Logo

ஏ செப்பரேஷன்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 4248
A Separation

என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)

ஏ செப்பரேஷன் - A Separation

(ஈரானிய திரைப்படம்)

2011ஆம் ஆண்டில் திரைக்கு வந்து, உலகமெங்கும் பரபரப்பாக பேசப்பட்ட திரைப்படம்- 'A Separation'.

பாரசீக மொழியில் எடுக்கப்பட்ட இப்படம் 123 நிமிடங்கள் ஓடக் கூடியது.

நகரத்தில் வாழக் கூடிய நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கணவனும் மனைவியும் வாழ்க்கையில் இனிமேல் சேர்ந்து வாழ்வதற்கான வழியில்லை, விவாகரத்து செய்து தனித் தனியாக வாழ்வதே சாலச் சிறந்தது என்ற முடிவிற்கு ஏன் வருகிறார்கள் என்பதை ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும், உயிரோட்டத்துடனும் கூறும் ஒரு அருமையான படமிது.

திரைக்கு வந்து, சில மாதங்களிலேயே நான் இப்படத்தைப் பார்த்து விட்டேன். இப்போதும் என் மனதில் அப்படத்தின் கதையும், உணர்ச்சிமயமான உரையாடல்களும், யதார்த்தமான காட்சிகளும், கலைஞர்களின் அருமையான நடிப்பும், தொழில் நுட்பக் கலைஞர்களின் மிகச் சிறந்த பங்களிப்பும் திரும்பத் திரும்ப ஞாபகத்தில் வந்து கொண்டே இருக்கின்றன.

Asghar Farhadi இயக்கிய படமிது. படத்தின் கதையை எழுதியவரும் அவரேதான். 'About Elly' என்ற படத்தை இயக்கியதன் மூலம் நல்ல ஒரு பெயரை மக்களிடம் சம்பாதித்திருந்த அவர் 'A Separation' திரைப்படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்களால் தலையில் வைத்து கொண்டாடப்படும் இயக்குநராக ஆகி விட்டார்.

2012ஆம் ஆண்டிற்கான சிறந்த வெளிநாட்டு மொழி படம் (Best Foreign Language Film) என்ற பிரிவில் Academy Award (ஆஸ்கார்)ஐத் தட்டிச் சென்றது 'A Separation'. இந்த விருதைப் பெற்ற முதல் ஈரானிய படமே இதுதான். 61வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான 'Golden Bear' விருது இப்படத்திற்கு கிடைத்தது. இந்த விருதைப் பெற்ற முதல் ஈரானிய படமே இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதே விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை Peyman Moaadiயும், சிறந்த நடிகருக்கான விருதை Leila Hatamiயும் பெற்றனர். அவர்களுக்கு 'Silver Bears' விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த Foreign Language Filmக்கான பிரிவில் 'A Separation' திரைப்படம், 'Gold Globe' விருதையும் அள்ளிச் சென்றது.

Durban International Film Festivalஇல் 'Best Foreign Language Film' என்ற விருதைப் பெற்றது 'A Separation.'

இந்தியாவில் நடைபெற்ற 'International Film Festival' இல் Asghar Farhadiக்கு சிறந்த இயக்குநர் விருது வழங்கப்பட்டது.

இதைப் போல உலகமெங்கும் நடைபெற்ற இன்னும் பல திரைப்பட விழாக்களிலும் இந்தப் படம் பரிசுகளை அள்ளிச் சென்றிருக்கிறது. படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் ஆஹா ஓஹோ என்று பாராட்டி விமர்சனம் எழுதியிருக்கின்றனர். 'குடும்ப உறவுகளை சமீப காலத்தில் 'ஏ செப்பரேஷன்' திரைப்படம் அளவிற்கு ஆழமாக அலசிய படம் வேறொன்றில்லை' என்று எல்லோரும் எழுதினர்.

பத்திரிகைகளாலும், விமர்சகர்களாலும், திரைப்பட ரசிகர்களாலும் மிகச் சிறந்த படம் என்று ஒரே மனதுடன் கூறப்படும் 'ஏ செப்பரேஷன்' படத்தின் கதைதான் என்ன? ஆர்வமாக இருக்கும் உங்களுக்காக இதோ....

Nader என்ற ஆண், Simin என்ற பெண்ணை திருமணம் செய்து 14 வருடங்கள் ஆகி விட்டன. அவர்களுக்கு Termeh என்ற 11 வயது மகள் இருக்கிறாள். டெஹ்ரானில் அவர்கள் வாழ்கிறார்கள். ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து வாழ்வது என்ற நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் தன் கணவனுடனும், மகளுடனும் அந்த நாட்டை விட்டு வேறு எங்காவது போய் விட வேண்டும் என்றுதான் நினைத்தாள் சிமின். இப்போது நிலவிக் கொண்டிருக்கும் சூழலில் தங்களின் அன்பு மகள் டெர்மெஹ் வளர்வதை சிமின் விரும்பவில்லை. ஆனால், அவளுடைய விருப்பத்தை அவளுடைய கணவன் ஏற்றுக் கொள்ளவில்லை. நாடெர் அதற்கு மறுத்து விடுகிறான். அவன் தன் அன்பு தந்தையைப் பற்றி நினைத்துப் பார்க்கிறான். அந்த வயதான தந்தையும் அவர்களுடன்தான் வசிக்கிறார். அவருக்கு நினைவாற்றல் இழப்பு என்ற 'Alzheimer' நோய் இருக்கிறது. நாடெர் ஈரானில்தான் தொடர்ந்து வசிக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்க, அவனை விவாகரத்து செய்து விடலாம் என்ற முடிவிற்கு வருகிறாள் சிமின். அதற்காக மனுவும் போடுகிறாள்.

குடும்ப நல நீதிமன்றம் அந்த தம்பதிகளின் பிரச்சினையைக் காது கொடுத்து கேட்கிறது. ஆனால், விவாகரத்து வழங்கக் கூடிய அளவிற்கு காரணங்கள் பலமானவையாக இல்லை என்று நினைக்கும் நீதிமன்றம் சிமினின் மனுவை நிராகரித்து விடுகிறது. ஆனால், சிமின் தன் கணவனையும் மகளையும் விட்டு விட்டு, தன் பெற்றோருடன் அங்கிருந்து கிளம்புகிறாள். தன் மனைவியின் சிபாரிசை வைத்து, நாடெர், Razieh என்ற ஏழை இளம் பெண்ணை, தன் தந்தையை தான் வங்கிக்கு வேலைக்குச் சென்றிருக்கிற வேளையில் பார்த்துக் கொள்வதற்காக வேலைக்கு அமர்த்துகிறான். அந்தப் பெண் இறை பக்தி நிறைந்தவள். ரஸியேவின் கணவன் Hodjat ஒரு முரடன். பொதுவாக, மனைவி வேலைக்குச் செல்வதாக இருந்தால், அதற்கு அவளுடைய கணவனின் சம்மதம் வேண்டும். ஆனால், முன் கோபியான தன் கணவனிடம் ஒரு வார்த்தை கூட கூறாமல் அந்த வேலையில் வந்து சேர்கிறாள் Razieh. ஏதாவது வேலை செய்தால்தான், பொருளாதார ரீதியாக அவளுடைய குடும்பம் பிழைக்க முடியும். அதுதான்  உண்மையான நிலை. இன்னும் சொல்லப் போனால்- தன் இளம் வயது மகளையும் தான் வேலைக்குச் செல்லும் வீட்டிற்கு தன்னுடன் அழைத்துக் கொண்டே அவள் செல்கிறாள்.


நாடெரின் வயதான தந்தையை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதை உணர்கிறாள் ரஸியே. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் எதுவுமே செய்ய முடியாமலிருக்கும் நாடெரின் தந்தைக்கு எல்லாவற்றையுமே ரஸியேதான் செய்ய வேண்டியதிருக்கிறது. அந்த பெரியவரின் உடலை நீரால் சுத்தம் செய்வது, குளிப்பாட்டுவது - இவற்றைக் கூட அவள்தான் செய்ய வேண்டியதிருக்கிறது. மத நம்பிக்கை கொண்ட அவள் ஆரம்பத்தில் சற்று தயங்குகிறாள். எனினும், ஒரு மத அமைப்பிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, 'ஒரு ஆணைத் தொட்டு நீரால் கழுவுவது பாவச் செயலா?' என்று ரஸியே கேட்கிறாள். அவர்கள் 'அது பாவச் செயல் அல்ல' என்று கூறிய பிறகுதான் வேலையையே அவள் தொடர்கிறாள். அதே நேரத்தில்- அந்த வேலைக்கு தன் கணவன் ஹோட்ஜாட்டை எப்படியாவது கொண்டு வந்து விட வேண்டும் என்று அவள் நினைக்கிறாள். தான் அந்த வீட்டில் ஏற்கெனவே வேலையில் சேர்ந்திருக்கும் விஷயம் அவனுக்கு தெரியக் கூடாது என்றும் அவள் நினைக்கிறாள். அவள் தற்போது கர்ப்பமாக இருப்பதால், அவளுக்கு வேலை செய்வதே மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கிறது.

நாடெர் ஹோட்ஜாட்டை வேலைக்காக நேர் காணல் செய்கிறான். அவனை வேலைக்கு வைத்துக் கொள்வது என்றும் அவன் தீர்மானிக்கிறான். ஆனால், Hodjat பலரிடமும் கடன் வாங்கி, பல பிரச்சினைகளிலும் மாட்டி, திணறிக் கொண்டிருக்கிறான். வேலைக்கு அவன் கிளம்பிக் கொண்டிருக்கிறான். அந்த நேரத்தில் தாங்கள் கொடுத்த பணத்தைத் திரும்ப தராததற்காக, கடன் கொடுத்தவர்கள் அவனைச் சிறைக்கு அனுப்பி வைக்கிறார்கள். அதனால், ரஸியேவே நாடெரின் வீட்டிற்கு வேலைக்கு வருகிறாள்.

ஒருநாள் நாடெரும் அவனுடைய மகள் டெர்மெஹ்ஹும் தங்களுடைய வீட்டிற்கு திரும்பி வரும்போது, நாடெரின் வயதான தந்தை சுய உணர்வற்று படுக்கையறையின் தரையில் விழுந்து கிடக்கிறார். அவருடைய ஒரு கை, கட்டிலுடன் சேர்த்து கட்டப்பட்டிருக்கிறது. அப்போது Razieh அங்கு இல்லை. சற்று நேரத்தில் ரஸியே அங்கு வருகிறாள். தன் தந்தையை மோசமான நிலையில் விட்டுச் சென்று விட்டதற்காக அவளை கோபத்துடன் நாடெர் திட்டுகிறான். தன்னுடைய அறையிலிருந்து பணத்தை அவள் திருடி விட்டதாக அவள் மீது அவன் குற்றம் சுமத்துகிறான். (ஆனால், சிமின் அங்கு இருந்தபோது, அவள் சில செலவுகளுக்காக அந்த பணத்தை எடுத்திருந்தாள். அந்த விஷயம் நாடெருக்குத் தெரியாது.) தான் பணம் எதுவும் திருடவில்லை என்று அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு கூறுகிறாள் ரஸியே. ஆனால், அவளுடைய கூற்றை நாடெர் நம்ப தயாராக இல்லை. அன்று வேலை செய்ததற்கு சம்பளம் கேட்கிறாள் ரஸியே. பயங்கர கோபத்திற்கு ஆளான நாடெர், அவளை வீட்டை விட்டு வெளியேறும்படி கூறுகிறான். அவள் மீண்டும் சம்பளத்திற்காக போராட, அவளைப் பிடித்து தள்ளுகிறான் நாடெர். அப்போது படிகளுக்கு அருகில் கீழே விழுந்து விடுகிறாள் ரஸியே. Hodjatஇன் சகோதரி அப்போது சிமினுக்கு ஃபோன் பண்ணுகிறாள். ரஸியே மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், தரையில் விழுந்ததில், அவளுடைய கர்ப்பம் கலைந்து விட்டதாகவும் அவள் கூறுகிறாள்.

ரஸியேவின் கர்ப்பம் கலைந்ததற்கான காரணம் என்ன என்பதைப் பற்றியும், நாடெர் அவளை கீழே தள்ளி விட்டதுதான் அதற்குக் காரணம் என்பதைப் பற்றியும் விசாரிக்க நீதிமன்றம் தயாராகிறது. ரஸியே கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்திருந்து, அவள் கர்ப்பம் கலைவதற்கு நாடெர் காரணமாக இருந்திருந்தானென்றால், அவனுக்கு ஒரு வருடத்திலிருந்து மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. தன் தந்தையை கவனிக்காமல் அனாதையாக விட்டு விட்டுப் போய் விட்டாள் என்று ரஸியே மீது குற்றம் சுமத்துகிறான் நாடெர். முரட்டு குணம் கொண்ட Hodjat உடல் ரீதியாக நாடெரைத் தாக்குகிறான். அவனையும், அவனுடைய குடும்பத்தையும் Hodjat மிரட்டுகிறான். அவனுக்கு ஆதரவாக இருக்கும் எல்லோரையும் வாய்க்கு வந்தபடி திட்டுகிறான் ஹோட்ஜாட். Hodjat அங்கு தாறுமாறாக நடந்து கொண்டிருக்கவே, அவனை வெளியேற்றுகிறது நீதிமன்றம். இந்த சம்பவங்களால் தான் மன ரீதியாக மிகவும் அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதாகவும், அதற்காக மருந்து உட்கொள்வதாகவும் கூறுகிறாள் ரஸியே. அப்போதுதான் ஒரு புதிய உண்மையே நாடெருக்குத் தெரிய வருகிறது. நாடெரின் தந்தை தரையில் மயக்கமடைந்து விழுந்து கிடந்தார் அல்லவா? அன்று எப்போதையும் விட நாடெர் சீக்கிரமே வீட்டிற்குத் திரும்பி வந்து விட்டான். அவனுடன் அவனுடைய மகளும் வருகிறாள். அப்போது ரஸியே வீட்டில் இல்லை. தானும் தன் தாயும் ஒரு டாக்டரைப் பார்ப்பதற்காக வெளியே சென்றதாக கூறுகிறாள், ரஸியேவின் மகள். இந்தச் சம்பவம் நாடெரைச் சிந்திக்க வைக்கிறது. முரட்டு குணம் கொண்ட Hodjat, ரஸியேவிடம் மோசமான முறையில் நடத்திருப்பானோ, அவளை உடல் ரீதியாக அவன் அடித்திருப்பானோ, அதனால் அவளுக்கு கர்ப்பச் சிதைவு உண்டாகியிருக்குமோ என்று சிந்திக்க ஆரம்பிக்கிறான் நாடெர்.


தன் மகள் Termehஇன் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்று பயப்படும் சிமின், Hodjat, Razieh இருவருடனும் ஒரு பொருளாதார ஒப்பந்தம் போடுவதற்கு தயாராகிறாள். கருவிலேயே இறந்து விட்ட அந்த குழந்தைக்காக ஒரு பெரிய தொகையைத் தர தயாராக இருக்கிறாள் சிமின். ஆனால், அவ்வாறு பணம் கொடுப்பதற்கு எதிராக இருக்கிறான் நாடெர். அப்படி பணம் தந்தால், குற்றத்தை நாம் ஒப்புக் கொண்டதாக அர்த்தமாகி விடும் என்கிறான் அவன். அதே நேரத்தில்- ரஸியே கர்ப்பமாக இருக்கும் விஷயம் தனக்கு தெரியவே தெரியாது என்று தான் பொய் சொன்னதையும் அவன் ஒப்புக் கொள்கிறான். இன்னும் சொல்லப் போனால்- கர்ப்பம் கலைந்ததற்கு நாடெரின் செயல்கள்தாம் காரணமா என்ற சந்தேகம் Raziehவிற்கும் இருக்கிறது. ஏனென்றால், அவள் ஏற்கெனவே ஒரு காரால் மோதப்பட்டிருக்கிறாள். அன்று இரவு கர்ப்பம் சிதைந்ததற்கான அறிகுறிகளை அவள் உணர்கிறாள்.

இதற்கிடையில், திரும்பவும் வீட்டிற்கு வந்து தன் கணவனுடன் வாழ தீர்மானிக்கிறாள் சிமின். தன் மகள் Termeh அங்கு இருக்கும் வரை, தான் வேறெங்கும் போக முடியாது என்பதையும் அவள் உணர்கிறாள். ஆனால், கணவனுடன் தொடர்ந்து விவாதம் செய்ததன் விளைவாக அவளுடைய மனம் மீண்டும் மாறுகிறது. வீட்டை விட்டு வெளியேறி, தன்னுடன் வந்து விடும்படி தன் மகள் Termehவிடம் கூறுகிறாள் சிமின். நாடெர், காரில் அமர்ந்திருக்கும் தன் மனைவியை அழைத்து வரும்படி கூறுகிறான். தான் குற்றம் செய்தவன் என்ற எண்ணத்துடன் அவள் இப்போதும் இருந்தால், தான் Razieh, Hodjat இருவருக்கும் பணம் தர தயாராக இருப்பதாக அவன் கூறுகிறான். டெர்மெஹ் தன் தாயுடன் அங்கிருந்து கிளம்புகிறாள். அவர்கள் அமர்ந்திருக்கும் கார் நகர்வதைப் பார்த்தவாறு நின்று கொண்டிருக்கிறான் நாடெர். தான் ஒரு குற்றவாளி அல்ல, தான் ஒரு அப்பாவி என்ற உண்மையை தன் மகளாவது உணர்ந்திருக்கிறாளே என்ற திருப்தியும், சந்தோஷமும் அவனுடைய முகத்தில் நிழலாடுகின்றன.

இப்போது ஹோட்ஜாட்டிக்குக் கடனாக பணம் தந்தவர்கள் ரஸியேவையும், ஹோட்ஜாட்டையும் அவர்களுடைய வீட்டில் சந்திக்கிறார்கள். தங்களுக்குத் தர வேண்டிய பணத்தைக் கொடுக்கும்படி கேட்கின்றனர். ரஸியேவின் கர்ப்பம் கலைந்ததற்கு உண்மையான காரணம் என்ன? யார்? என்பதைப் பற்றி இப்போதும் குழப்பத்துடன் இருக்கும் நாடெர் 'செக்கை எழுதுகிறான். ஆனால், கர்ப்பம் கலைந்ததற்கு தான்தான் காரணம் என்று ரஸியேவை 'குர் ஆனி'ன் மீது சத்தியம் பண்ணி கூறச் சொல்கிறான். தன் கணவன் ஹோட்ஜாட் எவ்வளவு வற்புறுத்தியும், இறை பயம் கொண்டவளாக இருப்பதாலும், பொய் சத்தியம் பண்ணுவதன் மூலம், தன் மகளுக்கு ஏதாவது ஆபத்து உண்டாகி விடக் கூடாதே என்ற அச்சம் காரணமாகவும், அப்படி சத்தியம் பண்ணினால் அது ஒரு பாவச் செயலாக இருக்கும் என்று அவள் நினைக்கிறாள். முற்றிலும் ஏமாற்றத்திற்கு ஆளாகும் ஹோட்ஜாட் நிலை குலைந்து, கீழே விழுந்து புரள்கிறான். தன்னைத் தானே மிருகத்தனமாக தாக்கியவாறு, வீட்டை விட்டு வெளியேறுகிறான். நாடெர் பணத்தைத் தராமல், வைத்துக் கொள்கிறான்.

நாடெரும் சிமினும் மீண்டும் விவாகரத்து கேட்டு, நீதி மன்றத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளின் மூலம், நாடெரின் தந்தை இறந்து விட்டார் என்பதை நாம் தெரிந்து கொள்கிறோம். அவர்களுக்கு விவாகரத்து வழங்க தீர்மானித்திருப்பதாக நீதிபதி கூறுகிறார். அவர்களுடைய மகள் Termehவிடம் 'நீ யாருடன் வாழப் போகிறாய்?' என்று கேட்கிறார் நீதிபதி. அவள் கண்ணீர் மல்க 'நான் இதைப் பற்றி ஏற்கெனவே தீர்மானித்து விட்டேன். நான் கூறுகிறேன். அதுவரை இவர்கள் இருவரையும் வெளியே அமரும்படி கூறுங்கள்' என்கிறாள். அதைத் தொடர்ந்து நாடெரும், சிமினும் அறையிலிருந்து வெளியேறிச் செல்கிறார்கள். உள்ளே மகள் Termeh அமர்ந்திருக்கிறாள். அவர்களுக்கும் அவளுக்குமிடையே ஒரு கண்ணாடிச் சுவர்... Termeh நீதிபதியிடம் என்ன கூறினாள்?

'A Separation' படம் இந்த கேள்விக்கு விடை கூறும்.

Nader ஆக Peyman Moaadi

Simin ஆக Leila Hatami

Termeh ஆக Sarina Farhadi

Hodjat ஆக Shahab Hosseini

Razieh ஆக Sareh Bayat

ஒவ்வொருவரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்பதே உண்மை.

படத்தைப் பார்க்கும்போது நம் அல்லது நமக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தின் கதையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம், பார்வையாளர்கள் எல்லோருக்கும் உண்டாகும்.

ஏராளமான பட விழாக்களில் 'ஏ செப்பரேஷன்' விருதுகளை அள்ளிச் சென்றதற்கான காரணம் இப்போது புரிகிறதா?

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.