Logo

போஸ்ட் மாஸ்டர்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6773
போஸ்ட் மாஸ்டர்

லப்பூர் கிராமத்தின் போஸ்ட் மாஸ்டர் என்ற வகையின் தன் வேலைகளை அவர் ஏற்றுக் கொண்டார். அந்த கிராமம் மிகவும் சிறியதாக இருந்தாலும், அதற்கருகில் ஒரு சாயத் தொழிற்சாலை இருந்தது. அதன் உரிமையாளர் ஒரு ஆங்கிலேயர். அவர் எப்படியோ சிரமப்பட்டு அங்கு ஒரு தபால் நிலையம் உண்டாகும்படி செய்துவிட்டார்.

நம்முடைய போஸ்ட் மாஸ்டர் கல்கத்தாவைச் சேர்ந்தவர். அந்தச் சிறிய கிராமத்தில் இருக்கும் போது நீரைவிட்டு வெளியே விட்டெறிந்த மீனைப் போல அவர் உணர்ந்தார். அவருடைய அலுவலகமும் வசிப்பிடமும் இருள் நிறைந்த ஒரு மூங்கிலாலான குடிலுக்குள் இருந்தன. அதற்கு அருகில் எல்லா பக்கங்களிலும் செடிகள் அடர்த்தியாக வளர்ந்திருந்த பசுமையான சிறிய குளமொன்று இருந்தது.

சாயத் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் மனிதர்களுக்கு ஓய்வு என்பதே இல்லை. சொல்லப்போனால் நாகரீகமான மனிதனுக்கு அவர்கள் நண்பர்களாக இருப்பது என்பது சிரமமான விஷயமே. இன்னும் சொல்வதாக இருந்தால் கல்கத்தாவைச் சேர்ந்த ஒரு மனிதன் அவ்வளவு எளிதாக யாருடனும் நட்பு கொண்டு விடமாட்டான். மற்றவர்களுக்கு முன்னால், அவன் கர்வம் கொண்டவனாகத் தெரிவான். இல்லாவிட்டால் பரிதாபப்படும்படி இருப்பான். எது எப்படியோ, போஸ்ட் மாஸ்டருக்கு மிகவும் சிலரே பழக்கமானவர்களாக இருந்தார்கள். அதற்குமேல் அவருக்குத் தேவையும் இல்லை.

சில நேரங்களில் அவர் ஒன்றோ இரண்டோ கவிதைகளை எழுத முயற்சி செய்வார். இலைகளின் சலசலப்பும், வானத்தில் இருக்கும் மேகங்களும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்குப் போதும்-  இப்படிப்பட்ட விஷயங்களை அவர் தன் கவிதைகளில் வெளிப்படுத்த முயல்வார். ‘அரேபிய இரவு’களில் நடப்பதைப்போல ஒரே இரவில் மரங்களையும் இலைகளையும் இல்லாமல் செய்து, அதற்குப் பதிலாக அவை ஏதுமற்ற சாலைகள் இருக்கும்படி செய்து, வரிசையாக நின்றிருக்கும் வீடுகளைப் பார்க்க முடியாமல் மேகங்களைக் கொண்டு மறைத்து... இப்படியெல்லாம் நடக்காமல் இருப்பதை அந்த ஏழை மனிதர் தன்னுடைய புதிய வாழ்க்கைக்கு கிடைத்த பரிசாக நினைத்துக் கொள்வார் என்பது கடவுளுக்குத் தெரியும்.

போஸ்ட் மாஸ்டருக்கு சம்பளம் மிகவும் குறைவு. தன்னுடைய உணவை அவரே சமையல் செய்ய வேண்டும். அவர் அதை ரட்டனுடன் பங்கிட்டு உண்பார். அந்த கிராமத்தைச் சேர்ந்த அனாதைச் சிறுமியான ரட்டன் அவருக்குத் தேவைப்படும் சிறு சிறு உதவிகளைச் செய்வாள்.

மாலை நேரங்களில் கிராமத்தின் மாட்டுத் தொழுவங்களில் இருந்து புகை கிளம்பி வந்து ஆக்கிரமித்திருக்கும் போது, புதர்களிலிருந்து பலவித சத்தங்கள் வந்து கொண்டிருக்கும் போது, தினமும் சந்திக்கக்கூடிய இடத்தில் கிராமத்துப் பாடகர்கள் தங்களின் நடுங்கும் குரலில் பாடல்களைப் பாடும்போது, எந்தக் கவிஞனாக இருந்தாலும் மூங்கில் காடுகளுக்குள் அசையும் இலைகளைப் பார்த்து, முதுகில் இனம் புரியாத புத்துணர்ச்சி பரவுவதை உணரும்போது, போஸ்ட் மாஸ்டர் தன் சிறிய விளக்கைப் பற்ற வைத்து, ‘ரட்டன்...’ என்று அழைப்பார்.

ரட்டன் அந்த அழைப்பை எதிர்பார்த்துக் கொண்டு வெளியே அமர்ந்திருப்பாள். உடனடியாக உள்ளே வருவதற்கு பதிலாக அவள், என்னைக் கூப்பிட்டீங்களா அய்யா?’ என்று கேட்பாள்.

 ‘‘நீ என்ன செய்துகிட்டு இருக்கே?’’- போஸ்ட் மாஸ்டர் கேட்பார்.

 ‘‘அடுப்பைப் பற்ற வைக்கப் போகிறேன்’’ என்று அவள் பதில் கூறுவாள்.

அப்போது போஸ்ட் மாஸ்டர் கூறுவார்: ‘‘ஓ... கொஞ்ச நேரம் கழித்து சமையலறையில் அடுப்பைப் பற்ற வைத்தால் போதும். இப்போ என் பைப்பை முதலில் பற்ற வை.’’

அடுத்த நிமிடம் சதைப் பிடிப்பாக இருக்கும் தன் கன்னங்களுடன் வீட்டிற்குள் நுழையும் ரட்டன் சிகரெட்டைப் பற்ற வைக்க கரிக்கட்டையை ஊதி எரிய வைப்பாள். அந்தச் சமயத்தில் பேசுவதற்கான சந்தர்ப்பம் போஸ்ட் மாஸ்டருக்குக் கிடைக்கும். ‘‘சரி... ரட்டன்...’’ அவர் இப்படித்தான் ஆரம்பிப்பார்: ‘‘உன் தாயைப் பற்றி நீ ஏதாவது நினைவில் வைச்சிருக்கியா?’’ அது ஒரு மறக்க முடியாத விஷயமாக இருக்கும். ரட்டன் பாதி விஷயங்களை ஞாபகத்தில் வைத்திருப்பார். மீதி ஞாபகத்தில் இருக்காது. அவளுடைய தாயை விட தந்தைதான் அவள்மீது அதிக பாசம் வைத்திருந்தார். அவரைப் பற்றி அவள் அதிகமாக நினைத்து பார்த்திருக்கிறாள். அவர் தன் வேலைகளை முடித்து விட்டு மாலை நேரத்தில் வீட்டிற்குத் திரும்பி வருவார். ஒன்றிரண்டு மாலை வேளைகளில் மற்றவர்களை விட அவர் மிகவும் தெளிவாக, ஓவியத்தைப் போல அவளுடைய நினைவில் நின்றிருப்பார். போஸ்ட் மாஸ்டரின் பாதங்களுக்கு அருகில் ரட்டன் தரையில் உட்கார்ந்திருப்பாள். பலவிதப்பட்ட நினைவுகளும் அப்போது அவளைச் சுற்றிக் கொண்டிருக்கும். தனக்கிருந்த தம்பியைப் பற்றியும், கடந்து சென்ற மேகம் சூழ்ந்த ஒருநாளில் குளக்கரையில் அவனுடன் தான் மீன் பிடிக்கச் சென்றதையும், மீன் பிடிக்கும் தூண்டிலுக்கு பதிலாக ஒரு மரக்குச்சியை கையில் வைத்திருந்ததையும் அவள் நினைத்துப் பார்த்தாள். அந்த மாதிரியான சிறு சிறு நிகழ்ச்சிகள் அவளுடைய மனதிலிருந்து பெரிய விஷயங்களை வெளியேற்றின. அவர்கள் பேசப்பேச, பல நேரங்களில் மிகவும் நேரம் ஆகிவிடும். அதற்குப் பிறகு சமையல் செய்வதற்கு போஸ்ட் மாஸ்டர் மிகவும் சோம்பலாக இருப்பதைப்போல் உணர்வார். பிறகு ரட்டன் மிகவும் வேகமாக அடுப்பைப் பற்ற வைத்து, ரொட்டியைச் சூடு பண்ணுவாள். அதைக் காலையில் பண்ணி மீதமிருக்கும் உணவுடன் கலப்பாள். அவர்கள் இரவு சாப்பாட்டுக்கு அதுவே போதும்.

சில மாலை வேளைகளில் வெறுமனே இருக்கும் அந்தப் பெரிய குடிலின் மூலையில் போடப்பட்டிருக்கும் மேஜைக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு போஸ்ட் மாஸ்டரும் தன்னுடைய வீடு, தாய், சகோதரி ஆகியோரைப் பற்றிய நினைவுகளில் மூழ்கியிருப்பார். வீட்டை விட்டு வந்து தனியாக இருக்கும் அவருடைய மனம் அவர்களை நினைத்துக் கவலைப்பட்டது. அவர்களைப் பற்றிய நினைவுகள் அவரை விடாமல் துரத்திக் கொண்டிருந்தன. ஆனால், அந்த விஷயங்களைத் தொழிற்சாலையில் பணிபுரியும் மனிதர்களிடம் அவர் பேசிக் கொண்டிருக்க முடியாது. அதே நேரத்தில் அந்த ஏழைச் சிறுமி அருகில் ருக்கும் போது, அவர் அந்த விஷயங்களை மிகவும் ஆழமாக நினைத்துக் கொண்டிருந்தார். சொல்லப்போனால் அம்மா, சகோதரன், சகோதரி என்று அவருடைய வீட்டு உறுப்பினர்களை மிகவும் உரிமையுடன் ஏதோ இதற்கு முன்பே தனக்கு அவர்களைத் தெரியும் என்பது மாதிரி அவள் குறிப்பிடுவாள். அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் தன்னுடைய சின்னஞ்சிறு இதயத்தில் ஒரு முழுமையான படத்தை வைத்திருந்தாள்.


ஒரு மதியப் பொழுதில் மழை பெய்து சற்று ஓய்ந்திருந்த நேரத்தில் குளிர்ச்சியான காற்று வீசிக் கொண்டிருந்தது. சுட்டெரித்துக் கொண்டிருந்த வெயிலில் ஈரமான புற்கள், இலைகள் ஆகியவற்றின் வாசனை, களைப்படைந்து போயிருக்கும் பூமியின் வெப்ப மூச்சை ஒருவரின் உடல்மீது கொண்டு வந்து விடுவதைப்போல இருந்து. பகல் நேரம் முழுவதும் ஓய்வே இல்லாத ஒரு பறவை இயற்கையைப் பற்றிய மனக் குறையைக் கூறியவாறு பறந்து கொண்டிருந்தது.

போஸ்ட் மாஸ்டருக்கு செய்வதற்கு எந்த நேலையும் இல்லை. நன்கு கழுவி விடப்பட்ட இலைகளையும், மீதமிருந்த மழை மேகங்களையும் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர, அவருக்கு வேறு வழியில்லை. போஸ்ட் மாஸ்டர் அவற்றைப் பார்த்துக் கொண்டே தனக்குள் சிந்தித்தார். ‘என்னதான் நூறு உள்ளங்கள் அருகில் இருந்தாலுள், ஒரு அன்பான மனித உயிரைத்தான் என் உள்ளத்திற்கு அருகில் வைத்திருக்கிறேன்!’ தொடர்ந்து அவர் அந்தப் பறவை என்ன சொல்ல நினைக்கிறது என்பதைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தார். முணுமுணத்துக் கொண்டிருப்பதும், கூற நினைப்பதும் அதே உணர்வுகளைத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு அவர் வந்தார். மிகவும் குறைவான சம்பளத்தை வாங்கிக் கொண்டிருக்கும் ஒரு கிராமத்து போஸ்ட் மாஸ்டர் தன் வேலைக்கு மத்தியில் கிடைத்த அமைதியான- ஆழமான நடுப்பகல் வேளையில் அதே மாதிரியான சிந்தனை ஓட்டத்தில் இருப்பார் என்பதை யாரும் தெரிந்திருக்க மாட்டார்கள். யாரும் நம்பவும் மாட்டார்கள்.

போஸ்ட் மாஸ்டர் மிகவும் களைப்படைந்து ‘ரட்டன்...’ என்று அழைத்தார். ரட்டன் அப்போது கொய்யா மரத்திற்கு அருகில் அலைந்து கொண்டிருந்தாள். கொய்யாக் காய்களை தின்பதில் அவள் தீவிரமாக ஈடுபட்டிருந்தாள். தன்னுடைய எஜமானின் குரல் கேட்டவுடன் மூச்சைக்கூட ஒழுங்காக விடாமல் ஓடிய அவள் ‘‘நீங்க என்னை கூப்பிட்டீங்களா அய்யா?’’ என்றாள். ‘‘நான் நினைச்சேன்’’- போஸ்ட் மாஸ்டர் சொன்னார்: ‘‘உனக்கு படிக்கிறதுக்கு சொல்லித் தரலாம்னு.’’ அதற்குப் பிறகு பிற்பகலில் அவளுக்கு அவர் எழுத்துக்களைக் கற்றுத் தந்தார்.

அந்த வகையில் மிகவும் குறைவான கால அளவில் ரட்டன் முடிந்த வரையில் வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் கற்றுக் கொண்டாள்.

மழை பெய்வது நிற்பது மாதிரி தெரியவில்லை. வாய்க்கால்கள், பள்ளங்கள், வெற்றிடங்கள் அனைத்தும் நீரால் நிறைந்து வழிந்தன. இரவு, பகல் எந்நேரமும் மழைச் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. தவளைகளின் சத்தங்களும்தான். கிராமத்து சாலைகள் நடக்க முடியாத அளவிற்கு ஆயின. எல்லா பொருட்களும் படகுகள் மூலம்தான் போய்க் கொண்டிருந்தன.

நிறைய மேகங்கள் சூழ்ந்திருந்த ஒரு காலை வேளையில் போஸ்ட் மாஸ்டரின் இளம் மாணவி அவருடைய அழைப்பை எதிர்பார்த்து கதவுக்கு வெளியே நீண்ட நேரமாக காத்திருந்தாள். எப்போதும் ஒலிப்பதைப் போல அவருடைய குரல் ஒலிக்கவில்லை. ஆனால் அவள் தன்னுடைய நாயின் காதைப் படமாகப் போட்ட புத்தகத்தை எடுத்துக் கொண்டு மெதுவாக அறைக்குள் நுழைந்தாள். அவளுடைய எஜமானர் தன்னுடையபடுக்கையில் கால்களை நீட்டியபடி படுத்திருப்பதை அவள் பார்த்தாள். அவர் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதாக அவள் நினைத்தாள். விரல் நுனியில் என்ன செய்வது என்று தெரியாமல் அவள் நின்று கொண்டிருந்தபோது, அவர் ‘‘ரட்டன்’’ என்று பெயர் சொல்லி அழைப்பது அவளுடைய காதுகளில் விழுந்தது. உடனடியாக திரும்பிய அவள் ‘‘நீங்க தூங்கிக்கிட்டு இருந்தீங்களா அய்யா?’’ என்று கேட்டாள். அதற்கு போஸ்ட் மாஸ்டர் பலவீனமான குரலில் சொன்னார்: எனக்கு உடல்நலம் சரியில்லை. என் கை ரொம்பவும் சூடாக இருக்கு.’’

வீட்டை விட்டு வெளியே இருக்கும் தனிமையான சூழ்நிலையில் மழை உண்டாக்கியிருக்கும் இருட்டில், அவருடைய வேதனை நிறைந்த உடம்பை கவனத்துடன் பார்த்துக் கொள்ள யாராவது தேவைப்பட்டது. ஒலித்துக் கொண்டிருக்கும் வளையல்களைக் கொண்ட மென்மையான கைகள் தன்னுடைய நெற்றியைத் தொடும் காட்சியை அவர் நினைத்துப் பார்த்தார். தன்னுடைய தாயும் சகோதரியும் பாசத்திற்குரிய பெண்களாக தனக்கு அருகில் இருப்பதை அவர் கற்பனை பண்ணிப் பார்த்தார். வீட்டை விட்டு வெளியே இருப்பது அவருக்கு ஏமாற்றத்தைத் தரவில்லை. ரட்டன் இப்போது சிறுமியாக இருக்கவில்லை. அவள் உடனடியாக தாயின் இடத்தைப் பிடித்துக் கொண்டு, கிராமத்து டாக்டரை அழைத்துக்கொண்டு வந்தாள். சரியான வேளைகளில் நோயாளிக்கு மாத்திரைகளை கொடுத்தாள். தலையணைக்கு அருகில் இரவு முழுவதும் உ?ட்கார்ந்திருந்தாள். அவருக்கு கஞ்சி தயாரித்து கொடுத்தாள். அவ்வப்போது அவரைப் பார்த்து, ‘‘இப்போ பரவாயில்லையா அய்யா?’’ என்று கேட்டாள்.

தான் படுத்திருந்த நோயாளி படுக்கையை விட்டு எழுந்திருப்பதற்குச் சற்று முன்னால் போஸ்ட் மாஸ்டர் தனக்குள் கூறிக் கொண்டார்: ‘‘இதற்கு மேலும் இங்கே இருந்தால் சரியாக இருக்காது. நான் இங்கிருந்து வேறு இடத்திற்குப் போனால்தான் சரியாக இருக்கும்.’’ உடனடியாக அவர் இடமாற்றம் கேட்டு கல்கத்தாவிற்கு மனு ஒன்றை அனுப்பினார். கிராமத்தில் தன்னுடைய உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதைக் காரணம் காட்டியிருந்தார்.

நோயாளியை அருகில் நர்ஸைப்போல பார்த்துக் கொண்டிருந்த தன் வேலையிலிருந்து விடுபட்ட ரட்டன் திரும்பவும் கதவுக்கு வெளியே தன்னுடைய பழைய இடத்தில் போய் உட்கார்ந்தாள். ஆனால், அந்தப் பழைய அழைப்புச் சத்தத்தை அதற்குப் பிறகு அவள் கேட்கவே இல்லை. சில நேரங்களில் போஸ்ட் மாஸ்டர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறாரா அல்லது படுக்கையில் கால்களை நீட்டிக்கொண்டு படுத்திருக்கிறாரா, இல்லாவிட்டால் தன்னை மறந்து காற்றை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாரா என்பதை அவள் திருட்டுத் தனமாக தலையை நீட்டிப் பார்ப்பாள்., தன்னை அவர், அழைக்கமாட்டாரா என்று ரட்டன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது, போஸ்ட் மாஸ்டர் தன்னுடைய விண்ணப்பத்திற்கு பதலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அந்தச் சிறுமி தன்னுடைய பழைய பாடங்களையே திரும்பத் திரும்ப படித்துக் கொண்டிருந்தாள். அவருடைய பயம் இப்போது குறைந்து விட்டிருந்தது. அவர் அவளை அழைக்கும்போது எழுதுவது, படிப்பது இரண்டிலும் அவள் முன்னேறியிருப்பதை அவரால் தெரிந்து கொள்ள முடியும். கடைசியாக ஒரு வாரத்திற்குப் பிறகு, ஒரு மாலை நேரத்தில் அவளுக்கு அழைப்பு வந்தது. இதயம் உற்சாகத்தில் மிதக்க, ரட்டன் அறைக்குள் நுழைந்து கேட்டாள்: ‘‘என்னைக் கூப்பிட்டீங்களா அய்யா?’’

போஸ்ட் மாஸ்டர் சொன்னார்: ‘‘நான் நாளைக்குப் போகப் போறேன் ரட்டன்.’’

 ‘‘எங்கே போறீங்க அய்யா?’’

 ‘‘நான் வீட்டுக்குப் போகப் போறேன்.’’

 ‘‘எப்போ திரும்பி வருவீங்க?’’

 ‘‘நான் திரும்பி வரமாட்டேன்.’’


அதற்குப் பிறகு ரட்டன் வேறு கேள்வி எதுவும் கேட்கவில்லை. போஸ்ட் மாஸ்டர் அவராகவே இடமாற்றம் கேட்டு தான் எழுதியிருந்த கடிதம் மறுக்கப்பட்டுவிட்ட விஷயத்தையும், அதனால் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டுத்தான் தன்னுடைய வீட்டிற்குப் போகப் போவதையும் கூறினார்.

நீண்ட நேரத்திற்கு அவர்கள் இருவரும் எதுவும் பேசாமல் இருந்தார்கள். விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. வீட்டின் ஒரு மூலையில் இருந்த ஓட்டை வழியாக நீர் தரையில் வைக்கப்பட்டிருந்த மண் பாத்திரத்தில் சொட்டு சொட்டாக விழுந்து கொண்டிருந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு ரட்டன் எழுந்து, உணவு தயாரிப்பதற்காக சமையலறையைத் தேடிச் சென்றாள். மற்ற நாட்களில் இருப்பதைப்போல அன்று அவள் அதில் சுறுசுறுப்பாக இல்லை. அவளுடைய சிறிய மூளைக்குள் சிந்திப்பதற்கு ஏராளமான புதிய விஷயங்கள் நுழைந்திருந்தன. இரவு உணவைச் சாப்பிட்டு முடித்த போஸ்ட் மாஸ்டரிடம், சிறுமி உடனடியாகக் கேட்டாள்: ‘‘அய்யா, தயவு செய்து என்னை உங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போவீங்களா?’’

அதைக் கேட்டு போஸ்ட் மாஸ்டர் சிரித்தார். ‘‘என்ன எண்ணம் இது!’’ - அவர் சொன்னார். எந்த அளவிற்கு முட்டாள்தனம் அவளுடைய வார்த்தைகளில் மறைந்திருக்கிறது என்பதை அவளுக்கு விளக்கிச் சொல்ல அவர் விரும்பவில்லை.

அந்த இரவு முழுவதும், கண் விழித்திருக்கும்போதும், கனவிலும் போஸ்ட் மாஸ்டரின் சிரிப்புச் சத்தமும், என்ன எண்ணம்!’ என்று அவர் சொன்ன பதிலும் அவளைப் பாடாய் படுத்திக் கொண்டிருந்தன.

காலையில் எழுந்தவுடன் போஸ்ட் மாஸ்டர் குளிப்பதற்கான விஷயங்கள் தயாராக இருப்பதைப் பார்த்தார். கிராமத்தில் எல்லோரும் செய்வதைப்போல ஆற்றில் மூழ்கிக் குளிப்பதற்கு பதிலாக, கல்கத்தாவில் எல்லோரும் குளிப்பதைப்போல, பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு வந்து வைக்கப்படும் நீரில் குளிப்பதையே அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். சில காரணங்களுக்காக அவர் எத்தனை மணிக்கு அங்கிருந்து கிளம்புகிறார் என்ற விஷயத்தை அவள் கேட்கவில்லை. அதனால் சூரியன் தோன்றுவதற்கு முன்பே ஆற்றிலிருந்து நீர் எடுத்துக் கொண்டு வந்து அங்கு அவள் வைத்து விட்டாள். அவருக்கு தேவைப்படுவதற்கு முன்பே, அங்கு அது இருக்கட்டும் என்று அவள் நினைத்தாள். குளித்து முடித்து விட்டு வந்த போஸ்ட் மாஸ்டர் ரட்டனை அழைத்தார். எந்தவித ஓசையும் எழுப்பாமல் உள்ளே நுழைந்த அவள் கட்டளைகளுக்காகத் தன் எஜமானரின் முகத்தையே பார்த்தாள். போஸ்ட் மாஸ்டர் சொன்னார்: ‘‘நான் போறதை நினைச்சு கவலையே பட வேண்டாம் ரட்டன். எனக்குப் பின்னால் வர்றவரிடம் உன்னை நல்லா பார்த்துக் கொள்ளும்படி நான் சொல்றேன்.’’ உண்மையான பாசத்துடன் சொல்லப்பட்ட வார்த்தைகள் அவை என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் ஒரு பெண்ணின் இதயத்தைப் புரிந்து கொள்வது என்பது சாதாரண ஒரு விஷயம் இல்லையே!

பெரிய அளவில் புகார் என்று இல்லையென்றாலும், தன் எஜமானரிடம் திட்டுகள் வாங்கியிருக்கிறாள். ஆனால், இந்த அன்பான வார்த்தைகளை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் அடக்க முடியாமல் அழுதவாறு சொன்னாள்: ‘‘வேண்டாம்... வேண்டாம்... என்னைப் பற்றி நீங்க யாரிடமும் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. நான் இங்கே இருக்க விரும்பல...’’

அதைக் கேட்டு போஸ்ட் மாஸ்டர் அமைதியாக இருந்தார். ரட்டனை இந்த மாதிரி இதற்கு முன்பு அவர் பார்த்ததே இல்லை.

புதிதாக வேலைக்கு வந்தவர் உரிய நேரத்தில் வந்துவிட்டார். அவரிடம் போஸ்ட் மாஸ்டர் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு, புறப்படுவதற்குத் தயாரானார். புறப்படுவதற்குத் தயாரானார். புறப்படுவதற்கு சற்று முன்பு ரட்டனை அழைத்துச் சொன்னார். ‘‘இந்தா... இதுல உனக்காக ஒரு தொகை இருக்கு. சில நாட்களுக்கு இது உனக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.’’ அவர் தன்னுடைய முழு மாதத்தின் சம்பளத் தொகையிலிருந்து தன் பயணச் செலவுக்காக ஒரு சிறு பகுதியை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு மீதியை தன் பாக்கெட்டிற்குள்ளிருந்து வெளியே எடுத்தார். ரட்டன் அவருடைய கால்களில் விழுந்து அழுதாள். ‘‘அய்யா, நான் கெஞ்சிக் கேட்டுக்குறேன். எனக்கு எதுவும் தராதீங்க. எனக்காக கொஞ்சம் கூட கவலைப்படாதீங்க.’’ அதைக் கூறிய அவள் அங்கிருந்து ஓடி பார்வையிலிருந்து மறைந்தாள்.

போஸ்ட் மாஸ்டர் ஒரு நீண்ட ஒரு பெருமூச்சை விட்டு, தன்னுடைய படுக்கையைக் கையில் எடுத்துக் கொண்டு, குடையை தோளில் வைத்து அவருடைய பல வண்ணங்களைக் கொண்ட தகரத்தலான பெட்டியை ஒரு மனிதன் தூக்கிக் கொண்டு செல்ல, படகை நோக்கி மெதுவாக நடந்தார்.

அவர் போகும் போது, படகு புறப்பட்டுக் கொண்டிருந்தது. மழை நீர் விழுந்து நிறைந்திருந்த ஆறு, பூமியிலிருந்து வந்த நிற்காத கண்ணீரைப்போல தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தது. போஸ்ட் மாஸ்டர் தன் இதயத்தில் வலி ஏற்படுவதை உணர்ந்தாள். வாய்விட்டுத் கூறாத மிகப்பெரிய துங்கங்களைக் கொண்ட அன்னை பூமியே வந்து நின்றதைப்போல, தனக்கு முன்னால் வந்து நின்ற கவலைகள் நிறைந்த அந்த கிராமத்துச் சிறுமியின் முகத்தை அவர் நினைத்துப் பார்த்தார். திரும்பிப் போய் உலகம் கைவிட்ட அந்த யாருமற்ற அனாதைச் சிறுமியைத் தன்னுடனே அழைத்துக் கொண்டு வந்துவிடலாமா என்றுகூட அவர் ஒரு நிமிடம் நினைத்தார். ஆனால் காற்று பயணத்திற்கு ஏற்றபடி பலமாக இருந்தது. கொந்தளித்துக் கொண்டிருந்த நீரில் பாதி தூரத்தை அப்போது படகு கடந்து விட்டிருந்தது. கிராமத்தை விட்டு முழுமையாக படகு தாண்டி வந்திருந்தது. கிராமத்திற்கு வெளியே இருந்த சுடுகாடு கண்ணில் தெரிந்தது.

வேகமாக பாய்ந்தோடிக் கொண்டிருந்த ஆற்று நீரின் மார்பில் பயணித்துக் கொண்டிருந்த பயணி உலகத்தில் கணக்கிட முடியாத சந்திப்புகளுக்கும் பிரிவுகளுக்கும் தத்துவரீதியான விளக்கங்கள் கொடுத்து தனக்குத் தானே ஆறுதல் கூறிக்கொண்டார். மரணம், நிரந்தர பிரிவு ஆகியவற்றிலிருந்து யாரும் திரும்பி வராத நிலைக்கு அவர் விளக்கங்கள் கூறிக் கொண்டார்.

ஆனால் ரட்டனுக்கு எந்த தத்துவமும் இல்லை. கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க, அவள் அஞ்சல் நிலையத்தையே சுற்றிக் கொண்டிருந்தாள். தன்னுடைய எஜமான் திரும்பி வருவார் என்று இதயத்தின் மூலையில் ஒரு அசைக்க முடியாத நம்பிக்கையை இப்போதும் அவள் வைத்திருந்தாள். ஆனால் அங்கிருந்து அவள் போகாமலே இருந்தாள். மடத்தனமான மனித இதயத்தைப் பற்றி என்ன சொல்வது?

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.