “சுதாக்குட்டி.. இப்போதும் தனியாத்தான் இருக்கியா? எப்போதும் இப்படியே இருக்கணும்ன்றதுதான் எண்ணமா?”

“அதனால் என்ன பிரச்சினை ஜானு?”

“இல்ல. பிரச்சினை எதுவும் இல்லை. இருந்தாலும் அந்த முடியை வெட்டி எறிஞ்ச பிறகு உன்னைப் பார்க்குறப்போ என்னவோபோல இருக்கு. அந்த முடி எவ்வளவு அழகா இருந்தது. எங்கள் எல்லோருக்கும் நிறைய பொறாமையா இருக்கும்ன்றதை தெரிஞ்சிக்கோ.”

“அதை பத்திரமா பாதுகாத்துக் கொண்டு நடப்பது என்பது கஷ்டமான விஷயம் ஜானு.”

“ஓ... அதனால்தானா? நான் நினைச்சேன். வெள்ளைக்காரர்களின் நாட்டுக்குப் போன பிறகு நீ வெள்ளைக்காரியாகவே மாறிட்டியோன்னு..”

சுதாவிற்கு சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

ராமன் குட்டி சமையலறையின் கதவுக்கு அருகில் வந்து எட்டிப் பார்த்தான். அவனுடைய பார்வை குழந்தையின் அழுக்கு படிந்த கால்களில் இருந்ததை சுதா கவனித்தாள். விரிப்பில் சேறு படிந்துவிடுமோ என்பது அவனுடைய பயமாக இருக்கலாம். அவள் அவனை உள்ளே போகும்படி கையால் சைகை காட்டி சொன்னாள்.

ஜானு அதற்குப் பிறகும் ஒன்றிரண்டு விஷயங்களைப் பேசியவாறு சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தாள். சுதாவிற்கு அது பெரிய சுவாரசியமான விஷயமாக இருந்தது. வருடங்களின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவள் கிராமத்து சிறுமியாக மாறினாள். ஜானுவின் கையைப் பிடித்துக்கொண்டு அவள் அந்த வயலின் வரப்புகளிலும் செடிகள் நிறைந்த இடங்களிலும் மலைச் சரிவிலும் ஆற்றின் கரையிலும் ஓடித் திரிந்தாள். ‘எனக்குள் இருக்கும் எட்டு வயது சிறுமி இப்போதுகூட சிறிதும் வளராமலே இருக்கிறாளே!’ சிறிய ஒரு ஆச்சரியத்துடன் அவள் நினைத்துப் பார்த்தாள். சிறிதும் வளர சம்மதிக்காத சிறுமி.. ஜானுவிற்கும் தன்னுடைய சிறு பிள்ளைப் பருவம் திரும்பவும் வந்திருப்பதைப்போல இருந்தது. மீண்டும் களரிப் பயிற்சி நடக்கும் இடத்தின் வாசலில் ஒற்றைக் காலில் நின்று கொண்டு, கட்டத்திலிருந்து ஒரு கட்டத்திற்குத் தாவி, காய்களைத் தட்டிச் சிதறி ஓடச் செய்ய ஆரம்பித்தாள் அவள். அந்த கட்டங்களிலாவது அவள் மீண்டும் வெற்றி பெற்றவளாக ஆனாள். அரசியாக ஆனாள். சுதாவின் வீட்டில் இருந்த பெரிய குளத்தில் அவள் மீண்டும் நீந்தித் துடித்தாள். கருங்கல் படியில் அமர்ந்து சுதா மீண்டும் எண்ணத் தொடங்கினாள்- ‘முப்பத்தொண்ணு.. முப்பத்திரெண்டு.. முப்பத்து மூணு..’

அந்தத் தலை மேலே வரவில்லை. நீர் சிறிதுகூட அசையவில்லை. அத்துடன் எண்ணுவதில் வேகம் குறைந்தது. குரல் தடுமாறியது.

ஜானு.. அந்த சத்தம் பெரிய ஒரு அழுகையில் போய் முடிந்தது.

அப்போது பூச்செடிகளைப் போல நீரை சிதறடித்துக் கொண்டு நீர்பரப்பிற்கு மேலே ஜானுவின் தலை மேலே வந்தது.

“என்ன சுதாக்குட்டி சிரிக்கிறே?” ஜானு கேட்டாள்.

“இல்ல... நீ எத்தனை தடவை என்னை பயமுறுத்தி இருக்கே. தெற்குப்பக்க குளத்தில், பாம்புப் புற்றுக்குப் பக்கத்தில் இருக்கும் பாலை மரத்திற்குப் பின்னால், முந்திரி மரத்தின் உச்சியில்.. இப்படி எங்கெல்லாமோ..”

“அதெல்லாம் இப்போதும் ஞாபகத்தில் இருக்குதா?”

“எப்படி மறக்க முடியும் ஜானு?”

சுதாவின் குரல் மிகவும் தாழ்ந்து விட்டிருந்தது. “இது மட்டும்தானே நம்முடைய வாழ்க்கையில் எஞ்சி நிற்பது! சில நேரங்களில் தோணும் பெரிதாக வளர்ந்திருக்கவே கூடாதுன்னு. இப்படிப்பட்ட சில நேரங்களில்தான் நாம் எந்த மாதிரியான விஷயங்களையெல்லாம் இழந்துவிட்டோம் என்ற புரிதலே உண்டாகிறது. ஜானு, உனக்குத் தெரியுமா? ஊட்டியிலும் டெல்லியிலும் படிக்கும்போது எனக்கு இருந்த காலத்தில் அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், பிரிந்து போனபிறகு அவர்களை நான் உடனடியாக மறந்துவிட்டேன். இதோ - இதைப் போன்ற சின்னச்சின்ன விஷயங்கள் எதுவும் அவர்களைப் பற்றி எனக்கு ஞாபகத்திலே இல்லை. அது ஏன் ஜானு?”

ஜானு எதுவும் சொல்ல முடியாமல் வெறுமனே சிரிக்க முயன்றாள். அவளுடைய தோள்களைப் பிடித்துக் குலுக்கியவாறு ஒரு சிறு குழந்தையைப்போல சுதா அந்தக் கேள்வியைத் திரும்பக் கேட்டாள்.

“அது ஏன் ஜானு அப்படி?”

நேரம் அதிகமானதைத் தொடர்ந்து ராமன்குட்டி ஓடிச் சென்று தோட்டத்தில் விளக்குகளை எரிய வைக்க தொடங்கியவுடன், ஜானு வேகமாக எழுந்தாள்.

“அய்யோ... நேரம் போனதே தெரியல. சாயங்காலம் ஆயிடுச்சே சுதாக்குட்டி?”

“ஆமாம்.. வெளியே சாயங்காலம் ஆகப் போகுது ஜானு” சுதா சொன்னாள். “நமக்கு அது தெரியல.”

திடீரென்று ஜானுவின் முகம் மங்கலானது.

“ஜானு உனக்கு போவதற்கு பேருந்து கிடைக்குமா?”

“இருக்கும்.”

“வேணும்னா இரவில் இங்கேயே தங்கிடு. அந்தக் காலத்துல இருந்தது மாதிரி ஏராளமான விஷயங்களை நாம சுவாரசியமா பேசிக்கொண்டே இருக்கலாம்.”


“அய்யோ.. வேண்டாம். வீட்டில் குழந்தைகள் தனியாக இருக்காங்க..”

“நேரம் அதிகமாயிடுச்சு. பேருந்து இருக்குமா?”

“சுமார் ஒண்ணரை மணி நேர தூரம் இருக்கும். நான் போறேன். தாமதமானால் குழந்தைகள் பயப்படுவாங்க.”

“கொஞ்சம் நில்லு.”

சுதா உள்ளே சென்று கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வந்தாள். அதை சிறுவனின் பையில் வைக்க முயன்றபோது, ஜானு அதைத் தடுத்தாள்.

“குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்குவதற்கு..” சுதா சொன்னாள்.

“வேண்டாம் சுதாக்குட்டி. அது நல்லது இல்ல. நான் இதை வாங்கினால் உனக்கும் எனக்கும் இடையில் இருக்கக்கூடிய நட்பு என்னவோ மாதிரி ஆயிடும். இவ்வளவு நேரமா நாம இங்கே குழந்தைகளைப்போல இருந்தோம். குழந்தைகளுக்கிடையே எந்த சமயத்திலும் நோட்டுகள் கை மாறக்கூடாது. நமக்கிடையே கொஞ்சம் தாமரை மொட்டுகளும், புளியங்கொட்டைகளும், முந்திரிப் பருப்பும், வளையல் துண்டுகளும் மட்டும் தானே இருந்தன. அவ்வளவு போதும். அது அங்கேயே இருக்கட்டும். இல்லாவிட்டால் ஒரு சுவாரசியம் இருக்காது. நம்முடைய வாழ்க்கையில் இப்படிப்பட்ட சில சின்ன சந்தோஷங்கள் மட்டுமே இருக்கின்றன. எது எப்படி இருந்தாலும், எதையுமே நினைக்காமல் உன்னை சந்திக்க முடிந்ததே. அது போதும். நான் இனிமேல் ஊரில் பெருசா பெருமையுடன் பலரிடமும் சொல்லிக் கொள்ளலாம், சுதாக்குட்டி என்னுடைய நெருங்கிய தோழின்னு.”

அவளுடைய கசங்கிய ஆடைகளையும், எண்ணெய் தேய்த்திராத காற்றில் பறந்து கொண்டிருந்த நரை விழுந்த தலைமுடியையும் பார்த்தபோது உள்மனம் கலங்கியது.

வாசலை விட்டுப் படிகளில் இறங்கும்போது, ஜானு திடீரென்று திரும்பி நின்றாள். என்னவோ கூற முயற்சித்தாள். உடனே அதைத் தனக்குள்ளேயே விழுங்கிக் கொண்டாள். மீண்டும் இரண்டு அடிகள் வைத்த அவள் எதையோ நினைத்து முகத்தைத் தாழ்த்திக் கொண்டாள்.

“என்ன ஜானு?” சுதா அருகில் வந்து அவளுடைய தோளில் கையை வைத்தாள். “சொல்லு.. தயங்க வேண்டாம்.”

 அவளுடைய வதங்கிப்போன முகத்தில் இருந்த சுருக்கங்கள் மேலும் அதிகமாவதை சுதா பார்த்தாள். அதைப் பார்த்துக்கொண்டு நின்றிருக்கும்போது, கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது.

“இல்ல.. இவனுடைய அப்பா சொன்னார்- உனக்கு பிரச்சினை இல்லாமல் இருந்தால்...”- தொண்டை தடுமாறியபோது, அவள் பேச்சைத் தொடர சிரமப்பட்டாள். “லட்சுமிக்குட்டி பத்தாம் வகுப்பில் தோல்வியடைஞ்சிட்டா. இனிமேல் அவள் தேர்ச்சி பெறுவாள் என்று சொல்வதற்கில்லை. அவளுக்கு சரியா படிப்பு வராது. அதனால் இவனோட அப்பா சொன்னார். செய்யணும்னு இல்ல. இருந்தாலும்.. சுதாக்குட்டி.. நீ நினைச்சால் கம்பெனியில அவளுக்கு ஏதாவது வேலை.. ஏதாது பெருக்குற வேலையோ வேறு ஏதாவதோ.. உங்களுடைய கம்பெனியிலதான் வேணும்னு இல்லை. வேறு ஏதாவது கம்பெனியில்..” குரல் இறங்கி கொண்டேயிருந்தது.

“ஜானு, கவலைப்பட வேண்டாம். நான் அப்பாக்கிட்ட சொல்றேன். நீ அவளை ஒரு விண்ணப்பம் எழுதித்தரச் சொல்லு.”

“ரொம்பவும் உதவியாக இருக்கும். அங்கே வேலை கிடைக்க ஒரு வழியும் இல்லை. செங்கல் சூளையில் வேணும்னா வேலை கிடைக்கும். ஏனோ மனசு வரலை. சொல்லப் போனால் மேல் ஜாதியாச்சே! பிறகு.. அவளை தலையில் சுமை சுமக்க வைப்பது என்பது...”

“ஜானு, நீ கிளம்பு. நான் பார்த்துக்குறேன்.”

“நல்லா வளர்ந்த பொண்ணு. நான்தான் ஏற்கனவே வயதைச் சொன்னேனே! யாருடனாவது திருமணம் செய்து அனுப்பி வைக்கிறதா இருந்தால், நாங்க நினைச்சாலும் நடக்காது.”

சுதா ஆறுதல் கூறுகிற வகையில் அவளுடைய தோளைத் தட்டினாள்.

“இப்போ நாம் சிறு குழந்தைகளாக இல்லாமல் போய்விட்டோம். இல்லையா சுதாக்குட்டி? ஏற்கனவே நான் சொன்னதெல்லாம் வெறுமனே சொல்லப்பட்டவை. அப்படித்தானே?”

புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டு, மகனின் கையைப் பிடித்தவாறு அவள் நடந்து போவதைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தபோது, பல வருடங்களுக்குப் பிறகு அன்று முதல் தடவையாக சுதாவின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன.

உரம் வைக்கப்பட்டிருந்த அறையின் மறைவில் எங்கேயோ இழந்துவிட்ட கொஞ்சம் உருண்டையான கற்களும், களரி மைதானத்தின் மண்ணில் காற்றடித்து மறைந்த அந்தப் பழைய கோலங்களும்...

எப்போதும் வெற்றி பெற்றதென்னவோ ஜானுதான். என்றாவது அவளைத் தோல்வியடையச் செய்ய முடியும் என்ற ஆசையும் இல்லாமல் இருந்தது.

அப்படியென்றால் எல்லாம் சேர்ந்து இவ்வளவுதான். இல்லையா? தன் மனதிற்குள் தனக்கே தெரியாத ஒரு வெறுப்பு திரண்டு நிற்பதை அவளால் உணர முடிந்தது.

ராமன்குட்டி தோட்டத்திலிருந்து வந்து கொண்டிருந்தாள்.

“போயாச்சா?” அவனுடைய முகத்தில் அப்போதும் வெறுப்பு இருந்தது.

“ம்.”

“இரவு உணவுக்கு என்ன வேணும்?”

“உங்களுக்குப் பிடித்த ஏதாவது..”

“என்ன, அப்படி சொல்றீங்க? உங்களுக்கு என்ன வேணுமோ அதை நான் செய்வேன். தெரிந்தவை என்ன என்றால்... பெரிய விஷயங்கள் எதுவும் எனக்கு பழக்கம் இல்லை. பங்களாவில் அப்படிப்பட்ட பார்ட்டியோ வேறு ஏதோ இருக்குறப்போ வெளியில் இருந்து ஆட்களைக் கொண்டுவந்து சமையல் செய்வதுதான் வழக்கம்.”

“விசேஷமா ஒண்ணும் வேண்டாம் ராமன்குட்டி” - அவள் மெதுவான குரலில் சொன்னாள். “கொஞ்சம் கஞ்சி.. முருங்கைக்காய், மாங்காய் ஆகியவற்றைச் சேர்த்து கூட்டு, மாங்காய் ஊறுகாய், இரண்டு அப்பளம்.. பிறகு.. சிரமம் இல்லையென்றால் காய் வறுவல் மண் சட்டியில் கிடந்து நல்லா வறுபடணும்.. தெரியுதா?”

அவள் உள்ளே திரும்பியபோது, நம்பிக்கை வராததைப்போல ராமன்குட்டி பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

அப்போது தொலைபேசி ஒலித்தது.

அது உண்ணிதான்.

“சுதா, ஃப்ரீயா இருக்கியா?” உண்ணி கேட்டான்.

“என்ன?”

“நாம கொஞ்சம் நகரத்திற்குப் போறோம். இரவு சாப்பாடு அங்கேதான்.”

“என்ன விசேஷம்?”

“ஒண்ணுமில்ல. வெறுமனே நாம அப்படிப் போறோம். அவ்வளவுதான்” - உண்ணியின் குரலில் முன்பில்லாத ஒரு உறுதி தொனித்தது. சிறிய அளவில் அதிகாரத்தின் கனம் தெரிந்தது. அதைச் சிறிதும் விரும்பவில்லையென்றாலும், வெளியே காட்டிக் கொள்ளாமல் அவள் அதை நிராகரிக்க முயற்சித்தாள்.

“இங்கே சாப்பாடு தயாரிக்கச் சொல்லிட்டேன்.”

“அதனால் பரவாயில்ல.. இரண்டு பேருக்கான சாப்பாட்டை சாப்பிட ராமன்குட்டியே போதும்.”

“என்ன விசேஷம்னு சொல்லலையே?”

“சிறப்பாக ஒண்ணும் இல்லை... இல்ல.. இனிமேலும் காரணம் வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால், சொல்றேன். இன்று என்னுடைய பிறந்தநாள். ஆனால் அதனால் ஒண்ணுமில்ல. வெறுமனே ஒரு நீண்ட டிரைவ். அத்துடன் வெளியில் இருந்து சாப்பாடு அவ்வளவுதான்.”

என்ன காரணத்தாலோ - அவளால் மறுத்து எதுவும் கூற முடியவில்லை. சரியான ஒரு சாக்குப் போக்கைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே உண்ணி தொலைபேசியைக் கீழே வைத்துவிட்டான்.

உடலை நீரில் கழுவிவிட்டு ஆடைகளை மாற்றுவதற்காக நிலைக்கண்ணாடிக்கு முன்னால் வந்து நிற்கும்போது, அவள் நினைத்துப் பார்த்தாள்.


சுரிதார் போதுமா? இல்லாவிட்டால் புடவை வேண்டுமா?

ஆனால் அலமாரியைத் திறந்தபோது, முதலில் கண்களில் பட்டது அந்த ஜரிகை போட்ட முண்டுதான். வந்த மறுநாள், அவளுடைய தந்தை வாங்கிக் கொண்டு வந்தது. காக்கும் தேவதையின் ஆலயத்தில் அன்றைய பூஜைகள் முழுவதும் அவளுடைய தந்தையின் மேற்பார்வையிலேயே நடைபெற்றன. மகள் திரும்பி வரவேண்டும் என்பதற்காக நேர்ந்திருக்கலாம். அன்று முண்டுதான் உடுத்த வேண்டும் என்று அவளுடைய தந்தை வற்புறுத்தினார். அதை உடுத்துவதற்கு தேவகியம்மா மிகவும் சிரமப்பட வேண்டியதிருந்தது.

இன்றும் அதையே உடுத்தினால் என்ன? ஒரு மாறுதலாக இருக்குமே. உண்ணி அத்தானைக் கொஞ்சம் விரட்டவும் செய்யலாம்.

அவள் அக்கறையுடன் ஆடையை மாற்ற ஆரம்பித்தாள்.

முண்டு, மேற்துண்டு ஆகியவற்றுடன் கண்ணாடியில் பார்த்த உருவத்திற்கு, அந்த வெட்டி சரி செய்யப்பட்ட தலைமுடி ஒரு கோமாளியின் முகத்தைக் கொடுப்பதாக அவளுக்குத் தோன்றியது.

‘பரவாயில்லை. இதுபோதும்’ - அவள் முணுமுணுத்தாள். ‘வெட்டி எறிந்த தலைமுடி இனி முன்பு இருந்தது மாதிரி முளைத்து வரப்போவதில்லை என்பது எனக்கு அப்போதே நன்றாகத் தெரியும்.’

போர்ட்டிக்கோவில் காரின் சத்தம் கேட்டது. அவள் மெதுவாக வரவேற்பறையை நோக்கி நடந்தாள்.

“நான் சாப்பாட்டுக்கு இருக்க மாட்டேன். தெரியுதா? நகரத்திற்குப் போகிறேன்.”

ராமன்குட்டி அதைக் காதிலேயே வாங்கவில்லை என்பது மாதிரி இருந்தது. அவன் அவளுடைய ஆடை மாற்றத்தையே வியப்புடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

2

மொட்டை மாடியின் ஒரு மூலையில், தூரத்தில் ஏரியின் அக்கரையில் இருந்த தீவின் கண்கள் மின்னுவதைப் பார்த்தவாறு அவள் அமர்ந்திருந்தாள்.

“இந்த ஆடைகள்.. இனியும் அதையே சொல்லிக் கொண்டிருந்தால் மிகவும் போராக இருக்கும். இல்லையா?” - உண்ணி சிரிக்க முயன்றான்.

“காருக்கு அருகில் இந்த ஆடைகளுடன் நடந்து வருவதைப் பார்த்தபோது, இன்னொரு உலகத்தில் இருந்து வேறு யாரோ..”

அவள் முகத்தைத் திருப்பினாள்.

“அப்படியா?”

“சிறிதுகூட நினைத்திருக்காத நேரத்தில் ஆச்சரியப்படும் வகையில் நடந்து கொள்வது.. சுதா, அந்தப் பழக்கம் சிறு வயதிலிருந்தே உன்னிடம் இருக்கிறதே. அதனால் பல நேரங்களில் உன்னுடைய குணத்தைக் கண்டுபிடிக்க முடியாமலே போய்விடுகிறது. மேகங்கள் திடீரென்று மூடியதைப்போல இருப்பதும், பிறகு மின்னலும் இடி இடிப்பும்.. ஒரு முழுமையான மழைக்காலம் எங்கேயோ மறைந்திருப்பதைப்போல..”

அவள் வெறுமனே தோளைக் குலுக்கினாள்.

“என்னதான் விழுந்து விழுந்து புரண்டாலும் ஒரு ஆளை அவனுக்குப் பொருத்தமான சூழ்நிலைகளில் பார்ப்பது என்பது நல்ல விஷயம்தான். சுதா, இந்த ஜரிகை முண்டில்..”

அவள் எந்தவித ஆர்வத்தையும் வெளிப்படுத்தாமல் தன்னுடைய சொந்த சிந்தனைகளில் ஆழமாக மூழ்கிப் போய்க் கொண்டிருந்தாள்.

அத்துடன் உண்ணிக்கு பேசுவதற்கு எதுவுமே இல்லை என்றாகிவிட்டது. நீண்ட நேரம் எதுவும் பேசாமல் நேருக்கு நேராக அவர்கள் அதே நிலையில் உட்கார்ந்திருந்தார்கள். உண்ணி பேச ஆரம்பிக்கட்டும் என்று அவள் எண்ணினாள். அது மட்டுமல்ல.. ‘இந்த மனிதனால் என்ன காரணத்தாலோ, என்னை சிறிதுகூட அசைக்கவே முடியவில்லையே’ என்று அவள் ஆச்சரியப்படவும் செய்தாள். உண்ணியோ எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்ற தடுமாற்றத்தில் இருந்தான்.

சிறிது நேரம் சென்றவுடன் வெறுப்புடன் அவன் கேட்டான்.

“சுதா, உனக்கு ஒரு ஜிம்லெட் சொல்லட்டுமா?”

“வேண்டாம்..”

“ஒயின்.”

“வேண்டாம். கட்டாயம் என்றால் ஃப்ரஷ் லைம் சொல்லுங்க. கொஞ்சம் உப்பு போட்டு.. இல்லாவிட்டால் வேண்டாம். எதுவும் வேணும்னு தோணல..”

“நான் ஒரு விஸ்கி சொன்னால், பிரச்சினை இல்லையே?”

“என்ன பிரச்சினை?”

“சிகரெட் புகைப்பதை எதிர்க்கக்கூடிய உனக்கு இப்படியும் சில விஷயங்கள் பிடிக்காமல் இருந்தால்..” அவன் திடீரென்று நிறுத்தினாள். “ஓ.. அன்னைக்கு எனக்கு நீ ஊற்றித் தந்தாய் அல்லவா? அதை மறந்துவிட்டேன்.”

உணவுக்கு ஆர்டர் கொடுத்துவிட்ட பிறகு, மீண்டும் அமைதி.

சிறிது நேரம் கழித்து உண்ணி சொன்னான். “எனக்கும் இப்படி நீரைப் பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் பிடிக்கும்.. இரவு நேரத்தில்..”

“அப்படியா?”

“தேம்ஸ் நதிக்கரையில் எனக்கு விருப்பமான ஒரு தனியிடம் இருந்தது.”

சுதா திடீரென்று எழுந்தாள். வேலிக் கம்பிகளைப் பிடித்தவாறு தூரத்தில் நங்கூரம் இட்டவாறு நின்றிருந்த கப்பலின் கண்களையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

உண்ணி அருகில் சென்றான். கண்ணாடிக் குவளையில் இருந்து ஒரு மடக்கு பருகிவிட்டு அவன் மெதுவான குரலில் முணுமுணுத்தான்.

“பிறந்த நாளைப் பற்றி நான் சொன்னேன். அவ்வளவுதான். என்ன காரணமோ அதில் ஆர்வம் எதுவும் தோன்றவில்லை. காலையில் அங்கிள்தான் ஞாபகப்படுத்தினார். கோயிலுக்குப் போனேன். வருடத்திற்கொருமுறை வரும் நினைவைப் புதுப்பித்துக் கொள்ளுதல் அப்படித்தானே? அது இருக்கடடும். சுதா, நீ தீவிரமாக அப்படி எதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறே?”

“அப்படிக் குறிப்பிட்டு சொல்லும்படி எதுவும் இல்லை.”

“நல்ல ஒரு மாலைப்பொழுது வீணாகிக் கொண்டிருக்கிறது.”

அவளுடைய உதடுகள் கோணுவதை அவன் பார்த்தான்.

“எது எப்படியிருந்தாலும், ஆள் இப்போது இங்கேயே இல்லை. வேறு ஏதோ உலகத்தில்.. வேறு ஏதோ வட்டத்தில்..”

அவள் எதுவும் சொல்லாமல் வெறுமனே வேலிக் கம்பிகளில் தாளம் போட்டுக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து மீண்டும் நாற்காலிகளுக்குத் திரும்பி வந்தபோது, உண்ணி சொன்னான்.

“என்ன காரணத்தாலோ அங்கிள் மிகுந்த கவலையில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். நான் அவரை என்னால் முடிந்தவரையில் சமாதானப்படுத்த முயன்றேன். என்ன இருந்தாலும், நான் என்னும்போது, கொஞ்சம் வரையறைகள் இருக்கத்தானே செய்கின்றன. ஒருவேளை.. சுதா, நீ இன்னும் கொஞ்சம் நல்ல விதமாக இந்த விஷயத்தைக் கையாள முடியும்.”

“எந்த விதத்தில்?”

“மனம் திறந்து சொல்லவில்லையென்றாலும், அங்கிளின் மனதிற்குள் நிறைய பயம் இருக்குன்னு தெரியுது. சுதா, நீ எங்கே திரும்பிப் போயிடுவியோன்னு அவர் நினைக்கிறார்.”

உண்ணி அவளுடைய முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அது அவனுடைய தந்திரம் என்பதை உடனடியாக சுதா புரிந்துகொண்டாள். அவளுடைய தந்தை நடந்த விஷயங்கள் ஒவ்வொன்றையும் விடாமல் அவனிடம் சொல்லியிருப்பார். அப்படியே இல்லையென்றாலும், உண்ணி அத்தானுக்குத் தெரியாத விஷயங்கள் எதுவும் அவளுடைய தந்தையிடம் இல்லையே.

அவள் சாதாரணமாக அங்கிருந்து போய்விடலாமா என்று பார்த்தாள்.

“அதற்கு.. திரும்பிப் போகமாட்டேன் என்று நான் எந்த சமயத்திலும் சொன்னது இல்லையே.”

“இருந்தாலும்.. நாங்க ஏற்கனவே நினைத்திருந்தது அப்படி இல்லையே.”

“அதற்கு நான் காரணம் இல்லை.”

திடீரென்று உண்ணி சற்று நகர்ந்து உட்கார்ந்தான். கண்ணாடிக் குவளையில் இருந்தது முழுவதையும் காலி செய்துவிட்டு, பணியாளை அழைத்து மீண்டும் ஒரு பெக்கிற்கு ஆர்டர் கொடுத்துவிட்டு, சொல்ல ஆரம்பித்தான்.


“பாரு.. சுதா இந்த ஓடிப்பிடிக்கும் விளையாட்டை இங்கேயே நிறுத்திக் கொள்வதுதான் இரண்டு பேருக்கும் நல்லது. இது என்னை மிகவும் கவலைக்குள்ளாக்குகிறது. இந்த அளவிற்கு வயதை அடைந்தவர்கள் கண்களை மூடிக்கொண்டு விளையாடுவதைப் பார்க்க ஒரு சுவாரசியமும் இல்லை. நாம் மனப்பக்குவம் உள்ள சாதாரண மனிதர்களைப்போல விஷயங்களைச் சொல்லி தீர்வு கண்டுகொள்ளக் கூடாதா? முதல் தடவையாக சந்திப்பவர்களைப் போல இப்படி உட்கார்ந்து கொண்டிருப்பதும்.. தாங்க முடியாத அளவிற்குப் பேசாமல் இருப்பதும்.. விலகியிருப்பதும்.. அறிவும் உலக அனுபவமும் உள்ள மனிதர்கள் சதுரங்கம் விளையாடுபவர்களைப்போல நடந்து கொள்வார்கள் என்று சொல்வார்கள். ஒரு ஆளின் புரிந்துகொள்ள முடியாத அசைவுகளுக்காக அந்தப் பக்கத்தில் முடிவே இல்லாமல், ஒரு முட்டாளைப்போல விளையாடும் நபர் காத்திருக்கிறான் என்றால்..? திஸ் ஈஸ் ரிடிகுலஸ். தாங்க முடியாத வெறுப்பு அளிக்கும் விஷயம்.”

சுதா ஏதோ கூற முயற்சிக்க, அதை கவனிக்காமல் உள்ளுக்குள் இருக்கும் நீராவி முழுவதையும் திறந்து விடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்த ஆவேசததுடன் அவன் தொடர்ந்து சொன்னான்.

“வேணும்னா இந்த விஷயத்தை இங்கேயே வைத்து முடித்துக் கொள்வோம். லெட்டஸ் பா£ட் அஸ் குட் ஃப்ரண்ட்ஸ் அட்லீஸ்ட். அதற்கான நல்ல மனதையாவது காட்டு. ஆனால் தேவையற்ற ஒரு விரக்தி, மனப்பூர்வமான விலகல்.. அவை தாங்க முடியாத அளவிற்கு என்னை வெறுப்பேற்றுகின்றன. உனக்கு முன்னால் நான் எப்போதும் குழந்தையாக ஆவதைப்போல.. அதுவும் ஒரு காரணமும் இல்லாமல்..”

அவள் முகத்தை உயர்த்தி உண்ணியையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“உண்ணி அத்தான், இப்போ உங்களுக்கு என்ன வேண்டும்?”

“சுதா, கொஞ்ச நேரம் மனதைத் திறந்து உன்னுடன் பேசலாம் என்றுதான் உன்னை அழைச்சிட்டு வந்தேன். லெட்டஸ் டாக் இட் ஓவர். அதில் என்ன பிரச்சினை? நாம் உலகத்தைப் பார்த்தவர்கள் தானே? கம்யூனிகேஷனைப் பற்றி பெரிய நிபுணர்களிடமிருந்து நீண்ட நீண்ட சொற்பொழிவுகளைக் கேட்டவர்கள்தானே? சில சொற்பொழிவுகளை நாமும் நடத்தி இருக்கிறோம். எனினும, அவங்கவங்க சம்பந்தப்பட்ட விஷயம் என்று வரும்போது, கம்யூனிகேஷன் ஒரு பிரச்சினையாக ஆகிவிடுகிறது. சிறு வயதில் இருந்து ஒருவரையொருவர் அடித்து விளையாடி வளர்ந்தவர்கள், மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் கிராமத்து மனிதர்களைப் போல, முகத்தைக் கோணலாக வைத்துக் கொண்டு, ஒரு வார்த்தைகூடப் பேசாமல் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.”

“அப்படின்னா சரி.. இருக்கட்டும். உண்ணி அத்தான், நீங்க என்னிடம் சொல்லவோ கேட்கவோ என்ன இருக்குன்னு சொல்லுங்க. நான் பதில் சொல்றேன்.”

“நான் தெரிந்து கொள்ள வேண்டியது ஒரு விஷயம்தான். முக்கியமா.. என்னிடம் பழகுவதில் திடீரென்று உண்டான இந்த மாற்றம்.. ஒய் டூ யூ ஹேட் மீ லைக் திஸ்?”

“அதைப்பற்றி பெரிய ஒரு ஆராய்ச்சி இந்த சூழ்நிலையில் தேவையில்லைன்னு நான் நினைக்கிறேன்.”

“இல்ல.. யூ ஓவ் மி ஆன் ஆன்ஸர். எனக்கு ஒரு பதில் வேணும். கட்டாயமா...” உண்ணி பிடிவாதம் பிடித்தான்.

“நிச்சயமா முடியாது... எனக்கு அப்படி ஒரு கடமையே இல்லை.”

“நான் அதைத் தெரிஞ்சிக்கணும்.. தெரிந்தே ஆகணும்..” அவனுடைய குரல் உயர்ந்தது.

உண்ணி மீண்டும் ஒரு ட்ரிங்க் வரவழைத்தான். வேண்டுமென்றே ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து புகையை ஊதிப் பரப்ப ஆரம்பித்தான்.

“சுதா, என்மீது கோபப்பட உனக்கு உரிமை இருக்கலாம். ஒப்புக் கொள்கிறேன். தனிப்பட்ட முறையில் என்னை விரும்பாமல் இருக்கவோ, வெறுக்கவோ செய்யலாம். அதற்கு அங்கிள் என்ன தவறு பண்ணினார்? நாங்கள் இந்த அளவிற்கு கஷ்டப்பட்டு இந்த இடம்வரை கொண்டு வந்திருக்கும் ப்ராஜெக்டை சீட்டு அரண்மனையைப் போல இப்போ தகர்க்கப் பார்க்குறியே?”

“பாருங்க உண்ணி அத்தான்” - சுதா இடையில் புகுந்து சொன்னாள். “நீங்க மடத்தனமா பேசுறீங்க. தனிப்பட்ட விஷயங்களையும், வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் ஒன்றோடொன்று கலந்து குழப்பிப் பேசுற அளவுக்கு நான் முட்டாள் இல்லை. என்னை அப்படிப்பட்ட ஒரு நடுத்தரப் பெண்ணாகப் பார்க்க முயற்சி பண்றீங்களா? இந்த ப்ராஜெக்ட் விஷயத்தில் எனக்கு சில கருத்துக்கள் இருக்கின்றன. கம்பெனி இனி பயணிக்க வேண்டிய புதிய துறைகளைப் பற்றியும் எனக்கு தெளிவான பார்வை இருக்கு. அவற்றையெல்லாம் நான் ஏற்கனவே சொல்லிட்டேன். இனி வேண்டுமென்றால் நீங்கள் இரண்டு பேரும் அந்தக் கருத்துக்களைக் காற்றில் பறக்க விடலாம். அவ்வளவுதான். அது உங்களுடைய விஷயம். ஆனால், என்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்க உங்கள் யாருக்கும் அதிகாரம் இல்லை. அது நடக்கவும் போவதில்லை.”

“சரி.. ஒருவேளை இந்த திட்டத்துடன் முன்னோக்கிச் செல்ல அங்கிள் முடிவு எடுத்தார் என்றால்..?”

“நல்லதுதானே! ஆனால் அதற்குப் பிறகு நான் இந்த கம்பெனியில் இருக்க மாட்டேன். ஒரு போர்ட் மீட்டிங்கில்கூட கலந்து கொள்ளாமல் பதவியை விட்டுப் போன வைஸ் சேர்மன் - அது ஒரு ரெக்கார்டாக இருக்கும் இல்லையா? நம்முடைய கார்ப்பரேட் உலகத்தில்..”

“அதாவது... நீ திரும்பிச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறாய் என்று அர்த்தம்.”

“அப்படியொண்ணும் இல்ல.”

“சரி.. இருக்கட்டும். ஒண்ணு கேட்கட்டுமா? இங்கு இந்த ப்ராஜெக்ட் மட்டும்தான் பிரச்சினையா? இல்லாவிட்டால் வேறு ஏதாவது இருக்கிறதா?”

உண்ணியின் முகத்தில் ஏதோ பெரிய சந்தேகங்கள் திரண்டு நிற்பதை அவள் பார்த்தாள்.

“அப்படின்னா..?” - அவன் கேட்டாள்.

“இல்ல.. ஒருவேளை, அந்த ப்ராஜெக்ட் வேண்டாம் என்று தீர்மானித்தால்..?”

புரிந்து கொள்ள முடியாமல் அவள் அவனுடைய கண்களையே உற்றுப் பார்த்தாள். சற்று சிவப்பு நிறம் தெரிந்த அந்த கண்களில் ஏதோ பெரிய ரகசியத்தின் நிழல் மறைந்து கிடக்கிறதோ? ஒரு தராசின் இரண்டு தட்டுகள்? தெரியாமல் அவற்றில் ஒன்றில் நான் ஏறி அமர்ந்திருக்கிறேனோ? இன்னொரு தட்டில் எதை வைத்தால் ஊசி நேராக இருக்கும்? - அவள் அதற்காகத்தான் அதைப் பார்த்தாள்.

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல” - அவள் சொல்லி ஒதுங்கிக் கொண்டாள்.

“அதுதான் இங்கே இருக்கிற குழப்பமே! எதிர்காலத்தைப் பற்றிய உன்னுடைய முடிவைத் தெரிந்து கொள்ள இனிமேல் நான் யாரிடம் போய் கேட்க வேண்டும்? யாரைப் பார்க்க வேண்டும்? பாழூர் வரை போகணும் என்றால், அதற்கும் நான் தயாராகவே இருக்கிறேன்.”

“எதற்கு?”

பணியாள் உணவைக் கொண்டு வந்தான். அவன் தட்டுகளை எடுத்து வைத்தபோது, தானே பரிமாறிக் கொள்வதாக உண்ணி அவனிடம் கை மூலம் சைகை காட்டிச் சொன்னான். பணியாள் போனபிறகு, மெதுவாக அவன் பரிமாற ஆரம்பித்தான்.


“நான் பரிமாறுகிறேன்” - சுதா சொன்னாள். “எனக்கு சைவ உணவு பொருட்கள் மட்டும் போதும்.”‘

உண்ணிக்கு சிரிப்பு வந்தது.

“சைவத்திற்கு மாறிவிட்ட ஒரு ஆளுக்கு இந்த அளவிற்கு கோபம் தேவையே இல்லை.”

அந்த நகைச்சுவையைக் கண்டுகொள்ளாமல் அமைதியாக அவள் உணவு சாப்பிட ஆரம்பித்தாள்.

உண்ணி தொடர்ந்து சொன்னாள்.

“சுதா, எதற்கு என்று சற்று முன்பு கேட்டாய் அல்லவா? அதற்கு பதில் சொல்றேன். மிகவும் சிம்பிள். ஏனென்றால் ஐ நீட் யூ. எனக்கு நீ வேணும். முழுசா. ஒரு அர்த்தத்தில் கூறுவதாக இருந்தால், அந்தப் பழைய உன்னை.”

அதை எதிர்பார்த்திருந்ததைப்போல, ஒரு ரொட்டித் துண்டைப் பிரித்தெடுத்த சுதா நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தாள்.

“மீண்டும் ஒரு காதல் கதையை ஆரம்பிக்கக்கூடிய வயது தாண்டிவிட்டது. அதை மறந்துவிட்டதுபோல் தோணுகிறது.”

“சரிதான். டீன் ஏஜுக்கென்றே உரிய செயல்கள் எப்போதோ முடிந்துவிட்டன. உண்மையாக சொல்லப் போனால் அந்தக் காலக்கட்டத்தில் உள்ளுக்குள் பலமான உணர்ச்சிகள் எதுவுமே இல்லாமல் சிறிது காலம் நாம் என்னென்னவோ செய்து கொண்டிருந்தோம். ஒன்று சேர்ந்து வாழ்வதற்காக யாரோ உண்டாக்கிய இரண்டு பேருக்கும் இடையில் நடந்த ஒருவகையான கோமாளித்தனமான விளையாட்டுக்களாக அவை இருந்தன இல்லையா? மிகவும் ஆழமான இழப்புணர்வு தோன்றாமல் இருந்ததற்கும் ஒருவேளை அதுதான் காரணமாக இருக்க வேண்டும்.”

“தோன்றவில்லை என்று யார் சொன்னது?”

கரண்டியைத் தட்டில் வைத்த அவன், எதுவும் புரியாததைப்போல விழித்தான்.

“சுதா நீ என்ன சொன்னே?”

“என்னைப் பொறுத்தவரையில் அந்தப் பிரிவு மிகவும் ஆழமான ஒன்றுதான். சிறிது காலத்திற்காவது அதன் வேதனையை மனதில் வைத்துக்கொண்டு திரிந்தேன்.”

“அப்படியா?” அவன் திகைத்துப் போய் உட்கார்ந்து விட்டான்.

“என்ன, அதில் சந்தேகம் இருக்கா? நம்பிக்கை இல்லையா? இனி நான் அதற்கான சான்றுகளைத் தரவேண்டுமா? எப்படிப்பட்ட சான்றுகளைத் தந்தால்  நீங்க புரிஞ்சிக்குவீங்க?” - அவளுடைய குரல் உயர்ந்தபோது அடுத்த நாற்காலிகளில் உட்கார்ந்திருந்த இரண்டு மனிதர்கள் தலையைத் திருப்பிப் பார்த்தார்கள்.

“சுதா” - உண்ணி பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டான். “ஒருவேளை.. எனக்கு.. என்ன என்று தெரியவில்லை.. கொஞ்சமும் புரியவில்லை.”

நீண்ட நாட்களாக மனதிற்குள் இருப்பவற்றையெல்லாம் கூறி விடுவதற்கான வழி திறந்து விட்டிருப்பதைப்போல அவள் உணர்ந்தாள். சுதா ஆவேசத்துடன் தொடர்ந்து சொன்னாள்.

“டீன் ஏஜர்களாக இருந்த காலத்தில் விடுமுறை வரும்போது பாய்ந்து ஓடிவந்தது ஒரே ஒரு ஆளைப் பார்ப்பதற்கு மட்டும்தான். ஆனால், சில மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு, தொலைபேசி மூலம், கடிதங்கள் மூலம் தொடர்பு கொண்டிருந்தபோது, எங்கோ ஏதோ ஒன்றின் குறைவை என்னால் தெளிவாக உணர முடிந்தது.”

“நான் மிகவும் சுயநலமாக இருந்தேன். அப்படித்தானே?”

“சுயநலமாக மட்டுமல்ல; உண்ணி அத்தான், என் விஷயத்தில் நீங்க இன்னும் கொஞ்சம் உரிமையாளரைப் போல இருக்கக்கூடாதா என்று பல நேரங்களில் நான் ஆசைப்பட்டிருக்கிறேன். நான் எப்போதும் உங்களுக்கு சொந்தமான பெண்ணாகத்தானே இருந்திருக்கிறேன்? உங்களுக்கு மட்டுமே என்று இருக்கும் பெண் பிறகு என்ன? ஆனால் உரிமையாளராக இருப்பது என்றால் அதிகாரங்களுடன் கைப்பற்றிச் செல்வது அல்ல. என்னுடையது, எனக்கு மட்டுமே சொந்தமானது என்ற பலமான உணர்வு. அதை சிறிய அளவில் வெளியே காட்டினாலும் அதனால் பிரச்சினையில்லை. ஆனால் மிகவும் அமைதியாக அதைச் செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியம். அது ஒரு மிகப்பெரிய சுவாரசியமான விஷயம். பெரிய பாதுகாப்பு உணர்வை அது எனக்குத் தரும். குறிப்பாகத் தாய் இல்லாமல் வளர்ந்த பெண்ணுக்கு..”

அவளுடைய முகத்திலிருந்து கண்களை எடுக்காமல் எதை வேண்டுமானாலும் கேட்பதற்குத் தயாராக இருப்பது மாதிரி உண்ணி காத்திருந்தான்.

“டெல்லியில் படிக்கும்போது நாங்கள்... ஹாஸ்டலில் இருந்த தோழிகளுக்கிடையே ஆண் நண்பர்களின் கடிதங்களை யாருக்கும் தெரியாமல் ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொள்வது என்பது சாதாரணமாக இருந்த ஒரு பழக்கம். சொல்லப் போனால், யாருக்கும் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் உறுதிப்படுத்தப்பட்ட ஒரேயொரு உறவு அவர்கள் மத்தியில் என்னுடையது மட்டும்தானே? எனினும், உண்ணி அத்தான், உங்களுடைய கடிதத்தை மட்டும் மற்றவர்களிடம் காட்டுவதற்கு என்ன காரணத்தாலோ பல நேரங்களிலும் எனக்கு தயக்கமாக இருந்தது. அந்த வயதில் எங்களுக்குத் தேவையாக இருந்த ஏதோ ஒன்று அந்தக் கடிதங்களில் எந்தச் சமயத்திலும் இருந்தது இல்லை. பிறகு- அவ்வப்போது வேண்டுமென்றே மலையாளத்தில் திணிக்கப்படும் சில வார்த்தைகளை என்னுடைய நெருங்கிய தோழியான அந்த வங்காளப் பெண் அபர்ணா ஒருநாள் மொழிபெயர்த்துக் கூறும்படி சொன்னாள். அதை சரியாக மொழிபெயர்த்தபோது, அவள் வெட்கப்பட்டு குனிந்து கொண்டாள். உண்ணி அத்தான், அதுதானே உண்மையான நீங்கள்? எம்.ஸி.பி. என்று கூறுவது அப்படியொன்னும் போரடிக்கும் ஒன்றல்ல. எனினும் அபர்ணா ஒருநாள் கூறியது என்ன தெரியுமா? ‘உண்மையைச் சொல்லட்டுமா சுதா! தவறாக நினைக்கக் கூடாது. என் பார்வையில் நீங்கள் இரண்டு பேரும் கொஞ்சம்கூட சேர முடியாது என்று தோன்றுகிறது’ என்றாள் அவள். அப்போது ஏதோ தமாஷாகச் சொல்லி அவள் விஷயத்தை மாற்றப் பார்த்தாள்.”

எதுவும் சொல்ல முடியாமல் அவள் தலையைக் குனிந்து கொண்டாள்.

“பிறகு.. நேரில் பார்க்கும்போது காட்டப்படும் அந்த வெறி... பல நேரங்களில் அவை மிகவும் ஆதிகால வெளிப்பாடாக இருந்தன. ஒருவகையில் மிருகத்தனமான உணர்ச்சி... வீட்டில் ஏதாவதொரு இருட்டான மூலையில் சூழ்நிலையை உண்டாக்கி ஒரு கட்டி அணைத்தல்.. முத்தம் தரல்.. தேவையற்ற இடங்களிலெல்லாம் கைகளை ஓட விடுதல்.. நான் இன்னும் கொஞ்சம் சம்மதித்திருந்தால், ஒன்றைக்கூட மீதம் வைக்காமல் எல்லாவற்றையும் அப்போதே செய்து முடித்திருப்பீர்கள். அப்படித்தானே! அந்தக் கேவலமான அவசரம் எதற்காக? வெளியே காட்டிக் கொள்ளவில்லையென்றாலும், எனக்கு அந்த செயல்கள் மீது எந்த அளவிற்கு வெறுப்பு இருந்தன என்று தெரியுமா? வலிய கொடுக்கப்படும் முத்தத்தில்கூட நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திக்கக்கூடிய காதலனின் ஆழம் தெரியாத காதல் இல்லாமல் போனது அல்லவா?


அந்தச் செயல்கள் ஆண்மைத் தனத்தைக் காட்டுவதற்காகவா? இல்லாவிட்டால் இளம்பெண்களுக்கு அந்த வயதில் அவையெல்லாம் பெரிய விருப்பமாக இருக்கும் என்று தவறாக கணக்கு போட்டதன் விளைவா? எது எப்படி இருந்தாலும் உண்ணி அத்தான், உங்களுக்கு ஏதோ மனக்கோளாறு இருக்கிறது என்று நான் நினைக்க ஆரம்பித்துவிட்டேன். ஒருவேளை, இந்த அளவிற்கு நெருங்கிய உறவு, வெறுப்பைத் தரக்கூடிய ஒன்றாக இருக்கலாம். அபர்ணா கூறியதைப்போல, காதலின் இனிமையையும் ஆழத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். பிரிவினால் உண்டாகும் துன்பத்தை அப்போதுதான் தெரிந்து கொள்ள முடியும். எதுவாக இருந்தாலும்.. நமக்கு இடையில் இல்லாமலிருந்தது காதல் மட்டும்தான். இதை முகத்தைப் பார்த்து சொல்ல வேண்டியதிருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. உண்ணி அத்தான், நீங்கள்தான் அதைக் கூறும் அளவிற்கு என்னைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்கள்.”

அவற்றையெல்லாம் கூறி முடித்த நிம்மதியுடன் அவள் நீண்ட பெருமூச்சை விட்டாள்.

“அதெல்லாம் ஏனோ எனக்குத் தெரியல” - உண்ணி தோளைக் குலுக்கினான். “என்னைப் பற்றி இதுவரை நான் அந்த அளவிற்கு ஆழமாக ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும் என்று நினைத்ததில்லை. அது தேவையென்று தோன்றியதில்லை. அவ்வளவுதான். நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்படக்கூடியவன் என்ற விஷயம் எனக்கு அப்போதே தெரியும். பிறகு.. அந்த சுயநலமும், ஆசைப்படுவதைக் கைப்பற்ற வேண்டும் என்ற பிடிவாதமும்.. ஒருவேளை, சுதா, நீ கூறுவது சரியாக இருக்கலாம். இல்லாவிட்டால் தவறாகவும் இருக்கலாம். ஆனால் அவை அனைத்தும் கடந்துபோன விஷயங்கள். எதிர்காலத்தைப் பற்றி எனக்கு சந்தேகமே இல்லை. எனக்கு நீ வேணும். ஒரு முப்பத்தொன்பது வயது மனிதனின் நடவடிக்கைகளில் சந்தேகம் தோன்ற வேண்டிய அவசியமே இல்லை.”

“வேண்டாம் உண்ணி அத்தான். அது இரண்டு பேருக்கும் சரியாக இருக்காது” - சுதா தலையை ஆட்டினாள். “அந்த கட்டமெல்லாம் எப்போதோ முடிந்துவிட்டது.”

“இன்னொரு முறை நாம் ஏன் முயற்சி பண்ணி பார்க்கக்கூடாது?”

“வேண்டாம்... அந்த சோதனை வேண்டாம்.. அது சரியாக இருக்காது..” - அவள் உரத்த குரலில் திரும்பத் திரும்ப கூறினாள்.

“எனக்கு கொஞ்சம்கூடப் புரியவில்லை.”

ஒரு நிமிடம் தயங்கிவிட்டு, சுதா முகத்தைத் தாழ்த்திக் கொண்டாள்.

“என் உடல் முழுவதும் அழுக்காகி இருக்கிறது. அன்று நான் எல்லாவற்றையும் மனம் திறந்து சொன்னேனே!”

“அது கடந்துபோன விஷயங்கள். உடலைப் பற்றி நான் இப்போது தீவிரமாக சிந்திப்பதே இல்லை.”

“உடல் மட்டுமல்ல, மனமும் அழுக்காகி இருக்கிறது. பல நேரங்களில் தேவையற்ற, அசிங்கமான, சில ஆசைகளுக்கு அடிபணிந்த மனமும் கரி பிடித்த சுவரைப்போலத்தான். மனதின் அந்த அழுக்கை எந்த சமயத்திலும் நீக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.”

“உண்மையான காரணம் எனக்குத் தெரியும்” - உண்ணியின் முகம் இருண்டது. “என்னுடைய அந்தப் பெரிய தவறு.. ஆனால், நம்பு. அது வேண்டுமென்றே செய்யப்பட்டது அல்ல. அப்போதைய சூழ்நிலைகளில் எப்படியோ அது நடந்துவிட்டது. அதை அதற்கு மேலும் விளக்க விரும்பவில்லை. இப்போதும் ஆச்சரியம் தோன்றுகிறது. தெரேஸா எப்படி என்னுடைய வாழ்க்கைக்குள் நுழைந்தாள் என்ற விஷயம். எந்த விதத்திலும் பொருத்தமான குணங்களைக் கொண்டவர்களாக நாங்கள் இல்லை. ஒருவேளை, என்னுடைய அந்த துணிச்சல் குணம் காரணமாக இருக்கலாம். அவளும் அதே மாதிரியான குணத்தைக் கொண்டவளாக இருந்தாள். அந்த வகையில் திடீரென்று எடுத்த தேவையற்ற ஒரு முடிவு அது. என்னை தந்தையைப் போல வளர்த்து ஆளாக்கிய அங்கிளிடம்கூட ஒரு வார்த்தை சொல்லாமல் நான் செய்த முட்டாள்தனமான செயல் அது. ஒரு இணக்கமும் இல்லாத வெளிநாட்டைச் சேர்ந்த பெண்..”

“அது இருக்கட்டும். எனக்கு முன்னால் இப்போது தெரேஸா இல்லை. நான் அவளுடைய படத்தைக்கூட பார்த்தது இல்லை. இப்போது அவள் எனக்கு ஒரு பிரச்சினையாக வரப்போவதும் இல்லை.”

“பிறகு? பிறகு என்ன பிரச்சினை என்று சொல்லு...”

அப்போது பணியாள் வந்தான். பாத்திரங்களை எடுத்துச் செல்ல ஆரம்பித்தான்.

“சுதா, உனக்கு என்ன டெஸர்ட் வேணும்?”

“எதுவும் வேண்டாம். இல்லாவிட்டால்.. ஒரு காபி. கருப்பு காபி..”

பணியாள் போவதற்காக அவள் காத்திருந்தாள். பிறகு எதையோ நினைத்துக்கொண்டு அவள் உரத்த குரலில் சொன்னாள்:

“வேண்டாம் உண்ணி அத்தான்... இன்னொரு சோதனை வேண்டாம். எனக்கு அதற்கான சக்தி இல்லை. ஆர்வமும் இல்லை.”

“அந்த அளவிற்கு தைரியம் இல்லாமல் இருப்பது தேவையா?”

“ஒரு டைவர்ஸி என்பதைவிட ஸ்பின்ஸ்டர் என்ற வார்த்தை கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. குறிப்பாக- நம்முடைய சமூகத்தில். மலையாளத்தில் சொல்வதாக இருந்தால்-கன்னி. உலகத்திற்கு முன்னால், மூன்று பிள்ளைகளைப் பெற்ற பழைய சினேகிதி ஜானுவிற்கு முன்னால் நான் இப்போதும் கன்னிப்பெண்தான். அப்படி அழைக்கப்படுவதற்காக ஒரு வெர்ஜினிட்டி சோதனையோ, மெடிக்கல் சர்ட்டிபிகேட்டோ நம்முடைய நாட்டில் தேவையில்லையே! உண்மையிலேயே அது நிம்மதியான விஷயம். இல்லாவிட்டால் அங்கும் நான் கீழே விழுந்திருப்பேன். இல்லையா?”

அவளுடைய குரலில் இனம் புரியாத ஒரு வேதனை தங்கியிருப்பதை உண்ணியால் புரிந்துகொள்ள முடிந்தது.

சிறிது நேரத்திற்கு இரண்டு பேரும் எதுவும் பேசாமல் இருந்தார்கள்.

“பில்லை செலுத்திவிட்டு லிஃப்டை நோக்கி நடக்கும்போது உண்ணி சொன்னான்.

“நமக்கு எங்கோ தவறு நடந்துவிட்டது இல்லையா சுதா? எல்லாவற்றையும் மீண்டும் ஒருமுறை சரி பண்ணிக் கொண்டு போக முடியுமா என்று பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.”

“தேவையற்ற ஆசை” - சுதா ஒரு விரக்தி கலந்த சிரிப்பு சிரித்தாள்.

லிஃப்ட் வந்தது. அந்த சிறிய கூட்டின் தனிமையில் சாய்ந்து நின்றுகொண்டு சுதா சொன்னாள்.

“ஒருவேளை... உண்ணி அத்தான், உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். முன்பு நம்முடைய ஜாதகங்களை குறைந்தபட்சம் நான்கைந்து ஜோதிடர்களிடமாவது அப்பா கொண்டு போய் பார்த்திருக்கிறார். அந்த ஜாதகங்கள் சேரவே சேராது என்று எல்லோரும் உறுதியான குரலில் சொல்லிவிட்டார்கள். ஒரு ஆள் மட்டும் பரவாயில்லைன்னு சொன்னார். மற்ற விஷயங்களெல்லாம் சரியாக இருந்தால், அந்த அளவிற்கு விருப்பம் இருந்தால், ஓரளவுக்கு சேர வாய்ப்பு இருக்குன்னு அவர் சொன்னார். என்னவெல்லாம் நிபந்தனைகள்.. இல்லையா? போன வருடம்தான் எனக்கு அது தெரியும். ஆனால் கிரகங்கள் அந்த விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால், ஜோதிடர்கள் கூறுவதற்கு முன்பே, நாம் இருவரும் சிறிதும் சேர மாட்டோம் என்பதை நான் அறிந்திருந்தேன்.”

ஆரஞ்சு நிற வெளிச்சம் விழுந்திருந்த ஈரமான சாலையில் வண்டியை ஓட்டிப் போகும்போது, உண்ணி வெறுமனே சந்தோஷமாக இருப்பது மாதிரி காட்டிக் கொண்டான்.


“இதைத்தான் வாழ்க்கை வாழ்க்கைன்னு சொல்றாங்க. இதோ... இந்த சாலைகளைப் போலத்தான். தேவையில்லாத வளைவுகளும் திருப்பங்களும் அருகில் நெருங்கும்போது மட்டுமே பார்க்க முடிகிற சிறிய குழிகளும்.. பிறவியில் ஒன்றாக சேர்வதற்கு படைக்கப்பட்ட இரண்டு பேர் இறுதியில் நடுத்தர வயதை நெருங்கும்போது, தாங்கள் சேர்வதற்கு வாய்ப்பில்லை என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். நல்ல தமாஷ் இல்லையா?”

அவனுக்கு சிரிப்பு வந்தது. குலுங்கிக் குலுங்கி சிரித்தான். சிரித்து சிரித்து முகம் அளவுக்கும் அதிகமாக சிவந்தது. இறுதியில் அது ஒரு நீண்ட இருமலில் போய் முடிந்தபோது, சுதா கையை நீட்டி மெல்ல தலையில் தட்டினாள். இருமல் நின்றது.

“சிறு வயதில் பாட்டி சொல்லித் தந்த விஷயம்.”

தொடர்ந்து வெளிச்சம் இல்லாத சாலைகள் வழியாகக் கார் போய்க் கொண்டிருந்தபோது, மிகவும் அருகில் உண்ணியின் குரல் கேட்டது.

“அப்படின்னா.. சுதா, இனி உன் எதிர்கால திட்டம்?”

அவள் சற்று நகர்ந்து உட்கார்ந்தாள். இருக்கையில் சாய்ந்து கொண்டு மெதுவாகக் கண்களை மூடினாள்.

ஒரு வருடத்தின் இறுதியாக இருந்தது. இரவில் தோழிகள் அனைவரும் புது வருடத்தை வரவேற்பதற்காக கூட்டமாகச் சேர்ந்து எங்கோ போனபோது, அவள் மட்டும் அவர்களிடமிருந்து விலகி நின்றாள். ஜன்னலுக்கு அருகில் மெல்லிய கண்ணாடி வழியாக வெளியே பனி விழுந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். சுருக்கங்கள் விழுந்திருந்த நரைத்த ஆகாயத்திலிருந்து விழுந்து கொண்டிருந்த பனித்துளிகள் கீழே குவிந்து கிடக்க, அதில் நிலவு தெரிந்தது. மாலை நேரத்தில் யாரோ கஷ்டப்பட்டு வெட்டி உண்டாக்கிய, இந்தப் பக்கமாக வரும் சிறிய ஒற்றையடிப் பாதை மீண்டும் மூடப்பட்டுவிட்டது. சிறிய ஒரு காற்று கடந்து சென்றபோது, பனியின் ஒரு மேல்படலம் அதோடு சேர்ந்து சென்றது. இந்த நிலவு கரைந்திருக்கும் பனியில் ஒரு வருடமும்கூட முடிந்து போகிறது அல்லவா? தோழிகள் இப்போது அதன் இறுதி நிமிடங்களை எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று... அப்போது தேவாலயத்தின் மணிகள் ஒன்று சேர்ந்து முழங்குகின்றன. இரவைக் கிழித்துக்கொண்டு பெரிய ஒரு ஓசை.. துறைமுகத்தில் நங்கூரம் இட்டிருக்கும் கப்பல்களின் நீண்ட சைரன் ஒலி.. யாரோ உரக்க அழைக்கிறார்கள். தெளிவற்ற தொண்டையில் ஏராளமான அபஸ்வரங்களின் ஒரு கூட்டுப் பாட்டு. கோலம் வரையப்பட்ட தரையில் ஆடிக்கொண்டிருப்பவர்களின் மென்மையான காலடிகளுக்கு மத்தியில், அமைதி நிறைந்த குளிர்ந்த காற்றுடன் புதிய ஒரு வருடம் கடந்து வந்து கொண்டிருக்கிறது.

“இல்லை. இதைப்பற்றி இனிமேல் நினைப்பதற்கில்லை” - சுதா முணுமுணுத்தாள்.

இப்போது உள்ளுக்குள் இருப்பது கைலாசத்தின் ஒரு இரவு மட்டுமே. நேரில் பார்க்காத, கனவுகளில் பல தடவை கண்டு ஆசைப்பட்ட இரவு. சுற்றிலும் பரந்து கிடக்கும் பனியில் நிலவு வெளியே வருகிறது. முழுவதும் வெள்ளைநிறத் தோற்றம். தூய வெள்ளை நிறத்தில் இருக்கும் ஆடைகள். வெளுத்த உரோமத்தாலான சட்டை. என்னுடைய நீளமாக வளர்க்கப்பட்டிருக்கும் முடியில் நரை விழுந்திருக்கிறது. நெற்றியில் திருநீறு. அடர்த்தியான பனி வழியாக கால்களை நகர்த்தி நடக்கும்போது, தூரத்தில் இமயமலையின் தலையில் வெள்ளிக் கிரீடத்தின் பிரகாசம் தெரிகிறது. பாதிக்கு மேல் உறைந்து போய்விட்ட நீர் அருவிகள் வழியாகப் பெரிய பெரிய பனிக் கட்டிகள் கீழே விழுந்து கொண்டிருக்கின்றன. அருவியைக் கடக்கும்போது, காலுக்குக் கீழே பனிப்பாறைகளில் கால் வழுக்கி விடாமல் இருக்க படாதபாடுபடுகிறேன்.

இந்த நிலவும் பனிப்பரப்பும் வெளுத்த பள்ளத்தாக்கும் அமைதியின் வடிவங்கள். குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும் உதடுகள் முன்பு எப்போதோ மறந்து போய்விட்ட வரிகளை உச்சரிக்க தொடங்குகின்றன.

வெள்ளைக் கம்பளி போர்த்திய அமைதியான அடிவாரம். அங்கு நிலவு எந்த சமயத்திலும் மறைவது இல்லையே! வேறொரு இடத்தில் இருந்து வழி தேடி வரும் பயணிகள் இந்தக் குளிர்ந்த- வெண்மை படர்ந்திருக்கும் பள்ளத்தாக்கு வழியாக நடந்து மேலே செல்கிறார்கள். அப்போது இமயமலையின் வெள்ளிக் கிரீடத்தின் ஒளி நெருங்கி நெருங்கி வருகிறது. வெள்ளைப் பட்டில் மூடப்பட்டிருக்கும் இரண்டு கைகள் ஒன்றோடொன்று சேர்வதற்காக நீண்டு வருவதைப்போல...

“என்ன, தூங்குறியா?” - காதில் உண்ணியின் குரல் வந்து விழுந்தபோது, அவள் அதிர்ச்சியடைந்து கண் விழித்தாள்.

“ஏய்.. ஒண்ணுமில்ல” அவள் இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்தாள். இடம் மாறிவிட்டிருந்த முண்டை சரி பண்ணினாள். கண்களிலிருந்து தூக்கக் கலக்கத்தைக் கசக்கி விரட்டினாள். வெளிச்சம் விழுந்து கொண்டிருந்த சாலையையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நான் ஏதோ ஞாபகத்தில் மூழ்கி விட்டேன்” - அவள் மெதுவான குரலில் சொன்னாள். “உண்ணி அத்தான், நீங்க என்னவோ சொல்லிக் கொண்டு இருந்தீங்க. அதற்கிடையில்..”

“இல்ல.. சுதா, உன்னுடைய எதிர்கால திட்டம் என்னன்னு கேட்டேன்.”

“ஓ.. அதுவா?” அவள் சிரிக்க முயற்சித்தாள். “எனக்கு அதைப்பற்றி நிச்சயமா தெரியவில்லை. இருந்தாலும், இப்போ மனசுக்குள் இருப்பது என்ன என்பதை உங்களிடம் மட்டும் சொல்றேன். அப்பாவுக்குத் தெரிய வேண்டாம். மிகவும் கவலைப்படுவார். இன்னும் சில நாட்கள் இங்கேயேதான் இருக்கப் போறேன். அது முடிந்த பிறகு, ஒருநாள் காலையில் ராமன்குட்டி கதவைத் திறக்குறப்போ, டீப்பாயில் ஒரு கடிதம் இருக்கும்..”

“என்ன?” - உண்ணி அதிர்ச்சியடைந்து திரும்பினான். ஒரு பெரிய முனகலுடன் வண்டி நின்றது.

“பயப்பட வேண்டாம்” - சுதா உரத்த குரலில் சிரித்தாள். “ஒரு நீண்ட பயணம்.. வடக்கு நோக்கி.. எவ்வளவு நாட்களுக்கு என்று தெரியாது. ரிஷிகேஷ், ஹரித்துவார், பத்ரி.. முடிந்தால் மானஸரோவருக்கும்.. சரியாகக் கூற முடியாது. போவதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன. எவ்வளவு நாட்கள் ஆகும் என்று தெரியாது. ஒருவேளை... சில நாட்கள் கடந்த பிறகு... அங்கும் வெறுப்பு தோன்றலாம். அப்போது... ஒருவேளை திரும்பி வரவேண்டும் என்று தோன்றலாம். ஒன்று இங்கு.. இல்லாவிட்டால், திரும்பவும் பழைய இடத்திற்கு...”

“இங்கு வந்தால் போதும். நான் இங்கு எப்போதும் இருப்பேன். உன்னுடைய பழைய முறைப் பையனுக்கு அந்த சமயத்தில் வயதாகிவிட்டிருக்கும். அவ்வளவுதான். ஒருவேளை யாருக்குத் தெரியும்? வயதான பிறகுதான் உறுதியான முடிவை எடுக்கக்கூடிய ஆற்றல் நம்மிடம் இருக்குமோ என்னவோ? ஒரு டைவர்ஸியைப் பற்றி நினைத்துப் பார்ப்பதற்கு சக்திகூட இல்லாமல் இருக்குறப்போ, ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்று நீ முடிவு எடுத்தால்..?”

அப்படிச் சொன்னது தனக்கு மிகவும் பிடித்திருப்பதைப்போல உண்ணி மீண்டும் உரத்த குரலில் சிரிக்கத் தொடங்கினான்.

சுதா எதுவும் கூறவில்லை. காரின் எரிந்து கொண்டிருந்த கண்கள் இருட்டைத் துளைத்துப் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தவாறு அதே நிலையில் அவள் உட்கார்ந்திருந்தாள்.

மிகுந்த களைப்பு தோன்றியது. சிறிது நேரம் கழித்து, மெதுவாக இருக்கையில் சாய்ந்து கொண்டு அவள் கண்களை மூடினாள். தூக்கத்தின் கனம் கண் இமைகளை அழுத்தியது.

அப்போது தோளில் ஒரு கை வந்து விழுந்ததைப்போல அவளுக்குத் தோன்றியது. அதன் வெப்பத்தில் அவள் தூங்க ஆரம்பித்தாள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.