Logo

நான்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 5067
Naan

நான்

எம்.முகுந்தன்

தமிழில் : சுரா

ண்களைத் திறந்தான். தான் எங்கு இருக்கிறோம்? நான்கு பக்கங்களிலும் திகைப்புடன் பார்த்தான். எதையும் பார்ப்பதற்கோ கேட்பதற்கோ முடியவில்லை. அப்படியென்றால், தான் எங்கே இருக்கிறோம்? எப்படி தெரிந்து கொள்ள முடியும்? எங்கேயும் இருக்கலாம்.

கிராமத்தில் படிகளும் துளசி மாடமும் உள்ள தன்னுடைய வீட்டின் திண்ணையில் கள்ளு நிறைக்கப்பட்ட குவளைக்கு முன்னால் அமர்ந்திருக்கலாம். சென்னையில் சோழ மண்டலம் என்ற கலைஞர்களின் கிராமத்தில் சாயத்தின் கறை படிந்த துவாலையால் இடுப்பை மறைத்துக் கொண்டு ஸல்ஃபோட்டா பருகி, சுய உணர்வு இல்லாமல் நடந்து கொண்டிருக்கலாம். டில்லி பல்கலைக் கழகத்தின் கலைப் பிரிவு இருக்கக் கூடிய கட்டிடத்தில் ஆப் ஆர்ட்டைப் பற்றியும் பாப் ஆர்ட்டைப் பற்றியும் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டு நின்றிருக்கலாம்.

இல்லை...தான் கள்ளுக்கு முன்னால் அமர்ந்து கொண்டோ, ஸல்ஃபோட்டா பருகிக் கொண்டோ, சொற்பொழிவு செய்து கொண்டோ இருக்கவில்லை. தான் கிராமத்தில் இல்லை. சென்னையில் இல்லை. டில்லியில் இல்லை. நகரத்திலோ கிராமத்திலோ இல்லை. கரையிலும் கடலிலும் இல்லை. மலையிலும் காடுகளிலும் இல்லை.

தான் பூமியில் இல்லை, சூரிய குடும்பத்திலும் இல்லை.

தூரத்தில்... மிகவும் தூரத்தில்... பால் வெளிக்கும் வெளியே இருக்கும் இறந்து போன ஒரு தனிமையில் இருக்கும் நட்சத்திரத்தின் மீது, இருட்டிலும் குளிரிலும் அவன் சுருண்டு படுத்திருந்தான்.

நினைவுப்படுத்திப் பார்க்க முடியாமல் இருப்பது திசைகளை மட்டுமல்ல. காலத்தைப் பற்றிய புரிதல் இல்லாமற் போயிருக்கிறது. விக்டோரியன் யுகத்திலோ மத்திய யுகத்திலோ இருக்கலாம். படைத்தலுக்கு முன்பு இருந்த இருண்ட யுகங்களிலும் இருக்கலாம். தன்னைப் பொறுத்த வரையில் காலம் இருண்டது. காலத்தில் முழுமை இருட்டு... இருட்டின் முழுமை காலம். இருட்டின், காலத்தின் முழுமை தான். தான்தான்... யுகங்கள் குளிர்ந்து உறைந்து போய், அணைந்து போன நட்சத்திரங்களைச் சுற்றிலும் பரவிக் கிடக்கும் எல்லையற்ற இருள் தான்தான்.

திசைகளும் காலமும் மறந்த மனிதன் கூரையை நோக்கி கண்களை திறந்து வைத்துக் கொண்டு கூரையிடம் கேட்டான் :

'நான் யார்?

தான் யாரென்று தனக்கு தெரியவில்லை. தான் கோஹ்ன் பென்டிற்றோ, தாரிக் அலியோ, மகேஷ் யோகியோ, சாய் பாபாவோ, சே குவேராவோ, சேர்மன் மா சே துங்கோ... யாராகவும் இருக்கலாம்.

இல்லை... தான் அவர்களில் யாருமில்லை.

தான் தான்தான்.

அப்படியென்றால் தான் யார்?

யாரோதான். யாராகவும் ஆகாமலிருக்க வழியில்லை. தனக்கு சரீரம் இருக்கிறது. சுவாசிக்கிறோம். அதனால்தான் உயிருடன் இருக்கிறோம். உயிருடன் இருக்க வேண்டுமென்றால், ஏதாவது செய்தே ஆக வேண்டும். எதுவும் செய்யாமல் நிலை நிற்பதற்கும், வாழ்வதற்கும் முடியாதே!

திசைகள் தெரியவில்லையென்றால், காலத்தைப் பற்றியும் புரிதல் இல்லையென்றால் போகட்டும்... ஆனால், தான் யார் என்பது தெரிந்தாக வேண்டும். எது வந்தாலும் சரி... அதை தெரிந்தே ஆக வேண்டும். கண்களை கூரையின் மீது ஆணியடித்ததைப் போல பதிய வைத்துக் கொண்டு, முற்றிலும் ஒரே சிந்தனையுடன் மையப்படுத்திக் கொண்டு, நெற்றியைச் சுளித்து யோசித்துக் கொண்டிருந்தபோது, உதட்டில் சிரிப்பு வந்தது. சந்தோஷத்துடன் தனக்குத்தானே கூறிக் கொண்டான்: 'நான்... ரமேஷ் நாயர். என் பெயர் ரமேஷ் நாயர்.'

திசைகளைப் பற்றியும் காலத்தைப் பற்றியும் சுய உணவு வந்தது. பொலிவியா தென் அமெரிக்காவில் இருக்கிறது. சே குவேரா மரணமடைந்தது ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தேழிலும் கான் பென்டிட் பாரிகேடுகள் உருவாக்கியது அறுபத்து எட்டிலும். தான் பிறந்தது கேரளத்திலும், படித்தது மதராஸிலும், வேலை செய்வது டில்லியிலும்.

எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கிறான்.

நேற்று சாயங்காலம் அலுவலகத்தை விட்டு நேராகச் சென்றது வாடகைக் கார் நிறுத்தத்திற்குத்தான். நிறுத்தத்தில் நின்றிருந்த ஒன்பது வாடகைக் கார்களையும் அவனுக்கு நன்கு தெரியும். வாடகைக் கார்களுக்கு அவனையும் நன்கு தெரியும்! ஒரு காரில் ஏறி உட்கார்ந்து, போக வேண்டிய இடத்தைப் பற்றி வாடகைக் காரிடம் கூற வேண்டிய தேவையே இல்லை. வாடகைக் காருக்கு அது நன்றாகவே தெரியுமே. போக வேண்டிய இடம் குத்தப் சாலை. அவனைப் பொறுத்த வரையில் நகரத்தில் ஒரேயொரு சாலை மட்டுமே இருக்கிறது. அது: குத்தப் சாலைதான். மற்ற எல்லா தெருக்களும் குத்தப் சாலையின் கிளைகள்தாம். அக்பர் சாலை, குத்தப் சாலையே. குருத்வாரா சாலை, குத்தப் சாலைதான் மின்டோ சாலை, குத்தப் சாலையே. ரிங்க் சாலை, குத்தப் சாலைதான்.

சாலைகள் மட்டுமல்ல: நகரமும் குத்தப் சாலைதான்.

டில்லி குத்தப் சாலைதான்.

டில்லி மட்டுமல்ல- உலகமே குத்தப் சாலைதான்.

பூமி குத்தப் சாலையே...

சூரிய குடும்பமும் பால் வெளியும் குத்தப் சாலையே. குத்தப் சாலையில் போதைப் பொருட்கள் விற்கிறார்கள்.

உலகமே 'பங்க்'தான். போதைப் பொருட்களின் வழியாக மட்டுமே உலகத்தால் நிலை பெற்று நிற்க முடியும். இல்லாவிட்டால் உலகமோ வாழ்க்கையோ இல்லை. யஹோவாவும் லூஸிஃபரும் சே குவேராவும் கான்பென்டிட்டும் இல்லை. 'பங்க்' ஆண்மையின் அடையாளம். 'பங்க்' உபயோகிக்காதவர்கள் உலகத்திற்கு எதிரானவர்கள்.

அவன் உலகத்திற்கு எதிரானவன் அல்ல.

விளக்கங்களும், அர்த்தங்களும், ஒழுங்கும் இல்லாத தன்னுடைய வாழ்க்கைக்கு 'பங்க்'கின் மூலமாக அவன் விளக்கங்களும், அர்த்தங்களும், ஒழுங்குகளும் தருகிறான்.

கூரையிலிருந்து கண்களைப் பின்னோக்கி எடுத்தான்.


குளிர்ந்து மரத்துப் போன தரையில் படுத்திருக்கிறான். புதிய டெரிவுல் சூட்டைக் கொண்டு நிர்வாணத்தை மறைத்துக் கொண்டும் பாலீஷ் செய்து பிரகாசம் உண்டாக்கிய காரணத்தால் கால்களை அழகாக்கவும் செய்திருக்கிறான். மல்லாந்த நிலையில் படுத்திருக்கிறான். எழுந்து அமர்ந்து கை- கால்களை மேல் நோக்கி உயர்த்தி, விரித்து, முதுகை நிமிர்த்தினான். அப்போதுதான் சாளரத்திற்கு அப்பால் பதுங்கி நின்று சிரித்துக் கொண்டிருக்கும் சூரியனைப் பார்த்தான். சூரியனின் முகத்தைப் பார்த்து கொட்டாவி விட்டான். அப்போது சூரியன் முகத்தைத் திருப்பிக் கொள்ளவில்லை. சூரியனை அவனுக்குத்தான் நன்கு தெரியுமே! அவன் பட்டைச் சாராயம் பருகி, மதராஸில் ஐ.ஸி.எஃப். காலனியின் வழியாக யாசித்து நடப்பதை சூரியன் பார்த்திருக்கிறது. குளிர் காலத்தின் பேரமைதி நிறைந்த இரவு வேளைகளில் கனோட் ப்ளேஸின் நியான் விளக்குகளுக்கு மத்தியில் 'சரஸ்' புகைத்து சுய உணர்வை இழந்து நடந்து திரிந்ததை சூரியன் பார்த்திருக்கிறது. ஶ்ரீதராணி காலரியில் ஒன் மேன் ஷோ நடத்தி, பத்திரிகைகளின்- ரசிகர்களின் கைத்தட்டல்கள் வாங்கியதையும் சூரியன் பார்த்திருக்கிறதே!

சூரியனுக்கு அவனை நன்கு தெரியும்.

சூரியன் சிரித்தது.

இன்று அவன் ஸல்ஃபோட்டாவும் ஜக்மோஹனும் பருகுவதாக இல்லை. பெண்களுக்குப் பின்னால் நடப்பதாகவும் இல்லை.

இன்று அவன் குடிகாரனோ பெண் பித்தனோ அல்ல.

அப்படியென்றால், இன்று அவன் யார்?

பலவாகவும் ஆக வேண்டுமென்று ஆசைப்பட்டான். யாருமாகவும் ஆகவில்லை. டின்டோரெட்டோவாக ஆகவில்லை. ஜான் டூவானாக ஆகவில்லை. கான்பென்டிட்டாக ஆகவில்லை. சேவாக ஆகவில்லை. மாவோவாக ஆகவில்லை. இன்று அவன் யாருமல்ல. 'நீ யார்?' என்று கேட்பவர்களிடம், நேற்று வரை கூறிக் கொண்டிருந்தான்: 'நான் ஓவியன்'. நம்ப தயாராக இல்லாதவர்களிடம் ப்ரஷ்யூரையும், பத்திரிகைகளின் கட்டிங்குகளையும், பாராட்டு இதழ்களையும் காட்டினான். அவர்கள் நம்பினார்கள். எதுவும் பேசாமல் வணங்கியவாறு பின்னோக்கி நகர்ந்தார்கள்.

இப்போது அவன் ஓவியன் அல்ல.

நேற்று அவனுக்குள் இருந்த ஓவியன் மரணமடைந்து விட்டான். இறப்பதற்கு முன்பு அவன் கை, கால்களை உதறினான். நீருக்காக கூப்பாடு போட்டான். கண்கள் முன்னோக்கி வந்தன. அவன் மரணப் போராட்டங்களை வெளிப்படுத்தி, மரணத்தைத் தழுவினான். இறுதியில் இரண்டு மரக் கொம்புகளைக் கொண்டு உண்டாக்கப்பட்ட பிணக் கட்டிலில் அவனைக் கட்டி, மேலே மலர்களைத் தூவினார்கள். ராம்... ராம்... சத்தத்துடன் யமுனை நதியின் கரைக்குக் கொண்டு சென்றார்கள். சிதையில் கிடந்து அவன் எரிந்தான். அவனின் மரணத்தைப் பற்றிய கவலை தாங்கிக் கொள்ள முடியாததாக இருந்தது முழங்கால்களில் முகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான். கண்ணீர் விட்டான். அப்போது குத்தப் சாலை கையைக் காட்டி அழைத்தது. அவன் அங்கு சென்றான்.

சிதையிலிருந்து அவன் உயிர்த்தெழுந்தான். அவன் இறக்கவில்லை. இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், மரணத்தைத் தழுவிய அவனை குத்தப் சாலை மீண்டும், பிறக்கச் செய்தது. அவன் திரும்பி வந்தான். அவன் அவனுக்குள் நுழைந்தான். அவன் மீண்டும் ஓவியனாக ஆனான். அவன் அவனாக ஆனான். அவன் நீயாக ஆனான். அவனாக ஆனான்.

குத்தப் சாலையில் செல்லும்போது ஒன்றுமேயல்லாத அவன் என்னவாக ஆகிறான்?

அவன் கான்பென்டிட்டாக ஆனான். பாரீஸுக்குச் சென்று பல்கலைக் கழகத்தைக் கைப்பற்றி, சாலைகளில் 'பாரிகேடுகள்' உண்டாக்குகிறான்.

அவன் சாய்பாபாவாக ஆகி, புட்டபர்த்திக்குச் சென்று ஜால வித்தைகள் காட்டுகிறான்.

அவன் மாஷே தயானாக ஆகி, நைல் நதியின் கரையின் வழியாக படையைச் செலுத்திக் கொண்டு நடக்கிறான். அரேபியர்களைப் போருக்கு அழைத்து, நைல் நதியில் இரத்தத்தைக் கலக்கச் செய்கிறான்.

லிண்டன் பி.ஜான்ஸனாக ஆகி வியட்நாமிற்குச் சென்று பெர்ஃப்யூம் நதியை வற்றச் செய்து, அதில் குருதியை நிறைக்கிறான்.

சேவாக ஆகி பொலிவியாவின் அடர்த்தியான காடுகளுக்குள் தாகமெடுத்து, தொண்டை அடைக்கும்போது தன்னுடைய சிறுநீரை பருகிக் கொண்டு, பாக்கெட்டிற்குள் ட்ராட்ஸ்கியுடன் புரட்சியை ஆரம்பித்து விட்டு நடக்கிறான்.

அக்டோபர் புரட்சி முடிந்த பிறகு அவன் ஃப்ரான்ஸுக்குச் சென்று, டான்டேயாக ஆனான். அவன் ஃப்ரெஞ்ச் புரட்சி நடத்தி வாட்டர் லூவை அடைந்தபோது, நெப்போலியன் போனாப்பார்ட்டாக ஆனான். மத்திய யுகத்தின் வழியாக நடத்திய பயணத்தில் வென்ஸில் இருந்தபோது, டின்டோட்டாவாக ஆனான். அரண்மனைகளையும் தேவாலயங்களையும் ஓவியங்களைக் கொண்டு நிறைத்தான். பெத்லஹேமில் பிறந்தான். நாசரேத்தில் வளர்ந்தான். கால்வரியில் சிலுவையில் அறையப்பட்டான். மக்கள் பின்னால் நின்று கொண்டு சத்தம் போட்டு அழைக்க, கற்கள் பறந்து விழ, அவன் மெக்காவிலிருந்து மதீனாவிற்குச் சென்றான். போதி மரத்தின் நிழலில் அவன் தவத்தில் மூழ்கியிருந்தான். படைப்பின் முதல் சூட்சும பிரபஞ்சம் நீருக்கு மத்தியில் அவனுடைய நெஞ்சில் பரந்து கிடக்கிறது. அவனுடைய நெஞ்சில் முதலும் முடிவுமில்லாமல் பரந்து கிடக்கும் நீர் பரப்பில், இருளில் ப்ரம்மா நீந்தி விளையாடினார். அவன் வரலாறாக ஆனான், வேதங்களும் புராணங்களுமாக ஆனான். காலமாக ஆனான்.

இறுதியில் சாயம், நாஃப்தால் ஆகியவற்றின் வாசனை நிறைந்த தன்னுடைய வேலை செய்யும் இடத்தில் முழுமை செய்யாத க்யான்வாஸ்களுக்கு மத்தியில் படுத்து ஒன்றுமில்லாதவனாக ஆனான்.

இப்போது ஒன்றுமற்ற தன்மையிலிருந்து சூரிய வெளிச்சம் உண்டாகிறது. அவன் உயிரணுவாக ஆகி உடலுக்குள் கிடக்கிறான். கண்டமாக ஆகிறான். குழந்தையாக ஆகிறான். தொப்புள் கொடியைத் துண்டித்து, அவன் வெளியே வருகிறான். வளர்கிறான். மனிதனாக ஆகிறான். ரமேஷ் நாயராக ஆகிறான். ஓவியனாக ஆகிறான்.


ஓவியனாக அல்லாமல் ஆகிறான்.

சூரியன் எல்லாவற்றையும் பார்க்கிறது. சூரியன் இப்போதும் பார்த்துக் கொண்டு நிற்கிறது. என்ன ஒரு ஆர்வம்!

ஒரு சிகரெட்டைப் புகைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. மேஜையின் மீது சிகரெட் பாக்கெட் கிடப்பதைப் பார்த்தான். எழுந்திருக்க முடியவல்லை. சிகரெட் மேஜையிலிருந்து இறங்கி வரவோ, மேஜையை இங்கு வரவோ செய்தால்... சிகரெட் பாக்கெட் இறங்கி வராது.

மேஜை அசையாது. சூரியன் வானத்திலிருந்து இறங்கி வந்தால்....

'புவொநாஸ் தியாஸ்!'

ஸ்பேனிஷ் மொழியில் வணக்கம் கூறுகிறான். யார்? சூரியன் இறங்கி வந்து விட்டதா?

திரும்பிப் பார்க்காமல் சொன்னான்: 'அந்த சிகரெட்டைச் சற்று எடுத்துத் தா. ப்ளீஸ்...'

திறந்த கதவின் வழியாக மெல்லிய நறுமணம் உள்ளே நுழைந்து வந்தது. இன்டிமேட்டின் வாசனையா? ஷார்னெல் ஃபைவுடையதா? யார்ட்லி பவுடருடையதா?

இல்லை.

யார்ட்லி பவுடரின் வாசனை அல்ல. ஷார்னெல் ஃபைவுடையதல்ல. இன்டிமேட்டின் நறுமணம் அல்ல. சுஜாதாவுடையது. சுஜாதாவின் வாசனை அது.

வந்தது சூரியன் அல்ல. சுஜாதா...

'ஏன் விஷ் செய்யல?'

'எந்த மொழியில் வேணும்?'

'அஃப் கோர்ஸ்... ஸ்பேனீஷில்...'

'குட்டன் மோர்கன்... நான் ஜெர்மன்காரன்.'

அவன் ஹிட்லர்... ரூடி தி ரெய்ட்...

அவன ஜெர்மன் மொழி பேசுகிறான். அவள் ஸ்பேனீஷ் மொழியில்...

அவள் ஸ்பேனீஷ் மொழியைக் கற்றுக் கொள்வது லத்தீன் அமெரிக்காவின் கெரில்லா அமைப்பையும் சே குவேராவையும் சரியாக புரிந்து கொள்வதற்காகத்தான். அவன் ஜெர்மன் மொழியைக் கற்றுக் கொள்வது ஹிட்லராக ஆவதற்குத்தான். இன்னும் கொஞ்சம் ஆகட்டும். ஆங்கிலம் கற்று ஷேக்ஸ்பியராக ஆவதற்கு பார்க்க வேண்டும். மலையாளம் கற்று  குஞ்சன் நம்பியாராக ஆக வேண்டும்.

'கும் குறுகுறும்...'

'என்ன அர்த்தம்?'

'இது ஜெர்மன் இல்லை...'

'பிறகு?'

'குக்கு குறும் குறுகுறும்... இது காட்டு வாழ் மனிதர்களின் மொழி. நான் காட்டு வாழ் மனிதன்.'

சிகரெட்டை எடுத்து தந்தபோது, காட்டு மனிதனின் மொழியிலேயே நன்றி சொன்னான்:

'கும் க்ரீம்.'

சிகரெட்டைப் பற்ற வைத்து சூரியனின் முகத்தில் புகையை ஊதி விட்டவாறு சொன்னான்:

'நான் இறந்து விட்டேன்.'

'இங்கு இருப்பது யார்?'

'என் டம்மி...'

'முஸ்ஸோலியம் எங்கே இருக்கு?'

அவளுக்கு அது ஏன் தெரிய வேண்டும்? வருடத்திற்கு ஒரு முறை தன்னுடைய பிறந்த நாள் வரும். அவள் மலர்களைக் கொண்டு போய் வைப்பாள் போலிருக்கிறது. பூக்கள் என்றால் அவனுக்கு மிகவும் விருப்பம். பூக்களின் கெட்ட நாற்றம் அவனுக்குப் பிடிக்கும்.

'அதோ...'

தன்னுடைய கல்லறையைச் சுட்டிக் காட்டினான். ஆறடி நீளமும் நான்கடி அகலமும் உள்ள அந்த க்யான்வாஸ் இருக்கிறது அல்லவா? அதுதான் அவனுடைய முஸ்ஸோலியம். அங்குதான் அவனுக்குள் இருந்த ஓவியன் தன்னுடைய கரையான் அரித்த எலும்புகளுடன் கிடக்கிறான்.

அவள் அந்த க்யான்வாஸின் அருகில் சென்றாள். ஃப்ரேமில் இணைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆறடி நீளமும் நான்கடி அகலமும் உள்ள க்யான்வாஸ். அதன் மீது தூரிகையோ, சாயமோ பட்டிருக்கவில்லை. அது வெறுமனே கிடக்கிறது. அதனால் அது க்யான்வாஸ் அல்ல. தூரிகை தொடாத, சாயம் பட்டிராத க்யான்வாஸ், க்யான்வாஸ் அல்லவே! தூரிகையையும் சாயத்தையும் எதிர்பார்த்து காத்திருக்கும் க்யான்வாஸ்தான், க்யான்வாஸ். அந்த க்யான்வாஸ் தூரிகையையோ, சாயத்தையோ எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கவில்லை. அதனால் அது க்யான்வாஸ் அல்ல. அது கல்லறை... அவனுடைய ஓவியனின் கல்லறை. அவனுடைய கல்லறை...

'இதில் என்ன வரைகிறீங்க?'

விசாலமான அந்த க்யான்வாஸுக்கு முன்னால் நிற்கும்போது, அவள் சிறியதாகிப் போகிறாள்.

'வரைந்து முடிந்தாகி விட்டது.'

'நான் எதையும் பார்க்கலையே?'

'உன்னால் பார்க்க முடியாது.'

'எனக்கு கண்கள் இல்லையா?'

'சாயத்தைக் கொண்டு வரையவில்லை.'

ஆச்சரியப்பட வேண்டாம் பெண்ணே! ஆச்சரியப்பட வேண்டாம்...

'இதன் பெயர் என்ன?'

'பெயர் இல்லை.'

வர்ணங்கள் இல்லாத, பெயர் இல்லாத ஓவியத்திற்கு முன்னால் அவள் ஆச்சரியத்துடன் நின்று கொண்டிருந்தாள்.

'ஏன் கையெழுத்துப் போடவில்லை?'

'கை எழவில்லை.'

'நான் போடட்டுமா?'

'நீ நானாக ஆக முயற்சிக்கிறாயா?'

'நீங்கள் நானாக ஆகுகிறீர்கள்.'

'நான் நீயாக ஆகலாம். நீ நானாக ஆகு.'

அவனால் அவளாக ஆக முடியவில்லை. சந்தன வர்ண புடவை அணிந்து, கையில் எகிப்திய பழங்கால வளையல்களை அணிந்து நின்று கொண்டிருக்கும் ஒரு பெண்ணாக அவனால் முடியாது.

அவளால் அவனாக ஆகவும் முடியாது.

அவன் குடிகாரனும், விலை மகளிரிடம் செல்பவனும்...

'நான் நானும்... நீ நீயும்...'

'நான் நானல்ல.'

'பிறகு யார்?'

'நான் சே குவேரா அல்லவா?'

'சே... ஆண்.'

'இல்லை.'

'பெண்ணா?'

'சே இயற்கை.'

சே நெருப்பும், காற்றும், நீரும்... சூரியன்...

'சே ஈராஸின் அவதாரம்.'

'ஈராஸின் அவதாரமல்ல... இயேசு கிறிஸ்துவின்...'

'ஆமாம்...'

அவளுடைய கண்கள் மலர்ந்தன. அவள் தொடர்ந்து சொன்னாள்: 'ஆமாம்... சே, இயேசு கிறிஸ்துதான்.'

கிறிஸ்துவிடம் இருப்பதைப் போன்ற செம்பு நிற தலை முடியும், தாடியும். கிறிஸ்துவிடம் இருப்பதைப் போன்ற சாந்த கம்பீரம் நிறைந்த தெய்வீக முகம்.

சே, கிறிஸ்து... ஶ்ரீபுத்தன்... குரு நானக்... நபி...

'நீ ஏன் சேவாக ஆக ஆசைப்படுகிறாய்?'

அவள் ஃபிடல் கேஸ்ட்ரோவாக கூறினாள்: 'மனித இனத்தின் மிக உயர்ந்த இடத்தை அடைவதற்கு...'

'உன்னால் துப்பாக்கியைத் தூக்க முடியுமா?'

'முடியும்.'

'நீ தெப்ரேயின் 'ரெவல்யூஷன் இன் ரெவல்யூஷன்' வாசித்திருக்கிறாயா?'

'வாசித்திருக்கிறேன்.'

'உனக்கு ஆஸ்துமா இருக்குதா?'

இல்லை.'

'அப்படின்னா உன்னால் சேயாக ஆக முடியாது.'

'நான் ஆஸ்துமா இல்லாத சேயாக ஆவேன்.'

'நீ சேயாக ஆக வேண்டாம்.'

'பிறகு... யாராக ஆகணும்?'


'ஒரு ஓவியமாகவோ, ஒரு பெரிய காவியமாகவோ, ஒரு ஸிம்ஃபனியாகவோ ஆகு. மிரோவின் க்யான்வாஸ்களில் சிறு பிள்ளைத்தனமான நிறங்களாக ஆகு. ரவிசங்கரின் சித்தாரிலிருந்து நாதங்களாக உருவெடு,,, அபோலினேரின் பேனாவிலிருந்து கவிதைகளாக பொழி... நீ புரட்சிக்காரியாக ஆக வேண்டாம்.'

'நான் ஆவேன்.'

'நீ சிரமப்படக் கூடாது.'

'நான் சிரமப் படுவேன்.'

'நீ இறக்கக் கூடாது.'

'நான் இறப்பேன்.'

'அப்படியென்றால், என்னுடைய கல்லறையில் மலர்கள் வைப்பதற்கு யார் இருக்கிறார்கள்?'

வெளியே... முற்றத்தில் மலர்கள் மலர்ந்திருக்கின்றன. எழுந்து சென்று ஒரு பிடி மலர்களைப் பறித்துக் கொண்டு வந்தான்.

'பூக்கள் எதற்கு?'

'என் கல்லறையில் அணிவிக்க...'

வெறுமனே இருந்த க்யான்வாஸின் நான்கு எல்லைகளிலும் மலர்களைச் சூட்டினான். ஆறடி நீளமும் நான்கடி அகலமும். உள்ள க்யான்வாஸ், அதன் மரணித்துப் போன கண்களில் கவலையுடன் கிடந்தது. அது க்யான்வாஸ் அல்ல. அதன் சிதை. சிதையில் மாமிசம் உருகிக் கொண்டும், எலும்புகள் வெடித்துச் சிதறவும் செய்தன. பிணத்தின் வாசனை வந்தது. எரிந்த எண்ணெய் மற்றும் செட்டிப் பூக்களின் வாசனை வந்தது.

கையில் முகம் தாங்கப்பட்ட நிலையில் இருந்தது.

'நான் வெறுமையை வரைய பார்த்தேன்.'

'பிறகு?'

'வெறுமையைக் க்யான்வாஸில் கொண்டு வர வேண்டுமென்றால், வர்ணங்கள் இல்லாத வர்ணங்கள் வேண்டாமா?'

'வர்ணங்களைக் கொண்டு வரைந்தால் என்ன?'

'வெறுமை உயிர்ப்புடன் நிற்பதில்லை. வர்ணங்களைக் கொண்டு வரைந்தால், என்னுடைய ஓவியங்கள் உயிர்ப்புடன் இருக்கும். அது வெறுமையின் மீது காட்டக்கூடிய அநீதியல்லவா? உயிர்ப்புடன் இருக்காத ஒரு க்யான்வாஸை நான் எப்படி வரைவது?'

வெறுமைக்கு நிறங்களோ வடிவங்களோ கிடையாது. வெறுமை கண்ணுக்குத் தெரியாதது. வர்ணமற்ற, கண்ணுக்குப் புலப்படாத, வடிவமற்ற ஒரு ஓவியத்தை வரைவது என்பது...

முழுமையை நோக்கிச் சென்ற பயணத்தில் அவன் கால் நழுவி விழுந்தது ஸூரிச்சில்தான். எழுந்து க்யான்வாஸுக்கு முன்னால் போய் நின்று தாதாயிஸ்ட்டாக கர்ஜித்தான்:

''ஓவியர்கள் அழியட்டும். சிற்பிகள் அழியட்டும். மதங்கள் அழியட்டும். குடியரசுகள் அழியட்டும். அரசியல் அழியட்டும். அராஜகவாதிகள் அழியட்டும். சோஷலிஸ்ட்டுகள் அழியட்டும். பால்ஷேவிக்குகள் அழியட்டும். ப்ராலிட்டேரியன்ஸ் அழியட்டும். அரிஸ்ட்டோக்ராட்டுகள் அழியட்டும். எல்லாம்... எல்லாம்.... எல்லாம் அழியட்டும்.

சூரியன் குலுங்கிக் குலுங்கி சிரித்தது.

இருபதாம் நூற்றாண்டின் மூன்றாவது பத்திலிருந்து ஏழாவது பத்திற்கு திரும்பி வந்தான்.

திசைகளைப் பற்றியும் காலத்தைப் பற்றியும் இப்போது புரிதல் இருக்கிறது.

'நேரம்?'

அவள் கையில் கட்டியிருந்த டைம் பீஸின் அளவைக் கொண்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள்.

'பத்து.'

பத்து மணி என்று கேட்டதும், பசி கண்களைத் திறந்தது. எல்லாம் அழியும். பசி அழியாது: கல்லறைக்குள் கிடக்கும்போது பசி மண்ணைத் தின்று பசியை அடக்கும். சிதையில் கிடக்கும்போது நெருப்பைத் தின்று பசியை அடக்கும். பசி அழிவற்றது.

'பசி என்ற ஆயில் எங்கே?'

'ஞாபகத்துல இல்லையா? அது ஆயிரம் ரூபாயாக ஆகி விட்டது.'

பசி என்ற எண்ணெய் சாயம் ஃபுல்பு என்ற வெள்ளைக்காரரின் கையில். அந்த வெள்ளைக்காரர் தந்த பணத்தைக் கொண்டு ஒரு வாரம் சந்தோஷமாக செலவிட்டான். டிஃபன்ஸ் காலனியிலிருந்து குல்வந்த் ரந்தாவா என்ற ஒரு பெண்ணை வாடகைக்கு எடுத்து சிம்லாவிற்குச் சென்றான்...

எழுந்து படிகளில் இறங்கி அறைக்குள் சென்றான். ஃப்ரிட்ஜை இழுத்துத் திறந்து வெண்ணெய்யையும் முட்டையையும் எடுத்தான். ஹீட்டருக்கு மேலே நீர் கொதித்து குதித்தது. காலை உணவு சாப்பிட்டு முடித்து, ஒரு சிகரெட்டுடன் அமர்ந்திருந்தபோது அவள் பியானோவிற்கு முன்னால் போய் உட்கார்ந்தாள்.

'என்ன வேணும்?'

'சாப்பின், சானெட் ஆஃப் 85.பி. ஃப்ளாட் மைனர்.'

அவளுடைய கை விரல்கள் பியானோவின் மீது பயணித்தன.

'நீ எனக்கு பியானோ வாசிக்க கற்றுத் தர முடியுமா?'

'கற்றுத் தர்றேன்.'

'பாஷின் வாஹ்ல்டெம்பியேர்ரை கற்றுத் தர முடியுமா?'

'யெஸ்...'

'ஷுமானின் ஃபான்டஸியும் க்ரெயிஸ்லெரியானாவும் கற்றுத் தர முடியுமா?'

'யெஸ்.'

பியானோவிற்கு முன்னால் போய் உட்கார்ந்தான். அவன் இசைக் கலைஞனாக ஆகப் போகிறான். அவன் கடலை, அலைகளைக் கொண்டு பாடச் செய்வான். காற்றைக் கொண்டு இசை வீசுவான். மழையைக் கொண்டு இசை உண்டாக்குவான். அவன் பூமியையும் வானத்தையும் இசையைக் கொண்டு நிறைப்பான்.

அவன் இசைக் கலைஞனாக ஆகப் போகிறான்.

இசை அவனாக ஆகப் போகிறது.

இசைக் கலைஞனாக மட்டுமல்ல ஆகப் போவது...

சிற்பியாகவும் கவிஞனாகவும் ஆகப் போகிறான். வர்த்தகனாக ஆகப் போகிறான். கள்ளக் கடத்தல்காரனாக ஆகப் போகிறான். தலைவனாக ஆகப் போகிறான். மரம் வெட்டும் மனிதனாக ஆகப் போகிறான். பெருக்கி சுத்தம் செய்யும் மனிதனாக ஆகப் போகிறான். தோட்டியாக ஆகப் போகிறான்.

எல்லாமாக ஆகப் போகிறான்.

'கும் குறும் குறும்?'

'க்ரும் க்ரிம்.'

கதவைப் பூட்டி விட்டு வெளியேறினான். பரந்து கிடக்கும் வானத்திற்குக் கீழே நீண்டு கிடக்கும் பூமிக்கு மேலே நான் நடந்தேன்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.