பப்பு குருடனான கதை
எம். முகுந்தன்
தமிழில்: சுரா
சிலர் பிறக்கும்போதே குருடர்களாக ஆவார்கள். சிலர் கண்ணில் வசூரி வந்து குருடர்களாக ஆகிறார்கள். சிலர் திமிர் பிடித்து குருடர்களாக ஆகிறார்கள்.
பப்புவிற்கு திமிர் பிடிக்கவில்லை. கண்ணில் வசூரி வரவில்லை. பிறந்த போது கண்ணுக்கு பார்க்கும் சக்தி இருந்தது.
எனினும், பப்பு குருடனாக ஆகி விட்டான்.
பப்புவின் கதை ஆரம்பிப்பது அவனுக்கு பதினெட்டு வயது நடக்கும்போது. பப்புவின் கதை சோகக் கதை. பதினெட்டு வயது வரை பப்பு வாழவில்லை. அவன் கர்ப்பப் பையிலிருந்து வெளியே வந்ததே பதினெட்டு வயதில்தான் என்று கூறலாம். சிறு வயதில் அவன் சொன்னதைக் கேட்கக் கூடிய ஒரு நல்ல பையனாக இருந்தான். அவன் ஒழுங்காக பள்ளிக் கூடத்திற்குச் சென்றான். அது மட்டுமல்ல - படித்து வகுப்புகள் ஒவ்வொன்றையும் தாவிக் கடந்தான்.
'நல்ல ஒரு பையன்!'
ஊரில் உள்ளவர்கள் எப்போதும் அப்படித்தான் கூறிக் கொண்டிருந்தார்கள்.
'அந்த கல்யாணி புண்ணியம் செய்தவள். அவளுக்கு இப்படியொரு மகன் கிடைத்தானே!'
அப்படி நிலைமை போய்க் கொண்டிருக்க, அவனுக்கு பதினெட்டு வயது ஆனது. அப்போதும் அவன் அப்பாவியாகத்தான் இருந்தான். நல்லவனாக இருந்தான்.
'அப்போதும் அவன் குருடனாக இருக்கவில்லை.'
அவன் சூரியனைப் பார்த்திருந்தான். இரவில் நட்சத்திரங்களையும் நிலவையும் பார்த்திருந்தான். பறவைகள் பறப்பதையும் பார்த்திருந்தான். மரங்களைப் பார்த்திருந்தான். சூரிய அஸ்தமனத்தைப் பார்த்திருந்தான். புலர் காலைப் பொழுதைப் பார்த்திருந்தான். எல்லாவற்றையும் பார்த்திருந்தான். குருடனாக இருக்கவில்லை.
பப்புவின் வீட்டிற்கு முன்னால்தான் ராமுண்ணி நாயர் வசிக்கிறார். ராமுண்ணி நாயருக்கு ஒரு மகள் இருக்கிறாள். மகளுக்கு பதினாறு வயது. பதினாறு வயது கொண்ட பெண் பேரழகு படைத்தவளாக இருந்தாள். பேரழகியின் பெயர் வல்சலா.
ஒரு நாள் வாழை மரத்திற்குக் கீழே அமர்ந்து பதினாறு வயதுக்காரி வாந்தி எடுப்பதை அவளுடைய தாய் பார்த்தாள்.
'என்ன வல்சலா, மகளே.... உனக்கு சுகமில்லையா?'
அவளுடைய அன்னை அவளின் முதுகைத் தடவிக் கொடுத்தாள். அவள் சொன்னாள்:
'தலை சுத்துதும்மா...'
வல்சலாவின் தாய் அவளைத் தாங்கிப் பிடித்து, அறைக்குள் கொண்டு போய் படுக்க வைத்தாள். மறுநாளும் அவள் வாந்தி எடுத்தாள். அதற்கு மறுநாளும்....
'யாரு மூதேவி? யார்னு சொல்லு. அதுதான் உனக்கு நல்லது.'
வல்சலா செயலற்ற நிலையில் தன் தாயின் முகத்தையே பார்த்தாள்.
'மற்றவர்களின் முகத்தில் கரி தேய்க்கலாம் என்று நினைச்சால், உன்னை நான் உயிரோட விட மாட்டேன். உன்னை நான் கொன்னுடுவேன்.'
ராமுண்ணி நாயர் கர்ஜித்தார்.
ராமுண்ணி நாயரின் கர்ஜனை சத்தத்தைக் கேட்டு வல்சலா பதைபதைத்துப் போனாள்.
ராமுண்ணி நாயரின் கர்ஜனையைக் கேட்டு மகள் பதைபதைத்தாள்.
'நீ சொல்ல மாட்டியா? நீ சொல்ல மாட்டியா?'
அன்னையின் கை வல்சலாவின் முதுகில் விழுந்தது.
வல்சலா அவளுடைய கட்டிலுக்குச் சென்று கவிழ்ந்து படுத்து உரத்த குரலில் அழுதாள். அவள் பள்ளிக் கூடத்திற்குச் செல்லவில்லை. குளிக்கவில்லை. உணவு சாப்பிடவில்லை.
வல்சலா பள்ளிக் கூடத்திற்குச் செல்லவில்லை.
வல்சலா குளிக்கவில்லை.
வல்சலா உணவு சாப்பிடவில்லை.
'என் தங்க மகள் அல்லவா? அம்மாக்கிட்ட சொல்லு.... யாரு?' தாய் அவளுடைய முதுகிலும் தலையிலும் தடவினாள்.
'யாரும் இல்ல.'
அவள் தேம்பித் தேம்பி அழுவதற்கு மத்தியில் கூறினாள்.
'எனக்கு கர்ப்பம் இல்ல...'
அவள் சொன்னாள்:
'எனக்கு கர்ப்பம் இல்ல...'
வல்சலா சொன்னாள்:
'எனக்கு கர்ப்பம் இல்ல...'
ராமுண்ணி நாயரின் மகள் சொன்னாள்:
'எனக்கு கர்ப்பம் இல்ல...'
பப்புவின் பக்கத்து வீட்டுக்காரி சொன்னாள்.
ஆனால், அவள் கர்ப்பமாகத்தான் இருந்தாள். அவளுடைய அடிவயிறு வீங்கிக் கொண்டு வந்தது.
தன் தாயின் கால்களில் விழுந்து, குலுங்கிக் குலுங்கி அழுதவாறு அவள் சொன்னாள்:
'இல்லை அம்மா... எனக்கு கர்ப்பம் இல்ல... நான் யாருடனும்...'
வல்சலா குலுங்கிக் குலுங்கி அழுதாள். தந்தையும் தாயும் செயலற்று நின்றார்கள்.
தன்னை யாரும் தொடக்கூட இல்லை என்று எல்லா தெய்வங்களையும் தொட்டு வல்சலா சத்தியம் செய்தாள். தந்தையையும் தாயையும் தொட்டு சத்தியம் செய்தாள்.
'இது என்ன ஒரு அதிசயம்!'
ஊர்க்காரர்கள் கூறினார்கள்.
'கலிகாலம்! கலிகாலத்தில் இப்படி பலவும் நடக்கும்!'
ஊர்க்காரர்கள் கூறினார்கள்.
'அந்த அப்பாவிப் பொண்ணு அழுது அழுது ஒரு வழி ஆயிடுச்சு!'
ஊர்க்காரர்கள் கூறினார்கள்.
மாதம் ஆனபோது, வல்சலா பிரசவமானாள். குழந்தை ஆணாக இருந்தது. குழந்தைக்கு பப்புவின் முகச் சாயல் இருந்தது.
'மகாபாவி.... நீ என் முகத்தில் கரியைத் தேய்ச்சிட்டியே!'
பப்புவின் தாய் மார்பில் அடித்துக் கொண்டு கூப்பாடு போட்டாள்.
'மற்றவர்களின் முகத்தை நான் இனி எப்படி பார்ப்பேன்? என் கடவுளே...!'
பப்புவின் தாய் மார்பில் அடித்துக் கொண்டு கூப்பாடு போட்டாள்.
'இங்கிருந்து போ. வெளியேறி எங்கேயாவது போ. இனி நீ என் மகனே இல்ல.'
பப்புவின் தாய் மார்பில் அடித்துக் கொண்டு கூப்பாடு போட்டாள்.
பப்புவோ செயலற்று நின்றிருந்தான்.
'எனினும், பப்பு பையன் இதைச் செய்வான்னு யாரும் நினைக்கவேயில்லை.'
'ஊமைப் பூனை பானையை உடைக்கும்.'
'நான் அவளை கையால தொடல.'
பப்பு சொன்னான்.
'கையால தொட வேண்டாம். ஏன் தொடணும்?'
அதைக் கூறிய ஆள் பலமாக சிரித்தான்.
பப்புவிற்கு எதுவும் புரியவில்லை. அவன் திகைப்படைந்து நின்று விட்டான். அவன் எல்லா தெய்வங்களையும் தொட்டு சத்தியம் செய்தான்.
அவன் வல்சலாவை எதுவும் செய்யவில்லை. அவன் அவளைப் பற்றி மனதில் நினைத்துக் கூட பார்ப்பதில்லை. பிறகு... பப்பு எப்படி அவளைக் கர்ப்பமாக ஆக்கியிருக்க முடியும்?
பப்பு கூறுகிறான் -- அவன் வல்சலாவைத் தொடவே இல்லை என்று. வல்சலா கூறுகிறாள் -- அவள் அவனைத் தொடவே இல்லை என்று. ஆனால், குழந்தை வளர... வளர அதற்கு வெளிப்படையாகவே பப்புவின் முகச் சாயல் உண்டானது.
நாட்கள் கடந்து சென்றன.
பப்புவின் கல்லூரிக்கு அருகிலிருக்கும் கள்ளு இறக்கும் தொழிலாளியான கண்ணனின் மனைவி பிரசவித்தாள். குழந்தைக்கு பப்புவின் முகச் சாயல் இருந்தது.
'மீசை முளைக்கவில்லை. அதற்கு முன்பே....'
ஊர்க்காரர்கள் கூறினார்கள்.
'அடிச்சு காலை ஒடிக்கணும்.'
ஊர்க்காரர்கள் கூறினார்கள்.
பிரசவமாகி கிடந்த தன் மனைவியை கண்ணன் மிதிக்கவும், குத்தவும் செய்தான். அடியும் இடியும் வாங்கி உரத்த குரலில் அழுவதற்கு மத்தியில் கண்ணன் மனைவி முணுமுணுத்தாள்:
'அவன் என்னைத் தொடவே இல்ல...'
'போ.... இங்கேயிருந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டு போ.'
கண்ணன் அவளுடைய தலை முடியைப் பிடித்து, அவளைக் கட்டிலிலிருந்து கீழே இழுத்துப் போட்டான்.
'நான் சொல்றதை கேளுங்க. அவன் இங்கே வரல. என் அம்மா மேல சத்தியம்... பகவதி மேல சத்தியம்...!'
அவள் கண்ணனின் கால்களில் விழுந்து அழுதாள்.
கல்யாணியம்மாவும் அழுதாள். அறையைப் பூட்டிவிட்டு, அதற்குள் படுத்து அவள் எப்போதும் அழுது கொண்டேயிருந்தாள்.
'அவள் பாவி!'
ஊர்க்காரர்கள் கூறினார்கள்.
'இப்படியொரு பையன் அவளுடைய வயிற்றில் பிறந்திருக்கிறானே!'
ஊர்க்காரர்கள் கூறினார்கள்.
நாட்கள் கடந்து சென்றன. வல்சலாவின் குழந்தை கவிழ்ந்து விழவும் தரையில் தவழவும் படித்தது. கள்ளு இறக்கும் தொழிலாளியான கண்ணனின் மகனும் வளர்ந்து கொண்டிருந்தான்.
கல்யாணியம்மாவின் கவலை குறைந்து கொண்டிருந்தது. அப்போதுதான் காட்டுத் தீயை போல செய்தி பரவியது. சப் கலெக்டர் சந்திரமேனவனின் மனைவி பிரசவமானாள். குழந்தைக்கு பப்புவின் முகச் சாயல் இருந்தது.
'உனக்கு கூறுவதற்கு எதுவுமில்லையா?'
சந்திரமேனவன் தன் மனைவியிடம் கேட்டான். அவன் புகைத்துப் போட்ட சிகரெட் துண்டுகள் சாம்பல் தட்டு நிறைந்து மேஜையின் மீதும் தரையிலும் கிடந்தன.
'இல்லை.'
அம்மிணி சொன்னாள்.
'உனக்கு அவனைத் தெரியாதா?'
'இல்ல...'
'அவன் உன்னைத் தொடலையா?'
'இல்ல...'
அவன் புன்னகைத்தான். ஒன்றிற்குப் பின்னால் இன்னொன்று என்று சிகரெட்டுகளைப் பற்ற வைத்தவாறு அவன் தன்னுடைய நாற்காலியில் அமர்ந்திருந்தான்.
அம்மிணி பிரசவமாகி இரண்டு வாரங்கள் கடந்த பிறகு, தையல்காரன் நாணுவின் மனைவி ஜானு பிரசவமானாள். ஜானுவின் குழந்தைக்கும் பப்புவின் முகச் சாயல் இருந்தது.
'இது என்ன ஒரு கதை!'
ஊர்க்காரர்கள் வானத்தைப் பார்த்தார்கள்.
'அவனை இப்படி கயிறை அவிழ்த்து விட்டால், அவன் இந்த ஊரையே ஒரு வழி பண்ணிடுவான்!'
ஊர்க்காரர்கள் கோபப்பட்டார்கள்.
'அவனை ஏன் குற்றம் சுமத்துறீங்க? அவனுக்குப் பின்னால் போற பெண்களைத்தான் சொல்லணும்.'
ஊர்க்காரர்கள் பப்புவை நியாயப்படுத்த முயற்சித்தார்கள்.
ராமுண்ணி நாயரின் மனைவிக்கு கர்ப்பம்.
ராமுண்ணி நாயரின் மனைவி... வல்சலாவின் தாய்....
ராமுண்ணி நாயரின் மனைவி பப்புவின் பக்கத்து வீட்டில் வசிக்கிறாள்.
ராமுண்ணி நாயரின் மனைவி பிரசவமாவதைப் பார்ப்பதற்கு ஆட்களுக்கு மிகுந்த ஆர்வம் உண்டானது. அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டார்கள்:
'அவளுக்கு இது எத்தனையாவது மாதம்?'
'அஞ்சு...'
'அஞ்சுதான் ஆகுதா?'
சிலர் ராமுண்ணி நாயரின் மனைவி பிரசவமாவதைப் பார்ப்பதற்கு அவசரப்பட்டார்கள்.
இதற்கிடையில் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றும் ஜனார்த்தனின் மகள் ப்ரேமா பிரசவமானாள். அவள் திருமணமாகாதவள். வழக்கம்போல குழந்தைக்கு பப்புவின் முகச் சாயல்....
ராமுண்ணி நாயரின் மனைவிக்கு ஆறு மாதம் ஆனது.
ஏழு ஆனது.
எட்டு ஆனது.
ஒன்பது ஆனது.
ஒன்பதரை ஆனது.
ராமுண்ணி நாயரின் மனைவிக்கு பிரசவ வேதனை ஆரம்பமாகி விட்டது என்று கேள்விப்பட்ட ஊர்க்காரர்கள் ராமுண்ணி நாயரின் வீட்டிற்கு வந்தார்கள். சிலர் திண்ணையில் ஏறி உட்கார்ந்தார்கள். சிலர் வெளியே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள்.
ராமுண்ணி நாயரின் மனைவி பிரசவமானாள். வல்சலாவின் தாய் பிரசவமானாள். பப்புவின் பக்கத்து வீட்டிலிருக்கும் ராமுண்ணி நாயரின் மனைவி பிரசவமானாள்.
குழந்தைக்கு பப்புவின் முகச் சாயல் இருந்தது.
பப்புவை நடுத்தெருவில் தரையில் வீழ்த்தி, ஊர்க்காரர்கள் அடித்து, உதைத்தார்கள்.
கல்யாணியம்மாவிடம் அவர்கள் கூறினார்கள்:
'மகனைப் பிடித்து கட்டிப் போடுவதுதான் நல்லது. இல்லாவிட்டால் பப்பு என்ற ஒரு மகன் உங்களுக்கு இருக்க மாட்டான். சொல்றதைச் சொல்லிட்டோம்.'
'அவன் என் மகன் இல்ல.'
பப்புவின் தாய் சொன்னாள்.
'அவனை என்ன வேணும்னாலும் செய்யுங்க. கொல்லுங்க...'
கணவனை இழந்து விட்ட பப்புவின் தாய்க்கு கர்ப்பம் உண்டாகி, அவள் பிரசவமும் ஆனாள். குழந்தைக்கு பப்புவின் முகச் சாயல் இருந்தது.
உலகம் அதிர்ச்சியடைந்து நின்று விட்டது. ஊர்க்காரர்கள் வெறி பிடித்தவர்களைப் போல ஆனார்கள். பெண்கள் பப்புவிற்கு பயந்து வெளியே வராமல் இருந்தார்கள்.
'இதற்கு பின்னால் ஏதோ ரகசியம் இருக்கு.'
ஊர்க்காரர்கள் கூறினார்கள்.
அவர்களால் அதைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
அவர்கள் ஆற்றைக் கடந்து, மலைகளை ஏறி கடந்து, கேளு நாயரைப் போய் பார்த்தார்கள். கேளு நாயர் வந்து, வாயில் இருந்த வெற்றிலை எச்சிலைத் துப்பி விட்டு, தன்னுடைய பருமனான கையை பப்புவின் தோளில் வைத்தார்.
'மகனே, நீ இதுவரை ஒரு பெண்ணுடனும் சேர்ந்து படுத்தது இல்லையா?'
'இல்ல...'
'உண்மையாகவா?'
'உண்மையா...'
பப்பு தேம்பித் தேம்பி அழுதான்.
'அழ வேண்டாம்... அழ வேண்டாம்.'
கேளு நாயரின் குரல் கனிவு நிறைந்ததாக இருந்தது. கேளு நாயர் பப்புவின் வீட்டிற்கு வெளியே வந்தபோது, ஊர்க்காரர்கள் கேட்டார்கள்:
'என்ன கேளு நாயர், ரகசியம் என்னன்னு தெரிஞ்சிருச்சா?'
'ம்...'
கேளு நாயர் முனகினார்.
'அவன் பெண்களைப் பார்த்தால், பெண்களுக்கு கர்ப்பம் உண்டாகும்' - கேளு நாயர் கூறினார்: 'பாவம்... குழந்தை.' கேளு நாயர் சென்று விட்ட மறுநாள் பப்பு, தன் கண்களைக் குத்தி குருடாக்கிக் கொண்டான்.