Logo

யாத்ர

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 6096
Yathra

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

யாத்ர

(மலையாள திரைப்படம்)

பாலு மகேந்திரா இயக்கிய படம். படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவரும் அவர்தான். 1985ஆம் ஆண்டில் இப்படம் திரைக்கு வந்து மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.

இதே படம் முதலில் தெலுங்கில்தான் உருவாக்கப்பட்டது. ‘நிரீக்ஷனா’ என்ற பெயரில் தெலுங்கில் தயாரிக்கப்பட்ட அப்படத்தையும் பாலுமகேந்திராதான் இயக்கினார். தெலுங்கு படம் 1982இல் திரைக்கு வந்தது. தெலுங்கில் பானுசந்தரும், அர்ச்சனாவும் இணைந்து நடித்தார்கள்.

மலையாள ‘யாத்ர’ திரைப்படத்தில் மம்மூட்டி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஷோபனா நடித்தார்.

ஒரு சிறைக் கைதியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை இது.

படத்தின் பிரதான கதாபாத்திரமான உண்ணிகிருஷ்ணன் ஒரு சிறைக் கைதி. அவன் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வருகிறான்.

படத்தின் ஆரம்பக் காட்சியில் மலைப் பகுதிக்கு சுற்றுலாப் பயணம் வந்த ஒரு பள்ளியைச் சேர்ந்த சிறுவர்களும், சிறுமிகளும் பள்ளிக் கூடத்திற்குச் சொந்தமான பேருந்தில் மலையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பேருந்து மலைப் பகுதியில் வளைந்து வளைந்து கீழே வந்து கொண்டிருக்கிறது. சாலையின் திருப்பம் ஒன்றில், முகத்தில் உரோமங்கள் அடர்ந்திருக்க, ஒரு மனிதன் நின்று கொண்டிருக்கிறான். அவன்தான் உண்ணிகிருஷ்ணன். சிறையிலிருந்து அப்போதுதான் அவன் விடுதலையாகி வந்திருக்கிறான்.

சிறுவர்களும் சிறுமிகளும் உற்சாகத்துடன் பாட்டு பாடிக் கொண்டே வருகிறார்கள். உண்ணி கிருஷ்ணன் பேருந்தைப் பார்த்து கையை நீட்டுகிறான். பேருந்து நிற்கிறது. ‘கீழே… அடிவாரத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு என்னை இறக்கி விட முடியுமா?’ என்று கேட்கிறான். இரவு நேரத்தில் காட்டுப் பகுதியில் தனியாக நின்று கொண்டிருக்கும் அவன் மீது இரக்கப்பட்டு, பேருந்தில் அவனை ஏற்றிக் கொள்கிறார்கள்.

பேருந்து புறப்படுகிறது. பேருந்தே அமைதியில் மூழ்கியிருக்கிறது. வாய் திறந்து எதுவுமே பேசாமல், ஒரு இருக்கையில் மவுனமாக கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான் உண்ணி கிருஷ்ணன். அவனையே பேருந்தில் இருப்பவர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

பின்னர் அவனைப் பற்றி அவர்கள் கேட்க, அவன் தன்னுடைய கதையைக் கூறுகிறான்.

அவன் ஒரு அனாதை. சொந்தம் என்று கூறிக் கொள்வதற்கு உலகத்தில் யாரும் இல்லாதவன். அவன் ஒரு காட்டு இலாகா அதிகாரியாக இருந்தவன். அந்த பதவியில் இருக்கும்போது அந்தப் பகுதியில் வாழும் துளசி என்ற இளம் பெண் அவனுக்கு அறிமுகமாகிறாள். படிப்படியாக அந்த பழக்கம் காதலில் போய் முடிகிறது. துளசியின் பேரழகால் ஈர்க்கப்பட்டு அவளையே எப்போதும் கனவு கண்டு கொண்டிருக்கிறான் உண்ணி கிருஷ்ணன். துளசியும் தன் மனதில் உண்ணி கிருஷ்ணனுக்கு இடத்தைத் தந்து, தன்னுடைய சொர்க்கமே அவன்தான் என்ற நினைப்புடன் இருக்கிறாள். ஒருவரை விட்டு ஒருவர் பிரிய முடியாது என்கிற அளவிற்கு அவர்களுக்கிடையே இருந்த காதல் பலம் கொண்டதாக ஆகிறது.

அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள தீர்மானிக்கிறார்கள். தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் விஷயத்தை தன்னுடைய நெருங்கிய நண்பனிடம் கூறுவதற்காக உண்ணி கிருஷ்ணன் அங்கிருந்து கிளம்புகிறான். திரும்பி வரும்போது, சந்தேகப்படும் குற்றவாளி என தவறாக நினைத்து அவனை காவல் துறையினர் கைது செய்கிறார்கள். அவர்கள் தேடிக் கொண்டிருக்கும் குற்றவாளிக்கும் உண்ணி கிருஷ்ணனுக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருக்கின்றன. அவ்வளவுதான். தனக்கும் அந்த குற்றங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று எவ்வளவோ கூறிப் பார்க்கிறான் உண்ணி கிருஷ்ணன். ஆனால், அவர்கள் அதை சிறிதும் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.

எந்தவொரு தவறும் செய்யாத நேர்மையான அந்த காட்டு இலாகா அதிகாரியை, குற்றவாளி என தீர்மானித்து சிறையில் அடைக்கின்றனர். சிறையில் அங்கிருக்கும் அதிகாரிகள் செய்யும் தொந்தரவுகளுக்கு அளவே இல்லை. கைதிகளை மிருகத்தைவிட கேவலமாக நடத்துகின்றனர். தங்களின் அறைக்குள் மிடுக்காக அமர்ந்து கொண்டு மது அருந்தும் அவர்கள், உண்ணி கிருஷ்ணனை சிறுநீரைப் பருகும்படி கூறுகின்றனர்.

எல்லாம் தன்னுடைய தலைவிதி என்று நினைத்துக் கொண்டு, மவுனமாக சிறை அறைக்குள் ஒரு மூலையில் வெள்ளை அரைக்கால் சட்டை, அரைக் கை சிறைச் சட்டை ஆகியவற்றுடன் சோகத்துடன் அமர்ந்திருக்கும் உண்ணி கிருஷ்ணன் எவ்வளவு நாட்களுக்குத்தான் பொறுமையாக இருக்க முடியும்? ஒரு அளவுக்கு மேல் அவனால் பொறுமையாக இருக்க முடியவில்லை என்பதே உண்மை.

சிறை அதிகாரிகளின் கொடுமைகள் ஒரு எல்லையைத் தாண்டிச் செல்ல, அதற்கு மேல் அதைத் தாங்கிக் கொள்ளும் மன சக்தி இல்லாத உண்ணி கிருஷ்ணன் சிறிதும் எதிர்பாராமல் ஒரு போலீஸ்காரரை அடித்து கொன்று விடுகிறான். அதன் விளைவாக அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

எவ்வளவோ கனவுகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த தன் வாழ்க்கை இப்படியெல்லாம் ஆகும், இந்த மாதிரி எல்லாம் நடக்கக் கூடாத சம்பவங்கள் நடக்கும் என்றெல்லாம் அவன் தன் மனதில் சிறிது கூட நினைத்திருக்கவில்லை. ஒளிமயமான எதிர்காலம் தன்னை நோக்கி காத்திருக்கிறது என்று சந்தோஷத்துடன் எதிர்பார்த்திருந்த தன் வாழ்க்கை இந்த அளவிற்கு இருள் நிறைந்ததாக ஆகும் என்று கனவில் கூட உண்ணி கிருஷ்ணன் கருதியதில்லை.

ம்… இப்போது அவற்றையெல்லாம் நினைத்து என்ன பிரயோஜனம் என்று தன் மனதை வெறுமையாக ஆக்கிக் கொண்டு, ஒவ்வொரு நாளையும் அவன் மவுனமாக நகர்த்திக் கொண்டிருந்தான்.


சிறைத் தண்டனை கிடைத்த ஆரம்ப நாட்களில், அவன் தன் காதலி துளசிக்கு ஒரு கடிதம் எழுதினான். அதில் அவன் தன்னை அவள் முற்றிலுமாக மறந்துவிட வேண்டுமென்றும், தனக்கேற்ற நல்ல ஒரு இளைஞனைப் பார்த்து அவள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் எழுதினான்.

வருடங்கள் கடந்தோடின. பல வருடங்களுக்குப் பிறகு, அவனை விடுதலை செய்ய சிறை நிர்வாகம் தீர்மானித்தது. தன் வாழ்க்கையே அவ்வளவுதான் என்று நினைத்திருந்த அவன் மனதில் இப்போது துளசியின் அழகு முகம் தோன்றியது.

‘துளசிக்கு திருமணமாகி இருக்குமா? நாம்தான் அவளை நல்ல ஒரு இளைஞனாகப் பார்த்து திருமணம் செய்து கொள்ளும்படி கடிதத்தின் மூலம் தெரியப்படுத்தி விட்டோமே! அதன்படி அவள் திருமணம் செய்து கொண்டிருப்பாளா?’ என்று அவன் மனம் பல கோணங்களிலும் சிந்திக்கிறது.

விடுதலையாவதற்கு முன்பு அவன் அவளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். ‘நான் விடுதலையாகி வெளியே வரப் போகிறேன். உனக்கு திருமணமாகி விட்டதா இல்லையா என்று எனக்கு தெரியாது. திருமணமாகாமல் இருந்தால், நான் எப்போதும் சந்திக்கும் மலை பகுதியில் இருக்கும் கோவிலுக்கு அருகில் விளக்கேற்றி வை. அதன் மூலம் உனக்கு திருமணமாகி விட்டதா இல்லையா என்பதை நான் தெரிந்து கொள்கிறேன்’ என்று அவன் அதில் எழுதியிருக்கிறான்.

உண்ணி கிருஷ்ணன் விடுதலை செய்யப்படுகிறான்.

அதைத் தொடர்ந்துதான் இந்த பேருந்து பயணம்.

தன் வாழ்க்கைக் கதையை கூறி முடிக்கிறான் உண்ணி கிருஷ்ணன்.

பேருந்து மலைப் பாதையில் வளைந்து வளைந்து கீழே இறங்கிக் கொண்டிருக்கிறது.

உண்ணி கிருஷ்ணன் இறங்க வேண்டிய இடம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பேருந்தில் அமர்ந்திருந்த சிறுவர்களும், சிறுமிகளும், ஆசிரியர்களும், மற்றவர்களும் உண்ணி கிருஷ்ணனுக்கு வாழ்க்கையில் ஏமாற்றம் கிடைக்கக் கூடாது என்று கடவுளைத் தொழுகிறார்கள்.

தன்னுடைய இடம் வந்ததும் உண்ணி கிருஷ்ணன் இறங்குகிறான். முன்னால் இருக்கும் மலை கோவிலைப் பார்க்கிறான். அவன் மட்டுமல்ல – பேருந்தில் அமர்ந்திருந்த எல்லோரும்.

மலைக் கோவிலில் ஆயிரக்கணக்கான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. கோவிலே விளக்கொளியில் ஜெகஜோதியாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.

இரு பக்கங்களிலும் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டிருக்க, நடுவில் இருக்கும் பாதையில் உண்ணி கிருஷ்ணன் நடக்க, அகல் விளக்குகளுக்கு மத்தியில் அழகு தேவதையென தூரத்தில் நின்றிருக்கிறாள் துளசி – தன் காதலனை வரவேற்பதற்காக.

அந்த கண் கொள்ளாக் காட்சியைப் பார்த்து, மெய் சிலித்துப் போய் தங்கள் கைகளைத் தட்டுகின்றனர் மாணவர்கள், மாணவிகள், ஆசிரியர்கள் எல்லோரும்.

அவர்களின் சந்தோஷப் பாடல் மீண்டும் தொடர்கிறது. அந்த இரவு நேரத்தின் அமைதியைக் கிழித்துக் கொண்டு அந்த பாடல் வரிகள் மேலும் சந்தோஷத்துடன் ஒலிக்க, அந்த பள்ளிப் பேருந்து மலைப் பகுதியில் உற்சாகத்துடன் கீழ் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.

இப்போது நம் செவிகளில் விழுவது – மாணவர், மாணவிகளின் பாடல் வரிகள்…

கண்களில் தெரிவது – மலைக்கோவிலும், அங்கு ஏற்றப்பட்டிருக்கும் ஆயிரம் அகல் விளக்குகளும், அதற்கு மத்தியில் கை கோர்த்து நின்றிருக்கும் உண்ணி கிருஷ்ணனும், துளசியும்…

கவித்துவ உணர்வுடன் பாலுமகேந்திரா இயக்கியிருந்த இந்தப் படத்தை எத்தனை வருடங்கள் ஆனாலும், மறக்க முடியாது.

பாலுமகேந்திரா இயக்கிய படங்களிலேயே மிகச் சிறந்த படம் இது என்பதே உண்மை.

உண்ணி கிருஷ்ணனாக- மம்மூட்டி.

துளசியாக –ஷோபனா.

இருவரும் பாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தார்கள்.

இந்தப் படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் பாய்ண்ட் – ‘இசைஞானி’ இளையராஜா.

பாடல்களிலும், பின்னணி இசையிலும் அபாரமான முத்திரையைப் பதித்திருந்தார் இளையராஜா.

பாலுமகேந்திரா – இளையராஜா ‘காம்பினேஷன்’ மீண்டும் ஒரு காதல் காவியத்திற்கு உயிர் கொடுத்திருந்தது.

ஜான் பால் எழுதிய கதைக்கு, பாலுமகேந்திரா திரைக்கதை எழுதியிருந்தார்.

1985ஆம் ஆண்டு கேரள அரசாங்கத்தின் சிறந்த நடிகருக்கான ஸ்பெஷல் நடுவர் விருது மம்மூட்டிக்கு இப்படத்திற்காக அளிக்கப்பட்டது. அந்த வருடத்திற்கான ஃபிலிம்ஃபேர் விருதையும் மம்மூட்டி பெற்றார்.

படத்தைப் பார்த்து 28 வருடங்கள் ஆகி விட்டன. இப்போதும் இளையராஜாவின் இசையில், பேருந்தில் பயணம் செய்யும் சிறுவர்களும் சிறுமிகளும் பாடும் ‘தன்னானம் தன்னானம்’ என்ற பாடல் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவு மற்றும் இயக்கம், இளையராஜாவின் இசை, மம்மூட்டி – ஷோபனா இருவரின் பண்பட்ட நடிப்பு – எல்லாம் சேர்ந்து ‘யாத்ர’வை ஒரு கவித்துவ உணர்வு நிறைந்த காவியமாகவே ஆக்கி விட்டன.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.