Logo

பால்ஸாக் அன்ட் த லிட்டில் சைனீஸ் ஸீம்ஸ்ட்ரெஸ்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 4165
Balzac and the Little Chinese Seamstress

என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)

பால்ஸாக் அன்ட் த லிட்டில் சைனீஸ் ஸீம்ஸ்ட்ரெஸ் – Balzac and the Little Chinese Seamstress

(சீன திரைப்படம்)

சி

ல திரைப்படங்களைப் பார்த்தவுடன் நாம் மறந்து விடுவோம். சில படங்கள் நாட்கணக்கிலோ, வாரக் கணக்கிலோ நம் மனங்களில் நின்று கொண்டிருக்கும். ஒரு சில திரைப் படங்கள்தாம் பல மாதங்கள் கடந்து போன பிறகும், பல வருடங்கள் கடந்தோடிய பிறகும், சிறிதும் மறையாமல் நம் ஒவ்வொருவரின் இதயங்களிலும் பசுமையாக அப்படியே வாழ்ந்து கொண்டிருக்கும். அத்தகைய ஒரு படம் இது.

2002 ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இப்படம் 111 நிமிடங்கள் ஓடக் கூடியது.

சீனா- ஃப்ரெஞ்ச் கூட்டுத் தயாரிப்பில் உருவான இப்படம் `Mandarin' மொழியில் எடுக்கப்பட்டது.

படத்தின் இயக்குநர் Dai Sijie.

2002 ஆம் ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது.

Dai எழுதிய இதே பெயரைக் கொண்ட புதினம்தான், 'Balzac and the Little Chinese Seamstress' படத்திற்கான அடிப்படை. சீனாவில் கலாச்சார புரட்சி நடைபெற்ற காலத்தில், Sichuan பகுதியில் உள்ள ஒரு குக்கிராமத்திற்கு சீர்திருத்தக் கல்விக்காக இரண்டு பதின்பருவத்தில் உள்ள இளைஞர்கள் அனுப்பப்படுகிறார்கள். அவர்களையும், அவர்கள் சென்ற கிராமத்திற்கு பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பேரழகு படைத்த ஒரு இளம் பெண்ணையும் சுற்றி பின்னப்பட்டதே இப்படத்தின் கதை.

1971 லிருந்து 1974 வரை நடைபெறுவதாக படத்தின் கதை காட்டப்படுகிறது. கிராமத்திற்கு வரும் இரு இளைஞர்களில் ஒருவனின் பெயர் Luo Min. இன்னொருவனின் பெயர் Ma Jianling. அவர்கள் வந்து சேரும் அந்த கிராமம் ஒரு அழகான மலைப் பகுதியில் இருக்கிறது. கிராமத்திற்குள் நுழைந்தவுடன், கிராமத்தின் தலைவரால் அந்த இரு இளைஞர்களும் சோதிக்கப்படுகிறார்கள். அவர்களின் குடும்பப் பின்னணி பற்றி அவர் விசாரிக்கிறார். லுவோவின் தந்தை ஒரு பல் வைத்தியர் என்பதும், மாவின் தந்தை ஒரு டாக்டர் என்பதும் தெரிய வருகிறது. இளைஞர்களின் பைகளை கிராமத்தின் தலைவர் சோதித்துப் பார்க்கிறார். அப்போது அவருடைய கையில் ஒரு சமையல் புத்தகம் கிடைக்கிறது. அதை அவர் உடனடியாக எரித்து விடும்படி  ஆணை பிறப்பிக்கிறார். `பூர்ஸுவாக்களின் சொத்து' அது என்கிறார் அவர். மாவின் பையில் ஒரு வயலின் இருக்கிறது. அதை நெருப்பில் அவர் போட்டு எரிக்க முயல்கிறார். அதை வேகமாக தடுத்து நிறுத்தி விடுகிறான் லுவோ. அந்த வயலினை வைத்து  'Mozart is Thinking of Chairman Mao' என்ற `மலை பாடலை' மா அருமையாக வாசிப்பான் என்று பொய் சொல்கிறான் லுவோ. அதைக் கேட்டு அந்த வயலினை விட்டு விடுகிறார் கிராமத்தின் தலைவர். 

அந்த இரு இளைஞர்களுக்கும் ஒரு வீடு தரப்படுகிறது. அந்த கிராமத்து மனிதர்களுடன் சேர்ந்து அவ்விருவரும் பல்வேறு வேலைகளையும் செய்கின்றனர். அவர்கள் மனிதக் கழிவுகளை வாளிகளில் பயிர்களுக்கு உரமாக எடுத்துக் கொண்டு  போய் போடுகின்றனர். அங்கிருக்கும் நிலக்கரிச் சுரங்கத்திற்குச் சென்று வேலை பார்க்கின்றனர்.

ஒரு நாள் பக்கத்திலிருக்கும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் அந்த ஊருக்கு வருகிறாள். பார்ப்போரைக் காந்தமென சுண்டி இழுக்கக் கூடிய பேரழகு படைத்த அழகு தேவதை அவள். பக்கத்து கிராமத்திலிருக்கும் ஒரு வயதான தையல்காரரின் பேத்தி அவள். தன் தாத்தாவுடன் அவள் இளைஞர்கள் தற்போது இருக்கும் கிராமத்திற்கு வரும்போது, மா வயலின் வாசித்துக் கொண்டிருக்கிறான். இன்னும் சொல்லப் போனால் -மா வயலின் இசைப்பதைக் கேள்விப்பட்டுத்தான் அந்த பெண்ணே அங்கு வருகிறாள். லுவோவும், மாவும் அந்த இளம் பெண்ணுக்கு மிக விரைவிலேயே நண்பர்களாக ஆகிறார்கள். 

அந்த இரு இளைஞர்களும் அந்த இளம் பெண்ணின் மீது காதல் கொள்ள ஆரம்பிக்கிறார்கள். அந்த பெண் படிப்பறிவு இல்லாதவள். ஆனால், உலகத்தில் நடைபெறும் எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கக் கூடியவள் அவள். பலவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனப்பாங்கு கொண்டவளாக அவள் இருக்கிறாள். சாதாரண கிராமத்துப் பெண்ணாக இருக்கக் கூடாது, அறிவு நிறைந்த பெண்ணாக இருக்க வேண்டும் என்று அவள் ஆசைப் படுகிறாள்.

இரு இளைஞர்களும் அந்த கிராமத்து இளம் பெண்ணை முற்றிலும் மாற்றுவதாக உறுதி அளிக்கின்றனர். அதற்காக அவர்கள் அவளிடம் ஒரு திட்டம் வகுத்து தருகின்றனர். அதன்படி அந்த கிராமத்தில் வாழும் வேறொரு இளைஞனிடம் இருக்கக் கூடிய சூட்கேஸைத் திருடிக் கொண்டு வருவது என்று அவர்கள் திட்டம் தீட்டுகிறார்கள். அந்த இளைஞனும் அவர்கள் இருவரையும் போல சீர் திருத்த கல்விக்காக வந்திருப்பவன்தான். ஆனால், அவன் நிரந்தரமாக நகரத்திற்குத் திரும்பிச் செல்லும் நிலையில் இருக்கிறான். அவனுடைய சூட்கேஸிற்குள் தடை செய்யப்பட்ட மேற்கத்திய நாடுகளின் நாவல்களின் மொழி மாற்ற புத்தகங்கள் இருக்கின்றன. சீனாவில் கலாச்சார புரட்சி நடைபெறுவதால், அந்த நாவல்கள் அந்த நாட்டில் தடைசெய்யப்பட்டிருக்கின்றன.


அந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது. அந்த சூட்கேஸிலிருந்து பல மேற்கத்திய நாவல்களின் மொழி பெயர்ப்பு நாவல்கள் அவர்களுக்குக் கிடைக்கின்றன. லுவோ அந்த தையல்கார தாத்தாவின் பேத்திக்கு ஒவ்வொரு நாளும் அந்த நூல்களை எடுத்து வாசித்துக் காட்டுகிறான். உலக புகழ் பெற்ற எழுத்தாளர்களான Stendhal, Kipling, Dostoevsky ஆகியோரின் மிகச் சிறந்த  படைப்புகளையும் அவன் அவளுக்கு வாசித்துக் காட்டுகிறான். அனைத்து எழுத்தாளர்களின்  படைப்புகளையும் அவள் காதால் கேட்டு இன்புற்றாலும், அவள் மனதில் இடம் பெற்றதென்னவோ Balzacகின் எழுத்துக்கள்தான். பால்ஸாக்கின் அருமையான எழுத்திலும், அவரின் மிகச் சிறந்த நடையிலும், கதாபாத்திர படைப்பிலும், கதையை எழுதிச் செல்லும் தன்மையிலும் தன்னையே பறி கொடுக்கிறாள் அந்தப் பெண். பால்ஸாக் நூலில் கதாநாயகியை வர்ணிக்கும்போது, தன்னையே அவர் வர்ணிப்பதைப் போல அவள் உணர்கிறாள். அவரின் அபார எழுத்தாற்றலை நினைத்து, மனதிற்குள் அவருக்கு தனியான இடத்தைத் தருகிறாள் அவள்.

நாட்கள்  நகர்ந்து செல்கின்றன. மலையின் உச்சியில் அமர்ந்து, அந்த மூவரும் தங்களின் நாட்களை இன்பமாக கழிக்கின்றனர். எங்கோ இருக்கும் நகரத்திலிருந்து அங்கு வந்த அந்த இரு இளைஞர்களுக்கும் தென்றலாக இருக்கிறாள் அந்த பெண். வெளி உலகம் என்றாலே என்னவென்று தெரியாமலிருந்த அந்த அப்பாவி இளம் பெண், அந்த இளைஞர்கள் மூலம் எவ்வளவோ விஷயங்களைத் தெரிந்து கொள்கிறாள். பல எழுத்தாளர்களின் பெயர்களும் அவளுக்கு அத்துப்படி ஆகின்றன. உலக புகழ் பெற்ற பல இலக்கியங்களையும் அவள் தெரிந்து கொள்கிறாள். சுற்றிலும் இயற்கை பச்சைப் பசேல் என்று ஆட்சி செய்து கொண்டிருக்கும் அந்த மலைப் பகுதியில் அமர்ந்து அந்த மூவரும் கதைகள் பேசுகின்றனர்...  இசை இசைக்கின்றனர்... பாடுகின்றனர்... ஆடி குதிக்கின்றனர்... கவலைகளை மறந்து சிரிக்கின்றனர்... ஒவ்வொரு நொடியையும் சந்தோஷத்தில் மூழ்கடித்துக் கொண்டாடுகின்றனர். நேரம் போவதே தெரியாமல் பேசுகின்றனர்... பேசுகின்றனர்... பேசுகின்றனர்... தான் இதுவரை பார்த்திராத குதூகல உலகத்தைப் பார்ப்பதாக உணர்கிறாள் அந்த இளம் தேவதை. அந்த இரு இளைஞர்களும்தான்.

காலப் போக்கில் அந்த பெண் லுவோவின் மீது காதல் கொள்கிறாள். இதற்கிடையில் நகரத்திலிருக்கும் லுவோவின் தந்தையின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. அவரைப் பார்க்க வேண்டும் என்பதற்காக இரண்டு மாதங்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு புறப்படுகிறான் லுவோ. அவன் புறப்படுவதற்கு முன்னால், தனக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது என்று தயங்கிக் கொண்டே கூறுகிறாள் அந்த இளம் பெண்.  ஆனால், அதற்கு மேல் அது என்ன என்று கூறாமல், அதை தன் மனதிற்குள்ளேயே அவள் அடக்கி வைத்துக் கொள்கிறாள். லுவோ அங்கிருந்து கிளம்பி விடுகிறான்.

சில நாட்கள் கழித்து மாவிடம், தான் கர்ப்பமாக இருப்பதாக கூறுகிறாள் அந்த தேவதை. ஆனால்,  சீனாவில் இருக்கும் கறாரான சட்டத்தின்படி 25 வயதுக்கு முன்பு, அவள் திருமணம் செய்து கொள்ள முடியாது. திருமணம் நடைபெற்று விட்டது என்ற சான்றிதழ் இல்லாமல், கருத்தடை செய்து கொள்ளவும் முடியாது. அப்படி கருத்தடை செய்தால், அது சட்ட ரீதியாக குற்றச் செயல் என்று கருதப்படும்.

என்ன செய்வது என்று ஆழமாக சிந்திக்கும் மா நகரத்திற்குள் செல்கிறான். அங்கிருக்கும் ஒரு Gynecologist ஐப் பார்க்கிறான். அவர் அவனுடைய தந்தைக்கு ஏற்கெனவே நன்கு தெரிந்தவராக இருக்கிறார். அவரிடம் கிராமத்தில் இருக்கும் பெண்ணின் கர்ப்பத்தைக் கலைத்து, எப்படியும் உதவ வேண்டும் என்று மன்றாடி அவன் கேட்டுக் கொள்கிறான். கிராமத்திற்கு வந்து யாருக்கும் தெரியாமல், பெண்ணின் கர்ப்பத்தைக் கலைப்பதற்கு அந்த Gynecologist ம் ஒத்துக் கொள்கிறார்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, லுவோ நகரத்திலிருந்து திரும்பி வருகிறான். அந்த மூவரின் ஆட்டமும், பாடலும், இசையும், இலக்கியமும், அரட்டையும், சந்தோஷமும் நிறைந்த நாட்கள் தொடர்கின்றன.  

ஆனால், முன்பு அப்பாவியாக, எதுவுமே தெரியாமலிருந்த, படிப்பறிவற்ற அந்த கிராமத்துப் பெண் இப்போது அந்த நகரத்திலிருந்து வந்த இரு இளைஞர்களால், எவ்வளவோ மாறியிருக்கிறாள். அவர்கள் மூலம் அவள் இதற்கு முன்பு தெரியாத பல புதிய விஷயங்களையும் தெரிந்து கொண்டிருக்கிறாள்.  அவர்கள் அறிமுகப்படுத்திய புதினங்களின் மூலம் அவள் எவ்வளவோ இலக்கிய கதாபாத்திரங்களுடன் பழகியிருக்கிறாள். அந்த கதாபாத்திரங்களின் சந்தோஷங்களிலும், கவலைகளிலும் அவளும் இரண்டறக் கலந்து கரைந்திருக்கிறாள். சுருக்கமாக கூறுவதாக இருந்தால்- முன்பு நாம் பார்த்த அப்பாவி கிராமத்துப் பெண் இல்லை, இப்போது நாம் பார்க்கும் அறிவாளி பெண். Balzac அவளை ஒரு சிந்திக்கக் கூடிய பெண்ணாகவும், வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் அலசி ஆராய்ந்து பார்க்கும் புதுமைப் பெண்ணாகவும் மாற்றி விட்டிருக்கிறார்.

ஒருநாள் திடீரென்று யாருமே எதிர்பார்த்திராத வகையில், அந்த கிராமத்துப் பெண் தான் இதுவரை ஆடி, பாடி குதூகலித்துக் கொண்டிருந்த குக்கிராமத்தை விட்டு `புதிய வாழ்க்கை'யைத் தேடி வெளியேற தீர்மானிக்கிறாள். அவளுடைய வயதான தையல்காரத் தாத்தா அவளைப் போகக் கூடாது என்று தடுக்கிறார். லுவோ கூட எவ்வளவோ கூறிப் பார்க்கிறான். ஆனால், அவள் யார் கூறுவதையும் கேட்பதாயில்லை. தான் பல விஷயங்களையும் தெரிந்து கொண்டாகி விட்டது, தான் நினைத்ததைப் போல அந்த குக்கிராமமே உலகம் அல்ல, அதற்கு வெளியே தான் செயல்படுவதற்கும், தெரிந்து கொள்வதற்கும் மிகப் பெரிய உலகம் இருக்கிறது என்று அவள் உணர்கிறாள். சின்னஞ் சிறிய கிராமத்திற்குள் முடங்கிப் போய் தான் பெற்ற அறிவு வீணாகி விடக் கூடாது என்றும், மேலும் அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டுமென்றால், புதிய அனுபவங்களைப் பெறுவதற்காக பெரிய இடங்களைத் தேடிச் சென்றால் மட்டுமே சரியாக இருக்கும் என்றும் அவள் முடிவு செய்கிறாள். அதை தொடர்ந்து, அவள்  துணிச்சலான மனதுடன் விடை பெற்றுச் செல்வதை, தாங்க முடியாத வேதனையுடனும், ஏக்கத்துடனும் மலை உச்சியில் பார்த்தவாறு பரிதாபமாக நின்று கொண்டிருக்கிறார்கள் லுவோவும், மாவும். Balzac என்ற ஒரு எழுத்தாளனின் அருமையான எழுத்துக்கள்  ஒரு கிராமத்துப் பெண்ணை இப்படி ஒரேயடியாக புதுமைச் சிந்தனை கொண்ட பெண்ணாக வார்த்தெடுக்கும் என்று அவர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.


1974 ஆம் ஆண்டில் லுவோவும், மாவும் கிராமத்திலிருந்து நகரத்திற்குத் திரும்புகிறார்கள். நாளடைவில் Shanghai நகரத்திலிருக்கும் ஒரு `டென்டல், கல்லூரியில் லுவோவிற்குப் பேராசிரியர் வேலை கிடைக்கிறது. மா ஃப்ரான்ஸூக்குச் செல்கிறான். அங்கு ஒரு புகழ் பெற்ற வயலின் கலைஞனாக அவன் ஆகிறான்.

1990 ஆம் ஆண்டில் நாளிதழில் ஒரு செய்தி. தாங்கள் மூன்று வருடங்கள் இருந்த அந்த அழகிய கிராமத்தைப் பற்றிய ஒரு செய்தியை மா வாசிக்கிறான். அங்கு புதிதாக கட்டப்பட்ட அணைக்கட்டிலிருந்து நீர் பெருக்கெடுத்து கிராமத்திற்கு மிகப் பெரிய சேதத்தை உண்டாக்கப் போகிறது என்பதே அந்தச் செய்தி. உடனடியாக மா அந்த கிராமத்திற்குக் கிளம்புகிறான். அந்த புதுமைப் பெண்ணை இப்போதாவது காண முடியுமா என்ற எதிர்பார்ப்புடன்தான். ஆனால், அங்கு அவள் இல்லை. 

மா ஏமாற்றத்துடன் திரும்புகிறான். அந்த கிராமத்தையும், கிராமத்து மக்களையும், இப்போது மிகவும் வயதாகிப் போய் காணப்படும் கிராமத்தின் தலைவரையும், வீடியோவாக படம் பிடித்து தன்னுடன் அவன் எடுத்துக் கொண்டு வருகிறான்.

அவன் தன் பழைய நண்பனான லுவோவை Shanghai நகரத்தில் சந்திக்கிறான்.  Shenzhen, Hong Kong ஆகிய இடங்களில் தான் ஏற்கெனவே கிராமத்திலிருந்து இலட்சியத்துடன் வெளியேறிய இளம் பெண்ணை வலை வீசி தேடியதாகவும், இறுதி வரை அவளைத் தன்னால் கண்டு பிடிக்க முடியவே இல்லை என்றும் கவலை நிறைந்த குரலில் கூறுகிறான் லுவோ.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, மிகப் பெரிய சேதங்களுக்கு ஆளான நகரங்களைப் பற்றியும், கிராமங்களைப் பற்றியும் உள்ள செய்தி எல்லா இடங்களிலும் பரவுகிறது. எங்கு பார்த்தாலும் அதுவே பரபரப்பான செய்தியாக ஆகிறது. அத்துடன் சில வருடங்களுக்கு முன்பு  எங்கோ இருக்கும் கிராமத்தில் இரு இளைஞர்களும், ஒரு இளம் பெண்ணும், ஆடி, பாடி, புத்தகம் வாசித்து, சந்தோஷத்தில் திளைத்திருந்த அந்த இனிய நாட்களும்... அந்த நீரோட்டத்திற்குள், அவர்களின் அந்த மறக்க முடியாத நாட்களும், நினைவுகளும் கூட மூழ்கிப் போய் விட்டன. அத்துடன் படம் முடிவடைகிறது.

லுவோவாகவும், மாவாகவும் நடித்திருக்கும் நடிகர்கள் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்றாலும் நம் மனங்களில் அழியாமல் நிரந்தரச் சின்னமாக வாழ்ந்து கொண்டிருப்பவர் அந்த இளம் பெண்ணாக நடித்த Zhou Xunதான். என்ன அழகு! என்ன இளமை! என்ன துள்ளல்!

2003 ஆம் ஆண்டில் இந்தப் படம் 'சிறந்த வெளிநாட்டுப் படம்' என்ற பிரிவில் ஆஸ்கார் விருதுக்காக சிபாரிசு செய்யப்பட்டது.

'Balzac and the Little Chinese Seamstress' படம் பார்த்து முடித்து சில வருடங்கள் ஆன பிறகும், அந்த அழகான கிராமத்தையும், படத்தின் பிரதான கதாபாத்திரங்களான இளைஞர்களையும், இளம் பெண்ணையும், அவர்கள் புதினங்களை வாசித்து மகிழ்ந்த இயற்கை அழகு ஆட்சி செய்யும் மலையின் உச்சியையும் நம்மால் என்றென்றைக்கும் மறக்கவே முடியாது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.