
ஜிம்பாப்வேயின் முன்னணி எழுத்தாளரான சார்லஸ் முங்கோஷி, கிராம வாழ்க்கை தந்த இளம் வயது அனுபவங்களிலிருந்து தன்னுடைய படைப்புகளுக்கு கருவைத் தேர்ந்தெடுக்கிறார்.
விவசாயியாக இருந்த தந்தையுடன்தான் முங்கோஷியின் இளமைப் பருவம் பெரும்பாலும். அத்துடன் கதைகள் கூறும் பாட்டியின் கதைகள். 1970-ல் தன்னுடைய முதல் நாவலான "Coming for the Dry season”-ஐ தன்னுடைய மொழியில் இவர் எழுதினார்.
இவரின் "Some Kind of Wonder” ஜிம்பாப்வேயின் சுதந்திரப் போராட்டத்தின் வேதனைகளையும் அக்கிரமங்களையும் தாங்கும் சக்தியையும் தெளிவாகக் காட்டும் நூல்.
1975-ல் முங்கோஷி ரொடீஷியா இலக்கிய அமைப்பின் எடிட்டராக ஆனார். 1985-ல் ஜிம்பாப்வே பல்கலைக்கழகத்தின் இலக்கிய பிரிவின் "Writer in Residence” ஆனார். 1990-95 காலகட்டத்தில் முங்கோஷி நடிப்பில் இறங்கினார். ஏராளமான திரைப்படங்களிலும் வீடியோ படங்களிலும் நடித்தார்.
கிளறிக்கொண்டிருந்த மண்வெட்டியிலிருந்தும் தோண்டிப் போட்ட மண்ணிலிருந்தும் தன்னுடைய முதுமை அடைந்த கண்களை உயர்த்தி கிழவன் முஸோனி வானத்தைப் பார்த்தான். அவனுடைய வேலையையும் சிந்தனைகளையும் தொல்லைப்படுத்திக் கொண்டிருந்த அந்த வெள்ளைப் புள்ளி வானத்தின் விளிம்பின் அருகில், நீல நிற வானத்தின் ஓரத்தை அடைந்துவிட்டிருந்தது. வானத்தின் தெற்குச் சரிவின் வழியாக அது மறைந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த அவன் அமைதியற்ற மனதுடன் தலையை ஆட்டினான். மேற்கு திசை சூரியன் தாழ்வதற்கு தொடங்கியிருக்கிறது. சூரியன் வறுத்தெடுத்த மண், தன்மீது விழுந்த சூரியனின் கொழுந்துகளை ஏற்று, நிழல்கள் நிமிடம்தோறும் கிழக்கு நோக்கிப் படர்வதையும் மங்கலாவதையும் வளர்வதையும் அவன் பார்த்தான். தன்னையே அறியாமல் மழைக்கும் மோட்சத்திற் குமாக வேண்டிக் கொண்டு அவன் தன்னுடைய வேலைக்குத் திரும்பினான். தன்னுடைய மகன் நோமோ வருவதை அவன் பார்க்கவேயில்லை.
அருகிலிருந்த மணலில் மறைந்து நின்று கொண்டு நோமோ தன் தந்தையை வணங்கினான். கிழவன் மெதுவாக சுய உணர்வுக்கு வந்து, மண்வெட்டியைப் பிடித்து நின்று கொண்டு, நாள் முழுவதும் தன்னை அலட்டிக்கொண்டிருந்த விஷயத்தைப் பற்றி அவனிடம் கேட்டான்.
“நீ உன் மனதை மாற்றி விட்டாயா?''
“இல்லை அப்பா.''
மவுனம் நிறைந்த ஒரு நிமிடம். பிறகு... கிழவன் மண்வெட்டியிலிருந்த மண்ணை நீக்க ஆரம்பித்தான்.
“நீ இதைப் பற்றி சிந்தித்தாயா மகனே?''
“வாரக்கணக்கில்...''
“அதற்குப் பிறகும், இதுதான் வழி என்று நீ நினைக்கிறாயா?''
“வேறு எந்தவொரு வழியும் இல்லை.''
கிழவனுக்கு மீண்டும் கோபம் வந்தது. இது ஒருவேளை தன் மகனுடன் பேசிக் கொண்டிருக்கும் இறுதி நாளாக இருக்கலாம். மகன் போவதாக இருந்தால், அவன் மீது கோபப்படக் கூடாது. அது ஒரு சாபத்திற்கு நிகரான விஷயமாக இருக்கும். கடந்த காலத்தில் தானும் சாகசங்கள் புரிந்திருந்தாலும், இப்போது தந்தை என்ற நிலையில் அவன் சிந்திக்க வேண்டியதிருக்கிறது.
குடும்பத்திற்காக அவன் அடிமையைப்போல வேலை செய்தான். மண் ஏமாற்றவில்லை. வெளிஉலகத்தில் மகனின் மரணத்தையும் அழிவையும் தவிர வேறெதையும் இப்போது அவனால் பார்க்க முடியவில்லை. சிங்கங்கள் இல்லாவிட்டாலும் மாமிசத்தைச் சாப்பிடும் மிருகங்கள் வேறு இருக்கின்றன என்ற விஷயம் அவனுக்குத் தெரியும். சிங்கத்தைவிட சிவந்த நகங்களைக் கொண்ட மிருகங்கள்... அவை அனாதையான ஒரு குட்டியை வெறுமனே விடாது. வானத்தில் பார்த்த வெள்ளை நிற இயந்திரப் பறவையைப் பற்றி நினைத்துப் பார்த்தபோது, அவனுக்கு கவலை வந்து சேர்ந்தது.
“மீண்டும் சிந்தித்துப் பார்... நீ அழிந்து போவாய்... நம்மைப் பற்றி... குடும்பத்தைப் பற்றி... எல்லாவற்றையும் மீண்டும் சிந்தித்துப் பார்... சிறிதாக இருந்தாலும், நமக்கென்று ஒரு வீடு இருக்கு. ஒரு நாளாவது அதை விட்டுச் செல்வதைப் பற்றி உன்னால் சிந்தித்துப் பார்க்க முடிகிறதா?''
“நான் எல்லாவற்றையும் சிந்தித்துப் பார்த்துவிட்டேன் அப்பா. இந்த ஒரு வழி மட்டுமே எனக்குத் தெரிகிறது.''
“மண்ணையும் குடும்பத்தையும் விட்டெறிந்து விட்டு போகிற ஒரே ஒரு வழி அல்ல- இப்படிப் போவது என்பது.''
“மண் தர வேண்டியவற்றையெல்லாம் தந்தாகிவிட்டது. இனி அது தருவதற்கு எதுவுமே இல்லை. குடும்பத்தை எடுத்துக் கொண்டால், பெரும்பாலும் அது தகர்ந்து போய்விட்டது.''
கிழவனுக்கு கோபம் வந்துவிட்டது. "உண்மைதான். மண் பாழாகிவிட்டது. குடும்பம் என்ற மரம் வேரற்றுப் போனதும் வெயிலில் கரிந்து போனதும் உண்மைதான். எப்போதாவது உண்டாகும் என்று நாம் நினைத்தே பார்த்திராத, முன்பு எப்போதுமே இல்லாமலிருந்த பலவும் நடந்து கொண்டிருப்பதும் உண்மைதான். ஆனால், மண்ணைப் போல நம்மை ஒன்றாகச் சேர்த்து வைக்கின்ற ஒன்று எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. அப்படியே இல்லையென்றாலும், தாய்ப்பாலின் மணம் மாறாத, மீசைகூட முளைக்காத நீ எங்கே போகலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்? உன்னைவிட இரண்டு மடங்கு வயது கொண்டவர்கள் போவதும் வருவதுமாக, மொத்தத்தில் தளர்ந்துபோய் இருக்கக்கூடிய இந்தக் கொடூரமான உலகத்தில் உனக்கு என்ன நடக்கும்? வாழ்க்கையைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? காட்டுத் தேனீக்கள் வழி தவறச் செய்து நாள் முழுவதும் காடெங்கும் அலைய வைத்து பாம்புகளின் கூட்டத்தில் கொண்டு போய்விட்டால், நீ என்ன செய்வாய்?” ஆனால், அவனிடம் கிழவன் இப்படிக் கூறினான்: “இங்கே பார்... நீ கேட்டது எதையாவது நான் மறுத்திருக்கிறேனா? நீ கேட்டபோது, கையில் இருப்பது எதுவாக இருந்தாலும் நான் தராமல் இருந்திருக்கிறேனா?''
“ம்... அப்பா, நீங்க எனக்கு எல்லாவற்றையும் தந்திருக்கீங்க.''
அடக்கி நிறுத்தி வைத்திருந்த கோபம் அணையை உடைத்துக் கொண்டு முகத்தில் வெளிப்பட்டாலும், அவன் வேகமாக கடிவாளம் போட்டு அதைப் பிடித்து வைத்துக் கொண்டான். "நீங்கள் எனக்கு புல்லைத் தந்தீர்கள். படிப்பின் மதிப்பைப் பற்றி எடுத்துக் கூறி, நீங்கள் என்னை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைத்தீர்கள். ஆனால், அவை அனைத்தும் குப்பையில் எறிந்துவிட்டு, பாழாகிவிட்ட நிலத்தைக் கிளறி வாழ்க்கையை ஓட்டும்படி நீங்கள் இப்போது என்னிடம் கூறுகிறீர்கள். அவை எல்லாவற்றையும் மறந்துவிட்டு இந்த சாணக் குவியலைச் சுற்றியிருக்கும் மரணத்திற்கு நிகரான மந்தப் போக்கில் உங்களுடன் பங்கு கொள்ளுமாறு கூறுகிறீர்கள். என் வாழ்க்கையை உருப்படியாக்க, ஆயுட்காலத்தில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய, எனக்கு என்னுடைய வாழ்க்கையைச் சீர் செய்து கொள்ளக்கூடிய ஒரேயொரு சந்தர்ப்பத்தைப் பார்த்து உங்களுக்கு என் மீது பொறாமை உண்டாகிறது. நீங்கள் உங்களுடைய மரணத்தை நினைத்து பயப்படுகிறீர்கள். எது எப்படி இருந்தாலும், அது உங்களுடைய மரணம் மட்டுமே. நான் இன்னும் சிறிது காலம் வாழ்கிறேன். எனக்கு ஒரு குடும்பம் தேவையென்றால், நான் அதை உருவாக்கிக் கொள்வேன்... நீங்கள் நினைப்பதைவிட நான் திறமைசாலியாகவும் நீங்கள் கற்பனை பண்ணியிருப்பதைவிட புத்திசாலியாகவும் இருப்பேன்.” ஆனால், அவனும் கூறியது இதைத்தான்.
“அப்பா, என்னைப் பற்றி கொஞ்சம்கூட கவலைப்படாதீங்க. நான் சந்தோஷமாக இருப்பேன். எனக்கு இந்த சந்தர்ப்பத்தைத் தாருங்கள். எல்லா அழிவுகளிலிருந்தும் விடுபடச் செய்து, எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.''
மகனுடைய இந்த வார்த்தைகளைக் கேட்டு கிழவனின் கண்கள் மின்னின. ஆனால், மண்வெட்டியை கூர்மைப்படுத்தும் பளபளப்பான ஒரு வெள்ளைக் கல்லின் மீது திடீரென்று தூசி படிந்ததைப் போல கிழவன் கண்களின் வெளிச்சத்தை ஏதோ ஒரு மெல்லிய திரை முழுமையாக மறைத்துவிட்டிருந்தது. வார்த்தைகள், கொல்லனின் கற்பனையில் உண்டான கைப்பிடிகளைப் போன்றவை. மெல்லிய எதிர்ப்பால் அவை முறிந்து போகின்றன வாழ்க்கையின் முரட்டுத்தனமான சதைகளைச் சுற்றி குவிந்திருக்கும் அடர்த்தியான கொழுப்புகளே அவை.
“நீ என்ன செய்கிறாய் என்று உனக்குத் தெரியுமா, மகனே?''
“ம்...''
“வீட்டை விட்டுச் சென்ற பிறகு, நிலைமை என்ன ஆகும் என்று தெரியுமா?''
“தெரியும் அப்பா.''
“அழுக்கிலும், எலிப் புழுக்கைகளிலும் கிடந்து, பரிதாபங்களில் வாழ்ந்து, மரத்திலோ குழியிலோ இரவு நேரத்தில் உறங்கி, கனவுகளைப் பங்கு போட முடியாமல், பார்ப்பதற்கோ கூறுவதற்கோ யாருமில்லாமல் மழையும் வெயிலும் குளிரும் ஏற்று, ஊரும் பேரும் இல்லாத ஊர் சுற்றியாய்... என்ன உண்டாகப் போகிறது என்று தெரியுமா? உன்னுடைய எதிர்பார்ப்புகள் அகாலத்தில் பழைய வீட்டைப்போல தரையில் இடிந்து கீழே விழும். உன்னுடைய கனவுகள் சாம்பலாகிவிடும். நல்ல விஷயங்களைப் பார்க்க முடியாமல் ஒரு சிறிய எதிர்பார்ப்புகளும் இல்லாமல் எதற்காக வாழ வேண்டும்?'' தொடர்ந்து தனக்குத்தானே கூறிக்கொண்டார். "காலத்தின் அர்த்தமற்ற விஷயங்களும் முதுமையின் வேதனைகளும் உனக்குத் தெரியுமா? என் தங்க மகனே? கனவோ எதிர்பார்ப்போ நம்பிக்கையோ இல்லாமல் எப்படி உன்னால் வாழ முடிகிறது? கொடுமையான ஏமாற்றங்களை நீ அறிந்திருக்கிறாயா மகனே?'
“எனக்குத் தெரியும் அப்பா. புறப்படுவதற்கு தேவையான விஷயங்கள் அவ்வளவும் எனக்குத் தெரியும். மீதி விஷயங்களை பயணத்தின்போது நான் தெரிந்து கொள்வேன். திரும்பி வருவதற்கு தேவையானவற்றையும்...''
“எங்கே திரும்பி வருவது?'' கிழவன் அவனைப் பார்த்தான். தொடர்ந்து சொன்னான்: “துன்பங்கள் நோக்கி யாரும் திரும்பி வருவது இல்லை. நீ போ... உனக்குத் தெரியாத ஏதோ சில விஷயங்கள் உன்னை வேறு இடங்களுக்கு இழுத்துக்கொண்டு செல்லலாம். நீ என்ற ஒரேயொரு துயரம் எஞ்சி இருப்பது வரை... அழிவுகளில் இருந்து அழிவுகளுக்குக் கொண்டு செல்லலாம். அழக்கூட முடியாமல் நீ இடிந்து போவாய், மகனே. ஆனால் மழைப் பறவைகளிடமிருந்து நீ கற்றுக்கொள்ள வேண்டும். இனிமேல் சிறிதும் உழக்கூடாது என்ற கொடுங்காற்றைப் பற்றி உள்ள அதன் முன்னறிவிப்பைத் கேட்க வேண்டும். தூரத்தில் பசுமையோ அமைதியோ இல்லாத பாலைவனப் பகுதிகளுக்கு சூறாவளிக் காற்று உன்னை இழுத்துக்கொண்டு சென்றால், என்ன செய்வாய்? அதற்குப் பிறகு என்ன நடக்கும். மகனே?''
அவன் தளர்ந்து போனான். இரண்டு மாதங்களுக்குமேல் ஆகிவிட்டன. அவர்கள் இதைப் பற்றியெல்லாம் விவாதம் செய்து கொண்டிருந்தனர். நீர் வரும் வாய்க்கால்களைத் தேடிச் செல்லும் மிருகங்களைப்போல, ஒரே இடங்களின் வழியாக பயணித்து பாறை மண்ணின் ஆழங்களிலிருந்து அவர்கள் நீரை மொண்டார்கள். ரத்தத்தையும் நீரையும் முழுமையாக எடுத்துவிட்டு வாழ்க்கையை ஒரு எலும்புக்கூடாக மாற்றினார்கள். ஆனால், இப்போது அவர்கள் தாழ்வாரத்தில் குளிர் தேடி மணல் வெளி வழியாக பைத்தியம் பிடித்ததைப்போல வேகமாகப் பாய்ந்து கொண்டிருக்கிறார்கள். வெறும் எண்ணங்கள்... வெறும் வார்த்தைகள்... இல்லாவிட்டால் என்ன வார்த்தைகள்? பாழ்மண்ணில் ஒரு பாழ்செடியை வளர்க்க முயற்சிப்பதைப்போல...
“போ... என் மகனே, உனக்கு என்னுடைய ஆசீர்வாதம் இருக்கும். உனக்குத் தருவதற்கு எவுமில்லை. நான் கூறியது என்ன என்பதை நினைத்துப் பார்க்கும்போது, நீ திரும்பி வரலாம். இந்த மண் உனக்கு சொந்தமானதாகவே இருக்கும். நான் உயிருடன் இருந்தால், ஒரு வீடு உனக்காகக் காத்திருக்கும்.''
“சரி அப்பா.''
“நீ வெளி உலகத்திற்குச் செல்கிறாய். பாதுகாப்புக்காக உனக்கு ஏதாவது தேவைப்படும். போவதற்கு முன்னால், நீ சிரம்பயைப் பார்க்க வேண்டும். நான் அதற்கான பணத்தைத் தந்துவிடுகிறேன் என்று அவரிடம் கூறு. பயணம் நல்லதாக இருக்கட்டும், மகனே.''
“சரி அப்பா.''
நோமோ புன்னகைத்தான். தன் தந்தையின்மீது அப்போது அவனுக்கு அளவற்ற அன்பு உண்டானது. ஆனால், அங்கு இருந்த, அவனுடைய பழைய காலம் மணக்கக்கூடிய பாழ்பொருட்கள் அவனிடம் வெறுப்பை உண்டாக்கியது. அவன் சிரம்பயின் வீட்டுக் குச் செல்வான். ஆனால், வீட்டின் அமைதியற்ற தன்மைகளில் இருந்து தூரத்தை அடையும்போது, அவன் அந்த தாயத்தை எரித்து விடுவான். அவன் தன்னுடைய சொந்தக் கால்களிலும் திறமையிலும் பலமாக நிற்பான். பலம் நம்முடையது; பிறகு கடவுளுடையது. ஆனால், நமக்கு இப்போது உலகம் கடவுள் இல்லாததாகவும் வெளிச்சம் இல்லாததாகவும் இருக்கிறது. வெளிச்சத்திற்காக தட்டுத் தடுமாறி உழலும்போது நாம் விரும்பக்கூடிய மயக்க மருந்துகளே அவை. நமக்கு இப்போது அவை தேவையில்லை. வெளிச்சத்திற்காக ஒரு நெருப்புக் குச்சியை எடுக்க வேண்டும். நோமோ சிரித்துவிட்டான்.
ஆனாலும் விரைவிலேயே மென்மையான இதயம் கொண்டவனாக ஆகிவிட்டான். ஞானிகளுக்கு மட்டுமே தெரியக்கூடிய சில விஷயங்களில் அவனுடைய மனம் இடற ஆரம்பித்தது. தன் தந்தையுடன் உள்ள அவனுடைய மனத் தொடர்புகள் அனைத்தும் அறுந்தன. இனி இயற்கையுடன் உள்ள உறவு மட்டுமே. அவன் சுதந்திரமானவனாக ஆகிவிட்டான். அவர்களுடைய உரையாடலுக்கு சற்று முன்பு, அவனுடைய தந்தை பார்த்த விமானத்தைப் பற்றி அவன் நினைத்துப் பார்த்தான். வானத்திற்கு எல்லைகளும் உறவுகளும் இல்லை. அடர்ந்த இருட்டின் எல்லையற்ற தன்மையில் முடிவே இல்லாத சலனத்திற்கான சட்டமே உள்ளது. அவன் நட்சத்திரங்களுடன் சேர்ந்து அசைய விரும்பினான். தேவையான இடங்களிலெல்லாம் எல்லையற்ற வெளிச்சத்தை அளிக்கும், தன்னைத் தானே பற்றி எரியும் சூரியனாக அவன் இருந்தான். அதுதான் அவனுடைய தர்மமாக இருந்தது. பூமியிலிருந்து தங்களை இல்லாமல் செய்யும் சூழ்நிலைகளை உண்டாக்கக்கூடிய ஆழமான விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் அவனுடைய முன்னோர் களும் தந்தையும் தோல்வியடைந்து விட்டார்கள். இந்த சிந்தனைகள் அவனை ஒரு பாடலின் வரிகளில் கொண்டு போய் சேர்த்தது. "என்ன அதிசயம் இந்த உலகம்' -ஸ்வச்சமோவின் குரலுடன் மிகவும் நெருக்கமாக நின்று அவன் அந்தச் சாயலில் பாட முயற்சித்தான். சந்தோஷமான வேளைகளில் அவன் பாடல்களுக்கு மாறுவான்.
விடை பெற்றுச் செல்லும் தன் மகனை, கிழவன் பார்த்துக் கொண்டு நிற்கவில்லை. அவன் கண்ணுக்குத் தெரியாத எதிர்காலத்தின் இருண்ட கணங்களில் மனதைச் செலுத்த முயற்சித்துக் கொண்டிருந்தான். எவ்வளவோ விஷயங்கள் நடக்கலாம். ஆனால் குடும்பத்திற்கு- குறிப்பாக பிடிவாதக்காரனான இளைய மகன் நோமோவிற்கு வேதனை தரக்கூடிய எதுவும் நடந்துவிடக் கூடாது. நாளை பொழுது மலர்வதற்கு முன்னால் சிரம்பயைப்போய் பார்க்கவேண்டும் என்று அவன் நினைத்தான். தன் மகனின் எதிர்காலத்திற்காக பூஜை செய்ய வேண்டும் என்று அவன் சிரம்பயிடம் கேட்டுக் கொள்ள வேண்டும். பரிகாரம் கேட்கும் முன்னோர்கள் இருந்தால், அவர்களுக்காகவும் அவன் அதைச் செய்வான்.
சூரியன் கீழே போய்க் கொண்டிருப்பதை அவன் பார்த்தான். அதற்குப் பிறகும், அவன் மண்வெட்டியை உயர்த்தி கிளறிக் கொண்டிருந்தான்.
ரத்தச் சிவப்புடன் சூரியன் மெதுவாக இறங்கிச் சென்றது. பகல் வெளிச்சத்தின் கடுமை குறைந்து விட்டிருந்தது. வெகு சீக்கிரமே, மண்வெளியில் ஒரு குளிர்ந்த காற்று வீசியடிக்கும். மேகமற்ற வானம் காட்டு மண்ணில் வெள்ளை எறும்புகளைப் போன்ற இடைவிடாத மழைத் துளிகளைக் கீழே உதிர்த்துக் கொண்டிருக்கும்.