Logo

கேக்ஸிலி: மவுண்டன் பேட்ரோல்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 3582

என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)

கேக்ஸிலி: மவுண்டன் பேட்ரோல் - Kekexili: Mountain Patrol

(சீன திரைப்படம்)

2004ஆம் ஆண்டில் திரைக்கு வந்த சீன திரைப்படம்.  90 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்தப் படத்தை எழுதி, இயக்கியவர் லூ சுவான் (Lu Chuan).

திபெத் பகுதியில் இருக்கும் கேக்ஸிலி என்ற வறண்டு கிடக்கும் பாலைவனப் பகுதியில் இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் நடைபெற்றிருக்கிறது.  அங்கு மேய்ந்து கொண்டிருக்கும் ஒரு வகை மான் இனத்தின் தோலுக்கும், மாமிசத்திற்கும் ஆசைப்பட்டு அவற்றைச் சட்டத்திற்கு விரோதமாக வேட்டையாடும் ஒரு கும்பலையும், அவர்களைக் கையும் களவுமாக பிடிப்பதற்காக முயற்சிக்கும் ரிட்டாய் (Ritai) என்ற மனிதரையும், அவரின் ஆட்களையும் சுற்றி பின்னப்பட்டதே இப்படத்தின் கதை.

படத்தைப் பார்க்கும்போது ஒரு மேற்கத்திய படத்தைப் பார்க்கக் கூடிய ஆர்வமும், விறுவிறுப்பும் படம் பார்ப்போரின் மனதில் உண்டாகும்.  தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலப் பகுதியையும், அங்கு உயிர் வாழ்வதற்காக மேய்ந்து கொண்டிருக்கும் மான் இனத்தையும் காப்பாற்றுவதற்காக ஒரு குழுவினர் தங்களின் உயிரைப் பணயம் வைத்து எப்படியெல்லாம் போராடுகின்றனர் என்பதைப் பார்க்கும்போது, நம்மையும் மீறி அவர்களின் மீது நமக்கு மரியாதையும், மதிப்பும் உண்டாகும்.

1990 களில் திபெத்தின் அந்த பகுதியைப் பாதுகாத்துக் கொண்டிருந்த ஒரு சேவை மனப்பான்மை கொண்ட குழுவினரின் செயல்களால் ஈர்க்கப்பட்டு, அந்த பாதிப்பில் உருவாக்கப்பட்ட திரைப்படமே இது.

படத்தின் ஆரம்பக் காட்சியில் பரந்து கிடக்கும் வறண்டு போன நிலப் பகுதியில் கூட்டமாக மான்கள் துள்ளித் திரிந்து, மேய்ந்து கொண்டிருக்கின்றன.  அவற்றின் மாமிசத்திற்காகவும், தோலுக்காகவும் ஆசைப்பட்டு வேட்டையாடும் ஒரு கும்பல் சில மான்களைச் சிறிது கூட ஈவு, இரக்கமே இல்லாமல் கொல்கிறது.  இரத்தம் சொட்ட, மான்கள் பாலைவனப் பகுதியில் இறந்து கிடக்கின்றன.  அதைத் தடுக்க வந்த ஒரு மனிதரையும் அவர்கள் கொன்று விடுகின்றனர்.

அந்தப் பகுதியில் நடைபெறும் இத்தகைய செயல்களைப் பற்றி புலனாய்வு செய்து எழுதுவதற்காக, ஒரு பத்திரிகை தன்னுடைய செய்தியாளரை பீஜிங்கிலிருந்து (Beijing) அனுப்பி வைக்கிறது.  செய்தியாளராக வரும் இளைஞன் கேக்ஸிலி கிராமத்திலிருக்கும் ரிட்டாய் (Ritai) என்ற மனிதரைச் சந்திக்கிறான்.  மான்களின் இனத்தைக் காப்பற்றுவதற்காக போராடும் குழுவின் தலைவராக இருப்பவர் அவர்தான்.  நடுத்தர வயது கொண்ட அந்த மனிதர் அதிகம் பேசாத குணத்தைக் கொண்டவர்.  மிகவும் குறைவாகவே பேசுகிறார்.  ஆனால், எல்லா விஷயங்களையும் கூர்ந்து கவனிக்கிறார்.  தான் பார்க்கும் எந்த மனிதரையும் உன்னிப்பாக அலசிப் பார்க்கிறார்.  இறந்து போன தன் குழுவைச் சேர்ந்த மனிதரைப் புதைக்கும் இடத்தில்தான் அந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.  அந்த கிராமத்தில் உள்ள மனிதர்கள் அப்படியொன்றும் வசதியான வாழ்க்கையை வாழவில்லை.  வறுமைக்கு மத்தியில்தான் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர், அரசாங்கத்திடமிருந்து அவர்களுக்கு எந்தவித உதவியும் இல்லை.  போதுமான அளவிற்கு அவர்களுக்கு ஆள் பலம் கூட இல்லை.  இன்னும் சொல்லப் போனால் -- தேவைப்படும் அளவிற்கு அவர்களிடம் எதிரிகளைச் சுட்டுக் கொல்வதற்கு துப்பாக்கிகளோ, வாகனங்களோ கூட இல்லை.

எனினும், இருக்கும் ஆட்களை வைத்துக் கொண்டு, தங்களிடம் இருக்கும் ஒன்றிரண்டு வாகனங்களை பயன்படுத்திக் கொண்டு, கைவசம் இருக்கும் குறைந்த அளவு துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு அவர்கள் மான்களைக் கொல்ல முயற்சிக்கும் மனிதர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

கடல் மட்டத்திற்கு மேலே நான்கு மைல்கள் உயரத்தில் மலைப் பகுதியில் இருக்கும் அந்த பாலைவனப் பகுதியில் செடி, கொடி, மரங்களையே தேட வேண்டியதிருக்கும்.  இங்குமங்குமாக கொஞ்சம் காணப்படும்.  அவற்றைத்தான் அந்த மான்கள் மேய்கின்றன.  சூரியன் சிறிது கூட இரக்கமே இல்லாமல் சுட்டெரித்துக் கொண்டிருக்கும். வேறு எந்த உயிரினத்தையும் அங்கு பார்க்க முடியாது.  தூசி படிந்த காற்றுதான் சுற்றிலும்....

ஒரு காலத்தில் பல்லாயிரக் கணக்கில் இருந்த அந்த மான் இனத்தின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது.  தோலுக்கு ஆசைப்பட்டு அதை இரக்கமே இல்லாமல் கொன்றால், குறையத்தானே செய்யும்?

பத்திரிகையிலிருந்து வந்த இளைஞனான கா யூ, (Ga Yu) தான் வந்திருக்கும் நோக்கத்தை ரிட்டாயிடம் கூறுகிறான்.  நல்ல நோக்கத்துடன்தான் வந்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டதும், அவனை தங்களுடன் அழைத்துச் செல்வதற்கு ஒத்துக் கொள்கிறார் ரிட்டாய்.

'மான்களைப் பாதுகாக்கும் குழு' ஒரு வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய ஆட்களுடன் தன் பயணத்தை ஆரம்பிக்கிறது.  அவர்களுடன் பத்திரிகையாளர் காவும் ஏறிக் கொள்கிறான்.  வளைந்து வளைந்து செல்லும் மலைப் பாதைகளிலும், மேடுகளிலும், பள்ளங்களிலும் ஆடி அசைந்தவாறு பயணிக்கிறது வாகனம்.  தூரத்தில் மான்கள் மேய்ந்து கொண்டிருக்கின்றன.  அவற்றை ஆர்வத்துடன் பார்க்கிறான் கா.

தங்களுடன் உணவு, நீர் அனைத்தையும் அவர்கள் போகும்போதே தங்களின் வாகனத்தில் எடுத்துச் செல்கின்றனர்.  நீர் தேவைப்படும்போது, எடுத்து பருகுகின்றனர்.  பசிக்கும்போது உணவை எடுத்து சாப்பிடுகின்றனர்.  அந்த நிலப் பகுதியையும், ஆட்கள் யாரும் இல்லாமல் பரந்து கிடக்கும் வறண்ட பாலைவனத்தின் தனிமைச் சூழலையும் பார்த்து ஆச்சரியப்படுகிறான் பத்திரிகையாளர் கா.  பரபரப்பான நகர வாழ்க்கையில் வாழ்ந்த அவனுக்கு அந்த இடமே புதிய ஒரு அனுபவமாக இருக்கிறது.  தன்னுடன் சேர்ந்து பயணிக்கும் அந்த மனிதர்களை அவன் பார்க்கிறான்.  படிப்பறிவற்ற அந்த கிராமத்து மனிதர்களின் கள்ளங் கபடமற்ற தன்மையையும், முரட்டுத் தனத்தையும், எதுவும் பேசாமல் தங்களின் தலைவரான ரிட்டாயின் கட்டளைகளின்படி நடக்கக் கூடிய பணிவான குணத்தையும் பார்த்து அவனுக்குள் வியப்புத்தான் உண்டாகிறது.

வழியில் ஆங்காங்கே மான்களின் எலும்புக் கூடுகள் கிடக்கின்றன.  நூற்றுக் கணக்கில் புழுதியில் கிடக்கும் அவற்றைப் பார்க்கும்போது நம் மனதிலும் கவலையும், கலக்கமும் உண்டாகின்றன.  'எந்தவித கவலையுமில்லாமல் துள்ளித் திரிந்து கொண்டிருந்த மான்களை இப்படியா இரக்கமே இல்லாமல் கொன்று போட்டிருப்பார்கள்!' என்று நம் மனங்களுக்குள்ளேயே நாம் கேள்வி எழுப்பிக் கொள்வோம்.

அந்த மான்களைக் கொன்றது யாராக இருக்கும்?  வேகமாகிறது 'பாயும் படை'.  எல்லா பக்கங்களிலும் வலை வீசி தேடுகிறார்கள் ரிட்டாயும், அவருடைய ஆட்களும்.  என்ன நடக்கிறது என்பதை கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் கா.  ஒரு இடத்தில் மான்களை வேட்டையாடிய அந்த மனிதர்களைப் பிடித்து விடுகிறார்கள்.  அவர்களிடம் விசாரிக்கிறார்கள், அந்த குழுவினரின் தலைவன் அவர்களுடன் இல்லை.  அவன் எங்கு இருக்கிறான் என்பதை வன்முறையை பயன்படுத்தி விசாரிக்கிறார் ரிட்டாய். அதற்கு அவர்கள் சரியான பதிலைக் கூறவில்லை... அல்லது பதில் கூற விரும்பவில்லை.  அந்த மனிதர்கள் வெறும் கருவிகள் அவர்களை ஏவுவது வேறொரு மனிதன்.  அவனைப் பிடித்தாக வேண்டும்.  அதற்கு வழி?


தாங்கள் பிடித்த அந்த மனிதர்களுடன் 'பேட்ரோல் குழு' பயணிக்கிறது.  போகும் வழியில் 'மான்கள் பாதுகாப்புக் குழு' வேட்டைக் குழுவினருடன் சர்வ சாதாரணமாக பேசிக் கொண்டு வருகிறார்கள்.  அந்த மனிதர்கள் தங்களின் துயரம் நிறைந்த குடும்பங்களைப் பற்றியும், வறுமையில் வாழும் மனைவி, பிள்ளைகளைப் பற்றியும் சிறிதும் மறைக்காமல் கூறுகிறார்கள்.  பத்திரிகையாளர் காவும் அவர்களுடன் உரையாடுகிறான்.  அவர்களுடன் உரையாடியதன் மூலம், அவர்களுடைய சிரமங்கள் நிறைந்த வாழ்க்கையைப் பற்றி அவனால் தெரிந்து கொள்ள முடிகிறது.

அந்த பயணம் நீண்டு கொண்டே போகிறது.  ஒரு இடத்தில் வாகனம் நிற்கிறது.  தங்களுடன் கொண்டு வந்திருந்த உணவுப் பொருட்கள் தீரும் நிலைக்கு வந்து விட்டன.  இன்னும் கொஞ்சம்தான் இருக்கிறது.  அதை வைத்து தாங்களும், பிடிபட்ட அந்த மனிதர்களும் சாப்பிடுவது என்பது கஷ்டமான விஷயம் என்பதை உணர்கிறார் ரிட்டாய்.  தவிர, வாகனத்தின் எரிபொருளும் குறைவாகவே இருக்கிறது.  அதை வைத்து, கண்டபடி அந்த குழுவின் தலைவனைத் தேடுவது என்பதும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகவே ரிட்டாய்க்குப் பட்டது.  அதன் விளைவாக தாங்கள் பிடித்த அந்த வேட்டைக் குழுவினரை அந்த பாலைவனப் பகுதியிலேயே விட்டு விட்டுச் செல்வது என்ற முடிவை ரிட்டாய் எடுக்கிறார்.  'நாங்கள் எங்களின் குடும்பங்களை விட்டு விட்டு எவ்வளவோ தூரத்தில் இருக்கிறோம்.  இந்த பாலைவனப் பகுதியில் எங்களை தனியே விட்டு விட்டுப் போனால், நாங்கள் என்ன செய்வது?  தவிர, எனக்கு வயதாகி விட்டது.  நீண்ட தூரம் நடந்து செல்வது என்பது என்னால் கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியாத விஷயம்.  கொஞ்சம் கருணை காட்டுங்கள்' என்கிறார் அந்த வேட்டைக் குழுவில் இருக்கும் வயதான பெரியவர்.  அதற்கு ரிட்டாய் 'நாங்கள் ஒன்றுமே பண்ணுவதற்கில்லை, எதுவும் செய்யவும் முடியாது.  எரிபொருள் கொஞ்சம்தான் இருக்கிறது.  உணவுப் பொருளும் சிறிதளவுதான் இருக்கிறது.  உங்களையும் வைத்துக் கொண்டு, எங்களால் சமாளிக்க முடியாது.  அதனால் நாங்கள் கிளம்புகிறோம்.  உங்களின் வாழ்க்கையை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்' என்கிறார்.

போவதற்கு முன்பு, தன்னுடன் வந்தவர்களில் வேட்டைக் குழுவினரின் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து காயம் பட்டவர்களையும், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களையும் தங்களுடன் வந்த இன்னொரு காரில் லியூ டாங்க் (Liu Dong) என்ற தன்னுடைய மனிதனுடன் அனுப்பி வைக்கிறார் ரிட்டாய்.  மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, அவர்களுக்கு தேவைப்படும் சிகிச்சையைச் செய்வதற்கான ஏற்பாடுகளைப் பண்ணும்படி கூறுகிறார்.  லியூ டாங்கிடம் அதற்கு தேவையான பணத்தைத் தருகிறார்.   'பணம் போதாது, இன்னும் வேண்டும்' என்று அவன் கூற, மேலும் பண நோட்டுகளைத் தருகிறார் ரிட்டாய்.  அவன் அப்போதும் 'போதாது' என்கிறான்.  காரில் இருக்கும் மான்களின் தோல்களில் சிலவற்றை விற்று, பணம் பெற்று அதை சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளும்படி கூறுகிறார் ரிட்டாய்.  அந்த காட்சிகளை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறான் பத்திரிகையிலிருந்து வந்த கா.  'மான்களின் தோல்களை விற்பனை செய்வது என்பது சட்ட விரோத செயலாயிற்றே!  அதை நீங்களே செய்யலாமா?' என்கிறான் கா.  அதற்கு ரிட்டாய் 'வேறு வழியில்லை.  நாங்கள் செய்யும் இந்தச் செயலுக்கு அரசாங்கத்தின் உதவி எதுவும் எங்களுக்கு கிடையாது.  நாங்கள் ஏதோ ஒரு நல்ல நோக்கத்தில் இந்தச் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.  எங்களிடம் போதிய அளவிற்கு துப்பாக்கிகள் கூட இல்லை.  பணப் பற்றாக்குறை உண்டாகும் நேரங்களில், பொதுவாக நாங்கள் மான்களின் தோல்களை விற்பனை செய்வோம்.  தவறுதான்.  ஆனால், நாங்கள் என்ன செய்ய முடியும்?' என்கிறார்.

எஞ்சிய இரண்டு வாகனங்களும் பயணத்தைத் தொடர்கின்றன.  அவற்றில் ஒன்று பழுதாகி, நின்று விடுகிறது.  மருத்துவமனைக்குச் சென்றிருக்கும் கார் திரும்பி வரும்வரை, அதில் பயணித்தவர்களை அங்கேயே இருக்கும்படி அவர் கூறுகிறார்.

மோசமான சீதோஷ்ண நிலை காரணமாக, அவர்கள் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்புவது என்ற முடிவிற்கு வருகிறார்கள்.   மருத்துவமனைக்குச் சென்ற லியூ டாங்க், ரிட்டாயுடன் இணைவதற்காக தான் மட்டும் காரில் பயணிக்கிறான்.  சூழ்நிலை மிகவும் மோசமாகவும், ஆபத்து நிறைந்ததாகவும் இருக்கிறது.  அந்த கார் ஒரு இடத்தில், புதை மணலில் சிக்கிக் கொள்ள, அவன் உயிருடன் மணலுக்குள் போய் விடுகிறான்.  மணல் கொஞ்சம் கொஞ்சமாக அவனை உள்ளே இழுக்க, அவன் காணாமலே போகிறான்.  மணலுக்குள் அவனுடைய முழு உடலும், இறுதியில் தலையும் இழுத்துச் செல்லப்படும் காட்சி மிகவும் அருமையாக எடுக்கப்பட்டிருக்கிறது.

ரிட்டாயும், காவும் இறுதியாக ஒரு இடத்தில் வேட்டைக் குழுவின் தலைவனையும், துப்பாக்கிகள் ஏந்திய அவனுடைய சில ஆட்களையும் சந்திக்கிறார்கள்.  அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறார்கள்.  இந்தப் பக்கம் இருப்பவர்களோ ரிட்டாய், கா... இருவர் மட்டுமே.  இருவரின் கைகளிலும் ஆயுதங்கள் எதுவுமில்லை.  அந்த தலைவனும், ஆட்களும், இருவரையும் நெருங்கி விடுகிறார்கள்.  ரிட்டாய் அவர்களால் கொடூரமாக கொல்லப்படுகிறார்.  அந்த 'மான்களைப் பாதுகாக்கும் குழு' வைச் சேர்ந்த மனிதனாக இல்லாமலிருந்ததால், காவைப் போகச் சொல்லி விட்டு விடுகிறார்கள்.  அவன் தளர்ந்த நிலையில் நடந்து செல்கிறான்.  ரிட்டாயின் இறந்த உடல், அவருடைய கிராமத்தில் புதைக்கப்படுவதற்காக எடுத்துச் செல்லப்படுகிறது.  மான்களின் பாதுகாவலரான ரிட்டாய், மான்களை வேட்டையாடும் குழுவினரால், மானைப் போலவே இரக்கமே இல்லாமல் சுட்டுக் கொல்லப் படுகிறார்.

அத்துடன் படம் முடிவடைகிறது.  இறுதியில் எழுத்துக்கள் ஓடுகின்றன.  அவற்றின் மூலம் நாம் தெரிந்து கொள்ளும் தகவல்கள் இவை....

நகரத்திற்குச் சென்ற பத்திரிகையாளர் கா தான் கேக்ஸிலியில் பார்த்த சம்பவங்களை ஒன்று கூட விடாமல் பத்திரிகையில் எழுதுகிறான்.  அந்த கட்டுரை சீனாவையே உலுக்கி விடுகிறது.  எல்லோரும் அதைப் பற்றி பேசுகிறார்கள்.  அரசாங்க அதிகாரிகள் மான்களின் தோல்களை விற்றதற்காக 'பாதுகாப்பு குழு' வைச் சேர்ந்த நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.  அதற்கு மக்கள் மத்தியில் பலமான எதிர்ப்பு!  'அவர்களை எப்படி கைது செய்யலாம்?' என்று மக்கள் கேட்கின்றனர்.  அதன் விளைவாக அவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.  அதே நேரத்தில் அந்த பாதுகாப்புக் குழுவும் கலைக்கப்படவில்லை.

ஒரு வருடத்திற்குப் பிறகு, சீன அரசாங்கம் கேக்ஸிலியை 'தேசிய இயற்கை பாதுகாப்பு பகுதியாக  அறிவித்தது.  அதைத் தொடர்ந்து அரசாங்கமே அந்த பகுதியையும், மான்களையும் பாதுகாப்பதற்கு ஒரு குழுவை உண்டாக்கியது.  'இந்தப் படம் திரைக்கு வந்த நேரத்தில், மான்களின் எண்ணிக்கை 30,000 என்ற அளவில் அதிகரித்திருந்தது' என்ற செய்தியை எழுத்து வடிவத்தில் இறுதியாக கூறுகிறது படம்.

2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற 'ஹாங்காங் திரைப்பட விழாவில்' Best Asian Film ஆக இப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது.  2004 இல் நடைபெற்ற 'டோக்யோ சர்வதேச திரைப்பட விழா' வில் சிறந்த நடுவர்கள் விருதை இப்படம் பெற்றது.  பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் 2005 ஆம் ஆண்டில் 'Don Quixote Award' ஐ இப்படம் பெற்றது.  இது தவிர, இன்னும் பல விருதுகளையும்.....

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.