Logo

ஆர்ட்டிமிஸியா

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 4274

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

ஆர்ட்டிமிஸியா - Artemisia

(ஃப்ரெஞ்ச் மொழி திரைப்படம்)

1997ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஃப்ரெஞ்ச் மொழியில் எடுக்கப்பட்ட மாறுபட்ட திரைப்படம் - Artemisia.

17ஆம் நூற்றாண்டில் இத்தாலியில் வாழ்ந்த இளம்பெண்ணும், வரலாற்றில் இடம் பெற்ற இளம் ஓவியருமான ஆர்ட்டிமிஸியாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. 1593ஆம் ஆண்டிலிருந்து 1653ஆம் ஆண்டு வரை வாழ்ந்து சாதனை புரிந்த அந்த இளம் பெண்ணைப் பற்றிய தகவல்கள் இப்போதும் இத்தாலியில் இருக்கும் ஆவணக் காப்பகங்களில் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கின்றன.

மிகுந்த கட்டுப்பாடுகள் நிறைந்த அந்தக் காலகட்டத்தில் ஒரு இளம்பெண் எல்லாவற்றையும் தகர்த்தெறிந்து விட்டு, எப்படி ஓவியராக ஒளி வீசினாள் என்ற விஷயத்தால் ஈர்க்கப்பட்ட பெண் இயக்குநரான Agnes Merlet இப்படத்தை இயக்கினார். இதற்கு திரைக்கதை அமைத்தவர்கள் Agnes Merlet, Christine Miller. படத்திற்கு இசையமைத்த Krishna Levyயும் ஒளிப்பதிவு செய்த Benoit Delhommeம் பாராட்டுக்குரியவர்கள்.

98 நிமிடங்கள் ஓடக் கூடிய இப்படத்தில் Artemisiaவின் கதாபாத்திரத்தில் நடித்து, அதற்கு உயிர் தந்தவர் Valentina Cervi.

இப்படம் திரைக்கு வந்தபோது, திரைப்பட ரசிகர்களாலும், பத்திரிகைகளாலும், திரைப்பட விமர்சகர்களாலும் பரபரப்பாக பேசப்பட்டது. படத்தை வினியோகம் செய்த அமெரிக்காவைச் சேர்ந்த 'Miramax Zoe' என்ற நிறுவனம் 'The untold true story of an extraordinary woman' என்று விளம்பரம் செய்ததே அதற்குக் காரணம். படம் மிகப் பெரிய வெற்றியை வர்த்தக ரீதியாக அடைந்தது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், வரலாற்றுச் சம்பவங்களை படத்திற்காக நிறைய மாற்றி விட்டார்கள் என்ற பலமான குற்றச்சாட்டும் அந்தச் சமயத்தில் எழுந்தது. இயக்குநர் Agnes Merletஐ அதற்காக பலரும் குறை கூறி பத்திரிககைகளில் எழுதவும் செய்தார்கள்.

அந்த அளவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் உரத்த குரலில் பேசப்பட்ட, பக்கம் பக்கமாக எழுதப்பட்ட 'Artemisia' படத்தின் கதை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இப்போது உங்களுக்கு உண்டாகியிருக்குமே! உங்களுக்காக இதோ கதை:

Artemisia பதினேழு வயது கொண்ட ஒரு பேரழகு படைத்த இளம் பெண். அவளுடைய தந்தை Orazio Gentileschi இத்தாலியின் ஒரு புகழ் பெற்ற ஓவியர். அவருடைய பெயரைச் சொன்னாலே இத்தாலியில் மிகப் பெரிய மதிப்பு. அவருக்குச் சொந்தமான ஓவியக் கூடத்தில் இரவு, பகல் எந்நேரமும் பல ஓவியர்கள் தொடர்ந்து ஓவியங்களை வரைந்து கொண்டே இருப்பார்கள். வரையப்பட்ட அந்த ஓவியங்களைப் பார்ப்பதற்காகவும், பெரிய விலை கொடுத்து வாங்குவதற்காகவும் பல்வேறு இடங்களிலிருந்தும் நல்ல வசதி படைத்தவர்களும், கலை ஆர்வம் கொண்ட பிரபு வம்சத்தைச் சேர்ந்தவர்களும் அவ்வப்போது வருவார்கள். தன் ஓவியக் கூடத்தில் இருக்கும் அழகான ஓவியங்களை மிகவும் பெருமையுடன், அங்கு வருபவர்களுக்குக் காட்டுவார் அந்த வயதான ஓவியர்.

அவருடைய செல்ல மகள் Artemisia. அவருக்கு ஆண் பிள்ளைகள் கிடையாது. ஆர்ட்டிமிஸியாவின் மீது உயிரையே வைத்திருந்தார் அவர். ஒரு ஓவியரின் மகளாக பிறந்ததாலோ என்னவோ, ஓவியத்தின் மீது ஆர்ட்டிமிஸியாவிற்கும் அளவற்ற ஆர்வமும், ஈடுபாடும் இருந்தன. தான் ஒரு மிகச் சிறந்த ஓவியராக வர வேண்டும் என்று ஆசைப்பட்டாள் அவள். தன்னைப் போலவே, தன் அன்பு மகளுக்கும் ஓவியத்தின் மீது தீவிர ஈடுபாடு இருப்பதைப் பார்த்த Orazio Gentileschi மிகவும் சந்தோஷப்பட்டார். அவளுடைய அந்தத் திறமையை வளர்ப்பதற்கு அவரும் ஒரு உந்து சக்தியாகவும், தூண்டுகோலாகவும் இருந்தார். தனக்கு ஆண் பிள்ளைகள் இல்லாமற் போய் விட்டார்களே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அவர், தன் மகளின் மூலமாக தங்கள் குடும்பத்திற்கென்று இருக்கக் கூடிய ஓவியப் பாரம்பரியம் தொடரட்டும் என்று நினைத்தார்.

ஆனால், தன் தந்தையைப் போல மரபு முறையில் உள்ள ஓவியங்களை வரையக் கூடிய ரசனை கொண்டவளாக ஆர்ட்டிமிஸியா இல்லை. அவளுடைய விருப்பமும், கலா ரசனையும் வேறு மாதிரி இருந்தன. ஆண், பெண் ஆகியோரின் நிர்வாண நிலையை ஓவியமாக வரைவதில் அக்கறை கொண்டவளாக அவள் இருந்தாள். 17ஆம் நூற்றாண்டில் இத்தாலியில் ஒரு பெண் இப்படிப்பட்ட ஒரு ரசனையுடன் இருப்பது என்பது சாதாரண விஷயமல்ல. இன்னும் சொல்லப் போனால்- அந்தக் காலகட்டத்தில் ஓவியர்கள் என்று ஆண்கள் மட்டுமே தங்களுடைய திறமைகளைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். பெண்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கு, ஆண்கள் உற்சாகப்படுத்தினால்தானே! அப்படிப்பட்ட சூழ்நிலையில் நிர்வாணமாக ஓவியங்களை ஒரு பெண் வரைகிறாள் என்றால்... அதற்கு எந்த அளவிற்கு எதிர்ப்பு இருக்கும்?

படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே ஒரு முக்கியமான விஷயம் காட்டப்பட்டிருக்கும். தேவாலயமொன்றில் பல பெண்கள் நின்றிருப்பார்கள். அங்கு எரிந்து கொண்டிருக்கும் ஒரு மெழுகு வர்த்தியை யாருக்கும் தெரியாமல் அணைத்து, தன் ஆடைக்குள் வைத்துக் கொள்வாள் ஆர்ட்டிமிஸியா. வீட்டிற்கு வந்த பிறகு, அந்த மெழுகு வர்த்தியை எரிய வைத்தவாறு, தன் சரீரத்தை அவள் கண்ணாடியில் பார்ப்பாள். தன் ஆடையை மேல் நோக்கி தூக்கி, கால்களையும், தொடையையும் கண்ணாடியில் எந்த அளவிற்கு அழகாக இருக்கின்றன என்று பார்ப்பாள். பிறகு மேலாடையை நழுவ விட்டு, இரண்டு மார்பகங்களின் அழகையும் கண்ணாடியில் பார்த்து சந்தோஷப்படுவாள். மொத்தத்தில்- தன் முழு உடலின் வனப்பையும் அவள் கண்ணாடியில் பார்ப்பாள்.

தான் பார்த்த தன் உடலை, உடலின் பாகங்களை மனக்கண்களின் மூலம் அவள் ஓவியமாக தீட்டுவாள். இப்படியே பல ஓவியங்கள். இதற்கு முன்பு இந்த அளவிற்கு உடலின் பாகங்களை எந்தவொரு பெண் ஓவியரும் வரைந்ததில்லை என்பதே உண்மை. அந்த ஓவியங்களை அவள் தன் தந்தையிடம் காட்ட, அவர் ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்து விடுவார். தன் மகள் இப்படிப்பட்ட ஓவியங்களையா வரைந்து கொண்டிருக்கிறாள் என்று அவர் நினைப்பார். எனினும், அவற்றையும் உயர்ந்த திறமையின் வெளிப்பாடு என்று கருதுவதால், அவர் அதை ஏற்றுக் கொள்ளவே செய்வார். தன்னுடைய ஓவியக் கூடத்தில் தன் மகள் ஆர்ட்டிமிஸியா வரைந்த அந்த நிர்வாண ஓவியங்களைக் காட்சிக்காக வைத்திருப்பார். அதை பார்ப்பவர்கள், ஆச்சரியத்தின் உச்சிக்குச் சென்று அதை வரைந்த இளம் பெண்ணையே அதிர்ச்சியுடன் பார்ப்பார்கள்.


படம் வரைய வேண்டுமென்றால், நான்கு சுவர்களுக்குள் இருந்து கொண்டுதான் படத்தை வரைய வேண்டும் என்று நினைக்காத ஆர்ட்டிமிஸியா, படம் வரைய பயன்படுத்தும் கருவிகளுடன் திறந்த இடங்களுக்குச் செல்கிறாள். அவளுக்கு ஒரு மீனவ இளைஞனைத் தெரியும். அவனுக்கு அவள் மீது ஒரு ஈர்ப்பு. ஓவியம் வரைவதற்காக அவனிடம் நிர்வாணமாக 'போஸ்' தர முடியுமா என்று அவள் கேட்கிறாள். ஆரம்பத்தில் அவன் தயங்குகிறான். பின்னர் அவனுக்கு அவள் ஆசையுடன் ஒரு முத்தம் தருகிறாள். 17 வயது பெண் மனம் குளிரக் கூடிய ஒரு 'இச்' தருகிறாள் என்னும்போது, யாருக்குத்தான் உற்சாகம் உண்டாகாது? அந்த மீனவ இளைஞன் செடிகளுக்கும், பாறைகளுக்கும் மத்தியில் படுத்துக் கொண்டும், சாய்ந்து கொண்டும், உட்கார்ந்து கொண்டும் இருக்கிறான்- உடலில் ஆடை எதுவும் இல்லாமல். அவனின் பல 'போஸ்'களையும் அவள் ஓவியங்களாக தீட்டுகிறாள்.

ஒருநாள் அவள் கடற்கரை பகுதியில் நடந்து போய்க் கொண்டிருக்கிறாள். புதர்களுக்கு மத்தியில், மணல் மீது ஒரு பெண்ணைப் படுக்க வைத்து, ஒரு மனிதன் ஆசையுடன் உடலுறவு கொள்கிறான். சற்று தூரத்தில் மறைந்து கொண்டு, அந்தக் காட்சியை வேட்கையுடன் பார்க்கிறாள் ஆர்ட்டிமிஸியா. அந்தப் பெண் மல்லார்ந்து படுத்திருந்த காட்சி அவளுடைய மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது. சிறிது நேரத்தில் அந்த ஆணும், அந்த பெண்ணும் அங்கிருந்து கிளம்பிச் சென்று விடுகிறார்கள். அந்த இடத்திற்குச் சென்ற ஆர்ட்டிமிஸியா, அந்த பெண் படுத்திருந்ததைப் போலவே தானும் படுத்து கால்களை இப்படியும் அப்படியுமாக அசைக்கிறாள், மேல் நோக்கி தூக்குகிறாள். பின்னர் தான் பார்த்த அந்த காட்சியை அவள் ஓவியமாக வரைகிறாள்.

அவளுடைய அந்த ஓவியங்களைப் பார்க்கும் அவளுடைய தந்தையும், பிறரும் அவளின் வேறுபட்ட ரசனையைப் பார்த்து வியக்கின்றனர். ஆணின் உடலுறுப்புக்களை ஓவியமாக தீட்டியிருக்கிறாள் என்றால், அவளுக்கு மாடலாக நின்ற ஆண் யார் என்று அவர்கள் கேள்விக்குறியுடன் அவளைப் பார்க்கின்றனர்.

தன்னை எல்லோரும் ஆச்சரியப்படக் கூடிய பொருளாகவும், கேலிச் சித்திரமாகவும் பார்க்கிறார்கள் என்பதை ஆர்ட்டிமிஸியாவும் உணர்ந்தே இருக்கிறாள். ஓவியங்களை வரைந்தால் மட்டும் போதாது, அதற்குரிய அங்கீகாரத்தையும் தான் பெற வேண்டும் என்று நினைக்கும் அவள் 'Academy of Arts' என்ற அமைப்பைத் தேடிச் செல்கிறாள். அந்த அமைப்பில் பிரபல ஓவியர்கள் எல்லோரும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தானும் அங்கு உறுப்பினராக இருக்க வேண்டும் என்று அவள் ஆசைப்படுகிறாள். ஆனால், பெண்ணை அங்கு உறுப்பினராக சேர்ப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. 'நீ வரைந்த ஓவியங்கள் ஏதேனும் இருக்கின்றனவா?' என்று அங்கு முக்கிய பொறுப்பில் இருந்தவர் கேட்க, தான் கையோடு கொண்டு வந்திருந்த தன்னுடைய நிர்வாண ஓவியங்களை அவள் காட்டுகிறாள். அதைப் பார்த்து அங்குள்ளவர்கள் அதிர்ச்சியடைந்து விடுகின்றனர். ஒரு இளம்பெண் ஆண்களை நிர்வாணமாக வரைகிறாளா என்று கேவலமாக பார்க்கின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் அவளை உறுப்பினராக எப்படி சேர்த்துக் கொள்வார்கள்? தோல்வியடைந்து அங்கிருந்து திரும்புகிறாள் ஆர்ட்டிமிஸியா.

திறந்த வெளிகளில் படங்களை வரையும் பிரபல ஓவியரான Agostino Tassiஐ அவள் பார்க்கிறாள். அவனுடைய தனித்துவ குணத்தையும், அபாரமான ஓவியத் திறமையையும் பார்க்கும் அவள், அவன் மீது ஈர்க்கப்படுகிறாள். அவனிடமிருந்து பல விஷயங்களையும் அவள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். தான் வரைந்த ஓவியங்களை அவள் அவனிடம் காட்டுகிறாள். அவன் அவற்றைப் பார்த்தவுடன், கிழித்தெறிந்து விடுகிறான். 'இது என்ன ஓவியமா?' என்கிறான். தனக்கு ஓவியக் கலை பற்றிய பாடங்களைக் கற்றுத் தர முடியுமா என்று அவள் கேட்கிறாள். ஒரு பெண்ணுக்கு ஓவியத்தைப் பற்றி கற்றுத் தருவதற்கு தான் தயாராக இல்லை என்று தீர்க்கமான குரலில் கூறுகிறான் அவன். அதைக் கேட்டு மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகிறாள் ஆர்ட்டிமிஸியா.

அவளின் தந்தையின் ஓவியக் கூடத்தில் இருந்து படங்களை வரைபவன்தான் Tassi.  மிகப் பெரிய திறமைசாலியான அவன் மீது ஆர்ட்மிஸியாவின் தந்தைக்கே உயர்ந்த மதிப்பு இருக்கிறது. பகல் முழுக்க ஓவியங்களை வரைந்து கலையில் முழுமையாக கரைந்து கிடப்பது, இரவு வந்து விட்டால் மாடல்களாக இருக்கும் பெண்களுடன் படுத்துக் கிடப்பது, உடலுறவு கொள்வது- இதுதான் டாஸியின் அன்றாட வேலை. ஆர்ட்டிமிஸியாவின் தந்தைக்கு இந்த விஷயங்கள் நன்கு தெரியும். அதனால், இரவில் அவன் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும் என்று அவர் அங்கு வரவே மாட்டார்.

தன் மகளுக்கு எதையும் கற்றுத் தர முடியாது என்று டாஸி கூறிய விஷயம் அவளுடைய தந்தைக்குத் தெரிய வருகிறது. அவரே டாஸியிடம் நேரடியாக பேசுகிறார். மிகுந்த வற்புறுத்தலுக்குப் பிறகு, அவன் அவளுக்கு கற்றுத் தருவதற்கு ஒத்துக் கொள்கிறான். இந்த விஷயம் தெரிந்ததும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறாள் ஆர்ட்டிமிஸியா.

மறுநாளே அவள் டாஸியைத் தேடிச் செல்கிறாள். டாஸி அவளையே வைத்த கண் எடுக்காது பார்க்கிறான். 'நீங்கள் எனக்கு நிர்வாணமாக 'போஸ்' தர முடியுமா?' என்று எந்தவித தயக்கமும் இல்லாமல் கேட்கிறாள் ஆர்ட்டிமிஸியா. ஆரம்பத்தில் தயங்கும் அவன், பின்னர் அதற்குச் சம்மதிக்கிறான். பிறகென்ன? அவன் நிர்வாண கோலத்தில், படுத்துக் கொண்டும், சாய்ந்து கொண்டும் இருக்க, அவள் அவனை ஓவியமாக வரைகிறாள். ஒரு சட்டத்தை கையில் பிடித்துக் கொண்டு, கண்களுக்கு முன்னால் இல்லாத மலைகளையும், வானத்தையும், மேகங்களையும், பறவைகளையும், மலர்களையும், நிலவையும், நட்சத்திரங்களையும் எப்படி மனதில் கற்பனை பண்ணி ஓவியமாக வரைவது என்பதை அவளுக்கு அவன் சொல்லித் தருகிறான். அவனுடைய வியக்கத்தக்க கற்பனை வளத்தையும், ஓவியம் வரையும் ஆற்றலையும் பார்த்து அவனை மரியாதையுடன் அண்ணாந்து பார்க்கிறாள் ஆர்ட்டிமிஸியா.

அவர்கள் தினமும் பார்க்கிறார்கள். பேசுகிறார்கள். ஓவியம் பற்றி அவன் கற்றுத் தருகிறான். அவள் கற்றுக் கொள்கிறாள். பெரும்பாலும் அவர்கள் இருவர் மட்டுமே தனியே இருக்கிறார்கள். ஒரு நாள் உணர்ச்சி வசப்பட்ட நிலையில், ஆர்ட்டிமிஸியாவுடன் உடல் ரீதியாக உறவு கொள்ள முயற்சிக்கிறான் டாஸி. அவ்வளவுதான்- அதிர்ச்சியடைந்த அவள் அவனை அடித்து விடுகிறாள். அவன் நிலை குலைந்து போகிறான்.


அதற்குப் பிறகு அவள் ஏமாற்றமடைந்த நிலையிலும், விரக்தியடைந்த தன்மையிலும் இருக்கிறாள். டாஸியைப் பார்க்காமல் இருந்து விடுவோமா என்று நினைக்கிறாள். ஆனால், அவனின் ஓவியத் திறமை அவளைக் காந்தமென இழுக்கிறது. தன்னையும் மீறி அந்த அழகு தேவதை அவனால் ஈர்க்கப்படுகிறது. மீண்டும் அவனைத் தேடி அவள் செல்கிறாள். அவன் என்ன செய்தாலும், இப்போது அவள் தடுப்பதில்லை. இன்னும் கூறுவதாக இருந்தால்- ஆர்ட்டிமிஸியாவே தன் விருப்பப்படி தன் உடலை அவனுக்குத் தருகிறாள். அவன் ஓவியத்தையும் அவளுக்கு கற்றுத் தருகிறான். அதே நேரத்தில்- உடலுறவு கொண்டு அவளுக்கு சந்தோஷத்தையும் தருகிறான். இந்த உறவு தொடர்ந்து நடக்கிறது- ஆர்டிமிஸியாவின் முழுமையான ஒப்புதலுடன்.

இந்த விஷயம் எப்படியோ ஆர்ட்டிமிஸியாவின் தந்தை Orazioவிற்குத் தெரிய வருகிறது. அவரால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஓவியம் கற்றுத் தருகிறேன் என்ற போர்வையில் ஒரு காம வெறியன் தன் மகளின் கற்பைப் பறிப்பதா என்று பதைபதைக்கும் அவர் டாஸி மீது வழக்கு தொடுக்கிறார்.

நீதி மன்றத்திற்கு டாஸி வரவழைக்கப்படுகிறான். ஆர்ட்டிமிஸியாவும்தான். 'டாஸி உன்னைக் கற்பழித்தானா?' என்று நீதிமன்றத்தில் அவளிடம் கேட்கப்படுகிறது. அதற்கு அவள் 'அவர் என்னை கற்பழிக்கவில்லை. நான் அவரைக் காதலிக்கிறேன். அவரும் என்னைக் காதலிக்கிறார். எனக்கு அவர் சுகம் தந்தார்' என்கிறாள்- வெகுளியாக. 'இவன் எத்தனைப் பெண்களுடன் இதுவரை படுத்திருக்கிறான் என்று உனக்கு தெரியுமா? இவன் ஒரு காமப் பிசாசு. தன் சொந்த தங்கையைக் கூட இவன் விட்டு வைக்கவில்லை' என்று கூறுகிறார் அங்கு வாதாடுபவர். வழக்கு தினமும் நடக்கிறது. 'நான் இப்போதும் ஒரு கன்னிப் பெண்தான்' என்கிறாள் ஆர்ட்டிமிஸியா. அதைத் தொடர்ந்து இரண்டு கன்யாஸ்திரீகள் அவளைப் பரிசோதிக்கின்றனர். முடிவில் 'இவள் கன்னிப் பெண் அல்ல. உடல் ரீதியாக உறவு கொள்ளப்பட்டிருக்கிறாள்' என்று அவர்கள் கூறுகிறார்கள். இறுதியில் 'நான் இவளுடன் பல தடவைகள் உடலுறவு கொண்டிருக்கிறேன்' என்று டாஸியே ஒத்துக் கொள்கிறான். ஒரு அப்பாவிப் பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்ததற்காக, அவனுக்கு நீதிமன்றம் இரண்டு வருட கடுங்காவல் தண்டனை விதிக்கிறது.

அத்துடன் படம் முடிவடைகிறது. இப்போது டைட்டில் மூலம் அதற்குப் பிந்தைய விஷயங்கள் கூறப்படுகின்றன. ஆர்ட்டிமிஸியா அதற்குப் பிறகு தன் வாழ்நாளில் டாஸியைச் சந்திக்கவேயில்லை. அவள் தூரத்திலிருக்கும் ஒரு மனிதரைத் திருமணம் செய்து கொள்கிறாள். அவளுக்கு இரண்டு மகள்கள் பிறக்கிறார்கள். தான் டாஸியிடம் கற்ற திறமைகளை பயன்படுத்தி அபாரமான ஓவியங்கள் வரைந்து அவள் புகழ் பெறுகிறாள். அவள் வரைந்த ஓவியங்கள் உலகமெங்கும் கண்காட்சிகளில் வைக்கப்படுகின்றன. பெரிய விலைக்கு வாங்கப்படுகின்றன. இத்தாலியின் ஃப்ளாரென்ஸ் நகரத்தில் உள்ள Arts Academyயில் சேர்ந்த முதல் பெண் ஓவியரே ஆர்ட்டிமிஸியாதான். தன்னைப் போலவே தன் மகள்களையும் ஓவியர்களாக அவள் உருவாக்குகிறாள். இத்தாலியின் ஓவிய வரலாற்றில் Artemisia என்ற பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படுகிறது.

வரலாற்றில் நடைபெற்ற சம்பவங்களை மாற்றி, கற்பனை கலந்து படத்தை எடுத்திருந்தாலும், பாத்திரமாகவே வாழ்ந்த Valentina Cervi, இயக்குநர் Agnes Merlet, Orazioவாக நடித்த Michel Sarrault, டாஸியாக நடித்த Miki Manojlovic ஆகியோரை நாம் கட்டாயம் பாராட்ட வேண்டும்.

படத்தில் நான் பார்த்த ஒவ்வொரு காட்சியும், கதாபாத்திரமும் என் மனதில் இப்போதும் பசுமையாக நிற்பதிலிருந்தே 'Artemisia'வின் சிறப்பை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.