Logo

வளர்ப்பு மிருகங்கள்

Category: சிறுகதைகள்
Published Date
Written by sura
Hits: 7812
valarppu-mirugangal

ல்ல நிலவொளி திறந்திருந்த ஜன்னல்கள் வழியாக அறைக்குள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. மங்கலான பனி மூட்டத்தினூடே தூரத்தில் மேற்கு திசையில் இருந்த மலை முகடுகள் தெளிவில்லாமல் நிழல்களைப் போல தெரிந்தன. இரவு நேரத்தின் உறைந்து போன அமைதி எங்கும் பரவியிருந்தது.

ஜானம்மா மெத்தையில் அசையாமல் படுத்திருந்தாள். பாதி இரவு தாண்டியிருக்கும். இருப்பினும், அவளுக்குத் தூக்கம் வரவில்லை. அமைதியின் மரத்துப்போன சரீரத்தை வேதனைப்படுத்திக் கொண்டு தூரத்திலிருந்த சர்க்கஸ் கொட்டகையிலிருந்து மெல்லிய பேண்ட் வாத்திய இசை காற்றில் மிதந்து வந்தது.

இரண்டாவது ஆட்டம் முடியப் போகிறது என்பதை ஜானம்மா புரிந்து கொண்டாள்.

எவ்வளவு நேரம்தான் இப்படியே கண்களைத் திறந்து கொண்டு படுத்திருப்பது? ஜன்னல் வழியாகப் பரந்து கிடக்கும் ஆகாயத்தை வெறித்துப் பார்த்தவாறு ஜானம்மா படுத்திருந்தாள். கை பயங்கரமாக வலித்தது. மூச்சு விடும்போது மார்புகள் மேலும் கீழுமாக அசைகிற நிமிடத்தில் அவளின் கையில் தாங்க முடியாத வலி உண்டானது. மார்பு மீது வைத்திருந்த தன்னுடைய வலது கையில் போடப்பட்டிருந்த 'ப்ளாஸ்டர்' பகுதியை நோக்கி அவளுடைய இடது கை விரல்கள் அவளையுமறியாமல் நீண்டன.

உடல் பயங்கரமாக வலித்தது. பலமணி நேரங்களாக அவள் அதே இடத்தில் படுத்திருந்தாள். சிறிது கூட திரும்பியோ புரண்டோ அவளால் படுக்க முடியவில்லை. அசையும் போது காயம்பட்ட கை தாங்க முடியாத அளவிற்கு வலித்தது.

அறையின் ஒரு மூலையில் படுத்திருந்த லட்சுமியை ஒரு நிமிடம் அவள் பார்த்தாள். லட்சுமி தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய வாழ்க்கையைப் பற்றி ஜானம்மா இதற்கு முன்பு கூட சிந்தித்திருக்கிறாள். ஜானம்மா சர்க்கஸ் கம்பெனியில் நுழைந்த காலத்தில் லட்சுமி குறிப்பிடத்தக்க ஒரு சர்க்கஸ் விளையாட்டுக் காரியாக இருந்தாள். மற்றவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தும், அவர்களுக்கு ஆலோசனைகள் கூறுவதும் அவளாக இருந்தாள்.

இன்று லட்சுமி பணிவிடை செய்யும் பெண்ணாக மாறியிருக்கிறாள். அதற்குக் காரணம் இருக்கிறது. அவளுக்கு வயது நாற்பதைத் தாண்டி விட்டது. சிறப்பான ஒப்பனையாலும் அவளின் முகத்திலிருக்கும் சுருக்கங்களைச் சரி பண்ண முடியாது என்ற நிலை வந்தபோது அவளின் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. அவளின் இளமை முழுமையாக அவளைவிட்டு விடைபெற்றிருந்தது.

இது உலகத்தில் சர்வ சாதாரணமாக இருக்கக்கூடிய ஒரு விஷயம்தான் என்பதை ஜானம்மா அறியாமல் இல்லை. மலர்கள் வாடும், வதங்கி கீழே விழும்; அந்த இடத்தில் புதிய மொட்டுக்கள் விரியும்.

இளமை இல்லாமற் போயிருந்தாலும், வாடி உலர்ந்து போகாத ஒரு மலராக இருந்தாள் ஜானம்மா.

அவள் மீண்டும் காதுகளைத் தீட்டிக் கொண்டு கேட்டாள். பேண்ட் வாத்தியத்தின் இனிய ஒலி காற்றில் கலந்து வந்து கொண்டிருந்தது. கடைசி நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். 'ஃப்ளையிங் ட்ரப்பீ'ஸின் பின்னணி இசைதான் இப்போது அவள் காதுகளில் விழுந்து கொண்டிருக்கிறது. அந்த இசையுடன் சேர்ந்து அங்கு கூடியிருக்கும் எண்ணிப் பார்க்க முடியாத பார்வையாளர்களின் இதயமும் படுவேகத்தில் துடித்துக் கொண்டிருக்கும்.

பறக்கும் ட்ரப்பீஸ்! அதை மனதில் நினைத்துப் பார்த்த போது ஜானம்மாவின் இதயத்தில் ஒரு வேதனை உண்டாகாமலில்லை. இதற்கு முந்தைய இரவில்தான் கீழே விழுந்தது! அதை நினைத்துப் பார்த்த போது காயம் ஏற்பட்ட கையில் இருந்த வலி இரண்டு மடங்காகக் கூடியது.

அவள் அசையாமல் படுத்திருந்தாள். கொஞ்சமாவது தூங்கமுடிந்தால்...? கண்ணீர் சிந்தியவாறு மனதில் உண்டான வேதனையை மறைத்துக் கொண்டு அவள் மெதுவான குரலில் அனத்தினாள்: 'ஹாவ்...'

ஒரு உறக்கம் முடிந்து லட்சுமி எழுந்தபிறகும் ஜானம்மாவிற்குத் தூக்கம் வரவில்லை. லட்சுமி மெதுவாகத் தலையை உயர்த்திக் கேட்டாள்: "ஜானம்மா, உறங்கலையா?"

"இல்ல..."

"கை வலிக்குதா?"

"ரொம்ப..."

அவள் மீண்டும் அனத்தினாள்.

லட்சுமி மீண்டும் தூக்கத்திற்குள் புகுந்தாள். முழுமையான அமைதி சுற்றிலும் நிலவிக் கொண்டிருந்தது. ஜானம்மா காதுகளைத் தீட்டிக் கொண்டு கேட்டாள். இல்லை... பேண்ட் வாத்தியத்தின் இசை கேட்கவில்லை. காட்சி முடிந்திருக்கும்.

கீழே சாலையில் சர்க்கஸ் லாரியின் இரைச்சல் சத்தம் கேட்டது. அவள் தோழிகள் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள்.

படிகளில் அவர்கள் ஏறிவரும் சத்தம் கேட்டது. அவர்கள் அறைக்குள் வந்தார்கள். எல்லோரும் மிகவும் களைத்து தளர்ந்து போய் காணப்பட்டனர். ஜானம்மா கண்களை மூடி உறங்குவதைப் போல படுத்திருந்தாள்.

மின்சார விளக்கு அறைக்குள் நிறைந்தது. உடலுடன் ஒட்டியவாறு அணிந்திருந்த ஆடைகளை அவிழ்த்துப் போட்டு விட்டு படுக்க வேண்டிய நேரம். எல்லோரும் உறங்க ஆரம்பித்திருந்தார்கள். இனி சூரியன் வானத்தின் உச்சியில் வரும்போது மட்டுமே அவர்கள் கண்களைத் திறப்பார்கள்.

நகரத்தில் சுமாரானது எனப் பெயர் பெற்றிருக்கும் ஒரு ஹோட்டலில் தான் அவர்கள் தங்கியிருந்தார்கள். மேனேஜருக்கு மட்டும்தான் சிறப்பு வசதிகள் கொண்ட அறை. பெண்கள் மூன்று அறைகளில் மிகவும் நெருக்கமாகத் தங்கியிருந்தார்கள். ஆண்கள் அனைவரும் கீழ் தளத்தில் தங்கியிருந்தார்கள். தாழ்ந்த நிலையில் உள்ள பணியாட்கள் அனைவரும் சர்க்கஸ் கூடாரத்திலேயே தங்கிக் கொள்வார்கள்.

முதல்நாள் இரவுதான் அந்தச் சம்பவம் நடந்தது. இரண்டாவது காட்சி முடியப்போகும் நேரம். பறக்கும் ட்ரப்பீஸ் நிகழ்ச்சிதான் எல்லாவற்றிருக்கும் கடைசி. ஜானம்மாவின் திறமை முழுவதும் அதில்தான் என்ற விஷயம் கம்பெனியில் உள்ள எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். கடந்த நான்கு வருடங்களாக அவள் சிறிது கூட இடைவெளி விடாமல் ட்ரப்பீஸ் விளையாட்டில் தன்னுடைய திறமையைக் காட்டிக் கொண்டிருந்தாள்.

மிகவும் உயரத்தில் ட்ரப்பீஸ்களைக் கட்டியிருப்பார்கள். கீழே தரையிலிருந்து ஒரு ஆள் உயரத்தில் வலை கட்டப்பட்டிருக்கும்.

ஜானம்மாவும் அவளுடைய தோழியும் இரண்டு முனைகளிலுமிருந்த பலகைகளில் எதிரெதிராக நின்றிருந்தார்கள். அவளிடம் எந்தவித பதைபதைப்பும் இல்லை. அந்த அளவுக்கு அவள் அந்த விளையாட்டில் அனுபவம் பெற்றிருந்ததே காரணம். பார்வையாளர்களின் கண்கள் பயத்தாலும் ஆச்சர்யத்தாலும் விரிந்து நிற்க, நிகழ்ச்சி அமைதியாக ஆரம்பமானது. அதிகமான வேகத்தில் அவர்கள் ஒரு கையை விட்டு, இரண்டு கைகளையும் விட்டு காற்றில் மிதந்து கொண்டிருந்தார்கள். ஒரு பலகையிலிருந்து இன்னொரு பலகைக்குப் பயணித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு ட்ரப்பீஸிலிருந்து இன்னொரு ட்ரப்பீஸுக்கு மாறிக் கொண்டிருந்தார்கள்.

ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஒரு ட்ரப்பீஸைப் பிடிப்பதை விட்டுவிட்டு காற்றில் மிதந்தவாறு தன் தோழி அனுப்பிவரும் ட்ரப்பீஸைப் பிசகாமல் பற்றிக்கொண்டு ஜானம்மா பயணம் செய்து கொண்டிருந்தாள். பார்வையாளர்கள் பலமாகக் கைகளைத் தட்டினார்கள்.


ஆனால், ஜானம்மாவுக்கு அது ஒரு புதுமையான விஷயமில்லை. கீழே வட்டமாக அமைக்கப்பட்ட பால்கனி பகுதியில் ஏராளமானவர்கள் அமர்ந்து அடக்கி வைக்கப்பட்ட ஆர்வத்துடன் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் உண்மையை எங்கே அவள் மறந்துவிட்டாளோ என்று நமக்கு அப்போது தோன்றும்.

சிறிது தவறினாலும் ஆபத்து நிறைந்த இந்த நிகழ்ச்சி பார்வையாளர்கள் மனத்தில் நூற்றுக்கணக்கான கேள்விகளை எழச் செய்வதென்னவோ உண்மை. இந்த விளையாட்டை விளையாடுபவர்களுக்கு உயிர் மீது பற்று இல்லையா? இவர்களும் மனிதர்கள்தானா? இப்படி எத்தனையோ கேள்விகள். பார்வையாளர்கள் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி ஜானம்மா ஒருமுறை கூட சிந்தித்ததில்லை. அந்த அளவுக்கு இயந்திரத்தனமாக அவள் அந்த விளையாட்டில் ஈடுபட்டாள்.

இந்தச் சூழ்நிலையில்தான் அந்த ஆபத்தான சம்பவம் நடந்தது. உண்மையில் பார்க்கப்போனால் தவறு யார் பக்கம் இருந்தது? தவறாக நடந்தது ஜானம்மாவின் தோழி மாதவிதான். நேரத்தையும் தூரத்தையும் சரியாகக் கணக்குப்போட்டு அவள் மறு பக்கத்திலிருந்து ட்ரப்பீஸை அனுப்பியிருக்க வேண்டும்.

ஜானம்மா கீழே விழுந்தாள். ஆனால், அப்படி விழுந்தது ஒரு சாதாரண வீழ்ச்சி அல்ல.

ட்ரப்பீஸிலிருந்து இதற்கு முன்பும் அவள் கீழே விழுந்திருக்கிறாள். கீழே கட்டப்பட்டிருக்கும் வலையில் விழுவது தான் எப்போதும் நடந்திருக்கிறது. பார்வையாளர்களைச் சிரிக்க வைப்பதற்காக கோமாளி குள்ளன் ராமு நூறு தடவை அங்கு போய் விழுவானே!

ஆனால், ஜானம்மா கீழே விழுந்தது பெரிய ஆபத்தில் போய் முடிந்தது. வலை மேல் விழுந்த அவள் வெளியே வேகமாக தூக்கி எறியப்பட்டாள். பார்வையாளர்களிடமிருந்து ஒரு சத்தம் எழும்பியது மட்டும் அவளின் ஞாபகத்தில் இருந்தது.

நினைவு வந்தபோது அவள் சர்க்கஸ் கம்பெனிக்குச் சொந்தமான லாரியில் படுத்திருந்தாள். மின்சார விளக்குகள் எரிந்து கொண்டிருந்த பெரிய சாலை வழியாக லாரி ஹோட்டலை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. அவளைச் சுற்றிலும் பெண்களும் ஆண்களும் கூட்டமாக நின்றிருந்தனர். ஒருவித பதைபதைப்புடன் அவள் அவர்களின் முகத்தையே பார்த்தாள். எல்லோரும் அவளைப் பரிதாபத்துடன் பார்த்தார்கள்.

பயங்கரமாக வலித்துக் கொண்டிருந்த தன்னுடைய வலது கையைப் பார்த்த ஜானம்மா குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

"கவலைப்படாதே ஜானம்மா& கண்ணன் மாஸ்டர் சொன்னாரு பயப்படுறதுக்கு ஒண்ணுமில்லேனு"& இரக்கம் நிறைந்த குரலில் மாதவி சொன்னாள்.

கண்ணன் மாஸ்டர்தான் அந்தக் கம்பெனியின் குருக்கள். காயம்பட்டிருக்கும் இடத்தைத் தடவி சரி செய்வதற்கு அந்த வயதான கைகளுக்கு நல்ல பலம் இருந்தது.

லாரியை விட்டு இறங்குவதற்கு ஜானம்மாவிற்கு இரண்டு மூன்று பேரின் உதவி தேவைப்பட்டது.

கண்ணன் மாஸ்டர் இரவில் வந்து கையைத் தடவிப் பார்த்தார். பிறகு என்ன நினைத்தாரோ ஒரு வார்த்தை கூட பேசாமல் வெளியேறினார். அவர் சென்றது மேனேஜரின் அறைக்கு.

ஒரு மணி நேரம் சென்றதும் டாக்டர் வந்தார். கையில் இரண்டு எலும்புகள் முறிந்திருக்கின்றன என்று அவர் சொன்னபோது ஜானம்மா அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

ஜானம்மாவின் கை ப்ளாஸ்ட்டரால் கட்டப்பட்டது. கையைக் கட்டி முடித்துவிட்டு டாக்டர் போகும் போது சொன்னார்: "பயப்படுறதுக்கு ஒண்ணுமில்ல. வலி இருந்தா மட்டும் சொன்னா போதும்."

பகல் முழுவதும் லட்சுமி அவளின் அருகிலேயே இருந்தாள். மற்றவர்கள் பகலில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். இரவில்தானே அவர்களுக்கு வேலை!

சாயங்காலம் மேனேஜர் அறைக்குள் வந்தார். அவர் சர்க்கஸ் கூடாரத்திற்குப் போகும் வழி அது. வாஸ்லைன் தடவி தலைமுடியை வாரி, இளம் மஞ்சள் நிறத்தைக் கொண்ட சில்க் சட்டையும் பேன்ட்டும் அணிந்திருந்த கறுத்து தடித்த ஒரு நடுத்தர வயது மனிதன்தான் அந்த மேனேஜர்.

சர்க்கஸ் விளையாடும் பெண்கள் ஆடைகள் அணிந்து கொண்டிருந்தார்கள். அவர் அப்போது அங்கு வந்தது நல்லதல்ல என்று ஜானம்மா நினைத்தாள். வெறும் பிரேஸியரும் நிக்கரும் மட்டும் அணிந்து நின்று கொண்டிருந்த மாதவியும் வனஜாவும் மற்றவர்களும் எவ்வளவு தரம் தாழ்ந்த விதத்தில் மேனேஜரிடம் பேசுகிறார்கள்! வெட்கம்! ஆனால், அது சர்க்கஸ் கம்பெனி என்பதை ஜானம்மா நினைத்துப் பார்த்தாள். வெட்கப்படத்தக்க பல விஷயங்களும் அங்கு நடக்கத்தான் செய்கின்றன.

ஒரு சிறு குழந்தையாக இருந்த காலத்தில் தான் இதே சர்க்கஸ் கம்பெனியில் வந்து சேர்ந்த போது லட்சுமி சொன்ன வார்த்தைகள் இப்போதும் ஜானம்மாவின் மனதில் அடிக்கடி ஞாபகத்தில் வருவதுண்டு. "குழந்தை... நீயும் இங்கு வந்து மாட்டிக்கிட்டியா? இது சர்க்கஸ் கம்பெனி. இங்கே மனிதர்கள் யாருமில்ல. இருக்கிறவங்க எல்லாரும் மிருகங்கள்..."& இதுதான் அவள் சொன்னது.

அவள் இந்த வார்த்தைகளைச் சொல்லி எவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டன! அதற்குப் பிறகு பதினாரு வருடங்கள் கடந்தோடி விட்டன.

மேனேஜர் அவள் கை இப்போது எப்படி இருக்கிறது என்று கேட்டார். அதே மாதிரிதான் இருக்கிறது என்று அவள் பதில் சொன்னாள்.

அவள் ஆச்சரியப்பட்ட ஒரு உண்மை இருக்கவே செய்தது. அந்த மனிதரின் குரலில் இரக்கப்பட்டதற்கான எந்தவொரு அடையாளமும் இல்லாமல் இருந்தது. அப்படியென்றால் அந்தக் குரல் இருந்துதான் என்ன? அவளைக் குறை சொல்லக் கூடிய ஒரு குணம் அதற்குப் பின்னால் மறைந்திருப்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

"ட்ரப்பீஸ்ல யாரு வேலை செய்வாங்க?"

முக்கால் நிர்வாணமாக நின்றுகொண்டு ஒப்பனை செய்து கொண்டிருந்த பெண்கள் பக்கம் திரும்பி மேனேஜர் கேட்டார்.

அதற்கு மாதவிதான் பதில் சொன்னாள்: "நானும் கல்யாணியும் விளையாட வேண்டியதுதான்..."

"யார் வேணும்னாலும் விளையாடுங்க. ஆனா, நேற்று நடந்தது மாதிரி விபத்து உண்டாக்காம இருக்கணும். அப்படி நடக்குறதுனால கம்பெனிக்குத்தான் நஷ்டம்" என்று சொன்ன அவர் சில உண்மைகளை அவளிடம் எடுத்துச் சொன்னார். அங்க ஆறு நாட்கள் காட்சி நடந்தும் அவர்களுக்குச் சுமார் அய்யாயிரம் ரூபாய்தான் இதுவரை வசூலாகியிருக்கிறது. இனி மழைக்காலம் வரப்போகிறது. அதற்கு முன்பு ஒரு நல்ல தொகை கிடைக்கவில்லையென்றால், கம்பெனியை நடத்துவது என்பதே சிரமத்திற்குரிய ஒரு காரியமாக இருக்கும்.

தான் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அதை முழுமையாக ஏற்றுக் கொண்டார்களா என்பதைப் பற்றி அவர் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. அவர் ஏன் அதைப்பற்றி கவலைப்பட வேண்டும்? அவ்வப்போது இந்த மாதிரி ஏதாவது சொன்னால்தான் இந்த வளர்ப்பு மிருகங்கள் ஒழுங்காக நடப்பார்கள் என்பது அவருக்குத் தெரியாதா என்ன?"

அவர் திரும்பி நடந்தார். வாசலில் நின்றவாறு அவர் முகத்திற்குப் பவுடர் போட்டுக் கொண்டிருந்த வனஜாவின் சதைப்பிடிப்பான உடம்பையே வைத்த கண் எடுக்காமல் பார்ப்பதை படுக்கையில் படுத்தவாறு ஜானம்மா கவனிக்கத் தவறவில்லை. கம்பெனியில் இருக்கும் பெண்களிலேயே வயது குறைந்தவள் வனஜாதான்.


எல்லோரும் தயாராகி அறையை விட்டு கிளம்பினார்கள். சாலையில் லாரி 'ஸ்டார்ட்' செய்யப்பட்டு புறப்படத் தயாராக நின்றிருந்தது. ஹோட்டலுக்கு முன்னால் சர்க்கஸ் வீரர்கள் பெண்கள் வருவதற்காக காத்து நின்றார்கள். மோட்டார் சைக்கிளில் பாய்ந்து சாகசங்கள் காட்டும் கறுத்து மெலிந்து போன வழுக்கைத் தலையனும், 'சான்டோ' கிருஷ்ணனும் மேனேஜரின் காரில் ஏறிக் கொண்டார்கள். மற்றவர்கள் பெண்களுடன் சேர்ந்து லாரியில் ஏறினார்கள். உயிரோடிருக்கும் மீனை விழுங்கக்கூடிய கறுத்து உயரமாக இருக்கும் மனிதன், யானைகளையும் குதிரைகளையும் காட்டு மிருகங்களையும் விளையாட வைக்கும் விற்பன்னர்கள், பார் விளையாட்டு வீரர்கள், சீனியர் கோமாளி, ரிங் மாஸ்டர்கள்& இப்படி பலரும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள்.

லாரி அந்த இடத்தைவிட்டு நகரும் ஓசை கேட்டதும் ஜானம்மா ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள்.

சிறிதும் அசையாமல் படுக்கையில் உடல் வலியுடனும் மன வேதனையுடனும் போராடிக் கொண்டிருந்த அவளுடைய மனம் கடந்த காலத்தை நோக்கித் திரும்பிச் சென்றது.

பதினாறு வருடங்களுக்கு முன்பு ஜானம்மா சர்க்கஸ் கம்பெனியில் வந்து சேர்ந்தாள். அப்போது அவளுக்கு ஆறு வயது நடந்து கொண்டிருந்தது. நினைத்துப் பார்க்கும் போது ஒரு உண்மை அவளுக்குத் தெளிவாகத் தெரிய வந்தது. அவள் சிறு குழந்தையாக இருந்தபோது ஒரு சர்க்கஸ்காரியாக வர வேண்டும் என்ற ஆசை சிறிதும் அவளிடம் இருக்கவில்லை.

நினைவு தெரிந்த நாள் ஆனபோது அவள் தன் தாயுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். காற்று வேகமாக வீசும் போது எங்கே பாதிப்பிற்கு உள்ளாகிவிடுமோ என்று நினைக்கக்கூடிய ஒரு மண் குடிசையில்தான் அவளும் அவளுடைய தாயும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

தன் தந்தையைப் பற்றி அவள் எப்போதும் விசாரித்ததில்லை. அப்படியொரு மனிதன் தனக்கு இருந்தானா என்பதுகூட அவளுக்குத் தெரியாது.

தன் தாயை அவளுக்கு மிகவும் பிடிக்கும். எவ்வளவு அன்பு வைத்திருந்த பெண் அவள்! அவளுடைய தாய் மிகவும் கஷ்டப்பட்டு அவளை வளர்த்தாள் என்பதே உண்மை. வாழ்வதற்காக அவர்கள் இருவரும் மிகவும் சிரமப்பட்டனர். ஒருவேளை அதன் விளைவாக இருக்கலாம்& தான் சர்க்கஸ் கம்பெனிக்குள் வந்து மாட்டிக் கொண்டது என்று ஜானம்மா நினைத்தாள்.

பக்கத்திலிருந்த சர்க்கஸ் விளையாட்டுக்களைச் சொல்லித்தரும் குருக்கள் ஒருநாள் தன்னுடைய வீட்டிற்கு வந்ததை இப்போது கூட ஜானம்மாவால் தெளிவாக யோசிக்க முடிகிறது. அவர் அவளுடைய தாயுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

அழுக்குப் படிந்திருந்த அவளுடைய ஆடைகளை மாற்றி சுத்தமான ஆடைகளை அவளுக்கு அணிவித்துவிட்ட அவள் தாய் சொன்னாள்: "மகளே, இவர் கூட போ..."

தாய் அதைச் சொன்னபோது அவளுடைய தொண்டை இடறியதை அவள் உணர்ந்தாள்.

"எங்கம்மா?"

அதற்கு அவளுடைய தாய் பதில் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக அவள் தன் முகத்தை மறுபக்கம் திருப்பி வைத்துக் கொண்டு கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள்.

அவள் ஜானம்மாவின் எண்ணெய் இல்லாத தலைமுடியைக் கைகளால் கோதி சரிப்படுத்தினாள். அப்போது அவள் தலையில் சூடாக ஒரு துளி கண்ணீர் வந்து விழுந்தது.

ஜானம்மாவால் எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. கள்ளங்கபடமற்ற தன்னுடைய பெரிய விழிகளால் அவள் ஒரு வித பரபரப்புடன் தன் தாயைப் பார்த்தாள். அவளுடைய தாயின் சிவந்து போன கன்னங்கள் வழியாகக் கண்ணீர் அருவியென வழிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்து ஜானம்மாவின் கண்களும் ஈரமாயின& காரணமெதுவுமில்லாமலே.

"மகளே, நீ புறப்படு. இவரோட வீட்டுக்கு... உனக்கு என்ன வேணுமோ, அதை இவர் தருவாரு..."

அப்போதுதான் அவளுடைய மனமே தாய் அழுததற்கான காரணத்தைக் கண்டுபிடித்தது. குருக்கள் தன்னுடைய வீட்டிற்கு அவளுக்குச் சாப்பாடு கொடுக்க அழைத்துச் செல்கிறார். அது நல்ல விஷயம்தானே! ஆனால், அதற்காக அவளின் தாய் ஏன் வருத்தப்பட்டு அழ வேண்டும்?

அவள் புறப்பட்டாள். படியைத் தாண்டும்போது அவள் தன் தாய் அழும் சத்தத்தைக் கேட்டாள். அவள் மனம் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தது.

அவள் நினைத்ததைப்போல குருக்கள் அவளைத் தன்னுடைய வீட்டிற்குக் கொண்டு செல்லவில்லை. அதற்குமாறாக தலசேரி நகரத்தின்¢ ஒரு மூலையில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு சிறு சர்க்கஸ் கம்பெனிக்கு அவர் அவளை அழைத்துச் சென்றார்.

சிறிதும் அறிமுகமில்லாத முகங்கள்! பழக்கமில்லாத இடங்கள்! 'அம்மா' என்று உரத்த குரலில் அழ வேண்டும் போல் இருந்தது அவளுக்கு. பதினாறு வருடங்களுக்கு முன்பு நடந்தது அது. அதற்குப் பிறகு என்னவெல்லாம் நடந்திருக்கிறது!

சர்க்கஸ் விளையாட்டுக்களைப் படித்த காலத்தை நினைத்துப் பார்க்கும் போது இப்போது கூட ஜானம்மாவிற்கு தாங்கமுடியாத அழுகை வரும்.

களைத்துப் போய் கீழே விழுந்து விடுவாள் என்று மனதில்பட்டால் கூட கேளு ஆசான் அவளை விடமாட்டார். சிறிது தவறு செய்துவிட்டால் கூட போதும்& கிழவனின் கண்கள் செம்பருத்திப் பூவைப் போல சிவந்துவிடும். விரல் அளவிற்கு உள்ள பிரம்பு அவளின் மென்மையான உடம்பைப் பதம் பார்க்கும். திரும்பத் திரும்ப அவள் உடல்மீது அடிகள் விழும்.

பகல் முழுவதும் சர்க்கஸ் வேலைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். இரவில் கற்றவற்றில் சிலவற்றைச் செய்து காட்ட வேண்டும். அப்படிச் செய்யும் போது ஏதாவது தவறு நடந்தால், ஒப்பனை அறைக்கு மீண்டும் திரும்பி வரும்போது ஆசானின் பிரம்பு ஆர்வத்துடன் காத்திருக்கும்.

அன்பு ததும்பும் கொஞ்சல்களை அனுபவித்து வாழ வேண்டிய காலத்தில் அவள் ஓய்வு என்றால் என்னவென்றே தெரியாமல் கடுமையாக உழைத்தாள்.

ஆடைகளும், உணவும் கிடைக்கவே செய்கின்றன. எனினும் ஜானம்மாவிற்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி என்ற ஒன்று இல்லை.

எல்லாவற்றையும் அவள் அமைதியாகச் சகித்துக் கொண்டாள்.

இரவில் விளையாட்டு முடிந்து படுத்தால் அவளுக்குத் தூக்கமே வராது. மிருகங்கள் இருக்கும் கூண்டுகளிலிருந்து இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு உறுமல் சத்தம் கேட்கும்போது அவள் பயந்து நடுங்குவாள். அவள் மனம் அப்போது தன்னுடைய அன்பான அன்னையை நினைக்க ஆரம்பித்துவிடும்.

தன் தாயைத் தேடி ஓடி அவளின் மடியில் தலைசாய்த்துப் படுத்து சிறிது நேரமாவது தேம்பி அழ வேண்டும் போல் ஜானம்மாவிற்கு இருக்கும்.

ஆனால், அவள் பிறந்து வளர்ந்த ஊரைவிட்டு எவ்வளவோ தூரத்திலல்லவா இருந்தாள்!

ஜானம்மா வளர்ந்தாள். அவளும் சர்க்கஸ் விளையாட்டுக்காரியாக ஆனாள். அவளுடைய இடத்திற்குப் புதிய இளம்பெண்கள் வந்து கொண்டிருந்தார்கள்.


அதற்குள் கம்பெனி மிகவும் வளர்ச்சி அடைந்திருந்தது. மலபார் சர்க்கஸ் புகழ்பெற்ற ஒன்றாக மாறியது. ஆட்கள், மிருகங்கள் ஆகியோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தது. பழைய மேனேஜர் விலகிச் சென்றார். புதிய ஆள் கம்பெனியை ஏற்று நடத்தினார். இது நடந்தது ஐந்து வருடங்களுக்கு முன்பு.

இப்போது கம்பெனியில் நான்கு சிங்கங்கள் இருக்கின்றன. ஐந்து நரிகள் இருக்கின்றன. குதிரைகளின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது. மூன்று யானைகள் இருக்கின்றன. இவை இல்லாமல் பெண்களும், ஆண்களுமாய் கிட்டத்தட்ட நூறு பேர்.

இந்த மாதிரியான விஷயங்களெல்லாம் மேனேஜர் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பார். எண்ணிக்கை விஷயமெல்லாம் அவருக்கு நன்றாகவே தெரியும். தான் இதைத் தெரிந்து வைத்திருப்பதில் அவருக்குப் பெருமையும் கூட. இவ்வளவு மிருகங்களும் மனிதர்களும் அவருக்குச் சொந்தம்!

புதிய மேனேஜர் வந்தபிறகு கம்பெனியில் திறமைசாலிகள் பலரும் வந்து சேர்ந்தார்கள். மோட்டார் சைக்கிளில் தாவும் விளையாட்டும், யானையை மார்பின் மீது ஏறி நிற்கவைக்கும் விளையாட்டும், உயிரோடிருக்கும் மீனை விழுங்கிப் பிறகு அதை வெளியே வரவைக்கும் நிகழ்ச்சியும் முன்பு இல்லை.

வயது ஏற ஏற ஜானம்மா சர்க்கஸ் கம்பெனி வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தாள். வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையே இருக்கும் ஒரு சிறு நூல் பாலத்தில் நின்று கொண்டு ஆபத்து விளைவிக்கக்கூடிய வித்தைகள் காட்டிப் பணம் சம்பாதிக்கும் கூட்டம்! அவர்களைப் பற்றி மனதில் நினைத்தபோது ஒரு தெளிவான முடிவுக்கே ஜானம்மாவால் வரமுடியவில்லை.

சிவப்பு நிற ஆடைகளணிந்து தலையில் சிவப்பு நிற ஹெல்மட் மாட்டி அமைதியாக மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்து கொண்டு மரணத்தின் இடைவெளியைத் தாவி கடக்கும் அந்த மனிதன் எப்படிப்பட்ட ஒரு பிறவியாக இருக்க முடியும் என்பதை ஜானம்மா நினைத்துப் பார்த்தாள். அவன் தன்னுடைய வாழ்க்கைக் கதையை ஒருமுறை அவளிடம் கூறியிருக்கிறான். அவனுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. வாழ்க்கையைப் பணயம் வைத்து கிடைக்கும் பணத்தைக் கொண்டுதான் அவன் தன் குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்கிறான்.

"உங்களுக்கு பயம் தோணுறது உண்டா?"& அவர்களில் சிலர் அவனைப் பார்த்துக் கேட்டார்கள்.

"பயமா? அதெல்லாம் முன்பே போயிருச்சு. ஒரு நாள் நான் மோட்டார் சைக்கிள்ல தாவுறதுல தப்பு நிகழும். அப்போ எல்லாம் முடிவுக்கு வந்துடும்..."

இப்படி ஒவ்வொரு நாளும் இரண்டு முறைகள் அவன் மரணத்தின் நுழைவுவாயிலில் நுழைந்துவிட்டு திரும்பி வருகிறான்.

அங்குள்ள பெரும்பாலானவர்களின் நிலையும் அதுதான் என்ற விஷயம் ஜானம்மாவிற்கு நன்றாகவே தெரியும். பதக்கங்கள் ஒளிவீசிக்கொண்டிருக்கும் கறுப்பு நிற ஆடையணிந்து சிங்கக் கூட்டுக்குள் நுழையும் மனிதன் மரணத்தை முத்தமிடுகிறான். யானையின் காலடிக்குக் கீழே படுத்திருப்பதும், மீனை விழுங்குவதும் உண்மையிலேயே ஆபத்தான விஷயங்கள்தாம். இவர்களெல்லாம் மனிதர்கள் தானா? ஜானம்மா பல நேரங்களில் இதைப் பற்றி நினைத்துப் பார்த்திருக்கிறாள்.

தானும் அதே இனத்தைச் சேர்ந்தவள்தான் என்பதை அடுத்த நிமிடம் அவள் நினைத்துப் பார்ப்பாள். கம்பி வழியே சைக்கிள் ஓட்டும் போதும் ட்ரப்பீஸில் பறக்கும் போதும் அவள்கூட ஆபத்தைச் சந்தித்துக் கொண்டுதானிருக்கிறாள்.

சர்க்கஸ் வாழ்க்கையில் ஜானம்மா இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்திருக்கிறாள்.

"குழந்தை, இது சர்க்கஸ் கம்பெனி, இங்கே இருக்கிறவங்க மனிதர்கள் இல்ல. எல்லோரும் மிருகங்க.."

இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் உண்மையை ஜானம்மா புரிந்து கொண்டது சற்று வயது வந்த பிறகுதான். அங்கிருக்கும் லாயத்திலும் இரும்புக்கூண்டுக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கும் மிருகங்களுக்கும் அதற்கு வெளியே வாழும் மனிதர்களுக்குமிடையே பெரிய அளவில் வித்தியாசம் ஒன்றுமில்லை என்பதை ஜானம்மா புரிந்து கொண்டாள். மனிதர்களைக் கடுமையான விரோதத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் அந்தக் காட்டு மிருகங்கள் நாணுவின் சாட்டை காற்றில் அலையும் போது தங்களையே சுருக்கிக் கொள்ளும். சொல்கிறபடியெல்லாம் அவை நடக்க ஆரம்பிக்கும். ஆனால், ஒரு விஷயத்தில் மிருகங்கள் எவ்வளவோ பரவாயில்லை என்பதையும் புரிந்து கொண்டாள் ஜானம்மா. ஒரே ஒரு மனிதனின் கட்டளைக்கு மட்டுமே அவை கீழ்ப்படிந்து நடக்கும். கம்பெனியில் இருக்கும் மனிதர்களோ வாய் மூடிக் கொண்டு பலரையும் அனுசரித்துப் போக வேண்டியிருக்கிறது.

சம்பளம் வாங்கும் நாளன்று பெண்களுக்கிடையே பொதுவாகவே முணுமுணுப்பு உண்டாகும். ஆண்களுக்கிடையில் அப்படியெதுவும் எதிர்ப்பு இருக்காது. அவர்களுக்கு ஓரளவுக்கு நல்ல சம்பளம் கிடைக்கும். ஆனால், மேனேஜர் அதையெல்லாம் காதிலேயே போட்டுக் கொள்ளமாட்டார்.

பெண்களுக்கு சம்பளம் மிகவும் குறைவாகவே கிடைக்கும். அவர்கள் அதற்குத் தங்களின் எதிர்ப்பைக் காட்டுவார்கள். ஆனால், அவர்களின் அந்தக் குரல் அறையின் சுவர்களுக்கு வெளியில் போகாது.

ஜானம்மாவிற்குச் சம்பளம் கிடையாது. அதற்கான தேவை அவளுக்கு எப்போதும் இல்லை. உணவும் அணிவதற்கு ஆடையும் கிடைக்கின்றன. பிறகு எதற்கு சம்பளம்? யாருக்காக அவள் பணம் சம்பாதிக்க வேண்டும்? உலகத்திலேயே அவளுக்குச் சொந்தமென்று கூற ஒரே ஒரு உயிர்தான் இருந்தது. எழு வருடங்களுக்கு முன்பு அவளின் தாயும் மண்ணோடு மண்ணாய்ப் போய் சேர்ந்து விட்டாள். அப்போது ஜானம்மா தமிழ்நாட்டின் ஏதோ ஒரு நகரத்தில் இருந்தாள். ஊரிலிருந்து வந்த ஒரு ஆள்தான் அந்தச் செய்தியை அவளிடம் சொன்னான். அகன்று பரந்து கிடக்கும் பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான மனிதர்களுக்கிடையில் இப்படித்தான் அவள் ஒரு தனி உயிரானாள்.

ஒரு சூழ்நிலையில் மேனேஜரிடம் அவள் சம்பளம் கேட்டாள். லட்சுமி சொல்லித்தான் அத்தகைய முயற்சியில் அவள் இறங்கினாள்.

லட்சுமி சொன்னது உண்மைதான் என்பதை ஜானம்மா உணரவும் செய்தாள்.

"ஜானம்மா, இந்தக் காலம் இப்படியே போயிடும். கையில் காசு இல்லைனா வயசான காலத்துல நமக்கு என்ன துணை இருக்கு? என் நிலைமையைப் பார்த்தேயில்ல?"

லட்சுமியின் நிலை என்னவென்பது ஜானம்மாவிற்கு நன்றாகவே தெரியும். அவள் ஒரு வேலைக்காரியாக, பழைய புகழின் மங்கலான நினைவுகளில் கிடப்பதில் திருப்தியடைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

மேனேஜரிடம் போய் பேசுவதற்கு ஜானம்மா பயந்தாள். மேனேஜர்! அவள் இளமையாக இருந்த காலத்தில் முதல் தடவையாக ஒரு முறை அத்துமீறி நடந்தது அந்த மனிதர்தான். அந்த நினைவு ஜானம்மாவின் இதயத்தை சதாநேரமும் வேதனைப்படுத்தக்கூடிய ஒரு கொடூரமான நிகழ்ச்சியாக இப்போதும் பசுமையாக இருந்து கொண்டிருக்கிறது. அந்த மனிதரை நினைத்தால் இப்போது கூட அவளுக்குப் பயம்தான்.

இருப்பினும் அவள் மேனேஜரைத் தேடிச் சென்றாள். மற்றவர்களுக்குத் தருவதைப் போல தனக்கும் சம்பளம் தர வேண்டுமென்று அவள் சொன்னாள்.

அதைக் கேட்டு அவர் ஆச்சர்யப்பட்டு நின்றுவிட்டார். தொடர்ந்து அவர் கேட்டார்: "ஜானம்மா, உனக்குத் தேவையானதெல்லாம் இங்கே கிடைக்குதுல்ல?"


"கிடைக்குது ஆனா..."

"பிறகு எதற்கு பணம்? உனக்குச் சொந்தம்னு சொல்லிக்கிறதுக்கு யாருமே இல்லைன்னு கண்ணன் மாஸ்டர் சொன்னாரே! ஏதாவது தேவைப்படுறப்போ, கேளு..."

அவ்வளவுதான்& ஜானம்மா திரும்பி வந்துவிட்டாள்.

அவள் அழவில்லை. அவளிடம் ஒரு அளவுக்கும் மேலே சகிப்புத்தன்மை குடிகொண்டிருந்தது. இப்படிப்பட்ட கசப்பான அனுபவங்கள் முன்பும் அவளைப் பாடாய்ப் படுத்தியிருக்கின்றன. கம்பெனியை விட்டு வேறு எங்காவது போய் பிழைத்துக் கொண்டால் என்ன என்று கூட பல நாட்கள் அவள் நினைத்திருக்கிறாள். கண்ணீர் வழிய அவள் அதை எத்தனையோ நாட்கள் நினைத்து நினைத்துக் குமுறியிருக்கிறாள்.

அவளின் இளமை மலர்ந்து விரிந்த காலம். காமவெறி பிடித்த கண்கள் தன்னை உற்று நோக்கிக் கொண்டிருப்பதை அவளால் எப்போதும் உணரமுடிந்தது. உண்மையில் சொல்லப்போனால் கம்பெனியில் இருக்கும் எல்லா ஆண்கள் மீதும் அவளுக்கு வெறுப்பு என்றுதான் சொல்ல வேண்டும். அவள் லட்சுமியிடம் மெதுவான குரலில் அப்போது கூறியிருக்கிறாள். "பாரு... ஒவ்வொருத்தரும் என்னை எப்படி பார்க்கிறாங்கன்றதை..."

"நான்தான் சொன்னேனே ஜானம்மா, இங்கே மனிதர்களே இல்லைன்னு..."

லட்சுமியின் வாழ்க்கைக் கதை என்னவென்பது ஜானம்மாவிற்கு நன்றாகவே தெரியும். அவளின் உடம்பில் அழகு இருந்த காலத்தில் வெறுக்கத்தக்க அளவிற்கு அவளிடமிருந்து எல்லோரும் ஆனந்தத்தை அனுபவித்திருக்கின்றனர். கடைசியில் அவள் ஒரு சக்கை என்று ஆனபோது, அவளை அவர்கள் மூலையில் வீசி எறிந்துவிட்டார்கள்.

அனுபவங்களின் இருப்பிடமான அந்த வேலைக்காரி சொல்கிறாள்: "குழந்தை, இதெல்லாம் இங்கே ரொம்ப சர்வ சாதாரணம்."

ஜானம்மா பயப்பட்டாள். இளமை என்பதே ஒரு சாபம் என்று அவளுக்குத் தோன்றியது. மேனேஜர் முதல் கோமாளி வரை பலரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்பதை நினைத்துப் பார்த்தபோது அவள் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டாள்.

ஜானம்மா வெறுப்புடன் தன்னுடைய தோழிகளைப் பார்த்தாள். முழுதும் மூழ்கினால் குளிர் இல்லை என்ற நிலையில் அவர்கள் இருந்தார்கள். ஆண்களுடன் மிகவும் உரசிக் கொண்டு நடக்கவும், அவர்களுடன் கொஞ்சவும் குழையவும் அவர்கள் சிறிதும் தயங்கவில்லை. அவர்கள் ஒவ்வொருவரின் பார்வையும் ஜானம்மாவின் வெறுப்பிற்கு பதில் சொல்வது போல இருந்தது: "வரும்டி... உனக்கும் வரும்."

ஜானம்மாவின் இதயத்திலும் இனிய கனவுகளும் மென்மையான உணர்வுகளும் எழுந்த ஒரு காலமும் இருந்தது. அவள் சந்திரனை மனதில் நினைத்தாள். பார் விளையாட்டில் தன் திறமையைக் காட்டிக் கொண்டிருந்த வெளுத்த உடலைக் கொண்ட இளைஞன் அவன். புதிதாக கம்பெனியில் வந்து சேர்ந்திருந்தான்.

மற்றவர்களிடம் இல்லாத பலவற்றை அவனிடம் அவள் பார்த்தாள். அவனுடைய கண்கள் அவளைப் பார்க்கும் போது காமவெறியின் அடையாளங்களை அவள் காணவில்லை. வார்த்தையால் விவரிக்க முடியாத இதயத்தின் அடித்தளம் வரை ஊடுருவிச் செல்லக்கூடிய ஏதோ ஒன்று அவன் பார்வையில் இருப்பதை அவளால் உணர முடிந்தது. அவனுடைய நீளமான விரல்கள் தன்னைத் தொடும் போது அவள் உணர்ச்சிவசப்பட்டு தன்னை மறந்து நின்றிருக்கிறாள். அவன் பார் விளையாட்டில் திறமைகளைக் காட்டும் போது அவள் திரைச் சீலையின் இடைவெளி வழியாக மலர்ந்த கண்களுடன் அவனையே பார்த்துக் கொண்டிருப்பாள்.

அவர்கள் ஒருவரையொருவர் காதலித்தார்கள்.

தனிமை நிறைந்த ஒரு பயணத்துக்கு இடையே இதயமுள்ள ஒரு இளைஞனைத் தன் தோழனாகப் பெற்றதற்காக அவள் அகமகிழ்ந்து போனாள். ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

அதை நினைக்கும் போது ஜானம்மாவின் இதயத்தில் இப்போதும் வேதனை கொழுந்துவிட்டெரியும்.

டிசம்பர் மாதத்தின் ஒரு இரவில்தான் அது நடந்தது. வட இந்தியா முழுவதும் பயணம் செய்துவிட்டு கேரளத்திற்குத் திரும்பியவுடன் அவர்கள் நடத்திய முதல் காட்சி அது.

இரவு காட்சி முடிந்து தங்கியிருக்கும் இடத்திற்கு எல்லோரும் திரும்பி வந்த போது, மணி இரண்டு கழிந்திருந்தது. ஆடைகளை மாற்றி படுக்கலாம் என்று போகும் போது பயிற்சி நடத்தும் இளைஞர்களில் ஒருவன் வந்து சொன்னான்: "ஜானம்மா, உன்னைக் கூப்பிடுறாங்க!"

"யாரு?"

"மேனேஜர்."

அடுத்த நிமிடம் ஜானம்மா ஒருவித பதைபதைப்பிற்கு ஆளாகிவிட்டாள். அவள் தன் தோழிகளின் முகத்தைப் பார்த்தாள். சிரிப்பும் அர்த்தம் நிறைந்த முணுமுணுப்பும்தான் பதிலாக அவர்களிடமிருந்து வந்தது.

புதிய மேனேஜர் வந்து ஒரு மாதம் ஆகவில்லை. என்ன காரணத்தாலோ அந்த மனிதரைக் கண்டாலே அவளுக்குப் பயமாக இருந்தது. அந்த ஆளின் பார்வைதான் அதற்குக் காரணம். அவர் பார்க்கும் போது மாமிசத்தை எடுத்துக் கொண்டு போய் வேலைக்காரர்கள் நிற்கும் போது உதட்டில் வரும் சிரிப்பை மறைத்துக் கொண்டு நின்று கொண்டிருக்கும் ஒரு பெரிய நரியின் கண்கள்தான் அவளுக்கு ஞாபகத்தில் வரும்.

ஜானம்மா சொன்னாள்: "நான் போக மாட்டேன்."

அவளைவிட மூன்று வயது மூத்தவளான மாதவி சொன்னாள்:

"போகாம இருக்க முடியாது."

அதைக் கேட்டு மற்ற பெண்கள் சிரித்தார்கள்.

ஜானம்மாவை அழைக்க மீண்டும் ஆள் வந்தான்.

ஒருத்தி சொன்னாள்: "போய் என்ன விஷயம்னு கேட்டுட்டு வா ஜானம்மா."

ஜானம்மா எழுந்து நடந்தாள். மிகவும் இயந்திரத்தனமாக இருந்தது அவளின் நடை. அப்போது அவளுடைய இதயத்தில் ஒரு கடும்புயல் வீசிக்கொண்டிருந்தது. சந்திரனைப் பார்த்தால் என்ன என்று அவள் நினைத்தாள்.

மேனேஜரின் அறைக்கு முன்னால் அவள் ஒரு சிலையைப் போல நின்றிருந்தாள்.

மேனேஜர் ஒரு ஷோபாவில் படுத்திருந்தார். சிகரெட் புகையும் மதுவின் தாங்க முடியாத நாற்றமும் அறையெங்கும் பரவிவிட்டிருந்தது.

"ஜானம்மா, வா... உள்ளே வா..."& மதுவின் போதையில் வார்தைகள் வந்தன.

"ஏன் என்னை அழைச்சீங்க?"& அவள் மூச்சு வாங்கக் கேட்டாள்.

"உள்ள வா... உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்."

அவள் மெதுவாக உள்ளே வந்தாள். மேனேஜர் எழுந்து கதவை அடைத்தார்.

"நான்... நான் போறேன். கதவைத் திறங்க."

"இரு ஜானம்மா.. நீ நல்ல திறமையான பொண்ணு... உன்னை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்."

அவருடைய கைகள் பாம்புகளைப் போல அவள் உடம்பில் படர்ந்து கொண்டிருந்தது.

ஜானம்மா அவரிடமிருந்து விலகிப் போக வேண்டும் என்பதற்காக இப்படியும் அப்படியுமாகப் போராடினாள். கடைசியில் வேறு வழியே இல்லை என்று தோன்றியவுடன் அவள் உரத்த குரலில் கத்திவிட்டாள்.

அவ்வளவுதான்& அந்த மனிதர் தன் பிடியை விட்டார். அவளையே அவர் முறைத்துப் பார்த்தார். அவரின் கண்களில் நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.

"அடியே... முன்னாடி ஒரு பொண்ணு..."

"டக் டக்..."

அடைக்கப்பட்ட கதவை யாரோ தட்டினார்கள். தான் சொல்ல வந்ததை நிறுத்திய அந்த மனிதர் ஒருவகை வெறுப்புடன் ஜானம்மாவையே உற்று பார்த்தவாறு கதவைத் திறந்தார். வெளியே சந்திரன் நின்றிருந்தான்!


ஜானம்மா அணில் குட்டியைப் போல ஒரு மூலையில் தன்னைச் சுருக்கிக் கொண்டு நின்றிருந்தாள். சந்திரனைக் கண்டதும் அவள் அடக்க முடியாமல் தேம்பித் தேம்பி அழுதாள்.

"உனக்கு இங்கே என்னடா வேலை? நீ போடா..." &மேனேஜர் கத்தினார்.

"சார்... நீங்க அளவுக்கு அதிகமா போறீங்க."

"இது என்னோட விஷயம் யூ கெட் அவுட்."

வெறுப்பும் ஆவேசமும் கலந்து விறைப்பாக சந்திரன் நின்று கொண்டிருக்க, அவர் அந்தக் கதவை மீண்டும் அடைத்தார்.

அதற்கு அடுத்த நாள் சந்திரன் கம்பெனியை விட்டுப் போய்விட்டான். அவன் இப்போது எங்கு இருக்கிறானோ?

ஜானம்மா மறுநாள் பகல் முழுவதும் அழுது கொண்டேயிருந்தாள். அவளுக்கு வெறுப்பும் கோபமும் மாறி மாறி வந்தன. இரவில் சர்க்கஸ் கூடாரத்திற்கு நெருப்பு வைத்து விட்டாலென்ன என்று கூட அவள் நினைத்தாள். சிங்கங்களையும் நரிகளையும் கூண்டுகளிலிருந்து திறந்து விட்டுவிடலாமா என்று கூட அவள் சிந்தித்தாள். அழியட்டும்! எல்லோரும் அழியட்டும்! எல்லோருடனும் சேர்ந்து தானும் அழிய வேண்டும் என்று ஆசைப்பட்டாள் அவள்.

ஆனால், கண்ணீர் விட்டுக் கொண்டு அமைதியாக இருக்க மட்டுமே அவளால் முடிந்தது. அவளுக்கு ஆறுதல் சொல்ல லட்சுமி மட்டுமே இருந்தாள்.

மாலை நேரம் வந்த போது கண்களைத் துடைத்து முகம் கழுவி பவுடர் போட வேண்டிய கட்டாயத்திற்கு அவள் ஆளானாள்.

அதற்குப் பிறகு எவ்வளவோ கசப்பான அனுபவங்களை அவள் வாழ்க்கையில் சகித்துக் கொண்டிருக்கிறாள்!

தன்னுடைய பெண்மைத்தன்மையே முழுமையாக அழிந்து போய் விட்டது என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.

காட்சி முடிந்து திரும்பி வந்தால் இப்போதெல்லாம் ஜானம்மாவால் எந்தவித தொந்தரவுமின்றி நிம்மதியாக உறங்க முடியும். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அவளிடமிருந்த இளமையின் பூரிப்பு எப்போதோ முடிவுக்கு வந்துவிட்டது. வயதிற்கு மீறிய மாற்றம் அவள் உடம்பில் வந்து சேர்ந்துவிட்டது. அவளின் கண்களிலிருந்த ஒளியும் கன்னங்களில் இருந்த சிவப்பும் இப்போது இல்லை. அவளை அழைக்க யாரும் வருவதில்லை. இளமை மொட்டுக்கள் பல புதிதாக கம்பெனியில் மலர்ந்திருக்கின்றன.

தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்துப் பார்க்காமலிருக்க ஜானம்மா எவ்வளவோ முயற்சிப்பாள். தனக்கு முன்னால் ஒரு பரந்த பாலைவனம் கிடப்பதைப் போல் அவள் உணர்வாள்.

ஒரு பெண்ணுக்குரிய எல்லா ஆசைகளும் அவளுக்கும் இருந்திருக்கின்றன. காதல் உணர்வு பொங்கிக் கொண்டிருக்கும் ஒரு ஆண் இதயத்தின் துடிப்பைக் கேட்க அவளின் இதயம் ஒரு காலத்தில் ஏங்கியிருக்கிறது. சுகமான குடும்ப வாழ்க்கை வாழக்கூடிய ஒரு மனைவியின் வாழ்க்கையை அவளும் கனவு கண்டிருக்கிறாள். ஒரு சிறு குழந்தையின் சிவந்த உதடுகள் 'அம்மா' என்று அழைக்கும் போது பூரிப்படைந்து நிற்க அவளுக்குள் ஒளிந்திருந்த தாய்மை தவித்திருக்கிறது.

அவளுடைய கனவுகள் ஒவ்வொன்றும் கருகி சாம்பலாகிவிட்டன.

ஜானம்மா சர்க்கஸ் பார்க்க வரும் பெண்களை சில நேரங்களில் பார்ப்பாள். தன்னையே அறியாமல் அவள் அவர்களைப் பற்றிய சிந்தனையில் ஆழ்வாள். அவர்கள் ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் மாறுபட்டவர்களாக இருப்பார்கள்? காதலிகள், மனைவிமார்கள், இல்லத்தரசிகள், திருமணமாகாதவர்கள்& இப்படி பலரும் அங்கு இருப்பார்கள். எல்லோருக்கும் வாழ்க்கையில் சில இலட்சியங்கள் இருக்கவே செய்கின்றன.

ஒரு வளர்ப்பு மிருகமாக இப்படி தான் எத்தனை நாட்கள் வாழ்வது என்பதை ஜானம்மா நினைத்துப் பார்த்தாள்.

அவள் மெதுவாகத் திரும்பிப் படுத்தாள். தூக்கம் வரவில்லை. பொழுது புலர்ந்திருக்குமோ? ஆகாயத்தின் நீலம் மறைந்து வெள்ளை நிறம் இலேசாகத் தெரிந்தது. தூரத்தில் உயரமாக நின்றிருந்த தேவாலயம் இங்கிருந்து பார்க்கும் போது தெளிவில்லாமல் தெரிந்தது. அதற்கு மேல் நின்று கொண்டிருந்த ஒரு ஒற்றை நட்சத்திரம் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது& ஒரு வெளிறிப் போன சிரிப்பு அவள் கண்களை மூடிக் கொண்டாள்.

மூன்று வாரங்களுக்குப் பிறகு ஜானம்மாவின் கட்டை அவிழ்த்தார்கள்.

கையில் உண்டாகியிருந்த குறைபாடு சரியாகவில்லை. கையை அவளால் சுதந்திரமாகத் தொங்க விடமுடியவில்லை.

டாக்டர் சொன்னார்: "பயப்பட வேண்டாம். இதைச் சரி பண்ணிட முடியும். ஆனா, மெதுவாகத்தான் முடியும். ஆனா..."

அவள் ஆர்வத்துடன் டாக்டரின் முகத்தையே பார்த்தாள். அவர் ஏதோ தமாஷ் ஒன்றைச் சொல்வது போல கூறினார்: "இனிமேல் சர்க்கஸ் விளையாட்டெல்லாம் விளையாட முடியாது."

அப்போது மேனேஜர் பக்கத்தில்தான் இருந்தார். அவர் தன்னுடைய சந்தேகத்தைத் தீர்ப்பதற்காகக் கேட்டார்: "இனிமேல் இவ விளையாட முடியாதா டாக்டர்?"

"முடியாது. இந்தத் தொழிலை இவ நிறுத்தித்தான் ஆகணும்..."

மேனேஜர் தன் உதட்டைக் கடித்து, நெற்றியைத் தடவியவாறு ஒரு நிமிடம் என்னவோ சிந்தித்தார்.

ஜானம்மாவின் கை முறிந்தது கம்பெனிக்கு உண்மையிலேயே இழப்புதான். அவள் ஒரு நல்ல சர்க்கஸ் விளையாட்டுக்காரியாக இருந்தாள். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில், அவள் இப்போது கம்பெனிக்கு ஒரு பாரமாக மாறியிருக்கிறாள் என்பதையும் நினைத்துப் பார்த்தார்.

அந்த ஊரில் அன்றோடு நிகழ்ச்சி முடிகிறது. அடுத்த நாள் காலையில் அவர்கள் அந்த ஊரை விட்டுக் கிளம்புகிறார்கள். சர்க்கஸ் கூடாரம் பிரிக்கப்பட்டு விட்டது. இரவோடு இரவாகப் பொருட்களைக் கொண்டு போவதற்கான ஆயத்தங்கள் நடந்தன.

அடுத்த நிகழ்ச்சியை அந்த ஊரிலிருந்து அறுபது மைல் தூரத்திலிருக்கும் ஒரு நகரத்தில் நடத்த திட்டமிட்டிருந்தார்கள்.

வனஜாதான் அந்தச் செய்தியை எல்லோரிடமும் சொன்னாள். ஜானம்மாவை என்ன செய்வது என்பதைப் பற்றி மேனேஜர் ஆலோசித்துக் கொண்டிருக்கிறாராம். முதல்நாள் இரவு அவள் மேனேஜரின் அறையில் இருந்த போது அவளுக்குக் கிடைத்த தகவல் அது.

அவர்கள் மேனேஜர் என்ன முடிவுக்கு வருவார் என்பதைப் பற்றி பல வகைகளில் சிந்தித்தார்கள். ஜானம்மா அவர்களின் பேச்சில் கலந்து கொள்ளவில்லை. ஜன்னலில் இரும்புக் கம்பியைப் பிடித்துக் கொண்டு தூரத்தில் எங்கோ பார்த்தவாறு அவள் நின்றிருந்தாள். அவளுடைய இதயம் மிகவும் கனத்துப் போயிருந்ததைப் போல் இருந்தது.

ஜானம்மாவை அழைப்பதற்காக வேலைக்காரன் வந்தான். அவள் மேனேஜரின் அறைக்குச் சென்றாள். அந்த ஆளைச் சந்திக்க இப்போது அவளுக்குப் பயமில்லை. இழப்பதற்குத் தன்னிடம் எதுவுமில்லை என்ற விஷயம் ஜானம்மாவிற்கு நன்றாகவே தெரியும்.

மேனேஜர் கட்டிலில் சுவர் மீது சாய்ந்தவாறு உட்கார்ந்திருந்தார். அவர் மரியாதை நிமித்தமாக அவளைப் பார்த்து சிரித்தார்.

"ஜானம்மா, கை எப்படி இருக்கு?"

"இப்போ பரவாயில்ல..."


பைஜாமாவின் மேல் விழுந்த சிகரெட் சாம்பலைத் தட்டிவிட்ட அவர் கேட்டார்: "பிறகு... டாக்டர் சொன்னது என்னன்னு கேட்டீல்ல?"

அவள் எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் அவரின் முகத்தைப் பார்த்தாள்.

"உன்னால இனிமேல் வேலை செய்ய முடியு£துன்னு அவர் சொல்லிட்டாரு. அவர் சொன்னதை நீயும் கேட்டேல்ல?"

"ம்..."

அவள் குரல் மிகவும் கனமாக இருந்தது.

"கம்பெனி இப்போ ரொம்பவும் சிரமத்துல இருக்கு. மிருகங்கள் ரொம்பவும் மோசமான நிலைமையில இருக்கு. சிங்கங்கள்ல ஒண்ணு சாகுற நிலைமையில இருக்கு. பணப்பிரச்சினையைப் பற்றி சொல்லவே வேண்டாம். எல்லாத்தையும் கூட்டிக்கழிச்சிப் பாக்குறப்போ, சில பேரை கம்பெனியை விட்டு விலக்கறதா இருக்கோம்."

அவர் தொடர்ந்து என்னென்னவோ சொன்னார். அவள் எதையும் கேட்கவில்லை.

"கம்பெனியில நீ இருக்குறதைப் பத்தி ஆட்சேபனை இல்ல. ஆனா, முன்னாடி இருந்ததைப் போல..."

அதன் அர்த்தம் என்னவென்பது ஜானம்மாவிற்குத் தெரியும். லட்சுமியைப் போல அங்கிருந்த மற்றவர்களுக்கு எடுபிடி வேலைகள் செய்து என்ன கிடைக்கிறதோ அதில் திருப்தியடைந்து வாழ வேண்டும்.

"என்ன சொல்ற ஜானம்மா?"

"நான் போறேன்."

அது தன்னுடைய குரல்தானா என்று அவளுக்கே சந்தேகமாக இருந்தது-.

அப்போது அவளுக்குள்ளிருந்து இன்னொரு குரல் எழுந்து மேலே வருவதைப் போல் இருந்தது. 'எங்கே?'

ஜானம்மா அதிர்ச்சியடைந்து நின்றாள்.

சர்க்கஸ் கூடாரத்திற்கு வெளியில் இருக்கும் பரந்துகிடக்கும் பிரபஞ்சம் பலமில்லாத கையுடன் வரும் சர்க்கஸ்காரியை வரவேற்கத் தயாராக இருக்கிறதா? அவள் ஒரு நிமிடம் சிந்தித்தாள்.

மேனேஜர் வெற்றி பெற்ற எண்ணத்துடன் சிரித்தார். வாய்திறந்து சொல்லாமலே விஷயம் முடிந்துவிட்டது என்ற திருப்தி அவருக்கு. அவர் மேஜையைத் திறந்து பர்ஸிலிருந்து ஐந்து பத்து ரூபாய் நோட்டுக்களை எண்ணி எடுத்தார்.

மேனேஜர் கருணை மனம் கொண்டு நீட்டிய அந்த பேப்பர் துண்டுகளையே வெறித்துப் பார்த்தவாறு ஜானம்மா ஒரு அசையாத சிற்பத்தைப் போல நின்றிருந்தாள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.