Logo

வசுந்தரா

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 7469
vasundara

சுந்தராவின் வாழ்க்கையில் நடைபெற்றது ஒரு சாதாரண நிகழ்ச்சியல்ல. அப்படிச் சாதாரண நிகழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் யாரும் கொண்டிருக்கவில்லை. யாருடைய வாழ்க்கையிலாகட்டும், அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற ஏதாவது ஒரு சம்பவம், ஒரு கதாசிரியரின் கண்ணில் பட்டுவிட்டால், அந்தச் சம்பவத்தை அந்த எழுத்தாளர் ஒரு கதை வடிவத்தில் எழுதி என்றாவதொரு நாள் வாசகர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார் என்பது மட்டும் நிச்சயம்.

ஆனால், கதாசிரியர் கடவுளைப் போல எங்கும் பரவியிருப்பவராக இல்லாததால், உலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பெரும்பாலான சம்பவங்கள் அவன் பார்வையில் படாமலே போய் விடுகின்றன. அதனால் வாசகர்கள் பலரும் அந்த சம்பவங்களைப் பற்றி கடைசி வரை தெரிந்து கொள்ள முடியாமலே ஆகிவிடுகிறது. இந்த விஷயத்தைப் பற்றி சிந்தித்துப் பார்த்ததாலோ என்னவோ ஜாவேத் எங்களிடம் ஒருமுறை சொன்னான், “ஒரு கதாசிரியருக்கு தலையின் பின்பக்கமும் கண்கள் இருக்க வேண்டும்.”

அப்போது அவனுடைய சகோதரி வசுந்தரா புத்தகங்களையும் மாத இதழ்களையும் தூசி தட்டி அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள். இரண்டு அறைகள் மட்டுமே இருக்கின்ற அவர்களின் வீட்டில் புத்தகங்களைக் கவர்ந்து இழுக்கிற மாதிரி ஏதோவொன்று இருக்கிறது என்று அடிக்கடி கோகுல் கூறுவதுண்டு. எப்போது போனாலும் இதுவரை நாம் வேறெங்கும் பார்த்திராத பல புத்தகங்கள் அங்கு இருப்பதை நாம் பார்க்கலாம். ஜாவேத் மேலட்டை கிழிந்துபோன, பைண்ட் செய்யப்பட்ட, பைண்ட் பிரிந்த புத்தகங்களை மட்டுமே எப்போதும் வாங்கிக் கொண்டு வருவான். புத்தகக் கடைகளுக்குப் புதிய நூல்கள் ஏதாவது வந்தால், அவை பழைய புத்தகங்களாக ஆகும் வரை அவன் காத்திருப்பான். இது ஒருபுறமிருக்க, மற்ற பலரையும்விட அவனுக்குப் பல விஷயங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தது என்பது ஆச்சரியமான ஒரு விஷயம்.

“ஜாவேத்தோட அப்பா கூட இப்படித்தான்”- மரியா சொன்னாள். “ஆணாக இருந்தாலும், பெண்கள் விஷயத்தைப் பற்றி பெண்களை விட நல்லா தெரிஞ்சு வச்சிருக்கிற ஆளு அவனோட அப்பா.”

மரியாவின் வயிற்றுக்குள்ளிருந்து வசுந்தராவை வெளியே எடுத்தது ஜாவேத்தின் தந்தைதான். ஃபெர்னாண்டெஸ் மாஸ்ஸியை நான் பார்த்தது இல்லை. நான் அவருடைய குடும்பத்தைத் தெரிந்து கொள்வதற்கு முன்பே அவர் இந்த உலகத்தை விட்டு நீங்கி விட்டார். இதயம் வீங்கி அவர் மரணத்தைத் தழுவினார் என்று மரியா சொல்லித்தான் எனக்கே தெரியும். உட்கார்ந்திருக்கும் அறையிலிருந்து சமையலறைக்குப் போகும் வழியின் வாசலுக்கு மேலே மாஸ்ஸியின் ஒரு பழைய புகைப்படம் இருப்பதைப் பார்க்கலாம். தோள்கள் ஒடுங்கிய ஒரு சாம்பல் வண்ண கோட்டையும் சேட்டு தொப்பியையும் அணிந்திருக்கும் மாஸ்ஸியைப் பார்க்கும்போது வரலாற்றுப் புத்தகங்களில் எப்போதோ நாம் பார்த்திருக்கும் சுதந்திரப் போராட்ட வீரரொருவரின் சாயல் தெரியும். அந்தப் புகைப்படம் அப்படியொன்றும் மிகப் பழையதல்ல என்று மரியா எங்களிடம் சொன்னாள். மரணமடைவதற்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் பறவைகள் மருத்துவமனைக்கு முன்னால் இருக்கும் ஒரு கூலி புகைப்படக்காரன் எடுத்த புகைப்படமே அது. மாஸ்ஸி மரணமடைந்த அடுத்த நாளிலிருந்து அந்தப் புகைப்படத்தின் நிறம் கொஞ்சம் கொஞ்சமாக மங்கலாக ஆரம்பித்தது. மரத்தால் ஆன சட்டத்தின் உட்பக்கத்தில் சிதல்கள் பிடிக்கத் தொடங்கின. கண்ணாடிக்கும் புகைப்படத்திற்கும் நடுவில் ஒரு பூச்சி அதன் கொம்புகளை நீட்டி ஆட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். மாஸ்ஸி மரணத்தைத் தழுவி நாற்பது நாட்கள் ஆனபின் வேகமாக பழையதாக ஆரம்பித்த அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது நூறு வருடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்டதைப் போல் தெரியும்.

என் பார்வை மாஸ்ஸியின் நரைத்துப் போன கைகளையும், தொடர்ந்து மரியாவின் அடி வயிற்றையும், அதற்குப் பிறகு வசுந்தராவையும் நோக்கிச் சென்றது. மரியாவின் வயிற்றில் வசுந்தரா உருவாக மூலக்காரணமாக இருந்த அதே மாஸ்ஸிதான் அவளை மரியாவின் பிறப்பு உறுப்பின் வழியாக வெளியே எடுத்ததும் என்ற விஷயம் நவீன விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல. அது மேலும் பல செய்திகளைச் சொல்லாமல் சொல்லுகின்றன. வேலையை விட்டு ஓய்வு பெற்ற பிறகு அவர் ஒரு பிரசவம் பார்க்கும் ஆணாக பணியாற்ற வேண்டும் என்று மனதில் திட்டமிட்டு வைத்திருந்தார். ஆனால், அதற்கு முன்பே அவருடைய இதயம் வீங்கி விட்டது.

“அடியே பெண்ணே...” - மரியா சொன்னாள்: “நீ வீட்டைப் பெருக்குறதை நிறுத்திட்டு கோகுலுக்கும் நாராயணனுக்கும் டீ போட்டுக் கொடு.”

தேநீர் அடங்கிய கோப்பையை என் முன்னால் வைக்கும்போது வசுந்தராவின் தலை எனக்கு நேராக குனிந்தது. பல வருடங்களுக்கு முன்பு மாஸ்ஸி வெளியே பிடித்து இழுத்த அதே தலைதான். அப்போது இப்போதிருப்பது மாதிரி இந்தத் தலையில் இவ்வளவு முடி இருந்திருக்காது. அப்போது தலையில் நல்ல ஈரமிருந்திருக்கும். அதிலிருந்து இளம் சூடு கொண்ட நீர் கீழே சொட்டிக் கொண்டிருந்திருக்கும்.

“இந்தப் பொண்ணை வச்சிக்கிட்டு நான் என்ன பண்றது?” - மரியா சொன்னாள். “ஒரு சிந்திப் பசுவைப் போல இவ வளர்ந்துக்கிட்டு இருக்கா. இவங்க அப்பா மட்டும் உயிரோட இருந்திருந்தா...”

“நான் இங்கேதான் இருக்கேன்...” சுவரில் இருந்தவாறு மாஸ்ஸி அப்படிச் சொல்வதைப் போல் எனக்குத் தோன்றியது.

எனக்கு இந்த மாதிரி அவ்வப்போது ஏதாவது மனதில் தோன்றுவதுண்டு. மாஸ்ஸியைப் பற்றிய பல நினைவுகள் தனக்கும் பல நேரங்களில் வருவதுண்டு என்று ஜாவேத் கூட சொல்லுவான்.

“அப்பா இல்லாத ஒரு பொண்ணை வளர்த்து பெரியவளா ஆக்குறதுக்குப் பின்னாடி இருக்கிற கஷ்டங்களை உங்க யாராலயும் புரிஞ்சுக்க முடியாது மகனே!”

இந்த வார்த்தைகளை மரியா என்னிடமும் கோகுலிடமும்தான் கூறிக் கொண்டிருக்கிறாள் என்பதில் ஒரு சிறு திருத்தம். ‘மகனே’ என்று கூறும்போது அவள் பார்வை கோகுலின் மேல்தான் இருந்தது. எந்த விஷயமாக இருந்தாலும், கோகுல்தான் முன்னால் இருப்பான். ஆனால், அதற்காக எப்போதும் நான் கவலைப்பட்டதே கிடையாது. கோகுல் இந்த வீட்டிலுள்ளவர்களுக்கு அறிமுகமாவதற்கு முன்பே நான் அடிக்கடி வந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனாக இருந்தேன். ஒருமுறை மரியா என்னிடம் சொன்னாள்; “நீ இருக்குறதுனால வரிசையில நின்னு ட்ரெயினுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமோ ரேஷன் கார்டு புதுப்பிக்க வேண்டிய தேவையோ எனக்கு இல்லாமலே போச்சு”. ஜாவேத் இந்த மாதிரி காரியங்கள் எதுவும் செய்வதில்லை. கோகுலும் இவ்வகைச் செயல்களைச் செய்வதில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அவன் எப்போது பார்த்தாலும் நவநாகரீகமான முறையில் தைக்கப்பட்ட பேண்ட்டையும் ஷர்ட்டையும் அணிந்து கார் ஓட்டிக் கொண்டு வருவான்.


வசுந்தராவைப் போலவே மரியாவும் சுத்தம், சுகாதாரம் ஆகியவற்றைப் பெரிதாகப் பார்க்கக் கூடியவளே. ஒருநாள் உட்கார்ந்திருக்கும் அறையில் பழைய கார்ப்பெட்டின் மேல் கால்களை வைத்தவாறு நான் உட்கார்ந்திருந்தேன். அப்போது வசுந்தரா ஒரு பழைய துணியை எடுத்து வந்து எனக்கு முன்னால் கீழே அமர்ந்து என் காலணிகளில் இருந்த அழுக்கை மிகவும் கவனத்துடன் துடைத்தாள். அப்போதுதான் கட்டிட வேலை செய்யும் மனிதர்களின் கால்களில் இருப்பதைப் போல என் கால்கள் அழுக்காகவும், தூசு படிந்ததாகவும் இருப்பதை நான் பார்த்தேன். அதே நேரத்தில் எனக்கு முன்னால் கஃப் பட்டன் இட்டு சிறிது கூட கசங்காத சட்டையை அணிந்து ஒளி வீசிக் கொண்டிருக்கும் ஷூவும் அணிந்து கோகுல் அமர்ந்திருந்தான்.

மரியாவின் புதுப்பிக்கப்பட்ட ட்ரைவிங் லைசென்ஸ் அவளிடம் தருவதற்காக நான் அங்கே போயிருந்தேன். நாடகத்தின் ரிகர்சல் இருந்ததால் நான் அங்கு அதிக நேரம் இருக்காமல் உடனே புறப்பட்டு விட்டேன்.

“நான் உங்களை இறக்கி விடுறேன்.”

கோகுல் எனக்குப் பின்னால் வந்தான். பார்ஸி சுடுகாட்டுக்குப் பக்கத்திலிருக்கும் ஃப்ளாட்டுகளில் ஒன்றில்தான் விக்டர் கரீம்பாய் வசிக்கிறார். அதன் மொட்டை மாடியில்தான் நாங்கள் நாடக ஒத்திகைக்காக தினந்தோறும் மாலை நேரங்களில் கூடுவோம். முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதற்கு நல்ல ஒரு திறமையான நடிகை கிடைக்காததால் ஒத்திகையை ஆரம்பிப்பதற்கே மிகவும் தாமதமாகிக் கொண்டிருந்தது. நாடகத்தை அரங்கேற்றம் செய்வதற்கு இன்னும் ஆறு வார காலமே இடையில் இருந்தது. நாடகத்தில் நாயகியாக நடிக்கும் ராதிகா மொட்டை மாடியின் வெளிச்சத்தில் நின்று கொண்டிருப்பதை நான் சற்று தூரத்தில் வரும்போதே பார்த்தேன். அவளுக்குப் பக்கத்தில் லைட்டிங் இன்சார்ஜாக இருக்கும் பார்த்தா நின்றிருந்தான். கோகுல் என் கையை அழுத்தமாக பற்றி என்னை அங்கே இறக்கி விட்ட பிறகு காரைப் பின்னால் திருப்பி ஓட்டி பிரதான சாலைக்குப் போய் அடுத்த நிமிடம் காணாமல் போனான். கோகுலைப் பற்றி பொதுவாக யாரும் எந்தக் குற்றமும் சொல்வதில்லை. ஒரு ‘பெர்ஃபெக்ட் ஜென்டில்மேன்’ என்று அவனைப் பற்றி கரீம்பாய் குறிப்பிடுவார்.

2

நாராயணனை கரீம்பாயின் வீட்டின் முன்னால் இறக்கி விட்ட பிறகு நான் திரும்பவும் காரை ஓட்டிக் கொண்டு மரியாவின் வீட்டிற்கு வந்தேன். ஒரு பக்கம் சற்று சரிந்தவாறு கிடக்கும் மரத்தால் ஆன கேட்டைக் கடந்தபோது மரியா வெளியே வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். மாஸ்ஸி தன்னுடைய கைகளால் உண்டாக்கிய கேட் அது என்று அவள் பலமுறை என்னிடம் கூறியிருப்பதை நான் நினைத்துப் பார்த்தேன். கர்ப்பிணிகளின் வயிற்றுக்குள்ளிருந்து குழந்தைகளை வெளியே எடுப்பதில் மட்டுமல்ல, கேட் உண்டாக்குவதிலும் மாஸ்ஸி திறமையானவராக இருந்தார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அது ஒரு சிறு வீடுதான். என்றாலும், அந்த வீட்டின் முன்னால் விசாலமான முற்றம் இருந்தது. ஒரு பெரிய நாவல் மரமும் மாமரமும் உள்ள அந்த முற்றம் நகரத்தில் உண்மையிலேயே பெரிய விஷயம்தான்.

“நீ திரும்ப வந்தது நல்லதாப் போச்சு”- மரியா சொன்னாள். “வசுந்தராவுக்கு பேச்சுத் துணைக்கு ஒரு ஆள் கிடைச்ச மாதிரி ஆச்சுல்ல. நான் மார்க்கெட்டுக்குப் போயி காய்கறிகள் வாங்கிட்டு வந்திர்றேன்...”

ஜாவேத்தை வீட்டில் பார்க்கவே முடியவில்லை. தனக்கென்று ஒரு நிரந்தரத் தொழில் இல்லாத அவன் குதிரைப் பந்தய டிக்கெட்டுகள் விற்றும் லாட்டரி ஏஜென்ஸிகள் எடுத்தும், ரெஸ்ட்டாரெண்டுகளில் பேண்ட் வாத்தியம் வாசித்தும் தன்னுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தான். நகரத்தின் மேற்பகுதியில் குன்றுகளைப் போல முளைத்து வரும் கெஸ்ட் ஹவுஸ்களுடன் ஜாவேத்திற்கு சில தொடர்புகள் இருப்பதாக நாராயணன் ஒருநாள் என்னிடம் சொன்னான். ஒருமுறை போலீஸ்காரர்கள் அவனைத் தேடி வர, வழியில் அவர்களைப் பார்த்த ஜாவேத் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து அவர்களை அப்படியே திருப்பி அனுப்பிய நிகழ்ச்சி உண்மையிலேயே நடந்த ஒன்று. கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருக்கும் பணக்காரர்களுக்குப் பெண்களைக் கூட்டிக் கொடுக்கும் மோசமான காரியத்தை ஜாவேத் செய்தாலும், தன் கைகளில் கனமான சில புத்தகங்களை வைத்து படித்துக் கொண்டிருப்பதை பல நேரங்களில் நான் பார்த்திருக்கிறேன். ஒரு நாள் வசுந்தராவுடன் சேர்ந்து அமெரிக்கன் லைப்ரரிக்கு நான் சென்றிருந்தபோது, அங்கே மூன்று புத்தகங்களைத் திறந்து வைத்துக் கொண்டு அவன் ஏதோ குறிப்புகள் எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். சமீபத்தில் அவனுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, நகரத்தின் காற்று மாசுபடும் விஷயத்தைப் பற்றி இப்படி சொன்னான். “நேற்று நம்ம நகரத்தோட காற்று மாசுபடும் அளவு என்னன்னு தெரியுமா? ஸல்ஃபர் டை ஆக்ஸைடு ஒரு க்யூபிக் மீட்டிரில் 181 மைக்ரோ கிராம், ஆக்ஸைடு ஆஃப் நைட்ரஜன் 203, கார்பன் மோனாக்ஸைடு 7047, எஸ்.பி.எம். 936.”

மரியாவின் கைகளில் பலவகைப்பட்ட பைகள் இருந்தன. வாரத்திற்கொருமுறை அவள் மார்க்கெட்டுக்குப் போய் காய்கறிகளும் தானியங்களும் வாங்கிக் கொண்டு வருவாள். ஒருமுறை நானும் நாராயணனும் அவளுடன் சென்றோம். தார்ப்பாய் போடப்பட்டிருக்கும் மார்க்கெட் பகுதியில் அழுகிப் போன காய்கறிகள் ஒரு ஓரத்தில் குவிந்து கிடந்தன. பசுக்களும் பன்றிகளும் அழுக்கடைந்து போயிருந்த மூலைகளில் முகத்தை உரசியவாறு நின்றிருந்தன. மரியா காய்கறிகளின் விலையை விசாரித்துக் கொண்டிருந்தபோது கெட்டுப் போன முட்டைக்கோஸ் நாற்றத்தை அனுபவித்தபடி நானும் நாராயணனும் நாடகத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகியிருப்பதைப் பற்றி பேசியவாறு நின்றிருந்தோம். தற்போதைய பாரத நாடகக் கலை இன்னும் அதற்கான தனித்துவத்தைப் பெறாமலே இருக்கிறது என்றான் நாராயணன். நாடகத்திற்கென்று ஒரு புதிய வடிவத்தை உண்டாக்கும் முயற்சியில் நாட்டுக் கலை வடிவங்களைப் பெரும்பாலும் சார்ந்திருப்பது நாடகக் கலைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் என்றும் என்னிடம் நாராயணன் சொன்னான்.

மரியா பைகளுடன் காரில் ஏறி மார்க்கெட்டிற்குப் புறப்பட்டாள். மாஸ்ஸியின் காலத்திலிருந்து இருக்கும் அந்தக் காரை மார்க்கெட்டுக்கோ, சர்ச்சுக்கோ போகும்போது மட்டுமே அவள் பயன்படுத்துவாள்.

வசுந்தராவிற்குத் துணையாக என்னை வீட்டில் விட்டு விட்டு மரியா சென்றது குறித்து மனதிற்குள் உண்மையாகவே பெருமைப்பட்டேன். அவள் திரும்பி வருவதற்கு எப்படியும் ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ கூட ஆகலாம். ஒவ்வொரு காய்கறியின் விலையையும் பல கடைகளிலும் ஏறி விசாரித்த பிறகுதான் அவள் வாங்குவாள். அது மட்டுமல்ல. தராசில் காய்கறிகளை எடை போடும்போது குறைவாக இருந்தது என்று பட்டுவிட்டால், பல நேரங்களில் பையிலிருக்கும் காய்கறிகளை வெளியே எடுத்து மீண்டும் எடை போடச் சொல்லுவாள்.


காகத்தின் கூட்டில் கல்லை எறிந்து சலனம் உண்டாக்குவதைப் போல மார்க்கெட்டில் ஒரு பரபரப்பை உண்டாக்கிவிட்டு திரும்பி வரும் மரியாவை அங்குள்ள கடைக்காரர்கள் எல்லோருக்குமே நன்றாகத் தெரியும்.

மரியா திரும்பி வரும்வரை உள்ள நேரத்தில் ஒவ்வொரு நொடியையும் நான் மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானித்தேன். வசுந்தராவுடன் சேர்ந்து தனியாக இருக்கும் வண்ணம் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு உண்மையிலேயே மிகவும் விலைமதிப்புள்ளது என்பதை நான் நன்றாகவே உணர்ந்திருந்தேன். அளவுக்குமேல் அவள் சதைப்பிடிப்புடன் இருப்பதாக எனக்குப் பட்டது. மரியா அவளை ஏன் சிந்திப் பசு என்று அழைக்கிறாள் என்பதற்கான காரணம் எனக்குப் புரிவதே இல்லை. நல்ல சதைப்பிடிப்பு கொண்ட பெண் அவள். எப்போதும் அவள் பழைய அல்லது சற்று நிறம் மங்கிப்போன ஆடைகளைத் தான் அணிவாள். ஆனால், அவற்றை நன்கு சலவை செய்து இஸ்திரி இட்டிருப்பாள். நிறங்களின் விஷயத்தை எடுத்துக் கொண்டால் அவளுக்கென்று ஒரு தனியான ரசனையை அவள் கொண்டிருந்தாள். இந்தியர்கள்- குறிப்பாகச் சொல்லப் போனால் பெண்கள் அடர்த்தியான நிறங்களைத்தான் விரும்புவார்கள். ஆனால், அடர்த்தியான நிறம் கொண்ட ஆடையை அணிந்து வசுந்தராவை நான் எப்போதும் சந்தித்ததில்லை. அவள் பயன்படுத்தும் டூத்பிரஷ்கூட மங்கலான சாம்பல் நிறத்தில்தான் இருக்கும்.

“நாராயணன் கூட நாடக ரிகர்சல் பார்க்கப் போகணும்னு நினைச்சேன்” - வசுந்தரா சொன்னாள். ஆனால, “அம்மா சம்மதிக்கலை. அவுங்க மார்க்கெட்டுக்குப் போக வேண்டியிருந்தது.”

வீட்டைப் பூட்டிவிட்டு போவதில் மரியாவிற்கு விருப்பமில்லை. வீட்டில் விலை மதிப்புள்ள ஒரு பொக்கிஷம் இருப்பதைப் போலவே அவள் நடந்து கொள்வாள். அப்படியே பொக்கிஷம் இருந்தாலும், அதை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்வதற்குத் தான் சதா நேரமும் அங்கு மாஸ்ஸி இருக்கிறாரே! மாஸ்ஸியை ஏமாற்றிவிட்டு அந்த வீட்டுக்குள் யாராலும் வர இயலாது என்பதை நான் நன்றாகவே அறிவேன்.

“நீ போகாம இருந்தது நல்லதாப் போச்சு. நாம கொஞ்சநேரம் தனியா உட்கார்ந்து பேசலாம்ல?”

“அம்மா இருந்தா கூட நாம பேசலாமே?”

“சில நேரங்கள்ல அப்பாவும், அம்மாவும் இருக்கிறது கூட தேவையில்லாதது மாதிரி தோணும்.”

“எனக்கு எப்பவும் அப்படித் தோணினது இல்ல. அம்மாவுக்குத் தெரியாத ஒரு ரகசியமும் என்கிட்ட இல்ல.”

“சில விஷயங்களை மத்தவங்க இருக்குறப்போ பேசுறதுன்றது எனக்கு கஷ்டமான ஒரு விஷயம்.”

நான் அவள் முகத்தைப் பார்ப்பதற்காக குனிந்திருந்த என் தலையை நிமிர்த்தினேன். அடுத்த நிமிடம் நான் அதிர்ந்துபோனேன். காரணம் என் கண்கள் போய் பதிந்தது சுவரில் தொங்கிக் கொண்டிருந்த மாஸ்ஸியின் முகத்தில். நான் தேவைக்கும் அதிகமாக என்னுடைய தலையை உயர்த்தியதால் வந்த வினை அது. மாஸ்ஸி தன்னுடைய ஒரு காதைத் தீட்டிக் கொண்டு என்னையே வெறித்துப் பார்த்தார். கண்ணாடி போடப்பட்ட அந்த புகைப்படத்திற்கு உயிர் இருக்கிறது என்பதுபோல் என் மனதிற்குப் பல நேரங்களில் பட்டிருக்கிறது. ஒருமுறை இந்த அறையில் அமர்ந்து கொண்டு நானும் மரியாவும் வசுந்தராவும் ஒரு தமாஷ் சொல்லி வாய்விட்டு சிரித்தபோது, சுவரில் இருந்த மாஸ்ஸியும் எங்களுடன் சேர்ந்து சிரிப்பதைப் போல் எனக்குத் தோன்றியது. இப்போது நானும் வசுந்தராவும் பேசிக்கொண்டிருப்பதை தன்னுடைய காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு அவர் கேட்டாலும் கேட்கலாம்.

“மத்தவங்ககூட போறதுக்கு கஷ்டமா இருக்கிற விஷயம் அப்படி என்ன இருக்கு?”

“அது... உன்கிட்ட மட்டுமே பேசணும்னு நினைக்கிற விஷயம்...”

“கோகுல்... நீங்க பழைய பாணியில் இருக்கிற ஒரு ஆள். இப்படியெல்லாம் ரொமான்டிக்கா இருக்கணும்னு அவசியமே இல்ல.”

அவளின் கண்களில் தெரிந்த சிரிப்பு என்னை நிலைகுலையச் செய்தது. தவறு என்னுடையதுதான். விஷயங்களை இப்படி சுற்றி வளைத்துச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். அதற்காக எல்லோரும் அவரவர்கள் சொல்ல வேண்டியதை ஒரே வார்த்தையில் சொல்லி முடித்துவிட்டால் மொழி எப்படி வளரும்? வார்த்தை அலங்காரங்களும் பிம்பங்களும் எதற்கு இருக்கின்றன? விஷயங்களைச் சுற்றி வளைத்துச் சொல்வதற்குத்தானே?

“அம்மா வரட்டும்!”- வசுந்தரா சொன்னாள். “அதுக்கப்புறம் நாம நடந்திட்டு வருவோம்.”

எதற்காக நான் வசுந்தராவுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன் என்று யாராவது என்னைப் பார்த்துக் கேட்டால்... என்னால் தெளிவான ஒரு பதிலைக் கூற முடியுமா என்பது குறித்து எனக்கே சந்தேகமாகத்தான் இருக்கிறது. காதல் மீதும் திருமணம் மீதும் எனக்கு இருக்கும் நம்பிக்கை குறைவே இதற்குக் காரணம். வசுந்தராவை நான் காதலிக்கவில்லை. அவளை நான் தேர்ந்தெடுத்தேன் என்று கூறுவதுதானே சரியான ஒன்றாக இருக்கும்.

ஒன்றரை மணி நேரம் சென்றதும் மரியா ஏராளமான காய்கறிகளுடன் மார்க்கெட்டில் இருந்து திரும்பி வந்தாள். பைகளை சமையலறையில் கொண்டுபோய் வைக்க அவளுக்கு நான் உதவினேன்.

“நீ இதுவரை கோகுலுக்கு டீ கொடுக்கலையா?”

மரியா மகளைக் கோபித்தாள். சுற்றிலும் கண்களை மேயவிட்டு அங்கு எங்கும் காலியாக தேநீர் கோப்பைகள் இல்லையே என்பதைப் பார்த்துப் புரிந்துகொண்ட பிறகுதான் அவள் அப்படிக் கேட்டாள்.

“நாங்க வெளியே போறோம்” - நான் சொன்னேன். “வெளியே டீ குடிச்சிக்கிறோம்.”

பள்ளிக்கூடம் எப்போது விடுவார்கள் என்று ஆவலுடன் காத்திருக்கும் ஒரு மாணவன் எப்படி பள்ளி மணி அடித்ததும் பாய்ந்து வெளியே ஓடுவானோ அந்த மாதிரி நான் வசுந்தராவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தேன். நடைபாதையின் வழியாக அவளுடன் நீண்ட நேரம் நடக்க வேண்டும்போல் எனக்கு இருந்தது. ஆனால், வசுந்தரா சொன்னாள்: “நாம கரீம் பாயோட வீட்டுக்குப் போகலாம்.”

“அங்கேதான் நாடகத்தோட ஒத்திகை நடந்துக்கிட்டு இருக்கே! நாம அங்கே பேசிக்கிட்டு இருக்க முடியுமா?”

“இனி நாம பேசுறதுக்கு என்ன இருக்கு? நீங்க சொல்லாமலே நான் எல்லாத்தையும் புரிஞ்சுக்கிட்டேன், கோகுல்.”

“நீ என்ன புரிஞ்சுக்கிட்டே?”

“எல்லாத்தையும்தான்.”

நாங்கள் கரீம்பாயின் வீட்டிற்குச் சென்றோம். தூரத்தில் வரும்போதே மொட்டை மாடி வெளிச்சம் நன்றாக எங்களுக்குத் தெரிந்தது. ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். மொட்டை மாடிக்குச் செல்லும் படிகளில் ஏறும்போது கரீம்பாய் உரத்த குரலில் பேசிக் கொண்டிருப்பது கேட்டது. ஒரு வேளை அவர் அளவுக்கு மேல் ரம் குடித்திருக்கலாம்.

“ரிகர்சல் முடிஞ்சிருச்சுன்னு நினைக்கிறேனன்.” - வசுந்தரா சொன்னாள்.

“ஆமா... ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே முடிஞ்சிருச்சு.” கரீம்பாய் வெறுப்புடன் சொன்னார். அவருடைய கையில் ரம் நிறைந்த கண்ணாடி டம்ளர் இருந்தது.


பொதுக்கூட்டங்களில் நாம் சாதாரணமாக காணும் வாடகை நாற்காலிகளைப் போல் இருக்கும் ஒரு நாற்காலியில் அமர்ந்து மேலே பார்த்துக் கொண்டிருந்தான் நாராயணன். அவனுக்குப் பக்கத்தில் பார்த்தா உட்கார்ந்திருந்தான்.

“இந்தா பாட்டில்... திறந்து குடிங்க...”

கரீம்பாய் பாட்டிலைச் சுட்டிக்காட்டினார். மொட்டைமாடியில் இருந்த எல்லோரின் கையிலும் கண்ணாடி டம்ளர் இருந்ததை அப்போதுதான் நான் பார்த்தேன். கரீம்பாய் எழுந்து ஒரு டம்ளரில் ரம்மை ஊற்றி என் கையில் தந்தார். எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தும்போது காணப்படும் சந்தோஷம் யாருடைய முகத்திலும் தெரியவில்லை. ஏதோ விரும்பத்தகாத ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது என்று என் மனதில் பட்டது. உட்காருவதற்கு இடமில்லாமல் இருந்ததால் நானும் வசுந்தராவும் ஒரே நாற்காலியைப் பங்குபோட்டுக் கொண்டு அமர்ந்தோம். கரீம்பாய் ஊற்றிக் கொடுத்த ட்ரிபிள் எக்ஸ் ரம்மை நான் ஒரு ‘பெக்’ குடித்தேன்.

“எதற்கு இந்த பல்ப்? அதை அணைங்க...” - கரீம்பாய் சொன்னார். “நான் யாரோட முகத்தையும் பார்க்க விரும்பல.”

யாரோ நடந்து சென்று ஸ்விட்சை ஆஃப் பண்ணினார்கள். மொட்டை மாடியில் இருந்த வெளிச்சம் திடீரென்று இல்லாமல் போனது. சுற்றிலுமிருந்த கட்டிடங்களில் இருந்து வந்த வெளிச்சம் நாராயணனின் முகத்தில் பட்டது. கரீம்பாய் முழுமையான இருட்டில் உட்கார்ந்திருந்தார்.

“என்ன நடந்தது?”

நான் மெதுவாக நாராயணனின் அருகில் சென்றேன். என்னுடைய டம்ளர் காலியாகியிருந்தது.

“எது நடக்கணுமோ அது நடந்தது. அவ்வளவுதான்...” கரீம்பாய் சொன்னார். “அவ கோவிச்சிட்டுப் போயிட்டா. மேடையில ஆடை இல்லாம நடிக்க அவளால முடியல போல இருக்கு...”

“ஆனா, அப்படி நடிக்க அவளுக்கு சம்மதம்தானே?”

நாடகம் முழுவதையும் படித்து பலமுறை விவாதம் செய்த பிறகுதான் ராதிகா அந்த வேடத்தை ஏற்று நடிக்கவே ஒப்புக் கொண்டாள். ஸ்கூல் ஆஃப் டிராமாவில் கடைசி வருட மாணவி அவள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

“தப்பு அவளோடது இல்ல...” நாராயணன் சொன்னான். “பழமையான பாரம்பரியத்துல இருந்து நம்மால அவ்வளவு சீக்கிரமா விடுபட்டுட முடியுமா, என்ன?”

“கோபப்பட்டு போகச் சொல்றதைவிட, ஏதாவது காம்ப்ரமைஸ் செய்து...”

“கோகுல், அதை மட்டும் நீங்க என்கிட்ட சொல்லாதீங்க. கலையைப் பொறுத்தவரை காம்ப்ரமைஸுக்கு இடமே இல்ல...”

கரீம்பாய் என்னைக் கூர்மையாகப் பார்த்துவிட்டு பெரிதாக ஒரு ஏப்பம் விட்டார். அவரின் கண்களுக்குள் கீழே வியர்வை அப்பியிருந்தது.

நெற்றியைத் துடைத்துக் கொண்டு நாராயணன் தொடர்ந்தான்.

“மேடையில் அவளை ஒரு கேபரே டான்ஸ் ஆடச் சொல்லல. அவமானப்படுத்தப்பட்ட ஒரு தலித் இளம்பெண்ணை ரியலிஸ்ட்டிக்கா மேடையில காட்டணும்னு நான் நினைக்கிறேன். அது அவளுக்குப் புரியாம இல்ல. அவளோட பூர்ஷ்வாத்தனமான மதிப்பீடுகள், நடுத்தர வர்க்கத்துக்குள்ளே இருக்கிற சில சட்ட திட்டங்கள்... அவை எல்லாத்தையும் தான் நான் பலமா எதிர்க்கிறேன்.”

“சர்வ சாதாரணமா தப்பு சொல்லிடலாம்... எதிர்த்திடலாம்...” - வசுந்தரா மெதுவான குரலில் சொன்னாள்.

“குறைந்தது ஐநூறு பேருக்கு முன்னாடி உடம்புல துணி இல்லாம பிறந்தமேனியோட நிக்கிறதுன்றது... சார், அந்தக் கஷ்டத்தை உங்களால புரிஞ்சுக்கு முடியாது. இன்னொரு பெண்ணால மட்டுமே அதைப் புரிஞ்சுக்க முடியும்.”

“யாரும் எதையும் புரிஞ்சுக்கவும் வேண்டாம். யாரும் இது விஷயமா விவாதம் செய்யவும் வேண்டாம்” - கரீம்பாய் கண்ணாடி டம்ளரில் இருந்த மீதி ரம்மைக் குடித்துவிட்டு மீண்டும் பலமாக ஒரு ஏப்பம் விட்டார். செம்பட்டை நிறம் கலந்த நரைத்த தாடி வழியாக ரம் இங்குமங்குமாய் வழிந்து கொண்டிருந்தது. அவரின் வாயில் ஓட்டை இருப்பதாக நான் நினைத்தேன். கரீம்பாய் தொடர்ந்து சொன்னார். “இதைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். நான் இந்த நாடகமே வேண்டாம்னு சொல்றேன். எனக்காக கஷ்டப்பட்டு இந்த நாடகத்தை எழுதின நாராயணன்கிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். வாழ்றதுக்கு என்னைப் பொறுத்தவரை என்னோட இன்ஷுரன்ஸ் பிசினஸ் இருக்கு. அதை வச்சு என்னால வாழ்ந்திட முடியும். குட்நைட்...”

கரீம்பாய் எழுந்து படிகளில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். வெளிச்சம் குறைவாக இருந்த படிகளுக்குக் கீழே ஒரு பெரிய மூட்டை விழுந்ததைப் போல் சத்தம் கேட்டது. கரீம்பாய்தான் கால் தடுமாறி கீழே விழுந்திருக்கிறார் என்பது நிச்சயம். வசுந்தராதான் முதலில் வேகமாக ஓடினாள். அவள் அவரை தரையை விட்டு தூக்க முயற்சித்தாள். சொந்தக் கால்களால் எழுந்து நின்ற அவர், வசுந்தராவின் கைகளை விலக்கினார்.

“பத்தினிகள்... காதலர்கள் முன்னாடியும் கணவர்கள் முன்னாடியும் உடம்புல துணியில்லாம நிக்க கொஞ்சமும் தயக்கம் கிடையாது. கலைக்காக ஏதாவது செய்யச் சொன்னா...”

அவர் முணுமுணுத்தவாறு தள்ளாடிய கால்களுடன் உள்ளே போனார். மொட்டைமாடியில் அமைதியான சூழ்நிலையில் ரம் உள்ளே போகும் சத்தம் மட்டுமே கேட்டது. குளிர்ந்த காற்று அவர்களுக்கு மத்தியில் கடந்து போய்க் கொண்டிருந்தது. நான் வசுந்தராவுடன் நெருங்கி அமர்ந்தேன்.

“கரீம்பாய் கொஞ்சம் அதிகமா போறார்னு நினைக்கிறேன்” நாராயணன் சொன்னான். “ராதிகாவை நான் தப்பு சொல்லல. அதே நேரத்துல கரீம்பாயோட உணர்வையும் என்னால புரிஞ்சுக்க முடியாது.”

“தப்பு உங்களோடதுதான்”- மொட்டை மாடியின் ஒரு மூலையில் இருட்டில் அமர்ந்திருந்த யாரோ சொன்னார்கள். “அப்படி ஒரு கதாபாத்திரத்தையே நீங்கள் படைச்சிருக்கக் கூடாது.”

ஒரு நாடக எழுத்தாளர் ஒரு கதாபாத்திரத்தைப் படைத்து விட்டால், அந்தக் கதாபாத்திரத்தை மேடையில் அரங்கேற்றாமல் இருக்க முடியாது. நாராயணன் இப்படிப்பட்ட ஒரு தர்மசங்கடமான நிலையில் மாட்டிக்கொண்டுவிட்டான். அவன் தன்னுடைய காலியான கண்ணாடி டம்ளரையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான். டம்ளரின் ஓரங்கள் பளிச்சிட்டாலும் அதன் உள்பகுதி இருண்டு போய்தான் காணப்பட்டது.

ஒரு உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்தே நாராயணன் அந்த நாடகத்தை எழுதியிருக்கிறான் என்பது நாடகத்துடன் சம்பந்தப்பட்ட சிலருக்கு மட்டுமே தெரியும். அந்த நாடகத்தை எழுதுவதற்காக அவன் ஜகதாரி என்ற கிராமத்திற்குப் போய் நேரடியாக மக்களைச் சந்தித்து நடந்த சம்பவத்தைப் பற்றி விசாரித்து அறிந்தான். பணவசதி படைத்த ஒரு மிகப் பெரிய நிலச் சுவாந்தார் தன்னுடைய கிராமத்தில் புரியும் அட்டகாசங்களையும், செய்யும் கொடுமைகளையும் தெளிவாகக் காட்டும் அந்த நாடகத்தை அவன் கரீம் பாய்க்காக தனி கவனம் செலுத்தி உருவாக்கினான். நகரத்திலிருந்து வந்த நாகரிகமான உடையணிந்த அந்த இளைஞனை ஒரு பத்திரிகையாளன் என்று தவறுதலாகக் கணக்குப் போட்டு குண்டேச்சா என்ற பெயரைக் கொண்ட நிலச்சுவாந்தார் தன்னுடைய அரண்மனை போன்ற வீட்டிற்கு அவனை வரவழைத்து அவனுக்கு பாதாம் பருப்பு அரைத்துச் சேர்த்து தயார் பண்ணிய சர்பத்தைக் குடிக்கத் தந்தான்.


இளைஞனின் அறிவையும் நடந்து கொள்ளும் முறையையும் பார்த்து சந்தோஷப்பட்ட குண்டேச்சா அவன் ஒரு வசதியான வீட்டைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க வேண்டும் என்று மனதிற்குள் முடிவு செய்து அவனைத் தன்னுடைய வீட்டிலேயே தங்குமாறு கேட்டுக் கொண்டான். அதை ஏற்றுக் கொண்டு அந்த மனிதனின் வீட்டில் தங்கிய நாராயணன் அவன் செய்யும் அட்டகாசங்களைப் பற்றி எழுத ஆரம்பித்தான். கடவுளுக்குக் கூட பயப்படாத குண்டேச்சா பத்திரிகைகாரனைப் பார்த்து பயப்பட்டார்.

தன்னுடைய வீட்டில் தங்கியிருந்து பகவந்தியைப் பற்றி நாராயணன் நாடகம் எழுதிக் கொண்டிருக்கிறான் என்பது தெரிந்தபோது குண்டேச்சா பயங்கர கோபத்திற்கு ஆளாகி, தன்னுடைய நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வந்து அவனை மிரட்டினான்.

“நீ உயிரோட திரும்பி வந்தது பெரிய விஷயம்” -மரியா சொன்னாள், “இந்த மாதிரியான காரியங்கள்ல இனிமேல் ஈடுபடாம பார்த்துக்க மகனே.”

கரீம்பாயின் மொட்டை மாடி இப்போது முழுமையாக இருளில் மூழ்கிக் கிடந்தது. காலியான கண்ணாடி டம்ளரைப் பார்த்தவாறு அமர்ந்திருந்த நாராயணன் எழுந்து நின்று சொன்னான். “நாளைக்கு இதே நேரம் இந்த இடத்துல என்னோட நாடகத்தை நான் தீ வச்சு கொளுத்தி சாம்பலாக்குவேன்.”

“நான் அதை அனுமதிக்க மாட்டேன்.”

வசுந்தரா நாராயணனின் கையைப் பிடித்துக்கொண்டு அவன் முகத்தையே பார்த்தவாறு நின்றிருந்தாள். அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு அவர்கள் ஏதோ மேடையில் நின்று கொண்டிருப்பதைப் போலவே தோன்றியது. அவள் தொடர்ந்து சொன்னாள் “நிச்சயமா நாடகத்தை எரிக்கிறதே நான் ஒத்துக்க மாட்டேன்.”

3

ன் தாயின் வார்த்தைகளின்படி, ஒரு சிந்திப் பசுவைப் போல் வளரும்- அதே நேரத்தில்- சதைப் பிடிப்பான, மென்மையான இந்த உடல்தானே உன்னுடைய வாழ்க்கை? நீ போகின்ற இடங்களிலெல்லாம், ஏராளமான மக்கள் நடமாடிக் கொண்டிருக்கின்ற நகரத்தின் தெருக்களிலும், மேலே இருக்கும் துரும்பு பிடித்த கைப்பிடிகளை வவ்வால்களைப் போல பற்றிக் கொண்டு பயணிகள் தொங்கிக் கொண்டிருக்கும் பஸ்களிலும், டெலிஃபோன் பூத்களிலும், எப்போதும் ரம் வாசனை அடித்துக் கொண்டிருக்கும் கரீம்பாய் வீட்டின் உட்காரும் அறையிலும்- இப்படி நீ செல்கின்ற எல்லா இடங்களுக்கும் நீ உன்னுடைய வாழ்க்கையை உன்னுடனேயே கொண்டு போகிறாய். அதாவது - நீ போகும் இடங்களுக்கு அதை உடன் கொண்டு போக நீ விருப்பப்படவில்லையென்றாலும், உன் வாழ்க்கை எப்போதும் உன்னுடனேயேதான் இருக்கிறது. அதை எங்கேயாவது ஒரு இடத்தில் கீழே இறக்கி வைத்துவிட்டு ஓடி தப்பித்து விடலாம் என்று மனதிற்குள் நீ ஆசைப்பட வேண்டாம், பெண்ணே. ஒரு சுமை தூக்கும் தொழிலாளி மிகவும் களைத்துப் போகும்போது தலையில் இருக்கும் சுமையைச் சிறிது நேரத்திற்குக் கீழே இறக்கி வைத்துவிட்டு களைப்பு நீங்கி மீண்டும் சுமையைத் தலையில் வைத்து தன்னுடைய பயணத்தைத் தொடர்வதைப் போல் வாழ்க்கையை சிறிது நேரத்திற்கு எங்கேயாவது கொஞ்சம் இறக்கி வைத்து இளைப்பாறலாம் என்ற சிறு ஆசையைக் கூட உன் மனதில் நீ வைக்க வேண்டாம். நீ விருப்பப்பட்டாலும் இல்லையென்றாலும் இந்தச் சுமையை நீ தூக்கித்தான் ஆக வேண்டும்.

நீ தனியாக ஒரு ஆடிட்டோரியத்தில் அமர்ந்திருக்கிறாய். கோகுலின் அலுவலகத்திற்கு அருகிலுள்ள இந்த இடத்திற்கு நீ சாதாரணமாக வந்திருக்கிறாய். எல்லா நாட்களிலும் மாலை நேரங்களில் இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் மட்டுமே சுறுசுறுப்பாகவும் மற்ற நேரங்களில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமலும் அமைதியாக இருக்கும் தான் இந்த ஆடிட்டோரியம். நீ உன்னுடைய வாழ்க்கையைத் தாங்கிக் கொண்டு அங்கு அமர்ந்திருக்கும் விஷயம் உன்னைத் தவிர வேறு யாருக்குமே தெரியாது. ஓரங்கள் தெளிவாக அமைக்கப்பபட்டு இருட்டாகக் காணப்படும் மேடையையே பார்த்தவாறு நீ அமர்ந்திருக்கிறாய். பிறகு இரண்டு மணி தாண்டிய பின் நாராயணனைப் பார்ப்பதற்காக நீ தோடார்மல் லேனில் இருக்கும் ஒரு மஞ்சள் நிற பழைய கட்டிடத்தின் அருகில் போய் நிற்கிறாய். சிறிது நேரம் கழித்து அயர்ன் பண்ணிய ஆடைகள் மட்டுமே அணியும் நாராயணன் முழங்கால் வரை தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெரிய ஷர்ட்டை அணிந்து தூரத்தில் வரும்போதே உன்னைப் பார்த்து சிரிக்கிறான். தொடர்ந்து உன் அருகில் வந்து நிற்கிறான்.

“நீ என்னை உடனடியாகப் பார்க்கணும்னு எதுக்காக நினைச்சே?”

நீ உன் கைவிரல்களையே பார்த்தவாறு நின்றிருந்தாய். நாராயணனின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தின் நிழலை நீ கவனிக்கவில்லை.

“சொல்லு...”

நாராயணன் உன்னைத் தொட்டும் தொடாத மாதிரி உனக்கு அருகில் நின்றிருக்கிறான். அவனின் ஒரு கை அவன் சர்ட் பாக்கெட்டிற்குள் முழங்கால் வரை இருக்கிறது.

நீ உன் விரலை அவனிடம் காட்டுகிறாய். அதில் ஒர தங்க மோதிரம் மின்னிக் கொண்டிருக்கிறது.

“எனக்கு திருமணம் நிச்சயமாயிடுச்சு.”

“வாழ்த்துக்கள்!”

அவன் மனப்பூர்வமாக உன்னை வாழ்த்துகிறான்.

சிறிது நேரத்திற்கு முன்பு கோகுலின் அலுவலகத்தில் வைத்து அவன் உனக்கு இந்த மோதிரத்தை அணிவித்தான்.

“ஆனா இந்த விஷயத்தைச் சொல்றதுக்காக நான் இங்கே வரல” நீ சொன்னாய்... “உங்க நாடகத்துல ராதிகாவோட வேடத்தை நான் ஏற்று நடிக்கத் தயாரா இருக்கேன்.”

அவன் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.

“நீ நல்லா யோசிச்சிக்கிட்டுத்தான் இதைச் சொல்றியா?”

அவன் கொஞ்சம் கூட நம்பிக்கை வராமல் உன் முகத்தையே பார்த்தான்.

“நான் தெளிவா யோசிக்காம இந்த விஷயத்துல ஒரு முடிவுக்கு வந்திருப்பேன்னு நீங்க நினைக்கிறீங்களா? இன்னைக்கு எனக்கு நிச்சயம் ஆச்சு. ஆனா, நேத்து ராத்திரி ஒரு பொட்டு கூட உறங்காம நான் யோசிச்சது அதைப் பத்தியில்ல... உங்களோட நாடகத்தைப் பற்றியும், பகவந்தியைப் பற்றியும்தான்...”

“பகவந்தி ரொம்பவும் பிரச்சினைக்குரிய ஒரு கதாபாத்திரம். ராதிகாவைப் போல உள்ள ஒருத்தியே நடிக்க மறுத்த ஒரு ரோல் அது...”

“அது எனக்குத் தெரியும்” - நீ தன்னம்பிக்கையுடன் சொன்னாய். “பகவந்தியோட கதை முழுவதும் எனக்கு நல்லா தெரியும். அதை எழுதினதற்கான சூழ்நிலையும் எனக்குத் தெரியும்.”

நாராயணன் காவேரியிடம் இப்படிச் சொன்னதும் உனக்குத் தெரியும். “பிராமணனா இல்லாத நான் ஒரு பூணூல் அணிஞ்சுக்கிட்டுத்தான் குண்டேச்சாவின் வீட்டிற்கே போனேன். பணக்காரனோட திருட்டுத்தனங்களை புரிஞ்சிக்கிறதுக்கு நானும் ஒரு பணக்காரனா வேடம் போட வேண்டியது கட்டாயமா இருந்துச்சு...”

நாராயணன் உன்னிடம் தொடர்ந்து கேட்டான்.

“உன் தாய் இந்த விஷயத்துக்கு சம்மதிப்பாங்கன்னு நினைக்கிறியா?”


“அம்மா சம்மதிக்கணும்னு எனக்கு அவசியமே இல்ல. நான் ஒரு வயசுக்கு வந்த பொண்ணுங்கிறதை நீங்க மறந்துடுறீங்க. எப்ப பார்த்தாலும் சமையலறைக்குள்ளே நுழைஞ்சு சூப் தயாரிச்சுக்கிட்டு வீட்டை சுத்தம் செஞ்சிக்கிட்டு மட்டும் நான் இருந்தா போதுமா? அதைத்தாண்டி வேற ஏதாவது செய்யணும்னு நான் நினைக்கிறேன்.”

“கோகுல்கிட்ட இது விஷயமா பேசினியா? கோகுலோட சம்மதம்...”

“நாராயணா, நீங்க பேசுறதே எனக்குப் பிடிக்கலை. மரியாவோட மகளாகவும், கோகுலோட வருங்கால மனைவியாகவும் தவிர வேற மாதிரி என்னைப் பார்க்க உங்களால முடியலியா? என்னை மட்டும் தனியா பிரிச்சு பார்க்குறதுல உங்களுக்கு என்ன பிரச்சினை?”

நாராயணன் ஏதோ சிந்தித்தவாறு உன்னுடைய முகத்தையே பார்த்தான். இதற்கு முன்பு எந்தச் சமயத்திலும் நீ இந்த மாதிரி ஒரு தீர்மானத்தை எடுத்ததையோ... இப்படிப் பேசியதையோ அவன் பார்த்ததில்லை. ராதிகா இப்படிப் பேசுகிறாள் என்றால் அதைப் பற்றி நாராயணன் கொஞ்சம்கூட ஆச்சரியப்பட்டிருக்கமாட்டான். அவள் ஐரோப்பாவில் வசித்து இந்தியாவுக்குத் திரும்பி வந்த ஒரு நவநாகரிகமான குடும்பத்தைச் சேர்ந்தவள். நாராயணன் அதற்கு மேல் ஒரு வார்த்தைகூட பேசாமல் உன்னை அவனுடைய வீட்டிற்கு வரச்சொன்னான். அவனுடைய ஆடையைப் போலவே அவனுடைய வீடும் அழகாகவே இருந்தது.

ஒரு படுக்கையறையும் ஒரு கழிப்பறையும் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு ஃப்ளாட் அது. அந்தப் படுக்கையறையில் எந்தவித கஷ்டமும் இல்லாமல் குறைந்தது பத்து பேராவது படுத்துறங்கலாம். அந்த அளவுக்கு அந்த அறை பெரிதாக இருந்தது. தனியாக வசித்துக் கொண்டிருக்கும் நாராயணனுக்கு இவ்வளவு பெரிய படுக்கையறை எதற்கு என்று உன்னை நீயே கேட்டுக் கொண்டாய். நாராயணன் தன்னுடைய நாடகத்தின் கையெழுத்துப் பிரதியைக் கொண்டு வந்து உனக்கருகில் அமர்ந்து அதன் சில பகுதிகளைப் படித்துக் காட்டினான். பகவந்தி புஷ்பவதியான விஷயம் தெரிந்தவுடன், நன்கு அலங்கரிக்கப்பட்ட ஒரு மாட்டு வண்டியில் ஏறி குண்டேச்சா அவளின் குடிசையை நோக்கிச் சென்றார்...

“மாட்டுவண்டி நாடகம் பார்க்கும் மக்களுக்கு மத்தியில் வரணும்னு சிலபேரு சொல்றாங்க. அப்படிச் செய்றதா இருந்தா நம்ம நாடகத்தை நாம ஒரு திறந்த வெளியிலதான் நடத்த வேண்டியதிருக்கும்.” - நாராயணன் சொன்னான், “கிராமத்து கலைகளைத்தான் திறந்த இடங்களில் நடத்துவாங்க. நம்ம நாடகத்தைப் போல இருக்கிற நவீன நாடகங்களை ஒரு தியேட்டர்லதான் நடத்த முடியும்.”

தொடர்ந்து நாராயணன் இப்படிச் சென்னதாக நீ நினைக்கிறாய். “ஒரு நாடகத்தை நடத்துறப்போ சில தருணங்களையும் சில சம்பவங்களையும் நாம திரும்பவும் மேடையில் கொண்டுவர வேண்டியதிருக்கு. எல்லா பகுதிகளும் மூடிக்கிடக்கிற ஒரு தியேட்டர்ல மட்டுமே இந்தக் காரியங்களை நம்மால ஒழுங்கா செய்ய முடியும்.”

நாராயணன் சொன்னதை நீ கேட்டுக் கொண்டிருந்தாய். “இவ்வளவு நாட்களா அங்குமிங்குமா ஒரு ஆட்டுக்குட்டியைப் போல ஓடுவதும் விளையாடுவதும் சிரிப்பதுமா இருந்த பகவந்தி ஒரே நாள்ல அவமானப்பட்டவளாகவும், துக்கத்துல மூழ்கிப் போனவளாகவும் மனசில் காயம்பட்டவளாகவும் மாறிடுறா... அந்தக் கதாபாத்திரத்தைத்தான் இப்ப நீ செய்யப் போறே....”

அந்தப் பொறுப்பை மிகுந்த தைரியத்துடன் ஏற்றுக்கொண்ட நீ சொன்னாய், “ஒத்திகை முடிஞ்சு மேடைக்குப் போய் நிற்கிற நிமிடத்துல நான் முழுமையா பகவந்தியாவே மாறிடுவேன்ற திடமான நம்பிக்கை எனக்கு இருக்கு.”

முழுமையான பகவந்தியாக மாறுவது அல்ல... முழு நிர்வாணமான பகவந்தியாக மாறுவதுதான் இங்குள்ள பிரச்சினையே என்பதை நீ நன்றாகவே அறிவாய். அப்படிச் செய்யும்போது ஏற்படப்போகிற பாதிப்புகளைப் பற்றியும், இழப்புகளைப் பற்றியும் உன்னால் புரிந்துகொள்ள முடியும். உன் மனதில் இருக்கும் எண்ணங்களைப் பற்றி மரியாவிடம் நீ ஒரு வார்த்தைகூட இதுவரை பேசவில்லை. அதற்கான நேரம் இன்னும் வரவில்லையென்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்.

உன் கைவிரலில் மோதிரம் அணிவித்த கோகுலிடம் நீ இதுவரை ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அதற்கான நேரமும் இன்னும் வரவில்லை என்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். நீ செய்யப் போகிற காரியம், உன் குடும்பத்திலும் நண்பர்கள் மத்தியிலும் மட்டுமல்ல... சமூகத்திலேயே ஒரு புயலை உண்டாக்கக் கூடியது என்பதென்னவோ உண்மை. அந்தப் புயல் வரப்போவதை முன்கூட்டியே உணர்ந்துகொண்ட ராதிகா, பயந்து ஓடியே போய் விட்டாள். ஆனால், நீ அந்த மாதிரி பயப்படக்கூடியவள் அல்ல. நீ வசுந்தராவாயிற்றே!

4

ன் சகோதரி வசுந்தரா எடுத்த தீர்மானம் உண்மையிலேயே மிகவும் தைரியமான ஒன்றுதான் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. நாடகம் எங்கள் குடும்பத்திற்கு அன்னியமான ஒன்றல்ல. என் தந்தை ஃபெர்னாண்டெஸ் மாஸ்ஸி முன்பு ஒரு நாடகத்தில் கப்பல்படை வீரன் பாத்திரத்தில் நடித்தார். படிக்கிற காலத்தில் என் தாய் ஒரு திருமணப் பெண்ணாக, வெண்மையான மஸ்லீன் துணியால் ஆன ஆடையை அணிந்துகொண்டு மேடையில் நடித்ததாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், எனக்கு நாடகத்துடன் சொல்லிக் கொள்கிற மாதிரி தொடர்பு எதுவும் இல்லை. கவிதை எழுத முயற்சி பண்ணியிருந்தாலும், அதில் என்னால் வெற்றி பெற முடியவில்லை. என் சகோதரி கவிதையிலோ, நாடகத்திலோ தனிப்பட்ட ஆர்வம் எதையும் இதுவரை காட்டியதில்லை. இருப்பினும் இப்படியொரு தீர்மானத்தை இவ்வளவு சீக்கிரமாக அவள் எப்படி எடுத்தாள்? எந்த உணர்வால் உந்தப்பட்டு இப்படிப்பட்ட ஒரு முடிவை அவள் எடுத்திருக்க முடியும்? அவள் அண்ணனான என்னாலேயே அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

எது வேண்டுமானாலும் இருக்கட்டும். வசுந்தரா எடுத்த அந்த முடிவைப் பற்றி நான் பெருமிதம் கொள்கிறேன். ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டு குளிர்பானம் குடித்துக்கொண்டு தொலைக்காட்சித் தொடர்களைப் பற்றி பேசிக்கொண்டு திரியும் சாதாரண பெண்களைப் போலல்ல என் சகோதரி என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. சில உண்மைகளைப் புரிந்து கொள்ளவும் கடினமான முடிவுகளை தைரியமாக எடுக்கவும் என் சகோதரியால் முடிகிறது என்பதை நினைத்துப் பார்க்கும்போது எந்த சகோதரனுக்கு அதைப் பற்றி மகிழ்ச்சி உண்டாகாமல் இருக்கும்?

அதனால் வசுந்தரா ஒத்திகைக்கு கிளம்பும்போது நான் சொன்னேன். “தங்கச்சி, நான் உன்னை இறக்கி விடுகிறேன். நான் உன் நடிப்பைப் பார்த்தது மாதிரியும் இருக்கும்ல?”

எங்களின் பழைய காரில் அவளை என்னருகில் உட்கார வைத்து கரீம்பாயின் வீட்டை நோக்கி செல்லும்போது, நான் அவள் கையை எடுத்து லேசாக அழுத்தினேன். அப்போது அவளின் கண்கள் பிரகாசிப்பதை நான் பார்த்தேன். ஆடை என்ற பெயரில் அவள் எதையெதையோ எடுத்து அணிந்திருந்தாள். அம்மாவின் ஒரு பழைய பாவாடை, என்னுடைய ஒரு ஷர்ட், அதற்கு மேலே சாம்பல் நிறத்தில் ஒரு ஜாக்கெட்.,


நான் சொன்னேன். “உன்னைப் பக்கத்துல உக்கார வச்சு நகரத்தின் தெருக்களில் கொஞ்ச நேரம் வெறுமனே காரை ஓட்டித் திரியணும் போல இருக்கு தங்கச்சி...”

ஒத்திகைக்கு நேரமாகிவிடும் என்பது தெரிந்திருந்தும் அவள் அதற்குச் சம்மதித்தாள். ஜனநடமாட்டம் அதிகம் இல்லாத தெருக்களாகப் பார்த்து நான் சில நிமிடங்கள் அவளை எனக்கருகில் உட்கார வைத்து காரை ஓட்டினேன். நாங்கள் கரீம்பாயின் வீட்டை அடைந்தபோது நாராயணன் மொட்டைமாடியில் ஆர்வத்துடன் வெளியே பார்த்தவாறு நின்றிருப்பது தெரிந்தது. தாமதமாக வந்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டு நாங்கள் மொட்டை மாடிக்குச் சென்றோம். நாடகாசிரியர், இயக்குநர்- இவர்கள் போக நாடகத்தில் நடிக்கும் எல்லா நடிகர் - நடிகைகளும் அங்கு ஏற்கனவே வந்திருந்தனர். மொட்டை மாடியில் ஒரு மூலையில் கண்களில் குற்றவுணர்வுடன் ராதிகா அமர்ந்திருந்தாள். அவள் வசுந்தராவைப் பார்த்துச் சொன்னாள். “விஷ் யூ ஆல் த பெஸ்ட்!”

சொல்லிவிட்டு ராதிகா மீண்டும் தன் தலையைக் குனிந்து கொண்டாள்.

“ஓ.கே.” - கரீம்பாய் சொன்னார். “காட்சி-ஒன்று. குண்டேச்சா கையில் ஒரு விசிறியோட நுழையிறாரு.”

வலது கையில் விசிறியை வைத்துக் கொண்டு, இடது கையால் வேஷ்டியை மேலே சுருட்டிப் பிடித்தவாறு குண்டேச்சா மேடையில் வந்தார். நிலத்தில் நீரே இல்லாமல் இருக்கும்போது எதற்கு அந்த மனிதர் வேஷ்டியை மேலே சுருட்டிப் பிடித்திருக்க வேண்டும் என்று நான் நாராயணனிடம் கேட்டேன். அதற்கு நாராயணன் சொன்னான். “நாம உண்மையான வாழ்க்கையிலயும் நாடகத்திலும் ஒரே செயலைச் செய்தாலும், அததுக்கு இருக்கிற சட்டம் வேற வேற... அதோட நோக்கமும் வேற வேறதான்.”

“பழமையின் பாதிப்புல இருந்து நாம நம்மோட நாடகக் கலையை உடனடியா விடுவிச்சு ஆகணும்” ஒத்திகை பார்க்க வந்த ஒரு நாடக ரசிகர் சொன்னார். “இந்திய நாடகக் கலைக்குன்னு ஒரு அடையாளத்தை நாம உண்டாக்க வேண்டியதிருக்கும்.”

குண்டேச்சாவும் அவரின் அடிவருடிப் பட்டாளமும் ஹோலிப் பண்டிகை கொண்டாடும் காட்சியைத்தான் இப்போது ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பால் சேர்த்த இனிப்புப் பலகாரங்களைச் சாப்பிட்டுவிட்டு அவர்கள் ஆபாசமாகப் பேசுவதும் உரத்த குரலில் சிரிப்பதுமாக இருக்கிறார்கள். ஒரு துளி சாயத்தைக் கூட காட்டாமல் நிமிஷங்களின் கொண்டாட்டத்தைக் காட்ட முயற்சிக்கிறார் கரீம்பாய். அந்தக் காட்சிக்கான ஒத்திகை முடிந்ததும், கரீம்பாய் எல்லோரையும் சிறிது நேரம் ஓய்வெடுக்கும்படி கூறிவிட்டு கீழே இறங்கிப் போனார். அவர் எங்கே போயிருக்கிறார் என்பது எல்லோருக்குமே தெரியும். சிறிது நேரம் சென்றதும் முகத்தில் ரம் மணக்க, அவர் திரும்பி வந்தார்.

கரீம்பாயைத் தொடர்ந்து கோகுலும் அங்கு வந்தான். அவன் நேராக வசுந்தராவின் அருகில் போய் அமர்ந்து கொண்டான். இவ்வளவு நேரமும் நான் வசுந்தராவைப் பற்றி பலவிதமான யோசனை செய்து கொண்டிருந்தேன். இனி அவளைப் பற்றி கூடிய சீக்கிரம் அவளின் கழுத்தில் தாலி கட்டப் போகிற கோகுல் யோசிக்கட்டும். ஒரு பந்தை எறிவதைப் போல நான் என்னுடைய சிந்தனையிலிருந்து அவளை கோகுலின் சிந்தனைக்கு எறிந்தேன். தன்னுடைய சிந்தனையில் வந்து விழுந்த வசுந்தராவை மகிழ்ச்சியுடன் கோகுல் ஏற்றுக்கொண்டான். இனி வசுந்தராவைப் பற்றி சிந்திப்பது அவன்தான்.

5

நான் படிகள் மூலம் மேலே ஏறி வந்தவுடன் ஜாவேத் எதற்காக கீழே இறங்கிப் போனான்? அந்தக் காரியத்தை அவன் மனப் பூர்வமாகத்தான் செய்திருப்பானா? நான் வசுந்தராவைத் திருமணம் செய்து கொள்வது பற்றி ஒருவேளை ஜாவேத்திற்கு அந்த அளவிற்கு சம்மதம் இல்லாமல் இருக்குமோ? வசுந்தராவின் தாயிடமோ சகோதரனிடமோ கலந்து பேசிய பிறகு நான் அவளின் விரலில் மோதிரத்தை அணிவிக்கவில்லை. அவர்களிடம் அப்படியெல்லாம் கலந்து ஆலோசிக்க வேண்டிய அவசியமே இல்லையென்று ஒரேயடியாக வசுந்தரா கூறிவிட்டாள்.

இன்று நாடகத்தின் ஒத்திகையைப் பார்க்க வர வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ராதிகா செய்ய மறுத்த வேடத்தை வசுந்தராதானே ஏற்று நடிக்கப் போகிறாள்? அதைப்பற்றி சமீபத்தில் வசுந்தரா என்னிடம் பேசினாள். அதே நேரத்தில் இந்த விஷயத்தில் என்னுடைய கருத்து என்ன என்பதைத் தெரிந்து கொள்ளவோ அதற்கு என்னுடைய அனுமதியை அவள் கேட்கவோ செய்யவில்லை. அவள் அப்படிச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் இல்லை. வாழ்க்கையில் என்னவெல்லாம் செய்யலாம் என்று தீர்மானிக்க வேண்டியவள் அவள்தான். நாராயணன் எழுதி கரீம்பாய் இயக்கும் இந்த நாடகத்தில் அவள் நடிப்பது குறித்து உண்மையிலேயே நான் பெருமைப்படுகிறேன். விக்டர் கரீம்பாயை எனக்கு நீண்ட நாட்களாகவே நன்கு தெரியும். காஷ்மீரி கேட்டில் இருக்கும் ஒரு பழைய கட்டிடத்தில்தான் அவர் முன்பு தங்கிக் கொண்டிருந்தார். அவர் குளிர்காலத்தில் மட்டுமல்ல- கோடைக் காலத்திலும் கூட ஒரு நீளமான மஃப்ளரை கழுத்தைச் சுற்றிலும் அணிந்திருப்பார். இடதுசாரிக் கட்சிக்காரர்கள் நடத்தும் கருத்தரங்கங்களிலும் போராட்டங்களிலும் நாம் கரீம்பாயைப் பார்க்கலாம். அவரின் எளிமையான வாழ்க்கை முறையையும் மனதில் கொண்டிருக்கும் உயர்ந்த லட்சியங்களையும் நீண்ட காலமாக நான் பார்த்து வருவதால், அவரைப் பொதுவாகவே எனக்குப் பிடிக்கும். அந்த ஒரே காரணத்தால் தான் கரீம்பாயின் நாடகத்தில் வசுந்தரா நடிக்கப் போகிறாள் என்ற விஷயம் எனக்குத் தெரியவந்தபோது, மனப்பூர்வமாக சந்தோஷப்பட்டேன். அது மட்டுமல்ல- அந்த நாடகத்தை எழுதியிருப்பது என்னுடைய நண்பன் நாராயணன் ஆயிற்றே!

பகவந்தி ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் காட்சியைத்தான் இப்போது வசுந்தரா ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் மிகச்சிறந்த திறமையான ஒரு நடிகை என்று அங்கிருந்த எல்லோர் மனதிலும் அந்தக் கணத்திலேயே தோன்றியது. ஆடு அங்கே இல்லையென்றாலும் இருப்பதைப் போல் நாடகத்தைப் பார்ப்போர் மனதில் படும்படி செய்வது வசுந்தராவின் நடிப்புத் திறமையை வைத்தே.

ஒரு நல்ல நடிகரோ, நடிகையோ- மேடையில் இல்லாத பலவற்றையும் கூட அவை இருக்கின்றன என்பது மாதிரி அவர்கள் தங்களின் நடிப்புத் திறமையால் காட்டவேண்டும். இந்த விஷயத்தை கரீம்பாய் ஒருமுறை என்னிடம் கூறியதை நான் நினைத்துப் பார்க்கிறேன். ஆடுகளோடு சேர்ந்து ஓடி விளையாடிக் கொண்டிருக்கும் கள்ளங்கபடமில்லாத அந்தத் தாழ்த்தப்பட்ட இளம்பெண்ணின் வேடத்தை மிகவும் சிறப்பாக நடித்தாள் வசுந்தரா.

“எனக்குத் திருப்தியா இருக்கு”- கரீம்பாய் சொன்னார். “என்னோட கவலைகளெல்லாம் போயிடுச்சு.”

“ஒரு விஷயம் எனக்கு உறுத்துது” - நாராயணன் சொன்னான். “அது- வசுந்தராவோட நிறம். ஒரு கீழ் ஜாதிப் பொண்ணு இந்த அளவுக்கு நிறமா இருக்கக் கூடாது.”


ஒரு பெரிய குற்ற உணர்வுடன் ராதிகா மொட்டை மாடியில் ஒரு மூலையில் தலையைக் குனிந்தவாறு உட்கார்ந்திருந்தாள். அவள் நாராயணனிடம் இப்படிச் சொன்னதாக நாராயணன் என்னிடம் சொன்னான். “குண்டேச்சா, பகவந்தியை முழு நிர்வாணமாக நிக்க வச்சு பார்க்குறான்னு நீங்க பிடிவாதமா சொன்னதுனாலதான் நான் இந்த வேடத்தைச் செய்ய முடியாதுன்னு சொன்னேன். இடுப்புல கொஞ்சமாவது துணி இருக்கலாம்னு நீங்க சம்மதிச்சா, நான் பகவந்தியா மேடையில வாழ்ந்து காட்டுறேன்...”

அதற்கு நாராயணன் சொல்லியிருக்கான். “அப்பா, அம்மா முன்னாடியும், சகோதரர்கள் முன்னாடியும் உடம்புல துணி இல்லாம நின்னுக்கிட்டு இருக்குற அந்த ஏழைப்பெண்ணைப் பற்றி ஒரு நிமிடம் மனசுல நினைச்சுப் பாரு. அவளோட வேதனையின் ஒரு பகுதியையாவது புரிஞ்சுக்க முயற்சி பண்ணு. அப்போ உன்னோட கொள்கைகள் எல்லாத்தையும் மறந்திடுவே. அந்தக் கதாபாத்திரத்தை உன்னால புரிஞ்சிக்க முடியாததுனாலதான் உடம்புல துணி இல்லாம மேடையில வந்து நிக்க உன்னால முடியாதுன்னு நீ சொல்றது...”

இந்த விஷயத்தைப் பற்றி பின்னர் வசுந்தராவுடன் நான் பேச நேர்ந்தபோது, நாராயணன் சொன்ன அதே வார்த்தைகளை அவளும் சொன்னாள். ஒரு நாள் ஒத்திகை முடிந்த பிறகு நாங்கள் இருவரும் ஒரு தோட்டத்திற்குப் போய் சிறிது நேரம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். தோட்டத்தில் பூவோ, செடியோ ஒன்றும் இல்லை. எல்லாமே கோடையின் கொடுமையிலும், ஆடு, மாடுகள் மேய்ந்தும் முற்றிலும் காணாமல் போயிருந்தன. தோட்டத்தின் பெயரைத் தெளிவாக எழுதி வைத்திருந்த ஒரு பெயர்ப் பலகை நுழைவாயிலருகில் மேலே வைக்கப்பட்டிருந்தது. அங்கு உட்கார்ந்திருந்தபோது வசுந்தரா என்னிடம் பல விஷயங்களையும் சொன்னாள்.

“நல்லா யோசனை பண்ணின பிறகுதான் நான் இந்த விஷயத்திலேயே இறங்கினேன்” -வசுந்தரா சொன்னாள். “இதோட சாதக பாதகங்களைப் பற்றி எனக்கு நல்லாவே தெரியும்.”

“ஆனா, உன்னை இந்த முடிவு எடுக்க வச்சது எது?” ராதிகா இந்த வேடத்தைச் செய்ய மறுத்து ஒதுங்கிக் கொண்ட பிறகு கரீம்பாயும் நாராயணனும் நம்பிக்கையிழந்து போனார்கள். “அவுங்க மேல உண்டான பரிதாப உணர்ச்சியா உன்னை இதைச் செய்ய வைத்தது?” - கோகுல் கேட்டான். “இல்லாட்டி நாடகத்து மேல உனக்கு இருந்த ஆர்வமா? ராதிகாவைப் போல எல்லோருக்கும் தெரிந்த புகழ்பெற்ற ஒரு நடிகையில்ல நீ. அளவுக்கும் அதிகமான ஒரு ஆர்வம் உனக்கு நாடகத்தின் மேல இருக்குன்னும் நான் நினைக்கல.”

“கோகுல், நீங்க சொல்ற இந்த விஷயங்களெல்லாம் என்னை இந்த முடிவு எடுக்க காரணங்களா இருந்ததென்னவோ உண்மைதான். ஒரு வருடத்திற்கு முன்னாடியே ஆடிட்டோரியத்தை அவங்க புக் பண்ணியிருக்காங்க. இனியொரு முறை அந்த ஆடிட்டோரியம் வேணும்னா மேலும் ஒரு வருடத்துக்கு அவங்க காத்திருக்கணும். இந்த நாடகத்தை ஸ்பான்ஸர் பண்ணினவங்க இதோட பின் வாங்கிடுவாங்க. கரீம்பாயை விரக்தியடைய வச்சது இதெல்லாம்தான். ஆமா கோகுல்... கரீம்பாயையும், நாராயணனையும் பார்த்து உண்மையிலேயே பரிதாபப்பட்டேன். ஆனா, இந்த வேடத்தை நான் ஒத்துக்கிட்டதுக்கு அது மட்டுமே காரணமில்ல...”

கோகுலும் வசுந்தராவும் பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள். தங்களின் சொந்த வாழ்க்கையைப் பற்றித்தான் அதிகமாக அவர்கள் பேசினார்கள். கோகுல் வாங்கிய ஃப்ளாட்டின் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அதைப் போய் இருவரும் பார்த்தார்கள். திருமணம் முடிந்ததும் அந்த ஃப்ளாட்டிற்குப் போய் விடுவது என்று அவர்கள் முடிவு எடுத்தார்கள். அதற்கு எல்லா வேலைகளும் முழுமையாக முடிவடைய வேண்டும் என்று அவர்கள் ஆர்வப்பட்டார்கள். அப்படி ஒருவேளை ஃப்ளாட் வேலை முடியவில்லையென்றால், ஒரு வாடகை வீட்டில் தற்காலிகமாக இருப்பது என்று கூட அவர்கள் தீர்மானித்தார்கள். திருமணம் முடிந்தபிறகு குடும்பத்தோடு சேர்ந்து இருப்பது என்பது ஒரு பழைய கலாச்சாரம் என்று அவர்கள் இருவருமே நினைத்தார்கள்.

கோகுல் தன்னுடைய எதிர்கால திட்டங்களைப் பற்றி அவனிடம் சொன்னான். வரப்போகிற நல்ல நாட்களை நினைத்து அவன் தினமும் கனவு கண்டு கொண்டிருந்தான். ஆனால், அவன் எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் பங்குவைக்க வசுந்தராவால் பல நேரங்களில் முடியாமலே போய்விடும். அவள் முழுமையாக நாடக வேலைகளில் ஒன்றிப் போய்விட்டாள். ஒருநாள் அவர்கள் இருவரும் மான் பூங்காவிற்குப் போயிருந்தபோது, அவள் ஒரு மான்குட்டியை தன்னுடைய மடியில் உட்கார வைத்துக்கொண்டு என்னவெல்லாமோ சொல்லிக் கொண்டிருந்தாள். அது நாடகத்தில் பகவந்தி ஆட்டுக்குட்டியிடம் பேசும் வசனம் என்பதை கோகுல் புரிந்து கொண்டான். தன்னுடைய அன்றாட வாழ்க்கையில் நாடகத்தில் வரும் பல விஷயங்களையும் தன்னையும் மீறி அவள் செய்து கொண்டிருந்தாள்.

“பகவந்தின்னு ஒரு பெண் வாழ்ந்தான்னு நினைக்கிறப்போ எனக்கு மனசுல என்னவோ போல இருக்கு” - வசுந்தரா சொன்னாள். “நாராயணன் அதை என்கிட்ட சொல்லாம இருந்திருக்கலாம். பகவந்தி தன்னோட கற்பனைன்னு சொல்லியிருந்தா இன்னும் நல்லாயிருக்கும்.”

நாடகத்தில் வரும் பாத்திரப்படைப்புகளைப் பற்றி அவள் நினைத்துப் பார்த்தாள். மேடையில் உண்மைக்கு இடமில்லை என்பதையும், எல்லாமே நடிப்புதான் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. நடிகர்- நடிகைகள் ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்கள் மற்ற யாரோ சிலரின் பெயர்களை அணிந்து கொண்டு அவர்களின் வாழ்க்கையை மேடையில் நடித்துக் காட்டுகிறார்கள். சங்கிலியிருந்து அவிழ்த்து விடப்பட்ட விடுதலையைப் போல் அவள் அதை உணர்ந்தாள். யதார்த்தத்தின் மேல் தனக்குப் பெரிய ஈடுபாடு எதுவும் இல்லையென்றாலும் மேடையில் அதை வளைத்தும் திருப்பியும் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை அவள் புரிந்து கொண்டாள். தன்னுடைய விதியை ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியாத தன்னால் மேடையில் இன்னொருவரின் விதியைக் கையிலெடுத்துக் கொண்டு விளையாட முடிகிறதென்றால் அதற்கு பரிபூரண சுதந்திரம் என்று பெயரிடாமல் வேறு என்ன பெயரிட்டு அழைக்க முடியும்? ஆனால், சுதந்திரத்தின் கட்டுப்பாடில்லாத கொண்டாட்டத்திற்கு பகவந்தி உண்மையிலேயே வாழ்ந்த ஒரு பெண் என்ற சிந்தனை ஒரு தடையாக இருக்கிறது என்பதென்னவோ உண்மை. அதை நினைத்து வசுந்தரா பயந்தாள். நடிப்பிற்குப் பின்னால் ஒரு உண்மை மறைந்திருப்பதை அது ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தது.

“ராதிகாவோட ஒப்பிடுறப்போ நீ ரொம்பவும் சின்ன நடிகை. அவளைப் போல நீ நடிப்பைப் பற்றி பெருசா ஒண்ணும் பயிற்சி எடுத்துக்கல. இருந்தாலும் எவ்வளவு அருமையா நீ நடிக்கிறே...?” கோகுல் சொன்னான்.

உண்மையாகச் சொல்லப்போனால் வசுந்தரா நடிக்கவேயில்லை. கரீம்பாய் “யெஸ் ஸ்டார்ட்” என்று சொன்னவுடன் அவள் அவளாக இல்லாமல் மாறினாள். “நடிச்சு முடிக்கிறதுவரை நான் பகவந்தின்னு என்னை நானே நினைச்சுக்கிறேன்.”


“நீ மட்டும் அப்படி நினைக்கல. பார்த்துக்கிட்டு இருக்குற நாங்க கூட அப்படித்தான் நினைக்கிறோம்.”

நாடகத்தின் பல இடங்களிலும் அந்த நாடகத்திற்காக செய்யப்பட்டிருக்கும் விளம்பரங்களைப் பார்த்தவாறு அவர்கள் நடந்தார்கள். பல வண்ணங்களைக் கொண்ட ஒரு பெரிய போஸ்டர் அது.

அந்த நாடகத்தின் தயாரிப்புச் செலவு முழுவதையும் ஒரு சிகரெட் கம்பெனி ஏற்றுக் கொண்டிருந்தது. அப்படி சில ஸ்பான்ஸர்கள் கைவசம் இருந்ததால், கரீம்பாய் பணத்திற்காக வேறெங்கும் ஓடி அலைய வேண்டிய அவசியம் இல்லாமற்போனது. நாடகத்தோடு தொடர்புடைய எல்லோருக்கும் பயணம் செய்வதற்கும் உணவுக்கும் சேர்த்து ஒரு சிறு தொகையை அவர் ரெகுலராகக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

முதல் மேடையேற்றம் நடப்பதற்கு முதல் நாள் தியேட்டரில் ஒரு முழுமையான ஒத்திகை கட்டாயம் நடக்க வேண்டுமென்று விருப்பப்பட்டார் கரீம்பாய். அவர் இதுவரை இயக்கிய எல்லா நாடகங்களுக்கும் முறைப்படி அத்தகைய ஒத்திகைகள் நடந்திருக்கின்றன. விக்டர் கரீம்பாய் எந்த இடத்திலும் கீழே விழத் தயாராக இல்லை என்று அவர் திரும்பத் திரும்பக் கூறுவார். போர்களிலும் விளையாட்டுகளிலும் காதலிலும் சில நேரங்களில் நாம் தோல்வியடைய நேரிடலாம். ஆனால், கலையில் அது இருக்கவே கூடாது என்று பிடிவாதமாகக் கூறுவார். அவரின் இந்த பிடிவாத குணம்தான் அவரை நகரத்தின் முதல் தர நாடக இயக்குநர்களில் ஒருவராகக் கொண்டு வந்தது என்று நாம் எங்கு வேண்டுமானாலும் கூறலாம்.

முழு ஒத்திகை நடக்கும் நாளன்று யாரும் மதுவைக் கையால் கூட தொடக் கூடாது என்று அவர் எல்லோரிடமும் கூறியிருந்தார். குறிப்பாக லைட்டிங் பொறுப்பாளரான பார்த்தாவிடம். கரீம்பாயின் நாடகங்களின் வெற்றியில் பார்த்தாவிற்கு ஒரு பெரிய பங்குண்டு என்று நாடக அபிமானிகள் எல்லோருமே கூறுவார்கள். லைட்டிங்கை பயன்படுத்துவதில் மிகச் சிறந்த நிபுணர் அவன். “லைட்டிங்கோட மர்மத்தை நல்லா தெரிஞ்ச ஒரு ஆள் பார்த்தா. இருட்டுலதான் அதை நாம உணர முடியும்” என்று ஒரு நாடக விமர்சகன் ஒரு முறை சொன்னான். “வெளிச்சத்தின் ஆர்க்கிடெக்ட்” என்று ‘ஸ்டேட்ஸ்மேன்’ பத்திரிகையே அவனைப் பாராட்டி எழுதியிருக்கிறது. பகவந்தி பிறந்த மேனியுடன் மேடையில் தோன்றுகிற காட்சியில் லைட்டிங் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி அவன் ஒவ்வொரு நாளும் கரீம்பாயுடனும் நாராயணனுடனும் கலந்து பேசினான். வசுந்தராவின் கருத்து என்ன என்பதை அவன் அவளிடம் கேட்கவில்லை. நாராயணன் அதைப் பற்றி சூசகமாகச் சொன்னபோது பார்த்தா கடுப்பாகி விட்டான். “லைட்டிங்கைப் பற்றி அவளுக்கு என்ன தெரியும்? அவளோட உடம்புல எங்கேயெல்லாம் வெளிச்சம் விழணும்ன்றதைத் தீர்மானிக்க வேண்டியவன் நான்” என்று கூறினான் பார்த்தா.

லைட்டிங்கில் தன்னுடைய முத்திரையைப் பதித்துக் கொண்டிருக்கும் பார்த்தா ஒரு முன்கோபம் கொண்ட மனிதனாக இருந்தாலும், அவனை வசுந்தரா விரும்பவே செய்தாள். “உன்னோட தொப்புளை இருட்டுல மறைக்கணும்னா உன் வயிற்றுக்க மேலே வெளிச்சத்தைக் குவிச்சா போதும்...” - பார்த்தா வெளிச்சம் சம்பந்தப்பட்ட சில பாடங்களை அவளுக்குச் சொல்லிக் கொடுத்தான். வெளிச்சத்தை ஒரு சிற்பத்தைப் போல கொத்தியெடுக்கும் அவனின் கைகள் மிகவும் மென்மையாக இருந்தன. பாக்கெட்டில் வைத்திருந்த ரம் பாட்டில் அங்கு இருக்கிறதா என்று தடவிப் பார்த்துக் கொண்ட அவன் அவளைப் பார்த்து சிரித்தான். அவன் முன் வரிசை பற்கல் பலவும் கெட்டுப் போயிருந்தன. இந்த வயதிலேயே அவனுக்கு தலை முடியில் நரை விழுந்திருந்தது.

“குண்டேச்சா உன் உடம்புல இருக்குற துணியை அவிழ்த்தெறியிற காட்சியில நான் லைட்டிங்கை வச்சு அற்புதங்கள் காட்டப்போறேன்” - அவன் தன்னம்பிக்கையுடன் சொன்னான்.

“நெஃப்ராஜலிஸ்ட்டுகளும் ரம் விற்பனை செய்றவங்களும் கரீம்பாயையும் பார்த்தாவையும் கினியாபிக்குகள் ஆக்குறாங்களோன்னு எனக்கே சந்தேகமாக இருக்கு”- கோகுல் சொன்னான். “இவங்க உடம்புல சோதனை செய்து மனிதர்களோட லிவர் ரம்மை எந்த அளவுக்கு ஏத்துக்குறதுன்றதைத் தெரிஞ்சிக்கிறதுக்காக விஞ்ஞானிகளும் ரம் தயாரிப்பவர்களும் முயற்சிக்கிறாங்க. அதுக்கு கரீம்பாய்க்கும் பார்த்தாவுக்கும் அவங்க பெரிய அளவுல பணம் கொடுத்தாலும் கொடுக்கலாம்.”

“பணமா இல்ல. ரம் பாட்டில்களாக...”- நாராயணன் தன் வெண்மையான பற்களைக் காட்டிச் சிரித்தான். உமிக்கரியால் பற்களைத் துலக்குவதால்தான் தன்னுடைய பற்கள் இந்த அளவுக்கு வெண்மையாக இருக்கின்றன என் அவன் அடிக்கடி எல்லோரிடமும் கூறுவதுண்டு. பற்பசை தயாரிப்பாளர்களுக்கு கொஞ்சமும் பிடிக்காத ஒரு உண்மை அது.

“எனக்கு யாரோட பணமும் வேண்டாம்” - கரீம்பாய் சொன்னார். வாழ்றதுக்கு எனக்கு என்னோட இன்ஷுரன்ஸ் பிஸினஸ் இருக்கு. சாகாம இருக்குறதுக்கு எனக்கு நாடகம் இருக்கு...”

முழு ஒத்திகையைப் பார்ப்பதற்காக மரியா தன்னுடைய பழைய காரில் ஏறி கிளம்பினாள். ஆனால், ஜாவேத் அவளைத் தடுத்து நிறுத்தி அப்படியே திரும்பிப் போகும்படி செய்துவிட்டான் “அம்மா, நீங்க நாளைக்குப் பார்த்தா போதும்”- அவன் சொன்னான்.

ஜாவேத்தின் புத்திசாலித்தனத்தில் பெரிய மரியாதை எதுவும் இல்லாதவர்களுக்குக் கூட அப்போது அவன் மேல் மதிப்பு தோன்றியது. தன் மகன் எதற்காக தன் காரைத் தடுத்து நிறுத்தி பலவந்தமாக தன்னைத் திரும்பவும் வீட்டிற்குப் போகச் சொன்னான் என்பதற்கான காரணத்தை எவ்வளவு முயன்றும் மரியாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. தான் பார்க்கக் கூடாத ஏதாவது நாடகத்தில் இருக்குமோ என்று தன்னைத் தானே அவள் கேட்டுக் கொண்டாள். அவளின் மனதை நன்கு தெரிந்த ஜாவேத் சொன்னான். “அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. நாளைக்கு எல்லோர் கூடவும் உட்கார்ந்து அம்மா நீங்க நாடகத்தைப் பார்க்கலாம். எனக்கு நாளைக்கு குதிரைப் பந்தயம் இல்ல. அதனால நானே உங்களை அழைச்சிட்டுப் போறேன். போதுமா?”

சுவரில் இருந்தவாறு ஃபெர்னாண்டஸ் மாஸ்ஸி தன்னுடைய காதுகளைத் தீட்டிக் கொண்டு கேட்டார்.

“எல்லாருக்கும் அது ஃபுல் ட்ரெஸ் ஒத்திகை” - ஜாவேத் சுவரின் மேல் பகுதியைப் பார்த்தவாறு தனக்குள் சொன்னான். “வசுந்தராவுக்கு மட்டும் நிர்வாண ஒத்திகை...”

மனதிற்குள் கைகளைத் தட்டியவாறு அவன் இந்த வார்த்தைகளைச் சொன்னான். அதில் இருந்த நகைச்சுவையை நினைத்து அவன் தனக்குத் தானே சிரித்துக் கொண்டான். வசுந்தரா அவன் சொந்த தங்கையாக அமைந்து விட்டதால் அந்த நகைச்சுவையை வேறு யாரிடமும் கூற முடியாது என்பதால் தனக்குள்ளேயே அவன் அதைப் பூட்டி வைத்துக் கொண்டான். ஒரு வேளை அவனுக்கு திருமணம் நடந்தால், தன்னுடைய மனைவியிடம் அதை அவன் கூறினாலும் கூறலாம். அந்தத் தரம் தாழ்ந்த நகைச்சுவையைக் கூறுவதற்கென்றே ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டு வர வேண்டுமா என்ன என்று நினைத்த அவன் திருமணமே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தான்.


கெஸ்ட் ஹவுஸ்களில் தங்கியிருக்கும் பணக்காரர்களுக்கு பெண்களைக் கூட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்யும் அவனுக்குப் பலதரப்பட்ட பெண்களையும் நன்றாகவே தெரியும். அவர்களில் பலரும் கணவன் குழந்தைகளுடன் மதிப்பு, மரியாதையுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்ற உண்மை தெரிய வந்தபோது, உண்மையிலேயே ஜாவேத் அதிர்ந்து போனான். பெண்களைக் கூட்டிக் கொடுக்கும் மாமா வேலை பார்ப்பதை நினைத்து பல நேரங்களில் அவன் மனதிற்குள் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறான். இப்போது அவன் அதைப் பற்றியெல்லாம் நினைத்துப் பார்ப்பதே இல்லை. அதற்காக வருத்தப்படுவதும் இல்லை. கணவனையும் குழந்தைகளையும் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு கெஸ்ட் ஹவுஸைத் தேடி வரும் பெண்களுக்குத்தான் உண்மையாகப் பார்க்கப் போனால் அந்தக் குற்ற உணர்வு இருக்க வேண்டும். அவர்களுக்கும் அவர்ளோடு இருக்கும் பணக்காரர்களுக்கும் இல்லாத குற்ற உணர்வு நடுவில் நின்றிருக்கும் தனக்கு மட்டும் ஏன் இருக்க வேண்டும் என்று அந்த விஷயத்தை நியாயப்படுத்த முயன்றான் ஜாவேத். வெறுக்கக் கூடியதும் மோசமானதுமான ஒரு செயலைச் செய்யும் ஒரு மனிதன் அந்தச் செயல் மூலம் தன்னுடைய மனதை சுத்தம் செய்து கொள்கிறான் என்றொரு நம்பிக்கையை அவன் கொண்டிருந்தான். வசுந்தராவைப் பற்றியுள்ள நகைச்சுவையை எதிர்காலத்தில் மனைவியிடமாவது கூற முடியும். ஆனால், தன் தொழிலுடன் சம்பந்தப்பட்ட இந்த மாதிரியான சில விஷயங்களைத் தன்னால் எந்த நிமிடத்திலும் வேறு யாரிடமும் கூறவே முடியாது என்பதை நினைத்துப் பார்த்தபோது ஜாவேத்திற்கு மூச்சு விடவே மிகவும் கஷ்டமாக இருந்தது. வாழ்க்கையின் பெரிய ஒரு பகுதியை ஒரு அப்பத்தைப் போன்று பிய்த்து மற்றவர்களுடன் பங்கு வைக்க முயன்றாலும், சில துண்டுகளை நாமேதான் தின்று தீர்க்க வேண்டும். அந்தக் கசப்பான அப்பத்தின் துண்டு வேறு யாருக்கு வேண்டும்?

“யெஸ்...” - ஸைட்விங்கின் பின்னால் நின்றவாறு விக்டர் கரீம்பாய் சொன்னார். “அன்ட்ரெஸ் அண்ட் மூவ் ஆன்...”

ஃபுல் ட்ரெஸ் ஒத்திகை தொடர்ந்து கொண்டிருந்தது.

6

ன்று நாடகத்தின் முதல் மேடையேற்றம் ஒரு மகா குடிகாரனாக இருந்தாலும் கரீம்பாய் இன்று யாரையும் மதுவைத் தொடவே அனுமதிக்க மாட்டார் என்பதை நன்கு அறிந்திருந்த பார்த்தா பொழுது புலர்வதற்கு முன்பே படுக்கையை விட்டு எழுந்து தன்னுடைய வயிற்றுக்குள் ரம்மை முழுமையாக நிறைத்து விட்டு மீண்டும் படுக்கையில் படுத்துத் தூங்க ஆரம்பித்தான். பெரிய விலைக்கு விற்கலாம் என்று நினைக்கும் ஒரு வியாபாரி தானியத்தை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைப்பதைப் போல் இருந்தது அவன் செயல். வயிறு ஒரு கோடவுனைப் போல எண்ணி அதில் ரம்மை மறைத்து வைத்ததால் உண்டான சந்தோஷத்துடன் பார்த்தா மல்லாக்க படுத்தவாறு குறட்டை விட்டுத் தூங்க ஆரம்பித்தான். அவனுக்கு வெளியே நேரம் புலர்ந்தது. பறவைகள் ஓசை எழுப்ப ஆரம்பித்தன.

மிகவும் தாமதமாகப் படுத்த கரீம்பாய்க்கு படுக்கையை விட்டு எழுந்தபோது தலையில் பயங்கர வலி இருப்பது போல் தோன்றியது. முதல் நாள் நடந்த முழு ஒத்திகை பொதுவாக எல்லோரையுமே திருப்திப்படுத்தியது என்றாலும் கரீம்பாய்க்கு அதில் திருப்தி உண்டாகவில்லை. பல பகுதிகளை மேலும் மெருகேற்ற வேண்டும் என்று அவர் நினைத்தார். அதனால் அவர் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. அவர் அறைக்குள் வெறி பிடித்த மனிதனைப் போல இங்குமங்குமாய் நடப்பதும், தனக்கு முன்னால் கண்ட பொருட்கள் ஒவ்வொன்றையும் காலால் எட்டி உதைப்பதுமாக இருந்தார். ‘என்னைக்கு என் வேலையில எனக்கு திருப்தின்னு ஒண்ணு உண்டாகும்? நான் செய்ய வேண்டிய காரியங்களை முழுமையா செய்து முடிச்சேன்ற சந்தோஷத்தோட எப்போவாவது என்னால நிம்மதியா படுத்து உறங்க முடியுமா?’ - அவர் தனக்குத் தானே கேட்டுக் கொண்டார். அவருடைய மனைவி அவர் சவரம் செய்ய பயன்படுத்தும் கண்ணாடியின் முன்னால் போய் நின்று தலையையும் சிவந்து போயிருந்த கண்களையும் பார்த்தவாறு சொன்னாள். “விக்டர் கரீம்பாய்... உன் நாடகம் ஒரு பக்கம் கிடக்கட்டும். அலமாரியைத் திறந்து ரம் பாட்டிலை எடுத்து குடலை நிரப்பு. பிறகு ஏதாவது ஒரு பெண் மேல போய்ப் படு...”

பிணத்தைத் தின்னும் எறும்புகளைப் போல நாடகம் அவரைத் தின்று தீர்த்துக் கொண்டிருந்தது. மக்கள் முன் நடத்திக் காட்ட வேண்டும் என்று ஒரு நாடகத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டால், அவருக்கு அதற்குப் பிறகு உணவு, உறக்கம் எதுவுமே இல்லாமற்போகும். பல மடங்கு ரம் குடிப்பது அதிகமாகும். நாடகத்தின் முதல் காட்சி முடிகிறபோது எழுந்து நடக்க முடியாத அளவிற்கு அவர் மிகவும் களைப்படைந்து போய்க் காணப்படுவார். சாகாமல் இருப்பதற்காகத்தான் கரீம்பாய் நாடகமே நடத்துகிறார். அதனால் தொடர்ந்து நாடகத்தை நடத்துவதே சரி என்ற முடிவுக்கு அவர் வந்தார். குழாயின் அருகில் சென்று குனிந்து நின்று தொண்டைக்குள் கையை விட்டு அவர் பித்த நீரும் கபமும் வெளியே வரும்படி வாந்தி எடுத்தார். அதற்குப் பிறகு அவருக்கு கொஞ்சம் சரியானது மாதிரி இருந்தது.

காலையில் நகரத்தில் ஒரு சுற்று போய்விட்டு வரலாம் என்று போன ஜாவேத் ஒரு புத்தகக் கடையில் இருந்தாவறு நாராயணனை தொலைபேசியில் அழைத்தான். “க்ரேட் நியூஸ் நண்பா... நம்ம நாடகம் இன்னைக்கு ஹவுஸ் ஃபுல் ஆகும்.”

ஏழு இடங்களில் நாடகத்திற்கான டிக்கெட் விற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவற்றில் பெரும்பாலானவை புத்தகக் கடைகள். டிக்கெட் விற்பனை படுவேகமாக நடந்து கொண்டிருந்தது.

“நத்துராம் சன்ஸ் முன்னாடி டிக்கெட்டிற்கு க்யூ...” ஜாவேத் உற்சாகமாகச் சொன்னான். “நம்புறதுக்கே கஷ்டமா இருக்கு.”

நாராயணன் அதற்கு மவுனம் சாதித்தான். “நீ என்ன ஒண்ணுமே பேசாம இருக்குறே?”

“அது ஒரு நல்ல நியூஸ் இல்ல...”

“அப்படின்னா ஆடிட்டோரியம் காலியா கிடக்கணும்னு நீ விரும்புறியா?”

“நம்ம நாடகத்தைப் பார்க்குறதுக்கு ஆளுங்க டிக்கெட் வாங்க க்யூவுல நிக்கிறாங்கன்னா, அதுல ஏதோ விஷயம் இருக்குன்னு அர்த்தம். நாம முன்னெச்சரிக்கையா இருக்கணும்” -நாராயணன் தொடர்ந்து சொன்னான். “சினிமா டிக்கெட் எடுக்கத்தான் பொதுவா ஆளுங்க க்யூவுல நிக்கிறதை நாம கேள்விப்பட்டிருக்கோம். நாடகத்துக்காக யாராவது க்யூவுல நின்னு நீ பார்த்திருக்கியா?”

“நீ சொல்றது எனக்கும் புரியுது.”

ஜாவேத் ரிஸீவரின் உட்பகுதியையே உற்றுப் பார்த்தான். “அந்தக் காட்சியைப் பற்றிய செய்தி வெளியே எப்படியோ கசிஞ்சிருக்கு...” - நாராயணன் சொன்னான். “நாம முன்னெச்சரிக்கையா இருந்தது எல்லாமே வீணாயிடுச்சு.”

எது நடக்கக்கூடாது என்று இருக்கிறதோ அதுதான் முதலில் நடக்கும் என்ற தன்னுடைய அனுபவ அறிவை நாராயணன் மீண்டும் ஒருமுறை சொன்னான்.


 “எது வெளியே தெரியக் கூடாதோ, அதுதான் முதலில் எல்லோருக்குமே தெரிய வரும்.”

“நீ இன்னைக்கு குதிரைப் பந்தயத்துக்கும் கூட்டிக் கொடுக்குறதுக்கும் விடுமுறை விட்டிருக்கேல்ல? நேரம் இன்னும் நிறைய இருக்கு. நீ எல்லா இடங்களுக்கும் போய் டிக்கெட் விற்பனை எப்படி இருக்குன்னு கொஞ்சம் விசாரிச்சிட்டு வா...”

“சரி” - ஜாவேத் சொன்னான். “நான் ஒரு ரவுண்ட் போயிட்டு வர்றேன்.”

நாராயணன் தன்னுடைய அயர்ன் பண்ணப்பட்ட சட்டையின் கிணறு போன்ற ஆழமான பாக்கெட்டுகளுக்குள் கையை நுழைத்தவாறு அறைக்குள் இங்குமங்குமாய் நடந்து கொண்டிருக்க, ஜாவேத் நத்துராம் சன்ஸில் இருந்து புத்தகப் புழுவை நோக்கிப் புறப்பட்டான். அங்கே க்யூ எதுவும் இல்லாததால் அவனுக்கு லேசாக நிம்மதி உண்டானது. செய்தி எப்படியோ வெளியே கசிந்துவிட்டது என்று நாராயணன் சொன்னதற்கு அடிப்படையே இல்லையோ என்று அவன் நினைக்க ஆரம்பித்தான். எதை வெளியே சொல்லக் கூடாதோ அதை எந்தக் காலத்திலும் யாரும் வெளியே சொல்வதில்லை என்று நாராயணன் முன்பு சொன்னதையே சற்று மாற்றித் திருத்தினான் ஜாவேத். ‘புத்தகப் புழு’வின் உரிமையாளர் சிவப்பு உடை அணிந்த சர்தார்ஜி கால்குலேட்டரில் கணக்கைக் கூட்டியவாறு சொன்னார். “வாழ்த்துக்கள் மிஸ்டர் ஜாவேத். உங்களோட டிக்கெட்டுகள் முழுசா வித்துடுச்சு...”

கடையைத் திறந்து ஒரு மணி நேரத்திற்குள் நாடகத்திற்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத் தீர்ந்து விட்டன என்பது குறித்து சர்தார்ஜி சந்தோஷப்படுவது இயற்கையே என்று ஜாவேத் கருதினான். புத்தகங்கள் விற்கும் மனிதராக இருந்தாலும், அவர் ஒரு வியாபாரிதானே! ஒரு வியாபாரி எப்போதும் மன திருப்தி அடைவது தன்னுடைய வியாபாரம் வெற்றிகரமாக நடக்கும்போது தான். அந்த உண்மையையும் ஜாவேத் நன்றாகவே அறிந்திருந்தான். அவனுக்குப் புரியாதது ஒன்றே ஒன்றுதான். எதற்காக தான் கெஸ்ட் ஹவுஸில் இருக்கும் மனிதர்களுக்குப் பெண்களைக் கூட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்ய வேண்டும் என்பதே அது.

மதிய நேரத்தில் ஒரு பத்திரிகை கரீம்பாயை தொலைபேசியில் அழைத்தது. அவருக்கு இங்கு வந்த முதல் தொலைபேசி அழைப்பு அதுதான். நாடகத்திற்குப் பொதுவாக பத்திரிகையாளர்களை அவரே நேரில் சென்று வரும்படி அழைப்பதுதான் எப்போதும் இருக்கும் வழக்கம். ஒரு நாடகம் அரங்கேறும்போது எத்தனையோ கஷ்டங்களைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும் என்பதைத் தன்னுடைய அனுபவத்தின் மூலம் நன்றாகவே அறிந்து வைத்திருந்தார் கரீம்பாய். நடத்தவிருக்கும் நாடகத்திற்காகத் தேர்ந்தெடுத்த கதைக்கு மேடை வடிவம் கொடுப்பதிலிருந்து அந்தக் கஷ்டங்கள் வரத் தொடங்கும். நாடகத் தயாரிப்பிற்கு அதை விளம்பரப்படுத்துவதற்கும் வேறு சில முக்கிய விஷயங்களுக்கும் தேவைப்படும் இரண்டோ அல்லது இரண்டரை லட்சம் ரூபாய்களைப் புரட்டுவதற்குப் படுகிற சிரமங்களைக் கூட ஓரளவுக்குத் தாங்கிக் கொள்ளலாம். தாங்கிக் கொள்ள முடியாதது ஆங்கிலப் பத்திரிகைகளில் நாடக விமர்சகர்களை நேரில் போய் பார்ப்பது என்பதுதான். இப்படிப் பல்வேறு விஷயங்களையும் மனதில் அசை போட்டவாறு கரீம்பாய் தொலைபேசியை எடுத்து காதில் வைத்தார்.

“நான் டைம்ஸ் எக்ஸ்பிரஸ்ல இருந்து பேசுறேன். பேரு... வர்கீஸ்...”

“ரொம்ப சந்தோஷம்.”

“நாடகத்தோட முதல் காட்சி இன்னைக்குத்தானே? கதாநாயகியா நடிக்கிற பொண்ணை பேட்டி எடுக்கணும். ஃபோட்டோகிராஃபரைக் கூட்டிட்டு நான் அங்கே வர்றேன்.”

“ஏன் கதாநாயகியைப் பார்க்கணும்?” - கரீம்பாயின் சந்தோஷம் மறைந்தது. “தேவையான விவரங்களை நான் தர்றேன். நான்தான் நாடகத்தோட டைரக்டர்- விக்டர் கரீம்பாய்.”

“அந்தப் பொண்ணைப் பார்த்துத்தான் நான் பேசணும். உங்கக்கிட்ட இல்ல...”- அந்த ஆள் சொன்னான். “அந்தப் பெண்ணோட தொலைபேசி எண்ணைத் தாங்க.”

“அவக்கிட்ட தொலைபேசி இல்ல...”

“நீங்க பொய் சொல்றீங்க. சரி... நான் பார்த்துக்குறேன்.”

அந்தப் பக்கம் தொலைபேசியை வைக்கும் சத்தம் கேட்டது.

எப்படியோ விஷயம் பத்திரிகைக்காரர்கள் வரை கசிந்திருக்கிறது என்பதை கரீம்பாய் புரிந்து கொண்டார். நாடகத்திற்கான டிக்கெட்டுகள் முழுவதும் மதியத்திற்கு முன்பே விற்றுவிட்டன என்பதை அறிந்தபோது மனதிற்குள் அவருக்கு மகிழ்ச்சி உண்டானதென்னவோ உண்மை. கடந்த இருபது வருடங்களில் ஒரு டஜன் நாடகங்களுக்கு மேலாக அவர் இயக்கி அரங்கேற்றம் செய்திருந்தாலும் இதுவரை எந்த நாடகத்திற்கும் அரங்கு நிறைந்ததில்லை. பெரும்பாலான நாடகங்களை அரங்கத்தில் கூட்டமே இல்லாமல்தான் அவர் நடத்தியிருக்கிறார். இப்போதுதான் முதல் தடவையாக அவரின் நாடகத்திற்கு அரங்கு நிறைந்திருக்கிறது என்றாலும் அந்தப் பத்திரிகையாளர் பேசிய விதம் அவருக்கு பயங்கர வெறுப்பை உண்டாக்கியது.

நாராயணன் வந்தபோது கரீம்பாய் பத்திரிகையாளர் தொலைபேசியில் பேசிய விஷயத்தைச் சொன்னார்.

“பத்திரிகைகளோட கவனம் வசுந்தராவை நோக்கித் திரும்புவது ரொம்பவும் ஆபத்தானது” - நாயணன் சொன்னான். “ப்ரஹ்த்தியன் பரம்பரையோட முடிவைக் காட்டுறதுதான் நம்மோட நாடகம். பத்திரிகை அதைப் பற்றித்தான் எழுதணும்.”

“நீ சொல்றது சரிதான்.”

கரீம்பாய் தலையை ஆட்டினார் ஒரு வருடத்திற்கும் மேலாக நடத்திய ஆலோசனைகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பிறகுதான் அவர் இப்படிப்பட்ட புதுமையான கதைக் கருவைக் கொண்ட நாடகத்தையே நடத்தத் தீர்மானித்தார். மனதில் வெறுப்பு மேலோங்க தொலைபேசியைப் பார்த்த அவர் இறுமினார். பின் சொன்னார்.

“வசுந்தராவை இன்னைக்கு ஒரு பத்திரிகைக்காரனும் பார்த்துப் பேச முடியாது!”

நாராயணன் தொலைபேசியின் அருகில் சென்றான். ஜாவேத் தொலைபேசியை எடுத்தான். நாராயணன் சொன்னான். “வசுந்தரா என்ன பண்ணிக்கிட்டு இருக்கா? நாலு மணி வரை அவ நல்லா ஓய்வெடுக்கட்டும்.” நாராயணன் தொடர்ந்து சொன்னான். “ஒரு முக்கியமான விஷயம். ஒரு பத்திரிகையாளரிடமும் அவ இன்னைக்கு பேசக்கூடாது. ஜாவேத், இந்த விஷயத்தை நீ கவனமா பார்த்துக்கோ.”

“மன்னிக்கணும் நாராயணன்” - ஜாவேத் சொன்னான் - “ஒரு பத்திரிகைக்காரன் இப்போத்தான் அவளை பேட்டி எடுத்து முடிச்சி புகைப்படங்களும் எடுத்துக்கொண்டு போனான்.”

“யார் அந்த ஆளு?”

“வர்கீஸ்...”

நாராயணன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் தொலைபேசியைக் கீழே வைத்தான். வரப்போகும் ஆபத்தை அவன் காலையிலிருந்தே ஓரளவுக்கு எதிர்பார்த்தான். ஆனால், இப்போது ஒன்றும் செய்ய முடியாது. கஷ்டப்பட்டு பண்ணிய ஒத்திகைகளின் வழியே பகவந்தி எப்போதோ பிறந்துவிட்டாள். மேடையில் இனிமேல் நாடகத்தில் ஒரு சிறு மாற்றத்தைக் கூட பண்ண முடியாது என்பதை அவன் நன்றாகவே அறிந்திருந்தான். கரீம்பாயும் பார்த்தாவும் கூட அதே கருத்தைத்தான் சொன்னார்கள். அப்படியே ஒரு சிறு மாற்றம் நாடகத்தில் செய்வதாக இருந்தால், அதற்கு நாராயணன் தயாராக இருக்கிறானா? தன்னுடைய நாடகம் முழுமையாக எழுதி முடிக்கப்பட்டு விட்டால், அதிலிருந்து ஒரு வரியைக் கூட நீக்கவோ ஒரு வார்த்தையை மாற்றவோ அல்லது எடுக்கவோ அவன் சம்மதிக்கவே மாடடான். கஷ்டப்பட்டு உருவாக்கிய ஒரு வார்த்தை ஒரு உயிருள்ள ஜீவன் என்பான் அவன்.


வலி இல்லாமல் அதைக் கொல்ல முடியாது என்ற நம்பிக்கையை மனதில் கொண்டு நடப்பவன் நாராயணன். வார்த்தைகள் வலி தாங்காமல் துடிப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பது என்பது அவனுக்கு மிகவும் கஷ்டமான ஒரு விஷயம்.

நான்கு மணிக்கு வசுந்தராவை தியேட்டருக்கு அழைத்துப் போவதற்காக நாராயணன் அவளுடைய வீட்டிற்குச் சென்றான். மரியாவையும் உடன் அழைத்துச் செல்ல அவன் தீர்மானித்தான். ஜாவேத் ஏற்கெனவே தியேட்டருக்குப் போய் அங்கு நடக்கும் பல்வேறு வேலைகளையும் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். ஃபெர்னாண்டெஸ் மாஸ்ஸி உயிருடன் இருந்திருந்தால் அவர் முதலிலேயே தியேட்டருக்கு வந்திருப்பார். அதே நேரத்தில் அவர் நாடகத்தின் வெற்றிக்கு என்று கூறுவதைவிட அது நடப்பதற்கே ஒரு மிரட்டலாக இருந்திருப்பார் என்பது நிச்சயம். தன்னுடைய மகள் பகவந்தியாக நடிப்பதை அவர் ஏற்றுக் கொண்டிருப்பாரா? மரியா, பகவந்தி கதாபாத்திரத்தைப் பற்றி தெரிந்து கொண்ட பிறகு எப்படி நடந்து கொள்வாள் என்பதையும் நாராயணன் நினைத்துக் குழம்பினான். இந்த விஷயத்தைப் பற்றி முன் கூட்டியே தன்னிடம் ஏன் சொல்லவில்லை என்று மரியா கூட நினைத்தாலும் நினைக்கலாம். ஆனால், பல வகைப்பட்ட தந்திரங்களையும் உபயோகித்துத்தான் யாராலும் ஒரு போரில் வெற்றி என்ற ஒன்றைப் பெற முடியும் என்பதை மரியா புரிந்து கொள்ளாமலா இருப்பாள்? பகவந்தியின் கதையை எழுதி தான் கரீம்பாயையும் வசுந்தராவையும் மற்றவர்களையும் ஒரு போர்க்களத்திற்கு அழைத்துப் போவது மாதிரி கொண்டு சென்ற பொறுப்பிலிருந்து அவனால் தப்பிக்க முடியவில்லை. அந்தப் பொறுப்பு ஒரு இரும்பு குழாயைப் போல அழுத்தி அவனைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது. கலை என்பது இந்த அளவிற்குப் போராட்டங்களும், கஷ்டங்களும் நிறைந்த ஒன்றா என்ன? நாராயணன் தனக்குள் இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டான்.

ஒரு நீண்ட பயணத்திற்குச் செல்வதைப் போல நன்றாக ஆடையணிந்து ஒரு ஏர் பேகை வைத்தவாறு வசுந்தரா தயாராக நின்றிருந்தாள். அவளின் கலங்கிப் போயிருந்த கண்கள் அவள் இதுவரை அழுது கொண்டிருந்திருப்பாளோ என்றொரு எண்ணத்தை நாராயணனின் மனதில் உண்டாக்கியது. அவன் ஆர்வம் மேலோங்க அவளைப் பார்த்துக் கேட்டான். “ஆர் யூ ஆல் ரைட்?”

“நிச்சயமா...”- அவள் சொன்னாள். “என் வாழ்க்கையிலேயே மிகவும் முக்கியமான நாள் இது. மனசுல கொஞ்சம் டென்ஷன் இருக்கு. அவ்வளவுதான்.”

அதைச் சொன்ன அவள் அடுத்த நிமிடம் புறப்படத் தயாரானாள்.

“அம்மா வரலியா?”

“இல்ல...”

“ஏன்? என்ன ஆச்சு?”

அவள் பதிலெதுவும் கூறாமல் அவன் கையைப் பற்றியவாறு அவனுடன் நடந்து போனாள். ஆழமுள்ள ஒரு பள்ளத்தில் விழப்போகும் ஒருவர் எப்படி தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக யாரையாவது பிடித்துக் கொள்ளப் பார்ப்பார்களோ, அப்படி இருந்தது வசுந்தரா பிடித்தது. அவள் கைகள் இறுகப் பிடித்ததை அவன் தன் கைளில் உணர்ந்தான்.

பகல் முழுவதும் ஆள் நடமாட்டமே இல்லாமல், மாலை ஆறு மணி ஆகும்போது மட்டும் மனிதர்கள் வந்து கூடும் தியேட்டருக்கு முன்னால் எப்போதும் இல்லாமல் சிலர் சுற்றிக் கொண்டிருப்பதை நாராயணன் கவனித்தான். சாதாரணமாக நாடகங்கள் நடக்கும் தியேட்டர்களில் பார்க்காத முகங்கள் அவை. சினிமா தியேட்டர்களில் சுற்றிலும் பார்த்துக் கொண்டும் பதுங்கிக் கொண்டும் பகல் நேரத்தில் காட்டப்படும் படங்களைப் பார்க்க வரும் மனிதர்களின் முகங்களைப் போல அவை இருப்பதாக நாராயணன் நினைத்தான். பார்த்தா மீண்டுமொரு முறை லைட்டிங் வேலைகளைச் சோதனை செய்து பார்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தான். விக்டர் கரீம்பாய் அடர்த்தியான ஒரு நீல நிற டெனிம் ஷர்ட் அணிந்து, கழுத்தில் மஃப்ளரைத் தொங்கவிட்டவாறு அங்குமிங்குமாய் நடந்து கொண்டிருந்தார். அவரின் முகத்தில் ஒரு பெரிய போராட்டமே நடந்து கொண்டிருப்பது பார்க்கும்போதே தெரிந்தது. கடைசி காட்சி முடிந்து திரைச்சீலை கீழே விழுந்தால், அந்த கணமே அவர் க்ரீன் ரூமுக்குள் ஓடிச் சென்று அங்கு மறைத்து வைத்திருக்கும் ரம் பாட்டிலை எடுத்து வாய்க்குள் ஊற்ற ஆரம்பித்து விடுவார். அதுவரை அவரிடம் இந்தப் போராட்டம் இருந்து கொண்டுதான் இருக்கும். நாடகம் நடக்கின்ற நாட்களில் திரைச்சீலை கீழே விழும் வரை அவர் குடிப்பதில்லை என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒரு விஷயம். கலைக்காக அவர் தனக்குத்தானே ஏற்றுக்கொண்ட ஒரு கடுமையான தண்டனை இது என்று கூடக் கூறலாம். அந்தத் தண்டனையின் கனத்தைத் தாங்கியவாறு அவர் ஒரு பைத்தியம் பிடித்த மனிதனைப் போல க்ரீன் ரூமுக்கும் மேடைக்கும் இடையில் அங்குமிங்குமாய் நடந்து கொண்டிருந்தார். கலை கரீம்பாய்க்கு ஒரு நோய் மாதிரிதான்.

நாடகம் தொடங்குவதற்கு முப்பது நிமிடங்களுக்கு முன்பே தியேட்டர் முழுமையாக நிறைந்துவிட்டது. பெரிய சிவப்பு எழுத்துக்களில் ‘ஹவுஸ் ஃபுல்’ என்று எழுதப்பட்ட ஒரு அறிவிப்புப் பலகையை ஜாவேத் நுழைவாயிலில் கொண்டு போய் வைத்தான். அந்தப் பலகை அந்தத் தியேட்டரையே ஒரு திரைப்பட கொட்டகையாக மாற்றியது. அப்படிப்பட்ட ஒரு அறிவிப்புப் பலகை அந்தத் தியேட்டரிலேயே இப்போதுதான் முதல் தடவையாக வைக்கப்படுகிறது. அதைப் பார்த்த நாராயணன் கேட்டான். “இதை எங்கே நீ வாங்கினே?”

“நான் வர்றப்பவே எழுதி எடுத்திட்டு வந்தேன்” - ஜாவேத் மகிழ்ச்சியுடன் சொன்னான். “இந்தக் கூட்டம் நான் எதிர்பார்த்ததுதான்.”

நடக்கப்போகும் காரியங்களை முன் கூட்டியே புரிந்து கொண்டு அதற்குப் பொருத்தமாகச் செயலாற்றக் கூடிய குணத்தைக் கொண்டவன் ஜாவேத் என்பதை இந்தச் சம்பவம் காட்டியது.

மேடையின் ஒரு ஓரத்தில் மறைந்து நின்று கொண்டு நாராயணன் அரங்கத்திற்குள் தன் பார்வையை ஓட்டினான். தூரத்தில் பால்கனிக்கு மேலே டிம்மர் போர்டின் அருகில் ஒரு தொப்பியை அணிந்துகொண்டு நிற்கின்ற பார்த்தாவை அவன் பார்த்தான். அவனுடைய அந்தத் தொப்பி கரீம்பாயின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் மஃப்ளரைப் போல எப்போதும் அவன் தலையில் இருக்கும். மழையோ பனியோ இல்லாத இந்தத் தியேட்டருக்குள் ஒரு தொப்பிக்கும் மஃப்ளருக்கம் என்ன தேவை வந்துவிட்டது என்பதைப் புரிந்து கொள்வது கொஞ்சம் சிரமமான விஷயம்தான். கரீம்பாயிடமோ பார்த்தாவிடமோ இதைப் பற்றி யாராவது கேட்டால், அதற்குரிய சரியான பதிலை அவர்களால் தர முடியுமா என்பது கூட சந்தேகமே.

அரங்கத்தை முழுமையாக ஆக்கிரமித்திருந்த ஜனக்கூட்டத்தில் தனக்கு அறிமுகமான முகங்கள் பல இருப்பதை அவனால் காண முடிந்தது. நான்காவதோ ஐந்தாவதோ வரிசையில் அமர்ந்திருந்த இடுங்கிய தோள்களைக் கொண்ட கோட் அணிந்திருந்த மனிதரை இதற்கு முன் தான் எங்கோ பார்த்திருப்பதைப் போல நாராயணனுக்குத் தோன்றியது.


இருந்தாலும் அந்த ஆள் யார் என்பதை நாராயணனால் எவ்வளவு முயற்சி செய்தும் ஞாபகத்தில் கொண்டு வர முடியவில்லை. அவர் அரங்கில் அமர்ந்து அவ்வப்போது தன்னுடைய காதுகளைத் தடவி விட்டுக் கொண்டிருந்தார். இரண்டாவது வரிசையில் அழகாக உடையணிந்து சீராகத் தலை முடியை வாரி அமர்ந்திருந்த கோகுலையும் நாராயணன் பார்த்தான். அவன் க்ரீன் ரூமிற்குள் வந்து கரீம்பாயிடமும் வசுந்தராவிடமும் சிறிது நேரம் பேசிவிட்டு அவள் கன்னத்தை காதல் மேலோங்கத் தடவிவிட்டு அரங்கத்தில் போய் அமர்ந்தான். நாடகக் கம்பெனியைச் சேர்ந்த ஒரு ஆள் என்ற நிலையில் இல்லாமல் பார்வையாளர்களில் ஒருவனாகப் போய் அமர வேண்டும் என்று மனதிற்குள் ஆசைப்பட்டான் நாராயணன். இந்த நாடகமும் அதில் வரும் முக்கிய கதாபாத்திரமான பகவந்தி என்ற தலித் இளம்பெண்ணும் தன்னுடைய படைப்புகள் என்ற உண்மையை  ஒரு நிமிடத்திற்காவது மறந்திருக்க அவன் முயற்சி செய்தாலும், அந்த முயற்சியில் அவன் தோல்வியடைந்தான் என்பதே உண்மை. பார்வையாளர்கள் கூட்டத்தில் தனக்குத் தெரிந்தவர்கள் யாரெல்லாம் அமர்ந்திருக்கிறார்கள் என்பதைத் தேடிக் கொண்டும் தேடாமலே கண்ணில் பட்ட சில முகங்களை யாரென்று ஞாபகப்படுத்திக் கொண்டும் அவன் அதே இடத்தில் நின்றிருந்தான். மேடைக்குப் பின்னால் கரீம்பாய் யாரையோ திட்டுவதும் உரத்த குரலில் பேசுவதும் அவன் காதுகளில் விழுந்தது. நாடகத்தின் திரைச்சீலை உயரும் நிமிடத்தில் கரீம்பாய் மற்றவர்களுக்கு மட்டுமல்ல, அவருக்கே கூட ஒரு தொந்தரவாக மாறிப் போவது எப்போதுமே இருக்கக்கூடிய ஒரு விஷயம்தான். கரீம்பாய் கழிப்பறைக்குள் நுழைந்து கதவை அடைக்காமலே ஓசை வரும் வண்ணம் சிறுநீர் கழித்தார். தன்னுடைய இன்ஷுரன்ஸ் கம்பெனியின் கேபினில் சூட்டும், டையும் அணிந்து மென்மையாகவும் மரியாதையுடனும் பேசும் கரீம்பாய் அல்ல, நாடகத்தை இயக்கும் கரீம்பாய். இப்படிப் பல விஷயங்களையும் மனதில் அசை போட்டவாறு நாராயணன் நின்றிருக்க, அரங்கில் இருந்த விளக்குகள் அணைந்து திரைச்சீலை மேலே உயர்ந்தது.

7

நாடகம் முடியவும் திரைச்சீலை கீழே விழவும் அரங்கம் காலியாகவும் ஆனபோது வசுந்தராவின் கண்கள் நான்கு பக்கமும் சுழன்றன. அவளுக்கு அப்போது யாருடைய நெஞ்சிலாவது தலையைச் சாய்த்துக் கொள்ள வேண்டும்போல் இருந்தது. அவள் கோகுலைத்தான் தேடுகிறாள் என்று எனக்குத் தோன்றியது. முன்வரிசை ஒன்றில் அழகாக முடியை வாரி அமர்ந்திருந்த கோகுல் எப்போது எழுந்து போனான் என்று யாருக்குமே தெரியாது. ஸைட்விங்கின் மறைவில் நின்று கொண்டு நாடகம் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் பிரதிபலிப்பு எப்படி இருக்கிறது என்பதை கவனித்துக் கொண்டிருந்த நான் அவன் உட்கார்ந்திருந்த நாற்காலி காலியாகக் கிடந்ததைத்தான் பார்த்தேன்.

“வசுந்தரா, நீ கவலைப்படாதே” - நான் அவளை சமாதானப்படுத்தினேன். “கோகுல் வெளியே எங்கேயாவது நிக்கணும்.”

வசுந்தராவின் கையில் சில மலர்கள் இருந்தன. கண்கள் நாலா பக்கங்களிலும் தேடிக் கொண்டிருக்கும்போது கூட அவள் அந்த மலர்களை இறுகப் பிடித்துக் கொண்டுதானிருந்தாள். நாடகம் முடிந்தவுடன் பார்வையாளர்கள் பகுதியிலிருந்து மேடைக்கு ஏறி வந்த கண்ணாடி அணிந்த ஒரு இளம்பெண் அவளுக்குத் தந்தவைதாம் அந்த மலர்கள்.

நான் காலியாகக் கிடந்த நாற்காலிகள் வழியாக நடந்து வெளியே போய் நின்று சுற்றிலும் பார்த்தேன். கோகுலை அங்கு எங்கும் காணோம். கேட்டினருகில் நின்று கொண்டிருந்த சில ரசிகர்களுடன் கரீம்பாய் என்னவோ பேசிக் கொண்டிருந்தார். அவரின் முகத்திலிருந்த ரம்மின் வாசனை ‘கும்’மென்று அடித்தது. நான் திரும்பவும் வசுந்தராவின் அருகில் வந்து என்னவெல்லாமோ சொல்லி அவளை சந்தோஷப்படுத்த முயன்றேன். இடையில் என்னையே அறியாமல் அவளை நான் பகவந்தி என்று அழைத்து விட்டேன். குண்டேச்சாவின் பாத்திரத்தை நல்ல முறையில் நடித்த அலி அக்பர் தரையில் அமர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் அவன் குனிந்து என்னுடைய பாதத்தைத் தொட்டான். ஒரு முஸ்லீமாக இருந்தாலும் அவன் செயல்கள் ஒரு இந்துவின் செயலாகவே இருப்பதை நான் கவனித்தேன்.

விருப்பமில்லாத ஏதோ ஒன்றை விழுங்கிய ஒரு மனிதனைப் போல பார்த்தா நின்றிருந்தான்.

“அயாம் ஸாரி நாராயணா” - பார்த்தா என்னிடம் சொன்னான். “அது என்னோட தப்பு இல்ல.”

“எனக்குத் தெரியும்.”

நான் அவனை சமாதானப்படுத்த முயன்றேன்.

லைட்டிங்கை வைத்து எத்தனையோ சித்து வேலைகள் செய்து காட்டத் தெரிந்த பார்த்தா அந்த ஒரு காட்சிக்காக எத்தனையோ நாட்கள் தன்னுடைய அனுபவத்தைச் செலவிட்டான். ஆனால், அவன் போட்ட கணக்கை பார்வையாளர்கள் தோல்வியடையச் செய்து விட்டார்கள். குண்டேச்சா பகவந்தியின் உடலில் இருந்த ஆடைகள் முழுவதையும் உருவியவுடன், அவள் பிறந்த மேனியுடன் நின்றிருக்கிறாள். அப்போது பார்த்தாவின் லைட்டிங்கைத் தோற்கடிக்கும் விதத்தில் நாடகம் பார்த்துக் கொண்டிருந்தோர்களிடமிருந்த ஏராளமான கேமராக்களின் ஃப்ளாஷ்கள் தொடர்ந்து அவள் மேல் விழுந்த வண்ணம் இருந்தன.

“கேமராக்களை உள்ளே கொண்டு வரக் கூடாதுன்னு நாம முன் கூட்டியே சொல்லாம விட்டது நம்மோட தவறுதான்.”

ஜாவேத் சொன்னான். நடக்கப் போகிற விஷயங்கள் பலவற்றையும் முன்கூட்டியே நினைக்கும் அவனுக்குக் கூட அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடக்கும் என்று முன்பே தெரியாமல் போய்விட்டது. அதற்காக ஜாவேத் மிகவும் வருத்தப்பட்டான். பார்வையாளர்களிடம் இவ்வளவு கேமராக்கள் எப்படி வந்தன என்பதை அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. நாடகத்தைப் பார்க்க வருபவர்கள் எதற்காக கேமராக்களையும் கையோடு எடுத்துக்கொண்டு வர வேண்டும்? இரண்டு மணி நேரம் நடந்து கொண்டிருந்த நாடகத்தில் வேறு எந்த இடத்திலும் யாருடைய கேமராவும் ‘க்ளிக்’ ஆகவில்லை. எல்லோருமே அந்த ஒரு காட்சிக்காகவே காத்திருக்கின்றனர். விஷயங்களைத் திட்டம் போடுவதிலும், அவற்றைச் செயல்படுத்துவதிலும் ஜாவேதைப் போல சாமர்த்தியம் உள்ள மனிதர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்தச் சம்பவமே காட்டிவிட்டது.

“நீ அதுக்காக வருத்தப்படாதே” - நான் பார்த்தாவைப் பார்த்து சொன்னேன். “இனியும் நமக்கு மேடையேற்றம் இருக்குல்ல! நாளையில இருந்து கேமராக்களை உள்ளே விடக்கூடாது...”

ஆனால், பார்த்தாவின் கவலை மாறியதாகத் தெரியவில்லை. முதல் மேடையேற்றம்தான் மிகவும் முக்கியமானது. அது வீணாகி விட்டது. நாடகத்தை மதிப்புடன் பார்க்கக் கூடிய ரசிகர்களும் பத்திரிகையாளர்களும் முதல் மேடையேற்றத்திற்குத்தான் வருவார்கள். நாளை நாடகத்தைப் பார்க்க வருபவர்கள் வேறு வகைப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். நாளை கேமராக்களை யாரும் உள்ளே கொண்டு வரக் கூடாது என்று தடை போட்டால் கூட, அதை எத்தனைப் பேர் உண்மையாகவே கேட்டு அதன்படி நடப்பார்கள்? ஒரு வேளை இன்று இருந்ததைவிட நாளை இன்னும் அதிகமான பேர் கேமராக்களுடன் வரலாம்.


குண்டேச்சா பகவந்தியின் உடலிலிருந்த கடைசி துணியையும் அவிழ்த்து எரிகிறபோது, ஹேன்ட் பேக்குகளிலிருந்தும் தோல் பைகளிலிருந்தும் பூனைகளைப் போல அந்த கேமராக்கள் வெளியே குதித்து வரலாம். அதையெல்லாம் மனதிற்குள் நினைத்துப் பார்த்தவாறு நின்றிருந்த பார்த்தா அதிர்ந்து போய்க் காணப்பட்டான். நியாயங்கள் பலவற்றைச் சொல்லி அவனைச் சமாதானப்படுத்த முயன்ற என்னுடைய முயற்சி பலித்ததாக எனக்குத் தெரியவில்லை.

கோகுலைக் காணாமல் இப்போதும் வருத்தத்துடன் நின்றிருந்த வசுந்தராவைப் பார்த்த நான் பார்த்தாவிடமிருந்து நகர்ந்து அவள் இருக்குமிடத்திற்குச் சென்றேன். நான் அவளிடம் சொன்னேன். “நான் உன்னை கோகுலோட வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறேன். உன் பேகை எடுத்துட்டு என்கூட வா.”

“இல்ல... நான் வரல...” - அவள் சொன்னாள். “நான் ஜாவேத் கூட என் வீட்டுக்குப் போறேன்.”

“வா...” - ஜாவேத் சொன்னான். “வீட்டுக்குப் போனதும் ஏதாவது சாப்பிட்டுட்டு நல்லா தூங்கு. உனக்கு இப்போ தேவை கோகுல் இல்ல. நல்ல தூக்கம்தான்.”

அவளால் இன்று தூங்க முடியுமா? அவளின் இடத்தில் நான் இருந்தால் என்னால் முடியுமா? எப்படியாவது கோகுலைத் தேடி கண்டு பிடித்து அவளை அவன் கையில் ஒப்படைக்க வேண்டும். இந்த நிமிடத்தில் அவனால் மட்டுமே அலங்கோலப்பட்டுக் கிடக்கும் அவளுடைய மனதைச் சரி பண்ண முடியும். நான் கோகுலுக்கு ஃபோன் பண்ணுவதற்காக மேனேஜரின் அறையை நோக்கிச் சென்றேன். அப்போது அவர் படுவேகமாக அங்கிருந்து என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

“என்ன இது மிஸ்டர்?” - அவர் கேட்டார். “என் தியேட்டரை கேபரே நடத்துற இடம்னு நீங்க நினைச்சிட்டீங்களா? விக்டர் கரீம்பாய் எங்கே? அவரைப் பார்த்து ரெண்டு வார்த்தைகள் நான் கேக்கணும்...”

ஆரவாரத்தைக் கேட்டு பாட்டிலை மூடிவிட்டு கரீம்பாய் எங்களை நோக்கி வந்தார். மேனேஜர் கிஷண் பல்லா அவர் பக்கம் திரும்பினார். “இருபது வருடமா இருக்குற நம்மோட நட்பை ஒரேயடியா முடிவுக்குக் கொண்டு வரணும்னு நீங்க திட்டம் போட்டுட்டிங்களா?”

“இல்ல...”

“அப்படின்னா இதுக்கு என்ன அர்த்தம்? நாளைக்கு இங்கே போலீஸ் வரமாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? அப்படி ஏதாவது நடந்தா, நான் உங்களை மன்னிக்க மாட்டேன். இந்த தியேட்டரோட வரலாற்றில் அப்படியொரு சம்பவம் இதுவரை நடந்தது இல்லன்றதை நீங்க ஞாபகத்துல வச்சுக்கங்க.”

“அப்படி எதுவுமே வராது, கிஷண். நாங்க கேபரேக்காரங்க இல்ல. எல்லோரும் மதிக்கிற கலைஞர்கள்தான்”- கரீம்பாய் சொன்னார். நான் அதோடு சேர்த்துச் சொன்னேன். “நாடக வரலாற்றில் இடம் பிடிக்கப் போகிற ஒரு ட்ராமாவைத்தான் நாங்க இங்கே நடத்திக்கிட்டு இருக்கோம். இது உங்களோட தியேட்டரின் மதிப்பை மேலும் கூட்டத்தான் செய்யும்.”

“நான் எதையும் கேட்க விரும்பல...” - பல்லா சொன்னார். “போலீஸ் கமிஷனரோட கையெழுத்துப் போட்ட அனுமதி கடிதம் கொண்டு வந்து காட்டினா மட்டுமே நாளைக்கு நான் தியேட்டரைத் திறந்து விடுவேன்.”

இவ்வளவையும் சொன்ன அவர் வேகமாகக் கதவை அடைத்து விளக்குகளை அணைத்துவிட்டு, அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார். அவர் பண்ணிய ஆர்ப்பாட்டத்தில் நான் கோகுலைப் போய் பார்க்க வேண்டும் என்ற விஷயத்தையே மறந்து விட்டேன். அவர் மிரட்டியதை, சொல்லப் போனால் நாங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவேயில்லை. தர்மசங்கடமான சூழ்நிலையை உருவாக்கக் கூடிய எந்த விஷயத்தையும் அப்போது நாங்கள் மனதில் நினைத்துப் பார்க்கக் கூடிய நிலையில் இல்லை. நடிகர் - நடிகைகள் ஒப்பனையைக் கலைத்து முகத்தைச் சரி செய்து கொண்டிருந்தார்கள். கரீம்பாயும் பார்த்தாவும் காலியாகக் கிடந்த மேடையில் அமர்ந்து ஒரே பாட்டிலில் இருந்து ரம்மை ஊற்றி மாறி மாறி குடித்துக் கொண்டிருந்தார்கள். நானும் ஜாவேத்தும் வசுந்தராவை அழைத்துக் கொண்டு கோகுலின் வீட்டிற்குப் புறப்பட்டோம். ஜாவேத் அவளிடம் சொன்னான். “தங்கச்சி... நீ எதுக்கு தேவையில்லாம உணர்ச்சிவசப்படுறே? நாடக வரலாற்றில் ஒரே இரவிலேயே ஒரு இடத்தைப் பிடிச்சிக்கிட்டவ நீ...”

அவளின் தலைக்குள் இப்போது எதைப் பற்றிய சிந்தனை ஓடிக் கொண்டிருக்கும் என்பதை அறிய நான் முயற்சித்தேன். ஒரு வேளை திரும்ப வீட்டிற்குப் போகிறபோது, தன் தாய் தன்னிடம் எப்படி நடந்து கொள்வாள் என்பதைப் பற்றி அவள் யோசித்துக் கொண்டிருப்பாளோ? என்ன காரணத்திற்காக கோகுல் யாரிடமும் ஒரு வார்த்தை கூட கூறிக் கொள்ளாமல் அரங்கத்தை விட்டு வெளியேறினான் என்பதைப் பற்றியும் அவள் மனம் நினைத்துக் கொண்டிருக்கலாம். போகும்போது  ஜாவேத் அரங்கத்தில் பார்வையாளர்கள் மத்தியில் மாஸ்ஸியைப் பார்த்ததாகக் காதுக்குள் சொன்னான். வழக்கம்போல் அவன் தந்தை இடுங்கிய தோள்களைக் கொண்ட கோட் ஒன்றை அணிந்துகொண்டு அவ்வப்போது காதுகளைத் தடவிக் கொண்டிருந்தாரென்றும் அவன் சொன்னான். இறந்துபோன மனிதர்களை மட்டுமல்ல, பந்தயக் குதிரைகளைக் கூட அவன் அவ்வப்போது பார்ப்பதுண்டு என்பதையும் நான் நினைத்துப் பார்த்தேன். ஒரு நடுப்பகல் நேரத்தில் ரேஸ்கோர்ஸில் கடுமையான வெயிலில் இறந்துபோன பிவரிகிங் என்ற பந்தயக் குதிரை இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பந்தயக் குதிரையுடன் உறவு கொள்வதை தான் பார்த்ததாக அவன் சமீபத்தில் ஒரு நாள் என்னிடம் சொன்னான்.

கோகுலின் வீட்டை அடைந்தபோது, எங்களுக்கு பயங்கர ஏமாற்றமாக இருந்தது. அங்கு சிறிது கூட வெளிச்சம் இல்லை. வாசல் கதவு வெளியே பூட்டு போட்டு பூட்டப்பட்டிருந்தது.

“நீங்க இதுக்காக கஷ்டப்பட வேண்டாம்” -ஜாவேத் என்னிடம் சொன்னான். “நான் என் தங்கச்சியைக் கூட்டிட்டுப் போய்க்கிறேன்.”

“வேண்டாம்”- நான் சொன்னேன். “வசுந்தராவை உங்க அம்மாக்கிட்ட ஒப்படைச்சிட்டுத்தான் நான் திரும்புவேன்.”

ஆனால், அதற்கு ஜாவேத் சம்மதிக்கவில்லை.

அதனால் நான் தன்னந்தனியாக அந்த நள்ளிரவு நேரத்தின் அமைதியைச் சுமந்தபடி என்னுடைய வீட்டை நோக்கி நடந்தேன். வாழ்க்கையின் அர்த்தமுள்ளதைப் பற்றியும், அர்த்தமில்லாததைப் பற்றியும் உள்ள சிந்தனைகள் ஒரு பம்பரத்தைப் போல என் தலைக்குள் சுழன்று கொண்டிருந்தன. பயங்கர களைப்பு காரணமாக என் கால்கள் மிகவும் தளர்ந்து போய்விட்டன. கண்களைத் தூக்கம் வந்து முத்தமிட்டுக் கொண்டிருந்தது. நாடகம் எழுதி மற்றவர்களின் வாழ்க்கையில் பிரச்சினைகளை உண்டாக்கிவிட்டு, தூங்கியவாறு வீட்டை நோக்கி நடந்து போய்க் கொண்டிருக்கும் ஒரு ரசிகனே நான்.

8

நாடகத்தின் கடைசி மேடையேற்றம் முடிந்த பிறகு, அந்த நாடகத்துடன் தொடர்பு கொண்ட எல்லோரும் கரீம்பாயின் வீட்டில் கூடுவது மரபு. இதுவரை அவர் இயக்கிய நாடகங்கள் பலவும் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் மேடையில் நடத்தப்பட்டிருக்கின்றன. ‘ஒரு தலித் இளம் பெண்ணின் கதை’க்கு முன்பு அவர் இயக்கிய பீட்டர் ஹான்ட்கேயின் நாடகத்தை ஐந்து முறை தொடர்ச்சியாக மேடையேற்றியிருக்கிறார்.


பல நாட்கள் தியேட்டரில் பாதிக்கு மேல் காலியாகக் கிடந்தாலும், அந்த நாடகம் கரீம்பாயின் மாஸ்டர் பீஸ் என்று எல்லோராலும் கருதப்பட்டது.

நாராயணன் எழுதிய நாடகத்தின் முதல் மேடையேற்றம் முடிந்த அடுத்த நாள் எல்லோரும் கரீம்பாயின் வீட்டில் கூடினார்கள். காரணம்- மீண்டும் அந்த நாடகம் மேடை ஏறப்போவதில்லை. அடுத்து வந்த நாட்களில் நாடகம் நடக்காமல் தியேட்டர் இருட்டுக்குள் மூழ்கி ஆள் நடமாட்டமே இல்லாமல் கிடந்தது. கோடை முடிந்து சீஸன் ஆரம்பித்திருக்கும் நேரமாதலால் சாதாரணமாக இந்தச் சமயத்தில் தியேட்டர் வெளிச்சத்திலும், சத்தத்திலும், மக்கள் கூட்டத்திலும் மூழ்கிப் போய் ஒரு திருவிழா கோலாகலத்துடன் காணப்பட வேண்டும். ஆனால், ஒரு மரண வீட்டில் இருக்கும் அமைதி அங்கு சூழ்ந்திருந்தது. தியேட்டரின் முன்பக்கக் கண்ணாடிகள் உடைந்து கிடக்கின்றன. கேட்டின் இருபக்கங்களிலும் உருண்டையாக இருந்த விளக்குகள் உடைக்கப்பட்டிருந்தன. வெளியே கார்களை நிறுத்துமிடத்திற்கு அருகில் ஜோடியைப் பிரிந்த ஒரு ஒற்றைச் செருப்பு அனாதையாக்கி கிடப்பதைப் பார்க்கலாம்.

எல்லோரும் வந்துவிட்டார்கள் என்பதை உறுதிப்படுத்திய பிறகு கரீம்பாய் சொன்னார். “நம்மோட புதிய நாடகத்தைப் பலரும் ஒரு தோல்வியாகப் பார்க்கலாம். நாடகக் கலையைப் பற்றி நல்லா தெரிஞ்சவங்க இதை ஒரு பெரிய வெற்றியாகவும் நினைக்கலாம். நம்மோட புதிய முயற்சி ஒரு தோல்வியா வெற்றியான்றது இங்கே பிரச்சினையில்ல...”

“சார்... கலையில் தோல்வியும் இல்ல- வெற்றியும் இல்லன்றது எங்களுக்கு நல்லாவே தெரியும்”- கெஸ்ட் ஹவுஸில் தங்குபவர்களுக்கு பெண்களைக் கூட்டிக் கொடுக்கும் ஜாவேத் சொன்னான்.

“ஆமாம்... இதைப் போன்ற அடிப்படையான விஷயங்களை உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்ல. நீங்க விஷயங்கள் தெரிஞ்சவங்க. இல்லாட்டி என்னோட நாடகக் குழுவுல ஒருத்தரா நீங்க வந்து இணைஞ்சிருக்க மாட்டீங்க.”

அவர் மீண்டும் நான்கு பக்கங்களிலும் கண்களை ஓட்டினார். முன்பு ராதிகா அமர்ந்திருந்ததைப்போல ஒரு மூலையில் தலையைக் குனிந்தவாறு வசுந்தரா எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். எல்லோரும் அங்கு வந்து விட்ட பிறகும், கோகுல் மட்டும் இன்னும் வரவில்லை. நல்ல பார்வை சக்தியைக் கொண்ட கரீம்பாய் அதை கவனிக்காமல் இல்லை.

“நாம இப்படியொரு நாடகத்தை நடத்தினோம்ன்றது உண்மையிலேயே குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்தான். நாலோ அஞ்சோ தடவைகள் மேடையேறக் கூடிய அளவுக்கு உள்ள நாடகம்தான் இது. ஆனா, நம்மோட துரதிர்ஷ்டம்னுதான் சொல்லணும்... ஒரு தடவை மேடை ஏறினதோட, இந்த நாடகம் ஒரு முடிவுக்கு வந்திடுச்சு. ஆனா, இந்த நகரத்துல நாடகக் கலைன்ற ஒண்ணு நிலை பெற்று நிக்கிற காலம் வரைக்கும் நம்மோட இந்த நாடகம் நினைக்கப்படும்ன்றது மட்டும் நிச்சயம்.”

கரீம்பாய் மீண்டும் சுற்றிலும் கண்களை ஓட்டினார். அவரின் பார்வை வசுந்தராவின் மீது பதிந்தது. அவர் தொடர்ந்து சொன்னார். “இங்கே வராமல் இருக்கும் கோகுல் கூட தெரிஞ்சிக்கணும்ன்றதுக்காகத்தான் நான் இதைச் சொல்றேன். நாடக வரலாற்றில் நாம நுழைஞ்சிருக்கோம்னா அதுக்கு முக்கியமான காரணமா இருக்குறவ வசுந்தரா.”

நாடகத்துடன் தொடர்பு கொண்டவர்கள் கூடியிருந்த கரீம்பாயின் வீடே கைத்தட்டலால் அதிர்ந்தது. கரீம்பாய் வசுந்தராவை தன்னுடைய நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டு அவளின் நெற்றியில் முத்தமிட்டார். அவர் சொன்னார். “கலை கூட ரத்த சாட்சிகளை உருவாக்கத்தான் செய்யுது... அப்படிப்பட்ட ஒரு ரத்த சாட்சிதான் மகளே நீ...”

அங்கு அமைதி பயங்கரமாகச் சூழ்ந்திருந்தது.

ஒரு லட்சம் வீட்டைச் சேர்ந்தவர்கள் இன்று காலையில் வெளிவரும் நாளிதழைப் புரட்டியவுடன், உடம்பில் துணி எதுவும் இல்லாமல் நின்றிருக்கும் பகவந்தியைத்தான் பார்த்தார்கள். வர்கீஸ் எடுத்த வசுந்தராவின் பேட்டியின் சில பகுதிகளும் கட்டம் கட்டப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருந்தது.

“எனக்கு ஒரு விருப்பம்” - குளிர்வதைப் போல் சட்டையின் பாக்கெட்டுகளுக்குள் கைகளை நுழைத்துக் கொண்டு சுவரோடு சேர்ந்து நின்றிருந்த நாராயணன் சொன்னான். “என்னோட இந்த நாடகத்தை இப்போ... இந்த இடத்துல வச்சு நெருப்புல எரிக்கணும்னு நினைக்கிறேன்.”

மூன்று புகழ் பெற்ற பதிப்பாளர்கள் இன்று நாராயணனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனே அவன் நாடகத்தை நூல் வடிவில் தாங்கள் கொண்டுவரத் தயாராக இருப்பதாகச் சொன்னார்கள். அவர்களில் ஒருவர் முன் பணத்துடன் ஒரு அழகியை அவனிடம் அனுப்பி வைக்கவும் செய்திருந்தார்.

“இவ்வளவு காலமும் நான் நினைச்சிருந்தது; முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட ஒரு நாடகத்திற்கு ஒரே ஒரு லட்சியம்தான் இருக்கு. அப்படின்றதுதான்... அது... அந்த நாடகத்தை மேடையில நடத்துறது” - நாராயணன் எல்லோரையும் பார்த்துச் சிரித்தான். தன்னைத் தானே பார்த்துச் சிரித்துக் கொள்ளும் ஒரு சிரிப்பு அது. உமிக்கரி தீர்த்து போய்விட்டதால், சாதாரணமாகக் காணப்படும் வெண்மை அவன் பற்களில் காணப்படவில்லை. முகத்தில் இருந்த சிரிப்பை மாற்றிவிட்டு, மீண்டும் கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு தன் பேச்சை அவன் தொடர்ந்தான். “முழுமையாக முடிந்த ஒரு நாடகத்துக்கு இன்னொரு லட்சியமும் இருக்குன்றதை நான் புரிஞ்சுக்கிட்டேன். நாம அந்த லட்சியத்தை நிறைவேற்றுவோம்.”

நாராயணன் நாடகத்தின் கையெழுத்துப் பிரதியுடன் மொட்டை மாடிக்கு ஏறினான். மஞ்சள் பித்தம் பிடித்த ஒரு இரவு நேரமாக இருந்தது அது. அவன் நாடகத்தின் கையெழுத்துப் பிரதியை மொட்டை மாடியின் நடுவில் வைத்து, ஜாவேத்தின் கையிலிருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை வாங்கி கையெழுத்துப் பிரதியின் மேல் அதை ஊற்றினான். அவன் தீப்பெட்டியை உரசி தன்னுடைய நாடகத்திற்கு நெருப்பால் ஒரு முத்தம் தந்தான். கரீம்பாயின் வீட்டு மொட்டை மாடியில் நெருப்பு கொழுந்து விட்டு எரிந்ததால், நல்ல பிரகாசமாக இருந்தது. அந்த நெருப்பு தரை வழியாகப் பரவி அரைச்சுவரில் போய் முட்டி நின்றது.

“லெட் தி பார்ட்டி பிகின்.”

கரீம்பாய் அறிவித்தார். எல்லோரும் அவரைப் பின் தொடர்ந்து இருண்டு போயிருந்த படிகளில் இறங்கினார்கள்.

மொட்டை மாடியில் தனியாக நின்றிருந்த வசுந்தரா தன்னுடைய கை விரல்களில் பிரகாசித்துக் கொண்டிருந்த மோதிரத்தை மெதுவாகக் கழற்றி, எரிந்து தாழ்ந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டாள்.

கீழே கரீம்பாயின் உட்காரும் அறையில் பாட்டில்களின் மூடிகள் பயங்கர சத்தத்துடன் திறக்கப்பட்டன.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.