Logo

உத்தராயணம்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 5976
uttharayanam

சுராவின் முன்னுரை

லையாளத்தின் புகழ்பெற்ற நவீன எழுத்தாளர்களில் ஒருவரான ஆனந்த் (Anand) எழுதிய ‘உத்தராயணம்’ (Utharayanam) புதினத்தை அதே பெயரில் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். 1936-ஆம் ஆண்டில் பிறந்த ஆனந்தின் முழுப் பெயர் பி.சச்சிதானந்தன். சிவில் எஞ்ஜினியரிங் பட்டதாரியான இவர் போர்பந்தர், வங்காளம் தொடங்கி இந்தியாவின் பல இடங்களிலும் பணியாற்றியிருக்கிறார்.

நான்கு ஆண்டுகள் ராணுவத்தில் இருந்திருக்கிறார். புதுடில்லியில் சென்ட்ரல் வாட்டர் கமிஷனில் ப்ளானிங் டைரக்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார். இப்போது இவர் வசிப்பது புதுடில்லியில்.

இவரின் முதல் நூல் ‘ஆள் கூட்டம்’. கேரள சாகித்ய அகாடமி விருது (Kerala Sahithya Academy Award), வயலார் விருது (Vayalar Award) போன்ற பல விருதுகள் ஆனந்தைத் தேடி வந்திருக்கின்றன. ‘ஆள் கூட்டம்’ நாவலுக்குக் கிடைத்த யஸ்பால் விருதையும் ‘அபயார்த்திகள்’ என்ற நூலுக்குக் கிடைத்த கேரள சாகித்ய அகாடமி விருதையும் சில காரணங்களால் இவர் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் ஆனந்த், ‘உத்தராயணம்’ நாவலை 1982-ஆம் ஆண்டில் எழுதினார். இலக்கிய வாசகர்கள் மத்தியில் சிறப்பான ஒரு பெயரை இப்புதினம் பெற்றிருக்கிறது. இந்நாவலைப் படிக்கும்போது, ஆனந்தின் பரந்த அறிவையும் புதுமையாக எழுத வேண்டும் என்ற அவரின் ஆர்வத்தையும் நம்மால் உணர முடியும். பலதரப்பட்ட மலையாள எழுத்தாளர்களின் படைப்புகளையும் மொழிபெயர்த்திருக்கும் நான் ஆனந்தின் நல்ல ஒரு இலக்கிய ஆக்கத்தை மொழி பெயர்த்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

                  அன்புடன்,

சுரா (Sura)


"இனிமேல் அதற்கு நீர் ஊற்ற வேண்டாம்'' - வாசலில் இருந்த செடிகளுக்கு ஊற்றுவதற்காக நீர் எடுத்துக்கொண்டு போன மனைவியிடம் நான் சொன்னேன். காலையில் வராந்தாவைக் கழுவும்போது ஒன்றோ இரண்டோ வாளி தண்ணீரைச் செடிகளுக்கு ஊற்றுவது அவளுடைய வழக்கம். "கொண்டுவந்துவிட்டேனே'' என்று கூறியவாறு அவள் வாளியில் இருந்த நீரைச் செடிகளின் கீழ்ப்பகுதியில் ஊற்றினாள்.

என்னுடைய சிறு வாசலில், என்னால் வளர்க்க முடிந்த தோட்டத்தில் ஆன்ட்ரிரைனத், டயாந்தஸ்ஸி ஆகியவற்றின் இரண்டு வரிசைகள் மட்டுமே இருந்தன. குளிராக இருக்கும் இரண்டு மூன்று மாதங்களில் அவை அங்கு ஒரு புதிய உலகத்தைப் படைத்தன. இப்போது கோடைகாலம் தொடங்கிவிட்டது. இனிமேல் அவை காயத்தான் வேண்டும்.

"வீட்டுத் தாவரங்களின் வாழ்க்கைச் சக்கரம் வினோதமானது''- நான் எனக்கிருக்கும் சிறிதளவு அறிவை அவளுக்கும் பரிமாறினேன். "நம்மை மாதிரி வயசாகிப் போய் உடல் தளர்ந்து அவை இறப்பது இல்லை. தட்ப வெப்ப நிலையில் உண்டாகும் மாற்றமும் பகல் நேரத்தின் கடுமையும் அவற்றின் மரணத்தைத் தீர்மானிக்கும் சக்திகள். காலநிலை அவற்றுக்கு அனுகூலமாக இல்லாதபோது அவை கூட்டத்தோடு அழிந்து போயிடும். காலநிலை அனுகூலமாக ஆகும்வரை அவற்றை அதற்குப் பிறகு பார்க்கவே முடியாது. உத்தராயண மாதங்களில் பூமியின் வடக்கு பாகங்களிலும் தட்சிணாயண மாதங்களில் பூமியின் தெற்குப் பகுதிகளிலும் மனிதர்கள் இல்லாத ஒரு சூழ்நிலையைக் கற்பனை பண்ணிப் பார்க்க முடியுமா?''- நான் சிரித்தேன்.

அவளுக்கும் அது ஒரு ஆச்சரியமான விஷயமாகவே தோன்றியது. அவளும் சிரித்தாள். அடுத்த சில நொடிகளில் சிரிப்பு திடீரென்று நின்றது. பொழுதுபோக்காகக்கூட அந்தக் கற்பனை என்னை பயமுறுத்தியது. ஒவ்வொரு வருடமும் சில மாதங்களுக்கு நம்முடைய இந்த பூமி சுடுகாடாக மாறுவது... பிறகு முன் தலைமுறையின் வாழ்க்கை அனுபவங்களுடன் எந்த விதத்திலும் தொடர்பில்லாத ஒரு தலைமுறை புதிதாகத் தோன்றி வருவது... பழைய தலைமுறையினர் விட்டுப் போன வீடுகளிலும் தொழிற்சாலைகளிலும் பேருந்துகளிலும் அவர்கள் நுழைந்து ஆக்கிரமிப்பது...!

"நாம ஏதாவது நிரந்தரமா இருக்குற செடிகளையும் இனிமேல் வளர்க்கணும். மலர்கள் இல்லைன்னாக்கூட பசுமையாவது இருக்குமில்லையா?''- என் மனைவி சொன்னாள்.

"சரிதான்... இந்த சுடுகாட்டு வெறுமையைப்போல வாசல் இல்லாம இருக்கும். ஆனால் அந்தச் செடிகளுக்கும் கால நிலைக்கேற்றபடி இலை விழுறது அது இதுன்னு பல விஷயங்கள் இருக்கத்தான் செய்யும்.''

"மாறுதல் என்பது நல்லதுதான்.''

"மரணம்தான் மிகவும் மோசம். அப்படித்தானே?''

எப்போதும் இல்லாத ஒரு நிலையை விவாதம் சென்று அடைந்திருந்தது. அதுதான் காரணமாக இருக்க வேண்டும்- அவள் கேள்வி கேட்பதைப்போல என்னைப் பார்த்தாள். நான் உள்ளே சென்றேன். நிறைய வேலைகள் இருந்தன. தொப்பியையும் காலணிகளையும் சுத்தம் செய்ய வேண்டும். குளிக்க வேண்டும்.

அவளுக்கும் வேலைகள் இருந்தன. என்னை தயார் பண்ணி தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்க வேண்டும். பிள்ளையைப் படிக்கச் செய்ய வேண்டும். வேலை இல்லாதவர்கள் யாரும் இல்லை.

"நிற்பவன் உட்கார்ந்திருக்கிறான். உட்கார்ந்திருப்பவன் படுத்திருக்கிறான். படுத்துவிட்டால் இறந்து விடுவான்'' - இப்படி எங்களுடைய கம்பெனியின் சேர்மன் யாரையோ மனதில் வைத்துக்கொண்டு சொன்னார். "இந்த கம்பெனி நின்று கொண்டிருக்கவில்லை. ஓடிக் கொண்டே இருக்கிறது.'' அதைக் கூறுவதற்கு அவர் எதற்காக மே தினத்தைத் தேடிப் பிடித்தார் என்பது எனக்குப் புரியவில்லை. மே தினத்தில் மட்டுமல்ல- எல்லா முதல் தேதி அன்றும் ஒவ்வொரு தொழிலாளிகளுக்கும் கிடைக்கக்கூடிய கம்பெனியின் சம்பளப் பொட்டலத்தில் எழுதப்பட்டிருக்கும் வாசகம் அதுதானே! பட்ங் ஈர்ம்ல்ஹய்ஹ் ண்ள் ர்ய் ற்ட்ங் ம்ர்ஸ்ங்.

தொப்பியையும் ஷூக்களையும் துடைத்து சுத்தம் செய்து விட்டு, சவரம் செய்து முடித்து, குளித்து, ஆடைகள் அணிந்து, பத்திரிகையுடன் நாற்காலியில் உட்கார்ந்தபோது எப்போதும்போல சமையலறையிலிருந்து மனைவி கேட்டாள்: "ஆம்லெட் வேணுமா? ஃப்ரை வேணுமா?''

"தாமதம் செய்யாமல் எதையாவது தயார் பண்ணு''- நான் சொன்னேன்.

நான் எதற்காக அப்படிச் சொன்னேன்? மணி ஏழரைதான் ஆகிறது. பேருந்து எட்டேகால் மணிக்குத்தான். எட்டு ஐந்துக்குப் புறப்பட்டால் பேருந்து நிறுத்தத்தை அடைந்துவிடலாம். நான் அவசரப்பட வேண்டிய அவசியமே இல்லை. வழக்கம்போல ஃப்ரை என்று கூறினாலே போதும். சமீபகாலமாக எல்லா விஷயங்களும் இப்படி வழக்கத்தை விட்டு விலகி நடந்து கொண்டிருக்கின்றன.

அவள் அதைக் கேட்கவேண்டிய அவசியமே இல்லை. நான் பொதுவாகவே முட்டை ஃப்ரைதான் சாப்பிடுவேன். எனினும் தினமும் தொழிற்சாலைக்குப் போவதற்காகத் தயார் பண்ணிக் கொண்டு நாற்காலியில் வந்து உட்காரும்போது, என்னுடைய விருப்பத்திற்கேற்றபடி எதையாவது எனக்குத் தயார் பண்ணித் தருகிறோம் என்ற தன்னுடைய சிறு திருப்திக்காகத்தான் அவள் கேட்கிறாள், "ஆம்லெட் வேணுமா... ப்ரை வேணுமா?" என்று. எனக்கு சில விருப்பங்கள் இருக்கின்றன என்று எனக்கு நானே திருப்திப்பட்டுக் கொள்வதற்காக நான் பதில் கூறுகிறேன், "ஃப்ரை" என்று. நான் ஃப்ரையை விரும்ப ஆரம்பித்திருக்கிறேன். பரந்த வெள்ளை வட்டத்திற்குள் சிறிய மஞ்சள் வட்டத்தைக் கொண்டிருக்கும் முட்டை ஃப்ரை. ஓரங்கள் பாதிப்படையாமல் முழுமையான வட்ட வடிவத்தில் மோல்டில் வார்த்தெடுத்ததைப்போல என் மனைவி மிகவும் அழகாக முட்டையை வார்த்தெடுப்பாள். நான் வற்புறுத்தி அது நடக்கவில்லை. அதுவும் அவளுடைய ஒரு திருப்தி, தனித்துவம்.

"காலையில் ஏதோ ஒரு சோர்வு. அதனால் அப்படிச் சொன்னேன்''. அவளுடைய அந்த சிறிய சந்தோஷத்தைக் காயப்படுத்தி விட்டோமோ என்று தோன்றியதால் மன்னிப்பு கேட்கிற மாதிரி நான் சொன்னேன். "பிறகு... ஆம்லெட்டாக இருந்தால் என்ன, ஃப்ரையாக இருந்தால் என்ன? உடைவதற்கு முன்புதான் முட்டைக்கு வடிவம் என்பதே.

உடைபட்டுவிட்டால், விருப்பங்களைப் பற்றி பிடிவாதம் பிடிப்பதில் அர்த்தமே இல்லை.''

உடலுக்குச் சற்று பாதிப்பு என்பதைக் கேட்டவுடன் அவள் சிறிது அக்கறையுடன் என்னைப் பார்த்தாள். தொடர்ந்து மெல்லிய சிரிப்பு ஒன்றை வரவழைத்தவாறு, சமையலறையைத் தேடிச் சென்றாள். மருத்துவப் பரிசோதனைகள் ஆரம்பமானதற்குப் பிறகு அவளுக்கு எல்லா விஷயங்களிலும் சந்தேகமும் பதைபதைப்பும் தான்.

நான் நாற்காலியில் சாய்ந்து பத்திரிகையை விரித்தேன். பொறியியல் துறைகளில் உற்பத்தி அதிகமாகியிருக்கிறது. தொழில்துறையில் நல்ல ஒரு சூழ்நிலை உண்டாகியிருப்பதற்கு அடையாளம் அது என்று அரசாங்க அதிகாரி கூறியிருக்கிறார். இந்தோ சைனாவில் ஏதோ தொழிற்சாலைக் கட்டிடம் முழுவதும் வெடிகுண்டு வெடித்ததால் நாசமாகி இருக்கிறது. எல்லாம் அழிந்த பிறகு, தங்களுடைய விமானங்கள் எந்தவிதக் கெடுதலும் உண்டாகாமல் திரும்பி வந்து சேர்ந்துவிட்டன என்று வெடிகுண்டு வெடிக்கச் செய்த நாடு கூறுகிறது. இல்லை- எதுவும் நாசமாகவில்லை.


எல்லா விமானங்களும் குண்டு வீசி தகர்க்கப்பட்டுவிட்டன என்று இன்னொரு நாட்டின் அதிகாரி கூறியிருக்கிறார். வறட்சியின் காரணமாக ஒரு ஊரில் மனிதர்கள் புற்களையும் வேர்களையும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது எந்த நாடாக இருக்கும்? ஏதோ நாடுகளில் இருந்து ஏதோ நாடுகளுக்கு அகதிகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறார்கள். பசியும் வன்முறையும் அதிகமாக ஆனதன் காரணமாக மனிதர்கள் இறந்த வண்ணம் இருக்கிறார்கள். பத்திரிகைகள் அந்தச் செய்திகள் ஒவ்வொன்றையும் பிரசுரிக்க வேண்டும். அது பத்திரிகைகளின் கடமை. நகரத்தில் தலை இல்லாத நான்கு உடல்கள் கிடைத்திருக்கின்றன. தாகம் எடுத்து அலைந்து திரிந்த எழுபது கிராமத்து ஆட்கள் தண்ணீர் இல்லாத ஒரு பாழும் கிணற்றுக்குள் விழுந்து இறந்துவிட்டார்கள். இந்தக் கோடை காலத்தில் பருத்தியின் சுகத்தைத் தரக்கூடிய அதே நேரத்தில்- சுருக்கங்கள் விழாமல் இருக்கும் ஆடைகளை அணியுங்கள். புகையிலைக்காக உண்டாக்கப்பட்ட ஃபில்டர், ஃபில்டருக்காக உண்டாக்கப்பட்ட புகையிலை. எப்போது பம்பாய் புகைவண்டிகளின் ஒரு சொர்க்கமாக ஆகப் போகிறது? அங்கு புதிதாகத் திறக்க இருக்கும் ஒரு ஹோட்டல் விசாரிக்கிறது. அதன் நோக்கம் பம்பாயை அப்படிப்பட்டவர்களின் ஒரு கனவாக ஆக்குவதுதான். முட்டையின் ஓரங்கள் பாதிப்படையாமல், வெள்ளை வட்டத்திற்குள் உருண்டையாக இருக்கும் மஞ்சள் வட்டத்துடன் தயார் பண்ணிப் பரிமாறுவது என்பது என்னுடைய மனைவியின் கடமை. அதை சாப்பிடுவது என்னுடைய வேலை.

பத்திரிகையை மேஜைமீது வைத்துவிட்டு நான் ஸ்டவ்வில் க்யாஸை அதிகரித்துக்கொண்டிருந்த என் மனைவிக்குப் பின்னால் போய் நின்றேன்.

"இந்த முட்டைகளைப் பற்றி அவர்கள் கூறுவது என்ன தெரியுமா?''- நான் சொன்னேன்: "கோழி உடலுறவு கொண்டாலும் அவை பெருகுவதில்லை என்று வைத்துக்கொள். மனிதர்களுக்கு சாப்பிடுவதற்காக மட்டுமே முட்டைகளை உண்டாக்குவது. தேவைப்படுகிற அளவிற்கு புரோட்டீன், வைட்டமின் ஆகியவற்றைச் சேர்ப்பது... வெஜிட்டேரியன் முட்டைகள்! ஆண் கோழிகளின் உதவியே இல்லாமல் பெண் கோழிகளே உண்டாக்குவது...''

அவள் சட்டியில் ஊற்றிய முட்டையின் ஓரத்தை மெது மெதுவாக ஸ்பூனால் சரிபண்ணிக் கொண்டிருந்தாள். அவளுடைய கண்கள் ஈரமாக இருப்பதை நான் பார்த்தேன். நான் அவளுடைய தோளில் கையை வைத்து கழுத்தில் இருந்த கறுத்த புள்ளியைத் தடவினேன். என் மனைவி... என்னுடைய எல்லா தொந்தரவுகள் எல்லாரையும்போல அவளையும் கவலைகொள்ளச் செய்கிறது. மற்றவர்கள் பரிதாபப்பட்டு கைகழுவி விட்டு விடலாம். அவளுடைய விதி- வெளியே காட்டிக் கொள்ளக்கூடாது. அனுபவிக்க வேண்டும். அவளை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக நான் ஒரு தமாஷ் சொன்னேன்: "நாம் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னால் காதலித்திருந்தோம் என்றால் அந்தக் கதையைக் கொஞ்சம் சிந்தித்துப் பார். நல்ல தமாஷாக இருக்கும் இல்லையா? அப்படியே இல்லையென்றாலும் நமக்கு இப்போ என்ன குறைச்சல்? குறைப்பட்டுக் கொள்வதற்கு எதுவும் இல்லை. தேவைப்படும் அனைத்தும் இருக்கின்றன... நம் மகனுக்கு ஒரு தங்கை வேணுமா என்ன?''

குறையொன்றும் இல்லை. குறைப்பட்டுக் கொள்வதற்கு எதுவும் இல்லை. ஃப்ரை பண்ணிய முட்டையை முள்ளால் எடுத்து வாய்க்குள் போடுவதற்கு முன்னால் நான் நினைத்தேன். படித்துத் தேர்ச்சி பெற்று நான் ஒரு இன்ஜினியராக ஆகிவிட்டேன். ஜமுனாதாஸ் அஜ்மீரியா இன்டஸ்ட்ரீஸுக்குச் சொந்தமான தொழிற்சாலையில் காஸ்ட்டிங் பிரிவில் வேலையில் சேர்ந்தேன். தினமும் காலையில் சாப்பிட்டு முடித்து தொப்பியையும் ஷூக்களையும் அணிந்து தொழிற்சாலைக்குச் செல்கிறேன். அவள் வளர்ந்து பெண்ணாகிவிட்டாள். என் மனைவியாக ஆகி விட்டாள். எனக்குச் சாப்பாடு தயாரித்துக் கொடுத்து, என்னுடைய சுக சௌகரியங்களை கவனிக்கிறாள். எங்களுக்கு ஒரு நான்கு வயது மகன் இருக்கிறான். இனியும் ஒன்று பிறக்கலாம். அதற்குமேல் பிறக்கக்கூடாது என்று அரசாங்கம் கூறுகிறது. நாங்கள் இப்போதும் இளம் வயதைக் கொண்டவர்களே. நாங்கள் சட்டத்தை மீற மாட்டோம். சட்டத்தின்மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நன்கு பழகுகிறோம். எங்களுடைய குடும்ப வாழ்க்கை திருப்தியாகவே இருக்கிறது.

போரில் வெற்றிகள், தொழில் துறையில் அமைதியான சூழ்நிலை, கிராமப் பகுதியில் வறட்சி போன்ற செய்திகளைக் கொண்ட பத்திரிகை காற்றில் பறந்து நாற்காலிகளுக்குக் கீழே போனது. நான் அதைப் படித்து முடித்துவிட்டேன். இனிமேல் அது எனக்குப் பயன்படாததாள், தூக்கத்திலிருந்து கண் விழித்து, பற்களைச் சுத்தம் செய்து, பால் குடித்து வரும் என் மகனுக்கு அது விளையாட்டுப் பொருளாக இருக்கும். அங்குமிங்குமாக கிழித்து அவன் விமானங்கள் உண்டாக்குவான். அவனுக்கு குறும்புத்தனம் அதிகம். அவனுடைய அம்மாவின் குற்றச்சாட்டு. பிள்ளைகளுக்குக் கொஞ்சமாவது குறும்புத்தனம் இருக்க வேண்டாமா? குறும்புத்தனம் என்பது பிள்ளைகளின் வேலை. வறட்சியையோ வறுமையையோ போரையோ பற்றிய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பது என்பது அவனுக்கோ அவனுடைய தாய்க்கோ எனக்கோ முடிகிற விஷயங்களா? அவற்றை நாங்கள் தீர்த்து வைப்போம் என்று காலையில் எங்களுக்கு பத்திரிகை தரும் பத்திரிகைக்காரனோ, அதை எழுதக்கூடிய செய்தியாளரோ நினைக்கவில்லை. மனிதர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் இருக்கிறது. விஞ்ஞானம் இருக்கிறது.

பிரச்சினைகள் இருக்கின்றன என்பதையும், அவை யார் மூலமாவது தீர்க்கப்பட்டு விடுகின்றன என்பதையும் பத்திரிகைகள் நமக்கு அறிவிக்கின்றன. நாம் அறிந்து கொள்கிறோம்; அவ்வளவுதான். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர்களுக்கென வேலை இருக்கிறது. ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு ஆர்வம். சற்று வயதான ஒரு மனிதர் பம்பாயில் புதிய ஹோட்டல் திறக்கப்படுவதற்காகக் காத்திருக்கிறார். சுகமாக வாழ்வதில் நம்பிக்கை வைத்திருக்கும் ஏதாவது தொழிலதிபராக இருக்க வேண்டும். சற்று நரைக்க ஆரம்பித்திருக்கும் ஃப்ரெஞ்ச் தாடி.. அருமையாகத் தைக்கப்பட்டிருக்கும் சூட்டும் சோடியாக் டையும்... தட்டிலிருந்து முள்ளால் எதையோ எடுத்து வாய்க்குள் நுழைப்பதற்கு மத்தியில் அவர் ஒரு சிறிய ஓரப் பார்வையை மட்டும் நம்மீது படர விடுகிறார். உணவுமீது மிகுந்த விருப்பம் கொண்ட மனிதராக இருந்தாலும், சாப்பாட்டு மேஜைக்கு முன்னால் அறுபது டிகிரி சாய்ந்து உட்கார்ந்துகொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அந்த மனிதரும் மிகுந்த அவசரத்தில்தான் இருக்கிறார். எது எப்படி இருந்தாலும், தலை இல்லாத உடல்களோ பாழும் கிணற்றில் கிடக்கும் பிணங்களோ அந்த மனிதரின் மூளையில் இருக்காது என்பது மட்டும் உண்மை. ராணுவ ஆட்சியோ, இனப் போராட்டமோ, தனிமனித விடுதலையோ அந்த மனிதரை பாதிக்காது. போன வாரம் மார்க்கெட்டில் ஒரு மனிதன் நின்று கொண்டிருந்த நிலையில் கீழே விழுந்து இறந்துவிட்டான். மாமிசக் கடைகளில் இருந்து வரும் அழுக்கு நீருக்கு அருகில் படார் என்று விழுந்தான். வாய்க்காலில் இருந்து தானே நீரை எடுத்து உதட்டில் வைத்தான்.


மாமிசம் வாங்குவதற்காக வரிசையில் நின்றிருந்த நான் அதைப் பார்த்தேன். அந்த மனிதனின் மனைவியையும் பிள்ளைகளையும் நான் பார்த்திருக்கிறேன். மார்க்கெட்டிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் பிச்சைக்காரர்கள் அவர்கள். எப்போதும் பிச்சைக்காரர்கள் இல்லை. அடுப்புக் கரியைக் கொண்டு வந்து வீட்டில் தருவது, விலை குறைவான உணவுக் கடைகளில் எச்சில் பாத்திரங்களைக் கழுவுவது ஆகிய சிறு சிறு வேலைகளை அவர்கள் செய்வார்கள். எதுவும் முடியாத நேரங்களில் பிச்சை எடுப்பார்கள். செத்து விழுந்தபோது, பிணத்தை அடக்கம் செய்வதற்கான செலவில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக மனைவியும் பிள்ளைகளும் அந்த மனிதனைத் தங்களுக்குத் தெரியவே தெரியாது என்று கூறி ஒதுங்கிக் கொண்டார்கள். பிணத்தை எடுத்துப் புதைக்காததற்காக அவர்களை யாராவது பழி சொல்வார்களோ? வரிசையில் நின்றிருந்த எங்களையும்? சொந்தம் இல்லாத பிணத்தைப் புதைக்க நகராட்சியில் அதற்கென்றே பிரிவு இருக்கிறது. அதனால் எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் நாங்கள் அவன் இறப்பதைப் பார்த்துக்கொண்டே ஒரு எஸ்கலேட்டரில் நகர்வதைப்போல க்யூவில் நகர்ந்து கொண்டிருந்தோம். "அன்பிற்கும் உணர்ச்சிக்கும் அடிப்படையாக இருப்பது பொருளாதாரப் பாதுகாப்புதான் என்பது எவ்வளவு சரியான விஷயம்!" - எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த கம்யூனிஸ்ட்காரரான விபூதி சர்க்கார் சொன்னார். காவல் நிலையத்தில் இரண்டு முறை அழைத்து விசாரித்த பிறகு, சமீபகாலமாக அவர் அதிகம் பேசுவதில்லை. எனினும் மனிதன்தானே? சில நேரங்களில் எதையாவது கூறி விடுவார். மாமிசம் வாங்குவதற்கான க்யூவில் நின்றிருந்தாலும், முழுமையாகக் கைகளைக் கழுவவில்லை என்று தானே சமாதானமும் கூறிக் கொண்டார். பின்னால் நின்றிருந்த நானும் கஸ்டம்ஸ் க்ளார்க் மகாபாத்ராவும் அது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டு தலையை ஆட்டினோம். கால்களை ஷூக்களுக்குள் தள்ளி நுழைத்து, தொப்பியை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு, ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து, மனைவியின் இடக் கன்னத்தை ஒரு முறை தொட்டுவிட்டு நான் வெளியேறினேன். வானொலியில் தலைப்புச் செய்திகள் அப்போதுதான் முடிந்திருந்தன. ஆனால், நான் வெளியேறிவிட்டேன். நடக்கும் போதுகூட அதைக் கேட்கலாம். வனஸ்பதியின் உற்பத்தி அறுபத்தைந்தில் நான்கு லட்சம் டன்னாக இருந்தது, எழுபத்தைந்தில் நான்கரை லட்சமாக அதிகரித்திருக்கிறது. சென்ற வருடம் இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று எட்டு கள்ளக் கடத்தல்காரர்களைக் கைது செய்து, முப்பத்தேழு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன. நடந்து கொண்டே நான் செய்திகளைக் கேட்டேன். அதைக் கேட்க முடியாத தூரத்தை நான் அடைந்தவுடன் அவள் வானொலியை ஆஃப் செய்து விடுவாள்.

நடக்கும்போது நான் எதற்காகவோ நிராமயனைப் பற்றி நினைத்தேன். அந்த மனிதருக்கு என்ன நடந்தது? யாருக்குத் தெரியும்? சமீபத்தில் பார்த்தபோது அவர் மிகவும் மாறியிருப்பதைப் போலத் தோன்றியது. முன்பெல்லாம் அறுத்துத் துண்டாக்குவதைப்போல அவர் பேசுவார். நாக்கால் அல்ல- ஒரு வாளால் அவர் பேசுவதைப்போலத் தோன்றும். எல்லா விஷயங்களைப் பற்றியும் அவருக்கு கருத்துகள் இருந்தன. எந்த விஷயத்தையும் இரண்டாகக் கிழித்துப் பேசுவார். அவர் கிழித்ததைத் தைத்துச் சேர்ப்பது என்பது மிகவும் சிரமமான ஒரு காரியமாக இருக்கும். என் மனைவியின் மாமாதான் அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். வரலாற்றுப் பேராசிரியரான அவர் சொன்னார்: "இதோ... கண்ணுக்குத் தெரியாத ஆயுதத்தை வைத்திருக்கும் ஒரு பட்டாளக்காரர்.'' வயதான பேராசிரியர் கூர்மையான தாடியையும் தடிமனான புருவங்களையும் கொண்டிருந்த இளைஞரான நிராமயனை இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டு வந்தார். அப்போது அவர் ஸ்டேட்டிஸ்டிக்ஸில் பட்டம் வாங்கி, டாக்டர் பட்டம் வாங்குவதற்காக ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அவருடைய விஷயம் எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. "இந்திய நடுத்தரக் குடும்பங்களின் பொருளாதார நிலை தொல்லை தராத ஒரு விஷயம்!''- நான் சொன்னேன். ஆனால் அவர் குரலைத் தாழ்த்திக்கொண்டு கண்களின் ஓரங்களின் வழியாக என்னைப் பார்த்தவாறு கூறினார்: "அது ஒரு சிறிய விஷயம் இல்லை. ஒரு சிறிய கத்தி. ஆபரேஷன் கத்தி.'' அதனால் ஸ்டேட்டிஸ்டிக்ஸ் என்ற விஷயத்தையே அறுத்து அதன் பொய்மையை வெளியே காட்ட அவர் நினைத்தார். அதை அவர் செய்தாரா என்று எனக்குத் தெரியாது. நீண்ட காலத்திற்குப் பிறகு அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளை நான் புத்தக வடிவத்தில் பார்த்தேன். இன்சூரன்ஸ்காரரான ஜோகியின் புதிய வீட்டில்தான் அதைப் பார்த்தேன். அங்கு அது ஒரு மத நூலைப்போல வழிபடும் இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. இங்கு நிராமயனை எடுத்துக்கொண்டால் இப்போது அவர் கல்லூரியில் ஆசிரியர். அந்தப் புத்தகத்தைப் புரட்டிப் பார்ப்பதற்கான தைரியம் அப்போது இல்லை. முன்பு நான் மெட்டல் காஸ்டிங், டைஸிங் ஆகியவை பற்றிய தொழில்நுட்பங்களைப் பற்றிப் பேசியபோது, அவர் தன்னுடைய கூர்மையான தாடியைத் தடவிக் கொண்டிருந்தார். இப்போது அவர் தாடியைத் தடவுவதற்கு பதிலாகத் தலையை ஆட்ட ஆரம்பித்திருக்கிறார். நான் அவரை தொழிற்சாலையைப் பார்ப்பதற்காக அழைத்துக் கொண்டு வந்திருந்தேன். ஒவ்வொரு ப்ளான்ட்டின் பொறுப்பில் இருந்த மனிதனும் விளக்கிக் கூறியவற்றைக் கேட்டு அவர் தலையை ஆட்டினார். ஒரு பிரிவைப் பார்த்து முடியும்போது, அதன் சார்ஜ்மேனிடம் நன்றி சொன்னார். புதிய பிரிவிற்குச் செல்லும்போது, அங்கு இருக்கும் ஆளுக்கு வணக்கம் சொன்னார். பிறகு தலையை ஆட்டாமல் ப்ளான்ட்டுகளுக்கு மத்தியில் வேகமாக நடந்தார். வணக்கத்தையும் நன்றியையும் ஒரே நேரத்தில் சொன்னார். இறுதியாக- கடைசி இரண்டு பிரிவுகளைப் பார்க்காமலேயே, நாங்கள் கேன்டீனில் போடப்பட்டிருந்த நாற்காலியில் வந்து விழுந்தோம். சிறிது நேரத்திற்கு எதுவும் பேசவில்லை. தொடர்ந்து தேநீரையும் எங்களுடைய கேன்டீனில் சிறப்பு தின்பண்டமான இனிப்புப் பலகாரத்தையும் வரவழைத்தோம். அவருக்கு அந்தப் பலகாரத்தை மிகவும் பிடித்திருந்தது. நாங்கள் இன்னொரு முறை தலா ஒரு ப்ளேட்டை வரவழைத்தோம். பால் கட்டியா, மைதாவா, அரிசி மாவா- இவற்றில் அந்தப் பலகாரத்தில் பெரும்பான்மையாக இருப்பது எது என்று அவர் என்னிடம் கேட்டார். எனக்குத் தெரியவில்லை. சற்று தூரத்தில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த கேன்டீனின் உரிமையாளரை நான் அழைத்தேன். பேசிக் கொண்டிருப்பதில் அதிக விருப்பத்தைக் கொண்டிருக்கும் அவர் கவனிக்கவே இல்லை. "வேண்டாம் விட்டுடுங்க...''- நிராமயன் என்னைத் தடுத்தார். "இனிப்பு பலகாரத்திற்கு சுவை இருக்கிறது என்பது தெரிந்திருந்தால் போதும். ஆனால் உங்களுடைய தொழிற்சாலை மிகவும் போர் அடிக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது நண்பரே! இன்னும் சொல்லப்போனால் இனிப்பையும் புளிப்பையும் நீக்கிவிட்டுப் பார்த்தால் மீதி அனைத்தும் முட்டாள்தனமாக இருக்கின்றன. எவ்வளவு தடவை ஆனாலும் போர் அடிக்காதது இது ஒன்றுதான்- உணவு.


அந்த ஒன்றின்மீது மட்டும் என்ன காரணத்தாலோ ஆர்வம் குறைவதே இல்லை. இப்போது... இந்த நிமிடத்தில்... எனக்குத் தோன்றுவது என்ன தெரியுமா? எப்படியாவது என்னுடைய மூளையை தலைக்குள் இருந்து பெயர்த்து எடுத்து, துண்டு துண்டாக அறுத்து எண்ணெய்யில் பொரித்து, கொஞ்சம் வெங்காயத்தையும் முந்திரிப் பழத்தையும் முந்திரிப் பருப்பையும் சேர்த்து, தக்காளி சாஸையும் நல்ல நீளத்தைக் கொண்டிருக்கும் பச்சை மிளகாயையும் சேர்த்துச் சாப்பிடணும்போல இருக்கு!''

நிராமயன் ஆயுதத்தை வைத்துக்கொண்டு, அடங்கிப் போவதைப்போலத் தோன்றியது. அவர் நோயாளியாக மாறிவிட்டிருப்பது தெரிந்தது. குடும்பமும் நண்பர்களும் அவர் இப்போது நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகக் கூறுகிறார்கள். முன்பு பார்த்த எலும்புக் கூடாக இப்போது அவர் இல்லை. அப்போதைய வெறுப்பும் கோபமும் முள்ளம்பன்றியின் குணமும் இல்லை. அவரை மனிதர்கள் விரும்புகிறார்கள். அவர் ஸ்டேட்டிஸ்டிக்ஸ் கற்பித்து, மனைவி- பிள்ளைகளுடன் சுகமாக சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய எடை அதிகரித்திருக்கிறது. அவர் எவ்வளவு கிலோ வனஸ்பதியைப் பயன்படுத்துகிறார்? எழுபதில் எவ்வளவு...

சமீப வருடங்களில் நான் வனஸ்பதியின் பயன்பாட்டைக் குறைத்திருக்கிறேன். இனிப்பைக் குறைக்கவில்லையென்றாலும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறேன். மாமிச உணவுமீது எனக்கு ஆர்வம் இல்லாமல் போயிருக்கிறது. இடையில் அவ்வப்போது சிகரெட் புகைக்கிறேன். அதில் அந்த அளவிற்கு ஈடுபாடு இல்லை. என்னுடைய குணம் மாறுகிறது என்று அர்த்தம். குணம் மாறுவது என்பது ஒரு நோயா என்ன? என்னவோ? வயது அதிகமாகிக் கொண்டு போகிறது என்பதற்கான அடையாளங்கள் என்று எடுத்துக்கொண்டால் போதும். நான் வயதானவன் அல்ல. ஒரு குழந்தைக்குத் தந்தையாக ஆகிவிட்டேனே! இன்னும் ஒரு குழந்தையும்... டாக்டரிடம் அதைப் பற்றிக் கேட்க வேண்டும். ஆனால் டாக்டர்கள் இருக்கிறார்களே, அவர்கள் என்னென்னவோ கூறுகிறார்கள். ஒரு மாத்திரைகூட நான் உட்கொள்ள அவர்கள் தரவில்லை. பரிசோதனை செய்து மட்டும் பார்க்கிறார்கள். பரிசோதனை செய்வதும் சோதித்துப் பார்ப்பதும்... எக்ஸ்ரே எடுத்து, ரத்தத்தைச் சோதனை செய்து பார்த்தார்கள். என்னவோ ஊசி மூலம் செலுத்தி அதன் விளைவைத் தெரிந்து

கொண்டார்கள். கார்டியோக்ராம்... பயோப்ஸி... மீண்டும் ரத்தம்... மீண்டும் எக்ஸ்ரே... இன்று இரண்டாவது ஸ்பெஷலிஸ்ட்டின் ரிப்போர்ட்டும் வந்துவிடும்.

"இன்னைக்கு என்ன சார் தாமதமா வந்திருக்கீங்க?''- அலுவலகத்தில் அக்கவுண்டன்டாக இருக்கும் கார்பாபு. சரிதான். நான் சற்று தாமதமாக வந்து விட்டேன். காங்குலியின் வெற்றிலைப் பாக்குக் கடையைக் கடந்து, பார்வை தெரியாத மனிதன் பிச்சை எடுக்கும் விளக்கு மரத்திற்கு அருகில் நாங்கள் சந்திப்போம். சந்திப்பது அல்ல- நான் வரும் வழியில் வரும் அவன், என்னைவிட வேகமாக நடக்கும் காரணத்தால் பிச்சைக்காரனின் விளக்குக் கம்பத்திற்கு அருகில் என்னை வந்து அடைந்து விடுகிறான். என்னைத் தவிர இந்தப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஏறும் கம்பெனியின் இன்னொரு தொழிலாளி கார்பாபு. கார்பாபு கடிகாரத்தைப் பார்த்தான். முன்கூட்டியே வந்தாலும் இல்லாவிட்டாலும் அவனுக்கு சற்று வெற்றிலை போட நேரம் இருக்கிறது. நாங்கள் கடையை நோக்கி நடந்தோம்.

காங்குலி வெற்றிலை தயார் பண்ணுவதற்கு மத்தியில் அக்கவுண்டண்ட் பாபு என்னிடம், தன் பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு சேனிட்டரி இன்ஸ்பெக்டரின் மனைவி கல்லூரியில் படிக்கும் ஒரு இளைஞனுடன் ஓடிவிட்டாள் என்பதையும், அவர்களுக்கிடையே இருந்த உறவு விஷயம் தனக்கு முன்பே தெரியும் என்பதையும், தொடர்ந்து அந்த விஷயத்தில் தான் என்ன செய்ய முடியும் என்று நினைத்து பேசாமல் இருந்ததையும் சொன்னான். "சரிதான் சாஹிப். ஒருவனைத் திருமணம் செய்துவிட்டால், குஷ்டரோகியாக இருந்தாலும் பெண்கள் அவனுடன்தான் வாழ வேண்டும்''- வெற்றிலை தயார் பண்ணுவதற்கு மத்தியில் காங்குலிதான் அதற்குப் பதில் சொன்னான். "வேறொண்ணும் இல்லை சாஹிப். குடும்பத்தை யாரும் அலங்கோலப்படுத்திவிடக் கூடாது. அந்த சஞ்ஜய் ஸ்டோர்ஸின் உரிமையாளரான முகர்ஜி பாபுவின் வீட்டில் வேலை செய்யும் வயதான பெண்ணைப் பார்த்திருக்கீங்கள்ல? தாடையில் வெட்டு விழுந்திருப்பதைப் போன்ற ஒரு தழும்பைக் கொண்டிருக்கும் பெண்? இளம் வயதில் நாங்கள் ஒருவரையொருவர் விரும்பினோம். அப்போ அது நடக்கல. இன்னொரு வகையில் சொல்வதாக இருந்தால் அது நடக்காது என்று நானே நினைத்துக் கொண்டேன். திருமணம் ஆனபிறகு தெரியுமா? இங்கு வெற்றிலை வாங்குவதற்குக்கூட நான் அவளை வரவிடமாட்டேன். இப்போ... வயசாயிடுச்சு. ஆணும் பெண்ணும் சமமா ஆயாச்சு...''

வெற்றிலையை மென்றுகொண்டு நடப்பதற்கு மத்தியில் காங்குலியால் உற்சாகப்படுத்தப்பட்ட அக்கவுண்டண்ட் பாபு பேசிக் கொண்டிருந்தான். "உண்மையைச் சொல்லத்தான் வேண்டும். மனிதனுக்கு முதலில் தேவையானது பணிவுதான். முதலில் அடக்கம். அதற்குப் பிறகுதான் மற்ற அனைத்தும். உங்களுக்கு இந்த பாடாவில் வசிக்கும் மரேஸ் முகர்ஜி என்ற ஒரு ஆளைத் தெரியுமா? அவருக்கு ஒரு மகன் இருந்தான். குழந்தையாக இருக்கும்போது அவனைப் பார்க்குறதுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும் தெரியுமா? நாங்கள் அவனை நாடகத்தில் நடிக்க வைப்போம். ஒருமுறை சொல்லித் தந்தால் கிளி சொல்லுவதைப்போல அதே மாதிரி சொல்லுவான். நரசிம்ம அவதாரத்தில் பிரகலாதனாக அவன் வருவதைக் கட்டாயம் பார்க்க வேண்டும். "நாராயணாய நம... நாராயணாய நம" என்று கூறும்போது, நாடகம் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் கைகளைக் குவித்து வணங்குவார்கள். வளர்ந்தபோது ஒரு வார்த்தை சொன்னால் கேட்காதவனாக அவன் ஆகிவிட்டான். பிறகு கழுத்து அறுப்பதும் புரட்சியும்... அவனுடைய நடவடிக்கைகள் எப்படி எப்படியோ ஆயிடுச்சு! சமீபத்தில் ஒருநாள் கையில் இருந்த ஒரு குண்டு வெடித்து அவன் இறந்து போயிட்டான்.''

"அதில் ஆச்சரியப்பட என்ன இருக்கு கார்பாபு?'' - நான் தமாஷாகச் சொன்னேன்: "எல்லாரும் ஹிரண்யாய நம என்று சொல்லிக் கொண்டிருக்கும் காலத்தில், நாராயணாய நம என்று சொல்லும்படிதானே முதல்ல இருந்து நீங்க அவனுக்குக் கற்பித்துத் தந்தீங்க?''

பேசுவதில் அதிக விருப்பம் கொண்டவனாக இருந்தாலும் நகைச்சுவையைப் புரிந்துகொள்ள அக்கவுண்டண்ட் பாபுவால் முடியவில்லை. தமாஷ் விஷயத்தில் மட்டுமல்ல- வெறுமனே பதில் சொன்னாலும் மறுத்துக் கூறுகிறோம் என்றே அவன் புரிந்து கொண்டிருப்பான். அதனால் நான் பொதுவாக வெறுமனே சிரித்துக்கொண்டு நடந்து விடுவேன். பிச்சைக்காரனின் விளக்கு மரத்திலிருந்து பேருந்து வரை இருக்கும் தூரம். ஆனால் இன்று என்ன காரணத்தாலோ, எனக்கு பதில் சொல்ல வேண்டும் என்று தோன்றியது.

"சரிதான்... இது நாராயணாய நம என்று சொல்வதைப் போன்றதா?'' - அவன் எதிர்த்தான். "உங்களைத்தான்... வேறு யாரையும் அல்ல... இதற்காகக் குறை சொல்ல வேண்டியது.''


"விளையாட்டுக்காக சொல்லவில்லை அக்கவுண்டண்ட் பாபு''- நான் கூறியதை வைத்து வன்முறையில் ஈடுபடுபவர்களை ஆதரிக்கிறேன் என்று கருதிவிடக்கூடாது என்று நினைத்து நான் விளக்கிச் சொன்னேன்: "இன்னும் சொல்லப் போனால் நமக்கு என்ன பாதிப்பு, இந்த மாதிரியான விஷயங்களில்? நான் ஒரு இன்ஜினியர். நீங்க ஒரு அக்கவுண்டண்ட். நமக்கு நம்முடைய வேலைகள் இல்லையா என்ன?''- நான் ஒரு முட்டாள்தனமான சிரிப்பு சிரித்தேன்.

அக்கவுண்டண்ட் பாபு என்னை மன்னித்து விட்டான். பிறகு நாங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவனுடைய மகனுக்குக் காய்ச்சல் வந்ததைப் பற்றியும், ஒரு மாதத்திற்கு முன்னால் என்னுடைய குழந்தைக்கு வயிற்றுக்குக் கேடு வந்ததைப் பற்றியும் சந்தோஷத்துடன் பேசிக் கொண்டிருந்தோம்.

விளக்குக் கம்பத்தை அடைந்தபோது கண்பார்வை தெரியாத மனிதன் எங்களை நோக்கிக் கையை நீட்டினான். மன்னிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் கையை உயர்த்தி சைகை செய்துவிட்டு நாங்கள் நடந்தோம். எங்களுடைய சைகையைப் பார்க்காமலே, நாங்கள் கடந்து சென்றதும் குருடன் கைகளைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டான். அதுதான் எப்போதும் நடப்பது. அவன் எங்களுடைய சத்தத்தைக் கேட்டு கையை நீட்டுவான். நாங்கள் மன்னிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் சைகை காட்டுவோம். அவன் அதைப் பார்க்காமலே உட்கார்ந்திருப்பான். குருடன் என்னிடமோ உங்களிடமோ பிச்சை கேட்கவில்லை. மனிதன் என்ற கேவலமான பொருளிடம். அவனுடைய கெஞ்சலுக்குக் குறிப்பிட்ட மனிதன் எப்படி எதிர்வினை ஆற்றுகிறான் என்பதோ, எதிர்வினை ஆற்றும் குறிப்பிட்ட மனிதன் யார் என்பதோ அவனுக்குத் தெரியாது. சாயங்காலம் மொத்தத்தில் இருப்பதையெல்லாம் சேர்த்துக் கிடைப்பதை அவன் கேவலமான மனிதர்களின் எதிர்வினையாக எடுத்துக் கொள்கிறான்.

என்னைச் சோதித்துப் பார்த்த முதல் ஸ்பெஷலிஸ்ட், அந்தக் காலத்தில் மந்திரவாதிகள் நோய்களை எப்படிக் கண்டறிந்தார்கள் என்பதை என்னிடம் சொன்னார். "வெளியே வாடா, வெளியே வாடா, உனக்குள் இருப்பதை இன்றைக்கு நான் வெளியே கொண்டு வர்றேன் என்று கூறியவாறு, பிரம்பால் அடித்து அடித்து அவர்கள் நோயாளிகளையே தங்களுக்கு இருக்கும் நோய் என்ன என்பதைக் கூற வைப்பார்கள். ஆனால் நாங்கள் அப்படிச் செய்ய மாட்டோம். உங்களுக்குள் இருப்பதை உங்களுக்கே தெரியாமல் நாங்கள் கண்டுபிடிப்போம்'' என்றார் அவர். நான்காவது மாடியில் அவருடைய க்ளினிக் இருந்தது. லிஃப்ட் பாதிக்கப்பட்டிருந்ததால் ஏறிச் சென்றபோது நான் மிகவும் களைப்படைந்து விட்டேன். நாற்காலியில் கால்களை நீட்டிக்கொண்டு சாய்ந்து படுத்தவாறு நான் அதைக் கேட்டேன். "எனக்குள் இருப்பவை அனைத்தும் மிகவும் சோர்வடைந்து போய்விட்டன டாக்டர். இன்றைக்கு உங்களால் எதையும் தெரிந்துகொள்ள முடியாது'' - நான் சொன்னேன். அவர் தன்னுடைய வரிசையற்ற பற்களைக் காட்டிச் சிரித்தார். அழகே இல்லாத பற்களாக இருந்தாலும் சந்தோஷத்தை வெளிப்படுத்தக்கூடிய சிரிப்பு. இரண்டு மணி நேரம் தொடர்ந்து அவர் என்னைச் சோதித்துப் பார்த்தார். சிரித்து தமாஷாகப் பேசிக்கொண்டே சாய்த்தும் நேராக நிற்க வைத்தும் படுக்க வைத்தும் உட்காரச் செய்தும்... என் உடலுக்குள் இருந்த குடல்கள், உறுப்புகள் எல்லாவற்றையும் அவர் வெளியே கொண்டு வந்தார். அடித்துச் சலவை செய்வதற்காக திறக்கப்பட்ட தலையணையைப் போல என்னைத் தலைகீழாகக் கவிழ்த்து, பிறகு எல்லாவற்றையும் பொறுக்கிச் சேர்த்து உள்ளே போட்டு வெளியே வந்தபோது, எனக்கு நான் ஒரு பொதுப் பொருளாக ஆகிவிட்டதைப்போல தோன்றியது. அரசாங்க உடைமையாக ஆக்கப்பட்டுவிட்ட கம்பெனியைப்போல ஆடம்பரமும் எளிமையும் ஒன்று கலந்திருந்தன.

ஆனால் நான் எந்த அளவிற்குப் பொதுச் சொத்தாக ஆகிவிட்டிருந்தேனோ, அவர் அந்த அளவிற்கு உள்ளே போயிருந்தார். திறந்த சிரிப்பு படிப்படியாக முகத்தில் பதிந்திருந்ததைப்போல உணர்ந்தேன். தொடர்ந்து அதுவும் குறைந்தது. அவருடைய சொற்கள் தடைப்பட்டு விழுவதைப் போலத் தோன்றியது. இறுதியாக முற்றிலுமாக நின்றன. நாங்கள் இருவரும் எதிரெதிரில் இருந்த நாற்காலிகளில் சாய்ந்துகொண்டு, ஒருவரையொருவர் பார்த்து விழித்துக் கொண்டிருந்தோம். அவருக்கு எதுவும் புரியவில்லை என்று தோன்றியது. இறுதியில் நான் சொன்னேன்: "நோயாளியை அடித்து வாந்தி எடுக்க வைக்கும் மந்திரவாதியும், உள்ளே இருக்கும் எல்லாவற்றையும் கவிழ்த்து வெளியே கொண்டு வரும் டாக்டரும் ஒரே செயலைத்தானே செய்திருக்கிறார்கள் டாக்டர்? குறிப்பிட்ட மனிதனின் குறிப்பிட்ட உடல்நலக் கேடுகளை மட்டுமே மந்திரவாதிகளைப் போலவே கூர்மையான அணுகுமுறைகளும் அறிவியல் அறிவும் கொண்டிருக்கும் டாக்டர்களும் தேடிப் போகிறார்கள். தாங்கள் படித்த நோய்களை மட்டும் அவர்கள் எல்லா இடங்களிலும் தேடுகிறார்கள்.'' அவர் என்னையே கேள்வி கேட்பதைப்போலப் பார்த்தார். நான் சற்று வெட்கத்துடன் தொடர்ந்து சொன்னேன்: "நான் தொழிற்சாலைக்குப் போகும் வழியில் ஒரு கண்பார்வை தெரியாத மனிதன் இருக்கிறான் டாக்டர். அவன் தனக்குப் பிச்சை போடுபவர்களையும் பிச்சை போடாதவர்களையும் பார்ப்பது இல்லை. சில நேரங்களில் எனக்குத் தோன்றுகிறது- சில நோய்களை குருடர்களைப்போல கண்களே இல்லாதவர்கள் மிகவும் எளிதாகத் தெரிந்துகொள்கிறார்கள். உதாரணத்திற்கு- பாருங்கள். கேவலமான மனிதனின் கேவலமான எதிர்வினைகள்... கேவலமான நோய்கள்...''- நான் வேண்டுமென்றே நிறுத்தினேன். வேறு டாக்டராக இருந்திருந்தால், ஒருவேளை என்னை வெளியே போகும்படி கூறியிருப்பார். ஆனால் அந்த நல்ல மனிதர் எதையும் மோசமாக எடுத்துக்கொள்ளவில்லை. எப்படி எடுப்பார்? நாங்கள் கம்பெனியைச் சேர்ந்த மனிதர்கள். அவர் கம்பெனி நியமித்திருக்கும் ஸ்பெஷலிஸ்ட். எங்களுடைய நோய்களுக்கு சிகிச்சை செய்து எங்களை கம்பெனியின் செயலாற்றல் கொண்ட தொழிலாளியாக ஆக்குவது என்பது அவருடைய வேலை. அதனால் அவர் என்னை இன்னொரு ஸ்பெஷலிஸ்ட்டிடம் அனுப்பி வைத்தார்.

இரண்டாவது ஸ்பெஷலிஸ்ட் என் முகத்தைப் பார்த்து சிறிதுகூட சிரிக்கவில்லை. அவருடைய முகம் கல்லைப்போல இறுகிப் போய்க் காணப்பட்டது. ரெக்கார்டில் சேர்ப்பதற்காக என்னவோ கேள்விகளைக் கேட்டாரே தவிர, என்னிடம் சிறிதுகூட அவர் உரையாடவில்லை. பயன்படுத்தக்கூடியன, கேடுகளைச் சரி செய்து பயன்படுத்தக்கூடியன, கேடுகள் சரி செய்யப்படாதவை என்று மெஷின்களின் உதிரி பாகங்களைத் தரம் பிரிக்கும் தொழிற்சாலை ஃபோர்மேனின் முகத்தைப்போல அவருடைய முகத்தில் ஒரு சாதாரண தன்மை நிலவிக் கொண்டிருந்தது. ஃப்ளூவோ, கேஸ்ட்ரோ, என்ரட்டைட்டீஸோ பாதிக்கும் காலத்தில் டாக்டர்கள் இப்படி நோயாளிகளை ஒன்றிற்குப் பிறகு இன்னொன்றாகச் சோதனை செய்து பார்த்திருக்கிறேன். நோயின் தன்மையை அல்ல- கடுமையை மட்டும் புரிந்துகொள்ளும் ஒரு மனிதன்.... அவர் கண்டுபிடித்தது என்ன?

பேருந்து வந்தது. மஞ்சள் நிறத்தில் இருந்த கம்பெனிக்குச் சொந்தமான பேருந்து. சிவப்பு எழுத்துக்களில் அதன் பெயர்ப் பலகையில் கம்பெனியின் பெயர் எழுதப்பட்டிருந்தது- ஓஆஒ. ஜம்னாதாஸ் ஆஜ்மீரியா இன்டஸ்ட்ரீஸ். சாதாரண மனிதர்களுக்கு அது ஒரு வெறும் ஜெய் கோஷமாக மட்டுமே தோன்றும்.


எங்களுக்கும் அது ஒரு ஜெய் கோஷம்தான். கம்பெனி அதன் வெற்றிக்காக எங்களை அழைக்கிறது. நாங்கள் அனைவரும் கம்பெனியின் போராளிகள். தொழிலாளிகளோ பங்காளிகளோ அல்ல. படைவீரர்கள்! அதன் சத்தத்தைக் கேட்டு நாங்கள் போரில் இறங்குகிறோம். அதன் வெற்றி எங்களுடைய வெற்றி. அதன் தோல்வி எங்களுடைய மரணம். கம்பெனியின் கேட்டில் பெரிய எழுத்துக்களில் எழுதி வைக்கப்பட்டிருக்கும்- நாங்கள் தினமும் காலையில் வாசித்து மனப்பாடம் செய்து வைத்திருக்கும் கோஷம் அதைத்தான் காட்டுகிறது: 'ஞய்ங் ஈர்ம்ல்ஹய்ஹ், ஞய்ங் ரர்ழ்ந் ச்ர்ழ்ஸ்ரீங், ர்ய்ங் ஈட்ஹண்ழ்ம்ஹய்.'

பத்து வருடங்களுக்கு முன்னால் ஜம்னாதாஸ் ஆஜ்மீரியா இண்டஸ்ட்ரீஸிலிருந்து வந்திருந்த நேர்முகத் தேர்விற்கான கடிதம் இந்த விதத்தில் இருந்தது: "இந்த நாளன்று காலை பதினோரு மணிக்கும் பன்னிரண்டு மணிக்கும் இடையில் உங்களால் எங்களுடைய தயாரிப்பு நிர்வாகியைத் தொழிற்சாலைக்கு வந்து சந்திக்க முடியுமா? இந்த இடத்தில் இருந்து புறப்படும் இந்த எண்ணைக் கொண்ட பேருந்தில் இவ்வளவு நிமிடங்கள் பயணம் செய்தால், நீங்கள் எங்களுடைய கம்பெனியின் கேட்டில் வந்து இறங்கலாம். பழைய டாக்கூர்பாடி நிறுத்தம் என்று கூறினால் போதும்." கம்பெனி எங்களின் சிறிய சிறிய விஷயங்களில்கூட ஆர்வம் காட்டுகிறது. சேர்ந்து ஒரு வருடம் கடந்தபோது, என்னுடைய சம்பளம் புதுப்பிக்கப்பட்டது. இரண்டு வருடங்கள் கடந்தபோது நான் வேலையில் நிரந்தரமாக ஆக்கப்பட்டேன். ப்ரமோஷன் கிடைத்தது. போனஸ் கூடியது... கம்பெனி அதன் வேலையாட்களுக்கு இருப்பிடங்களை வாடகைக்கு எடுத்துக் கொடுக்கிறது. அங்கிருந்து அவர்கள் கம்பெனிக்கு வருவதற்கு சொந்த பேருந்தை ஓட்டுகிறது. குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்கிறது. குடும்பப் பாதுகாப்புத் திட்டம்.... சிறியதாக இருந்தாலும் சொந்தமாக ஒரு மருத்துவமனை... கட்டுப்படுத்தப்பட்ட விலைக்கு பொருட்கள் கிடைக்கக் கூடிய தொழிலாளர்கள் கூட்டுறவு அங்காடி... முதலில் இருந்தே அவர்கள் என்னை காஸ்ட்டிங் பிரிவில் வைத்து விட்டார்கள். காஸ்ட்டிங்கில் தனிப்பட்ட முறையில் பயிற்சிகள் தந்தார்கள். அதற்குத் தேவையான இயந்திரங்களையும் அச்சுக்களையும் கொண்டு வந்து அந்தப் பிரிவையே நிறைத்து விட்டார்கள். வரைபடத்தையும் உலோகத்தையும் தந்தார்கள். நான் அவர்கள் கேட்பவற்றையெல்லாம் வார்த்துக் கொடுத்தேன். தீர்மானிக்கப்பட்ட எண்ணிக்கையில், கேட்டுக் கொண்ட வடிவத்தில், தேவையான உறுதியில்... நான் திருமணம் செய்து கொண்டேன். எனக்கு ஒரு குழந்தை பிறந்தது.

ஒருமுறை மட்டுமே, "என்னுடைய கம்பெனியில் என்னைப்போல கவனமாகப் பார்த்துக் காப்பாற்றும் மனிதர்கள் எத்தனைப் பேர் இருக்கிறார்கள்" என்பதை நான் கேட்டிருக்கிறேன். அதுவும் சிறிதும் எதிரிபாராமல்- அப்போது எனக்கு அருகில் நின்றிருந்த ஒரு சார்ஜ்மேனிடமோ வேறு யாரிடமோ. ஒரு நாடு அதன் மக்கள் என்பதைப்போல ஒரு கம்பெனி அதன் பணியாட்கள் இல்லாமல் வேறென்ன? தொழிற்சாலையின் ஒரு புதிய பிரிவின் துவக்கம் நடந்து கொண்டிருந்தது- நான் சேர்ந்த சமயத்தில். ஏதோ ஒரு அமைச்சர் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவருடைய பேச்சு முழுவதும் எல்லா வார்த்தைகளும் கிட்டத்தட்ட கேள்வி வடிவத்தில் முடிந்து கொண்டிருந்தன. நாட்டையும் உலகத்தையும் வாழ்க்கையையும் பற்றிய பிரச்சினைகள். யாரும் அவற்றுக்கு பதில் கூறவில்லை. அமைச்சரும் சொல்லவில்லை. எல்லாருக்கும் அவற்றுக்கான பதில் தெரியும் என்று தோன்றியது எல்லாருக்கும் தெரியும் என்று அவருக்கும். அதனால் அவை கேள்விகளே அல்ல என்பது மாதிரி பார்வையாளர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவை கேள்விகளே அல்ல என்ற எண்ணத்துடன் அவர் கேட்டுக் கொண்டும் இருந்தார். அதற்கு மத்தியில் நான் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு எனக்கு அருகில் நின்றிருந்த சார்ஜ்மேனைப் போல் தோன்றிய அந்த கறுத்த மனிதனிடம் என்னுடைய சிறிய கேள்வியைக் கேட்டேன்: "நண்பரே, இந்த கம்பெனியின் தொழிலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?'' அந்த மனிதன் அதற்கு பதில் எதுவும் கூறவில்லை. ஒரு கையை காதுக்குப் பின்னால் வைத்துக்கொண்டு அவன் சொற்பொழிவாளரின் பதில் இல்லாத கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தான். ஒன்று- அந்த மனிதனுக்குக் கேட்கும் சக்தி குறைவாக இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் என்னுடைய கேள்வியை அங்கு கேட்டுக் கொண்டிருந்த மற்ற கேள்விகளைப்போல பதில்கூறத் தேவையற்றது என்று நினைத்து ஒதுக்கியிருக்க வேண்டும். எது எப்படி இருந்தாலும், மக்கள் நடுவில், அதுவும் முக்கியமான ஒரு மனிதர் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருக்கும்போது உரத்த குரலில் பேசுவது சரியான ஒரு விஷயம் இல்லையே! அதனால் நான் அதையும் பதில் இல்லாத கேள்வி என்று நினைத்து ஒதுக்கி வைத்துவிட்டு, சற்று தூரத்தில் நின்றிருந்த ஒரு மரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த மரத்திற்கு ஒரு சிறப்பு இருந்தது. இரண்டு தொழிற்சாலை ஷெட்களுக்கு நடுவில் ஒரு பிடி மண்கூட தெரியாத கான்க்ரீட் போடப்பட்ட தரையில், அந்த கான்க்ரீட்டிலிருந்து முளைத்து வந்ததைப்போல அது நின்றிருந்தது. டாக்கூர்பாடி என்று அறியப்பட்டிருந்த ஒரு ஜமீன்தாரின் அரண்மனையாக முன்பு இருந்த இடத்தில்தான் எங்களுடைய கம்பெனி இருந்தது. கம்பெனி அந்த இடத்தை வாங்கி, அங்கு தொழிற்சாலையை உண்டாக்கியபோது மற்ற அனைத்தையும் அழித்தாலும், மனிதர்கள் வழிபாடு செய்து கொண்டிருந்த அந்த மரத்தை அப்படியே விட்டுவிட்டார்கள். அறிவியல் வளர்ச்சிக்காக வாதாடும்போதுகூட, பாரம்பரியத்துடனும் மனிதர்களின் நம்பிக்கைகள் மீதும் கம்பெனிக்கு இருந்த அக்கறையைத்தான் அது காட்டுகிறது. ஆனால் அன்று அதைப் பார்த்தபோது எனக்குப் பெரிய அளவில் வருத்தம் உண்டானது. அதிலிருந்து கண்களை எடுத்து, மீண்டும் நான் பதில் இல்லாத கேள்விகளைக் கேட்டவாறு அந்த தொழிற்சாலை வாசலில் நின்று கொண்டிருந்த மனிதர்களைப் பார்த்தேன். அவர்களும் அந்த மரத்தைப்போல அந்த காங்க்ரீட்டில் பிறந்து வந்தவர்களைப்போல நின்றிருந்தார்கள்.

ஒரு மரத்தால் அது முளைத்த இடத்திலிருந்து அசைய முடியாது. தாவரங்களைப் பொறுத்தவரையில் சரியில்லாத காலநிலையில் அது காய்ந்துவிடும். இல்லாவிட்டால் காலநிலைக்கு ஏற்ற வண்ணம் இலை உதிர்ந்து, தளிர்கள் முளைத்து, பூக்கள் பூத்துக் கொண்டிருக்கும். கடையைச் சுற்றி காங்கிரீட் அமைத்தால், அது அதை ஏற்றுக் கொள்கிறது. மனிதர்கள் அப்படி அல்ல. எனினும் அந்தத் தொழிற்சாலையின் வாசலில் இருந்த காங்கிரீட்டில் ஒரே இடத்தில் நின்றுகொண்டு பதில்கள் இல்லாத கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த மனிதர்களை மீண்டும் பார்த்தபோது, நான் கேட்ட கேள்வியின் முக்கியமற்ற தன்மையையும் ஏமாற்றத்தையும் என்னால் திடீரென்று புரிந்துகொள்ள முடிந்தது. இந்தக் கம்பெனியின் தொழிலாளர்கள் எண்ணிக்கை எவ்வளவாக இருந்தால் என்ன? பத்தோ? பத்தாயிரமோ? லட்சமோ? கோடியோ? அதற்குப் பிறகு நான் அந்தக் கேள்வியை யாரிடமும் கேட்பதேயில்லை. ஒருவேளை அது யாருக்கும் தெரியாமல் இருக்கலாம்.


தெரிந்திருந்தாலும் அதை நான் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. ஒரு வயலில் எவ்வளவு விளைச்சல் உண்டானது என்று நீங்கள் கேட்கிறீர்கள். அதில் எவ்வளவு நெல் செடிகள் இருந்தன என்று கேட்கவில்லை. ஒரு கம்பெனியில் வேலை செய்பவர்கள் யாராக இருந்தாலும் எவ்வளவு எண்ணிக்கையில் இருந்தாலும் அது ஒரு படை. ஒரு படையில் அறியப்படுபவன் ஒருவன்தான். அதன் கமாண்டர். தேனீக்களுக்கு அவற்றின் ராணி. எங்களுக்கு எங்களுடைய சேர்மன்.

பேருந்தில் இருந்தபோது தூக்கம் வந்தது. பாதை நல்லதாகவோ மோசமானதாகவோ இருக்கட்டும்- சக்கரங்கள்தான் உருள்கின்றன. உருளக்கூடியதும் திரும்பக்கூடியதுமாக இருப்பது எதுவானாலும் அது தூக்கத்தைக் கொண்டுவரத்தான் செய்யும். விருப்பப்பட்டு தூங்கவில்லை. ஆனால் தூங்க ஆரம்பித்துவிட்டால் அப்படியே உருண்டுகொண்டோ திரும்பிக் கொண்டோ இருக்கத்தான் தோன்றும். ஓரங்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு வாய்க்கால் வழியாகக் கீழ்நோக்கி ஓடிச் செல்லும் நீரைப்போல... "ரிலாக்ஸ்! ரிலாக்ஸ்!" - முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுப் படுத்திருந்த என்னுடைய தந்தையிடம் டாக்டர் இப்படிக் கூறுவார். ஒரு விஷயத்தையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எளிதாக எடுத்துக் கொள்வதுதான் எளிதாக இருக்கும். எளிய வழியையே பின்பற்ற வேண்டும். எளிமையான வாழ்க்கைதான் செழிப்பான வாழ்க்கை. அப்படிப்பட்ட ஒரு தத்துவத்தை அவர் உண்டாக்கிவிட்டிருந்தார்- நோயாளிகளுக்காக. அவர் சிகிச்சை செய்த நோயாளிகள் அனைவரும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளாக இருந்தார்கள். அதில் அவர் ஸ்பெஷலிஸ்ட் என்று கூறுவதற்கில்லை. முன்பு அவர் மற்ற நோயாளிகளுக்கும் ஏராளமாக சிகிச்சை செய்தார். பிறகு அவர்கள் அவரைத் தேடி வரவில்லை. அதாவது- அவர்கள் அவரை விட்டுப் போய்விட்டார்கள். குணப்படுத்த முடியாத நோய்களைத் தாங்கிக் கொண்டிருந்தவர்கள் மட்டுமே அவரைப் பிடித்துக் கொண்டு நின்றார்கள். அவர் அவர்களுக்குக் கதைகள் கூறினார். ஒரு காலத்தில் மோட்டார் வாகனங்களோ வானொலி ஒலிபரப்போ எதுவும் பொதுவாக இல்லாமலிருந்த தூர காலகட்டத்தில், தான் வேலை பார்த்த நகரத்தில் அம்மை நோய் பரவிவிட்டிருந்தபோது, மனிதர்கள் யாரும் வெளியே வராமல் இருந்த பின்னிரவு வேளையில் தான் வேலை செய்து முடித்துத் திரும்பி வரும்போது, வெள்ளைநிற ஆடை அணிந்து பேரழகு படைத்த ஒரு பெண் தனியாக நடந்து செல்வதைப் பார்த்து, தான் அவளைப் பின்தொடர்ந்து போனதையும், நகரத்தின் எல்லையைத் தாண்டியதும் அவள் மறைந்து காணாமல் போனதையும், மறுநாளிலிருந்து அம்மை நோய் தன் நகரத்தில் இல்லாமல் போனதையும் பக்கத்து நகரத்தில் அது ஆரம்பமான கதையையும் அவர் கூறினார். தன்னுடைய மருத்துவமனையில் தினமும் நள்ளிரவு நேரத்தில் கறுப்புநிற ஆடை அணிந்த ஒரு கன்னிப் பெண் திடீரென்று தோன்றி அலுவலகத்தில் இருந்த ஒரு அலமாரியைச் சுட்டிக் காட்டியதையும், அதைச் சோதித்துப் பார்த்தபோது முன்பு எப்போதோ மரணத்தைத் தழுவிய ஒரு கன்னிப் பெண்ணின் தங்கப் பற்கள்- அவற்றைச் சொந்தம் கொண்டாடக் கூடியவர்கள் இல்லாததால் அவற்றை அங்கு வைத்திருக்கும் விஷயத்தையும், அதை ஏலத்தில் விற்ற பிறகு கன்னிப் பெண் வராமலே நின்றுவிட்டதையும் அவர் சொன்னார். அவருடைய கதைகளைக் கேட்ட நோயாளிகள் உறங்கினார்கள். என் தந்தையும் உறங்கினார். இப்படியே நிறைய வருடங்கள் உறங்கிய பிறகு இறுதியாக- நிரந்தரமாக உறங்கிவிட்டார்.

பேருந்து நிற்பதற்கு முன்பே, நான் கண் விழித்து விட்டேன். யாரோ எழுப்பினார்கள். முன்னால் இருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்களையும், அதற்குப் பிறகு பின்னால் இருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்களையும் இறங்கச் சம்மதித்து விட்டு, இறுதியாக ஆட்கள் எல்லாரும் இறங்கின பிறகு நான் மெதுவாக இறங்கினேன்.

எங்களுடைய பிரிவின் தயாரிப்பு நிர்வாகியைப் பார்ப்பதற்காக நான் நிர்வாக அலுவலகத்தை நோக்கி நடந்தேன். தினமும் ஒரு தடவை அவரைப் பார்க்க வேண்டியது என் கடமை. ஒன்று- காலையில். இல்லாவிட்டால் சாயங்காலம் கிளம்புவதற்கு முன்னால். இன்று சாயங்காலம் கம்பெனியின் டாக்டரைப் பார்க்க வேண்டியதிருக்கிறது. அதனால் காலையிலேயே அவரைப் பார்த்தாக வேண்டும். கூறுவதற்கு எதுவும் இல்லை. காலை வணக்கம் கூற வேண்டும். அவ்வளவுதான். என் தயாரிப்பு நிர்வாகி நல்ல மனிதர். அமெரிக்காவில் இருந்து உயர்கல்வி கற்று வந்திருந்த ஒரு பழைய தயாரிப்பு நிர்வாகியின் மகன். இளைஞர். அந்த இளமைக்குப் பொருத்தமில்லாதது மாதிரி சற்று தொந்தி இருந்தது. இந்த வயதில் அப்படி தொந்தி உண்டாகும்போது எல்லா இளைஞர்களும் உடற்பயிற்சி செய்யப் பயன்படுத்தும் ஒரு கருவி இருக்கிறது. தினமும் மூன்று நிமிடங்கள் மட்டுமே செலவழித்தால் போதும் என்று வாரத்தில் இரண்டு முறை பத்திரிகையில் விளம்பரம் வருகிறது. எங்களுடைய தயாரிப்பு நிர்வாகி அதைப் பயன்படுத்த வேண்டும் என்று அவரைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குத் தோன்றுவதுண்டு.

பார்த்தவுடன் தயாரிப்பு நிர்வாகி என் உடல்நிலையைப் பற்றி விசாரித்தார். "நன்றி... நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?''- நானும் மரியாதை நிமித்தமாகக் கேட்டேன்.

"நீங்க மிகவும் சாதாரணமா இருக்கீங்க''- என்னுடைய விசாரிப்பிற்கு பதில் கூறாமல் என்னைத் தலையிலிருந்து கால்வரை பார்த்து ஆராய்ந்த அவர் சொன்னார். நேற்று காலையில் பார்த்தபோதும் அப்படியேதான் கூறினார். இதற்கிடையில் எதுவும் நடக்கவில்லை- பரிசோதனையோ சிகிச்சையோ எதுவும்- மேலும் ஒருநாள் கடந்துபோய்விட்டிருக்கிறது என்பதைத் தவிர. இதற்கிடையில் நான் மாறுவேன் என்று அவர் எதிர்பார்த்திருந்தாரோ என்னவோ? "இன்று அந்த ஸ்பெஷலிஸ்ட்டின் ரிப்போர்ட் கிடைக்கும் என்று சொன்னீர்களே?''- அவர் கேட்டார்.

இரண்டாவது ஸ்பெஷலிஸ்டின் ரிப்போர்ட் இன்று கிடைக்கும். ஆனால் அந்த விஷயத்தை நான் அந்த ஆளிடம் கூறவில்லை. எனினும் அவர் தெரிந்து வைத்திருக்கிறார். கம்பெனியில் விவரங்கள் கசியக்கூடிய பல சேனல்கள் இருக்கின்றன. அந்த வகையில்தான் கம்பெனி தன்னுடைய தொழிலாளர்களின் உடல்நலத்தையும் தேவைகளையும் நம்பிக்கையையும் அக்கறையுடன் கவனிக்கிறது.

"சார்... இது ஒரு நோயே இல்லை''- நான் சொன்னேன்: "தெரியுமா? டாக்டர் இதுவரை எனக்கு ஒரு மாத்திரைகூட தந்தது இல்லை.''

என்னுடைய மென்மையான குணத்தையும் நல்லது நடக்க வேண்டும் என்ற நம்பிக்கையையும் அவர் பாராட்டுவார் என்று நான் நினைத்தேன். ஆனால் அவர் அது எதையும் கவனித்ததாகவே தெரியவில்லை. "பாருங்க நண்பரே! உங்களுக்கு என்னைவிட அனுபவம் இருக்கு. உங்களுடைய கடையில் இருக்கும் ஒரு மோட்டாருக்கோ, அச்சுக்கோ, இயந்திரத்திற்கோ கேடு உண்டானால் நீங்கள் அதை எப்படித் தெரிந்து கொள்வீர்கள்? செயல்படுவதை வைத்து.... இல்லாவிட்டால், அதைக் கழற்றிப் பார்த்துத் தெரிந்து கொள்வீர்கள். நீங்கள் அதைக் கண்டுபிடிப்பீர்கள். இந்த உடலை நாம் பயன்படுத்துகிறோம். அவ்வளவுதான். இது எப்படி செயல்படுகிறது என்ற விஷயத்தில்...


உண்மையாகச் சொல்லப் போனால், நமக்கு நம்மைப் பற்றி எதுவுமே தெரியாது. இதற்கு ஏதாவது கேடு உண்டானால் சீர்படுத்துவதற்கு வேறு யாராவது வரவேண்டும். சீர்படுத்துவது ஒரு பக்கம் இருக்கட்டும்- தவறைக் கண்டுபிடிப்பதற்குக்கூட. நீங்கள் கம்பெனியின் ஒரு தொழிலாளி. உங்களை சரியான நேரங்களில் பரிசோதனை செய்து தவறுகளைச் சரிபண்ணி, பாதுகாத்து வேலைக்குப் போகும் வண்ணம் தயார் பண்ண வேண்டிய கடமை கம்பெனிக்கு இருக்கிறது.''

நான் முட்டாளாகி விட்டேன். இந்த உடலை வளர்த்து நல்ல முறையில் ஆக்குவது கம்பெனிதான். அந்த வகையில் பார்க்கப் போனால் இது எனக்குச் சொந்தமானது என்று கூறுவதைவிட, கம்பெனிக்கு உரிமையானது என்று கூறுவதே பொருத்தமானது. தயாரிப்பு நிர்வாகி சொன்னது சரிதான். "நீங்கள் சொன்னது எவ்வளவு சரியானது!''- நான் மன்னிப்பு கேட்கிற குரலில் சொன்னேன்: "சிறிய சிறிய குறைபாடுகள் இருந்தாலும், நான் செயல்பட முடியாதவனாக ஆகிவிடவில்லை என்பது மட்டும் எனக்குத் தெரியும். சார், உண்மையாகச் சொல்லப் போனால் எந்த ஒரு இயந்திரம் குறைபாடே இல்லாமல் இருக்கிறது? பயன்படுத்த முடிந்த எல்லாவற்றையும் பயன்படுத்த வேண்டும். இந்த நேரத்தில் ஒன்றைக் கூறட்டுமா? நம்முடைய அந்த சென்டெரிங் ப்ரஸ் கொஞ்ச காலமாகவே சும்மாவே இருக்கு. நாம் அதை ஏதாவதொரு விதத்தில் பயன்படுத்த வேண்டும்.''

தயாரிப்பு நிர்வாகி தலையை ஆட்டினார். அதற்கு அர்த்தம் நான் நிறுத்த வேண்டும் என்பதுதான். நான் நிறுத்தினேன். அந்த ஆள் ஆரம்பித்தார். "பாருங்க நண்பரே... முதலில் நீங்கள் பயன்படுத்த முடியாத மனிதராக ஆகிவிட்டீர்கள் என்று ஏன் சந்தேகப்படுகிறீர்கள்? அந்த ப்ரஸ் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது என்பதையும் கூறுகிறீர்கள்? அந்தப் ப்ரஸ் நினைக்குமா தான் கம்பெனிக்குப் பயன்படாமல் இருக்கிறோம் என்று? தொழிலாளியாக இருந்தாலும் இயந்திரமாக இருந்தாலும் முதலில் தேவைப்படுவது முழுமையான அர்ப்பணமும் நம்பிக்கையும்தான். தரப்பட்டிருக்கும் கடமைகளை முழுமையாகச் செய்ய வேண்டும். அந்தப் ப்ரஸ்ஸைப் பற்றிய விவரம் நம்முடைய எல்லா ரிப்போர்ட்களிலும் போகுதுல்ல? திட்டம் வகுப்பவர்களுடைய வேலையை அவர்கள் செய்யட்டும். நம்முடைய வேலைகளை நாம் பார்ப்போம். ஒவ்வொருவனும் தானே சிந்திக்கக்கூடிய ஒரு படை எந்தச் சமயத்திலும் வெற்றி பெற முடியாது.''

கம்பெனி ஏதோ ஒரு போரில் ஈடுபட்டிருக்கிறது. யாருக்கு எதிராக என்பதையோ எதற்காக என்பதையோ கேட்கக்கூடாது. மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும், தான் வேறு எதுவும் செய்யக்கூடாது என்பதைப் பற்றியும் உள்ள சிந்தனைக்கும் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் ஒரு போரில் இடமே இல்லை. கூறியதைப் பின்பற்றி நடக்காத போர்வீரனைவிட சந்தேகப்படுபவன் ஆபத்தானவன். அவன் உள்ளுக்குள்ளேயே இருக்கும் எதிரி. உள்ளுக்குள் இருந்துகொண்டே தோல்வியடையும்படிச் செய்வான். நல்ல உடல்நலத்துடன் இருக்கும் மனிதர்களும், பாதிப்புகள் இல்லாத இயந்திரங்களும்தான் ஒரு போரில் எப்போதும் ஈடுபட்டிருப்பார்கள் என்று கூறுவதற்கில்லை. அதற்கு மாறாக கேடுகள் கொண்ட, தேய்மானம் உண்டான இயந்திரங்களும் மனிதர்களும்தான் பல நேரங்களில் திரும்பத் திரும்ப செயல்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலை உண்டாகிறது. ஒவ்வொன்றின் தனிப்பட்ட திறமைகளும் தேவைகளும் அல்ல- ஒட்டுமொத்தமான உழைப்பும் வெற்றியும்தான் முக்கியம். நான் தயாரிப்பு நிர்வாகியின் நாற்காலிக்கு மேலே சுவரில் வைக்கப்பட்டிருந்த சேர்மனின் புகைப்படத்தையே பார்த்தேன். அதற்குக் கீழே எழுதப்பட்டிருந்தது: 'பட்ங் ங்ய்ற்ண்ழ்ங் ஈர்ம்ல்ஹய்ஹ் ள்ற்ஹய்க்ள் ள்ர்ப்ண்க்ப்ஹ் க்ஷங்ட்ண்ய்க் ண்ற்ள் ஈட்ஹண்ழ்ம்ஹய்.' இந்தப் பெரிய கம்பெனியின் செயல்பாட்டால் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த அலுவலகத்திற்குள் நுழையும்போது நம்முடைய சிறிய சிறிய கவலைகளையும் சிறுசிறு சந்தேகங்களையும் பெரிதாக்கிக் காட்டுவதன் மூலமாகவும், உயர்த்திப் பிடிப்பதன் மூலமாகவும் நாம் நம்மையே எந்த அளவிற்குச் சிறிதாக்கிக் காட்டிக் கொள்கிறோம் என்பதுதான் தெரிகிறது.

முன்பொருமுறை மார்க்கெட்டில் இருந்து மாமிசம் வாங்கிக் கொண்டுவந்தபோது, மாமிசத்தை மிகவும் விரும்பக்கூடிய என் மகன் ஒருநாள் ஒரு முழு மாமிசத்தையும் வாங்கிக் கொண்டு வரவேண்டும் என்று என்னிடம் சொன்னான். மாமிசம் பூசணிக்காயோ பலாப்பழமோ போன்ற பொருள் இல்லை என்பதையும், நம்மைப் போன்ற உயிரின் துண்டாக்கப்பட்ட பகுதி என்பதையும், தீனி கொடுத்து வளர்த்து பெரிதாக ஆகும்போது மனிதர்கள் அதனை வெட்டித் துண்டுகளாக்கி விற்பார்கள் என்பதையும் நான் அவனுக்கு விளக்கிக் கூற ஆரம்பித்தேன். அதைக் கேட்டு வந்த அவனுடைய தாய் என்னைத் திட்டினாள்: "குழந்தைக்கு நீங்க என்ன சொல்லித் தர்றீங்க? பிள்ளைகளின் மனதை ஏன் கெடுக்குறீங்க? அவர்கள் இதை ஏன் தெரிஞ்சிக்கணும்?'' ஒரு பிஸ்கட்டைக் காட்டி அவள் அவனை இழுத்துக் கொண்டு சென்ற போது, அதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்குக் குற்ற உணர்வு உண்டானது. உண்மைதான். நான் அவற்றையெல்லாம் அவனிடம் கூறியிருக்கக்கூடாது. எனினும் என்ன காரணத்தாலோ, அன்று சாயங்காலம் அவள் என்னைத் தேடி வந்தபோது, அவளுடைய கூந்தலில் இருந்த ஷாம்பூவின் வாசனையை முகர்ந்து கொண்டே நான் மீண்டும் சொன்னேன்: "எத்தனையோ முயல்களின் கண்களில் இந்த திரவத்தை ஊற்றிப் பார்த்து, அவற்றின் கண்களில் இருக்கும் கார்னியாவின் பாதிப்பைக் கணக்கிட்டுப் பார்த்த பிறகுதான் இந்த ஷாம்பூ கம்பெனிக்காரர்கள் மார்க்கெட்டில் இதை இறக்குகிறார்கள் என்ற விஷயம் தெரியுமா? நான் எங்கேயோ வாசித்த விஷயம் இது.'' தொடர்ந்து இரவில் மீண்டும், "இங்கே பாரு... மனிதர்கள் குழந்தைகளை உண்டாக்காமலே உடலுறவில் ஈடுபட்டு சந்தோஷத்தை அனுபவிப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். அதே நேரத்தில் தங்களின் வளர்ப்பு மிருகங்களைக் கொண்டு, அவர்கள் மேலும் அதிகமான குட்டிகள் பிறக்கும்படிச் செய்கிறார்கள். சரியான ஊசிகளைப் போட்டு, உடலுறவு கொள்வதன் மூலம் கிடைக்கக் கூடிய சுகத்தைக்கூட அவற்றிடமிருந்து அபகரித்துக் கொண்டு...'' என்று சொன்னேன். அப்போதும் எனக்கு குற்றவுணர்வு உண்டானது. நான் அவளைக் கவலைப்படச் செய்திருக்கக் கூடாது. என்னைக் கவலைப்படச் செய்யாமல் இந்த தத்துவத்தை என்னுடைய தயாரிப்பு நிர்வாகி எனக்குக் கூறிப் புரிய வைத்தார். சமீப மாதங்களில் கம்பெனியின் உற்பத்தி எந்த அளவிற்கு அதிகமானது என்பதையும், எவ்வளவு தொழிலாளர்களுக்கு அது என்னவெல்லாம் நல்ல விஷயங்களைச் செய்தது என்பதையும், விளையாட்டுகளிலும் போட்டிகளிலும் கம்பெனியில் பணியாற்றும் எந்தெந்த தொழிலாளர்களுக்குப் பரிசு கிடைத்தது என்பதையும் ஒவ்வொரு மாதமும் "ஜெய் புல்லட்டின்" என்ற கம்பெனியின் பத்திரிகை எங்களிடம் கூறிக் கொண்டிருக்கிறது. அறுபத்தைந்தில் நாட்டின் கால்நடைகளின் எண்ணிக்கை முப்பத்து நான்கரை கோடியாக இருந்தது. எழுபத்தைந்து ஆனபோது அது முப்பத்து ஐந்தரை கோடியாக ஆகிவிட்டது என்று போன வார பத்திரிகையில் பார்த்தேன். நான் திருத்திக் கொள்கிறேன். நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன என்பதை திட்டமிடுபவர்கள் கூறுகிறார்கள்.


தயாரிப்பு நிர்வாகிக்கு நன்றி கூறிவிட்டு நான் எழுந்தேன். தொப்பியை எடுத்துத் தலையில் வைத்தேன். என்னுடைய நோயைப் பற்றி ஏதாவது அதிகமாகத் தெரிய நேரிட்டால் நான் நாளைக் காலையில் கூறுகிறேன்.

உயரத்தில் நிர்வாக அலுவலகம் இருக்கிறது. ஒரு சிறிய குன்று என்றே கூறலாம். அதற்கு மேலே நான்கு அடுக்குகளுடன் இரைச்சலுடன் அது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதைத் தவிர அங்கு நீர் இருக்கும் ஓவர் ஹெட் டேங்க் இருக்கிறது. கறுப்புநிறப் பாதைகளால் பெரிய சதுர அளவில் அமைக்கப்பட்ட பிரிவுகளின் பலவகைப்பட்ட இயந்திரங்கள் குன்றுக்குக் கீழே முழுமையாகப் பரந்து கிடக்கின்றன. அடுப்புகளும் குழாய்களும் கோணிகளும் வெளியே தள்ளி நின்று கொண்டிருக்கும் கட்டிடங்களும் ஷெட்களும்... ஒரு புகைவண்டிப் பாதை அவற்றுக்கு நடுவில் நுழைந்து பல பிரிவுகளாகப் பிரிந்து விரிகிறது.

பிரிந்து செல்லும் தண்டவாளங்களில் இணைக்கப்பட்டு விட்டதைப்போல ஒவ்வொரு பெட்டிகளும் ஆங்காங்கே தனித்தனியாக நின்று கொண்டிருக்கின்றன- அனாதையாக வெயிலை ஏற்றுக் கொண்டு. அந்தப் பக்கம் ஒரு புதிய கட்டிடத்தின் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. செங்கற்களைத் தலையில் வைத்துக் கொண்டு வேலை செய்யும் பெண்கள் படிகளில் ஏறிக் கொண்டிருக்கிறார்கள். ஒருத்தியின் தலையிலிருந்து செங்கற்கள் கீழே விழுகின்றன. யாருக்கோ காயம் உண்டாகியிருக்கிறது என்பது தெரிகிறது. ஆட்கள் சுற்றிலும் கூடுகிறார்கள். தூரத்தில் இருந்தவாறு அவ்வளவுதான் பார்க்க முடிகிறது. சத்தம் எதுவும் கேட்கவில்லை. ஒரு நிமிடம் நான் கண்களைக் கூர்மைப்படுத்திக் கொண்டு அதைப் பார்த்துக் கொண்டு நின்றேன். அலுவலகத்திற்குப் போய் விவரத்தைச் சொன்னால் என்ன என்று சிந்தித்தேன். வேண்டாம்... அது என்னுடைய வேலை அல்ல. தயாரிப்பு நிர்வாகி சொன்ன வார்த்தைகளை நான் ஞாபகப்படுத்திப் பார்த்தேன். அதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் யாராவது இருப்பார்கள். பிறகு... குறைப்பட்டுக் கொள்வதற்கு இதில் ஒன்றுமில்லை. புதிய வேலைகள் நடக்கின்ற இடத்தில் விபத்துக்கள் சாதாரணமாக நடக்கக்கூடியது தான். சில நாட்களுக்கு முன்னால் ஏதோ ஒரு இரும்புச் சாமானை எடுத்துத் தூக்கிக் கொண்டிருந்த க்ரேனுக்குக் கீழே சிக்கி ஒரு எரெக்ஷன் ஃபிட்டர் இறந்துவிட்டான். வேலை செய்பவன் வேலையால் கொல்லப்படுகிறான். பிரம்மாண்டமான பிரமிட்களின் வேலை நடந்தபோது, கற்களுக்கு அடியில் சிக்கி நூற்றுக்கணக்கான அடிமைகள் மரணத்தைத் தழுவியிருக்கிறார்கள். அவர்களுடைய நினைவுச் சின்னங்கள்தான் பிரமிட்கள். அவர்களுடைய தியாகத்தின்- தியாகத்தின் அல்ல- மரணத்தின் பிரமிட்கள் எகிப்திய நாகரீகத்தின் காலப் பெட்டகங்கள் அல்ல, பிணங்கள் இருக்கும் கல்லறைகள் என்று பேராசிரியர் ஒரு சொற்பொழிவில் கூறினார். நாகரீகத்தின் பாதையில் அடைந்த திறமையை மக்களின் நலனுக்காகப் பயன்படுத்துவதற்கு பதிலாக பிரமிட்கள் உண்டாக்கத் திருப்பி விட்டபோது, எகிப்திய நாகரீகத்தின் உட்பகுதி கரியானது. இறப்பதற்கு முன்பே ஃபரவோக்கள் பிணங்களை அடக்கம் செய்யும் கல்லறைகளைக் கட்டியவர்களாக இருக்கலாம். ஆனால் அவை கட்டப்பட்டபோதே அவர்களுடைய நாகரீகம் இறந்து விட்டிருந்தது. இறந்த பிறகும் நீண்டகாலம் அடக்கம் செய்யப்படாமல் எகிப்திய நாகரீகம் கிடந்தது. சந்தையில் இறந்து விழுந்த மனிதனின் பிணத்தைப்போல அல்ல. நடுங்க வைக்கும் பொருளாதார நிலைமை அவனுடைய மனைவி, பிள்ளைகள் ஆகியோரின் பாச உணர்வுகளில்கூட தளர்ச்சியை உண்டாக்கிக் கொண்டு அந்த இடத்தில் கிடந்தது. எகிப்திய நாகரீகத்தை அடக்கம் செய்ய வாரிசுகள் இல்லாமல் இருந்தார்கள். செங்கல் விழுந்து காயம்பட்ட மனிதன் இறந்தால் அவனை கம்பெனி அடக்கம் செய்யும். கம்பெனி, தொழிலாளர்களுக்குத் தந்தை மட்டுமல்ல- மகனும் மருகனும்கூடத் தான். இறுதிச் சடங்கு செய்யும் விஷயங்களில் கம்பெனிக்கு பெரிய அளவில் ஆர்வம் இருக்கிறது. இறந்தவர்களை அடக்கம் செய்வது மட்டுமல்ல- வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு அது கலை நிகழ்ச்சி களையும் நாடகங்களையும் ஏற்பாடு செய்து கொடுக்கிறது. அவற்றைப் பற்றிய விளக்கங்களும் படங்களும் "ஜெய் புல்லட்டி"னில் பிரசுரமாகி வருகின்றன.

உதாரணத்திற்கு- இந்தத் தோட்டங்கள். வேறு எந்தக் கம்பெனி கரியும் புகையும் கழிவுப் பொருட்களும் இருக்கும் அதன் தொழிற்சாலை காம்பவுண்டிற்குள் இதைப் போன்ற ஒரு தோட்டத்தையும், இவ்வளவு மரங்களையும் வளர்த்துக் கொண்டிருக்கும்? ஓவர் ஹெட் டேங்கிலிருந்து கீழ்நோக்கி வரும் சரிவு முழுவதும் ஒவ்வொரு படியிலும் புல் தட்டுகளும் மலர் படுக்கைகளும்தான். தோட்டத்தில் ஆட்கள் வேலை செய்கிறார்கள். வயதான தோட்ட வேலை செய்யும் மனிதன் தன்னுடைய மடித்துக் கட்டப்பட்ட வேட்டியுடனும் பனியனுடனும் எழுந்து நின்று எனக்கு வணக்கம் சொன்னான். அவன் இப்போது சூப்பர்வைசராக ஆகியிருக்கிறான். எனினும் வேலையில் தொழிலாளிதான். மற்ற வேலை செய்யும் ஆட்களுடன் சேர்ந்து வேலை செய்து கொண்டிருப்பான். எதிரில் இருக்கும் ஒரு பகுதியில் நிறைந்து நின்றிருக்கும் வெள்ளை நிற மலர்களைச் சுட்டிக் காட்டி நான் கேட்டேன்: "அந்த மலரின் பெயர் என்ன காக்காஜி? அந்த வெள்ளை நிற மலர்...'' அந்த வழியாகப் போகும்போதெல்லாம் நான் ஏதாவது பூவின் அல்லது செடியின் பெயரையோ அவை வளர்க்கப்படும் விதத்தையோ கேட்பேன். அந்த ஆள் எல்லாவற்றையும் விளக்கிக் கூறுவான். பிரிந்து போகும்போது நான் அதை மறந்து விடுவேன். என்னால் அந்தப் பெயர்களை ஞாபகத்தில் வைத்திருக்க முடியாது. எனினும் மலர்களைப் பார்க்கும்போது நான் மீண்டும் கேட்கத்தான் செய்வேன்.

"அது டைமோர் ஃபித்திக்கா ஆச்சே! நல்ல பிரகாசமான வெள்ளை நிறம். பனியைப்போல இருக்கும்''- அந்த ஆள் சொன்னான்: "பிறகு... இது ஸினியாவின் ஒரு ஹைப்ரிட். சட்டன் கம்பெனியின் ஸ்பெஷல். என் கையில் கொஞ்சம் விதை இருக்கு. தரட்டுமா?''

"இந்த சீசனல் செடிகளுக்கு ஒரு கெட்ட குணம் இருக்கு காக்காஜி'' - நான் சொன்னேன்: "பூக்குறப்போ அவை திருவிழாதான். ஆனால் காயும்போது அவை வாசலில் ஒரு சுடுகாடாக மாறி விடுகின்றன.''

அந்த ஆள் உரத்த குரலில் சிரித்தான். "அப்படிச் சொல்ல முடியாது பாபு. அவை மரணம் அடைவது இல்லை. சுடுகாடு உண்டாக்குவதும் இல்லை. காலநிலை பொருத்தமாக இல்லாதபோது அவை அதிக பாதுகாப்பு உள்ள வித்தின் ஓட்டிற்குள் உறங்கப் போய்விடுகின்றன என்பதே சரியானது. பிறகு... சூழ்நிலைகள் மாறும்போது, திரும்பவும் வெளியே வந்து படர்ந்து பந்தலாக நிற்கின்றன. பெரனியல் தாவரங்கள் அந்த மாதிரி உறங்கப் போவதற்கு பதிலாக, கால நிலைக்கு ஏற்றபடி வடிவத்தை மாற்றிக் கொண்டு நிற்கின்றன. அதுதான் அவற்றின் தாளம். தாளத்தில் வித்தியாசம். அவ்வளவுதான் பாபு.''

"அப்படியென்றால்... காக்காஜி நம்முடைய தாளம் என்ன?''- நான் கொஞ்சம் வழியைத் தாண்டிச் சென்று கேட்டேன்.

அந்த ஆள் மீண்டும் சிரித்தான்.


அவனும் தன்னுடைய இடத்தை விட்டுப் பாதையின் ஓரம் வரை வந்தான். ஒரு ரகசியத்தைப் பேசுவதைப்போல நாங்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக நின்றுகொண்டு பேசினோம். "மனிதனின் தாளம் காலநிலையோடு அல்ல பாபு. காலத்துடன். காலநிலையை அவன் இறக்காமலும் வடிவம் மாறாமலும் எதிர்த்து நிற்கக் கற்றுக் கொண்டான்... பிறகு... மனிதன் தானே ஒரு காலநிலையை உண்டாக்கும்போது... அப்போது அதனை எதிர்த்து அவனால் நிற்க முடியாமல் போகிறது. தான் உண்டாக்கிய காலநிலைக்கு அவன் கீழ்ப்படிகிறான். காலத்துடன் உள்ள தாளத்தை அவன் இழக்கிறான்.''

"அது என்ன காக்காஜி?''- நான் புரியாமல் கேட்டேன்.

அவன் சிரிக்க மட்டும் செய்தான்.

"நீங்க என்னவெல்லாமோ சொன்னீங்க''- நான் சொன்னேன்: "சரி காக்காஜி. நீங்கள் எனக்கு நல்ல வாசனை கொண்ட மலர்களைத் தரும் ஒரு செடியைத் தர முடியுமா? இரவு நேரத்தில் மணத்தைப் பரப்பக் கூடியது?''

என் வீட்டின் படுக்கையறை இருக்கும் பகுதிக்கு அடுத்த கட்டிடத்தில் ஒரு சிறிய உணவு விடுதி இருக்கிறது. அவர்கள் எப்போதும் எச்சில் இலைகளையும் மற்ற அழுக்குப் பொருட்களையும் வெளியே கொண்டுவந்து போடுகிறார்கள். நகராட்சியின் வண்டி காலை நேரத்தில்தான் வரும். அதனால் தினமும் மாலை நேரம் வந்துவிட்டால் ஒவ்வொரு நாளின் அழுக்கு முழுவதும் மலை என குவிய, இரவு முழுவதும் நாங்கள் அதன் நாற்றத்தை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. பலமுறை நான் கடைக்காரனிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன். "பாருங்க சாஹிப்... முன்பு எங்கள் வீட்டில் பால் தரும் பால்காரன் இருந்தான்''- அவன் ஒரு கதையைக் கூற ஆரம்பிப்பான். "அவனுக்கு கறுப்பு நிறத்தைக் கொண்ட மனிதர்கள்மீது மிகுந்த வெறுப்பு. கறுப்பு மனிதர்கள் தாழ்ந்த ஜாதிக்காரர்கள் என்ற எண்ணம் அவனுடைய மனதில் இருந்தது என்று நினைக்கிறேன். நான் திருமணம் செய்த போது, என்னுடைய மனைவி ஒரு கறுத்த நிறத்தைக் கொண்டவளாக இருந்தாள். கறுப்பு நிறத்தில் இருந்தாலும் நல்ல அழகான பெண்ணாக அவள் இருந்தாள். கேட்டீங்களா? ஆனால் என்னுடைய பால்காரனுக்கு இதெல்லாம் புரியுமா? அவன் என்னிடம் அவளை விட்டெறியும்படி வேண்டிக் கொண்டே இருந்தான். பால் வேண்டுமென்றால் பெண்ணைக் கழற்றி விடணும். நான் அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்டே இருந்தேன். சில நாட்கள் சென்றதும் அவள் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். அதுவும் கறுப்பு நிறத்திலேயே இருந்தது. பால்காரன் அப்போது ஒரு இறுதியான முடிவைத் தந்தான். பால் வேண்டுமென்றால் இரண்டு வாரங்களுக்குள் குழந்தையையும் தாயையும் ஆற்றில் வீசி எறிய வேண்டும் என்று அவன் சொன்னான். போதாதா?'' குளிர்காலத்தில் சாளரங்கள் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். பால் போன்ற நிலவு வெளிச்சம் உள்ள இரவு வேளைகள்கூட எங்களுக்குக் கறுப்பாகவே தெரிகிறது. இப்போது... வெப்பம் ஆரம்பமானவுடன் சாளரங்களைத் திறக்க வேண்டியதிருக்கிறது.

"இருக்கே! லேடி ஆஃப் தி நைட் என்ற ஒரு செடி இருக்கு. மெக்ஸிக்கன் ஜாஸ்மின்''- அந்த மனிதன் சொன்னான்: "வேறு செடிகளும் இருக்கு. நான் கட்டிங்குகள் தயார் பண்ணி வைக்கிறேன்.''

நான் அவனுக்கு நன்றி கூறிவிட்டு நடந்தேன்.

அப்பால் இருக்கும் கெமிக்கல் கம்பெனியின் ப்ளான்டில் இருந்து வரும் அழுக்கு நீருக்கான பெரிய குழாய்களைப் பதிய வைப்பதற்காக நீளமாக குழி வெட்டி வைத்திருக்கிறார்கள். என்னுடைய பிரிவுக்குச் செல்லும் பாதை. எங்களுடைய கம்பெனியின் ஒரு சப்ஸிடியரி அது. அதனால் இந்த வழியாக அப்பால் இருக்கும் பொது வாய்க்காலுக்கு அவர்களுடைய அழுக்கு நீரைக் கொண்டு செல்லும் பைப்புகளை இடுவதற்கான அனுமதி அவர்களுக்குக் கிடைத்தது. அவர்களுடைய சிவில் எஞ்ஜினியர் ஒருநாள் இங்கே வந்து பேசி தேநீர் அருந்திவிட்டு தொலைபேசி எண்ணைக் கொடுத்துவிட்டுச் சென்றார். டிவிஷனுக்குச் சென்று அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்க வேண்டும்- எப்போது இந்தப் பணி முடிவடைகிறது என்று. வழி சரியாகாமல் புதிதாக வந்திருக்கும் டைஸிங்கில் மெஷினை உள்ளே கொண்டு வந்து வைக்க க்ரேனைக் கொண்டுவர முடியாது.

நான் முதல் யூனிட்டில் இருக்கும் என்னுடைய அலுவலக அறைக்குள் நுழைந்து தொப்பியைக் கழற்றி வளையத்தில் தொங்க விட்டு, துவாலையை எடுத்துத் தலையைத் துவட்டினேன். கண்ணாடிக் குவளையில் நீர் எடுத்துக் குடித்தேன். மின் விசிறியைப் போட்டேன். உண்மையாகவே வெயிலுக்கு வெப்பம் அதிகரித்திருந்தது. கோடையாக மாறியிருக்கிறது.

மேஜைமீது இருந்த தாள்களில் நான் வேகமாகக் கண்களை ஓட்டினேன். பழைய ஆர்டர்கள்தான் அதிகமாக இருந்தன. பல விதப்பட்ட காஸ்ட்டிங்குகளைப் பற்றிய விளக்கங்களும், பார்ட் எண்ணும், தயார் பண்ண வேண்டிய எண்ணிக்கையும், கொடுக்க வேண்டிய தேதியும். புதியவையும் இருந்தன. வரைபடங்கள், ஸ்பெஸிஃபிகேஷன்கள்... தாள்கள்மீது மேஜைமேல் இருந்த ஒரு மைக்ரோ மீட்டரை எடுத்து பேப்பர் வெயிட்டாக வைத்துவிட்டு, ஒன்றிரண்டு இன்டண்டுகளில் கையெழுத்துப் போட்டேன். தொடர்ந்து நான் ஷாப்பை நோக்கி நடந்தேன்.

ஷாப்பில் இயந்திரங்கள் அனைத்தும் செயல்பட்டுக் கொண்டிருந்தன. பணியாட்கள் அனைவரும் அவரவர்களின் இடத்தில் இருந்தார்கள். பேட்டர்ன் மேக்கர், பேட்டர்ன் மேக்கருக்கான பணியில். டைஸிங்கர், டைஸிங்கருக்கான வேலையில். கார்பெண்டரும் மெஷினிஸ்ட்டும் டர்னரும் மில்லரும்... தொழிலாளிகள், சார்ஜ்மேன், ஃபோர்மேன், எஞ்ஜினியர்... தேனீக்களின் கூட்டிலிருந்து வருவதைப்போல, நிரந்தரமாகக் கூடவோ குறையவோ செய்யாமல் ஒரே தாளத்தில் உள்ள ஒரு சத்தம்... ஷாப்பிற்குள் நடக்கும்போதெல்லாம் அதற்குள் மனிதர்களின் மற்றும் இயந்திரங்களின் அசைவுகளும் சத்தங்களும் ஆச்சரியப்படும்படியான ஒரு தாளத்தில்... ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவிற்கு ஒன்றாகச் சேர்ந்து லயத்தில் ஈடுபட்டு, ஒரு ஆர்க்கெஸ்ட்ராவாக வடிவம் எடுத்திருப்பதைப்போல எனக்குத் தோன்றும். இங்கு ஒவ்வொருவனும் ஒரு ஸ்பெஷலிஸ்ட் தான். ஒருவனும் இன்னொருத்தனின் வேலையைச் செய்ய முடியாது. தன்னுடைய வேலையைப் பற்றி யாருக்கும் சந்தேகமும் இல்லை. ஆம்லெட்டா, ஃப்ரையா- இவற்றில் எதை உண்டாக்க வேண்டும் என்று யாரும் கேட்க மாட்டார்கள். கெட்டுப்போன உணவுப் பொருட்களின் கெட்ட நாற்றத்தைப் பற்றி யாரும் குறை கூற மாட்டார்கள். கல்லூரி மாணவர்களுடன் ஓடிப் போகும் மனைவிகளுக்கோ, வெடிகுண்டை வீசும் அமரேஷ் முகர்ஜியின் பிள்ளைகளுக்கோ இங்கு இடமில்லை. எல்லாரும் அந்த ஸிம்ஃபனியில் தாங்களே இணைந்து விடுகின்றனர்.

ஒவ்வொரு நாளும் காலையில் வந்தவுடன் நான் எல்லா யூனிட்களையும் ஒரு தடவை சுற்றிப் பார்ப்பேன். இயந்திரங்களின் செயல்பாடுகளைப் பற்றி விசாரிப்பேன். மனிதர்களின் செயல்பாட்டைக் கூர்ந்து பார்ப்பேன். தயார் பண்ணப்பட வேண்டியவற்றைப் பற்றி கட்டளைகள் பிறப்பிப்பேன்.


தயார் பண்ணப்பட்டவையைப் பார்த்து திருப்தியடைவேன். பிரச்சினைகள் பல நேரங்களில் வரும் என்றாலும், வேலை பிரச்சினை இல்லாதது அல்ல என்றாலும், இந்த ஷாப்புக்குள் கிடைக்கக் கூடிய சந்தோஷம் ஒருவனுக்கு வேறு எங்கும் கிடைக்காது. தீர்க்கக்கூடிய பிரச்சினைகளே இருக்கின்றன. சந்திக்கக்கூடிய சவால்களே இருக்கின்றன. உருக்கப்பட்ட உலோகத்தைப்போல இருக்கும் ஒருவன் இதற்குள் நுழையும்போது அறியாமலே ஒரு காஸ்ட்டிங்காக மாறி உறுதிப்படைத்தவனாக ஆகிவிடுகிறான். செயல் என்பது இங்கு ஒரு அருளாக இருக்கிறது. அது ஒவ்வொருவனையும் அவனுடைய இடத்திலும் பாதையிலும் வேறுபாடு இல்லாமல் உறுதியாக இருக்கச் செய்கிறது.

ஓம்கார்நாத்தான் எனக்குக் கடமையைப் பற்றிச் சொல்லித் தந்தான். ஓம்காரை நான் சிறுவயதிலிருந்தே அறிவேன். அன்று அவன் கிராமத்திலேயே மிகவும் தாறுமாறாக நடக்கக்கூடிய பையனாக இருந்தான். மற்ற பிள்ளைகள் எல்லாரும் அவனைப் பார்த்து பயப்படவும் வழிபடவும் செய்தார்கள். ஆனால் நீண்ட காலத்திற்குப் பிறகு நகரத்தில் பார்த்தபோது ஓம்கார் வேறொரு மனிதனாக மாறிவிட்டிருந்தான். கீதையிலும் தர்மத்திலும் முழுமையான நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு கர்மயோகியாக அவன் இருந்தான். தேர்வுகளில் வெற்றி பெற்று வேலையில் சேர்ந்த பிறகு, ஒரு மேஜிஸ்ட்ரேட்டாக அவன் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அடிக்கடி உயர்ந்து கொண்டிருந்த காலம். மனிதனுக்கு உண்டாகக்கூடிய தவறுகள் பெரும்பாலும் அவன் தனக்கு சம்பந்தமில்லாத பணிகளில் ஈடுபடுவதால்தான் என்று அவன் நம்பினான். தன்னுடைய வெற்றிக்குக் காரணம், அமைதியாக தான் தன்னுடையதாக இல்லாத பிரச்சினைகளை மறந்து, தன்னுடைய செயல்களில் மட்டும் மையம் கொள்வதுதான் என்று அவன் கூறுவதுண்டு. நாம் நம்முடைய வேலையைச் செய்தால் மட்டும் போதாது. நம்முடையவையாக இல்லாமலிருப்பவற்றில் இருந்து விலகி நிற்கவும் வேண்டும். கடமை என்று அப்படிக் கூறப்படுவது தான் என்ன? நம்முடைய செயலை நாம் எப்படிக் கண்டுபிடிப்பது? ஒருநாள் நான் அவனிடம் கேட்டேன். தன்னுடைய வாதத்தை ஒரு சித்தாந்தமாகவே புரிந்து கொண்டிருந்த மனிதனாக ஓம்கார் இருந்தான். அவன் சொன்னான்: "ஒரு அவரை விதையை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் கடமை என்ன? முளைத்து, ஒரு அவரைச் செடியாக வளர்ந்து, கொம்பில் படர்ந்து, பூத்து, அவரை விதைகளை உண்டாக்கி காய்ந்து போவதுதான். ஆனால் எல்லா விதைகளும் ஒரே மாதிரி முளைக்கின்றன. காய்க்கின்றன. அவற்றுக்கு இடையே ஒரு வித்தியாசமும் இல்லை. மனிதன் மாறுகிறான். வளரவும் செய்கிறான்''- நான் மறுத்துச் சொன்னேன். ஓம்கார் கருணையே பார்க்காமல் என்னைத் திருத்தினான்: "தெய்வம், அவரைச் செடிகள் உண்டாகட்டும் என்று சொன்னபோது உண்டானதுதான் அவரைச் செடி என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? கஷ்டம்! உங்களுக்கு அந்த அளவிற்கு விவரம் இல்லாமல் போய் விட்டதா? பூமியில் வாழ்வு ஆரம்பமான அன்று முளைத்து, என்றைக்கும் வளர்ந்தும் பெரிதாகிக் கொண்டும் இருக்கும் பரிணாம மரத்தின் ஒவ்வொரு கொம்பிலும் இறுதிப் பழமும் வழித் தோன்றலும்தான் ஒவ்வொரு பிறவியும். வளர்ச்சி என்ற இந்த எண்ணற்ற கொம்புகளின் வழிகளில் ஒவ்வொருவனும், இறுதியில் அவரைக் கொடி கொம்பைக் கண்டுபிடிப்பதைப்போல சொந்த கர்மத்தைக் கண்டுபிடிக்கிறான்.'' எந்தச் சூழ்நிலை பின்தொடர்ந்தாலும் ஒவ்வொரு சமுதாயத்தின் நோக்கமும், அதற்குள் இருக்கும் ஒவ்வொரு தனி நபரின் கர்மத்தையும் மேலும் தெளிவாக நடத்திச் செல்கிறது என்று அவன் சொன்னான். நவீன யுகத்தின் உளவியல் விஞ்ஞானம் அனைத்திலும் கர்மத்தை நோக்கிய மீள் பயணத்தை அவன் பார்த்தான். எங்களைப் பார்ப்பதற்காக ஓம்கார் வந்திருந்தான். நாட்டில் எல்லா இடங்களிலும் தீவிரவாதிகள் சட்டம் உண்டாக்கியவர்களையும், சட்டத்தை நடத்திக் கொண்டிருப்பவர்களையும் கொன்று குவித்துக் கொண்டிருந்த காலம். ஒரு மெய்க்காப்பாளனோ, கையில் ஒரு ஆயுதமோகூட இல்லாமல் அவன் வந்தான். நாற்காலியில் சிந்தனையற்றவனாக, செயலற்றவனாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு அவன் சொன்னான்: "முன்பு நான்கு வர்ணங்களும் நான்கு ஆசிரமங்களும் இருந்தன. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நேரத்திலும் செய்ய வேண்டியது என்ன என்பதைத் தெரிந்து வைத்திருந்தான். சமூக வாழ்க்கைக்குப் படிப்படியான நிலையும் இருப்பும் இருந்தன. மெதுவாக அந்த படிப்படியான நிலையையும் இருப்பையும் நாம் மீண்டும் கண்டடைவோம். இந்த விஞ்ஞானமும் புரட்சியும் அதே படிப்படியான நிலையையும் இருப்பையும் குறி வைக்கின்றன.'' தொடர்ந்து அவன் கீதையில் இருந்து ஒரு சுலோகத்தைக் கூற ஆரம்பித்தான்:

"ஸ்ரேயான் ஸ்வதர்ம்மோ விகுண:

பரதர்ம்மாத் ஸ்வனுஷ்டிதாத்

ஸ்வர்தர்ம்மே நிதனம் ஸ்ரேய:

பரதர்ம்மோ பயாவஹ."

கீதையை உச்சரிக்கும்போது அவனுடைய கண்கள் தானாகவே பாதி மூடிக்கொள்ளும். முகம் மேல்நோக்கி உயரும். தியானத்தில் மூழ்கியிருப்பவன் அல்ல- சமாதியடையப் போகிற ஒரு மனிதனின் நிலையை அந்தச் சந்தர்ப்பங்களில் அவன் என்னிடம் உண்டாக்குவான். பயம் தோன்றும். மனம், சொல், உடல் ஆகியவற்றைக் கடந்தவன்தான் ஸ்திரப் பிரக்ஞன் என்று ஓம்கார் கூறுகிறான். நிலையான மனம் என்பது மரணமா? மரணம் அவனுடைய கண்களில் அப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டதோ? மரணம் என்பது ஒரு பாடலைப் போன்றது என்று யாரோ கூறுகிறார்கள். இந்த இனிய சிம்ஃபனியைக் கேட்டுக் கொண்டு நிற்கும்போது, என்னுடைய மனம் நீருக்குள் இறங்குவதைப்போல தாழ்வதாக எனக்குத் தோன்றுகிறது. இந்த சிம்ஃபனி எனக்கு விருப்பமுள்ளதாக ஆக்கியதில் ஓம்காருக்கு பங்கு இருக்கிறது. இறந்துபோன ஓம்கார்.

ரத்தப் புற்றுநோய்தான் ஓம்காரின் நோய். முப்பத்தைந்து வயதில் அவன் நோய் பாதித்த மனிதனாகிவிட்டான். இன்னும் சொல்லப் போனால் முப்பத்தைந்து வயதுவரை அவன் தனக்குள் வளர்ந்து கொண்டிருந்த நோயைப் பற்றித் தெரிந்திருக்கவே இல்லை. பாவம் ஓம்கார். தன் உடலுக்குள் மாறிக் கொண்டிருக்கும் விஷயங்களைப் பற்றி சிறிதும் தெரியாமல் அவன் திருட்டுத்தனங்களைக் கண்டுபிடித்துக் கொண்டும், அக்கிரமங்கள் செய்பவர்களை தண்டித்துக் கொண்டும் வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருந்தான். ஆட்சி செய்வது எந்தக் கட்சியாக இருந்தாலும் அந்தந்த காலத்தில் இருக்கும் அரசாங்கங்களுக்கு எதிராக வாளைத் தூக்கியவர்களையெல்லாம் அவன் ஒன்றுபடுத்தினான். அப்போது தான் தன்னுடைய உயர்வின் உச்சியில், கடமையின் கொம்புகளில் இறுகப் படர்ந்து நின்றிருக்கும் நிலையில், அவனுக்குத் திடீரென்று கைகளும் கால்களும் பலத்தை இழப்பதைப் போலவும் தன்னுடைய பிடி விடுவதைப் போலவும் தோன்றத் தொடங்கியது. வேர்க் கடலையிலும் முட்டையிலும் கோதுமையிலும் மீனிலும் கலந்து அவனுடைய உடலுக்குள் சென்று சேர்ந்த தேவைக்கும் அதிகமான செம்பு, வழக்கம்போல வெளியே போகாமல் அவனுடைய குருதியில் கலந்துவிட்டிருந்தது. இதயத்திலும் கண்களிலும் மூளையிலும் அது போய்க் கலந்து, நரம்புகள் செயல்படாமல் போயின. கை விரல்கள் சுருண்டன. உறுப்புகள் நடுங்கின. நாக்கு தளர்ந்தது. உணவு நின்றது.


வார்த்தையால் விளக்கிக் கூற முடியாத அளவிற்கு வேதனையையும் திணறலையும் சகித்துக் கொண்டு, இறுதியில் எந்தவொரு தீவிரவாதியாலும் ஆக்கிரமிக்கப்படாமல், காயமெதுவும் அடையாமல் அவன் தானே மரணத்தைத் தழுவினான். மனம், வாக்கு, காயம் ஆகியவற்றில் சுத்தமானவனாக இருந்து கொண்டு ஓம்கார் கர்மத்தில் மூழ்கியபோது, அவனுடைய சரீரம் அதன் இயல்புத் தன்மையை இழந்ததை யார் அறிந்தார்கள்? ஒரு மருத்துவராலும் அதை மீண்டும் அதுவாக ஆக்க- அவனை அவனாக ஆக்க முடியவில்லை.

நான் ஹஸ்ஸன் மாஸ்டர் என்று அழைக்கும் எங்களுடைய மாஸ்டர் பேட்டர்ன் மேக்கரைத் தேடி நடந்தேன். புருவம்கூட நரைத்த கிழவர். நீண்டகால சேவைக்குப் பிறகு ஹஸ்ஸன் மாஸ்டர் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். மாஸ்டருக்குப் பொறுப்புகள் எதுவும் மீதமில்லை. பிள்ளைகளின் பிள்ளைகளுக்குக்கூட திருமணமாகி வேலைகளையும் அவர் தேடிக் கொண்டார்கள். அதற்குப் பிறகும் மாஸ்டர் வேலை செய்து கொண்டிருந்தார். ரெக்கார்டுகளில் பதினைந்து வயது குறைவாகக் காட்டப்பட்டிருந்தது. வயதைக் குறைவாகக் காட்டியது தானல்ல- மேனேஜ் மெண்ட்தான் என்று அவர் கூறுகிறார். தொழிற்சாலைக்கு அவரைத் தேவைப்படுகிறது. "இல்லாவிட்டால் நான் எப்போதோ ஓய்வு பெற்றிருப்பேன்'' - மாஸ்டர் கூறுவார்.

நான் சென்றதை மாஸ்டர் பார்க்கவில்லை. கஷ்டமான ஒரு மாடலில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். கஷ்டமானவற்றை அவர் மற்றவர்களுக்குத் தருவதில்லை. "எப்படி இருக்கு வேலை மாஸ்டர்?''- நான் குசலம் விசாரித்தேன். நிமிட நேரத்திற்கு முகத்தை உயர்த்தி காலை வணக்கம் கூறிவிட்டு மீண்டும் பணியில் கண்களைப் பதிய வைத்துக் கொண்டே அவர் சொன்னார்: "பாருங்க சார்... கிட்டத்தட்ட இதே மாதிரி ஒன்றை நான் பத்து வருடங்களுக்கு முன்னால் உண்டாக்கியிருக்கேன். உங்களுக்குத் தெரியாது. அப்போது நீங்கள் தொழிற்சாலையில் இல்லை. பல தடவை முயற்சி பண்ணிய பிறகுதான் சரியாக வந்தது. அதனால் இதைப் பார்த்த போது நினைத்தேன்- போவதற்கு முன்னால் இன்னொருமுறை இதில் வேலை செய்ய வேண்டும் என்று. பிறகு... ம்... ஒரு வித்தியாசம் மட்டும்... அப்போது அது இரும்பில் காஸ்ட் செய்யப்பட்டது. என்ன காரணத்திற்காக இதை அலாயில் காஸ்ட் செய்யச் சொன்னார்கள்?'' யாரால் பதில் சொல்ல முடியும்? நான் அதைக் கூறுவேன் என்று அவரும் எதிர்பார்க்கவில்லை. மாஸ்டர் மீண்டும் தன் வேலையில் மூழ்கிவிட்டார்- அலாய் ஆக இருந்தால் என்ன, இரும்பாக இருந்தால் என்ன என்ற நினைப்புடன்.

நான் அவரிடம் ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்வதாக நோக்கம் என்று கேட்டேன். "எத்தனையோ வருடங்கள் வேலை செய்து விட்டேன். எவ்வளவோ சிரமங்கள் நிறைந்த மாடல்களை உண்டாக்கி விட்டேன். எனக்கு இப்போது புரியாதது ஒன்றுதான்''- அவர் வேலையிலிருந்து கண்களை எடுக்காமலே தொடர்ந்தார்: "எதற்காக இவர்கள் வயதாகிவிட்டது என்று சொல்லி வேலை செய்பவர்களைப் போகச் சொல்கிறார்கள்? வாழ்க்கையே வேலைதானே? வாழ முடியாத அளவிற்கு வயது ஆகும் ஒரு விஷயம் இருக்கிறதா என்ன?''

"அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன''- நான் விளக்கிச் சொன்னேன்: "முதலாவது- வயதானவர்கள் இளைஞர்களுக்காக இடத்தை விட்டுத்தர வேண்டும். இரண்டாவது- வயதானவர்கள் தங்களின் வேலையை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்க வேண்டும்.''

"இல்லை. என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை சார்''- மாஸ்டர் தலையை உயர்த்தினார். அவர் பலமாகத் தலையை ஆட்டினார்: "எல்லாருக்கும் இன்று இல்லாவிட்டால் நாளை செத்து இடத்தைக் காலி பண்ணணும். பென்ஷனில் அனுப்புவதால் கிடைக்கக் கூடிய காலியிடங்கள் செத்துப் போவதாலும் கிடைக்கும். இரண்டாவது- இங்கிருந்து ஓய்வு பெற்றுப் போய்விட்டால்... இங்கிருந்து போன பிறகு வேறு என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள்? வேறு என்ன... என்ன செய்வது?'' - அவருடைய தலையாட்டல் நின்றது. குரல் தடுமாறியது. தலையை மீண்டும் குனிந்து கொண்டு அவர் மீண்டும் தன்னை நோக்கித் திரும்பினார்.

எனக்கு அவர்மீது இரக்கம் உண்டானது. இப்போது நிர்வாகம் அனுமதிப்பதாக இருந்தால் அவர் தன்னுடைய வயதைக் குறைத்துக் கொள்வார்.

நான் பதிலெதுவும் கூறுவேன் என்று எதிர்பார்க்காததைப்போல அவர் மீண்டும் பணியில் மூழ்கிவிட்டார். நான் அவருடைய மேஜைமீது கிடந்த ஒரு வரைபடத்தைப் பார்த்தேன். அனுமதிக்கப்பட்டிருக்கும் டாலரன்ஸ். உலோகம் குளிர்ச்சியடையும் போது சுருங்குவதற்காக முதலிலேயே அதிகரித்து வைக்க வேண்டிய அளவு. அந்த அளவுக்கேற்றபடி செட் செய்த கான்ட்ராக்ஷன் ரூல். காஸ்ட் செய்யும் உலோகத்தின் விரிசலுக்கு ஏற்றவண்ணம் நீட்டிய சென்டிமீட்டர்கள். பேட்டர்ன் மேக்கரின் சென்டிமீட்டருக்கு சென்டிமீட்டரின் நீளமில்லை. அவருடைய சென்டிமீட்டர்கள் முன்கூட்டி முடிவு செய்தபடி நீளவும் சுருங்கவும் செய்யும். ஹஸ்ஸன் மாஸ்டருக்கு சொந்தமாக ஒரு அளவு இல்லை. ஹஸ்ஸன் மாஸ்டர் ஹஸ்ஸன் மாஸ்டர் அல்ல. மற்றவர்கள் உத்தரவு பிறப்பிக்கும் மாஸ்டர்தான் ஹஸ்ஸன். வேலையிலிருந்து போன பிறகு வேறு என்ன... பேட்டர்ன் மேக்கிங்தான் ஹஸ்ஸனின் வேலை. அதில் அவர் அசாதாரணமான திறமையைப் பெற்றிருந்தார். முழுமையான ஈடுபாட்டால் மாஸ்டராக ஆனார். அதனால் வேறொன்றும் இல்லாதவராக ஆனார். இந்த சிம்ஃபனி அல்லாமல் அவருக்கு ஒரு சிம்ஃபனி இல்லை. வாழ்க்கை இல்லை. இது நின்றால் அவர் நிற்பார். விபத்துகள் எதையும் சந்திக்காமலும் க்ரேனுக்கு அடியில் சிக்காமலும் செங்கற்கள் தலையில் விழாமலும் எழுபதாவது பிறந்த நாளில் ஓய்வு எடுப்பதற்காக வீட்டை அடையும்போது திடீரென்று ஹஸ்ஸன் மாஸ்டர் தன்னுடைய ரத்தம் கெட்டுவிட்டதைப் பார்ப்பாரோ? தான் எப்போதோ தான் அல்லாததாகிவிட்ட உண்மையை? அமைதியாக வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல், தெரியாமல் தன்னுடைய கண்கள் மூலம் நீட்டிய பார்வையை எங்கேயோ ஒரு திருகு உளியைப்போல கூர்மையாகச் செலுத்தி அவர் வேலை செய்து கொண்டிருந்தார். இறந்த பிறகு எகிப்திய நாகரீகம் நீண்ட காலம் அடக்கம் செய்யப்படாமல் கிடந்தது. இறந்ததற்குப் பிறகும் சூரியன் மறைவது வரை பாம்பின் வால் அசைந்து கொண்டிருக்கும்...

தூணில் கையை வைத்து நான் ஆர்க்கெஸ்ட்ராவைக் கேட்டுக் கொண்டு நின்றிருந்தேன். அதன் ராகம் எப்போதும் இல்லாத மாதிரி மிகவும் சோகமயமாக இருப்பதைப்போல தோன்றியது. ஒரு பாட்டு கர்பானாவைப்போல. எனக்கு என்னுடைய மனைவியின் ஈரமான கண்கள் ஞாபகத்தில் வந்தன. அவள் எதற்காக அழுதாள்? நான் அவளிடம் அன்பை வெளிப்படுத்தி நீண்ட நாட்களாகிவிட்டன. இன்று காலையில் அவளுடைய கழுத்தில் இருந்த கறுப்புப் புள்ளியை வருடிக் கொண்டே அன்புடன் வார்த்தைகளைக் கூறியதில் எனக்கு சந்தோஷம் உண்டானது.

"திங்கட்கிழமை எல்லாம் தயாராகும்'' - நான் உறக்கத்திலிருந்து விழித்ததைப்போல திரும்பிப் பார்த்தேன்.


சூப்பர்வைசர்... ப்ளாஸ்டிக் மோல்டிங் ப்ரஸ் பண்ணி விடும் பல குழாய்களைக் கொண்ட ஒரு கூஜாவைப் போல இருக்கும் ஒரு மோல்டிங்கைப் பற்றித்தான் அவர் சொன்னார். க்ரைண்டரில் ஒரு ஆள் அவற்றின் ஜாய்ன்ட் லைனை இல்லாமல் செய்து கொண்டிருந்தான். எப்படி உண்டாக்கப்பட்டது என்ற விஷயம் அதைப் பயன்படுத்தும் மனிதனுக்குத் தெரியவே தெரியாது. எதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்பது அதை உண்டாக்கிய மனிதனுக்கும் தெரியாது என்று வைத்துக் கொள்ளுங்கள். இருவரும் ஒரே நிலையில்தான் இருக்கிறார்கள். உண்டாக்குபவனும் உபயோகிப்பவனும் எதற்காக இதை ப்ளாஸ்டிக்கில் காஸ்ட் செய்யச் சொன்னார்கள்? சூப்பர்வைஸர் அப்படிக் கேட்பாரோ என்று நான் பயந்தேன். நான் அவரைக் கோபித்தேன்: "எதற்கு திங்கள் கிழமை? இன்னைக்கு ஏன் தயார் ஆகவில்லை? எதற்கு செவ்வாய்க் கிழமையாக இருக்கக் கூடாது?''

சூப்பர்வைஸர் என்னையே திகைப்புடன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்: "ஆனால் சார்... ப்ரோகிராம்...''

"ப்ரோகிராம்!''- எதற்காக அது ஒருமுறை தவறி நடக்கக்கூடாது என்ற எண்ணத்துடன் நான் சொன்னேன். நான் நடுங்கிக் கொண்டிருந்தேன். என்ன காரணத்திற்காகவோ- அவரும். ப்ரோகிராமை விட்டு இந்தப் பக்கமோ அந்தப் பக்கமோ நகர அவருக்கு அதிகாரம் இல்லை என்ற விஷயத்தை அவருக்கு ப்ரோகிராம் உண்டாக்கும். நான் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவனுடைய மெஷினுக்கு முன்னால் ஒரு ப்ரோகிராம் சார்ட்டை அவரும் தயார் பண்ணிக் கொடுத்திருக்கிறார். மோல்ட் செய்பவர்களுக்கும் மெஷின் செய்பவர்களுக்கும் மட்டுமல்ல- காஸ்ட்டிங்குகளின் பலத்தையும் வடிவத்தையும் அளவையும் சோதித்துப் பார்ப்பவர்களுக்கும்கூட. எல்லாரும் சுறுசுறுப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கைகள் இயந்திரங்களோடு சேர்ந்து ஓடிச் சேர்வதற்குப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. அவர்கள் ஃபீட் செய்கிறார்கள். டெலிவரியைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஸ்விட்ச்களை எட்டிப் பிடிக்கிறார்கள்.

லிவர்களைப் பிடித்துத் தொங்குகிறார்கள்- அவரைக் கொடி கொம்புகளில் இருப்பதைப்போல.

ஓடத் தொடங்கும் ட்ராமின் வெளிப்பகுதியைத் தள்ளி, தான்தான் அதை ஓடச் செய்தது என்றும், நிற்க ஆரம்பித்ததைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு, தான்தான் அதை நிறுத்தியது என்றும் பெருமையுடன் கூறிக் கொள்ளும் ஒரு ஊர்சுற்றிப் பையனை நான் ட்ராம் ஸ்டேஷனில் பார்த்திருக்கிறேன். ஒரு பைத்தியக்காரனாக இருந்தான். சரியான சத்துணவு இல்லாததால் மூளை வளராமல் போயிருக்க வேண்டும். பாவம்... ஒருநாள் ட்ராமிற்குக் கீழே சிக்கி செத்துப் போனான். உரிமையாளர்கள் இல்லாத பிணங்களைப் புதைக்கும் நகராட்சியின் குழுவினர் தவிர, போலீஸின் உதவியும் தேவைப்பட்டதால் அந்தப் பிணம் சற்று நேரம் அங்கேயே கிடந்தது. வாய் பிளந்து கையை விரித்துக் கொண்டு மூக்கில் இருந்தும் வாயில் இருந்தும் வழிந்த ரத்தம் காய்ந்து... ஒரு லைன் நின்று விட்டதால் ட்ராம்கள் அனைத்தும் தாமதமாயின. எங்களுக்கும் சிறிது நேரம் காத்து நிற்க வேண்டிய சூழ்நிலை உண்டானது. நாங்கள் காத்து நின்று கொண்டிருக்க, ஒரு ஃபோட்டோகிராபர் வந்து இறந்து கிடந்த சிறுவனின் படத்தை எடுத்தான். படம் சரியாகாமல் இருக்கவே அவன் பலவிதப்பட்ட மூலைகளில் நின்று ஃபோக்கஸ் செய்வதையும் தன்னைத்தானே திட்டிக் கொள்வதையும் நாங்கள் பார்த்தோம். பிணத்திற்கும், பிணமாக ஆவதற்கு முன்னால் இருந்த சிறுவனுக்கும் உரிமையாளரோ, உறவினர்களோ இல்லாமலிருந்ததால், ட்ராம்களை எரிக்க யாரும் வரமாட்டார்கள் என்ற உறுதி இருந்ததால், நாங்கள் எல்லாரும் அமைதியுடன் காத்து நின்றிருந்தோம். மறுநாள் வெளிவந்த பத்திரிகையில், மூலைகளில் இருந்து எடுத்த படங்கள் எதுவும் சரியாக இல்லாமல் போனதால் இருக்க வேண்டும். அந்த ஃபோட்டோகிராபர் நேராக நின்று எடுத்த படம் மட்டுமே பிரசுரமாகியிருந்தது.

விபத்து மூலம்தான் மரணம் உண்டானது என்று போலீஸ் கூறுகிறது என்றும்; இல்லை- பட்டினியின் காரணமாக அவன் தற்கொலை செய்துகொண்டான் என்று சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் கூறுகிறார் என்றும் ஒரு ரிப்போர்ட்டும் பிரசுரமாகி இருந்தது. அன்று பம்பாயில் இருக்கும் ஹோட்டலின் அல்ல- என்னுடைய மகன் வழக்கமாக சாப்பிடும், வளரும் குழந்தைகளுக்குப் பசியை உண்டாக்கும் டானிக் விளம்பரம் வந்திருந்தது. "இன்க்ரிமென் சாப்பிடுங்கள்! அது அதிக உணவை, அதிக வளர்ச்சியாக மாற்றுகிறது. இன்க்ரிமென் சங்கத்தில் சேருங்கள்! வளர்வதற்கான பசியை உண்டாக்குங்கள்." கூடைப் பந்தை எட்டிப் பிடிக்க முயலும் குழந்தைகளின் மற்றும் தலை நீளமாகக் கொண்ட ஒரு ஒட்டகச் சிவிங்கியின் படமும்...

நான் அலுவலக அறையில் இருந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்து ஒரு தேநீரை வரவழைத்தேன். தேநீர் ஒரு டானிக் அல்ல. இல்லாவிட்டால்... அதுதானா? சரி... டானிக் என்றால் என்ன? அதிக உணவை அதிக வளர்ச்சியாக ஆக்கும்- வளர்வதற்கான பசியை உண்டாக்கும்- கூடைப் பந்தை எட்டிப் பிடிக்க உதவும் பொருளா? ஆனால் இன்க்ரிமென்னின் தயாரிப்பாளர்கள் உணவுப் பொருட்களைத் தயாரிப்பவர்களின் ஏஜெண்டுகள் அல்ல. இன்க்ரி மென்னுக்கு மட்டும்தான். அவர்களுக்குத் தங்களுடைய க்ராஃபில் மட்டுமே கண். அறுபதில் தேயிலை உற்பத்தி மூன்று லட்சம் டன்னாக இருந்தது. அறுபத்தைந்திலும் எழுபத்தைந்திலும் எவ்வளவு ஆனது என்று நேற்று கேட்டேன். நேற்றைக்கு முந்தின நாள் என்னவாக இருந்தது? ஒருவேளை வெட்ரினரி பட்டதாரிகளின் எண்ணிக்கை...

தேநீர் இறங்குவதற்கு நடுவில் நான் நேற்று இறுதி ஷிஃப்டில் பணியாற்றும் ஷிஃப்ட் எஞ்ஜினியர் மேஜைமீது வைத்துவிட்டுப் போயிருந்த ரிப்போர்ட்டை எடுத்தேன். என்னவெல்லாம் மெஷின்கள் செயல்பட்டன, எவ்வளவு பணியாட்கள் வேலை செய்தார்கள், என்னவெல்லாம் ஆர்டர்கள் தயாராயின, எந்த நிலையில் வேலை நின்றது... இப்போது சனிக்கிழமை முதல் ஷிஃப்ட் நடக்கிறது. இனியும் ஒரு ஷிஃப்ட் இருக்கிறது. அது முடிந்தால் இந்த வாரம் முடிவடைகிறது. திங்கட்கிழமை காலையில் வீக்லி புரொடக்ஷன் ரிப்போர்ட் தயாராகும். அதற்கு முன்னால் அடுத்த வாரத்திற்கான ப்ரோகிராமைத் தயார் பண்ண வேண்டும். முதலில் முழு வாரத்திற்கான டார்கெட். பிறகு ஒவ்வொரு நாளுக்கும் உரியது. முதலில் செய்ய வேண்டியது. பிறகு செய்ததன் ரிப்போர்ட். சுவரில் க்ராஃப் இருக்கிறது. அதில் இரண்டையும் குறிக்க வேண்டும். மேலே செல்லும் சிவப்புக் கோடு, அதில் பிரிந்து செல்லும் நீலநிறக் கோடு. ப்ரோகிராமும் ப்ரொடக்ஷனும். எனக்குப் பிடித்துத் தொங்குவதற்கான கொம்புகள். நான் ஏறி ஏறிச் செல்கிறேன். ஏற ஏற எனக்கு அதற்கடுத்தும் கொம்புகள் கிடைக்கின்றன. வனஸ்பதி தயாரிப்பாளர்களுக்கு, தேயிலைத் தோட்டக்காரர்களுக்கு, வெட்ரினரி பட்டதாரிகளுக்கு, கள்ளக் கடத்தல்காரர்களைப் பிடிப்பவர்களுக்கு, பசி உண்டாக்குபவர்களுக்கு, பசியால் இறப்பவர்களுக்கு, தலைப்பகுதியில் இருப்பவர்களுக்கு, தலையில் செங்கற்கள் விழுபவர்களுக்கு. நான், நாங்கள், நாம் வளர்கிறோம். நமக்கு வளர்ச்சிதான் இருக்கிறது.


மாற்றமில்லை. பரிணாம மரத்தின் இறுதிக்கனி. இறுதி வழித் தோன்றல். நாகரீகத்தை எதிர்க்கும் முன்னேற்றம்.

நேற்று எங்களுடைய வானொலிக்கு பாதிப்பு உண்டானது. சாயங்காலம் பாட்டு கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அதற்குள்ளிருந்து ஏதோ வெடிப்பதைப்போல ஒரு சத்தம் வந்தது. அதற்குப் பிறகும் எதுவும் கேட்கவில்லை. என்னுடைய மகனுக்கு வானொலியில் வரும், அவன் வளர்வதற்குப் பசியை ஏற்படுத்தும் டானிக் பற்றிய விளம்பரம் மிகவும் பிடிக்கும். அது வருவதற்காக அவன் காத்திருப்பான். வந்துவிட்டால் மருந்தை எடுத்துக்கொண்டு வருவான். நேற்று வானொலிக்கு பாதிப்பு உண்டானபோது, அவன் டானிக்கை மட்டுமல்ல- உணவையும் வேண்டாமென்று கூறிவிட்டான். வானொலிக்கு எப்படி கேடு வந்தது என்பதைத் தெரிந்து கொள்வதற்காகப் பிடிவாதம் பிடித்தான். அவன் அப்படித்தான். எல்லாம் சரியானபடி நடந்து கொண்டிருக்கும் வரையில் சந்தேகங்கள் இல்லை. கேடு வந்துவிட்டால், கொம்பு ஒடிந்துபோன கொடியைப்போல ஒடிந்து சாய்ந்து விடுவான். காலையில் பள்ளிக்கூடப் பேருந்தில் ஏறி அவன் பள்ளிக்குச் செல்கிறான்.

லிஃப்டில் ஏறி மூன்றாவது மாடிக்குச் செல்கிறான். ஒருநாள் லிஃப்டிற்கு பாதிப்பு உண்டானபோதுதான், அவனுக்கு லிஃப்ட் எப்படி செயல்படுகிறது என்ற சந்தேகம் உண்டானது. லிஃப்ட் எப்படி நின்றது என்பதைப் பற்றியோ வானொலிக்கு எப்படி கேடு வந்தது என்பதையோ சொல்லித் தர என்னால் முடியாது. அதற்கு நான் ஒரு லிஃப்ட் டெக்னீஷியனோ ரேடியோ மெக்கானிக்கோ இல்லையே! காஸ்ட்டிங் பிரிவில் பணியாற்றும் எஞ்ஜினியர் மட்டுமே நான். தன்னுடைய தந்தைக்கு அவருக்கென்று டிவிஷன் இருந்தது என்பதையும், தனக்கும் தன்னுடையது என்று ஒன்று இருக்கும் என்பதையும் வளர்ந்து வரும்போது அவனுக்குத் தெரிய வரும். தனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் சந்தேகங்களை வெளிப்படுத்துவது எந்த அளவிற்கு கேலிக்கூத்தான விஷயம் என்பதையும் அவன் தெரிந்து கொள்வான். அவனைப் பார்ப்பவர்கள் எல்லாரும் கூறுகிறார்கள்- அவன் என்னுடைய இன்னொரு வடிவம் என்று. அவன் அவரை மற்றும் ஆன்டிரைனத்தின் வித்தா- என்னைப்போல வளர்ந்து, பேருந்தில் ஏறி, வேலைக்குச் சென்று, காஸ்ட்டிங்குகள் உண்டாக்கி வாழ்வதற்கு? மனிதனின் தாளம் காலநிலையோடு அல்ல; காலத்துடன்தான். தோட்டப் பணியாள் கூறுகிறான். தன்னுடைய குழந்தைகளை அவன் வித்துக்களாக ஆக்கி மண்ணில் விட்டுவிட்டுப் போகப் போவதில்லை. அவனை என்னவாக ஆக்க வேண்டுமென்று நானும் அவனுடைய தாயும் விவாதிக்கிறோம். எஞ்ஜினியர், டாக்டர், கலைஞன், க்ளார்க், தொழிலாளி, சலவை செய்பவன்? யாருக்குத் தெரியும்- அவன் என்னவாக வருவான் என்று? எது எப்படி இருந்தாலும் அவனுடைய ஆர்வம் என்ன என்பதைத் தெரிந்தே செய்ய வேண்டும் என்றேன் நான். அவனுக்கு அறிவு உண்டு என்ற விஷயத்தில் நாங்கள் ஒன்றுபடுகிறோம். அறிவுதான் மனிதனைத் தாவரங்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. அறிவும் ஆசையும். அந்த அறிவில் இருந்து உருவானதுதான் இந்தக் கம்பெனி.

எனக்கு அறிவு இருக்கிறது என்று என்னுடைய தந்தை கூறுவதுண்டு. நான் ஒரு எஞ்ஜினியராக ஆக வேண்டுமென்று என் தந்தைதான் முடிவெடுத்தார். என்னை இலக்கியம் படிப்பவனாக ஆக்க வேண்டும் என்பது என் தாயின் விருப்பம். நான் இளம் வயதில் கவிதைகள் எழுதுவேன். ஒரு கவிஞனாக ஆகியிருந்தால் எப்படி இருக்கும் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். ஒருவேளை எனக்குப் பரிசுகள் கிடைத்திருக்கலாம். பல்கலைக் கழகத்தில் ஃபெல்லோஷிப் கிடைத்திருக்கலாம். இல்லாவிட்டால் நான் திரைப்படத்தில் பாடல்கள் எழுதிக் கொண்டிருக்கலாம். நான் அரசியலுக்குள் நுழையாமல் இருந்திருப்பேன் என்று கூறுவதற்கில்லை. சோஷலிஸ்டாக ஆகியிருக்கலாம். ட்ராமிற்கு அடியில் சிக்கி இறக்கும் குழந்தைகளின் தற்கொலைகள். அன்பிற்கும் உணர்வுகளுக்கும் அடிப்படையாக இருக்கும் பொருளாதாரப் பாதுகாப்பு. ஆட்சியில் தவறு இழைத்தல். வெளிநாட்டு ரகசியப் போலீஸ். இல்லாவிட்டால் யாருக்குத் தெரியும், அந்தப் பாதையில் ஒரு புரட்சிவாதியாகக்கூட ஆகியிருக்கலாம். வெடிகுண்டு வீசியிருக்கலாம். ட்ராஃபிக் போலீஸ்காரர்களின் கழுத்தை அறுத்து, வயிறைத் திறந்து, குடல்மாலை சூடி, நாராயண நம என்று... எங்கு இருந்தாலும் நான் தோல்வியைச் சந்தித்திருக்க மாட்டேன். எனக்கு அறிவு இருக்கிறது. கடமை உணர்வு உண்டு. கொம்பில் படர்ந்து ஏறக்கூடிய வீரியம் இருக்கிறது. அதனால் என் தந்தை என்னை எஞ்ஜினியரிங்கிற்கு அனுப்பியபோது, நான் ஒரு எஞ்ஜினியராக ஆனேன். நல்ல ஒரு எஞ்ஜினியர். லிஃப்ட் எப்படி நின்றது என்பதைப் பற்றியோ, வானொலி எப்படி பாதிக்கப்பட்டது என்பதைப் பற்றியோ எனக்குத் தெரியாது. பேட்டர்ன்கள் உண்டாக்குவதில் மாஸ்டர் எனக்கும் மாஸ்டர்தான். டர்னிங்கும் மில்லிங்கும் மெஷினிங்கும் நான் செய்தால் சரியாக வராது. எதற்காக ஆர்டர் எண் ஸி- 712, இரும்பிற்குப் பதிலாக அலாய் மூலம் உண்டாக்கப்படுகிறது என்பதற்கான காரணத்தை என்னால் கூற முடியாது. எதற்காக முப்பது சரக்குகள் வேண்டும் என்பதோ, பதினெட்டாம் தேதி சரியாக வராது- பதினேழாம் தேதியே முடித்துவிட வேண்டும் என்பதோ, ஸி-712 என்றால் என்ன என்பதோ எனக்குத் தெரியாது. ஆனால் அது எப்படி, எத்தனை, எந்த தேதிக்கு உண்டாக்கப்பட வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதுதான் என்னுடைய வேலை. என்னுடைய வெற்றிக்கும் நிம்மதிக்கும் உடல் நலத்திற்கும் காரணம் என்னுடைய சிம்ஃபனி. ஓம்கார் கூறியதில் அர்த்தம் இருக்கிறது. என்னுடைய தயாரிப்பு நிர்வாகி கூறியதிலும்தான். "ஸ்ரேயான் ஸ்வதர்ம்மோ விகுண:" எல்லாரும் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள ஆரம்பித்தால், என் காஸ்டிங் டிவிஷனிலிருந்து ஒரு காஸ்ட்டிங்கூட வெளியே வராது. நிலைமையும் காலமும் தவறும். சேர்மனுக்குப் பின்னால் இருக்கும் ஒற்றுமை கட்டவிழ்ந்து கீழே விழும். அதற்குள் சண்டையும் புரட்சியும் நடக்கும். நாம் நம்முடைய கம்பெனிக்கு உள்ளே எதிரிகள் ஆவோம். நாம் போரில் வெற்றி பெறப் போவதில்லை.

எந்த வரைபடத்தைப் பின்பற்றி எவ்வளவு அளவு பரப்புள்ள உலோகத்தைப் பயன்படுத்தி, எப்படி, எந்த எடையில், எவ்வளவு காஸ்ட்டிங்குகள், எந்த தேதிக்குத் தயார் பண்ண வேண்டும் என்று உள்ள தத்துவத்தைத் தெரிந்து கொண்டிருப்பதால், நான் ஜம்னாதாஸ் ஆஜ்மீரியா இன்டஸ்ட்ரீஸில் எஞ்ஜினியராக ஆனேன். ஒரே அளவில், ஒரே எடையில், ஒரே வடிவத்தில் உள்ள காஸ்ட்டிங்குகளைத் தயார் பண்ணினேன். என்னுடைய பணியில் நான் நிரந்தரமானேன். எனக்கு இங்க்ரிமென்ட்டும் பதவி உயர்வும் கிடைத்தன. என்னுடைய திறமைக்கேற்றபடி எனக்கு போனஸ் கிடைக்கிறது. நான் வெற்றி பெற்றேன். என்னையும் குடும்பத்தையும் சிகிச்சை செய்ய கம்பெனிக்குச் சொந்தமான டாக்டர் இருக்கிறார். நானும் என் மனைவியும் நேரம் கிடைக்கும்போது நல்ல ஹோட்டல்களில் உணவு சாப்பிடப் போகிறோம். என்னுடைய மகன் வளர்வதற்கான பசியை உண்டாக்கக்கூடிய, அதிக உணவை அதிக வளர்ச்சியாக மாற்றக்கூடிய டானிக் சாப்பிடுகிறான்.


எனக்குப் புகார்கள் இல்லை. எனக்கு வசிப்பதற்கு, கெட்டுப்போன உணவுப் பொருட்களை வெளியே எறியும் உணவுச் சாலைக்கு அருகிலாக இருந்தாலும், நல்ல ஒரு வீடு இருக்கிறது. போன வருடம் முன்பு வசித்த சிறிய வீடு இருந்த இடத்தில் கம்பெனி எனக்கு இந்தப் பெரிய வீட்டைத் தந்தது. அடுத்த வருடம் இதைவிட நல்ல ஒன்று கிடைக்கும். வீட்டில் வேண்டிய அளவிற்கு ஃபர்னிச்சர்களும் ரெஃப்ரிஜிரேட்டரும் இருக்கின்றன. சீக்கிரமே நான் ஒரு கார் வாங்குவேன்.

சென்ற கோடை காலத்தில் நாங்கள் காடுகளுக்குச் சுற்றுலா சென்றோம். பெரிய பெரிய மரங்களுக்குக் கீழே இருந்த அழகான புல் பரப்புகளைப் பார்த்து நாங்கள் கூடாரங்கள் அமைத்தோம். கொம்புகளையும் இலைகளையும் வெட்டிக் கொண்டு வந்து வேலிகள் கட்டினோம். கொம்புகளைக் கொண்டு வந்து தாங்கி நிறுத்தி, தூரத்திலிருந்த தடாகத்திலிருந்து கேம்ப்பிற்கு நீர் கொண்டு வந்தோம். மாலை நேரத்தில் மான்களை வேட்டையாடினோம். இரவு வேளையில் சுள்ளிகளைக் கொண்டு நெருப்பைப் பெரிதாக்கி, ஒருவரையொருவர் காட்டுவாசிகள் என்று கூறி தமாஷ் பண்ணினோம். அடுத்த கோடைகாலத்தில் நாங்கள் டார்ஜிலிங்கிற்குச் செல்வோம்.

நான் மேஜைமீது பேப்பர் வெயிட்டாக வைத்திருந்த மைக்ரோமீட்டரை எடுத்து அதன் ஸ்பிண்டிலுக்கும் ஆன்விலுக்குமிடையில் என்னுடைய சுட்டுவிரலை வைத்தேன். பிறகு ஸ்பிண்டிலைத் திருப்பினேன். எனக்கு என்னுடைய விரலின் அளவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மைக்ரோமீட்டரைக் கொண்டு சரியாக என் சுட்டுவிரலை அளக்க முடியாது. விரலில் வேதனை உண்டாகும்வரை நான் அதன் ஸ்பிண்டிலைத் திருப்பிக் கொண்டிருந்தேன். அழுத்தத்தின் அளவு தாண்டியவுடன் வேதனை நின்றுவிட்டது. ஸ்பிண்டில் முன்னோக்கி நகரவில்லை. அதன் முனை வெறுமனே திரும்பிக் கொண்டேயிருந்தது.

தபாலில் வந்த வாழ்த்து அட்டையை மேஜையின்மீது வைத்து, அதற்கு மேலே வைப்பதற்கு மைக்ரோமீட்டர் வேண்டும் என்பதைப்போல மெசெஞ்சர் தயங்கி நின்றிருந்தான். நான் அதை எடுத்தவுடன் அவன் திருப்தி அடைந்து திரும்பிச் சென்றான். நான் கார்டை வெளியே எடுத்தேன். ஜோகி அனுப்பியிருந்தார். ஜோகியும் குடும்பமும். எனக்கும் குடும்பத்திற்கும். ஆனால் கார்டு அனுப்பும் அளவிற்கு இப்போது என்ன ஒரு விசேஷம்? ஹாங்... ரவீந்திரநாதனின் பிறந்தநாள்! ஜோகி அப்படித்தான். ஒரு சந்தர்ப்பத்தையும் விடுவதில்லை. காலண்டரில் சிவப்பு எழுத்தைப் பார்த்துவிட்டால் ஒரு கார்டை அனுப்பி விடுவார். பிறப்பாக இருந்தாலும் மரணமாக இருந்தாலும்- அது யாருடையதாக இருந்தாலும். இப்படித்தான் என்னுடைய மனைவி கூறுவாள்: "அவர் இன்ஷுரன்ஸ்காரர்."

காலை ஷிஃப்டில், ஷிஃப்ட் எஞ்ஜினியர் தன்னுடைய ரிப்போர்ட்டுடன் வந்தார். நான் மைக்ரோமீட்டரில் இருந்து கையை எடுத்து அவருடைய ரிப்போர்ட்டை வாங்கினேன். எந்த நிலையில் ஷிஃப்ட் பொறுப்பை ஏற்றார், எவ்வளவு பணியாட்கள் வந்திருந்தார்கள், எந்தெந்த மெஷின்கள் செயலாற்றின... நான் அவரிடம்- குறிப்பாக ரிப்போர்ட் செய்வதற்கு ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன். ஒன்றுமில்லை என்று அவர் சொன்னார். மெஷின்களில் எந்தப் பிரச்சினையும் இல்லை. தொழிலாளர்கள் எல்லாரும் வந்திருந்தார்கள். அனைத்தும் நல்ல முறையிலேயே நடந்திருக்கின்றன. பத்திரம். அதிக கட்டுப்பாடு. நடக்கும் ஷிஃப்ட் மற்றும் அடுத்த ஷிஃப்ட் ஆகியவற்றின் ப்ரோக்ராம்களை நான் பரிசோதித்துப் பார்த்தேன். சார்ட்களையும் க்ராஃப்களையும் பார்த்தேன். பிறகு புதிய ஆர்டர்களை எடுத்தேன். "தயவு செய்து இந்த ப்ரோக்ராம் தயார் பண்ணுவதில் எனக்கு உதவ முடியுமா?'' - போவதற்காக எழுந்து நின்ற எஞ்ஜினியரிடம் நான் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன். அவர் உற்சாகத்துடன் தயாரானார். சில நேரங்களில் கவனக்குறைவை வெளிப்படுத்தினாலும், அறிவும் விவரமும் உள்ள ஒரு இளைஞன் சாரதி. விவரம் இருந்தாலும் பொறுப்பைப் பற்றிய உணர்வு இல்லாத மனிதர் என்று அவரைப் பற்றி எல்லாரும் கூறுவார்கள்... ஃபோர்ஜிங் ஷாப்பில் இருந்து அவரை இங்கு மாற்றியதற்குக் காரணமும் அதுதான். ஆனால் என்னிடம் அவர் முழுமையான உற்சாகத்தைக் காட்டுகிறார். எனக்கு உடல்நல பாதிப்பு உண்டான பிறகு, என்னிடம் அவருக்கு தனிப்பட்ட ஈடுபாடு உண்டாகிவிட்டது. நாங்கள் தேவைப்பட்ட காஸ்ட்டிங்குகளை தேவைப்படும் முடிவு செய்யப்பட்ட தேதிகளில் கிடைக்கக்கூடிய விதத்தில் தொழிலாளிகள் மற்றும் மெஷின்களின் திறமைக்கேற்றபடி ப்ரோக்ராம் உண்டாக்க ஆரம்பித்தோம். அதற்குப் பிறகு ப்ரோக்ராமை முழுமை செய்யத் தேவைப்படும் பொருட்களின் கணக்குகளைப் பார்த்தோம். பிறகு தொகைகளையும் டார்கெட்டுகளையும் சுவரில் நிறமுள்ள பென்சில்களைக் கொண்டும் பின்களைக் கொண்டும் குறித்தோம். எல்லாவற்றிலும் அவர் எனக்கு உதவினார். எனினும் எல்லாம் செய்து முடிந்தபோது நான் களைத்துப் போய்விட்டிருந்தேன். அவரிடம் உட்காரும்படி சைகை காட்டிவிட்டு, நான் என் நாற்காலியில் உட்கார்ந்தேன். நாங்கள் ஆளுக்கு ஒரு தேநீரை வரவழைத்தோம். பிறகு வெப்பத்தைப் பற்றிப் பேசினோம். ஆமாம்... கோடை வந்துவிட்டது. அவர் ஒப்புக் கொண்டார். இனி ஒரு "கோல்ட் வேவ்" உண்டாகப் போவது இல்லை. வெப்பம் அதிகரிக்கும். அவர் என்னிடம் என் நோயைப் பற்றி விசாரித்தார். எனக்கும் ஓய்வு தேவைப்படுகிறது என்றும்; நான் விடுமுறை எடுக்கத்தான் வேண்டும் என்றும் சொன்னார். "ஓய்வு? ஓய்வு எதற்கு?'' - நான் கேட்டேன். "செத்த பாம்பின் வால் அசைவதைப் போன்றது அது. இறப்பதாக இருந்தால் பணியில் இருந்துகொண்டே இறக்க வேண்டும். பிரமிட் கட்டும்போது கல்லுக்குக் கீழே சிக்கி மனிதர்கள் இறக்கவில்லையா? அதைப்போல...''

"நீங்கள் சொன்னது களைப்பைப் பற்றி... நான் ஓய்வு என்று குறிப்பிடுவது வேறு. வேலைதான்.'' சாரதி சிரித்துக்கொண்டே சொன்னார்: "இந்த ஆர்டர், ப்ரோக்ராம், டார்கெட் ஆகியவற்றுக்கு பதிலாக சொந்த ஆர்வத்துக்கேற்றபடி அமையும் ஏதாவது வேலை. பிறகு... பாம்பின் வால்- அது கிட்டத்தட்ட நாம் செய்யும் வேலைகள் தான். இந்த ப்ரோக்ராம், சார்ட் எல்லாம். பிரமிடுகள் பிணங்களின் கல்லறையாக இருந்தன அல்லவா? அவற்றை உண்டாக்கியது ஃபரவோக்கள் அல்ல. இறந்த ஃபரவோக்கள்தான். ஆன்மிக முறையில் இறந்துவிட்டவர்கள். மம்மிகள், தங்களின் கல்லறைகளை உண்டாக்குவதற்காக மீண்டும் கண்களைத் திறந்து வந்தவர்கள்.''

"இவையெல்லாம் ஏதோ தவறான சிந்தனைகள் என்று நான் நினைக்கிறேன்''- நான் சொன்னேன்: "உண்மையிலேயே சொல்லப் போனால் எனக்கு ஒரு நோயும் இல்லை. அதற்காக தயாரிப்பு நிர்வாகி இன்று காலையில் என்னை அதிகமாகத் திட்டிவிட்டார். அவர் சொன்னது உண்மைதான். உண்மையிலேயே இதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது டாக்டர்கள்தானே! நாம் அல்ல. பிறகு... இந்தக் காலத்தில் என்னவெல்லாம் புதிய புதிய நோய்கள் இருக்கின்றன! அதுபோக... நீங்கள் ஓய்வு என்பது வேலை செய்யாமல் இருப்பது அல்ல என்று சொன்னதைப்போல, உடல்நலம் என்பது நோய் இல்லாத நிலையாக இருக்க வேண்டும் என்றில்லையே!''


"சில நோய்களை சிகிச்சை செய்து இல்லாமல் செய்துவிடலாம்''- சாரதி என்னைத் தேற்றினார்: "கோடையில் கருகாத மரங்களும் இல்லையா? பிறகு... வயது அதிகமாகிவிட்டது என்பதற்காக ஒரு மனிதன் இறக்க வேண்டும் என்று இல்லை. தெரியுதா? டாக்டர்கள் கூறுவது என்ன தெரியுமா? மிகவும் குறைவான நபர்கள் மட்டுமே வயதானதால் தேய்மானம் வந்து உண்மையாகவே மரணத்தைத் தழுவுகிறார்கள்.

கொஞ்சபேர் நோயால் கொல்லப்படுகிறார்கள். அதிகமானவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும்!''

நான் சிரித்தேன்.

அவர் போனபிறகு, நான் என்னுடைய மரணத்தைப் பற்றிய சிந்தனையில் மூழ்கிவிட்டேன். எப்படி நான் மரணமடைவேன்? ஒவ்வொரு முறையும் பரிசோதனை முடிந்து வெளியே வரும்போது, சந்தோஷத்தை வெளிப்படுத்துவதற்கு பதிலாக என் மனைவியின் முகம் மேலும் அமைதியாக இருக்கும். இந்த வீட்டின் நோய் இறுதியில் ஒரு குணப்படுத்த முடியாத நோயாக ஆகி விடுமோ? என் மார்பில் தலையை வைத்துக்கொண்டு அவள் அழுகிறாள். ஆனால் அந்த அழுகைக்கான திரையை நீக்கிவிட்டு, நாட்களைத் தாண்டி அப்பால் பார்த்தால், அங்கு நான் என்னைச் சுற்றி நின்று கொண்டிருக்கும் டாக்டர்களைப் பார்க்கிறேன். "ரிலாக்ஸ்! ரிலாக்ஸ்!''- அவர்கள் கூறுகிறார்கள்.

எளிமையாக எடுத்துக்கொள்வதுதான் எளிமையாக முடிகிறது. எளிமையான வாழ்க்கைதான்... குணப்படுத்த முடியாத நோய்களுக்கு சிகிச்சை செய்யும் டாக்டர்கள்தான் புகழ் பெற்றவர்களாக ஆகிறார்கள். அவர்கள் தங்களுடைய இயலாமைக்கு கர்மத்தின் கொம்புகளுக்கு வடிவம் தருகின்றனர். ஓம்கார்நாத்தின் சரீரம் என்ன காரணத்திற்காக மனித சரீரத்தின் இயல்பான தன்மையைக் கைவிட்டது என்று அவர்கள் ஆராயவில்லை. அவனுடைய மூளையிலும் தாடையிலும் கண்களிலும் சேர்ந்திருந்த உலோகப் பொருட்களை எடுத்து அகற்ற முயற்சி செய்த அவர்கள், அவனுடைய சிறுநீரகத்தில் என்ன காரணத்திற்காகச் செயல்படும் ஆற்றல் இல்லாமல் போனது என்பதை ஆராய்ச்சி செய்யவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் அனைவரும் இறுதியில் தங்களுடைய நோயாளிகளை, அவர்கள் பின்னால் விட்டுவிட்டுப் போகப் போகிற குடும்ப உறுப்பினர்களுக்காக இன்ஷூர் செய்யும்படி அறிவுரை கூறினார்கள். அவர்களுடைய பிள்ளைகளை பலம்மிக்க வித்தின் மேலோட்டிற்குள் காப்பாற்றி வைப்பதற்காக. அவர்களுடைய குணப்படுத்த முடியாத நோய்களின் கொம்புகளில் படர்ந்து ஏறிக் கொள்வதற்காக. தானே உருவான காலநிலை... தோட்டக்காரன் கூறுகிறான். தானே உருவான காலநிலையின் கொம்பு. தானே உயர்த்திய கொம்பில் ஏறி விழுந்து மரணத்தைச் சந்திப்பவனுக்கு இன்ஷூரன்ஸ் கம்பெனிக்காரர்கள் பணம் தருவார்களா? யாருக்குத் தெரியும்? கொம்புகளில் எல்லாவற்றையும் அர்ப்பணம் செய்யும் உலகத்தில், இறுதியில் கொம்புகள் இருக்குமா இல்லையா என்பது மட்டும்தான் பிரச்சினையாக இருக்கும்.

வாழ்க்கையை நீங்கள் விற்கிறீர்கள். மரணத்தையாவது ஒருவன் சொந்தமாக அனுபவிக்கக் கூடாதா என்றுதான் நான் கேட்கிறேன். எனக்கு இந்த இன்ஷூரன்ஸின் விளக்கத்தில் நம்பிக்கை இல்லாமலிருந்தது; ஆர்வமும். இந்த ஜோகியும் அந்த ஓம்காரும் சேர்ந்து என்னுடைய மனதை மாற்றி விட்டார்கள். யாருக்குத் தெரியும்? ஒருவேளை இதெல்லாம் தேவைப்படலாம். இல்லாவிட்டால் எதற்காக நான் அவனுடைய வீட்டிற்குச் சென்றேன். ஓம்காரின் வீட்டை விசாரித்துப் போனேன். அவனை எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு மணி நேரத்தில் ஜோகியும் குடும்பமும் எங்களுக்கு நீண்ட காலமாகப் பழக்கமுள்ளவர்களைப்போல ஆகிவிட்டார்கள்.

ஜோகியின் வீடு புதிதாகக் கட்டப்பட்டிருந்தது. அதன் ஃபிட்டிங்குகள், ஃபிக்சர்கள் எல்லாவற்றையும் அவர் காட்டிக் கொண்டிருந்தார். வீட்டின் ப்ளானோ அறைகளின் அளவோ ஓரியன்டேஷனோ எதுவும் இல்லை. அதற்கு மாறாக ஜன்னலின் க்ரில்கள், திரைச் சீலைகள், புதிய இனம் நீர்க் குழாய்கள், மின் விசிறிகள், விளக்குகள், அவற்றின் ஸ்விட்சுகள், ஃப்ரிட்ஜ், க்ரைண்டர், டேப் ரெக்கார்டர் என்று எல்லாவற்றையும் காட்டினார். அவற்றுடன் கொஞ்சம் நாய்களும் இருந்தன. அடைக்கப்பட்டிருந்த ஒரு அறை முழுவதும். சங்கிலிகளில் வேறு. அவை குரைத்துக் கொண்டிருந்தன. நாய்களின் குரைப்புச் சத்தம் வீட்டின் எல்லா விஷயங்களிலும் கலந்து விட்டிருந்தது. ஒவ்வொரு நாப்பையும் திருப்பி, புதிதாக வாங்கிய ஜப்பானிஸ் டேப் ரெக்கார்டரை அவர் எங்களுக்குக் காட்டினார். தொடர்ந்து பொத்தானை அழுத்தி அவருடைய மனைவியோ மகளோ பாடிய ஒரு ரவீந்திர சங்கீதத்தை மிதக்க விட்டார். இடையில் அவ்வப்போது நாய்களின் "பௌ பௌ" என்ற குரைக்கும் சத்தங்களும் அதோடு சேர்ந்து ரெக்கார்டு செய்யப்பட்டிருந்தன.

இன்ஷூரன்ஸைப் பற்றி ஒரு வார்த்தைகூட அன்று அவர் பேசவில்லை. உண்மையாகச் சொல்லப் போனால் அவர் ஒரு இன்ஷூரன்ஸ்காரர் என்ற விஷயம்கூட எனக்குத் தெரியாது. பிறகு ஒருநாள் ஓம்காருடன் சேர்ந்து என்னுடைய வீட்டிற்கு வந்தபோது தான் அவர் திடீரென்று முகமூடிகளைக் கழற்றி வானத்திலிருந்து குதித்ததைப்போல எனக்கு முன்னால் குதித்தார். இடுப்பிலிருந்து ஒரு மேற்கத்திய திரைப்படத்தில் கதாநாயகன் பிஸ்டலைப் இழுத்துப் பிடித்திருந்த வேகத்துடன், எங்கிருந்து என்று தெரியாது- நிராமயனின் ஆராய்ச்சிக் கட்டுரையான "இந்தியாவின் நடுத்தரக் குடும்பங்களின் பொருளாதார நிலைமை"யை வெளியே எடுத்து, அதிலிருந்த கணக்குகளையும் சார்ட்களையும் வரைபடங்களையும் எனக்கு முன்னால் நீட்டி எறிய ஆரம்பித்தார். ஐந்தாண்டு திட்டம் முதல் வீட்டிற்கு வரும் பணியாட்களுக்குக் கொடுக்கும் சம்பளம் வரை உள்ள ஆயுதங்கள்... அவர் கூறியது எதுவும் எனக்குப் புரியவில்லை. ஆனால் முதல் அதிர்ச்சியில் இருந்து விடுபட்டபோது படிப்படியாக நான் அந்த வார்த்தை வீச்சுகளுக்குப் பின்னால் இருந்த பழைய ஜோகியை, ஜோகீந்திரநாதனை அடையாளம் கண்டுபிடித்தேன். அறைகளையும் கதவுகளையும் சாளரங்களையும் விட்டுவிட்டு, மின்சார ஸ்விட்ச்களிலும் டேப் ரெக்கார்டரிலும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஜோகி... அவருக்கு என்னுடைய வாழ்வோ மரணமோ மரணத்தின்மூலம் உண்டாகக்கூடிய என் மனைவியின் இழப்போ, வேதனையோ எதுவும் அல்ல முக்கியம். வேலைக்காரர்களின் சம்பளமும் அரிசியின் விலையும் டானிக்குகளின் டோசேஜும்தான் முக்கியம். எனக்கு முன்னால் சுட்டிக்காட்டப்பட்ட இந்த நூறாயிரம் ஆயுதங்களுக்கு முன்னால் நான் செயலற்று நின்றுவிட்டேன். என்னுடைய வாழ்க்கை அல்ல... மரணம், கொஞ்சம் பணத்திற்காக கை மாறக்கூடிய, கைமாற்ற வேண்டிய ஒரு பொருளாகி விட்டது. பயம் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் நம்பிக்கையாக மாறும். உதிரும் மணல், அழுத்தத்தால் பாறையாக உறுதிப்படுவதைப்போல. அந்தப் பருவத்தில்தான் அவிழ்த்து விடப்பட்ட நாய்களைப்போல அவர் அந்த முகத்தில் அடிக்கக் கூடிய கேள்வியை என்னை நோக்கி எறிந்தார்: "நீங்கள் உங்களுடைய மனைவிமீது அன்பு வச்சிருக்கீங்கள்ல? அவர் பிச்சை எடுக்க வேண்டும் என்பது உங்களின் எண்ணமா?'' அத்துடன் எஞ்சி இருந்த எதிர்பார்ப்பும் தகர்ந்து விழுந்தது. அன்பு என்பது தானே வளரக்கூடிய ஒரு உணர்ச்சி அல்ல என்றும்; பொருளாதார பாதுகாப்பு இல்லையென்றால், அதற்கு இலையும் கொம்பும் அல்ல- வேர்கூட கிடைக்காது என்றும்; ஒரு மார்க்சிஸ்ட்டாக இல்லாமல் இருந்தாலும்- அவர் எனக்குக் கூறிப் புரியவைத்தார்.


ஆமாம் என்றோ இல்லை என்றோ மட்டும் பதில் கூறக்கூடிய கொஞ்சம் கேள்விகளைக் கேட்டு, அவற்றுக்கான பதில்களை எண்ணிப் பட்டியல்கள் மற்றும் க்ராஃப்களின் உதவியுடன் இறுதியில் எண்களாக ஆக்கி மொழி மாற்றம் செய்வதுதான் அவருடைய பாணி. நான் திறந்து பார்க்க தைரியம் கொள்ளாத நிராமயனின் ஆராய்ச்சிக் கட்டுரை இந்த விஷயத்தில் அவருக்கு மிகவும் அதிகமாக உதவியது.

இவை அனைத்தும் நடந்து கொண்டிருக்க, ஒரு பக்கத்தில் ஓம்காரும் என்னை பலவீனப்படுத்திக் கொண்டிருந்தான். "நீங்கள் உடனே இறந்துவிடுவீர்கள் என்று நான் கூறவில்லை. இறந்தபிறகு உங்களுடைய குடும்பத்திற்கு என்ன நடக்கும் என்பதைப் பற்றி நினைத்துப் பார்ப்பதும் பயனற்றது. அதையெல்லாம் நாம் முடிவு செய்ய முடியாது. நாம் நம்முடைய கர்மத்தை முழுமை செய்ய வேண்டும். அவ்வளவுதான். நீங்கள் உங்களுடைய குடும்பத்திற்காக நிறைவேற்ற வேண்டிய சில கடமைகள் இருக்கின்றன. இன்றைய உலகில் இவை அனைத்தும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன என்ற விஷயத்தில் நாம் அதிர்ஷ்டசாலிகள்தான். தெரியுமா? போன மாதம் என் மனைவியின் நெக்லெஸ் திருடு போய்விட்டது. பூஜை நடக்கும் நேரத்தில் கூட்டத்தில் இறங்கினாள். காணாமல் போய்விட்டது. தெரிந்த உடனே நான் காவல் நிலையத்திற்குப் போய் புகார் செய்தேன். நான் அவளிடம் எப்போதும் கூறுவது இதைத்தான்: கண்டுபிடிக்க வேண்டியது அவர்களுடைய வேலை. நாம் இதற்காகக் கண்ணீர் சிந்தி ஏதாவது பயன் இருக்கா?'' இவ்வளவும் ஆன பிறகு அவனுடைய மனைவி அந்த வாதத்தை எதிர்த்தது மட்டுமல்ல- சொல்லிச் சொல்லித் தேம்பி அழவும் ஆரம்பித்தாள். ஓம்கார் என்ன செய்வதென்று தெரியாமல் வெறுமனே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அந்தப் பெண்ணை சமாதானப்படுத்த வேண்டிய

பொறுப்பை நான் ஏற்க வேண்டியதிருந்தது. ஆனால் நான் கூறுவதற்கு என்ன இருக்கிறது? என்ன செய்ய முடியும்? இந்த விஷயத்தில் என்னாலோ ஓம்காராலோ ஒருவேளை- போலீஸாலோகூட எதுவும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. எல்லாரும் செயலற்றவர்கள். அப்படி வரும்போது ஒருவன் செய்ய வேண்டியது அவனுடைய கடமையை மட்டுமே. நான் என் கடமையைச் செய்து விட்டேன். அங்கு வைத்தே என் மரணத்தை எவ்வளவோ ரூபாய்களுக்காக பணயமாக எழுதிக் கொடுத்தேன். பிறகு யாரும் கூறாமலே ஒவ்வொரு மாதமும் புதிய பாலிஸி. ஒவ்வொரு முதல் தேதியிலும் ஒவ்வொன்றையும் மனைவியின் கையில் கொண்டுபோய் கொடுத்தேன். இது இத்தனை ஆயிரத்திற்கு, இது விபத்திற்கு, இது மகனின் படிப்பிற்கு, இது நோய் வந்தால் சிகிச்சைக்கு, இது கால் ஒடிந்தால்- இதெல்லாம் பின்னால் நடந்த கதை. ஒருநாள் அவள் தமாஷாகக் கேட்டாள்: "இந்த மாதிரி போனால் இறக்கும்வரை வாழ என்ன வழி?'' பைத்தியம் பிடித்ததைப்போல நான் மீண்டும் ஜோகியைத் தேடி ஓடினேன். ஏறி ஏறி சிவந்த கோட்டின்மீதே படர்ந்து ஏறிய நீலநிறக் கோட்டைபோல கொம்புகள் காணாமல் நான் திகைத்து நின்றேன். ஜோகி நிராமயனின் புத்தகத்தைத் திறந்து சிறிது நேரம் வாசித்தார். அன்று முதல் ஜோகியின் அறிவுரைப்படி நான் இன்ஷூரன்ஸ் ஏஜெண்ட்களை என் வீட்டிற்குள் நுழைய விடவில்லை. மறுநாளே கம்பெனி டாக்டர் என்னை அழைத்தார்- வழக்கமான சோதனைதான் என்ற பெயரில். என்னுடைய இந்தப் பரிசோதனைகளும் ஆராய்ச்சிகளும் ஆரம்பமாகவும் செய்தன. இங்கோ ஓம்கார் போய்விட்டான். நானும் ஜோகியும் எஞ்சியிருந்தோம். என்னுடைய பாலிஸிகளும் அவருடைய வாழ்த்து அட்டைகளும். பிறப்பிற்கும் இறப்பிற்கும் வரும் வாழ்த்து மடல்கள். இல்லை சாரதி, வேறொரு வகையான மரணமும் இருக்கிறது. கொலைப் பாதகம். ஆனால் கொலைப் பாதகத்திற்கும் தற்கொலைக்குமிடையே மிகுந்த வேறுபாடு எதுவும் இல்லை. உள்ளதும் மறுக்கக்கூடியதே. யார், யாரை என்று கேட்டால் மட்டும் புரிந்து கொள்ளக் கூடியது.

கைகள் இரண்டையும் கோர்த்து, தலைக்குப் பின்னால் கட்டிக்கொண்டு, நான் முன்னோக்கியும் பின்னோக்கியும் இரண்டு தடவை வீதம் நடந்தேன். பிறகு நாற்காலியின் கைகளில் முழங்கையை ஊன்றி, கால்களை முன்னோக்கி நீட்டி வைத்துக்கொண்டு, இருக்கையில் இருந்து உயர்ந்து கொண்டும் தாழ்ந்து கொண்டும் இருந்தேன். தலையை இடப் பக்கமும் வலப் பக்கமும் திருப்பினேன். ஒரே நிலையில் தொடர்ந்து அமர்ந்திருக்க வேண்டியவர்கள் பின்பற்ற வேண்டிய உடற்பயிற்சிகள் இவை. இந்த நோய் பாதித்த பிறகு நான் மேலும் அதிக நேரம் நாற்காலியில் அமரத் தொடங்கியிருக்கிறேன். நாற்காலியில் அமர்ந்தால் உண்டாகக்கூடிய உடல் ரீதியான வேதனைகள் உண்டாகாமல் இருக்க இந்த உடற்பயிற்சி உதவியாக இருக்கும். சில நாட்களுக்கு முன்னால் பாதையோரத்தில் இருந்த ஒரு புத்தக விற்பனையாளரிடமிருந்து வாங்கிய 'ஐர்ஜ் ற்ர் ற்ஹந்ங் ஸ்ரீஹழ்ங் ர்ச் ஹ்ர்ன்ழ்ள்ங்ப்ச்' என்ற புத்தகத்தில் இது இருக்கிறது. முதலில் நூல் நிலையப் பதிப்பாகவும் பிறகு பாக்கெட் புத்தகமாகவும் பல லட்சம் பிரதிகள் விற்பனையான புத்தகம். அமெரிக்காவில் எங்கோ உள்ள உடற்பயிற்சிக்கென்றே இருக்கும் ஒரு பல்கலைக்கழகத்தில் நீண்ட காலம் ஆக்யுப்பேஷனல் எக்சர்சைஸஸ் என்ற விஷயத்தைப் படித்த ஆள்தான் அந்தப் புத்தகத்தை எழுதியிருந்தார். நவீன உலகத்தில் விட முடியாத- எதுவும் முறைப்படி நடந்து கொண்டிருக்கும் வாழ்க்கையிலும், பெரிய உடற்பயிற்சிகளும் சாதனையும் இல்லாமலே, எவ்வளவோ எளிமையானதும் எல்லாருக்கும் இயலக்கூடியதுமான வழியில் எப்படி உடல்நலத்தைக் காப்பாற்றலாம் என்ற பிரச்சினைதான் அவரைக் கவர்ந்தது. அதில் அவர் வருடக்கணக்கில் நடத்திய ஆராய்ச்சியின் விளைவுதான் புத்தகம். ஒழுங்கும் இருப்பும் இல்லாமல் போன இடத்தில் மீண்டும் அவற்றை உண்டாக்குவதற்கான ஒரு புரட்சி. சில விநாடிகள் மட்டுமே செலவாகக்கூடிய எளிமையான உடற்பயிற்சிகள். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மீண்டும் செய்ய வேண்டும். வேறு பயிற்சிகளும் உண்டு. புகை வண்டியில் நின்று கொண்டு பயணம் செய்பவர்களுக்கும், நடந்து கொண்டும் நின்று கொண்டும் வேலை செய்யும் பேரர்களுக்கும், தபால்காரர்களுக்கும், நோய் பாதித்து நாள் கணக்கில் மெத்தையில் படுத்துக் கிடப்பவர்களுக்கும்கூட- எல்லாருக்கும் தங்களுடைய, தாங்கள் தாங்களைச் சந்திக்கக்கூடிய சூழ்நிலையில் செய்ய வேண்டிய பயிற்சிகள். தொடர்ந்து நீண்ட நேரம் வாசிக்கவோ எழுதவோ நேர்ந்தால் இடையில் அவ்வப்போது கண்களை உயர்த்தித் தூரத்தில் எங்கேயாவது இருக்கும் ஒரு பொருளில் நான்கைந்து விநாடிகள் கண்களைக் குவிக்க வேண்டும்.

நான் ஜன்னல் வழியாக தூரத்தில் பார்த்தேன். அப்படிப் பார்க்கும்போதெல்லாம் நான் கண்களை மையப்படுத்த உபயோகப்படுத்துவது தூரத்தில், எங்களுடைய கம்பெனியின் இணைப்பான கெமிக்கல் கம்பெனியின் ப்ளான்டில் இருந்து எழுந்து நின்று கொண்டிருக்கும் மூன்று புகைக் குழாய்களைத்தான். மூன்றுக்கும் மூன்று உயரங்கள் இருந்தன.


இருப்பவற்றிலேயே மிகவும் தடிமனாகவும் உயரமாகவும் இருந்த குழாயில் இருந்து மிகவும் அதிகமாக அடர்த்தியான புகை வந்து கொண்டிருந்தது. அதைவிட சிறிய குழாயில் இருந்து அதைவிடக் குறைவான புகை வந்து கொண்டிருந்தது. எல்லாவற்றையும்விட சிறியதும் எடை குறைவானதாகவும் இருந்த குழாயில் இருந்து பொதுவாக புகை வருவதில்லை. ஆனால் இன்று அதிலிருந்து கருப்பு நிறத்தில் அடர்த்தியான புகை குபுகுபுவென்று வந்து கொண்டிருந்தது. பெரிய குழாயில் இருந்து சிறிய அளவில் புகை வந்து கொண்டிருந்தது. அது அசாதாரணமாக இருந்தது. ஏதாவது பிரச்சினை உண்டாகுமோ? நெருப்பு? விபத்து? வெடிப்பு? எனக்கு பதைபதைப்பு உண்டானது. நான் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். எதுவும் உண்டாகாது என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்ள முயற்சித்தவாறு கண்களை பின்னோக்கி எடுக்க முயன்றேன். நடக்கவில்லை. அவை மீண்டும் புகைக் குழாய்களிலேயே போய் மோதிப் பார்க்கத் தொடங்க, என்னுடைய பதைபதைப்பு மேலும் அதிகமானது. முன்பு எப்போதும் பார்த்திராத காட்சி அது. சிறிய குழாயில் இருந்து அப்படி புகை வரக்கூடாது. நான் வேகமாக வெளியேறி ஷாப்பிற்குச் சென்று ஃபோர்மேனை அழைத்தேன். அவர் வருவதற்குத் தாமதமானது. பொறுமையை இழந்த நான் அவரைக் கையைப் பிடித்து வெளியே கொண்டு வந்தேன். "பாருங்க... அது என்னன்னு பாருங்க'' என்றேன். அவரை அங்கேயே நிறுத்திவிட்டு, அவர்தான் அதற்குக் காரணம் என்பதைப்போல நான் புகைக் குழாய்களைச் சுட்டிக் காட்டினேன். எதுவும் புரியாததைப்போல் அவர் மூன்று நான்கு வினாடிகள் அதையே பார்த்துக்கொண்டு நின்றார். பிறகு என்னை நோக்கித் திரும்பினார். மீண்டும் குழாய்களைப் பார்த்தார். மீண்டும் என்னை நோக்கிப் பார்த்தார். கண்களுக்குப் பயிற்சி கொடுக்காத அந்த மனிதரால் அதன் தீவிரத்தைப் புரிந்து கொள்ள முடியாது. எனக்குக் கோபம் வந்தது. "எதுவும் புரியலையா? என்ன நீங்கள் ஆந்தையைப்போல உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? சிறிய குழாயில் புகை போவதைப் பாருங்க'' என்றேன் நான். "ஆமா... புகை... அது புகையாக இருக்காது. க்யாஸாக இருக்கும்''- அவர் சொன்னார்: "அது கெமிக்கல் டிவிஷன்தானே?'' "புகையாக இருந்தாலும் கேஸாக இருந்தாலும் அது அங்கு இல்லாமலிருந்தது. வழக்கமாக வந்ததில்லை. வரக் கூடாது...''- நான் சொன்னேன். "ஓ... நாம் இனிமேல் என்ன செய்வது?''- அவர் வெறுமனே நின்றிருந்தார். வெறுமனே. பதில் கிடைக்காமல். பதிலை எதிர்பார்க்காமல். சந்தேகங்கள் இல்லாத- பிரச்சினைகள் இல்லாத மனிதர். ஒரு ஆர்க்கெஸ்ட்ராவைக் கேட்டுக் கொண்டு நின்றிருப்பதைப்போல. மிகவும் விருப்பமான சிம்ஃபனி. நீரில் நிற்பதைப்போல நான் கீழே போகத் தொடங்கினேன். என்னுடைய சிம்ஃபனி. என் அக்கறையையும் கடமையையும் நான் மீண்டும் புரிந்து கொண்டேன். நாங்கள் இந்த விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது. நெருப்பு பற்றினால் என்ன? விபத்து உண்டானால் என்ன? கெமிக்கல் ப்ளான்ட்டில் எது உண்டானாலும், அதற்கு எதிர்வினை ஆற்ற எங்களால் முடியாது. கெமிக்கல் ப்ளான்ட்டில் என்ன உண்டானது என்று எங்களுக்குப் புரியவில்லை. எங்களுக்கு இதில் பொறுப்பு எதுவும் இல்லை. எங்களுக்கு அதில் ஆர்வம் இல்லை. அக்கறை இல்லை. இந்தோ- சீனாவில் வர்த்தக காம்ப்ளெக்ஸ் முழுவதையும் அழித்தும், இல்லா விட்டால் அழிக்காமல் இருந்தும், எதுவும் நடக்காததைப்போல எல்லாரும் அலுவலகத்திற்குள் போய்க் கொண்டோ திரைப்படம் பார்த்துக்கொண்டோ மனைவியுடன் இன்பம் கண்டுகொண்டோ இருக்கத்தான் செய்கிறார்கள். நீர் குடிக்க வேண்டும் என்ற தாகத்தால் பாழும் கிணற்றில் குதித்தவர்கள் அங்கு கிடந்து சாகிறார்கள். பம்பாய் காலப்போக்கில் புகை வண்டிகளின் சொர்க்கமாக ஆகிறது. கல்கத்தா அகதிகளின் விபச்சார சாலையாகவும் புரட்சிக்காரர்களின் கைத்திறனைக் காட்டும் பயிற்சி சாலையாகவும் இருக்கிறது. எங்களுடைய கம்பெனி ஒரு சேர்மனுக்குப் பின்னால் ஒன்று சேர்ந்து வரிசையாக நின்றுகொண்டு முன்னோக்கி நடைபோட்டுச் செல்கிறது. சர்வசாதாரணமான உண்மை எங்கள் இருவருக்கும் புரிந்தது. அதனால் நாங்கள் மேலும் சிறிது நேரம் அந்தப் புகையை அல்லது க்யாஸைப் பார்த்துக் கொண்டு நின்றுவிட்டு, அமைதியாகத் திரும்பிச் சென்றோம். அவர் தன்னுடைய பணிக்குச் சென்றார். நான் என்னுடைய வேலைக்கு.

சில நாட்களுக்கு முன்பு கரியாஹட்டில் சிறிதும் எதிர்பாராமல், என்னுடன் முன்பு எஞ்ஜினியரிங் படித்த ஒரு நண்பனைச் சந்தித்தேன். கல்லூரியை விட்ட பிறகு இவ்வளவு வருடங்களாகப் பார்த்ததில்லையென்றாலும், நாங்கள் எளிதில் அடையாளம் கண்டு கொண்டோம். ஆளுக்கொரு சிகரெட்டைப் புகைத்தவாறு நாங்கள் சேறு நிறைந்த வயல்கள் வரை நடந்தோம். ட்ராமில் ஏறி ஸியால்தாய், ஷ்யாம் பஸார் ஆகியவற்றின் வழியாக பெல்காசியா வரை சென்றோம். நிறைய ரத்தம் சிந்திய ஆடைகளுடன் இருந்த ஒரு இளைஞன் தன்னைப் பின்தொடர்ந்தவர்களை ஏமாற்றிவிட்டு, ஓடி வந்து எங்களுடைய ட்ராமில் ஏறினான். ஏறிய பிறகு பாக்கெட்டில் இருந்த துவாலையை எடுத்து இடக் கையில் இருந்த காயத்தில் அவன் இழுத்துக் கட்டினான். பிறகு வலக்கையால் கம்பியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு பயணம் செய்தான். தான் இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் குதித்து இறங்கி, ஒரு சிறு பாதையின் வழியாக ஓடி மறைந்தான். கண்டக்டர் அவனுக்கு டிக்கெட் கொடுக்கவில்லை. யாரும் எதுவும் கேட்கவில்லை. நாங்களும் வெளியே பார்த்துக் கொண்டிருக்க முயற்சித்தோம். சவ்ரன்கிரியை அடைந்தபோது இறங்கினோம். ஆளுக்கொரு காப்பியைப் பருகினோம். விக்டோரியா நினைவிடத்தில் சிறிது நேரம் வெயிலில் நின்றிருந்தோம். பிறகு பவானிப்பூரை நோக்கி நடந்தோம். செயின்ட் பால்ஸ் தேவாலயத்திலிருந்து ஆட்கள் பிரார்த்தனை முடிந்து திரும்பி வருவதை நாங்கள் பார்த்தோம். யாரும் யாருடனும் பேசவில்லை.

இழப்புகளைக் குறித்த வேதனையோ, நிறைவேறிய பிரார்த்தனைகளைப் பற்றிய சந்தோஷமோ அவர்களுடைய முகத்தில் தெரியவில்லை. ஓ... அப்போது அதுதான்... அது... என்பது மாதிரி கீழுதட்டைக் கடித்தவாறு அவர்கள் நடந்து சென்றார்கள்.

எங்கு வேலை என்பதையோ எங்களுக்குள் கேட்டுக் கொள்ளவில்லை. பழைய விஷயங்களைப் பற்றியோ இனி உள்ள நோக்கங்களைப் பற்றியோ பேசவில்லை. எங்களுக்குப் பேசுவதற்கு எதுவும் இல்லாமலிருந்தது. இந்த நகரத்தில் கொஞ்ச காலமாகவே இருந்து வந்திருக்கும் விஷயத்தைத் தெரிந்தவுடன், எங்களுக்கு தினமும் ட்ராமிலோ பேருந்திலோ சந்திக்கக்கூடிய அறிமுகமான நபரைப் போலத் தோன்றியது.

நான் கெமிக்கல் கம்பெனியின் சிவில் என்ஜினியரை அழைத்தேன். அடுத்த வாரம் இறுதியில் அவருடைய வேலை முடியும். சாலை சரியாகும். அப்போது அதற்கடுத்த திங்கட்கிழமை க்ரேனைக் கொண்டுவரச் சொல்ல வேண்டும். அந்த வாரத்திலேயே மெஷின் அமைக்கலாம். பேக்கிங்குகளைப் பிரித்து கம்பொனென்ட்களைத் தயார் பண்ணி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.


ஷெட்டின் எக்ஸ்டன்ஷன் வேலையையும் சற்று போய்ப் பார்க்க வேண்டும். வரட்டும்... அவை அனைத்தையும் அடுத்த வாரம் பார்த்துக் கொள்ளலாம். இன்று முடியாது. ஆர்வம் உண்டாகவில்லை. சோர்வாகவும் இருக்கிறது. இல்லாவிட்டாலும் இன்று அதற்கெல்லாம் நேரம் இருக்காது. மதியத்திற்குப் பிறகு டாக்டரைப் பார்ப்பதற்காகப் போக வேண்டும். இன்று இரண்டாவது ஸ்பெஷலிஸ்டின் ரிப்போர்ட்டும் கிடைக்கும். என் வயிறு கொஞ்சம் எரிந்தது. என்ன காரணமாக இருக்கும்? ஒன்றுமில்லை என்று நம்ப வேண்டும்.

நான் மீண்டும் தொலைபேசியை எடுத்து பேராசிரியரின் தொலைபேசி எண்ணைக் கேட்டேன். இன்று அவருடைய "நாகரீகங்களின் மரணம்" என்ற சொற்பொழிவு இருக்கிறது. வர முடியாத நிலை என்பதைக் கூற வேண்டும். இன்று என்னுடைய நோய் என்ன என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும். தனிப்பட்ட முறையில் பேராசிரியர் அழைத்திருந்தார். என் மனைவியின் மாமா அவர். என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய சொற்பொழிவுகள் கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கும். வரலாற்றில் எதுவும் நடக்கக் கூடாதது இல்லை. வாழ்க்கை முடியப் போவதில்லை, மனிதர்களை நம்புங்கள் என்றெல்லாம் இருக்கக் கூடிய வாதங்கள் அறிவு மற்றும் அனுபவத்தின் பின்பலம் கொண்டவை அல்ல. பலப்பல நாகரீகங்களும் கொடிகட்டி வாழ்ந்த இடத்தில் இன்று நிர்வாணமான மனிதர்கள் வேட்டையாடி குகைகளுக்குள் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். மாமிசமும் ரத்தமும் உள்ள மனிதர்கள் இருந்த இடத்தில் கற்சிலைகளும் பிரமிட்களும் இருக்கின்றன. அப்படித்தான் சென்ற சொற்பொழிவை அவர் முடித்தார். இன்று அவர் மரணத்தைப் பற்றிப் பேசுவார். நாகரீகங்கள் மரணமடைகின்றனவா? வயதாகி, ஓய்வு எடுப்பதற்காகச் சென்றுவிட்டன. நரம்புகள் தேய்ந்து, உறுப்புகளுக்குச் செயல்படும் தன்மை இல்லாமல் போய்... ஒருவேளை அவை கொலை செய்யப்படுகின்றனவோ? இல்லாவிட்டால் தற்கொலை? இன்கா சாம்ராஜ்யத்தை ஒரு காலத்தில் ஸ்பானியாடுகள் என்ற நோய்க் கிருமிகள் ஆக்ரமித்து அடையாளம்கூட இல்லாத அளவிற்குத் தவிடுபொடியாக்கிவிட்டிருக்கின்றன. செக்கோஸ்லோவேகியா என்ற நாட்டைச் சுற்றி வளைத்து நின்று கொண்டு டாக்டர்கள் மீண்டும் மீண்டும் கூறுகிறார்கள்: "ரிலாக்ஸ்! ரிலாக்ஸ்!''

டிவிஷனில் ஷிஃப்ட் மாறக்கூடிய நேரம் வந்திருக்கிறது. நான் மீண்டும் ஷாப்பிற்குள் சென்றேன். புதிய ஷிஃப்டில் வேலை செய்யும் தொழிலாளிகள் அனைவரும் வந்துவிட்டிருந்தார்கள். அவர்களுக்குத் தங்களுடைய இயந்திரங்களை ஒப்படைத்துவிட்டு பழைய பணியாட்கள் எல்லாரும் இப்போது வரிசை வரிசையாக நீர்க் குழாயை நோக்கி நகர ஆரம்பிப்பார்கள். கைகளையும் கால்களையும் கழுவிவிட்டு, க்ளாக் அறையிலிருந்து பையையும் சோற்றுப் பாத்திரத்தையும் எடுத்துக்கொண்டு, பிறகு அவர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிச் செல்வார்கள். சற்று நேரத்தில் அவர்கள் வேலை பார்த்த இடங்களில் புதிய ஷிஃப்டில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலை பார்க்க ஆரம்பிப்பார்கள். ஒரு மனிதனின் இடத்தில் வேறொரு மனிதன் வந்திருக்கிறான் என்று தோன்றாது. ஒரு மனிதன் முடிக்காத வேலையை இன்னொரு ஆளால் முடிக்க முடியும். ஒரு அவரை விதையைப்போல இன்னொரு அவரை விதை. மாறுதல் தேவைப்படாத அளவிற்குப் பரிணாமம் முழுமையில் கொண்டு போய்விட்ட இறுதிக் கனி. எந்தவொரு இடத்திலும் தவறு நடக்கவில்லை. யாருக்கும் பாதை தவறவில்லை.

ஒருமுறை பேராசிரியரைப் பார்ப்பதற்காகப் போயிருந்தபோது, எனக்கு வழி தவறிவிட்டது. பாலிகஞ்சில் இருந்து மாறி ஒரு ஒடுங்கிய சந்துக்குள் அவர் வசித்துக்கொண்டிருந்தார். பலதடவை போயிருக்கிறேன். எனினும் வழி தவறிவிட்டது. நீண்ட நேரம் இங்கு மங்குமாக அலைந்தேன். அவருடைய வீட்டை அடையும்போது இரவாகி விட்டது. என் கதையைக் கேட்ட பேராசிரியர் என்னைப் பாராட்டினார். வழி தவறி செல்பவர்களைத் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார். "வீட்டிலிருந்து வெளியே வராத நீங்கள்தான் அதைக் கூறவேண்டும்'' - நடந்து களைத்துப் போயிருந்த நான் கோபத்துடன் சொன்னேன். "நான் இருப்பதே வழி தவறி வந்து சேர்ந்த இடத்தில்தான் குழந்தை...''- அவர் சொன்னார். தொடர்ந்து என்னை நெருங்கி வந்து தோளில் கையை வைத்து வயதான அவர் சொன்னார்: "வழி தவறாதவன் செய்வது கடமையை முழுமை செய்வது மட்டும்தான். கடமையும் செயலின் மரணம்தான் குழந்தை.'' அவருடைய நரை விழுந்த தாடி என் தலையில் மோதியது. சில நேரங்களில் அவர் திடீரென்று என்னிடம் பாசத்தைக் காட்டுவார். அவருடைய முகம் கவலையால் நிறைந்திருக்கும். தொண்டை தடுமாறும். தோளில் வைத்த கையைத் தயங்கித் தயங்கி எடுத்தவாறு அவர் நடந்து செல்வார். அவருக்குத் தெரியுமா? நான் இப்படியெல்லாம்- ஷாப்பிற்கு நடுவில் கையை நெஞ்சின்மீது வைத்துக் கொண்டு நான் நின்றுவிட்டேன். நெஞ்சுக்குள்ளிருந்து என்னவெல்லாமோ ஊர்ந்து போவதைப்போல இருந்தது. நான் ஒன்றுமே இல்லாதவனாக ஆகிவிட்டதைப்போல உணர்ந்தேன். என்ன இது?

அங்கிருந்து கொண்டு நிமிர்ந்து நின்றபோது, பழைய நிலைக்கு வந்தபோது எனக்கு முன்பு எப்போதும் தோன்றியிராத அளவிற்குத் தளர்ச்சி தோன்றியது. நான் வியர்த்துப் போயிருந்தேன். யாராவது என்னை இந்த நிலையில் பார்த்திருப்பார்களோ என்னவோ என்று நான் பயந்தேன். டாக்டர் அறிந்தால், தயாரிப்பு நிர்வாகியிடம் செய்தி போய்ச் சேர்ந்தால்... எல்லாவற்றையும் பார்க்கவும் எல்லார்மீதும் கண்களை வைத்திருக்கவும் செய்யும் கம்பெனி, எனக்குக் கிடைத்த இந்த வேலை, என்னுடைய நிலைமை... யாரும் பார்க்கவில்லை என்று நம்ப முயற்சித்தவாறு நான் மிகவும் மெதுவாக நடக்க ஆரம்பித்தேன்.

அப்போது என் தோளில் விருந்தாவன் தொட்டார். யார் என்று தெரியாமல் திடுக்கிட்டுத் திரும்பினேன். அவர்தான் என்பது தெரிந்ததும் நான் நீண்ட பெருமூச்சை விட்டேன். அவர் ஒரு கையை என் வலது தோளில் வைத்து, இன்னொரு கையால் இடக்கையைப் பிடித்துக்கொண்டு எனக்குப் பின்னால் நடந்தார். நான் எதிர்க்கவில்லை. எதுவும் கூறவுமில்லை. அவரும் எதுவும் கேட்கவில்லை. நாங்கள் அமைதியாக நடந்தோம். எங்களுடைய அந்த நிலையில் இருந்த நடையை யாராவது பார்க்கிறார்களா என்று அப்போது நான் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு மாறாக நிம்மதி தோன்றியது. ஒரு நோயாளிக்கு மட்டும் புரியக்கூடிய நிம்மதி.

அலுவலக அறையை அடைந்தபோது நான் பழைய ஆளாக மாறிவிட்டிருந்தேன். எனினும் பல நிமிடங்கள் நாங்கள் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தோம். எங்களுக்கு இடையே இருந்த மேஜையையும் அதன்மீது அவர் கொண்டு வந்து வைத்திருந்த அட்டைப் பெட்டியையும் பார்த்தார்- எங்களுக்கிடையே எங்களைப் பேசவிடாமல் இருக்கச் செய்த என்னுடைய நோயைக் காணாமல் இருக்க முயற்சித்துக்கொண்டு. அதைப் பற்றிப் பேச நாங்கள் இருவரும் விரும்பவில்லை. என்னை அறிந்திருக்கும் என்னுடைய நண்பர் விருந்தாவன்.


இறுதியில் அவர் கொண்டு வந்த அட்டைப் பெட்டியை எடுத்தவாறு நான் கேட்டேன்: "இது சரியாயிடுச்சா?'' "ம்... சரியாயிடுச்சு''- திடீரென்று சிரிப்பை வரவழைத்து, உற்சாகத்தை வெளிப்படுத்தியவாறு விருந்தாவன் சொன்னார்: "இதற்கு உள்ளே ஒரு கியர் உடைந்துவிட்டது. எல்லாம் பித்தளையால் ஆனது. இதுதான் இவற்றில் இருக்கும் கெட்ட விஷயமே. வேகமாகத் தேய்ந்து கேடு வந்திடும். இருந்தாலும் நான் இதை சரி பண்ணிட்டேன்.'' என்னுடைய மகனின் விளையாட்டு பொம்மை. விருந்தாவன் சென்ற வருடம் ஏதோ மெஷின்களைப் பரிசோதிப்பதற்காக ஜப்பானுக்குச் சென்றிருந்தபோது, இதைக் கொண்டு வந்தார்- அவனுக்குப் பரிசுப் பொருளாக. தானே ஓடுவதும் திரும்புவதும் நெருப்பைக் கக்குவதுமாக இருக்கும் ஒரு டேங்க். ட்ராக் செயினும் ஓடும்போது உண்டாகக்கூடிய சத்தமும் இயல்பாக இருந்தன. குழாயின் முகத்திற்குள்ளிருந்து நெருப்பு எரியும்போது உண்மையிலேயே பயம் தோன்றும். சத்தமும் புகையும்... ஷெல் இல்லை என்பது மட்டும்தான். அவன் அதை எப்போதும் தன் தாயின் பக்கம் திருப்பி விடுவான். எவ்வளவு பழகியிருந்தாலும், இப்போது அதன் முகத்திலிருந்து குண்டு வெடிக்கும்போது அவள் முகத்தை மூடிக் கொள்வாள். விளையாட்டு பொம்மைகள் இப்படி இருக்கக்கூடாது என்று நான் நினைப்பதுண்டு. ஆனால் இக்காலத்தில் அவை இப்படித்தான். குழந்தைகள் அவற்றை அப்படித்தான் எடுத்துக் கொள்கின்றனர். அவர்கள் பலவற்றையும் அப்படித்தான் ஏற்றுக் கொள்கின்றனர். அதனால் அதற்குக் கேடு வந்தபோது, வழக்கம்போல அது செயல்படுகிறது என்பதற்காக அல்ல- கேடு வந்துவிட்டது என்பதைப் பற்றிதான் அவன் ஆச்சரியப்பட்டான். எது எப்படியோ- விருந்தாவன் சென்ற முறை வீட்டிற்கு வந்தபோது அதை எடுத்துக்கொண்டு போனார். இப்போது சரி பண்ணவும் செய்திருக்கிறார். இனி ஆச்சரியப்பட வேண்டிய அவசியமில்லை.

நாங்கள் அறைக்கு வெளியே நடந்து திறந்து கிடக்கும் இடமாகப் பார்த்து டேங்கைத் தரையில் வைத்து ஸ்விட்சை அழுத்தினோம். அது சத்தத்தை உண்டாக்கிக் கொண்டும், தூசியைப் பறக்க விட்டுக் கொண்டும் ஓடியது. இடப்பக்கமும் வலப்பக்கமும் திரும்பி குண்டு வெடித்தது. தொடர்ந்து ஆபரேஷனை முழுமை செய்துவிட்டு பேஸை நோக்கித் திரும்பி வந்தது. முதல் ஷிஃப்ட் முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்த தொழிலாளிகள் சிலர் அந்தக் காட்சியைப் பார்க்கக் கூடினார்கள். நான் அவர்களிடம் அது ஜப்பானில் தயார் பண்ணப்பட்டது என்றும், ஜப்பான்காரர்களின் விளையாட்டுப் பொம்மைகள் உண்டாக்கக்கூடிய திறமை உன்னதமானது என்றும் சொன்னேன். அதைப் பார்த்துக்கொண்டிருந்த எல்லாரும் உண்மைதான் என்று ஒப்புக் கொண்டார்கள். ஜப்பான்காரர்களையும் ஜப்பானியர்களின் விளையாட்டு பொம்மையையும் எல்லாரும் பாராட்டினார்கள். அப்போது மதிய உணவு நேரமாக இருந்ததால் நாங்கள் டேங்கை எடுத்து பெட்டிக்குள் போட்டு உள்ளே கொண்டுபோய் வைத்து விட்டு, வெளியேறி கேன்டீனை நோக்கி நடந்தோம்.

நானும் விருந்தாவனும் ஒரே நேரத்தில் தொழிற்சாலையில் சேர்ந்தோம். நான் காஸ்ட்டிங் டிவிஷனில். அவர் மெஷின் ஷாப்பில். நாங்கள் ஒரே நாளன்று வேலையில் நிரந்தரமாக்கப்பட்டோம். எங்களுக்கு ஒன்றாகவே பதவி உயர்வு கிடைத்தது. கிட்டத்தட்ட எல்லாமே எங்களுக்கு ஒன்றாகத்தான் நடந்தன. ஒன்றே ஒன்றைத் தவிர- திருமணம். நான் திருமணம் செய்தேன். எனக்கொரு மகன் பிறந்தான். அவர் இன்னும் தனி மனிதராக இருக்கிறார். சிரமங்களைச் சந்தித்த மனிதர். அவரும் திருமணம் செய்து கொண்டிருந்தால் என் மகனின் வயதில் அவருக்கும் ஒரு குழந்தை இருந்திருக்கும். டேங்குகள் ஓட்டிக் கொண்டிருக்கும் மகனும் முட்டை ஃப்ரை செய்யும் மனைவியும் வீடும் தோட்டமும். அதிகாலை வேளை செய்தித்தாள். வாசலில் பால்புட்டிகள்...

நான் திருமணம் செய்துகொண்ட காலத்தில் அவர் காதல் வயப்பட்டிருக்கிறார். காதலி மற்றும் காதலனின் இல்லத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களுடைய திருமணத்தை ஒப்புக் கொள்ளவில்லை. அவர்களோ உறவினர்கள் சம்மதிக்கும் வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தார்கள். அவள் எம்.ஏ. பாஸ் ஆனாள். பத்தொன்பதாவது நூற்றாண்டின் அமெரிக்க இலக்கியத்தில் டாக்டர் பட்டம் பெறுவதற்காக ஆராய்ச்சி ஆரம்பித்தாள். அவர் கம்பெனியின் ஸ்காலர்ஷிப்பில் தொழில் அறிவியலில் மேற்படிப்பு படிக்கச் சென்றார். அவள் ஹாஸ்டலில் தங்கினாள். அவர் ஹோட்டலில். அவர்கள் தினமும் தொலைபேசியில் பேசிக் கொண்டார்கள். எல்லா மாலை வேளைகளிலும் சந்தித்துக் கொண்டார்கள். தினமும் இரவில் காதல் கடிதம் எழுதினார்கள். பத்து பதினைந்து பக்கங்கள் வரக்கூடிய காதல் கடிதங்கள். நீண்ட ஏழு வருடங்கள் அப்படியே கழிந்தன. அவர்களுடைய காதல் எங்களுக்கு இடையே ஒரு கதையாக ஆனது.

ஏதோ ஒரு மெஷினின் உதிரி பாகத்திற்காக டிசைன் செய்ய வேண்டிய ஒரு ஜிக்கைப் பற்றி அவர் கூறினார். பல வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்யக்கூடிய ஒரு ஜிக்கை உண்டாக்குவது என்பது மிகவும் சிரமமான ஒரு வேலை. ஆனால் அப்படியொன்றை உண்டாக்கிவிட்டால், மற்றவர்களின் வேலை மிகவும் எளிதாகி விடும். ஜிக் உண்டாக்குவது என்பது அறிவைப் பயன்படுத்திச் செய்ய வேண்டிய விஷயம் என்பதால், அதில் சிறப்பு இருக்கிறது என்று நான் சொன்னேன். "அறிவைப் பயன்படுத்த வேண்டியதிருக்கிறது என்பதல்ல உன்னதத்திற்கு அடையாளம்''- அவர் ஒப்புக் கொள்ளவில்லை. "தானே அந்த வேலையை ஏற்றெடுப்பதுதான் முக்கியமான விஷயம். தோல்வியடையலாம் என்ற சாத்தியத்தைக் கூட மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இங்கு நடக்கக் கூடாதது என்று ஒன்றில்லை. சிரமமானது என்றாலும் எல்லாம் நடத்திக் காட்டக் கூடியதுதான். நடத்திக் காட்ட வேண்டும். அந்தக் கால மன்னர்களைப்போல இவ்வளவு நாட்களுக்குள் பதிலைக் கண்டுபிடிக்கவில்லையென்றால், கழுத்து அறுக்கப்படும் என்று யாரும் கூறவில்லையென்றாலும்!''- அவர் சொன்னார்.

தொழில் அறிவியல் படித்த பிறகு தன்னுடைய மெஷின் ஷாப்பின் வேலை தவிர, கம்பெனியின் ப்ளானிங் கமிட்டியில் ஒரு ஆலோசகராகவும் விருந்தாவன் வேலை பார்க்கிறார். சற்று தூரம் நடந்த பிறகு அவர் மீண்டும் தொடர்ந்தார்: "மனிதனின் செயல்கள் அனைத்தையும் கிட்டத்தட்ட மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதலாவது- சொந்த விருப்பத்தால் செயல்படுவது. இரண்டாவது- மற்றவர்களைப்போல நடப்பது. இறுதியானது- மற்றவர்கள் கூறியபடி நடப்பது. தொழிற்சாலையில் பணி செய்யும் தொழிலாளர்களைப் பொறுத்தவரை தானே செய்வது என்பதைப்போல மற்றவர்களைப்போல நடப்பதும் இல்லாமலிருக்கிறது. பின்பற்றுவது மட்டும்தான் எஞ்சியிருப்பது. எங்கே இருந்தாலும்... உங்களுக்கு அந்தக் கிழவன் பாவுலின் பாட்டு ஞாபகத்தில் இருக்கிறதா? "பாவுல் ஆமி ஏக்- தாராதெ பேம்தே கான்"- வீணைக்கு ஒரு கம்பியே இருக்கிறது என்றாலும், ஒவ்வொரு பாவுலும் தன்னுடைய பாட்டைத் தனியாகப் பாடவேண்டும்.''

தொழிற்சாலைக்கு வெளியே ஆற்றின் கரையில் பாடியவாறு நடந்து கொண்டிருக்கும் பாவுலைப் பார்த்துக்கொண்டே விருந்தாவன் நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பார்.


"ஒரு மெஷினில் ஒரே பார்வையில் தெரிகிற சிறப்பு என்ன தெரியுமா?''- விருந்தாவன் கூறிக் கொண்டிருந்தார்: "அதற்கு டிப்ரீஸியேஷன்தான் இருக்கிறது. அப்ரீஸியேஷன் இல்லை. அதற்கு எதையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. அது வளர்வதில்லை. வளர்ந்து வடிவமெடுத்து, முழுமை அடைந்த ஒரு நிலையில் அது வாழ்க்கையை ஆரம்பிக்கிறது. பிறகு தேய்ந்தும் வெடித்தும் கேடு உண்டாகியும் படிப்படியாக அது அழிகிறது. செயல்படுவது என்று வைத்துக்கொண்டால், அதனால் அதற்காக அழிகிறது என்றுதான் அர்த்தம். வாழ்வது என்று வைத்துக்கொண்டால் மரணமடைவது, தானே அழிவது என்று அர்த்தம். உற்பத்தி சம்பந்தப்பட்ட தொழிலில் நம்முடைய இரண்டு கருவிகள் இயந்திரமும் மனிதரும். மனிதனுக்கு டிப்ரீஸியேஷன் தவிர, அப்ரீஸியேஷன் என்ற குணமும் இருக்கிறது. அழிய ஆரம்பிப்பதற்கு முன்னால் அதாவது- அழியும் போதே மீண்டும் வளர்வது என்பதும் அவனுக்குச் சாத்தியமானதுதான். வளர்வது என்ற சாத்தியம் இருப்பதால் அழிவு என்பது முன்கூட்டி தீர்மானிக்கப்பட்டதோ கட்டாயமானதோ அல்ல.''

அவர் திடீரென்று நிறுத்தினார். அதற்குப் பிறகு அவர் பேசவில்லை. நானும். நாங்கள் அமைதியாக நடந்தோம்.

நாங்கள் கேன்டீனிற்குள் நுழைந்தோம். விருந்தாவன் ரொட்டியையும் மாமிசத்தையும் வரவழைத்தார். நான் தேநீரையும் பிஸ்கட்டையும். எனக்குப் பசி தோன்றவில்லை. விருந்தாவன் உணவுமீது விருப்பம் கொண்டவர். எனினும் அவருக்குத் தேவைக்கும் அதிகமான எடை இல்லை. சாப்பிடும் உணவுக்கும் ஒருவனுடைய எடைக்கும் சம்பந்தமே இல்லை. மெலிந்து இருப்பதும் தடிமனாக இருப்பதும் ஒவ்வொருவருடைய உடலின் இயற்கைத் தன்மையைப் பொறுத்தது. நான் மேஜைக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு சுற்றிலும் உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்த்தேன். அவர்களில் எத்தனைப் பேர் இறக்கப் போகிறார்கள்? உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒரு மனிதனைப் பார்த்தால் அவன் எந்தச் சமயத்திலும் இறப்பான் என்று தோன்றவே தோன்றாது.

அதிகமான ஆட்கள் இருக்கும் நேரம் என்பதால் வெயிட்டர் உணவைக் கொண்டுவர நேரம் அதிகமானது. எங்களுக்கு அருகில் இருந்த சாப்பிடும் மேஜைமீது கையை ஊன்றிக் கொண்டு அங்கு அமர்ந்திருந்த மனிதனிடம் பேசிக் கொண்டிருந்த கேன்டீன் உரிமையாளரையே நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். "பாருங்க நண்பரே, வளையாமலும் குனியாமலும் இருப்பதால் ஒருவன் ஒரு பெரிய மனிதனாக ஆகிவிடப் போவதில்லை. இல்லையா?'' சாப்பிட்டுக் கொண்டிருந்த மனிதன் சிரித்தான். சந்தேகத்தைத் தீர்ப்பது மாதிரி அவர் திரும்பிப் பக்கத்து மேஜைக்கு முன்னால் இருந்த மனிதனிடமும் கேட்டார். பேசும்போது அவருடைய மீசை அசைந்து கொண்டிருந்தது. வெளுத்த மீசைக்குக் கீழே வெண்மையான பற்கள். அவர் இரண்டு தடவை சிரிப்பதைப்போலத் தோன்றும். கம்பீரமான சரீரத்தையும் பெரிய வயிறையும் கொண்டிருக்கும் ஒரு மனிதர். உரையாடுவது என்றால் அவருக்கு மிகவும் விருப்பம். ஒரு பழைய பட்டாளக்காரன் என்றும், போரைப் பார்த்தவன் என்றும் பெருமையாகக் கூறிக்கொள்ளும் அவருக்குக் கூறுவதற்கு நிறைய கதைகள் இருக்கும். "நீங்கள் பெட்டாலியன் ஹவில்தார் மேஜர் என்ற ஒருவனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?''- அவர் மீண்டும் தன் நண்பனை நோக்கித் திரும்பினார்: "ஒரு அங்குலம்கூட வளைய மாட்டார். செடியைக் குழிக்குள் மூடியதைப்போல இருப்பார். அர்த்தம் இல்லை. அவர் ஒரு நல்ல ஹவில்தார் மேஜராகவே ஆக முடியும். அவருக்கு ஒரு பெயர் இல்லை. அவரை யாரும் பெயர் சொல்லி அழைக்க மாட்டார்கள்...''

"பிறகு... இன்னொரு விஷயம்...''- ரொட்டியும் மாமிசமும் வந்தவுடன், ஆர்வத்துடன் இருப்பதைப்போல மாமிசம் இருந்த தட்டில் இருந்து ஒரு துண்டை எடுத்து அதை எலும்பிலிருந்து பிரித்துக் கொண்டே விருந்தாவன் கூறினார்: "நான் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன்.''

அவர் மாமிசத் துண்டில் இருந்து கண்களை எடுக்கவே இல்லை. அதை வாயில் இடவும் இல்லை. எலும்பிலிருந்து பிரித்த பிறகும் அதனுடன் விளையாடிக் கொண்டிருந்தார்- கூறுவதற்குத் தயங்கக்கூடிய ஒரு விஷயத்தை ரிகர்ஸல் செய்து கொண்டு வந்து கூறுவதைப்போல. ஏழு வருடங்களைக் காதலில் கழித்த ஒரு மனிதர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

"கடைசியாக... கடைசியாக...''

நான் சந்தோஷத்தை வெளிப்படுத்தினேன். "எந்த அளவிற்கு எதிர்பார்த்திருந்த விஷயம்... இன்னொரு பக்கம் என்ன ஒரு பெரிய செய்தி!''

"அடுத்த மாதம் முதல் வாரத்தில்... நான் அடுத்த வாரத்திலிருந்து விடுமுறை எடுக்க திட்டமிட்டிருக்கிறேன்''- அவர் தன்னுடைய மாமிசத் துண்டை வாய்க்குள் திணிக்க முடிவெடுத்தார்.

"தேனிலவு எங்கே?''

அவர் வாயில் இருந்த மாமிசத் துண்டுடன் சிரிக்க முயன்றார். "குறிப்பாக எங்கும் போகும் எண்ணமில்லை. எங்களுடையது ஒரு பழைய குடும்பம் என்ற விஷயம் தெரியும்ல? பல ஆச்சாரங்களும் சடங்குகளும் இருக்கும். அப்படியே நேரம் அங்கேயே கழிந்து விடும்.''

"அப்படின்னா கடைசியில் அவங்க சம்மதிச்சிட்டாங்க?''- நான் கேட்டேன்.

"இல்லை... இல்லை... இது வேறு''- அவர் திடீரென்று ஒரு புதிய மாமிசத் துண்டைப் பொறுக்கி எடுத்து எலும்புடன் போராட ஆரம்பித்தார். "இது... இது... அவர்கள் நிச்சயித்தது. சுமிதாவை நான் பிரிந்து இரண்டு மூன்று மாதங்களாகிவிட்டன. நாங்கள் பிரியணும்னு முடிவெடுத்துட்டோம்.''

எப்படி அது நடந்தது என்று நான் கேட்கவில்லை. அவர் கூறவும் இல்லை. அந்த விஷயம் அங்கேயே முடிந்துவிட்டதைப் போல, அவருடைய திருமணத்தையும் காதலையும் பற்றி எனக்கோ அவருக்கோ இதற்குமேல் பேசுவதற்கு எதுவும் இல்லை என்பதைப்போல நாங்கள் அமைதியாக இருந்தோம். நான் எனக்கு முன்னால் உட்கார்ந்து ஆர்வத்துடனும் விருப்பத்துடனும் ரொட்டியையும் மாமிசத்தையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த விருந்தாவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். நடக்கக் கூடாதது நடந்து விட்டது என்று பிரச்சினையே இல்லை. பூமியில் வாழ்வு ஆரம்பமான நாளன்று தொடங்கியதும் என்றென்றும் வளர்ந்து கொண்டும் பரவலாகிக் கொண்டும் இருப்பதுமான பரிணாமத்தின் தூண்டுதலால் மட்டும் தூண்டப்பட்டு... என்னுடைய கர்மத்தின் கொம்பைக் கண்டடைந்துவிட்ட உத்வேகத்துடன்... தன்னுடைய மூளையின் மாமிசத்தை அறுத்து எடுத்து எண்ணெயில் பொரித்து, வெங்காயத்தையும் முந்திரிப் பழத்தையும் முந்திரிப் பருப்பையும் சேர்த்து வறுத்து, தக்காளி சாஸைக் கலந்து... நான் என் தேநீருக்கும் பிஸ்கட்டிற்கும் திரும்பினேன். எனக்குப் பசி தோன்றியது. எனக்கு என்னுடைய மாமிசம். ஒவ்வொருவனுக்கும் அவனவனின் மூளை.

அவருக்குக் கிடைத்திருக்கும் மனைவி எப்படிப்பட்டவளாக இருப்பாள்? அவர் காதலித்த பெண்ணை எனக்குத் தெரியும். அழகும் அறிவும் உலக அனுபவமும் உள்ள ஒரு பெண் சுமிதா. அவள் இல்லாமல் வேறொரு பெண்ணை அவருடைய மனைவியாகக் கற்பனை பண்ணிப் பார்ப்பதற்குக்கூட கஷ்டமாக இருந்தது. சொல்லப் போனால்- அவர் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணும் அப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று ஒன்றும் இல்லையே! யாராக இருந்தாலும் திருமணம் செய்து கொள்பவள் தான் மனைவி.


அவருக்கு இதெல்லாம் எப்போதோ நடந்திருக்க வேண்டும் என்பதுதான் விஷயமே. ஏழு வருடங்களுக்கு முன்பு என்னால் என் மனைவியைவிட நல்லவளாகவோ மாறுபட்டவளாகவோ உள்ள ஒரு பெண்ணை அவளுக்கு பதிலாக நினைத்துப் பார்க்கவே முடியாது. அதே நேரத்தில் அவளை நான் சந்தித்துக் காதலித்தோ, பழக்கமாகி தேர்ந்தெடுத்தோ திருமணம் செய்து கொள்ளவும் இல்லை. என்னுடைய உறவினர்கள்தான் அவளை எனக்காகத் தேர்ந்தெடுத்தார்கள். திருமணம் முடிந்து, பிள்ளைகளுடனும் குடும்பத்துடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் நன்கு பழக்கமான உறவினர்கள். அதனால் இதில் தவறுக்கோ பிரச்சினைகளுக்கோ இடமே இல்லை. திருமணத்திற்கு முன்பு நாங்கள் இருவரும் டாக்டரைப் போய்ப் பார்த்தோம். திருமணத்திற்குப் பிறகு நாங்கள் எங்களுடைய குடும்பத்தைத் திட்டமிட்டோம். கர்ப்பமாக இருந்த போது முதலில் எல்லா மாதங்களும், பிறகு மாதத்தில் இரண்டு தடவைகளும் தவறாமல் அவள் டாக்டரைப் போய்ப் பார்த்தாள். அவர் தந்த மருந்துகளைச் சாப்பிட்டு அவர் கூறிய உடற்பயிற்சிகளைச் செய்தாள். இருநூற்று எண்பதாவது நாளன்று என்னுடைய மகன் பிறந்தான். அவனை முறைப்படி குழந்தை சிகிச்சை ஸ்பெஷலிஸ்டை வைத்து பரிசோதனை செய்தோம். உரிய நேரங்களில் போலியோ கொடுத்தோம். டிஃப்தீரியாவிற்கு எதிராக ஊசி போட்டோம். பசியை உண்டாக்கக்கூடிய, அதிக உணவை அதிக வளர்ச்சியாக மாற்றக் கூடிய டானிக்கைக் கொடுத்தோம். அவன் வளர்ந்தான். இப்போது கின்டர்கார்டனிற்குப் போகிறான். அடுத்த வருடம் பள்ளிக்குச் செல்வான். சமீபத்தில் ஒருநாள் முதல் பாடத்தில் ஏதோ சந்தேகம் வந்தபோது, எனக்கு அதைச் சொல்லித் தர முடியவில்லை. என்ன அது? எதுவாக இருந்தாலும் தேவையில்லை. இறுதியில் படித்த பாடம்தான் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. முதலில் படித்தது வேண்டுமென்றால், இனியும் படிக்க வேண்டும்.

"இரட்டை பெற்ற இரண்டு பெண்களில் ஒருத்தியைத்தான் இவர் கல்யாணம் பண்ணினார்''- உரிமையாளர் அப்போது தன் நண்பரிடம் கூறினார். அவருடைய இரண்டுமுறை சிரிப்பிற்குப் பதிலாக அவரின் நண்பர் ஒரு தடவை சிரிப்பைத் திருப்பிக் கொடுத்தார். "இரட்டைக் குழந்தைகள் பிறந்தன என்று சொன்னால் போதாது. அறுத்துப் பிரித்தெடுத்துவிட்டார்கள். ஒரே மாதிரி இருந்த இரட்டைக் குழந்தைகள். ஒன்றாக இருக்கும்போது அடையாளம் கண்டுபிடிப்பது கஷ்டமாக இருப்பதை நினைத்து, ஒன்றைக் குழந்தையாக இருக்கும்போதே உறவினர்களில் யாரோ கொண்டுபோய் தனியாக வளர்த்தார்கள். ஆனால் இரண்டின் விதியும் ஒன்றாகவே இருந்தது. ஒன்றுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால், இன்னொரு குழந்தைக்கும் வரும். ஒன்று விழுந்து கையை ஒடித்துக் கொண்டபோது, இன்னொன்றும் விழுந்து கையை ஒடித்துக் கொண்டது. இரண்டு பேர்களின் திருமணமும் ஒன்றாகவே நடந்தது. அவர்களின் இரட்டைக் குணம் அங்கேயே நின்றதா என்ன? ஒருத்தி பிரசவம் ஆனபோது இன்னொருத்தியும் பிரசவமானாள். இரண்டும் ஆண் குழந்தைகள். பிறகு இரண்டு பேருக்கும் கர்ப்பம் கலைந்தது. மூன்றாவது தடவை அவருடைய மனைவி இன்னொருத்தருடன் சேர்ந்து கர்ப்பம் தரித்தபோது அவருக்குத் தாங்க முடியவில்லை. இப்படி வேறொருவனின் பெயரில் வாழ என்னால் முடியாது என்று அவர் நீதிமன்றத்தில் கூறினார். கர்ப்பிணியான மனைவியை அவர் கழுத்தை நெறித்துக் கொன்றார். அதுதான் அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் முதல் தடவையாக உண்டான வித்தியாசம். அவள் இப்போதும் வருடந்தோறும் பெற்றுக் கொண்டிருக்கிறாள். அதில் சில இரட்டைக் குழந்தைகள்.''

நாங்கள் அமைதியாக நடந்தோம். தான் பார்த்திராத வரப்போகும் மணமகளைப் பற்றி அவர் சிந்தனையில் மூழ்கியிருந்தார். என்னுடைய களைப்பையும் அறியாத நோயையும் தோழமையாக்கிக் கொண்டு நானும் நடந்தேன். நாங்கள் இருவரும் மற்றவர்களின் மனதிற்குள் இருக்கும் உலகத்தைத் தொட விரும்பவில்லை. என் டிவிஷனுக்கு முன்னால் வந்தபோது, எப்போதும் இல்லாத வகையில் என் தோளில் கையை வைத்துக் கொண்டு அவர் இதை மட்டும் சொன்னார்: "சரி... அப்படியென்றால்... நாம் இனியும் பார்ப்போம். அது மட்டும் உண்மை.'' அவருடைய தொண்டை தடுமாறியதைப்போல இருந்தது. என் தோளில் அவருடைய கையின் அன்பு நிறைந்த அழுத்தத்தை நான் உணர்ந்தேன். இனிமேல் இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான் அவர் வருவார்- தனக்கு அறிமுகமில்லாத ஒரு பெண்ணையும் அழைத்துக் கொண்டு. அதற்கிடையில் நோய்வாய்ப்பட்ட என்னுடைய நாட்களுக்கு ஒரு முடிவும் இல்லை.

அடிக்கொருதரம் நான் கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே ஷாப்பின் வழியாக வேகமாக நடந்து, ஒரு கடமை முடிந்தது என்பது மாதிரி அறைக்குத் திரும்பி வந்தபோது முதல் ஷிஃப்ட்டின் ரிப்போர்ட் மேஜைமீது இருந்தது. அதில் வேகமாகக் கண்களை ஓட்டினேன். எல்லாம் ஒழுங்காக இருந்தன. ப்ரோக்ராம், டார்கெட் ஆகியவற்றை அனுசரித்து அதிகமாகவும் இல்லை, குறைவாகவும் இல்லை. சிவப்புக் கோடு, நீலக் கோடு ஆகியவற்றின் சுகமான திருமணம். அதை எடுத்து ஷிஃப்ட் ரிப்போர்ட்கள் இருந்த ஃபைலில் வைத்தேன். பிறகு முன்பே தயாராக்கி வைத்திருந்த பேப்பர்கள் எல்லாவற்றிலும் கையெழுத்துப் போட்டு ராக்கில் வைத்தேன். டாக் ஃபைலைப் பார்த்தேன். சர்க்குலர்களையும் நோட்டீஸ்களையும் அறிவிப்புப் பலகையில் இடுவதற்காகக் கொடுத்தனுப்பினேன். எல்லாம் முடிந்ததும் தபாலில் வந்திருந்த "மெக்கானிக்கல் என்ஜினியரிங்" என்ற பத்திரிகையின் கவரை உடைத்து, புரட்டிப் பார்த்தேன். அப்போது வெல்ஃபேர் சர்வீஸைச் சேர்ந்தவர்களும் தொழிலாளர்களும் யூனியனின் உறுப்பினர்களும் க்ரேனுக்கு அடியில் சிக்கி இறந்த எரெக்ஷன் ஃபிட்டரின் குடும்பத்திற்காகப் பணம் கேட்டு வந்தார்கள். யூனியன் கேட்டுக் கொண்டபடி அந்த மனிதனின் மகனுக்குக் கம்பெனி எரெக்ஷன் ஃபிட்டர் வேலையைக் கொடுத்திருக்கிறது. எனினும் ஒரு மரணத்தின் இழப்பு எஞ்சியிருக்கிறதே! நான் என்னுடைய பங்கு பணத்தைக் கொடுத்தேன். அவர்கள் சென்றதும் இரண்டாவது ஷிஃப்டில் பணியாற்றும் ஷிஃப்ட் எஞ்ஜினியர் உள்ளே வந்தார். நான் அவரிடம் ஏதாவது ரிப்போர்ட் செய்ய வேண்டியதிருக்கிறதா என்று கேட்டேன். "இல்லை" என்று அவர் சொன்னார். "மெஷின்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. பணியாட்கள் எல்லாரும் வந்திருக்கிறார்கள். எல்லாம் ஒழுங்காக நடந்து கொண்டிருக்கின்றன. நல்ல முறையில்...''- அவர் கூறினார். ப்ரோடக்ஷன் கன்ட்ரோலர் கேட்டிருந்த ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட் இருக்கிறது. நான் அவரிடம் சொன்னேன்: "டைப் செய்ய அனுப்பி இருக்கிறேன். கிடைத்தவுடன் நீங்களே கையெழுத்துப் போட்டு அனுப்பிடுங்க. இன்னைக்கு நான் கொஞ்சம் முன்னாடியே போகணும்.''

அவர் போனதும் நான் ஜன்னல் வழியாகக் கெமிக்கல் ப்ளான்டின் புகைக் குழாய்களைப் பார்த்தேன். இப்போது அவை சரியாக இருந்தன. இருப்பவற்றிலேயே மிகவும் பெரிதாக இருக்கும் குழாய்க்குள் இருந்து மிகவும் அடர்த்தியான புகை, அதைவிட சிறிய குழாயில் இருந்து குறைவான புகை, மிகவும் சிறியதில் இருந்து எதுவும் வரவில்லை. எல்லாம் பழைய மாதிரி.


நான் நாற்காலியில் சற்று சாய்ந்து நிமர்ந்தேன். நாற்காலியின் கையில் கையை ஊன்றிக் கொண்டு இருக்கையில் இருந்து நிமிரலாம் என்று நினைத்து, வேண்டாம் என்று இருந்து விட்டேன். வேண்டாம்... உடற்பயிற்சி அல்ல. ஓய்வுதான் எனக்குத் தேவை. ஓய்வைப் புரிந்துகொள்ளவில்லையென்றால் களைப்புதான் உண்டாகும். பரவாயில்லை. என்னுடைய வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டன. மேஜை சுத்தமாக இருந்தது. நாள் முடிய ஆரம்பித்திருக்கிறது. கடிகாரத்தில் மணி மூன்றரை. காலண்டரில் தேதி பதினெட்டு. நாளை ஞாயிற்றுக் கிழமை. இனி வெயில்தான்.

வெயில்...

நான் நாற்காலியை விட்டு எழுந்து, வளையத்தில் இருந்து தொப்பியை எடுத்துத் தலையில் வைத்து, விருந்தாவன் கொண்டு வந்த விளையாட்டு பொம்மை இருந்த பெட்டியை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் செல்லும் பாதை வழியாக நடந்தேன்.

நான் தூரத்தில் ஒரு இடத்தில் ரெயில்வே லைனைத் தாண்டிச் செல்ல வேண்டும். அதன் வழியாக ஒரு எஞ்ஜின் ஆறு ஏழு வேகன்களை இழுத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அதன் சத்தம் இங்கு கேட்கவில்லை. ஒவ்வொரு வேகனும் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் வெயில் பட்டு அதில் இருந்த பொருள் ஒரு மின்னலைப்போல ஒளிர்ந்தது. எல்லா வேகன்களிலும் ஒரே பொருள்தான் ஏற்றப்பட்டிருந்தது. அப்பால் இருக்கும் தொழிற்சாலையில் தயாரான ஏதோ உற்பத்திப் பொருள். அருகில் இருந்திருந்தால் தெரிந்திருக்கும். பரவாயில்லை. அவை அனைத்தும் கடந்து போவதற்குள் நான் மருத்துவமனைக்குச் செல்லும் திருப்பத்தில் திரும்பி விட்டிருந்தேன். மருத்துவமனைக்குச் சென்றால், காலையில் காயம் பட்ட மனிதனின் நிலைமையைத் தெரிந்து கொள்ளலாம். டாக்டரிடம் கேட்க வேண்டும்.

எங்கு தவறு நடந்திருக்கும்? ஒரு ஆதாரமும் இல்லை. பாவம் மனிதன். ரத்தம் சிந்தி, ஒடிந்தோ நசுங்கியோ போன உறுப்புகளுடன் படுத்திருப்பான். தலையில் அடி பட்டிருந்தால் உணர்வுகள் இல்லாமல் போகும். அதிர்ச்சியால் ரத்தக் குழாய்களில் ஏதாவது வெடித்திருந்தால், வாயிலும் மூக்கிலும் ரத்தம் வரும். பெரிய விபத்துகளில் குருதி இழப்பால்தான் பல நேரங்களிலும் காயம் பட்டவர்கள் மரணத்தைத் தழுவுகிறார்கள்.

கம்பெனியின் மருத்துவமனைக்கு முன்னால் ஒரு சிறிய தோட்டம் இருக்கிறது. இன்று காலையில் தோட்டக்காரன் காட்டிய மலர்கள் எல்லாவற்றையும் அங்கு பல பாத்திகளிலும் நான் பார்த்தேன். நான் அவற்றின் பெயர்களை நினைவுபடுத்திப் பார்க்க முயற்சித்து, வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.

டாக்டரின் பரிசோதனை அறைக்கு முன்னால் நான் நின்றிருந்தேன். பின்னால் இருபது படுக்கைகள் கொண்ட வார்டு. அதை நான் பார்த்ததில்லை. பரிசோதனை அறையிலும் க்ளினிக்கிலும் என்னுடைய வேலைகள் முடிந்துவிடும். நான் பரிசோதனை அறையின் ஓரத்திலிருந்த வெயிட்டிங் அறைக்குள் நுழைந்து நேராக நாற்காலியில் போய் உட்கார்ந்தேன். நான்கு மணி ஆவதற்கு இன்னும் நேரம் இருந்தது.

இங்கு இப்படிக் காத்திருக்கும்போது ஒவ்வொரு முறையும் என்னுடைய கவனத்தை ஈர்ப்பது அறையின் மூலையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு நவீன சிற்பம்தான். இரும்பாலான ஃப்ளாட், தகடு, கம்பி, ஆங்கிள் ஆகியவற்றால் வெல்ட் செய்து உண்டாக்கப்பட்டது அது. எதற்காக சிற்பி அதை அப்படி உண்டாக்கியிருக்கிறார் என்று நான் ஆச்சரியப்படுவேன். அந்தக் காலத்தில்தான் மனிதர்கள் இப்படியெல்லாம் செய்திருக்கிறார்கள். கல்லை, மரத்தை, உலோகத்தைக்கூட உருக்கி, அடித்து, சரி செய்து வடிவப்படுத்தி இருக்கிறார்கள். இப்போது அப்படிப்பட்ட சிரமமான வழிகளை யார் ஏற்றுக் கொள்கிறார்கள்? எல்லாவற்றையும் தூள் தூளாக்கி, உருக்கி, திரவமாக மாற்றி, மோல்டுகளில் ஊற்றி, காஸ்ட் செய்வதுதான் இப்போதைய பாணி. எளிதாக யாரும் செய்யலாம். ஒரே வடிவமைப்பில், எந்தவொரு வித்தியாசமும் இல்லாமல் எவ்வளவு எண்ணிக்கையில் வேண்டுமென்றாலும் உண்டாக்கலாம். சொல்லப்போனால்- அந்த வெறும் சிரமத்தின்மீது கொண்ட ஆர்வத்தால் மட்டுமா அந்த மனிதர் இதைச் செய்தார்? எனக்குப் புரியவில்லை. புரியாதது என்ற ஒன்று அங்கிருந்த எல்லாவற்றிலும் கலந்து விட்டிருந்தது. ஜன்னல் வழியாகத் தோட்டத்தையும், அங்கிருந்த பெயர் தெரியாத மலர்களின் புரியக் கூடிய அழகையும் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவற்றின் அழகு என்னிடம் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வை உண்டாக்கியது.

அப்படியே எவ்வளவு நேரம் நான் உட்கார்ந்திருப்பேன்? தூங்கிவிட்டேன் என்று நினைக்கிறேன். டாக்டரின் "ஹலோ?" என்ற சத்தம்தான் என்னை அந்தப் புரியாத தூக்கத்தில் இருந்து மீளச் செய்தது. "மன்னிக்கணும். ஒரு நோயாளியின் நிலைமை கொஞ்சம் ஆபத்தானது''- அவர் சொன்னார்: "நான் ஒரு பதினைந்து நிமிடங்களில் வருகிறேன். இதோ.... இவற்றைப் பார்த்துக் கொண்டிருங்க...'' ஷெல்ஃபில் இருந்து கொஞ்சம் படங்கள் போட்ட பத்திரிகைகளை அவர் எடுத்து என்னிடம் தந்தார். "இல்லாவிட்டால் ஓய்வு வேண்டுமென்றால், இதோ இங்கே போங்க... என் அறைக்கு. இங்கே ஒரு ஈஸி நாற்காலி இருக்கு.''

"பரவாயில்லை டாக்டர். இந்த வெப்பம்தான்...''- நான் சொன்னேன்: "தாங்க முடியாத காலநிலை. மனிதனைத் தளர்வடையச் செய்யுது.'' அவர் அதைக் கேட்கவேயில்லை. படங்கள் போட்ட பத்திரிகைகளுடன் அவர் என்னை கையைப் பிடித்து அவருடைய அறைக்கு அழைத்துச் சென்றார்.

டாக்டரின் ஈஸி நாற்காலியில் அமர்ந்து நான் பத்திரிகைகளின் பக்கங்களைப் புரட்டினேன். கனமான ஆர்ட் பேப்பரில் கண்களில் சிறிதளவில்கூட தொந்தரவு உண்டாக்காத அழகான வண்ணங்களில் அச்சடிக்கப்பட்ட படங்கள். உயரத்தில் இருக்கும் நீலநிறத்தில் பறந்து கொண்டிருக்கும் ஆகாய விமானங்கள், பெரிய அளவில் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள், டூத் பேஸ்ட், சிகரெட், மார்ட்டினி, சிரித்துக்கொண்டிருக்கும் முகங்கள், விரிந்த கண்கள், இசை, மகிழ்ச்சி, வெற்றி... பதினைந்து நிமிடங்கள்.

டாக்டர் வரவில்லை- இந்தப் பதினைந்து நிமிடங்களுக்குள். அந்த நோயாளி இறந்திருக்கலாம். அல்லது- இறக்காமலும் இறப்போமா என்று தெரியாமலும் படுத்திருக்கலாம். இப்போது நான் எழுந்து பத்திரிகைகளை மடித்து வைத்துவிட்டு அறைக்குள்ளேயே சுற்றி நடந்தேன். சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த ஒரு மருந்து கம்பெனியின் காலண்டரில் இருந்த படத்தைப் பார்த்தேன். அந்தக் காலத்தில் வைத்தியர்கள் மகரிஷிகளாக இருந்த காலத்தில் ஒரு மகரிஷி தன் ஆசிரமத்தில் செய்யும் சிகிச்சையைக் காட்டும் படம். சீடர்கள் நோயாளி தப்பித்துச் செல்ல முடியாத மாதிரி, அவனுடைய கை, கால், தலை ஆகியவற்றை அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் காலண்டரைப் பார்ப்பதை விட்டுவிட்டு, பிறகும் நடந்தேன். இறுதியில் ஷெல்ஃபில் இருந்து "க்ளினிக் கல் மெத்தேட்ஸ்" என்ற ஒரு புத்தகத்தை எடுத்து மீண்டும் நாற்காலியில் வந்து உட்கார்ந்தேன்.

வாழ்ந்து கொண்டிருக்கும் நோயாளிகளைப் பார்த்தும் படித்தும் சிகிச்சை செய்தும் கிடைக்கக்கூடிய அறிவை ஆதாரமாகக் கொண்ட சிகிச்சை முறைக்கு க்ளினிக்கல் முறை என்று கூறுகிறார்கள்.


நூலை எழுதியவர் அதற்கு எக்ஸ்பெரிமென்ட் மற்றும் அகாடமிக்கான முறைகளைப் பற்றிய உன்னத விஷயங்களை விவரிக்கிறார். ஒவ்வொரு நோய்க்கும் அதன் அடையாளங்கள் மட்டுமல்ல- சூழ்நிலைகளும் இருக்கின்றன. அதனால் அடையாளங்கள் தொடக்கமோ முடிவோ அல்ல. அதே நேரத்தில் ஒவ்வொரு நோயும் அடையாளத்தை வைத்தே கண்டுபிடிக்கப்படுகின்றன. அவை அதன் தொடக்கமான சூழ்நிலைகளுக்கும் இறுதியான நோய்க்குமான கதவுகளைத் திறக்க உதவுகின்றன. அனுபவத்தில் இருந்து எடுத்த கதைகளையும் நிறைய நோயாளிகளின் படங்களையும் கொண்டு அவர் பக்கங்களை நிறைத்திருந்தார். அவலட்சணமாகவும் வீங்கிப் போயும் இருக்கும் முகங்களும் உடல்களும்... மங்கோலிஸம் என்ற நோய் பாதித்த மனிதனின் கண்கள் இரு பக்கங்களிலும் மேல் நோக்கிச் சாய்ந்தும் மூக்கும் காதுகளும் சப்பிப் போயும் சிறிதாகவும் நாக்கின் நுனி நீட்டிக் கொண்டும் இருக்கின்றன. டெட்டனஸ் நோயாளியின் முக வெளிப்பாடு, பாதி மூடப்பட்ட கண்களும் வீங்கிய கன்னங்களும் ஒட்டிப்போன உதடுகளும்... இவற்றுடன் அந்த மனிதன் ஒரு ரகசியம் நிறைந்த புன்னகையுடன் இருப்பதைப்போல இருந்தது. டீ-ஹைட்ரிஸம், மைக்ஸோடிமா, ஹைப்பர் தைராடியிஸம். நிமிர்ந்து நிற்க முடியாமல் இருக்க வேண்டும்- ஒரு மனிதன் வில்லைப்போல வளைந்து, உடலை பீடத்தில் ஊன்றிய கைகளில் தாங்கியவாறு நின்று கொண்டிருக்கிறான். அப்படியே நின்று கொண்டு அவன் நீண்டகாலம் வாழ்ந்தாலும் வாழலாம். ஹோப்கின் ஹோக்கின்ஸ் என்ற ஒரு வெயின்ஸ்காரன் 1754-ஆம் ஆண்டில் தன்னுடைய பதினேழாவது வயதில் முதுமையும் நரையும் வந்து இறந்துவிட்டான். அவனுக்குச் சாகும்போது பன்னிரண்டு ராத்தல் மட்டுமே எடை இருந்தது. வாழ்க்கையில் எந்தச் சமயத்திலும் பதினேழுக்கு மேலே இருந்ததில்லை. மரணத்திற்குப் பிறகு அவனை லண்டனில் ஒரு காட்சிப் பொருளாக வைத்திருக்கிறார்கள். ஹோப்கின் ஹோப்கின்ஸ் சாப்பிட்டதில்லை. அவனுக்குப் பசி இருந்தது. ஆனால் வெளியே இருக்கும் உணவுப் பொருட்கள் எதையும் ஏற்றுக் கொள்ள அவனுடைய ஜீரண உறுப்புகளால் முடியவில்லை. அதிக உணவு அவனுக்கு அதிக வளர்ச்சியாக இருக்கவில்லை. அதனால் அவன் தன்னுடைய உடலுக்குள் அடைந்து கிடந்த சொந்த சதைகளை உணவாக ஆக்கி வாழக் கட்டாயப் படுத்தப்பட்டான். பாவம் ஹோப்கின்ஸ்! தான் செயல்படுவதாகவும் வளர்ந்து கொண்டிருப்பதாகவும் பெரியவனாக ஆவோம் என்றும் அவன் நம்பினான். ஆனால் தன்னைத்தானே அழித்துக் கொண்டு தான் நாம் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்று அவனுக்குத் தெரியாது. தன்னுடைய அழிவுடன் சேர்ந்த இருப்புத்தான் தனக்கு இருக்கிறது என்ற விஷயம் அவனுக்குத் தெரியாது. செயல்படுவது என்றால் தான் அழிவது என்பதுதான் அர்த்தம் என்று அவனுக்குத் தெரியாது. வாழ்வது என்றால் இறப்பது என்று அவனுக்குத் தெரியாது. ஹோப்கின் ஹோப்கின்ஸ் மிகப்பெரிய சுயநலவாதியாக இருந்தான். டிப்ரீஸியேஷன் மட்டுமே அறிந்திருக்கும் ஒரு மெஷின். அதனால் அவன் அரண்மனை என்று நினைத்துக் கட்ட முயற்சித்த அவனுடைய வீடு அவனுக்கே கல்லறையாகிவிட்டது...

டாக்டர் கதவுக்கருகில் நின்றுகொண்டு மன்னிப்புக் கேட்டவாறு உள்ளே வந்தார். எனக்கு ஏதாவது உடல்நலக் கேடு உண்டானதா? நான் உட்கார்ந்து சோர்வடைந்து விட்டேனா?

"டாக்டர், படர்ந்து பிடிக்கும் ஒரு கொடிய நோய்க்கு நடுவில் மாட்டிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை நினைத்துப் பாருங்கள்''- நான் சொன்னேன்: "கடந்து போகும் ஒவ்வொரு மணி நேரமும் அவனுக்கு விலைமதிப்பு உள்ளது. பொக்கிஷத்தைப் போன்றது. அதற்கு மாறாக நோயால் பாதிக்கப்பட்ட ஒருவனை நினைத்துப் பாருங்கள். நோயுடன் இருக்கும் ஒவ்வொரு மணி நேரமும் அவனுக்கு இழப்பாகிறது. வெறுப்பைத் தரும் இந்த ஆப்டிமம் பாயிண்ட்டின் எந்தப் பகுதியில் நான் இருக்கிறேன் டாக்டர்? தயவு செய்து சொல்லுங்க...''

"அந்தக் கொடிய நோய் என்னவாக இருக்கும்?''- அவர் தன்னுடைய வாடிய முகத்தில் ஒரு புன்சிரிப்பைக் கொண்டு வருவதற்கு வலிய முயற்சித்துக் கொண்டே, நாற்காலியில் வந்து உட்கார்ந்தார். கையில் இருந்த பெரிய மஞ்சள்நிற உறையை மேஜைமீது வைத்துவிட்டு, அதன்மீது தன்னுடைய இரண்டு கைகளையும் ஊன்றித் தலையை ஆட்டிக்கொண்டே தொடர்ந்தார்: "இல்லை. ஒரு கொடிய நோய்க்கான பிரச்சினை நிச்சயமாக இல்லை. எது எப்படி இருந்தாலும் இருப்பவை அனைத்தும் குறிப்பிடத்தக்க கேஸ்கள்தான்.''

"ஆமாம்... அங்குதான் உங்களுக்குத் தவறே உண்டாகிறது. அதைக் கூறுவதற்கான சுதந்திரத்தை எனக்குத் தாருங்கள். என்னைப் பரிசோதனை செய்த முதல் ஸ்பெஷலிஸ்ட்டின் முன்னால் நடந்ததைப்போல நான் கட்டுப்பாட்டை இழந்து விட்டேன். அகாடமிக்கோ எக்ஸ்பெரிமென்டலோ ஆன விஷயங்களில் இருந்து நீங்கள் எல்லாரும் ஒருமுறை வெளியே வர வேண்டியதிருக்கும். வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்த்து படிக்க வேண்டியதிருக்கும். ஒருவரை அல்ல- ஆயிரக்கணக்கான பேர்களைக் கடந்து போகும் எல்லாரும் பட்டாளத்தில் இருப்பதைப்போல ஒரே தாளகதியில் நடந்து செல்கிறார்கள் என்பது, ஒரு குருடனுக்குத்தான் தெரியும் என்பதுதான் வருத்தமான விஷயம். தாளகதியில் உண்டாகக்கூடிய தவறைச் சுட்டிக்காட்ட, அறிவில்லாத சிறுவன் தேவைப்படுகிறான் என்ற விஷயமும்தான். எங்கோ ஒரு கொடிய நோயின் அணுக்கள் ஒளிந்திருக்கவில்லை என்று யாருக்குத் தெரியும் டாக்டர்? அவை நம்மீது பாய்ந்து விழ நேரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று? மனிதர்கள் ஒவ்வொருவராக இறந்து விழலாம்- விஷத்தால் பாதிக்கப்பட்ட லோக்கஸ்ட்டுகளைப்போல. கூடாகிப் போன நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு, நின்றுபோன இதயத்தைத் துடிக்க வைக்க முடியாமல் வழியிலும் வீட்டிலும் தொழிற்சாலையிலும்... நாடுகளும் பெரிய நிலப் பகுதிகளும் ஆட்கள் இல்லாமல் போகும்... ரத்தமும் மாமிசமும் உள்ள மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருந்த இடத்தில் துரும்பு பிடித்த தொழிற்சாலைகள் நின்று கொண்டிருக்கும். அதன் முதல் இரை நானாக இருப்பேனோ? நீங்கள்தான் அதைக் கண்டுபிடிக்கப் போகிற முதல் டாக்டராக இருப்பீர்களோ? உங்களுடைய உழைப்பிற்குப் பிரதிபலனாக மருத்துவ விஞ்ஞானம் அதற்கு உங்களுடைய பெயரைத் தரும். ஓ... மன்னிக்கணும் டாக்டர். நான் வருத்தப்படுகிறேன். தன் சொந்தப் பெயரை ஒரு நோய்க்குக் கொடுப்பது என்பது யாரும் விரும்பக்கூடிய ஒரு விஷயம் அல்ல. எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் எவ்வளவு சக்தி படைத்ததாகவும் யாராலும் கீழ்ப்படியச் செய்ய முடியாததாகவும் இருந்தாலும்... டாக்டர் நான் ஒரு விஷயம் கேட்கட்டுமா? ஹோப்கின் ஹோப்கின்ஸ் என்ற மனிதனின் நோயின் பெயர் என்ன?''

"ஹோப்கின் ஹோப்கின்ஸா?''- ஹோப்கின் ஹோப்கின்ஸின் கதை இருந்தப் பக்கத்தில் வைத்த விரலுடன், நான் அப்போதும் கையில் பிடித்திருந்த "க்ளினிக்கல் மெத்தேட்ஸ்" என்ற நூலையே டாக்டர் வெறித்துப் பார்த்தார்.

"ஓ... பரவாயில்லை... பரவாயில்லை... என்னை மன்னிச்சிடுங்க. நான் என்னவெல்லாமோ கூறிவிடுகிறேன்''- புத்தகத்தை மேஜைமீது வைத்துவிட்டு, நடுங்கிக் கொண்டிருக்கும் கைகளுடனும் தொடர்ந்து பேசியதால் மூச்சுவிட முடியாமல் திணறிக் கொண்டும் நான் உட்கார்ந்தேன்.


டாக்டர் என்னை ஓய்வெடுக்க அனுமதித்தார். அவருடைய கைகள் மேஜைமீது இருந்த மஞ்சள்நிற உறையில் உயிரற்றவைபோல பதிந்திருந்தன. முகத்திலிருந்து உணர்ச்சிகள் இல்லாமல் போயிருந்தன. அமைதியும் உறுதியும் நிறைந்த குரலில் என் முகத்தைப் பார்த்துக் கொண்டே அவர் கூற ஆரம்பித்தார்: "உங்களுடைய மன ஓட்டத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் இருப்பது போன்ற நிலைமையில் இந்த மனபயம் சாதாரணமாக இருக்கக் கூடியதுதான். ஆனால், ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.'' அவருடைய குரல் திடீரென்று பெரிதானது. "உங்களுடைய விஷயத்தில் நாங்கள் எந்தச் சமயத்திலும் அலட்சியத்தைக் காட்டியது இல்லை. உங்களை நான் எந்த நேரத்திலும் சாதாரணமாக எடுத்துக் கொண்டதில்லை. உங்களை நாங்கள் எத்தனை வருடங்களாகப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்று உங்களுக்குத் தெரியாது.'' தொடர்ந்து மீண்டும் தாழ்ந்த குரலில் கூறினார்: "அது மட்டுமல்ல. எங்களுடைய சோதனைகள் எதுவும் தோல்விகளில் முடிந்ததில்லை. அவை எதையும் காட்டவில்லை என்று உங்களுக்குத் தோன்றுகிறது. உண்மை வேறு. அவை ஒவ்வொன்றும் ஒரு விஷயத்தை மேலும் மேலும் தெளிவுபடுத்தியது. இந்த ரிப்போர்ட்கள் அனைத்தும் பிறகும் அதையேதான் கூறுகின்றன. உங்களிடம் வெளி உலகம் திணித்தது என்றோ, அந்த உலகத்துடன் கொண்ட உறவால் வந்து சேர்ந்தது என்றோ எதுவும் இல்லை. உங்களிடம் மற்ற மனிதர்களிடம் இல்லாத எதுவும் இல்லை. ட்யூமர்களோ டிஷ்யூ மாறுதல்களோ இல்லை. நோய் அணுக்கள் இல்லை. காயங்கள் இல்லை. அல்சர் இல்லை. உங்களிடம் இருப்பது ஒரு நோய் அல்ல. உங்களிடம் இருப்பது ஒரு குறை. இயலாமை, இல்லாமை, பற்றாக்குறை...''

அவருடைய குரல் குறைந்து குறைந்து இல்லாமல் போனது. எனக்கு நேராக இருந்த பார்வை கூர்மையாகி, எனக்குள் திருகு உளிகளைப்போல ஆழமாக இறங்க ஆரம்பித்தது. நான் நடுங்கிப் போய்விட்டேன். ஒரு மந்திரவாதியைப்போல பிரம்பை எடுத்து அவர் என்னை இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் அடிப்பாரோ? வெளி உலகத்தில் இருந்து வராதது, எனக்குள்ளேயே இருப்பது... அவருடைய விரல் எனக்கு நேராக நீண்டு கொண்டிருந்தது. வாடா, வெளியே வாடா, உன் திருட்டுத்தனத்தை இன்று நான் வெளியே கொண்டு வருவேன்!

"என்னிடம் அப்படி என்ன இருக்கு டாக்டர்? எனக்கு என்ன?''- நான் குனிந்து மன்னிப்புக் கேட்கிற மாதிரி கேட்டேன். நான் கீழ்ப்படிந்து கொண்டிருந்தேன். "அப்படி இருக்காது டாக்டர். நான் வயதில் இளையவன். எனக்கு விபத்துகள் எதுவும் நடந்தது இல்லை. எனக்குக் கெட்ட பழக்கங்கள் இல்லை. நான் கம்பெனிக்கு எதிராக எதுவும் செய்தது இல்லை. நான் ஒரு சட்டத்தையும்... டாக்டர்!''

"உங்களுடைய குற்றம் அல்ல. சாதாரணமாக அது இருக்கக் கூடியதுதான். என் மகன் மட்டும்தான் இந்த பரேடில் சரியாக மார்ச் பண்ணி நடக்கிறான் என்று முன்பு ஒரு தாய் கூறவில்லையா?''- டாக்டர் மீண்டும் முகத்தில் ஒரு புன்னகையைக் கொண்டுவர முயற்சித்தார். அவருடைய குரலில் மீண்டும் கனவு வந்து சேர ஆரம்பித்திருப்பதைப்போலத் தோன்றியது. "தனக்குக் குறைபாடுகள் இருக்கின்றன என்று உலகத்தில் உள்ள ஒருவனும் ஒப்புக் கொள்ள மாட்டான். உங்களுக்கு இந்த கம்பெனியுடன் ஒத்துப்போக முடியவில்லை. அதனால் நீங்கள் ஒவ்வொரு நோய்களையும் கண்டுபிடிக்கிறீர்கள். காலநிலையைப் பழிக்கிறீர்கள். இப்படி இருப்பது ஒரு நோய் அல்ல, நண்பரே. இது வளர்ச்சியாகிறது. இது வளர்ச்சிக்கான காலநிலை. வளரும் மனிதன் தனக்கென்று ஒருகால நிலையை உண்டாக்குகிறான். அதற்கேற்றபடி அவன் வளர வேண்டும். நீங்கள் வெப்பத்தின்மீது பழியைச் சுமத்துகிறீர்கள். நெருப்பில் உருகாமல் உங்களால் உலகத்தை காஸ்ட் செய்ய முடியுமா? நீங்கள் அதிகரிக்கச் செய்த நெருப்பால் நீங்கள் தன்னைத்தானே உருக்கி வடிவத்தை அடைகிறீர்கள். அதற்கேற்றபடி செயல்படுகிறீர்கள். உஷ்ணம்தான் ஒரு இயந்திரத்தைச் செயல்பட வைக்கிறது என்பதை உங்களிடம் நான் கூற வேண்டுமா? சொல்லுங்க. ஒரு இயந்திரத்தின் மேஜிக்தான் என்ன? அதன் பாகங்களுக்கு அதன் சக்திமீது வைத்திருக்கும் நம்பகத்தன்மையும் கடுமையான உழைப்பும் நீக்கு போக்கு இல்லாத பணிவும்...'' சற்று அவர் நிறுத்தினார். தான் அமர்ந்திருந்த இடத்தைவிட்டு எழுந்து வந்து என்னுடைய தோளில் கையை வைத்துக்கொண்டு அவர் தொடர்ந்தார்: "இதற்கு அர்த்தம் உங்களை நாங்கள் கைவிட்டு விட்டோம் என்பதல்ல. எங்களைப் போன்ற டாக்டர்களுக்கு இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. மருந்தும் ஆபரேஷன் கத்தியும். இன்னும் ஒரு சோதனையும் நடத்த வேண்டியிருக்கிறது- முடிவு என்பதற்காக. நாளை மறுநாள் நீங்கள் வேறொரு இடத்திற்குச் செல்கிறீர்கள். நாளை மறுநாள்- திங்கட்கிழமை.''

தொடர்ந்து அவர் புதிய ஸ்பெஷலிஸ்ட்டின் கார்டை என்னிடம் தந்தார். அவருடைய சேம்பருக்குச் செல்லக்கூடிய பேருந்து எண்ணையும் எங்கு இறங்க வேண்டும் என்பதையும் இறங்கிய பிறகு எந்த வழியாக நடக்க வேண்டும் என்பதையும் எனக்கு விளக்கிக் கூறினார். நான் எதுவும் கூறவில்லை. அவர் கூறியவை அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். எழுந்தபோது எக்ஸ்ரே ஃபிலிம்களும் அதன் ரிப்போர்ட்டும் வைக்கப்பட்டிருந்த மஞ்சள்நிற உறையை அவர் என் கையில் தந்தார். நான் அதை வாங்கினேன். அப்போதும் மேஜைமீதிருந்த புத்தகத்தை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதைக் கண்டதும் அவர் அதை எடுத்து ஷெல்ஃபில் அது இருந்த இடத்தில் வைத்தார். அதற்குப் பிறகும் நான் எதுவும் கூறவில்லை. எதுவும் பேசாமல் எக்ஸ்ரே ஃபிலிம்களை வாங்கிக் கொண்டு, மகனுடைய விளையாட்டு பொம்மை இருந்த பெட்டியை எடுத்துக்கொண்டு நான் நடந்தேன். வாசலை அடைந்தபோது அவர் மீண்டும் பின்னால் இருந்து கூறினார்: "நான் ஒரு விஷயத்தை மறந்தே விட்டேன். மேனேஜிங் டைரக்டர் உங்களைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார். தாமதமானாலும் உங்களுக்காக அலுவலகத்தில் காத்திருப்பதாகவும் பார்த்த பிறகே போவதாகவும் சொன்னார்.''

பார்க்க வருபவர்களின் ஓய்வறையையும் சிற்பத்தையும் வாசலில் இருந்த பூக்களையும் தோட்டத்தையும் கடந்து நான் பாதையின் வழியாக நடந்தேன். வெயில் சாய்ந்திருக்கிறது. எனினும் வெப்பம் இருந்தது. நான் பாதையின் வழியாக நிழல் இருந்த பக்கமாக நகர்ந்து நடந்தேன். தளர்ச்சி என்னுடைய கால்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தது. தடுமாறி விழாமல் இருப்பதற்காக நான் கீழே பார்த்தவாறு நடந்தேன். எல்லாரும் ஏதாவது ஒன்றுடன் சம்பந்தப்பட்டு இருக்கின்ற சுறுசுறுப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த தொழிற்சாலையில், இங்கு தனியாக ஒரு பாதையின் வழியாக நான் கீழே பார்த்தவாறு நடந்து போய்க் கொண்டிருந்தேன். செங்கல் விழுந்து காயமான அந்தக் கூலிக்காரனைப் பற்றி நான் விசாரிக்காமல் விட்டுவிட்டேன்.


இறக்காமலும் இறந்து விடுவோமோ என்று தெரியாமலும் படுத்திருக்கும் அந்த நோயாளியைப் பற்றியும் நான் விசாரிக்கவில்லை. ஒருவேளை செங்கல் விழுந்து காயம்பட்டவனாகத்தான் இருக்கும் அது. அவன் இந்த நேரத்தில் உலகத்தில் இல்லை என்று வரலாம். நான் நுழைந்தபோது அவன் இருந்தான். மருத்துவ மனைக்குள் சென்றபோது இருந்த நான் இப்போது இருக்கிறேனா?

என் கையில் இருந்த அந்த எக்ஸ்ரே ஃபிலிம்களில் என்னுடைய மாறிய படம் இருக்கிறது. எனக்கு அதன் மொழி புரியவில்லை. ஆனால் கறுத்ததும் வெளுத்ததுமாக இருக்கும் அடையாளங்களில் அது என்னை உள்ளவை, இல்லாதவைகளுடன் பிரித்திருக்கிறது. அதற்கு முன்னால் இருக்கும் எல்லாவற்றையும் இந்த எக்ஸ்ரே இயந்திரம் இரண்டாகப் பிரித்துத் தருகிறது. மேன்மைகளையும் குறைவுகளையும் நல்லதையும் கெட்டதையும் புண்ணியத்தையும் பாவத்தையும் வெற்றியையும் தோல்வியையும் நட்பையும் பகையையும் பழையதையும் புதியதையும் கிழக்கையும் மேற்கையும் கிறிஸ்துவிற்கு முன்பையும் கிறிஸ்துவிற்குப் பின்பையும்... டாக்டர் எதையோ கூறட்டும். திங்கட்கிழமை நான் ஏதோ பேருந்தில் ஏறி எங்கேயோ போகிறேன். உலகம் இடிந்து விழட்டும். இங்கு நான் உருவாக்கப்பட்டுவிட்டேன். என்னைப்போல ஒவ்வொருவரும். தெளிவாக வேறுபாடு இல்லாமல். பேட்டர்ன் மேக்கர், டைஸிங்கர், டர்னர், மில்லர், அக்கவுண்டன்ட், எஞ்ஜினியர், டாக்டர்- ஒவ்வொருவனும் அவனவனின் அடையாளங்களை உயர்த்தித் தங்களை வெளிப்படுத்துகின்ற கறுத்ததும் வெளுத்ததுமாக இருக்கும் எக்ஸ்ரே ஃபிலிம்களை மார்பில் சேர்த்துப் பிடித்துக் கொண்டு, அடித்துச் சலவை செய்வதற்காக உட்பகுதி வெளிப்பகுதியான தலையணையைப்போல வரிசையாக நின்று கொண்டிருக்கிறார்கள்.

ஒருவனுக்கும் அவனுடைய எல்லையை விட்டு தாண்டிச் செல்லும் அதிகாரம் இல்லை. திறமை இல்லை. ஆசை இல்லை.

கடக்கக்கூடாத இடத்தை நான் எதற்காகக் கடக்கிறேன்? தெரிந்து கொள்ளக் கூடாததை ஏன் கறுத்த நிறத்தில் அடையாளப்படுத்தக் கூடாது? எனக்கு அப்பால் இருப்பவற்றுக்கு நேராக நான் கண்களை மூடிக் கொள்ள வேண்டும். எனக்கு வந்ததை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நான் என்ன படிக்க வேண்டும் என்பதை என்னுடைய தந்தையும் தாயும்தானே முடிவு செய்தார்கள்? நான் நல்ல ரேங்குடன் தேர்ச்சி பெற்றவுடன், ஜம்னாதாஸ் ஆஜ்மீரியா இன்டஸ்ட்ரீஸ் எனக்கு எந்தப் பேருந்தைப் பிடிக்க வேண்டுமென்பதையும் எங்கு இறங்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுக் கடிதம் அனுப்பியதே! எனக்குக் கிடைத்த ஆர்டர்கள் எல்லாவற்றிலும் அவற்றுக்குத் தேவைப்படும் ஸ்பெஸிஃபிகேஷன்கள் இருந்தன. நான் கேட்பதற்கு எதுவும் இல்லை. நான் எதையும் கேள்வி கேட்கவில்லை. யாருக்கு நேராகவும் வெடிகுண்டு வீசவில்லை. விழுந்து கிடக்கும் சரீரங்களைப் பொறுக்கி எடுக்க முயற்சிக்கவில்லை. பசியின் நெருப்பை அறியவில்லை. அபயம் தேடுபவனின் வேதனையைப் பார்க்கவில்லை. வெளி உலகத்தைப் பற்றி சிறிதும் குறைபட்டுக் கொள்ளவில்லை. வெளி உலகம் என்னிடம் நோய்கள் எதையும் ஊசி போட்டுச் செலுத்தவில்லை. எந்த அளவிற்கு எளிதாக இருந்தன என்னுடைய பாதைகள்! எந்த அளவிற்கு எளிமையாக இருந்தன என்னுடைய நாட்கள்! பிறகு எதற்கு இந்த ஃபிலிம்கள்மீது இந்தக் கோபம்...

சார்ட்டையும் க்ராஃபையும் பார்த்து, ப்ரோக்ராம் தயார் பண்ணி, ப்ரோக்ராமுக்கு ஏற்றபடி திறமை உள்ளவரும் நமக்குத் தேவையானவற்றை நம்மைவிட நன்றாகப் புரிந்து கொள்ளக் கூடியவருமான ஒரு சேர்மனுக்குப் பின்னால் ஒன்றாக அணி திரண்டு நின்று... இடக்காலை எடுத்து வைத்து நடைபோட்டு, வளையத்தைப்போல வளைந்து, வளையாதபோது ஹவில்தார் மேஜரைப்போல வளையாமல் இருந்து... நல்ல உடல் நலத்துடன், மனைவியை சந்தோஷப்படுத்தி, மகனை வளர்த்து, "ஹௌ டூ டேக் கேர் ஆஃப் யுவர்ஷெல்ஃப்" என்பதைப் புரிந்துகொண்டு, பத்திரிகை படித்து தெரிய வேண்டியவற்றைத் தெரிந்து அறியக் கூடாததை மறந்து, மனதை சஞ்சலப்படுத்தும் விஷயங்களுக்கு எதிராக நின்று, எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி, நல்ல விஷயங்களை மட்டுமே கண்டு, எல்லாம் ஒழுங்காக இருக்கும் ஒரு உலகத்தில் ஒரு சிம்ஃபனியில் இருப்பதைப்போல மிதந்து... தேடலின் வழியில் அவரைக்கொடி கொம்பில் படர்வதைப்போல வளர்ச்சிக்கான கொம்பில் முதிர்ந்த பழமாகவும் இறுதி வழித் தோன்றலாகவுமாக இருந்துகொண்டு... முழுமையான நிலையில் தொடங்கி, அப்ரீஸியேஷன் இல்லாமல் டிப்ரீஸியேஷன் மட்டுமாகத் தேயவும் வெடிக்கவும் கேடு வரவும் செய்யும்போது மீண்டும் வடிவம் எடுக்க முடியாமல்... உயர்வின் உச்சியிலிருந்து கைப்பிடியை விட்டு, நடுங்கி மனதிற்கு வஞ்சனை செய்து... சொந்த மூளையைப் பொரித்து தக்காளி சாஸும் பச்சை மிளகாயும் கலந்து உண்டாக்கிய உணவுப் பொருளின் சுவையில் மூழ்கி... செயல்படுவது என்றால் அழிவது என்று அர்த்தமாகி... வாழ்வது என்றால் இறப்பது என்றாகி... இறந்தும் அடக்கம் செய்யப்படாமல் கிடக்கும் பிணங்கள்.... சுயநலவாதிகளில் சுயநலவாதியான ஹோப்கின் ஹோப்கின்ஸ் தான் செயல்படுகிறோம் என்றும் வளர்கிறோம் என்றும் பெரிதாக ஆகின்றோம் என்றும் தவறாகக் கணக்கிட்டான். பதினேழாவது வயதில் தான் அரண்மனை என்று கருதிக் கட்டி உயர்த்திய எலும்புக்கூட்டிற்குள் தன்னுடைய பன்னிரண்டு ராத்தல் எடை கொண்ட சரீரத்தை அடக்கம் செய்து கொண்டான். லண்டனில் அது ஒரு காட்சிப் பொருளாக ஆனது...

பாதையில் நடுவில் மார்பில் கையை வைத்துக்கொண்டு நான் பாம்பைப்போல நெளிந்தேன். என்னுடைய வெறுமைத்தனம் எனக்குள் ஒரு சுழல் காற்றைப்போல கிடந்து பிரிந்தது. சுழன்று சுழன்று அது உயர்ந்து போனபோது, நான் எரிந்து அணைந்த சிதையைப்போல தரையை நோக்கி இறங்க ஆரம்பித்தேன். நான் பாதையின் ஓரத்தில் இருந்த மரத்தை எட்டிப் பிடித்து அதில் சாய்ந்து அங்கே உட்கார்ந்தேன். அங்கேயே படுத்தேன். யாராவது என்னுடைய முகத்தில் சிறிது நீரைத் தெளிக்க மாட்டார்களா? யாரும் தெளிக்கவில்லை. அங்கு எந்த இடத்திலும் யாரும் இல்லை. நீரும் இல்லை. எங்கும் காய்ந்து கிடக்கும் வெயில். நான் இந்த வெயிலுக்கு முன்னால் விழுந்திருக்கிறேன்.

போகக்கூடாத இடத்திற்கு நீண்ட என்னுடைய கால்கள்... தெரிந்து கொள்ளக்கூடாததைத் தெரிந்து கொண்ட நான்... நான் வண்ணங்களைக் கலந்து விட்டிருக்கிறேன். என்னுடைய கையை நானே வேகச் செய்திருக்கிறேன். வெயிலில் வளர்ந்த ஒரு காலநிலைக்கேற்ப வளரும் செடியின் கசப்பை நான் அறிந்திருக்கிறேன்.

அந்த வெப்பத்தை எனக்குள்ளிருந்து வெளியே கொண்டு வந்த வியர்வையைக் கொண்டு குளிர வைத்து இறுதியில் நான் எழுந்து நின்றேன். மரத்தை விட்டு என்னுடைய கால்களுக்குச் சுமையை மாற்றினேன். நான் இறக்கலாம். ஆனால் எனக்குப் பிறகும் ஒரு கண்ணி இருக்கிறது. இறப்பதற்கு முன்பு எனக்குப் பிறகு இருக்கும் அந்த கண்ணியை எட்டிப் பிடிப்பதைப்போல நான் நடந்தேன்... நான் மேனேஜிங் டைரக்டரைப் பார்க்க வேண்டும். மேனேஜிங் டைரக்டர் என்னைப் பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.


தாமதமானாலும் எனக்காகக் காத்திருப்பார்.

விழுந்து கொண்டிருக்கும் செங்கற்களுக்குக் கீழே நின்றுகொண்டு தப்பித்த தொழிலாளியைப்போல வியர்த்தும் தளர்ந்து போயும் மேலும் கீழும் மூச்சுவிட்டுக் கொண்டும் நான் மேனேஜிங் டைரக்டரின் வாசல் கதவைத் தட்டினேன்.

வயதானவராக இருந்தாலும் சுறுசுறுப்பான மேனேஜிங் டைரக்டர். எழுந்து நின்று ஒரு காலை உயர்த்தி நாற்காலியில் வைத்துக்கொண்டு யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் உரையாடலுக்கு மத்தியில் அவர் தலையால் வரவேற்று, கையை நீட்டி நாற்காலியில் உட்காரும்படி சைகை காட்டினார். அவருடைய கழுத்திலிருந்து டை தொங்கிக் கொண்டிருந்தது. வெள்ளிக் கம்பிகளைப்போல இருந்த நீளமான தலைமுடி தொங்கிக் கொண்டிருந்தது. மரியாதை உணர்வு காரணமாக இருக்கலாம். உரையாடலை சீக்கிரமே முடிப்பதற்காக அவர் வேகத்தைக் காட்டினார்.

தொலைபேசியைக் கீழே வைத்துவிட்டு அவர் எனக்கு நேராகப் பார்த்துப் புன்னகைத்தார். அப்படியே புன்னகைத்துக்கொண்டே பெல்லை அழுத்தினார். ப்யூனை அழைத்து தேநீர் கொண்டு வரும்படி சொன்னார். பிறகு அவர் அமர்ந்தார்.

"பிறகு... நான் எல்லாவற்றையும் கேள்விப்பட்டேன். நான் மிகவும் வருத்தப்படுகிறேன்''- எங்களுக்கிடையே இருந்த பூ ஜாடியைச் சற்றுத் தள்ளி வைத்து விட்டு, முன்னோக்கி நகர்ந்து எனக்காகக் காத்திருந்த அந்த மனிதர், நேராக விஷயத்திற்கு வந்தார். அவர் என்னைவிட முன்பே எல்லா விஷயங்களையும் அறிந்திருந்தார். எல்லாம் தெரியும் என்ற ஒரு வெளிப்பாடு அவருடைய முகத்தில் நிறைந்திருந்தது. அறியாமை பற்றிய குற்றத்துடன் என் தலை தானே குனிந்தது.

"எது எப்படி இருந்தாலும் நாளை மறுநாள் நீங்கள் ஸ்பெஷலிஸ்ட்டைப் பாருங்க''- அவர் தொடர்ந்து சொன்னார்: "டாக்டரிடம் உங்களுக்கான பரிசோதனையைத் தொடர்ந்து செய்யும்படி நான் கூறியிருக்கிறேன். நாங்கள் உங்களுக்காக செய்ய வேண்டியவை அனைத்தையும் செய்வோம். இதைக் கூறுவதற்குத்தான் உங்களை நான் அழைத்தேன். நீங்கள் உங்களுடைய நல்ல ஆயுள் முழுவதையும் கம்பெனிக்குத் தந்தீர்கள். கம்பெனி உங்களைக் கை கழுவிவிட்டு விடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை. உங்களுடைய கேஸ் சற்று தீவிரமானது. அதனால் கடுமையான மருந்தைச் சாப்பிட வேண்டியது வரலாம். எது எப்படி இருந்தாலும் அதை உங்களுடைய கம்பெனிதானே தருகின்றது!''

இதெல்லாம் யாருக்கும் தெரியாதவை அல்ல. கம்பெனிக்கு நான் தேவைப்படுகிறேன். எங்கள் எல்லாரையும். உண்மையாகச் சொல்லப்போனால் நாங்கள் இல்லாமல் இந்தக் கம்பெனிதான் என்ன? ஒரு நல்ல உற்பத்திப் பொருளின் விலை அதைத் தயாரிப்பதில் செலவழித்த மனித உழைப்பு என்பதுதானே சித்தாந்தம்? ஒவ்வொரு கம்பெனியின் நோக்கமும் உற்பத்திப் பொருட்களுக்கு விலை உண்டாக்கும் அதன் தொழிலாளர்களை கவனித்துப் பாதுகாப்பதுதான். அவர்களை நோய் அணுக்களுக்கு எதிராக ஊசி போட்டும் நோய் வந்தால் சிகிச்சை செய்தும் காப்பாற்றி வளர்க்க வேண்டும். அதற்காக கம்பெனிகள் மருத்துவமனைகளையும் கல்விக்கூடங்களையும் நடத்துகின்றன. கம்பெனியின் உரிமையாளர்களுக்கு லாபம் உண்டாக்கிக் கொடுப்பதற்கு அவர்கள் தேவையாயிற்றே! அவர்களுடைய போர்களில் உயிரை விட்டாவது போரிட்டு வெற்றி வாங்கிக் கொடுப்பதற்கு அவர்கள் வேண்டுமே!

பிறகு எதற்கு மேனேஜிங் டைரக்டர் இதையெல்லாம் என்னிடம் கூற வேண்டும்? இதைக் கூறுவதற்கு எதற்காக என்னை வரவழைத்தார்? எனக்காக அலுவலக நேரம் முடிவடைந்த பிறகும் எதற்காகக் காத்திருக்கிறார்? சார், ஆனால் இது ஒரு நோய் அல்ல. இதற்கு சிகிச்சை இல்லை. பரிசோதனை செய்யச் செய்ய தொடர்ந்து ஒன்றே ஒன்றை மட்டுமே வெளியே கொண்டு வரும் அந்தப் பரிசோதனைகள்தான். நான் தளர்ந்து போயிருக்கிறேன். என்னுடைய உள்ளம் வெறுமையாகிவிட்டிருக்கிறது. என்னால் இனிமேல்...

"என்ன எதுவும் பேசாம இருக்கீங்க? தேநீர் குடிங்க...'' - அவர் என்னை அழைத்தார். ப்யூன் தேநீர் கொண்டு வந்து வைத்ததை நான் பார்க்கவில்லை. ஒருவகையான செயலற்ற தன்மையுடன் நான் தேநீர் கோப்பையை எட்டிப் பிடித்தேன். அதிலிருந்த தேநீரில் மூழ்கினேன்.

என்ன கூறவேண்டுமென்று தெரியாததைப்போல மேனேஜிங் டைரக்டர் மேஜைமீது இருந்த பேப்பர்களைப் புரட்டிக் கொண்டிருந்தார். பூ ஜாடியை எடுத்து வெறுமனே முன்னால் நகர்த்தி வைத்தார். அதில் சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களில் இருந்த மலர்கள் எங்களுக்கு இடையே வந்தன. அந்த மலர்களுக்குப் பின்னால் அவருடைய முகம். உருகிய உலோகத்தைப்போல படிப்படியாக உறைவதையும் அசைவே இல்லாமல் ஆவதையும் நான் பார்த்தேன். சலனங்கள் எதுவும் இல்லாத முகத்திற்குக் கீழே, வேறு யாருடையவோ என்று தோன்றுகிற மாதிரி அவருடைய கைகள் மீண்டும் பேப்பர்கள்மீது செயல்பட்டுக் கொண்டிருந்தன. பூ ஜாடி மீண்டும் முன்னோக்கி நகர்ந்தது. அவருடைய முகம் முழுமையாக மறைந்து விட்டது. ஒவ்வொரு முறையும் தேநீர்க் கோப்பையிலிருந்து குனிந்து நிமிர்ந்தபோது நான், எனக்கும் மேனேஜிங் டைரக்டருக்கும் இடையே அந்த சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களில் இருந்த மலர்களைப் பார்த்தேன். தோட்டத்திலிருந்து காலையில் பறித்தெடுத்த மலர்கள். அவை வாடத் தொடங்கியிருக்கின்றன. மலர்ந்த நாளன்றே வாடும் மலர்கள். அதற்குப் பிறகும் மலர்கள் மலர்கின்ற செடிகள். வெயிலில் வாடாத செடிகள். வெயிலில் மட்டுமே பூக்கும் செடிகள். சென்ற கோடையில் நாங்கள் காடுகளுக்குச் சுற்றுலா போயிருந்தோம். மரங்களுக்குக் கீழே கூடாரங்கள் அமைத்தோம். கொம்புகளையும் இலைகளையும் வெட்டி... கொம்பை மத்தியில் வெட்டி, செடிகளில் கட்டி... வேட்டையாடி இரவில் நெருப்பைப் பெரிதாக எரிய விட்டு... அடுத்த கோடையில் நாங்கள்... நாங்கள்... நான்... விருந்தாவன் தனக்கு அறிமுகமில்லாத ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வருவார். ஏழு வருடங்களுக்கு முன்னால் நான்... ஏழு வருடங்களுக்குப் பிறகு.... நான் முடியும் இடத்தில்... என்னுடைய தேநீர் தீர்ந்திருக்கிறது. மேனேஜிங் டைரக்டரின் தேநீர் தீர்ந்திருக்கும். பார்க்க முடியாது.

மலர்களுக்குப் பின்னாலிருந்து மேனேஜிங் டைரக்டர் தொண்டையை வெளிப்படுத்தும் குரலில் கூறினார்: "பிறகு... கம்பெனி உங்களுடைய காரியங்களுக்காக உண்மையாகவே முயற்சிக்கும் என்று நான் கூறுகிறேன். உங்களுடைய வாரிசுகள்...''

"சார்... என்னுடைய...''

"ஆமாம்... ஆமாம். அதைத்தான் நான் சொன்னேன். நீங்கள் உங்களுடைய நல்ல ஆயுள் முழுவதையும் கம்பெனிக்குக் கொடுத்திருக்கீங்க. கம்பெனி உங்களுடைய குடும்பத்தைக் கை விட்டுடும்னு நீங்க நினைக்கிறீங்களா? நாங்கள் உங்களுடைய மனைவிக்கும் மகனுக்கும் முடியக்கூடிய எல்லாவற்றையும் செய்வோம். எங்களுடைய குடும்பப் பாதுகாப்புத் திட்டம்... பிறகு உங்களுடைய இன்ஷூரன்ஸ்... அதைப் பற்றிய எல்லா விவரங்களையும் எங்களிடம் கொடுங்க. நாங்கள் முடிந்த வரையில் முயற்சிப்போம். ஒரு கல்லைக்கூட நாங்கள் புரட்டாமல் விடமாட்டோம். பிறகு... இந்த மாதிரியான கேஸ்களில் இன்ஷூரன்ஸ் கம்பெனிக்காரர்கள் கொஞ்சம் பிடிவாதமாக இருப்பார்கள் என்பது தெரியும்ல?''


"பிடிவாதக்காரர்கள்? சார்... நீங்க என்ன சொல்றீங்க? என்னுடைய...''

என்னுடைய நோய்.

ஆனால் என்னுடைய நோய் அல்ல. வெளி உலகம் எனக்குள் நோய் அணுக்கள் எதையும் செலுத்தவில்லை. எனக்கு ட்யூமர்கள் இல்லை. அல்சர் இல்லை. விபத்து எதுவும் நடந்ததில்லை. தலையில் செங்கல் விழவில்லை. வயதால் நரம்புகளுக்குத் தேய்மானம் வந்து உறுப்புகளின் செயல்படும் சக்தி இல்லாமல் போய் அவை செயல்படாமல் நின்று போய்விடவில்லை. எல்லாரும் எவ்வளவோ தடவை அதையேதான் கூறினார்கள். கண்களில் வழிந்த கண்ணீரைப் பார்க்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய மனைவி சமையலறைக்குள் போய்விட்டாள். தயாரிப்பு நிர்வாகி எப்போதும் இல்லாமல் என்னை எச்சரித்தார்- முட்டாளான சாரதி எனக்கு உதவுவதற்காக ஓடி வந்தார். அவர் கூறவும் செய்தார்- இது தற்கொலை என்று. இல்லை- இது கொலை பாதகம் என்று நான் வாதிட்டேன். தளர்ந்து விழப்போன என்னைத் தாங்கிக் கொண்டு நடந்தும், என்னுடைய நோயைப் பற்றி ஒரு வார்த்தைகூட கேட்க விருந்தாவன் முயற்சிக்கவில்லை. அவர்கள் எல்லாரும் நான் கயிறுக்குள் தலையை நுழைத்து நின்றிருக்கிறேன் என்பதைப்போல என்னைப் பார்த்தார்கள். அவர்களால் இதில் எதுவும் செய்ய முடியாது. அழவோ, எச்சரிக்கவோ, அறிவுரை கூறவோ, கை கழுவி விடவோ அல்லாமல்... நான் எந்த அளவிற்கு விளக்கிக் கூறுகிறேனோ, அந்த அளவிற்கு மனிதர்கள் என்னையே தான் குறை கூறுகிறார்கள். அவர்களுக்கு எதுவும் புரியவில்லை. ஒரு சாதாரண தோட்டக்காரன்கூட தன்னுடைய செடிக்கு அடியில் இருக்கும் மண்ணையும் மேலே இருக்கும் ஆகாயத்தையும் பற்றி விசாரித்துப் பார்ப்பான். ஆனால் எல்லா டாக்டர்களும் மந்திரவாதிகளைப்போல என்னையே கவனித்தார்கள். என்னுடைய உடலின் ஓரங்களில் இருந்து ஒரு அங்குலம்கூட அப்பால் பார்க்கத் தயாராக இல்லை. ஒரு நோயையும் அதற்கான அறிகுறியையும் அல்ல- அறிகுறிக்கு அப்பால்தான் பார்க்க வேண்டும் என்று தெரியவில்லை. இன்ஷூரன்ஸ் கம்பெனிக்காரர்களின் பிடிவாதத்தை அவர்கள் எல்லாரும் ஏற்றுக் கொண்டார்கள்... எனினும் டாக்டர்களிடம் சண்டை போட முடியாத அவர்கள் இன்ஷூரன்ஸ்காரர்களிடம் சண்டை போடுவார்கள். எனக்கு வேண்டி அல்ல- என்னுடைய மனைவிக்கும் மகனுக்கும் வேண்டி. நான் போய் விடுவேன். ஆனால் என்னுடைய மகன் வாழ்வான். மருந்தும் டானிக்கும் விளையாட்டுப் பொம்மையும் கல்வியும் கொடுத்து, எனக்குத் தெரிந்தவற்றையெல்லாம் சொல்லித் தந்து, நான் வளர்க்கும் என்னுடைய மகன்... என் மகனைப் பார்த்தவர்கள் எல்லாரும் கூறுகிறார்கள்- அவன் என்னுடைய இன்னொரு உருவம் என்று. என்னுடைய அச்சில் வார்த்து எடுக்கப்பட்டவன். என்னுடைய ஷிஃப்ட்டை ஏற்று வாங்க வேண்டியவன். என்னுடைய வம்சத்தை நிலைநிறுத்த வேண்டியவன்... என்னுடைய வம்சம் நிலைத்து நிற்கும். டானிக், விளையாட்டு, பயிற்சி ஆகியவற்றின் படிகளைக் கடந்து, கரிந்து போன தாவரத்தின் விதையைப்போல உரிய நேரத்தில் அவன் வளர்ந்து ஆளாவான். ஜம்னாதாஸ் ஆஜ்மீரியா இன்டஸ்ட்ரீஸின் காஸ்ட்டிங் பிரிவில் எஞ்ஜினியராக ஆவான். என்னைப்போல, என் மனைவியுடன் இரட்டையைப் பெற்றெடுத்ததைப் போன்ற பெண்ணைத் திருமணம் செய்து எனக்குத் தெரிந்தவற்றையெல்லாம் தெரிந்து, என் குறைபாடுகளுடன், தயாரிப்பு நிர்வாகியின் மகன் தயாரிப்பு நிர்வாகியாகவும், சேர்மனின் மகன் சேர்மனாகவும், எரெக்ஷன் ஃபிட்டரின் மகன் எரெக்ஷன் ஃபிட்டராகவும் உள்ள புதிய தலைமுறைக்குத் திரும்பும் இந்தக் கம்பெனியின் நிரந்தரமான தொழிலாளிகளின் கூட்டத்தில், பட்டாள பலத்தில், மக்கள் தொகையில்...

அந்த வார்த்தைகளெல்லாம் எனக்குத் திடீரென்று அர்த்தமே இல்லாதவைகளாகத் தோன்றின. நான் அவரைக் கோபப்படச் செய்து விட்டேனோ என்பதையும், கோபப்படச் செய்தால்தான் என்ன என்பதைப் பற்றியும் சிந்திக்கவே இல்லை. இந்த வகையான விஷயங்கள் எதுவும் இனிமேல் எனக்குப் பொருட்டே அல்ல என்பது மாதிரி திரும்பிப் பார்க்காமல் நான் நடந்தேன்.

"சார்... எனக்கு ஒரு விஷயத்தைக் கூற முடியுமா? இந்தக் கம்பெனியின் சங்க...''- மீண்டும் அந்த அர்த்தமற்ற கேள்வி! எவ்வளவோ வருடங்களுக்கு முன்னால் இந்தக் கம்பெனியின் வாசலில் கூட்டமாக வந்து நின்றிருந்த அதன் போர்ப்படை வீரர்களில் ஒருவனாக நின்று கொண்டு, அருகில் நின்றிருந்த மனிதனிடம் எடுத்துக் கூறிய, அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்- அந்த மனிதன் கேட்காமல் போன, அதே முட்டாள்தனம் நிறைந்த சந்தேகம்... கஷ்டம்! கஷ்டம்! வெளியே வந்ததைக் கடிவாளத்தைப் பிடித்து இழுத்து நான் நிறுத்தினேன்.

"கேளுங்க... கேளுங்க...''- திடீரென்று பூ ஜாடியை நகர்த்தி வைத்துவிட்டு மீண்டும் உருகத் தொடங்கியிருக்கும் உலோகத்தைப் போல ஆகி, புன்னகையை மலரவிட்டு, சுறுசுறுப்புடன் மேனேஜிங் டைரக்டர் சொன்னார்: "உங்களுடைய சந்தேகம் என்னவென்று கூறுங்கள். எதுவாக இருந்தாலும் எங்களிடம் சொல்லுங்க. உங்களுடைய இதயத்தைத் திறங்க. தயங்க வேண்டாம்.''

பூ ஜாடியை நகர்த்தி வைத்தவாறு நேராகப் பார்த்துக் கொண்டிருந்த அவருடைய முகத்தையே நான் ஒரு முட்டாளைப்போல வெறித்துப் பார்த்தேன்: "ஓ... ஒண்ணுமில்லை. ஒண்ணுமில்லை'' நான் கண்களைத் தாழ்த்தினேன். "நான் என்னவெல்லாமோ நினைச்சிட்டேன். முக்கியமே இல்லாத விஷயங்கள்... வெறும் முக்கியமே இல்லாத விஷயங்கள்... எல்லாவற்றையும் விடுங்க. நான் புறப்படட்டுமா?''

நான் வேகமாக எழுந்தேன். தொப்பியை எடுத்துத் தலையில் வைத்தேன். எக்ஸ்ரே ஃபிலிம்களையும் விளையாட்டுப் பொம்மையையும் வாரி எடுத்துக் கொண்டு கதவை நோக்கித் திரும்பினேன். திரும்பி வந்து, மேனேஜிங் டைரக்டர் நீட்டிய கையைப் பிடித்துக் குலுக்கினேன். வெளியே வந்தபோது, திகைத்துப் போய் நின்றிருந்த அந்த மனிதர் மீண்டும் அழைத்துச் சொன்னதைக் கேட்டேன். "உங்களுக்கு எந்த பிரச்சினை இருந்தாலும், எந்த நேரமாக இருந்தாலும் நேராக என்னிடம் வந்து சொல்லலாம். சிறிதும் தயங்க வேண்டாம். கூச்சப்பட வேண்டாம். நாங்கள் முடிந்தவரையில்...''

அந்த வார்த்தைகள் அனைத்தும் எனக்குத் திடீரென்று அர்த்தமே இல்லாதவையாகத் தோன்றின. நான் அவரைக் கோபப்படுத்தி விட்டேனோ என்பதைப் பற்றியும் கோபப்படுத்தினால்தான் என்ன என்பதைப் பற்றியும் நான் சிந்திக்கவேயில்லை. இந்த வகையான விஷயங்கள் எதுவும் இனிமேல் எனக்கு ஒரு பொருட்டே இல்லை என்பது மாதிரி திரும்பிப் பார்க்காமல் நான் நடந்தேன்.

வெளியே வந்தபோது அலுவலகம் விடப்பட்டுவிட்டிருந்தது. மேனேஜிங் டைரக்டரின் ப்யூன் மட்டும் வாசலில் காத்து நின்றிருந்தான். அவருடைய கார் போர்ட்டிக்கோவில் நின்றிருந்தது.

மலையின் அடிவாரத்தில் ப்ளான்ட்டுகள் வழக்கம்போல புகையைக் கக்கிக் கொண்டும் சத்தம் உண்டாக்கிக் கொண்டும் நின்றிருந்தன. தொழிற்சாலையில் இரண்டாவது ஷிஃப்ட் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு ஷிஃப்ட் இருக்கிறது- இரவில். ஸைடிங்கில் இரண்டு எஞ்ஜின்கள் அவற்றின் வேகன்களைத் தேடி அலைந்து கொண்டிருந்தன. புதிய கட்டிடத்தின் வேலை நின்றுவிட்டிருக்கிறது.


எல்லாவற்றுக்கும் பின்னால் ஆகாயத்திற்கு அருகில் சிவப்பு குறையத் தொடங்கியிருக்கிறது. நான் எதைப் பற்றியும் தனிப்பட்ட முறையில் சிந்திக்கவில்லை. வேகமாக நடக்கவில்லை. மெதுவாகவும் என்னுடைய தொப்பிக்குக் கீழே என்னுடைய உடல்நலம் அனுமதித்த வேகத்தில் கண்களுக்கு முன்னால் வந்த எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே நடந்தேன். கீழ்நோக்கிச் செல்லும் பாதை வழியாக தோட்டத்தின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டே நடந்தேன். தோட்டத்தில் சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களில் இருந்த பூக்கள் மலர்ந்து நின்றன. வெட்டப்பட்டிருந்த பச்சிலைச் செடிகள் அவற்றின் தோற்றத்தால் நிர்வாணமாக இருப்பதைப்போல காட்டியது. புல் தட்டுகள் பச்சை போர்வை விரிக்கப்பட்ட, யாரும் மிதிக்காத படிகளைப்போலக் காட்சியளித்தன.

கம்பெனியின் பேருந்து போய்விட்டிருந்தது. ஜெனரல் ஷிஃப்டில் வேலை செய்தவர்கள் எல்லாரும் போய்விட்டிருந்தனர். விருந்தாவனும் போயிருப்பார். இனி வெளியே போய் பப்ளிக் பேருந்தைப் பிடிக்க வேண்டும். சிறிது தாமதமாகும். பரவாயில்லை.

கேட்டைக் கடந்து வெளியே வந்தபோது நதியிலிருந்து குளிர்ச்சியான காற்று வீசிக் கொண்டிருந்தது. நதியின் கரையை ஒட்டியிருந்த பாதை வழியாக நான் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தேன்.

நதியில் படகுகள் நகர்ந்து கொண்டிருந்தன. தூரத்தில், நதிக்கு மேலே பாலத்தின் நிழல் நெளிந்தது.

வேலை முடிந்து செல்லும் பாபுக்கள் தனியாக பையைத் தூக்கிக் கொண்டு நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

நீலநிற சட்டை அணிந்த தொழிலாளிகள் பொரியும் கடலையும் விற்றுக் கொண்டிருந்தவர்களுக்கு அருகில் மண்ணில் சப்பணம் போட்டு உட்கார்ந்து மணிகளைக் கொறித்துக் கொண்டிருந்தார்கள்.

டையும் கோட்டும் கண்ணாடியும் அணிந்த ஒரு மனிதன் புல்மீது மல்லாந்து படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். அவனுடைய ப்ரீஃப்கேஸ் அருகில் மண்ணில் விழுந்து கிடந்தது.

கை நீட்டி அமர்ந்தவாறு ஒரு பிச்சைக்காரன் அவனுக்கு அருகில் வந்தான். அவன் ஏதாவது தரவோ இல்லை என்று சைகை செய்யவோ இல்லை.

பாதையில் இருந்த மரத்தின் நிழலில் அமர்ந்திருந்த பாவுல் பாடினான்: "படா துக் பாயா- ரே பாவுல் வா...''- பாவுலின் குரல் உயர்ந்தது. அவன் தன்னுடைய சக்தியையும் உயிரையும் முழுமையாகப் பாடலில் அர்ப்பணம் செய்து பாடிக் கொண்டிருந்தான். வயதான பாவுல். அவனுடைய நைந்துபோன ஆடைகள் கொஞ்சம் கொஞ்சமாக மிகவும் மோசமான நிலையை அடைந்து கொண்டிருப்பதைப்போலத் தோன்றியது. நரைத்த தாடி காற்றில் நாலா பக்கங்களிலும் பறந்தது. மூக்கு மேலே வருவதைப்போல தலையைச் சாய்த்து வைத்துக்கொண்டு, ஒரு கையைக் காதுக்குக் கீழே வைத்தவாறு இன்னொரு கையில் ஏக்- தாராவை ஆகாயத்தை நோக்கி உயர்த்திக் கொண்டு பஞ்சபூதங்களையும் அடையப் போவதைப்போல, அதைப் பாடி முடித்தவுடன் அவன் மரணமடைந்து விழுந்து விடுவதைப்போல...

எக்ஸ்ரே ஃபிலிம்களையும் விளையாட்டு பொம்மையையும் ஒரு கையில் மாற்றிவிட்டு இன்னொரு கையால் துவாலையை எடுத்து நான் கண்களைத் துடைத்தேன்.

"பாபு, நான் அலுவலகத்தில் காத்து நின்றிருந்தேன்''- தோட்டக்காரன் எங்கிருந்தோ மேலும் கீழும் மூச்சு விட்டவாறு வந்தான். "வெளியே போவதைப் பார்க்கவில்லை. அதனால்...''- கையில் ஒரு கட்டு கட்டிங்குகளுடன் அவன் என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே நின்றான். பெரிய நரைத்த மீசையைக் கொண்ட, உள்நோக்கி வளைந்த கிழவன். அவனுடைய கழுத்து எலும்புகள் மூச்சு விடுவதற்கு ஏற்றபடி உயர்ந்து கொண்டும் தாழ்ந்து கொண்டும் இருந்தன. அவனுடைய உயர்ந்து தாழ்ந்து கொண்டிருந்த மூச்சு விடுதலுக்கும் நிரந்தரமான சிரிப்புக்கும் இடையே ஒரு தாளகதியைக் கண்டுபிடித்ததைப்போலத் தோன்றியது. பாவம் கிழவன். அவனுக்குத் தெரியாது... "இது கந்த்ராஜ். வாசனை ஒரு சுற்றுப்புறம் முழுவதும் இருக்கும். இது டாலன் சம்பா. இரவு முழுவதும் மணம் நிலவைப்போல ஒளிர்ந்து கொண்டிருக்கும். பிறகு... இதோ... கொஞ்சம் விதைகளும் இருக்கு. நடுவதற்குப் பொருத்தமான நல்ல காலம் இல்லை. எனினும் எல்லாம் தரையில் வளரக்கூடியவை. வருடம் முழுவதும் இருக்கும். இந்தக் கோடை காலத்தைத் தாண்டிடுங்க...''

மண்ணுடன் பச்சை இலையிலும் பேப்பரிலும் சுற்றி, பிறகு பத்திரமாக துணிப்பையில் வைக்கப்பட்டிருந்த கட்டிங்குகளையும் விதைகள் இருந்த பொட்டலத்தையும் அவன் என்னிடம் நீட்டினான். செடிகளின் தாளகதியைக் காணும் தோட்டக்காரன். ஒரு சுற்றுப்புறம் முழுவதும் நறுமணத்தைப் பரப்பக்கூடிய செடிகள். தனக்குள் அடைந்து கிடக்காமல் நிலவைப்போல எரிந்து படரும் மணம். இந்தக் கோடை பொருத்தமான காலமல்ல. உங்களுடைய தாளகதி காலநிலையுடன் அல்ல- காலத்துடன்தான். பிறகு... நீங்கள் உங்களுக்கென ஒரு காலநிலையை உண்டாக்கும்போது ஆமாம்... அப்போது அதற்கேற்றபடி ஆடியே தீரும். ஒன்று நிரந்தர தாவரம். இல்லாவிட்டால்- சீஸனல் தாவரம். உங்களுக்குப் புரிந்துவிட்டிருக்கிறது தோட்டக்காரரே! உங்களுக்கு மட்டும். எங்களுடைய அறிவு எங்களுக்கு மேலே வெயிலாகத் தோன்றி சுட்டுக் கொண்டிருக்கிறது. எங்களுடைய சக்தி, அதிகாரம், வெற்றி, வளர்ச்சி... இல்லை... ஒருவேளை உங்களுக்கும் தெரியவில்லை காக்காஜி. இந்த நிலைக்கு முடிவு இல்லை என்றால்..? இந்த வெயிலுக்கு மாறுதல் இல்லை என்றால்..? வடக்கே... வடக்கே... வடக்கே... நாங்கள் இருவரும் சற்று நேரம் அங்குமிங்குமாகப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தோம். அவனுடைய மேலும் கீழும் வேகமாக மூச்சுவிடும் போக்கும் சிரிப்பும் இல்லாமல் போயிருந்தன. என்னுடைய கண்கள் வற்றிப் போயிருந்தன. நாங்கள் வெறும் மனிதர்களாக ஆனோம். அவன் நீட்டிய கட்டிங்குகளும் விதைகளும் இருந்த பையை நான் வாங்கினேன். பொம்மை இருந்த பெட்டி அப்போது கீழே விழுந்துவிட்டது. நெருப்பைக் கக்கும் டேங்கின் விளையாட்டு. அவன் அதை குனிந்து எடுத்து என்னிடம் நீட்டினான். "அது போகட்டும் காக்காஜி. இந்தாங்க''- நான் அவனுக்கு எக்ஸ்ரே ஃபிலிம்களைக் கொடுத்தேன். "என் கையில் இடமில்லை.'' தோட்டக்காரன் பெட்டியையும் எக்ஸ்ரே ஃபிலிம்களையும் பிடித்துக்கொண்டு ஆச்சரியத்துடன் என்னையே பார்த்தான். நான் சிரித்தேன்.

பெரிய ஆரவாரம் உண்டாக்கியவாறு பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றது. பொருட்களுடன் நான் உள்ளே ஏறினேன். வழக்கம்போல இல்லாமல் எனக்கு உட்கார இடம் கிடைத்தது. முன்னால் இல்லை என்றாலும் பின்னாலும் இல்லாத இருக்கை. இருக்கையில் அமர்ந்து நான் கட்டிங்குகள் இருந்த பையை கீழே வைத்தேன். பிறகு பின்னோக்கி சாய்ந்து உட்கார்ந்துகொண்டு மூச்சு விட்டேன். இந்த நாளில் நடந்த அனைத்தும் என் மனதில் இருந்து படிப்படியாக உயர்ந்து சென்றன. ஒரு நறுமணம் மட்டும் அங்கு எஞ்சி நின்றது. பேருந்திற்குள், பேருந்திற்கு வெளியே கலந்திருக்கும் எல்லாவற்றின்மீதும் நிலவைப்போல எரிந்து கொண்டிருக்கும், தனக்குள் அடைந்து கிடக்காத, தன்னுடையதல்லாதவைமீது பரவும்... எனக்கு என்ன காரணத்தாலோ சந்தோஷம் உண்டானது.

மடியில் இருந்த தொப்பியைச் சுற்றிக் கைகளைக் கோர்த்து வைத்துக்கொண்டு, கால்களை முன்னாலிருந்த இருக்கைக்குக் கீழே நீட்டி, தலையைப் பின்னோக்கிச் சாய்த்து, கண்களைப் பாதி மூடிக்கொண்டு நான் ஓய்வெடுத்தேன். படிப்படியாக உறக்கம் வரத் தொடங்கியபோது நான் வேறு எதைப்பற்றியும் நினைக்காமல் அந்த நறுமணத்தில் மட்டும் இறங்கி நின்றேன்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.