Logo

இரட்டிப்பு பணம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by sura
Hits: 6621
Irattippu Panam

ரு மகிழ்ச்சியான செய்தி. நான் சித்தராகி விட்டேன். குரு. பஷீர்... புதன்கிழமை சித்தரோ ஞாயிற்றுக்கிழமை சித்தரோ அல்ல... வாழ்க்கையில் ஏழு நாட்களும், வருடத்தில் முன்னூற்று அறுபத்தைந்து நாட்களும் இந்தச் சித்தி எனக்கு இருக்கிறது. உலகத்திற்கு எவ்வளவோ நன்மைகளை இதன் மூலம் என்னால் செய்ய முடியும்.

இனிமேல் உலகத்தில் வறுமையின் பிடியில் சிக்கியவர்களே இருக்க மாட்டார்கள். எல்லோருமே வசதி படைத்தவர்கள் ஆகி விடுவார்கள். இப்படிப்பட்ட ஒரு புரட்சியை செய்கிற அளவிற்கு நான் எப்படி சக்தி படைத்த மனிதனாக ஆனேன்? அதாவது - இந்த அபார சித்தி எனக்கு எப்படி கிடைத்தது? அந்தக் கதையைத்தான் இப்போது நான் உங்களுக்குக் கூறப் போகிறேன். நான் ஒரு கதை எழுத ஆரம்பித்தேன். அப்போது என் மனதில் நான் நினைத்தேன் - எதற்காக கதை எழுத வேண்டும் என்று. காரணம் - கதைக்காக தரப்படும் பணம் மிகவும் குறைவு. எல்லா பொருட்களுக்கும் கன்னா பின்னாவென்று விலை இருக்கிறது. கூலி வேலை செய்கிறவனுக்குக் கூட நல்ல கூலி கிடைக்கிறது. எழுத்து தொழிலாளிக்கு மட்டும் ஏன் இவ்வளவு குறைவாக கூலி கொடுக்கப்படுகிறது? எங்களின் பிரச்சினைகளைக் கூறுவதற்கு இங்கு யாருமே இல்லை. கொள்கை முழக்கங்களும், உண்ணா விரதப் போராட்டாங்களும் இல்லாமல் கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டு அமைதியாக எழுந்து தொழிலாளர்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எழுத்துத் தொழிலாளர்களே! சிந்தித்துப் பாருங்கள்! எல்லோரும் ஒன்று சேருங்கள்! நமக்கு வரவேண்டிய பணத்தைச் சரியாக சொல்லி வாங்குங்கள். இப்படி நான் சொல்கிறேன் என்பதற்காக ஒன்றுமே நடந்துவிடப் போவதில்லை. எழுத்துத் தொழிலாளர்கள் ஒன்று சேரப் போவதில்லை. என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள். நான் எழுதி பட்டினி கிடந்து செத்துப் போகிறேன் என்று சிலர் பிடிவாதம் கூட பிடிப்பார்கள். சம்பவங்கள் இப்படி நடந்து கொண்டிருக்கும்போது, நான் என்ன செய்ய வேண்டும்? பத்திரிகை முதலாளிகளுக்கு ஒரு சர்க்குலர் அனுப்பி வைக்கலாம் என்று நினைத்தேன். அதாவது - ஒரு சிறு கதைக்கு சம்பளமாக அரை மூட்டை அரிசி. ஆனால், ஒரு விஷயம். ஒரு படி அரிசிக்குக் கதை எழுதித் தர தயாராக இருக்கும் வறுமையில் அடிபட்டுக் கிடக்கும் எழுத்துத் தொழிலாளிகளும் இங்கு இருக்கிறார்களே ! மீன் பிடித்தல், கள்ள நோட்டு அடிப்பு, கள்ளக்கடத்தல் இப்படிப் பல தொழில்களும் இருக்கவே செய்கின்றன. இவற்றில் பெரும்பாலானவற்றிற்குக் கட்டாயம் மூலதனம் வேண்டும். அது மட்டுமல்ல. போலீஸ்காரர்கள் பிடித்து சிறைக்குள் போடுவார்கள். அப்படியானால் மீன் பிடிக்கப் போக வேண்டும். ஆனால், கடுமையான வெயிலைத் தாங்குவதற்கும், மழையில் நனைவதற்கும் தயாராக இருக்க வேண்டும். அது நமக்கு ஒத்து வராத விஷயம். மீன் நாற்றம் சரிப்பட்டும் வராது. பிறகு என்ன செய்வது? இப்படி பல விஷயங்களையும் மனதில் அசை போட்டுக் கொண்டிருந்த போதுதான் படியைக் கடந்து ஒரு ஆள் வருகிறார். அவரின் தலையில் நிறைய முடி இருந்தது. பெரிய தாடியையும் வைத்திருந்தார். வேஷ்டி கட்டியிருந்தார். வயது நாற்பது இருக்கும். வந்த மனிதர் கைகளால் தொழுது விட்டு கேட்டார்: "மாலிக்கான் எல்லாம் ஒழுங்காகக் கிடைக்கிறதா?" "அரசியல் பென்ஷன்ற பேர்ல. ஒவ்வொரு மாசமும் கொஞ்சம் பணம் கிடைக்குது..." "அப்படின்னா, இருக்கற பணத்தையெல்லாம் எடு..." நான் என் மனைவியை அழைத்து இருக்கும் பணம் முழுவதையும் துடைத்து எடுத்துக் கொண்டு வர சொன்னான். மனைவி அறுபத்தேழு பைசாவைக் கொண்டு வந்து தந்தாள். என் பாக்கெட்டில் நாற்பது பைசா இருந்தது. ஒரு ரூபா ஏழு பைசாவை நான் முன்னால் வைத்தேன். அவர் சொன்னார்: "காசை வச்சு என்ன செய்ய முடியும்? நோட்டுகள் வேணும்." "நோட்டுகள் எதற்கு?" "நோட்டுகளை இரட்டிப்பு ஆக்கித் தர்றேன்." "நோட்டு இரட்டிப்பு... முழுப் பொய். உலகத்துல யாராலயும் நோட்டை இரட்டிப்பு ஆக்கித் தர முடியவே முடியாது." "உண்மையாகவே?" "உண்மையாகத்தான்." "எனக்கு என்ன வயசு இருக்கும்?" நான் சொன்னேன்:"உங்களுக்கு அநேகமா நாற்பது வயசு இருக்கும்." அவர் சிரித்தார். அவர் சொன்னார்: "எனக்கு மூவாயிரத்து அறுநாற்று எழுபத்திரெண்டு வயசு. பேரு ராமர் குரு. சங்கரர் குருவோட மூத்த சீடன் நான் தான்!" "சங்கரர் குரு எங்கே இருக்காரு?" அவர் சொன்னார்: "இமயமலை உச்சியில் கடந்த அய்யாயிரம் வருடங்களா ஒற்றைக் கால்ல நின்னு அவர் தவம் செஞ்சிக்கிட்டு இருக்கார். நான் அவர் கூடத்தான் இருந்தேன். மக்களுக்கு நன்மைகள் செய்யணும்ன்றதுக்காக மலையை விட்டு கீழே இறங்கி வந்தேன். உலகத்துல இருந்து வறுமையை முழுசா விரட்டி அடிக்கணும். எனக்கு. அதிகம் நேரமில்லை. உடனே நான் குரு இருக்குற இடத்துக்குப் போகணும். அவர் காலை மாற்றப் போகிறார். இப்போ தவம் இருக்கறது இடது கால்ல நின்னு. உடனே அவர் வலது காலுக்கு மாறணும். ஒரு நல்ல சீடன் எனக்குக் கிடைச்சிட்டா, நான் உடனே என்னோட குரு இருக்குற இடத்துக்குப் போயிடலாம்." நான் கேட்டேன்: "இமயமலை உச்சியில சில நாட்களுக்கு முன்னாடி ரெண்டு பேர் ஏறினாங்கன்னு சொல்றாங்களே! டென்சிங் நார்கெயும் எட்மண்ட் ஹிலாரியும்... அவங்க ராமர் குருவையும் சங்கரர் குருவையும் பார்த்ததாக..." "சொல்லவில்லை..." ராமர் குரு சிரித்தார். "அவங்க நாங்க தவம் செய்கிற இடத்துக்குக் கீழே வரை வந்தாங்க. நான் கொஞ்சம் கற்களை எடுத்து அவங்க தலையில போட்டேன். எவரெஸ்ட் எங்கே இடிஞ்சு விழுகிறதோன்னு நினைச்சு அவங்க அடுத்த நிமிடமே இறங்கி ஓடிட்டாங்க. ஹிலாரியோட புருவத்துல ஒரு கல் விழுந்து காயம் உண்டாக்கிடுச்சு. அந்த தழும்பு இப்பக்கூட அவர்கிட்ட இருக்கு. நான் எல்லா விஷயத்தையும் இன்னும் சொல்லல. கூடு விட்டுக் கூடு பாய எனக்குத் தெரியும். என்ன வடிவம் வேணும்னாலும் என்னால எடுக்க முடியும்." "உங்களுக்கு சீடர்கள் இருக்காங்களா?" "இல்லை. நல்ல பண்புகளைக் கொண்ட ஒரு சீடன் எனக்கு வேணும். உலகத்திற்கு நன்மைகள் செய்யும் பொறுப்பை அந்தச் சீடன்கிட்ட ஒப்படைச்சிட்டு, நான் என்னோட குரு இருக்குற இடத்திற்கு உடனடியா போகணும். நான் ராமர் குருவின் முதல் சீடனாக ஆவது என்று மனதிற்குள் தீர்மானித்தேன். நான் அதைச் சொல்லவில்லை. மற்றவர்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை ஒருவேளை அவராலேயே தெரிந்து கொள்ள முடியலாம். நான் சொன்னேன்:


"ஏழைகளோட பணத்தை இரட்டிப்பு செய்து தர ஒரு வழி இருக்கு. பக்கத்துலயே மூணு வங்கிகள் இருக்கு. அங்கே கோடிக்கணக்குல பணம் இருக்கு. நான் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதித் தர்றேன். சரி... நீங்க எப்படி பணத்தை இரட்டிப்பு செய்வீங்க?" "சாதாரணமா நோட்டு இரட்டிப்பு செய்றவங்க ஒரு லொடுக்காஸ் இயந்திரத்தைக் காட்டி, முதல்ல அதுல ஒரு நோட்டை வைப்பாங்க. பிறகு வேறொரு நோட்டை வாங்கி அதுக்கு மேல வைப்பாங்க. பிறகு... சில வேலைகளைக் காட்டி ரெண்டு நோட்டுகளையும் எடுத்துக் காண்பிப்பாங்க. முட்டாள்கள் உடனே கையில இருக்குற நோட்டுக் கத்தைகளை எடுத்துத் தருவாங்க. மோசடிப் பேர்வழிகள் அந்தப் பணத்துடன் புறப்படுவாங்க. போறதுக்கு முன்னாடி ஒரு நேரம் சொல்லுவாங்க. சொன்ன நாள்ல நோட்டுகளைக் கொண்டு வந்து கொடுப்பாங்க. மேலேயும் கீழேயும் சரியான நோட்டுகளை வச்சிட்டு நடுவுல வெற்றுத் தாள்களை வச்சிருப்பாங்க. அது தெரியாம, நோட்டுக் கட்டுகளோட, பணத்தைக் கொடுத்த முட்டாள் வீட்டுக்குப் போவான். வீட்டுக்குப் போன பிறதுதான் அவனுக்கே தெரியவரும் தான் ஏமாந்து போன விஷயமே." "நீங்க எப்படி?" "மந்திர, தந்திர சக்தியால நோட்டை இரட்டிப்பாக்கித் தருவேன்." "சரிதான்..." நான் வங்கிக்காரர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். "மதிப்பிற்குரிய ஐயா, அப்பிராணி ஏழைகளின் கணக்கில் உள்ள பணத்தை இந்தக் கடிதம் கொண்டு வரும் மனிதரிடம் கொடுத்தால் அவற்றை இவர் இரண்டு மடங்காக்கித் தருவார். அந்த ஏழை மக்கள் பெயரிலேயே இந்தப் பணத்தைப் போடவும் செய்வார். தேவைப்பட்டால் வங்கியில் இருக்கும் எல்லா நோட்டுகளையும் கூட இவர் இரட்டிப்பு ஆக்கித் தர தயாராகவே இருக்கிறார்." பெயரை எழுதி கையெழுத்துப் போட்டு, ராமர் குருவின் கையில் கொடுத்தேன். அவர் அதை வாங்கிக் கொண்டு புறப்படுகிற நேரத்தில் சொன்னார்: "முதல் சீடராக ஆகப் போகிறேல்ல? ஒரு ரூபா கொடு. இன்னும் தேநீர் கூட குடிக்கல..." நான் ஒரு ரூபாயை அவர் கையில் தந்தேன். அவர் புறப்பட்டார். பிறகு எனக்கு செய்தி வந்தது - அவரை போலீஸ்காரர்கள் பிடித்துக் கொண்டு போய் லாக் அப்பில் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்று. போலீஸ்காரர்களின் கொடுஞ்செயலைப் பாருங்கள். உலக நன்மைக்காக நோட்டுகளை இரட்டிப்பு ஆக்கித் தருவதாக அவர் சொல்கிறார். அதற்காக அந்த மனிதரை இவர்கள் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? போலீஸ்காரர்களுக்கு எதிராக மக்கள் சக்தியைத் திரட்ட வேண்டும்! இந்த எண்ணத்துடன் பக்கத்து வீட்டில் இரண்டு ஐந்து ரூபாய் நோட்டுகளைக் கடன் வாங்கிக் கொண்டு நான் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டேன். போலீஸ்காரர்களுக்கு எதிராக என் மனதில் ஒரு போராட்டமே நடந்து கொண்டிருந்தது. நான் பொதுமக்களில் ஒரு ஆளைத் தடுத்து நிறுத்தி விஷயத்தை சொன்னேன். அப்போது அந்த ஆள் சொன்னான்: "நல்ல காரியம்தான். சொல்லப் போனா இதுக்கு போலீஸ்காரர்களுக்கு மெடல் தரணும். கொஞ்ச நாட்களாகவே பல இடங்கள்லயும் இந்த நோட்டு இரட்டிப்பு மோசடி நடந்துக்கிட்டுதான் இருக்கு. எவ்வளவோ ஆளுங்க இதுல பணத்தை இழந்திருக்காங்க. போலீஸ்காரர்கள் அந்த ஆளைக் கைது பண்ணினது அருமையான ஒரு விஷயம் அந்த மனிதனைக் தூக்குல போட்டு கொல்லணும்." பொது மக்களில் ஒரு மனிதனின் கருத்து இப்படி இருந்தால், அதற்குப் பிறகு நான் வேறு யாரிடமும் இந்த விஷயத்தைக் கூறவேயில்லை. நேராக நான் காவல் நிலையத்திற்குச் சென்றென். என்னுடைய பழைய நண்பரும் போலீஸ் இன்ஸ்பெக்டருமாக இருந்தவர் என்னைப் பார்த்ததும் பலமாகப் பாராட்டினார். என்னால்தான் ஒரு கள்ள நோட்டுப் பேர்வழி பிடிபட்டான் என்றார் அவர். அதனால் அவருக்கு ஏகப்பட்ட சந்தோஷம்! நான் போலீஸ் இன்ஸ்பெக்டரின் அனுமதியுடன் லாக் அப் முன்னால் சென்று ராமர் குருவைப் பார்த்து வணங்கினேன். அவர் சொன்னார்: "வங்கிக்காரங்க போலீஸ்காரர்களுக்குத் தொலைபேசி மூலம் விஷயத்தை சொல்லிட்டாங்க. போலீஸ்காரர்கள் அடுத்த நிமிடமே வந்து என்னைக் கைது பண்ணிட்டாங்க. நான் இன்னும் தேநீர் குடிக்கல. எனக்கு தேநீர் வேணும்..." நான் மூன்று தேநீர் வாங்கி வரச் செய்தேன். ஒன்றை இன்ஸ்பெக்டர் கையில் தந்தேன். ஒன்றை ராமர் குருவின் கையில் கொடுத்தேன். மற்றொன்றை நான் குடித்தேன். ராமர் குரு ரகசியம் பேசுகிற குரலில் சொன்னார்: "நேரம் அதிகம் இல்லை. நான் புறப்படுறேன். உடனடியாக நீ சீடனா ஆயிடு. நோட்டுகளை இரட்டிப்பு செய்து கொடுத்து மக்களுக்கு நன்மை செய்யணும். மந்திரம் இதுதான்." அவர் என் வலது காதில் மந்திரத்தைச் சொன்னார். நான் அதை மனப்பாடம் செய்து கொண்டேன். அவர் சொன்னார்: "பஷீரர் குரு, நீ சீடர்கள் யாரையும் வச்சுக்கக் கூடாது. மந்திரத்தை எந்தக் காலத்திலும் மறக்காம ரகசியமாவச்சுக்க. உனக்குச் சொன்ன மந்திரத்தை வச்சு ஆயிரம் ரூபா வரை இரட்டிப்பாக்கலாம். அந்த மந்திரத்தோட சக்தி அவ்வளவுதான். ஒரே நேரத்துல ஒரு இலட்சம் ரூபாயை இரட்டிப்பாக்க முடியாது. ஆயிரம் ஆயிரமாத்தான் இரட்டிப்பு ஆக்க முடியும்..." சுருக்கமாகச் சொன்னால், எனக்கு ஆயிரம் ரூபாய் வரை இரட்டிப்பு ஆக்கிக் கொடுக்க சக்தி இருக்கிறது. நான் போய் இன்ஸ்பெக்டரிடம் ஒரு நோட்டு எடுத்துக் கொண்டு வரும்படி சொன்னேன். அவர் ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்துக் கொண்டு வந்தார். அதை வாங்கி, திரும்பி நின்று மந்திரத்தைச் சொல்லி இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை அவர் கையில் தந்தேன். அவர் ஆச்சரியத்தின் எல்லைக்கே போய்விட்டார். நான் சொன்னேன்: "நான் ஒரு சித்தர். இன்னைக்கு இருந்து நான் நோட்டுகளை இரட்டிப்பு ஆக்கித் தருவேன். ராமர்குருதான் என்னோட குரு. நீங்க என் குருவை விடுதலை பண்ணனும்..." போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் குருவை விடுதலை செய்வதற்காக லாக் அப்பை நெருங்கிய போது லாக் அப் காலியாகக் கிடந்த்து. நோ ராமர்குரு! ஒரு வண்டு லாக் அப்பின் இரும்புக் கம்பி மீது உட்கார்ந்திருந்தது. அது ராமர் குருவாக இருக்குமோ? நான் இன்ஸ்பெக்டரிடம் சொன்னேன்: "நீங்க ஒரு சித்தரை லாக் அப்ல அடைச்சிட்டீங்க. பரவாயில்ல. அவர் போயிட்டாரு. உலகத்துக்கு நன்மைகள் செய்ய நான் இருக்கேன். ராமர்குருவோட முதல் சீடன் - பஷீரர் குரு. நான் போறேன். வணக்கம்."


நான் கிளம்பினேன். ஒரு மரத்திற்குக் கீழே போய் உட்கார்ந்தேன். கூடு விட்டு கூடு பாயும் மகத்தான வித்தையை நானும் கற்றிருக்கலாம். இப்போது எனக்கு அது தெரியாது. ஒரு விஷயம். சீக்கிரம் நான் பணக்காரனாகலாம். அது என்னால் முடியும். நான் ஒரு ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து மந்திரத்தைச் சொல்ல ஆரம்பித்தேன். ஆச்சிரியம்! அந்த நோட்டு எரிந்து சாம்பலானது! நான் பதைபதைத்துப் போனேன். அப்போது ஒரு சிரிப்பு சத்தம் கேட்டது. ஒரு வண்டு என் முன்னால் வந்து உட்கார்ந்தது. வண்டு சொன்னது! "சீக்கிரம் நீ பணக்காரனாக முடியாது. சொந்த ரூபாயை இரட்டிப்பாக்கி பணக்காரனாகலாம்னு நினைச்சா... இப்போ புரியுதா...? அது நெருப்புல எரிஞ்சு சாம்பலாயிடும். மற்றவர்களுக்கு நன்மை செய்யணும். மற்றவர்களோட ரூபாய் நோட்டுகளை இரட்டிப்பாக்கணும். பத்துல ஒண்ணு நீ எடுத்துக்கலாம். ஒரு அப்பிராணி ஏழையோட பத்து ரூபா நோட்டை இரட்டிப்பு ஆக்கினா, ரூபாய் சொந்தக்காரனுக்கு பத்தொன்பது ரூபா கொடுத்தா போதும். கூடு விட்டு கூடு பாயுற மந்திரந்தை நான் போயிட்டு வந்த பிறகு சொல்லித் தர்றேன். அதுவரை உலகத்திற்கு நீ நன்மை செய்யணும். சுபம்!" வண்டு பறந்து போனது. அது சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து சொன்னது: "பாவம் செய்தவர்களின் நோட்டு எரிந்து சாம்பலாகும். சம்பவங்களையெல்லாம் கோர்த்து ஒரு கதை போல எழுதி உலக நன்மைக்காக விளம்பரப்படுத்து. சங்கரர் குருவோட சன்னிதிக்கு நான் புறப்படுறேன். மீண்டும் சுபம்!" நான் நீண்ட நேரம் தனியாகவே உட்கார்ந்திருந்தேன். பிறகு வீட்டிற்குப் புறப்பட்டேன். இப்படித்தான் நான் சித்தராக ஆனேன். அதனால் நீங்கள் ரூபாய் நோட்டுகளை அனுப்பலாம். ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக அனுப்ப வேண்டாம். ஐந்து, பத்து, நூறு, ஆயிரம் இப்படி அனுப்பலாம். ஒரு வாரத்திற்குள் இரட்டிப்பு நோட்டு உங்களுக்குக் கிடைக்கும். ஏழை முஸ்லீம் பெண்கள் ஐந்து ரூபாய் நோட்டு அனுப்பி வைத்தால், இலவசமாக இரட்டிப்பு செய்து பணம் தரப்படும். இப்படிக்கு, வைக்கம் முஹம்மது பஷீரர் குரு. பின் குறிப்பு: ஒரு இன பற்று இங்கு எப்படியோ நுழைந்துவிட்டது. ஆனால் இன பற்று இருப்பது நல்லது அல்ல. ஆதலால் ஏழைகளாக இருக்கும் எல்லா ஜாதியை சேர்ந்த பெண்களுக்கும் இலவசமாக ஐந்து ரூபாய் நோட்டு இரட்டிப்பு செய்து தரப்படும். இது ஏழைகளுக்கு மட்டுமே. மற்ற்வர்களிடம் பத்தில் ஒரு சதவிகிதம் கட்டணமாக வசூலிக்கப்படும். அவரவர்கள் நிலைக்கேற்ப ரூபாய் நோட்டுகளை அனுப்பி வைக்கவும். ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக அனுப்ப வேண்டாம். பணத்தை அனுப்பி வைத்து விட்டு காத்திருக்கவும். ஒரு வாரம் கழித்தும் இரட்டிப்பு பணம் உங்களுக்குக் கிடைக்கவில்லையென்றால்... நீங்கள் பாவாம் செய்தவர்கள் என்று அர்த்தம். அதனால் உங்களின் ரூபாய் நோட்டு எரிந்து விட்டது என்று எண்ணிக் கொள்ளவும். ஒரு அப்பிராணி ஏழை முஸ்லீம் பெண் ஐந்து ரூபாய் நோட்டை அனுப்பி வைத்து விட்டு, ஒரு வாரம் கழிந்த பிறகு பத்து ரூபாயாக அது திரும்பி வரவவில்லையென்றால் பாவம் செய்ததன் காரணமாக அந்த நோட்டு எரிந்து சாம்பலாகிவிட்டது என்று எண்ணிக் கொள்ள வேண்டும். பாவத்தில் இருந்து முதலில் விடுதலை ஆக பார்க்க வேண்டும். குனிந்து தெளபா செய்து தொழுது நல்லவளாக முயற்சிக்க வேண்டும். அப்படியானால் ரூபாய் நோட்டு அனுப்பி வைப்பதில் இரண்டு நன்மைகள் இருக்கின்றன. நோட்டு இரட்டிப்பாக்கி தொகை அதிகமாகக் கிடைக்கிறது. நாம் பாவம் செய்திருக்கிறோமா என்பதையும் தெரிந்து கொள்ளலாம். பிறகு... இன்னொரு விஷயம். எல்லோருமே பாவம் செய்தவர்கள் இல்லை. ஆதலால், அதிர்ஷ்டத்தை எதிர்பாருங்கள். பாவம் செய்தவர்களின் ரூபாய் நோட்டு எரியும். பாவம் செய்யாதவர்களுக்கு இரட்டிப்பு பணம் கிடைக்கும். அதனால் ஒவ்வொருவரும் நல்ல மனதுடன் பணத்தை அனுப்பி வைக்கவும். ஏழை பெண்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் - யாராக இருந்தாலும் ஐந்து ரூபாய் நோட்டுக்களை அனுப்பி வையுங்கள்... நான் தான் சொன்னேனே, இலவசமாக இரட்டிப்பு பணத்தை அனுப்பி வைக்கிறேன். உலகம் நன்றாகட்டும். சுபம். இப்படிக்கு, இமயமலையின் உச்சியில் அய்யாயிரம் வருடங்களாக ஒற்றைக் காலில் தவம் இருக்கும் சங்கரர் குருவின் மூத்த சீடர். கூடு விட்டு கூடு பாயும் சித்தர் ராமர் குருவின் முதல் சீடன், பஷீரர் குரு. மங்களம். சுபம்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.