Logo

கன்யாகுமரி

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 7195
kanyakumari

"செரியான் தோமஸ், நீ வத்சலா ஜானை மனைவியா ஏத்துக்கிறியா?" என்று ஃபாதர் கேட்டபோது, செரியான் சிந்தனையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தான். தேன் நிலவிற்கு எங்கே போவது? கன்யாகுமரி? தேக்கடி?

"கன்யாகுமரி"- செரியான் சொன்னான்.

ஃபாதர் செரியானை உற்றுப் பார்த்தவாறு தன் குரலை உயர்த்தி மீண்டும் தான் கேட்ட கேள்வியையே இரண்டாம் முறையாகக் கேட்டார்.

சற்று பின்னால் நின்றிருந்த மைத்துனன் பேபிச்சன் சுண்டு விரலால் கோட்டை இலேசாக நோண்டியவாறு செரியானை அழைத்தான். செரியானின் புது மனைவி கடைக்கண்ணால் அவனைப் பார்க்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

செரியான் அதிர்ந்து போய் தன்னைச் சுற்றிலும் பார்த்தவாறு சொன்னான்:

"ஏத்துக்குறேன்!"

அவன் மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தான். கன்யாகுமரியில் கடல் இருக்கிறது. விவேகானந்தர் பாறை இருக்கிறது. கிழக்கே உதிக்கும் சூரியனையும் மேற்கில் சூரியன் மறைவதையும் பார்க்கலாம். அங்கே இருக்கும் கேரளா விருந்தினர் மாளிகையில் தங்கிக் கொள்ளலாம் என்று பேபிச்சன் சொன்னான். அங்கிருக்கும் கேன்டீனில் நல்ல காப்பியும், இட்லியும் மசால் தோசையும் சாப்பாடும் கிடைக்கும்.

திருமணம் முடிந்தது.

திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் புறப்பட்டுப் போன பிறகு, செரியான், சித்தப்பா மகன் ஜோஸை ஒரு மூலைக்கு அழைத்துச் சென்று சொன்னான்:

"ஹனிமூனை கன்யாகுமரியில் வச்சுக்குவோம்!"

"அப்படியே வச்சுக்குவோம். வேண்டாம்னு யாராவது சொன்னாங்களா என்ன?"-ஜோஸ் கேட்டான்.

"இல்ல..."- செரியான் சொன்னான்: "நான் மூணாறு, தேக்கடி எல்லாத்தையும் யோசிச்சுப் பார்த்தேன். ஆனா, கன்யாகுமரிதான் சரியா இருக்கும்!"

"அப்படின்னா சரி..."- ஜோஸ் சொன்னான்: "ஆனா, ஒரு பொண்ணை சந்தோஷப்படுத்தணும்னா, அதுக்காக நீ கன்யாகுமரி வரை போய் தேவையில்லாம காசைச் செலவழிக்கணுமா என்ன? நம்ம வீடே போதாதா?"

ஜோஸ், தான் சொன்னதற்கு செரியானின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

"அது போதும்... இல்ல?"-செரியான் கேட்டான்.

"நிச்சயமா"-ஜோஸ் சொன்னான்.

"பிறகு எதுக்கு எல்லாரும் தேன்நிலவு அது இதுன்னு போறாங்க?"-செரியான் கேட்டான்.

"டேய் முட்டாள்..." -ஜோஸ் சொன்னான்: "ஆரம்பத்துல கொஞ்ச நாட்களுக்கு கணவனுக்கும் மனைவிக்கும் மத்த தொழிலைப் பற்றி மட்டும்தான் நினைப்பு இருக்கும். அந்த விஷயத்துல தேவையில்லாம யாரோட தொந்தரவும் இருக்கக் கூடாதுன்றதுக்காகத்தான் தேன்நிலவுக்குப் போறது. இதே விஷயத்தை தைரியம் இருந்தா, வீட்லயே வச்சிக்கலாம்!"

"எந்தத் தொழில்?"-செரியான் கேட்டான்.

"டேய்... மத்த தொழில்..."-ஜோஸ் கண்களை இலேசாகச் சுருக்கியவாறு சொன்னான்.

"மத்த தொழில்னா?"-செரியான் கேட்டான்.

"போடா பொணமே"-ஜோஸ் சொன்னான்: "நீ போய் கார்ல ஏறு. இல்லாட்டி உன் பொண்டாட்டியை வேற யாராவது தள்ளிட்டு போயிடப் போறங்க!"

காரில் ஏறுவதற்கு முன்பு செரியான், ஜோஸை மீண்டும் தனியாக அழைத்துக் கொண்டு போய் இப்படிக் கேட்டான்:

"அப்போ தேன் நிலவுல நாங்க ரெண்டு பேர் மட்டும் தனியா இருப்போம், இல்ல...?"

ஜோஸ் சொன்னான்: "இல்ல... முதலமைச்சர், சபாநாயகர், ஐ.ஜி., பள்ளி பாதிரியார்- எல்லாரும் கூட இருப்பாங்க!"

எல்லாம் முடிந்ததும் ஜோஸ் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்: "பெரியப்பாவும் பெரியம்மாவும் இளைய மகனை மடியை விட்டு இறக்காம வளர்த்தாங்க. ஆனா, ஒரு பொண்ணுக்குத் தாலியைக் கட்டிட்டு ஒருத்தன் கிடந்து நெளிறதை அவுங்க பார்க்கலியே!"

அன்று இரவு வத்சலாவின் வீட்டில் இருந்த படுக்கையறையில் அவளைக் கட்டிப்பிடித்து படுத்துக் கொண்டே செரியான் கேட்டான்:

"நம்மளோட தேன் நிலவுக்கு நாம எங்கே போகலாம்?"

வத்சலா காதல் மேலோங்க செரியானை நோக்கி சிறிது நேர சிந்தனைக்குப் பிறகு சொன்னாள்: "கன்யாகுமரிக்கு!"

செரியான் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்துவிட்டான். அவன் சொன்னான்: "நான் யோசிச்சதும் அதே இடம் தான். வத்சலா, உனக்கு கன்யாகுமரியை ரொம்பவும் பிடிக்குமா?"

பத்தாம் வகுப்பு படிக்கிறபோது, கன்யாகுமரிக்கு பள்ளியிலிருந்து சுற்றுலா போனதும், விவேகானந்தர் பாறையில் இருக்கும்போது கூட்டத்தில் அசோகன் என்ற உடன் படிக்கும் மாணவன் தன்னுடைய பாவாடையின் பின்பக்கத்தில் கையை நுழைத்ததையும் நினைத்துப் பார்த்த வத்சலா சொன்னாள்:

"அங்கே சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் பார்க்கலாம்ல. விவேகானந்தர் பாறை கூட அங்கே இருக்கு!"

"சரிதான்..."செரியான் சொன்னான்: "ஆனா, நாம ரெண்டு பேர் மட்டும்தான் இருப்போம்!"

"நாம ரெண்டு பேர் மட்டும்தான்னு சொல்றது அறைக்குள் மட்டும்தானே?"- வத்சலா சொன்னாள்: "கன்யாகுமரி முழுக்க எவ்வளவு ஆளுங்க இருக்காங்க!"

"நீ சொல்றது சரிதான்"- செரியான் சொன்னான்: "ஆனா, மூணு பக்கமும் கடல். நாம மட்டும் தனியா. நமக்கு அங்கே யாரையும் தெரியாது!"

"அதனால என்ன, நம்ம ரெண்டு பேரு இருந்தாலே போதும்"- என்று சொன்ன வத்சலா, செரியானுடன் இன்னும் கொஞ்சம் நெருக்கமாகப் படுத்தாள்.

சிறிது நேரம் சென்றதும், செரியான் கன்யாகுமரியைக் கனவு காண ஆரம்பித்தான். கேரளா விருந்தினர் மாளிகையின் மொட்டை மாடியில் அவன் மட்டும் தனியே நின்றிருக்கிறான். ஆகாயத்தில் மேகங்கள் மெதுவாக நீங்கிக்கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு மத்தியில் நிலவும் நகர்கிறது. திடீரென்று கிழக்குப் பக்கத்திலிருந்து யாரோ தள்ளி உயர்த்திவிட்டதைப்போல சூரியன் உதயமாகி மெதுவாக மேலே உயர்கிறான். அவன் ஆச்சரியத்துடன் மேற்குத் திசையில் பார்க்கிறான். அங்கேயும் சூரியன் அதிவேகமாக உதித்து மேலே எழுந்து கொண்டிருக்கிறான். யாரோ அழைக்கும் குரலைக் கேட்டு அவன் பார்க்கிறான்- வத்சலா காற்றில் தன் கூந்தலைப் பறக்க விட்டவாறு உரத்த குரலில் அழுதவாறு அவனுக்கு நேராக கடலின் நடுவில் ஓடி வருகிறாள். அவளுக்குப் பின்னால் சூரியன் ஒரு வண்டிச் சக்கரத்தைப் போல வேகமாகப் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது.

செரியான் திடுக்கிட்டு உறக்கம் கலைந்து எழுந்து, விளக்கைப் போட்டான். வத்சலா அருகில் தூங்கிக் கொண்டிருந்தாள். குறட்டைச் சத்தம் வேறு. அவளின் கன்னித்தன்மையை கன்யாகுமரியில் வைத்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்தான் அவன். அதே நேரத்தில் அவனுக்கு மிகவும் பிடித்தமான வார இதழில் பிரசுரமாகும் 'ஆரோக்கிய பகுதி' அவனின் மனதில் திடீரென்று வந்து நின்றது. கன்யாகுமரியில் கன்னித்தன்மை. அவனுக்கே வெட்கமாக இருந்தது. ஒரு நிமிடம் அவன் வத்சலாவின் மார்பகங்களைப் பார்க்க நினைத்தான். ஆனால் புடவையை மார்புப் பகுதியிலிருந்து அகற்றுவதையும், ப்ளவுஸின் பொத்தான்களை அவிழ்ப்பதையும் நினைத்துப் பார்த்தபோது, அவன் எதுவுமே செய்யாமல் வெறுமனே வத்சலாவைப் பார்த்து படுத்தவாறு கனவுகளே இல்லாமல் உறங்கத் தொடங்கினான்.

சங்ஙனாசேரி, திருவல்லா, கொட்டாரக்கரை, கிளிமானூர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களைத் தாண்டி டாக்ஸி களியிக்காவிளையை அடைந்தபோது, டிரைவர் சொன்னார்: "இதுதான் கேரளா எல்லை!"


செரியான் அதிர்ந்தவாறு கேட்டான்: "எல்லையா? அப்ப நாம கேரளத்துக்கு வெளியே போறோமா?"

"ஆமா"- டிரைவர் சொன்னார்: "இந்த இடத்தைத் தாண்டிட்டா இனி தமிழ்நாடுதான்!"

"அப்படியா?"- செரியான் மெதுவான குரலில் கேட்டான்: "அப்போ கன்யாகுமரி கேரளத்துல இல்லியா?"

சாலையையே ஆக்கிரமித்துக்கொண்டு வேகமாகப் பாய்ந்து வந்த ஒரு தமிழ்நாடு போக்குவரத்துக் கழக பஸ்ஸுக்கு வழிவிட்ட டிரைவர் கோபாலன் நாயர் பின்னால் திரும்பி செரியானை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தார்.

வத்சலா, செரியானின் செல்லப் பெயரைச் சொல்லி அழைத்தவாறு சொன்னாள்: "பாப்பச்சா... கன்யாகுமரி தமிழ்நாட்டுலதானே இருக்கு?"

"எனக்கு ரொம்பவும் பயமா இருக்கு"-செரியான் சொன்னான்.

வத்சலா செரியானின் தோளில் தங்க வளையல்கள் சப்திக்கின்ற ஒரு கையைப் போட்டவாறு சொன்னாள்: "அதனால என்ன? நான் கூட இருக்கேன்ல?"

அவன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு வெளியே பார்த்தான். "அப்போ நாம இப்ப பார்க்குறது எல்லாம் தமிழ்நாடுதான் இல்ல...?"

கோபாலன் நாயர் ஒரு சைக்கிள்காரனைப் படுவேகமாக ஒதுக்கிவிட்டு, இன்னொரு முறை திரும்பி செரியானைப் பார்த்தார்.

தக்கலை, மார்த்தாண்டம், நாகர்கோவில், சுசீந்திரம் ஆகிய ஊர்களைக் கடந்து அவர்கள் கன்யாகுமரியை அடைந்தார்கள். அப்போது மணி ஆறு.

அறை எடுக்க கேரளா விருந்தினர் மாளிகை கவுண்டரில் நின்றபோது, செரியான் மேனேஜரிடம் கேட்டான்: "சூரியன் மறைஞ்சிடுச்சா?"

"முகவரியைச் சரியா எழுதுங்க"- மேனேஜர் சொன்னார்.

அறைக்கான முன்பணத்தை வாங்கும்போது மேனேஜர் சொன்னார்: "உங்களோட அதிர்ஷ்டம். அறை உங்களுக்குக் கிடைச்சது. காரணம்- இப்ப சீஸன். பயங்கர கூட்டம்."

வத்சலாவை ஓரக் கண்ணால் பார்த்தவாறு, அதே நேரத்தில் வத்சலாவிற்குக் கேட்கிற மாதிரி, தாழ்ந்த குரலில் அந்த ஆள் செரியானிடம் கேட்டார்: "ஹனிமூனுக்குத்தானே வந்திருக்கீங்க?" இதைக் கேட்டுவிட்டு கண்களைக் குறுக்கியவாறு அவர்களைப் பார்த்தார் மேனேஜர்.

"ஆமா.."- செரியான் சொன்னான்: "தேன் நிலவுக்கு கன்யாகுமரி நல்ல இடம்தானே?"

"நிச்சயமா"- அந்த ஆள் சொன்னார்.

"ஆனா, எனக்கு ரொம்பவும் பயமா இருக்கு"- செரியான் சொன்னான்.

அந்த ஆள் செரியானை உற்று பார்த்துவிட்டு கள்ளத்தனமாக ஒரு சிரிப்பை உதிர்த்தவாறு சொன்னார்: "பயப்படாதீங்க. இந்தியாவிலேயே ரொம்ப ரொம்ப நல்ல இடம் இது. தேன்நிலவுக்கு உண்மையிலேயே பொருத்தமான இடம் கன்யாகுமரிதான்!"

அவர்களுக்கு மேல் மாடியில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அறையில் இருந்து ரூம் பாய் போனதும், வத்சலா கட்டிலில் விழுந்தவாறு சொன்னாள்: "ஓ... எப்படியோ நாம கன்யாகுமரிக்கு வந்து சேர்ந்துட்டோம். மனசுல ரொம்பவும் உற்சாகம் தோணுதுல்ல?"

செரியான் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தவாறு நின்றிருந்தான்.

படுக்கையில் விரிக்கப்பட்டிருந்த வெள்ளை நிற விரிப்பைத் தட்டி செரியானை அழைத்த வத்சலா சொன்னாள். "வாங்க, பாப்பச்சா... கொஞ்ச நேரம் இங்கே படுத்தா, களைப்பெல்லாம் இருந்த இடம் தெரியாமப் போயிடும்... வாங்க!"

செரியான் ஜன்னலருகில் இருந்து திரும்பி வந்து வத்சலாவுக்குப் பக்கத்தில் வந்து நின்று குனிந்தவாறு மெதுவான குரலில் அவளிடம் சொன்னான்: "இது கன்யாகுமரி மாதிரி தெரியல. நாம வேற எங்கேயோ இருக்கோம். வத்சலா, எனக்கு ரொம்பவும் பயமா இருக்கு!"

வத்சலா கட்டிலைவிட்டு எழுந்து நின்று செரியானை மனக்கிலேசத்துடன் பார்த்தாள்.

செரியான் கேட்டான்: "அந்த டாக்ஸி போயிருக்குமா?"

வத்சலா கேட்டாள்: "எதுக்கு பாப்பச்சா?"

செரியான் சொன்னான்: "நாம திரும்பிப் போயிடுவோம்."

வத்சலா அவனைப் பார்த்து கேட்டாள்: "திரும்பிப் போறதா?"

"ஆமா..."-செரியான் சொன்னான்: "எனக்கு ரொம்ப ரொம்ப பயமா இருக்கு. இது கன்யாகுமரியே இல்ல. யாரோ நம்மளை ஏமாத்தி இருக்காங்க."

திடீரென்று தமிழ்நாட்டில் பொதுவாக இல்லாத ஒன்றான பவர் கட்டால், அறையில் இருந்த பல்புகள் அணைந்தன. கன்யாகுமரியே இருட்டில் மூழ்கியது. கடலை விற்பனை செய்து கொண்டிருந்தவர்களின் விளக்குகள் தந்த வெளிச்சத்தில் கடற்கரையில் இருந்த சுற்றுலாப் பயணிகள் சத்தம் எழுப்பினர்.

செரியான் உரத்த குரலில் அழுதான்.

இரண்டாவது முறையாக அவன் அழுதபோது, அவனின் வாயை ஒரு கையால் மூடினாள் வத்சலா.

அவள் தன் கையை எடுத்தபோது, செரியான் வத்சலாவைக் கட்டிப் பிடித்தவாறு கேட்டான்: "நாம தற்கொலை பண்ணிக்கலாமா?"

வத்சலா தலையை ஆட்டினாள்.

இருட்டுக்கு மத்தியில் படிகளில் இறங்கி, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்த மேனேஜரிடம் சாவியைக் கொடுத்துவிட்டு, அவர்கள் கைகளைக் கோர்த்தவாறு வெளியே இறங்கினார்கள்.

"பயங்கர இருட்டு, கவனமா இருக்கணும்"-  மேனேஜர் சொன்னார்.

அவர்கள் கடற்கரையை நோக்கி நடந்தார்கள்.

அடுத்த நாள் காலையில் ஒரு வாலிபனின் பிணமும், ஒரு இளம் பெண்ணின் பிணமும் கரையில் ஒதுங்கின.

அதைப் பார்த்து நின்று கொண்டிருந்தவர்கள் கூட்டத்தில் காலையில் நடப்பதற்காக வந்த செரியானும், வத்சலாவும் இருந்தனர்.

செரியான் வத்சலாவிடம் சொன்னான்:

"பார்க்கவே ரொம்பவும் கஷ்டமா இருக்கு. இல்ல?"

வத்சலா சொன்னாள்: "ஆமா, பாப்பச்சா, நாமளும் இப்படித்தானே கிடக்குறதா இருந்தோம்!"

செரியான் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.

இறந்தவர்களுக்காக ஒரு சிறு பிரார்த்தனை பண்ணிய வத்சலா முதல்நாள் இரவு நடைபெற்ற சம்பவங்களை நினைத்துப் பார்த்தாள்.

கடற்கரையில் இருந்த ஆட்கள் முழுவதுமாகப் போகும் வரை செரியானும் வத்சலாவும் மணலில் காத்திருந்தார்கள். கடற்கரை ஆட்களே இல்லாமல் அமைதியான பிறகு, வத்சலா செரியானை எழுந்திருக்கச் சொன்னாள்.

"நாம எப்படி தற்கொலை பண்றது?"-செரியான் கேட்டான்.

"நான் சொல்லித் தர்றேன்"-வத்சலா சொன்னாள்.

பிறகு நீச்சல் போட்டியிலும், பாரம் தூக்குவதிலும், மலை ஏறுவதிலும் ஆறு வருடங்கள் தொடர்ந்து மாவட்ட அளவில் சேம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் வத்சலா, செரியானைச் சுமந்தவாறு விவேகானந்தர் பாறையை நோக்கி நீந்தினாள். செரியான் கொஞ்சம் உப்பு நீரைக் குடித்தான்.

விவேகானந்தர் பாறையை அடைந்தபோது, வத்சலா தன் உடம்பில் இருந்த ஆடைகளைக் கழற்றினாள். செரியானையும் ஆடையை அவிழ்க்கும்படி சொன்னாள். தன் ப்ராவின் கொக்கியை மட்டும் வத்சலா கழற்றவில்லை.

"பாப்பச்சா... இந்தக் கொக்கியை கொஞ்சம் நீக்குங்க... சாதாரணமா தொட்டாலே அது விட்டுடும்..."

செரியான் நடுங்குகின்ற விரல்களுடன் சில நிமிடங்கள் கஷ்டப்பட்டு ப்ராவின் கொக்கிகளைக் கழற்றினான்.

அது முடிந்ததும், உப்பு நிறைந்த அலையும் நுரையும் அவர்களை முத்தமிட்டுக் கொண்டிருக்க, வத்சலா, தன் கன்னித்தன்மை குடிகொண்டிருந்த இடத்தின் மென்மையையும், காதல் மேலோங்கியிருக்கும் சூனியத்தையும் அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். ஆகாயத்தில் நகர்ந்து கொண்டிருந்த மேகங்களுக்கு மத்தியில் சந்திரன் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்ததை வத்சலா பார்த்தாள். விவேகானந்தர் சிலைக்கு நேராக விரலை நீட்டிய வத்சலா கேட்டாள்: "இது யார் தெரியுமா?"


"விவேகானந்தர் சுவாமி"- செரியான் சொன்னான்.

"இந்த இடத்தோட பேரு?"

"கன்யாகுமரி"-செரியான் சொன்னான்.

"ஆதியில என்ன இருந்தது?"

"சூனியம்..."-செரியான் சொன்னான்.

"தெய்வம் அப்போ என்ன செஞ்சது?"

"பூமியையும் சர்வ உலகத்தையும் படைச்சது!"

"மொத்தம் எத்தனை தெய்வங்கள்?"

"மூணு பேர்!"

"அவங்க யார் யார்?"

"பாவா, புத்திரன், ருஹாதக்குதிஸ்ஸா."

வத்சலா, செரியானின் இரண்டு கைகளையும் பிடித்து தன் மார்பகங்களில் வைத்தவாறு கேட்டாள்:

"இது எத்தனை?"

"ரெண்டு!"

வத்சலா, செரியானின் வலது கையைத் தன்னுடைய சூனியத்தில் வைத்தவாறு கேட்டாள்:

"இது எத்தனை?"

"ஒண்ணு!"

"ரெண்டும் ஒண்ணும்?"

"மூணு!"

"பாப்பச்சா, இப்போ பயம் இருக்கா?"

"இல்ல..."

வத்சலா, செரியானைச் சுமந்தவாறு திரும்பவும் நீந்தினாள். கேரளா விருந்தினர் மாளிகையை அவர்கள் மீண்டும் அடைந்த போதும், மின்சாரம் வந்திருக்கவில்லை.

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மேனேஜர் குறட்டைவிட்டு லாபியில் தூங்கிக் கொண்டிருந்தார். அவரைக் கடந்து போன போது செரியான் சொன்னான்:

"கேரளா மாதிரியே இருக்கு!"

வத்சலா அதிர்ந்தவாறு கேட்டாள்: "என்ன?"

"பவர்கட்"-செரியான் சொன்னான்.

வத்சலாவும் செரியானும் காலை சவாரி போனார்கள். சிறிதுநேரம் சென்றதும், செரியான் சொன்னான்:

"இருந்தாலும்..."

"என்ன பாப்பச்சா?"- வத்சலா மீண்டும் அதிர்ச்சியடைந்து கேட்டாள்.

"இருந்தாலும் கன்யாகுமரி கேரளத்தில் இல்லைன்னு சொன்னா, யார் நம்புவாங்க?"- செரியான் சொன்னான்.

வத்சலா சுவாமி விவேகானந்தரை அன்பு மேலோங்க பார்த்தாள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.