Logo

மாடல்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6469
model

முதல் தரமான தையல்காரனாக இருந்தான் சி.பி. பிரான்சிஸ். வெளிநாடுகளைச் சேர்ந்த பல இடங்களுக்கும் போய் பலவிதப்பட்ட தையல் முறைகளை அவன் கற்றிருந்தான். கைக்குட்டையிலிருந்து கோட் வரை உள்ள எந்த உருப்படியையும் மிகவும் நல்ல முறையில் தைக்க முடியும் என்பதுதான் பிரான்சிஸின் பெருமையே.

அந்தக் கலையைப் பற்றி பிரான்சிஸுக்கு மிகவும் அதிகமாகக் கூறுவதற்கு விஷயங்கள் இருந்தன. அதில் யாருமே குறை கூற முடியாது. ஆனால், உலகத்தில் உள்ள எல்லா விஷயங்களைப் பற்றியும் பிரான்சிஸ் மிகப் பெரிய கருத்தை வெளியிடுவான். அதைத்தான் பலராலும் தாங்கிக் கொள்ள முடியாது.

எல்லா இடங்களையும் சேர்ந்த பெரிய ஆட்கள் பிரான்சிஸுக்கு நன்கு தெரிந்தவர்களாக இருப்பார்கள். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் வெளிநாட்டு சுவை கொண்ட ஒவ்வொரு அனுபவக் கதையையும் அந்தப் பயணங்கள்மீது விருப்பம் கொண்ட மனிதனால் கூற முடியும். ஒருநாள் ஒரு மனிதர் கேட்டார்: பிரான்சிஸ், உங்களிடம் இருப்பவை அனைத்தும் காலர் வைத்த முழுக்கை சட்டைகளாகவே இருக்கின்றன. அதன் காரணம் என்ன?''

ஆமாம்... அதைக் கூறுகிறேன்''- பிரான்சிஸ் கூற ஆரம்பித்தான்: நான் மதராஸில் இர்வின் பார்க்கிற்கு அருகில் வசித்துக் கொண்டி ருந்தேன். அங்கு சட்ட உறுப்பினராக இருந்தவர் என்னுடைய ஒரு மிகவும் நெருங்கிய நண்பராக இருந்தார். அவர் காலர் வைத்த முழுக் கைச் சட்டையையே அணிவார். இப்போது அவர் கல்கத்தாவில் இருக்கிறார். நாங்கள் ஒருநாள் கடற்கரைக்குச் சென்று காற்று வாங்கிக் கொண்டிருந்தபோதுதான் சட்ட உறுப்பினராக அவருக்கு ஆர்டர் கிடைத்தது. இனிமேல் நாம் காலர் வைத்த முழுக்கைச் சட்டையை மட்டுமே அணிய வேண்டும் என்று அன்று நாங்கள் தீர்மானித்தோம். இது வரை அதிலிருந்து தவறியதே இல்லை.''

ஒரு முறை ஒரு சந்தேகப் பேர்வழி பிரான்சிஸிடம் கேட்டார்: முதல் பாடத்தில் தையல்காரன், அய்யங்கார், அய்யாயிரம் என்று ஏன் எழுதப்பட்டிருக்கிறது?''

அதுவா? அதைக் கூறுகிறேன்...'' பிரான்சிஸ் தொடர்ந்து சொன்னான்: அப்போது நான் உபநிஷத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். சட்டை தைப்பதற்காக வந்த ஒரு சார், "ய்ய” என்று சேர்ந்து வருவதைப்போல சொற்கள் இல்லை என்று சொன்னார். நான் கேட்டேன்: "சார், என் தொழில் என்ன? "ய்ய” என்று வரும் அய்யாயிரம் சொற்கள் இருக்கின்றன. இதோ... அதோ நடந்து போகும் அய்யங்கார் சுவாமியைப் பாருங்கள்'' அவற்றையெல்லாம் அதே மாதிரி அவன் எழுதி வைத்திருந்தான்.

அறுபது வயதை நெருங்கிய பிரான்சிஸுக்கு ஒரு வெள்ளெழுத்து கண்ணாடி அணிய வேண்டிய அவசியமிருந்தாலும், அவன் அதைப் பயன்படுத்துவதில்லை. அந்த விஷயத்தைப் பற்றி அவன் கூறுவதுண்டு. நம்மைப் பார்த்து உரையாடுபவர்களின்மீது கண்களுக்கு ஒரு சக்தி இருக்கிறது. கண்ணாடி அணிந்தால் அது இழக்கப்பட்டு விடும்.''

நீளமானவையாகவும் தெளிவானவையாகவும் வெளியே குதிப்பதற்குத் தயாராக இருப்பவை மாதிரி தோன்றக் கூடியவையுமான பிரான்சிஸின் கண்களுக்கு ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு சக்தி இருந்தது. அவனிடம் ஒரு இளைஞனிடம் இருக்கக் கூடிய உற்சாகம் தவழ்ந்து கொண்டிருந்தது. ஒரு பிரகாசமான முகத்தைக் கொண்டவனாக பிரான்சிஸ் இருந்தான். உடற்பயிற்சியிலும் உணவு விஷயங்களிலும் அவன் அந்த அளவிற்கு மிகவும் கவனம் உள்ளவனாக இருந்தான். சானட்டஜனை பயன்படுத்தி அடை தயாரித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பிரான்சிஸுக்கு உடல் நல விஷயங்கள் எப்படி மோசமாக இருக்கும்?

இந்தியாவே தெரிந்திருக்கும் மனிதனாக இருந்தாலும் பம்பாயிலோ கல்கத்தாவிலோ டில்லியிலோ திருவாங்கோட்டில் இருப்பதைப் போன்ற ஒரு வரவேற்பு பிரான்சிஸுக்கு கிடைக்கவில்லை. தையல் சம்பந்தமாக சொற்பொழிவு செய்வதற்கு தான் ஆரம்பத்தில் பிரான் சிஸ் திருவாங்கோட்டிற்கு வந்தான். பிரான்சிஸின் முதல் சொற் பொழிவிற்கு நல்ல வர்த்தக விளைவு உண்டானது. அரண்மனையின் தையல் வேலைகள் முழுவதும் பிரான்சிஸைத் தேடி வந்தன. அந்த அளவிற்கு பெண்களுக்கு பிரான்சிஸின் தையல் வேலைகள் மிகவும் பிடித்திருந்தன.

பிரான்சிஸ் கூறுவதுண்டு: தைப்பதில் அல்ல... வெட்டுவதில்தான் தையல்காரனின் வெற்றி இருக்கிறது.'' அவன் துணி வெட்டுவதைப் பார்த்தால் அதில் பணம் முதலீடு செய்திருப்பவர்களுக்கு பயம் உண்டாகிவிடும். டாக்டர் மனித உடலில் அறுக்கக் கூடிய கருவி களைப் பயன்படுத்துவதைப் போலத்தான் பிரான்சிஸ் துணி மீது கத்திரியைப் பயன்படுத்துவான். கத்திரி அந்த விரல்களின் பிடியில் இருந்து கொண்டு "கர்க்கு.... கர்க்கெ” என்று இடைவெளி இல்லாமல் அழுது கொண்டிருக்கும். வெட்டும் விஷயத்தில் பிரான்சிஸை வெற்றிபெறக் கூடிய தையல்காரன் இல்லவே இல்லை என்றுதான் கூற வேண்டும். புகழ் பெற்ற வெட்டுக்காரனான வெல்லிங்டன் துரையிடமிருந்துதான் பிரான்சிஸ் துணி வெட்டும் கலையையே கற்றுக் கொண்டான். மிகவும் விலை மதிப்புள்ள துணிகளில் ஈவு, இரக்கமே இல்லாமல் கத்திரியைச் செலுத்துவதில் பிரான்சிஸுக்கு தயக்கம் என்பதே கிடையாது. பிரான்சிஸ் தன்னுடைய முழுக்கைச் சட்டைக்கு மேலே தோளில் ஒரு டேப்பைத் தொங்க விட்டிருப்பான். சட்டையின் முன் பகுதியில் நூலுடன் ஒரு ஊசியைக் குத்தி வைத்திருப்பான். இடது கையின் நடுவிரலின் நுனி டிம்பிள் மூலம் மறைக்கப்பட்டிருக்கும்.

பிரான்சிஸின் மேஜை தனித்துவம் கொண்டதாக இருக்கும். அதன் இழுவைகளில் தனித்துவம் கொண்ட நூல் கண்டுகள், ஊசிகள், பென்சில்கள் ஆகியவை பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும். ஒரு இழுவை நிறைய கேட்லாக்குகள் இருக்கும். இங்க்லாண்ட், அமெரிக்கா, ஃப்ரான்ஸ்... இப்படி வெளி நாடுகளில் இருந்து விசேஷ மாக வரவழைக்கப்பட்டிருக்கும் தையல் சம்பந்தமான கேட்லாக்குகள்... அந்த கேட்லாக்குகளைப் பார்த்துத்தான் பிரான்சிஸ் மாதிரியைத் தீர்மானிப்பான். நிறம், இனம், பருவம், வயது... இவற்றையெல்லாம் குறிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். சிறு குழந்தைகளுக்கான ஆடைகள், இரவிக்கைகள், ஜிப்பா, பேன்ட், பைஜாமா- இவை உள்ள பல வகையான மாதிரிகளையும் படங்களையும் தன்னுடைய தையல் கடையில் பிரான்சிஸ் தொங்க விட்டிருந்தான். ஆட்கள் தையல் சம்பந்தமாகப் பேசினால், உடனடியாக பிரான்சிஸ் கேட்பான்:  வயசு என்ன? என்ன நிறம்? ஆணா, பெண்ணா?''

அந்த கிராமப் பகுதியில் ஓணம் வந்தது. ஓண நிலவும் ஓண மலர்களும் பிரகாசித்தன. வாழ்க்கையில் கஷ்டங்கள் எவ்வளவு இருந்தாலும், திருவோணம் என்ற அந்தத் திருவிழாவிற்கு முன்னால் எல்லா வீடுகளும் சந்தோஷத்தில் திளைக்கின்றன. ஒவ்வொரு இதயமும் ஆனந்தத்தில் மூழ்குகின்றன. துயரங்கள் நிறைந்த வாழ்க்கையை சந்தோஷத்தில் ஆழ்த்தும் இந்த பண்டிகைகள் பறந்து போகாமல் இந்த நாட்டின் பசுமையான காடுகளில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்?

எல்லாரும் புதுத் துணிகள் வாங்குகிறார்கள். சட்டைகளைத் தைக்கிறார்கள். பாப்பனுக்கும் ஒரு சட்டை வேண்டும்.


ரேஷன் துணி கிடைத்திருந்தால் சிறிது லாபாமாக இருந்திருக்கும்! ஆனால், என்ன செய்வது? கடைக்காரனிடமிருந்து அது கிடைக்க வேண்டாமா? எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும், நல்ல துணியைக் கொண்டு ஒரு சட்டையைத் தைக்க வேண்டும் என்று பாப்பன் தீர்மானித்தான்.

சட்டைக்கான துணியுடன் சென்று அவன் பிரான்சிஸிடம் ஒப்படைத்தான். அவன் டேப்பை எடுத்து அந்த திருவாங்கோட்டைச் சேர்ந்தவனின் கழுத்தையும் உடலையும் மாறி மாறி அளந்தான்.

முதல் ஓணம் வந்தது. புதிய சட்டையை அணிந்து கொண்டு மனிதர்களுக்கு முன்னால் விருப்பம்போல நடந்து திரிய வேண்டும் என்று ஆசைப்பட்டான் பாப்பன். அந்த பண்டிகையைப் பற்றியும் புத்தாடை அணியப் போகிறோம் என்பதைப் பற்றியும் இருந்த உற்சாகத்தைத் தரக் கூடிய நினைப்பில் மூழ்கி அவனுடைய இதயம் குதித்துக் கொண்டிருந்தது. புதிய வேட்டியும் புதிய சட்டையும் அணிந்து கொண்டு சிலர் வெளியே நடக்க ஆரம்பித்திருந்தார்கள். தையல் கூலிக்கான பணம்கூட பாப்பனின் கையில் இல்லை. மாலை நேரம் வந்து விட்டது. எப்படியோ தையல் கூலியைத் தயார் பண்ணிக் கொண்டு பாப்பன் பிரான்சிஸைத் தேடிச் சென்றான்.

என் சட்டை...''- பாப்பன் சொன்னான். ''சட்டையைத் தயார் பண்ணி வைத்திருக்கிறேனே!'' பிரான்சிஸ் அதை எடுப்பதற்காகத் திரும்பினான். தேய்த்து மடித்து வைத்திருந்த சட்டையை பிரான்சிஸ் எடுத்தான். பாப்பன் அதை வாங்கினான். அதை முழுமையாக ஆராய்ந்தான். பாப்பனுக்கு வெறுப்பு உண்டானது. அவன் என்ன மனதில் நினைத்தானோ, அந்த மாதிரி அது இல்லை. அதற்கு அருகில் நெருங்கி வருகிற அளவிற்குக்கூட அது இல்லை. ஏற்றுக் கொள்ள முடியாத சட்டையைத் தேய்த்து பளபளப்பாக்கி வைத்திருந்ததைப் பார்த்து அந்த கிராமப் பகுதியைச் சேர்ந்தவன் ஆச்சரியப்பட்டு விடவில்லை.

விருப்பப்பட்ட சட்டைக்காகக் காத்திருந்த அந்த ஏழைக்கு வெறுப்பு உண்டானது. திருவோணத்தின் சந்தோஷக் கொண்டாட்டத்தில் தன்னுடைய தனித்துவத்திற்குக் காயம் உண்டாகி, வேதனையை அனுபவிப்பதைப்போல பாப்பன் உணர்ந்தான். அவனுடைய கண்களில் இருள் புகுந்தது.

எனக்கு இது வேண்டாம். இப்படியா சட்டையைத் தைப்பார்கள்?'' அவன் கேட்டான்.

ம்... என்ன?'' பிரான்சிஸ் ஆச்சரியப்பட்டான். அவன் தொடர்ந்து சொன்னான்: நீங்க இதை கொஞ்சம் போட்டுப் பாருங்க''.

பார்க்கும்போதே தெளிவாகத் தெரிந்து கொள்ளக் கூடிய ஒரு விஷயத்தை பயன்படுத்திப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்று பாப்பன் நினைக்கவில்லை.

உண்மையாகச் சொல்லப் போனால்- தலை உள்ளே நுழைய வில்லை. அங்கு சில சுருக்கங்கள். மார்புப் பகுதியில் அளவுக்கும் அதிகமான இறுக்கம். கையோ பிடித்துக் கட்டியிருப்பதைப் போல இருந்தது! நல்ல விலை கொடுத்து வெட்கக் கேட்டை வாங்குவதற்கு அவன் விருப்பப்படவில்லை.

பாப்பனின் தோளில் இருந்து முழுங்காலுக்கு அருகில் இருக்கும் இறக்கத்தை பிரான்சிஸ் டேப்பைக் கொண்டு எடுத்திருந்தான். சாதாரண அந்த நீளம்தான் மார்பைச் சுற்றிய அளவாக இருக்கும். பிரான்சிஸ் அந்தக் கணக்கை மிகவும் விஞ்ஞானரீதியாகவே கணக்குப் போட்டு வைத்திருந்தான். ஆனால் பாப்பனின் மார்பின் சுற்றளவைத் தனியாக எடுக்கவில்லை. உடலின் நீளத்தையொட்டி அவன் அளவை அமைத்தான். ஆனால், பாப்பனின் இதயப் பகுதி சற்று பெரியதாக இருந்தது. அதனால்தான் அந்த சட்டைக்குள் நுழைய அவனுடைய இதயம் தயாராக இல்லை. சட்டையைச் சுருட்டி அந்த நீளமான மேஜைமீது எறிந்து கொண்டே பாப்பன் சொன்னான்வ: இது எனக்குத் தேவையில்லை. நீயே அணிந்துகொள்''.

பிரான்சிஸுக்கு ஒரு அடி கிடைத்ததைப்போல இருந்தது. அவனிடம் வேலை பார்ப்பவர்கள் திகைப்புடன் நின்று கொண்டி ருந்தார்கள்.

சட்டையில் இருக்கும் தவறைச் சொல்லுங்க. வெறுமனே கோபித்தால் போதுமா?'' பிரான்சிஸ் கேட்டான்.

நான் நினைத்தது...'' பாப்பன் சொன்னான்.

இப்படி சுருக்கங்கள் வைக்கப்பட்ட அரைக்கைச் சட்டை அல்ல. இதை அணிந்தால் என்னால் மூச்சு விட முடியாது. கைக்கு நீளம் வேண்டும். கழுத்துப் பகுதியில் சுருக்கம் தேவையில்லை.'' ஒன்றிரண்டு கேட்லாக்குகளைப் புரட்டிப் பார்த்து விட்டு பிரான்சிஸ் பாப்பனின் தவறைப் புரிந்து கொண்டு புன்சிரிப்புடன் சொன்னான்: நீங்கள் கூறுவது இங்கிலீஷ் மாடல். அது இயலாத விஷயம். உங்களுடைய உடலமைப்பிற்கு அது பொருத்தமாக இருக்காது. இது அமெரிக்கன் மாடல். இதுதான் உங்களுக்குச் சரியாக இருக்கும். நான் சட்டை தைக்க ஆரம்பித்து நாற்பது வருடங்கள் ஆகிவிட்டன.''

என்னுடைய மாடலை யார் தீர்மானம் செய்வது? நீங்களா நானா?'' பாப்பன் மரியாதையுடன் கேட்டான். அந்தக் கேள்விக்கு முன்னால் பிரான்சிஸின் தையல் கடை நடுங்கி விட்டது.

பிறகு... அதைத் தீர்மானிப்பது நீங்களா? உங்களுக்காக நான்தான் அதைத் தீர்மானிக்க வேண்டும். அப்படியென்றால் நீங்களே தைத்திருக்கலாமே?'' பிரான்சிஸ் அறிவுப்பூர்வமான கேள்வியை எழுப்பினான்.

ஆமாம்... நான்தான் என்னுடைய சட்டைக்கான மாதிரியைத் தீர்மானிக்க வேண்டும்.'' தைரியத்துடன் பாப்பன் சொன்னான்.

தான் விருப்பப்பட்ட சட்டையை அலங்கோலப்படுத்திய தையல்காரன்மீது எல்லையே இல்லாமல் எதிர்ப்பை வெளிப்படுத்த அவன் தயாரானான். ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றை- அது அமெரிக்கன் அல்ல, ஜெர்மன் மாடலாகவே இருந்தாலும் அவனைப் பொறுத்த வரையில் அதை வீசி எறிய வேண்டும்.

வெறுப்புடன் அவன் தையல்காரனைப் பார்த்தான்.

நான் என்னுடைய சட்டையை வாங்கிக் கொள்வேன். அதன் மாதிரியை நான்தான் முடிவு செய்வேன்.''

அது நீண்ட கால சிந்தனையாக மட்டுமே இருக்கும்.'' பண்டிதனான பிரான்சிஸ் சொன்னான்.

ஃபு!'' பாப்பன் கோபத்துடன் சொன்னான்.

சில சமாதான விரும்பிகள் இடையில் தலையிட்டார்கள். கைக்கு சற்று அதிகமான நீளத்தை வைத்து, அதைக் கொடுத்தால் பாப்பன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.

எனக்கு விருப்பமான சட்டையில் தேவையற்ற எந்தவொரு சுருக்கங்களும் தேவையில்லை.'' அவன் முடிவாகக் கூறினான்.

இரண்டாம் ஓணத்தின் வெளிச்சம் பாப்பனின் படுக்கைக்கு அருகில் வந்து நின்று வரவேற்று வாழ்த்து கூறியது. அவன் சட்டையை வாங்காமல் இருக்க முடியாது. அது அவனுடைய மிகவும் முக்கியமான தேவையாக ஆகிவிட்டது. அவன் தையல் கடைக்குச் சென்றான். தன்னுடைய சட்டைக்காக சமர்ப்பிப்பதற்கு விலை மதிப்புள்ள எதை ஒன்றை அவன் கொண்டு சென்றானோ, அது அவனுக்கு மிகவும் விருப்பமான உயிராக இருந்தது.

பாப்பன் வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவே இல்லை. தன்னுடைய பலத்தைப் பற்றி அவனுக்கு தைரியக் குறைவும் இல்லை. ஆட்கள் ஓடி ஒன்று சேர்ந்தார்கள். பாப்பன் தையல் கடைக்குள் நுழைந்தான். பிரான்சிஸ் அமைதியாக தலையைக் குனிந்திருந்தான். அவனுடைய பணியாட்கள் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். பாப்பன் தனக்கு விருப்பமான சட்டையைத் தேர்வு செய்து எடுத்தான். ஆட்கள் கைகளைத் தட்டினார்கள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.