Logo

சுதந்திரப் பிறவிகள்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6510
sudandira-piravigal

வர் விமானத்திலிருந்து இறங்கிய உடனே அவள் மிகவும் சூடாக இருந்த இரும்புக் கம்பிகளில் சாய்ந்து நின்று கொண்டு ஒரு முறை தன்னுடைய கையை உயர்த்தினாள். அவர் அதைப் பார்த்திருக்க வேண்டும். காரணம்-

அவர் தலையைக் குலுக்கினார். நேரம் இரண்டு மணி ஆகி விட்டிருந்தது. அவருடைய வலது கையில் ஒரு பெரிய தோல் பை இருந்தது. மதிய வெயிலில், தன்னை நோக்கி தளர்ந்த நடையுடன் வரும் அந்த நடுத்தர வயது மனிதரைப் பார்த்துக கொண்டே அவள் தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள்- இதோ... இதுதான் நீ வழிபட்டுக் கொண்டிருக்கும் மனிதரா? ஆனால், ஒரு குற்ற உணர்வுடன் அவள் அந்தக் கேள்வியை திடீரென்று திரும்பப் பெற்றுக் கொண்டாள்.

அவர் அவளுக்கு அருகில் வந்தபோது, சிரித்தார். அவருடைய உதடுகளின் இரண்டு பக்கங்களிலும் மெல்லிய சுருக்கங்கள் இருந்தன.

‘‘ஹலோ... கவலையில் இருக்கம் என் இளம் பெண்ணே...’’ அவர் மிகவும் தாழ்ந்த குரலில் சொன்னார். தொடர்ந்து, சுற்றிலும் கண்களை ஓட்டினார். அவருடைய முகத்தில் கறுப்புக் கண்ணாடி இருந்தது. அந்தக் கண்ணாடியைக் கழற்றி வீசி எறிய வேண்டும் என்றும். ஆட்களுக்கு முன்னால் அந்த மனிதருடைய கையைப் பிடித்துக் கொண்டு வெளியே நிறுத்தியிருக்கும் தன்னுடைய காருக்குள் ஏற வேண்டுமென்றம் அவளுக்கு ஒரு தீவிரமான ஆவல் உண்டானது. ஆனால், அவரை சிரமத்திற்கள்ளாக்குவதற்கும் குழப்பமான மனநிலைக்கு ஆளாக்குவதற்கும் அவளுக்கு தைரியம் வரவில்லை. சில மணி நேரங்களுக்காக மட்டும் அவ்வளவு தூரத்திலிருந்து அவர் எதற்காக வருகிறார்? தன்னைப் பார்ப்பதற்காக - சந்தோஷப்படுத்துவதற்காக அவள் திடீரென்று சிரித்துக் கொண்டே வேகமாக நடக்க ஆரம்பித்தாள். அவருக்கு ஒரு அடி முன்னால்.

அவருடைய சிறிய தோல் பெட்டியை அவளே எடுத்து காரின் பின்பகுதியில் வைத்தார். காரை ஸ்டார்ட் செய்யும்போது, அவள் மிகவும் அமைதியான குரலில் கேட்டாள்: ‘‘இப்போது ஒவ்வொரு நாளும் எத்தனை சிகரெட்டுகள் புகைக்கிறீர்கள்?’

அவர் சிரித்தார்:

‘‘எனக்கு பற்று நோய் வராது.’’

‘‘எப்படிச் சொல்கிறீர்கள்?’’

‘‘என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் மாரடைப்பில்தான் மரணமடைந்திருக்கிறார்கள்.’’

காரை ஓட்டும்போது, தன்னுடைய முழங்காலின் மீது ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அந்த கனமான கைவிரல்களை அவள் இடையில் அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தாள். நகங்கள் எப்போதும் இருப்பதைப்போல அப்போதும் சுத்தமாகவும் பிரகாசம் உள்ளவையாகவும் இருந்தன.

‘‘நான் உங்களைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் இந்தக் கைவிரல்கள்தான் கண்களுக்கு முன்னால் தோன்றும்.’’ அவள் சொன்னாள். ஆனால், அவள் அவருடைய முகத்தைப் பார்க்கவே இல்லை. அவருடைய கண்கள் கறுப்புக் கண்ணாடிகளுக்குப் பின்னாலிருந்து தன் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்ற விஷயம் அவளுக்குத் தெரியும். அவள் மேலும் வியர்த்தாள்.

‘‘நீ மேலும் சற்று மெலிந்திருக்கிறாய்?’’ அவர் சொன்னார்.

‘‘ம்...’’

அவர்கள் அதுவரை பார்த்திராத ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தார்கள். அவர் குறிப்புப் புத்தகத்தில் பெயர்களை எழுதும் போதும், அவள் அந்த வரவேற்பறையில் இருந்த சுவரோவியங்களைப் பார்த்தவாறு அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தாள்.

படிகளில் ஏறும்போது அவர் சொன்னார்:

‘‘மிஸ்டர் பார்த்தசாரதி, மிஸ் பார்த்தசாரதி. இன்று நமக்கான பெயர்கள். உறவு - தந்தைக்கும் மகளுக்குமிடையே இருக்கக் கூடிய உறவு. உனக்கு சம்மதம்தானே?’’

‘‘ம்...’’

அவர்களுக்கு கிடைத்த ஃப்ளாட்டில மூன்று அறைகள் இருந்தன. குளியலறையும் உள்ளே நுழைந்தவுடன் பெரிய நிலைக்கண்ணாடி இருந்த ஒரு அறை... ஸோஃபாக்கள், தொலைபேசி, பூப்பாத்திரங்கள் ஆகியவை இருந்த ஒரு அறை... இரண்டு கட்டில்களம் அலமாரிகளும் இருந்த ஒரு படுக்கையறை. அவள் ஸோஃபாவில் போய் உட்கார்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.

‘‘தூக்கம் வருகிறதா?’’

அவர் கேட்டார். அவர் குளியலறைக்குள் நுழைந்து நீர் வரும் குழாயைத் திருப்பினார். முகம் கழுவுவதற்க மத்தியில் அவர் சொன்னார்:

‘‘உணவு கொண்டு வரச் சொல்லு ஃபோன் இருக்கும் மேஜைக்கு அருகில் நான் பெல்லுக்கான ஸ்விட்சைப் பார்த்தேன்.’’

அவளுடைய கண்கள் என்ன காரணத்தாலோ வலித்தன.

அவள் பணியாளை வரச் செய்வதற்காக பெல்லை அடித்து விட்டு, சாளரத்தின் திரைச்சீலைகளை மூடி அறைக்குள் வெளிச்சம் இல்லாமல் ஆக்கினாள்.

அவர் குளியலறையிலிருந்து இந்திய உடைகள் அணிந்து வெளியே வந்தார். அந்த மஸ்லின் ஜிப்பா தன்னுடைய உடலின் எடையை இரண்டு மடங்கு அதிகமாகக் காட்டுவதைப் போல அவருக்குத் தோன்றியது. அவருடைய முகம் சிவந்திருந்தது.

உணவு சாப்பிடும்போது அவர் மீண்டும் சொன்னார்:

‘‘நீ மிகவும் மெலிந்து போயிருக்கிறாய்.’’

அவர் அதை எவ்வளவு அமைதியான குரலில் கூறினார்! உணர்ச்சியே இல்லாமல், வாய்க்குள் பாதியாக வெந்த ஒரு தக்காளியைச் செலுத்தியவாறு அவர் சொன்னார்: ‘‘நீ மெலிந்து போயிருக்கிறாய்!’’ திடீரென்று அவளுக்கு அழுகை வந்தது. தான் கடந்த ஒன்றரை மாத காலமாக அவரை நினைத்து அழாத நாளில்லை என்று எப்படி அவரிடம் கூறுவாள்? அப்படிப்பட்ட வெற்றிகளை அவருக்கு தான் கொடுக்க ஆரம்பித்தால், இந்த உறவு ஒட்டு மொத்தமாக தகர்ந்து போய் விடுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று அவளுக்குத் தோன்றியது. காதல் உறவுகளிலும் இறுதியில் வெற்றி பெறுவது மதிப்பு என்னும் குறும்புத்தனமான உணர்ச்சிதான்.

‘‘வெப்ப காலத்தில் நான் மெலிவது உண்டு.’’ அவள் சொன்னாள். அவர் தலையைத் தாழ்த்திக் கொண்டு வேகமாக உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மீண்டும் அவள் தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள்- இவரா? இவரா நீ வழிபடும் மனிதர்?

அவர் அவளுடைய உதடுக்குக் கீழே ஒட்டிக் கொண்டிருந்த தக்காளிச் சாற்றை தன் கை விரல் நுனியால் துடைத்து நீக்கினார்.

‘‘சாப்பிடு மகளே.’’ அவர் சொன்னார்.

அவளுடைய கண்கள் கண்ணீரால் நிறைந்து வழிந்தன.

‘‘என்ன ஆச்சு? இப்போதும் நீ அழப் போகிறாயா?’’

அவள் தலையை ஆட்டினாள். அவளுக்குப் பின்னால் சென்று நின்று கொண்டு அவளுடைய முள்ளையும் கத்தியையும் எடுத்து கிண்ணத்தில் வைத்து, அவளை அவர் எழுந்து நிற்கச் செய்தார். அவருக்கு அவளைவிட ஒரு அடி உயரம் அதிகமாக இருந்தது.

‘‘இந்த நாள் அழுவதற்கா? இந்த அரை நாள்?’’ அவர் கேட்டார்.

‘‘நான் அழமாட்டேன்.’’ அவள் சொன்னார்:

‘‘வெயிலில் நின்றதால் இருக்க வேண்டும்- என்னுடைய கண்கள் மிகவும் அதிகமாக வலிக்கின்றன.’’

‘‘நீ ஒர கறுப்புக் கண்ணாடியை அணிந்து கொள்ளக் கூடாதா?’’

அவள் தலையை ஆட்டினாள்.

‘‘நான் எந்தக் காலத்திலும் ஒரு கறுப்புக் கண்ணாடியை அணிய மாட்டேன்.’’


‘‘நீ மீண்டும் ஆரம்பித்துவிட்டாய். நான் என்ன செய்ய வேண்டுமென்று நீ நினைக்கிறாய்? எல்லாருக்கும் முன்னால் இருக்கும்போது, வெளிப்படையாக நீ என்னுடைய காதலி என்று அறிவிக்க வேண்டுமா? கொஞ்சம் என்னுடைய நிலையைச் சிந்தித்துப் பார். என் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும்...’’

 

‘‘நான் அப்படி எதுவும் சொல்லவில்லை.’’ அவள் மேஜையின்மீது இருந்த நீரை எடுத்துப் பருகினாள்.

‘‘உனக்கு கொஞ்சம் காப்பி கலக்கித் தரட்டுமா?’’ அவர் மீண்டும் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே கேட்டார்.

‘‘எனக்கு காப்பி வேண்டாம்.’’ அவள் கவரில் தொங்கிக் கொண்டிருந்த விலை குறைவான ஒரு இயற்கைக் காட்சியைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

‘‘அப்படியென்றால் இவ்வளவு காப்பியையும் வீணாகக் கொட்டுவதா?’’ அவர் கேட்டார்.

‘‘ம்...’’

‘‘எனினும், நீ இப்படி இயல்புக்கு மாறாக ஏன் நடந்து கொள்கிறாய்?’’

‘‘இந்த நடத்தைதான் என்னுடைய இயல்பான நடத்தை.’’ அவள் சொன்னாள்.

அவர் அவளைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார்.

அவர் உணவு சாப்பிட்டு முடித்து எழுந்தபோது அவள் சொன்னாள்: ‘‘நீங்கள் சந்தோஷத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள். இதுதான் சந்தோஷமா? இந்த அறையும், இந்த பொய்யான பெயரும், இந்த கறுப்புக் கண்ணாடியும்...?’’

அவர் எதுவும் பேசவில்லை. அவர் கட்டிலில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு முகத்தைத் திருப்பி அவளையே பார்த்துக கொண்டிருந்தார். அவள் நிலைக் கண்ணாடிக்கு முன்னால் இருந்த ஒரு பீடத்தின்மீது போய் அமர்ந்து தன்னுடைய கூந்தலை அவிழ்த்து வார ஆரம்பித்தாள்.

‘‘உன்னைப் பற்றி நினைக்கும்போது எனக்கு சுருள் சுருளான கூந்தல்தான் ஞாபகத்தில் வருகிறது.’’ அவர் சொன்னார்.

‘‘விஷப்பாம்புகளை போல இருக்கும் இந்த முடிச்சுருள்களை...’’ அவர் தொடர்ந்து சொன்னார்: ‘‘ஒரு நாள் நான் கனவில் உன் பெயரை சத்தம் போட்டுக் கூறிவிட்டேன். ஆனால், என் மனைவி சிறிதுகூட சந்தேகப்படவில்லை. ‘பேபி’ என்பது என்னுடைய இளைய மகனின் பெயரும் ஆயிற்றே! நீ ஓய்வெடுக்க வேண்டாமா? இல்லாவிட்டால், இன்று முழுவதும் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருப்பது என்பதுதான் எண்ணமா?’’

‘‘எத்தனை மணிக்கு திரும்பப் புறப்பட வேண்டும்?’’ அவள் கேட்டாள்.

‘‘சாயங்காலம் ஆறரை மணிக்கு விமானம். நான் இங்கேயிரந்து ஐந்தரை மணிக்குப் புறப்படலாம்.’’

‘‘நான்கரை மணி நேரங்கள்...’’

அவள் சொன்னாள்.

தன்னால் மனம் விட்டுச் சிரிப்பதற்கோ, தமாஷாகப் பேசிக் கொண்டிருக்கவோ இனிமேல் எந்தச் சமயத்திலும் முடியவே முடியாது என்பதை அவள் தெரிந்து வைத்திருந்தாள். தனக்கு மிகவும் விருப்பமுள்ள மனிதருடன் செலவிடக்கூடிய மணி நேரங்கள், செய்பவை அனைத்தும் செய்யக் கூடாதவை என்று தனக்கு ஏன் ஞாபகப்படுத்த வேண்டும்?

அவருக்கு அருகில் படுத்திருந்தபோது, அவள் மெதுவான குரலில் சொன்னாள்:

‘‘பேசாதீங்க. உங்களுடைய வார்த்தைகளுக்கு கடுமை உண்டாகும். ஆனால், உங்களுடைய உடலுக்கு கடுமைத்தனம் இல்லை.’’

தனக்கு அந்த மனிதருடன் தோன்றக் கூடிய இந்த அளவற்ற மோகம், இந்த பக்தி எவ்வளவோ பல யுகங்களாக இருந்து வருபவை என்றும், அது முன்பு ஒரு முறை அவளுடைய எலும்புகளில் ஒரு பிரார்த்தனைபோல இருந்து கொண்டு அவற்றை இப்படி வளர்த்துக்கொண்டு வந்திருக்கிறது என்றும் அவளுக்குத் தோன்றியது. சந்தேகப்படுவதற்கு என்ன இருக்கிறது? தன்னுடைய அன்புதானே அவரை ஆணாக ஆக்கியது! அழகானவராக ஆக்கியது! அவர் தன்னை ஏமாற்றலாம். காயப்படுத்தலாம். ஆனால், வார்த்தைகளால் மட்டும்! காற்று பட்டால் கைகளையம் கால்களையும் சுருட்டிக் கொண்டு மரணமடையக் கூடிய வார்த்தைகளால் ஒரு காயத்தை உண்டாக்குதல்... அதற்கு தான் ஏன் பயப்பட வேண்டும்? அந்த உடல் தன்னை எந்தச் சமயத்திலும் ஏமாற்றாதே! உடலின் ஒரு தனிப்பட்ட அறிவு தன்னிடம் அதை மட்டும் மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே இருக்கிறது. உன்னுடைய ஓய்வு... உன்னுடைய நிம்மதி... உன்னுடைய மரணம்... இவை வேறு எங்கும் உனக்குக் கிடைக்காது. இந்த வஞ்சக மனிதரின் கைகளிலிருந்து அல்லாமல்...

‘‘இது எப்படி முடியும்?’’ அவள் அவரிடம் கேட்டாள். தன்னுடன் ஓய்வு எடுக்கும்போது, அவருடைய முகம் வேறொரு முகமாக சிறிது நேரத்திற்கு வடிவமெடுக்கிறது என்று அவளுக்குத் தோன்றியது. கண்ணாடியைக் கழற்றிவிட்டால், அந்த முகத்தில் ஒரு கள்ளங் கபடமற்ற தன்மை வந்து சேர்கிறது. அந்த உதடுகளுக்கு இனம் புரியாத ஒரு மென்மைத் தன்மை கிடைக்கிறது. எதையோ தேடிக்கொண்டிருக்கும், இழந்த ஏதோ ஒன்றைத் தேடித் திரியும் ஒரு சிறிய குழந்தையைப் போல! அவள் தனக்குத்தான் கூறிக்கொண்டாள். அவர் குழந்தை அல்ல என்று யாரால் கூற முடியும்? யார்தான் குழந்தையாக இல்லாதவர்கள்? தேடாதவர்கள்? அவள் அந்த முகத்தின் சுருக்கங்களில் முத்தமிட்டுக் கொண்டிருந்தாள்.

‘‘முடிவுக்கு வராததாக ஏதாவது இருக்க வேண்டும்.’’ அவள் சொன்னாள்: ‘‘எல்லாவற்றுக்கும் இறுதி இருக்கிறது என்று நான் நினைக்கவில்லை.’’

அவர் அப்போதும் எதுவும் கூறவில்லை. தன்னிடம் ஒரு நாள் ஆன்மாவைப் பற்றியும் வேதாந்தங்களைப் பற்றியும் உரையாடிக் கொண்டிருந்த அந்த மனிதரின் ஒரு வற்றிப் போன வாய்க்கால் மட்டுமே தன்னுடன் இப்போது படுத்துக் கொண்டிருக்கிறது என்று அவளுக்குத் தோன்றியது. தன்னை விரும்புபோது அவர் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறாரா? எதுதான் உண்மை? தத்துவ சிந்தனைகளைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்த அந்த மனிதரா? இல்லாவிட்டால் தன்னுடைய கொஞ்சல்களுக்கு அடிபணிந்து கண்களை மூடிக் கொண்டு படுத்திருக்கும் இந்தக் காதலரா?

‘‘வருகிற வருடத்தில் நான் உங்கள்மீது அன்பு வைத்திருக்கப் போவதில்லை.’’ அவள் சொன்னாள்.

‘‘இப்போது நீ உன்னையே ஏமாற்றிக் கொள்ள முயற்சிக்கிறாய்.’’ அவர் முணுமுணுத்தார்.

அவருக்கு தன்னுடைய சிந்தனைகளைக்கூட புரிந்து கொள்ள முடிகிறதா என்ன? அவள் அதிர்ந்துது போய்விட்டாள்.

‘‘இது ஒரு ஆயுள் முழுக்க இருக்கக் கூடிய தண்டனையா என்ன?’’ அவள் கேட்டாள்.

‘‘நீ அதை அப்படியா எண்ணுகிறாய்?’’

‘‘எதை?’’

‘‘இதை...’’

காதல் என்று கூறலாம் அல்லவா? அந்த வார்த்தையைக் கூறுவதற்கு மட்டும் அவர் ஏன் தயங்குகிறார்?

அவள் எழுந்து உட்கார்ந்தாள். அவர் அப்போதும் தலையணையில் ஒரு கன்னத்தை வைத்துக் கொண்டு, அவளையே பார்த்துக் கொண்டு படுத்திருந்தார்.

‘‘உங்களுக்கு என்னை ஏன் பிடித்தது என்ற காரணம் எனக்குத் தெரிந்து விட்டது.’’ அவள் சொன்னாள்.

‘‘என்ன?’’

‘‘நான் எதிர்காலத்தைப் பற்றி நினைத்து மனதில் கவலைப்படுவதில்லை. திருமணம் என்ற விஷயத்தில் நம்பிக்கை கொண்டவள் இல்லை. பாவ உணர்வு எனக்கு சிறிதும் இல்லை.’’

‘‘சரிதான்...’’

அவர் சொன்னார். அவருடைய முகத்தில் ஒரு புன்னகை பரவியது.


‘‘ஒரு நாள் நானும் நீங்களும் இது போதும் என்று விரும்புவோம். அப்போது ஒரு விடை பெறுதல் நடக்கும். பிரிந்து செல்லும் இரண்டு வழிகளில் போவோம். அவ்வளவுதான். அழுகையும் இல்லை. புகாரும் இல்லை. அறுந்து தொங்கிக் கொண்டிருக்கும் பொறுப்பகளும் இல்லை. இரண்டு சுதந்திரப் பிறவிகள்...’’

‘‘உனக்கு அசாதாரணமான புத்திசாலித்தனம் இருக்கிறது.’’ அவர் சொன்னார்: ‘‘விவேகமும்...’’

‘‘உண்மைதான்... நான் புத்திசாலிதான்...’’ அவள் எழுந்து குளியலறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டாள். முகத்தில் நீரை ஊற்றும்போது, அத்துடன் சேர்ந்து அவளுடைய கண்ணீர் துளிகளும் அரும்பி வழிந்து கொண்டிருந்தன.

அந்த மனிதரிடமிருந்து தனக்கு எந்தக் காலத்திலும் கிடைக்கவே வழியில்லாத குழந்தைகளைப் பற்றி அவள் சிந்தித்துக் கொண்டிருந்தாள். எந்தச் சமயத்திலும் அவள் தாயாக ஆகப் போவதில்லை. எந்தக் காலத்திலும் அந்த முகச்சாயலைக் கொண்ட பிள்ளைகளின் அருகில் இருந்து கொண்டு அவள் எதிர்காலத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கப் போவதில்லை. யாரும் அவளை ‘அம்மா’ என்று அழைக்கப் போவதில்லை. பேபி... வெறும் பேபி.

‘‘பேபி...’’ அவர் அழைத்தார்.

அவள் வெளியே வந்தாள். அவளுடைய முகம் மீண்டும் அமைதியானது.

‘‘எனக்கு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துத் தா. பிறகும் கொஞ்சம் தேநீருக்கு ஆர்டர் பண்ணு.’’

அவர் ஒரு இயந்திரத்தைப் போல அந்த வேலைகள் எல்லாவற்றையும் செய்வாள். அவர்களுக்கிடையே இருக்கும் சில புதிய விஷயங்களை அப்போதுதான் அவளாலேயே தெரிந்து கொள்ள முடிந்தது. அவளுக்கு இந்த உறவு ஒரு அமைதியற்ற தன்மையை அளித்தது. ஆனால், அவருடைய அமைதியற்ற தன்மை அதைவிட எவ்வளவோ பயங்கரமானதாக இருந்தது. இடையில் விளையாடுவதற்கு மத்தியில் கிடைத்த தோல்விகளை மறப்பதற்கும் சிறிது ஆறுதல் கிடைப்பதற்காகவும் தன் தாயைத் தேடி ஓடி அணைத்துக் கொள்ளும் ஒரு குழந்தையின் முக வெளிப்பாட்டுடன் அல்லவா இந்த பொருளாதார நிபுணர்- சமுதாயத்தில் மிகப்பெரிய இடத்தில் வீற்றிருக்கும் இந்த நடுத்தர வயது மனிதர் தன்னைத் தேடி வருகிறார்? எதிர்காலத்தில் தான் சந்திக்கப் போகிற இருட்டைப் பார்த்து பயந்து தான் எப்படி அவரைக் கை கழுவ முடியும்? எந்தச் சமயத்திலும் முடியாது. அவனவனின் இதயத்தின் நொறுங்கலில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக இன்னொரு இதயத்தைத் தகர்ப்பது... அப்படிப்பட்ட விஷயங்கள் தன்னால் முடியவே முடியாது...

அவள் அவரிடம் சொன்னாள்: ‘‘எழுந்திருங்க... நேரம் ஐந்தாகிவிட்டது.’’

அவருடைய முகம் வெளிறியது. அவர் சிகரெட்டை திடீரென்று தரையில் எறிந்துவிட்டு எழுந்தார்.

அவருக்கு தேநீர் கலக்கிக் கொடுக்கும்போது, அவள் ஒரு பாட்டை முணுமுணுத்தாள்.

‘‘நீ பாட்டு கற்றிருக்கிறாய் அல்லவா?’’

அவள் தலையை ஆட்டினாள். ‘‘இல்லை... என் தங்கைதான் அதைக் கற்றிருக்கிறாள். அவள் என்னைப் போல அல்ல. ஒரு பாவம்... அதாவது - விவேகம் இல்லை.’’

அவருடைய கண்கள் மட்டும் சிரித்தன.

‘‘உன்னை நான் முதன்முதலாக பார்த்த நாள் உனக்க ஞாபகத்தில் இருக்கிறதா?’’ அவர் கேட்டார்: ‘‘நீ ஒரு வெள்ளைநிறப் புடவையும் முகத்தில் முழுமையான பதைபதைப்புமாக அந்த ஹாலின் கதவிற்கு அருகில் நின்றிருந்தாய். அங்கு விருந்தினர்களாக கிட்டத்தட்ட ஆயிரம் பேர் இருந்தார்கள். எல்லா இடங்களிலும் நிறங்கள்... எல்லா இடங்களிலும் பேச்சு... நீ மட்டும் அங்கே தனியாக இருந்தாய். அது எனக்கு அந்த நிமிடத்தில் புரிந்தது.’’

அவளும் அந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தாள். அறையின்  இன்னொரு மூலையில் சுவருக்கு அருகில் தலைமுடி நரைத்த ஒரு மனிதர் தன்னையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தது... அந்த நிமிடத்தில் முன்பு எப்போதோ பார்த்து அறிமுகமானவர் என்று தவறாக நினைத்து தான் அந்த முகத்தை நோக்கி தானாகவே நகர்ந்து சென்றது... அப்படித்தான் சந்திப்பு உண்டானது. ஒரு பெண், பெண்ணாக இருக்க வேண்டுமென்றால், அவளுக்கு ஒரு காதலன் இருக்க வேண்டும் என்று அவள் நினைத்தாள். அவளுடைய பெண்மைத் தன்மையை ஏற்றுக் கொள்வதற்கு ஒரு ஆண் வேண்டும். அவளை ஒர கண்ணாடியைப் போல பிரதிபலிப்பதற்கு, அவளுடைய உடலின் மினுமினுப்பையும் வாசனையையும் பெரிய விஷயங்களையம் சிறிய விஷயங்களையும் அவளுக்குப் புரிய வைக்க வேறு யாரால் முடியும்?

‘‘அன்றுதான் என்னுடைய வாழ்க்கை ஆரம்பமானது.’’ அவள் சொன்னாள்:

அவர் அவளுக்கு நேராக ஒரு கோப்பையை நகர்த்தி வைத்தார்.

‘‘உண்மையாகவா சொல்கிறாய்?’’ அவர் கேட்டார்.

‘‘உண்மையாகத்தான்...’’ அவள் சொன்னாள்: ‘‘அன்று நான் மரணத்திலிருந்து கண் விழித்தேன். மீண்டும் பிறந்தேன்.’’

‘‘நீ இந்த அளவிற்கு சீரியஸாக ஆகும்போது, எனக்கு உன்னைப் பார்த்து பயம் வந்து விடுகிறது.’’ அவர் சொன்னார்: ‘‘நீ குழந்தையாக இருந்தால் போதும்... சிரித்தால் போதும்... பல நேரங்களிலும் காட்டக் கூடிய குறும்புத்தனங்களை வெளிப்படுத்தினால் போதும்...’’

அவள் தலையைக் குலுக்கினாள்.

அவர்கள் அந்த ஹோட்டலை விட்டு வெளியே வந்தபோது, நேரம் ஐந்தரை ஆகி விட்டிருந்தது. எனினும், வெயில் நெருப்பைப் போல தகித்துக கொண்டிருந்தது. அலுவலகங்களில் இருந்து திரும்பி வந்து கொண்டிருப்பவர்களையும், ரிக்ஷாவில் தலையை உயர்த்தி உட்கார்ந்து கொண்டிருக்கும் அழகிகளான சில வெள்ளைக்காரிகளையும் அவர்கள் பார்த்தார்கள்.

‘‘யாராவது பார்த்தால்...?’’

அவள் மெதுவாகச் சொன்னாள். அவர் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து, உதட்டில் வைத்தார்.

விமான நிலையத்தை அடைந்தபோது, அவள் முன்பு நடந்து கொண்டதைப் போல ஒரு அடி விலகி நடக்க ஆரம்பித்தாள்.

அவர்கள் ஒரு காலியாகக் கிடந்த நாற்காலியின் அந்தப் பக்கத்திலும் இந்தப் பக்கத்திலும் உட்கார்ந்தார்கள். அவருடைய கண்கள் மீண்டும் ரோந்து சுற்றும் போலீஸ்காரர்களாக ஆயின. பழக்கமான முகங்கள் அங்கு எங்கும் இருக்குமா? தேவையற்ற பேச்சுகளுக்கு இடம் உண்டாகி விடுமோ? அவருடைய ஒவ்வொரு சிந்தனையையும் அவள் புரிந்து கொண்டாள். ஒவ்வொன்றும் அவளுடைய இதயத்தை மரத்துப் போகச் செய்தன. இது எவ்வளவு காலம் நீடித்து நிற்கும்?

அவர் விமானத்தை நெருங்கியபோது, திரும்பிப் பார்த்தார். ஒருமுறை கையை உயர்த்தினார். அவள் எப்போதும் செய்வதைப் போல தன்னுடைய கையை உயர்த்தினாள்.

அவர் சிரித்தாரோ? அவளால் பார்க்க முடியவில்லை.

அவள் வீட்டை அடைந்தபோது, நேரம் சாயங்காலம் ஆகி விட்டிருந்தது. வாசலை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. முதல் நட்சத்திரம்.

அவளுக்கு திடீரென்று அழ வேண்டும் போல இருந்தது. சத்தமாக, குழந்தைகள் சாதாரணமாக அழுவதைப் போல, எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் வாய் விட்டு அழ வேண்டுமென்று. ஆனால், விவேகம் உள்ளவள் என்று கூறப்படும் அந்த இளம்பெண்ணுக்கு அப்படி அழுவதற்கும் தைரியம் இல்லை. அதனால், தூக்கத்திற்கான இரண்டு மாத்திரைகளைச் சாப்பிட்டு விட்டு, அவள் கட்டிலில் போய் படுத்தாள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.