Logo

பட்டாளமும் என் விரக்தி உணர்வும்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6228
pattalamum en virakthi unnarvum

தை இதுவரை:

முரடனான தந்தையின் கொடுமைகள் தாங்க முடியாமல், இளைஞனான கதாநாயகன் தன் தந்தை கரும்பூனையைப் பிடிக்க பயன்படுத்தும் கோணிக்குள் அவரைக் கட்டிப் போட்டுவிட்டு, வீட்டைவிட்டு ஓடுகிறான். மறுநாள் சைனா இந்தியா மீது படையெடுத்தது என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைகிற கதாநாயகன், நாட்டின் மீது கொண்ட அளவற்ற பற்றால் பெங்களூரில் இருக்கும் பட்டாளத்திற்கு ஆள் சேர்க்கும் மையத்திற்கு விரைகிறான்.

(இதற்கு மேல் விவரங்கள் தெரிய வேண்டுமானால் நான் எழுதிய 'நான் பட்டாளத்தில் ஏன் சேர்ந்தேன்?' என்ற கதையைப் படிக்கவும்)

ஆனால், சைனாக்காரர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள். நான் கொச்சி துறைமுகம் டெர்மினஸ்ஸை கஷ்டப்பட்டு தேடிக் கண்டுபிடித்தேன். வாழ்க்கையிலேயே முதல் தடவையாக ஆறு ரூபாய் நாற்பது பைசா கொடுத்து புகைவண்டிக்கு டிக்கெட் வாங்கி, எப்போது புகைவண்டி வரும் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்து, புகைவண்டி வந்ததும் உணர்ச்சிவசப்பட்டு ஏறி, நிற்பதற்குக் கூட இடமில்லாமல் கழிவறை வாசலில் பொழுதுபுலரும் வரை உட்கார்ந்து, அங்கேயே அமர்ந்து உறங்கியதால் தலை எங்கோ போய் இடிக்க, நெற்றியில் காயம் உண்டாகிப் புடைக்க, வழியும் மொழியும் தெரியாமல் பெங்களூர் தெருக்களில் அலைந்து திரிந்து, எச்.ஏ.எல்லுக்கு அருகில் உள்ள மலையாள மெஸ்ஸில் இரண்டு வார காலத்திற்கு சமையல் வேலை செய்து, பள்ளியில் பார்த்த ஒரு இளம் கன்னியாஸ்திரீயின் உதவியால் பட்டாளத்திற்கு ஆள் எடுக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, பட்டாளத்திற்கு நான் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டபோது, போர் முடிந்து விட்டது என்று சொன்னால் எப்படி இருக்கும்?

போர் என்றால் குறைந்தபட்சம் எட்டு வருடங்களாவது நிச்சயம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் என்றுதான் பொதுவாக நான் நினைத்திருந்தேன். எனக்கு எந்த அளவிற்கு ஒரு ஏமாற்றம் உண்டாகி இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். சைனாக்காரர்களை நான் திரும்பத் திரும்ப மனதிற்குள் சபித்தேன். இவ்வளவு சீச்கிரம் போரிலிருந்து விலகி நிற்பது என்றால் எதற்கு இந்த தேவையில்லாத ஆர்ப்பாட்டங்கள்? இயந்திரத் துப்பாக்கியுடன் உங்களுக்கு முன்னால் குதித்து கட்... கட்... என்று உங்களைச் சுட்டு வீழ்த்துவதற்கு நான் பயிற்சி கூட இன்னும் ஆரம்பிக்கவில்லை. திருட்டு சைனாக்காரர்களே! இவ்வளவு சீக்கிரம் ஏன் போரை முடிவுக்குக் கொண்டு வந்தீர்கள்?

பள்ளிக் கூடத்தில் படிக்கிறபோது என்.ஸி.ஸி.க்கு வந்த இந்திக்காரன் இயந்திரத் துப்பாக்கியைப் பற்றி சொல்லித் தந்த காலம் முதல் அது என் மனதிற்குள் மாறாத ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது. செறுமுற்றத்து ஒற்றைக் கண்ணன் கொச்சப்பன் அண்ணன் வைத்திருந்த துப்பாக்கியைப் போலவோ, என்.ஸி.ஸி.பரேடின் போது தந்த டம்மி ரைஃபிள் போலவோ, ஒவ்வொரு முறை சுட்டு முடித்தபோதும், குண்டை நிரப்புகிற வேலை இயந்திரத் துப்பாக்கியிடம் இல்லை என்பதை நான் புரிந்து கொண்டேன். குண்டு வரிசையாக நிரப்பி இருப்பதை துப்பாக்கியின் பல் சக்கரத்தின்  பொறுப்பில் விட்டுவிட்டு, வெறுமனே விசையை இழுத்தவாறு அதை குறிவைத்து, நின்று கொண்டிருந்தால் போதும், அதுதானே 'பட் பட்' என்று சுட்டுக் கொண்டிருக்கும். இதே மாதிரி ஆயிரக்கணக்கான குண்டுகளை வெடிக்கலாம். பட்டாசு வெடிப்பதைப் போல தன் போக்கில் அது வெடித்துக் கொண்டிருக்கும். எதிரிகள் ஆயிரக்கணக்கில் அடுத்தடுத்து மடிந்து கீழே விழுவார்கள். நான் ஒருநாள் ஒரு கனவு கண்டேன். ஃபெரோனாப் பள்ளியில் இருக்கும் தங்கச் சிலுவையைப்போல 'பளபள'வென மின்னிக் கொண்டிருக்கும் ஒரு பெரிய இயந்திரத் துப்பாக்கியைப் பார்த்து நான் குண்டை நிரப்பி வெடிக்கச் செய்வதும், சந்தோஷ மிகுதியால் நடனமாடுவதுமாய் இருக்கிறேன். அதோடு சேர்ந்து பாட்டு பாடவும் செய்கிறேன். என்னுடைய குண்டுகள் வெடித்து, எதிரிகள் ஈக்களைப் போல கீழே செத்து விழுகிறார்கள். திடீரென்று என் கையில் இருக்கும் இயந்திரத் துப்பாக்கியில் ஒரு மாற்றம். நான் பார்க்கும்போது, நான் கையில் பிடித்திருப்பது என் வகுப்பில் படிக்கிற அரீப்பறம்பு குஞ்ஞன்னம் என்பதை உணர்கிறேன். அவள் உடம்பில் மருந்துக்குக் கூட துணி இல்லை. குளத்தில் குளித்து முடித்து வந்ததைப்போல உடம்பெல்லாம் வெண்மை நிறத்தில் சோப்பு நுரை. குஞ்ஞன்னம் என்னைப் பார்த்துச் சிரிக்கிறாள். அதே நேரத்தில் அவளிடமிருந்து எப்படியோ குண்டுகள் வெடிக்கின்றன. எதிரிகள் செத்து கீழே விழுந்து கொண்டிருக்கிறார்கள். நான் உரத்த குரலில் சத்தமிட்டவாறு அவளைக் கீழே போடுகிறேன். அவள் துள்ளி எழுந்து, செத்துக் கிடக்கும் எதிரிகளுக்கு நடுவில் ஓடுகிறாள். அப்போது பிணங்கள் ஒவ்வொன்றாக எழுந்திருக்கின்றன. அவை துப்பாக்கி முனைகள்போல நீட்டிக் கொண்டிருக்கும் தங்களின் பிறப்பு உறுப்புகளை எனக்கு நேராக நீட்டுகின்றன. ஒவ்வொரு பிறப்பு உறுப்பிலிருந்தும் ஒரு குண்டு புறப்பட்டு வந்து மின்னல் வேகத்தில் என்னை நோக்கிப் பாய்ந்து வருகிறது. அவை என் உடம்புக்குள் நுழைந்த போது, அடடா... நான் அனுபவித்த சுகம் இருக்கிறதே! திடீரென்று நான் என் பிறப்பு உறுப்பைத் தேடுகிறேன். என் கையில் எதுவுமே படவில்லை. காரணம்- பிறப்பு உறுப்பை அங்கே காணோம். தூரத்தில் நின்றவாறு குஞ்ஞன்னம் விழுந்து விழுந்து சிரிக்கிறாள். "வீல்' என்ற அலறியவாறு நான் கண்களைத் திறக்கிறேன்.

முதல் போர் ஒரு கனவாக இருந்தாலும், அதில் கூட இயந்திரத் துப்பாக்கி வரவே செய்தது. எவ்வளவு எதிர்பார்ப்புகளுடன் நான் பெங்களூரில் வெயிலில் பட்டாளத்திற்கு ஆள் எடுக்கும் மையத்தில் வரிசையில் நின்றிருந்தேன் தெரியுமா? மருத்துவப் பரிசோதனை நடத்திய கிழட்டு டாக்டர் என் பிறப்பு உறுப்பையும், விதைகளையும் தொட்டுப் பார்த்துவிட்டு, இதற்கு முன்பு அங்கு ஏதாவது நோய் வந்திருக்கிறதா என்று கேட்டார். அப்போது என் கனவில் அவை காணாமல் போனது ஞாபகத்தில் வந்தது.

எனக்குப் பின்னால் வரிசையில் நின்றிருந்த குற்றியாடிக்காரனான பாலகிருஷ்ணனிடம் என்னுடைய விருப்பத்தைச் சொன்னபோது, அவன் சொன்னான்: "போர் முடிஞ்சு போச்சுடா. சைனாக்காரங்க பின் வாங்கின செய்தி உனக்குத் தெரியாதா? நீ எந்த உலகத்துல வாழ்ந்துக்கிட்டு இருக்கே!" "அப்படியா? கஷ்டமாப்போச்சே!"- நான் மிகவும் வருத்தத்துடன் சொன்னேன். பாலகிருஷ்ணன் என்னையே முறைத்துப் பார்த்தான். போர் என்பது பொத்தானை அழுத்துவதைப் போல விருப்பப்படுகிற நேரத்தில் நடத்தலாம், இல்லாவிட்டால் நிறுத்திக் கொள்ளலாம்- அது நம் விருப்பப்படி நடத்திக் கொள்கிற ஒரு தொழில் என்பதே நீண்ட நாட்கள் சென்றபிறகு தான் எனக்கே தெரிந்தது.

போர் நின்று போன செய்தியை அறிந்த அன்று இரவு எனக்கு தூக்கமே வரவில்லை. நான் சிந்தனையில் மூழ்கிவிட்டேன். தந்தையைக் கோணிக்குள் போட்டு மூடிவிட்டு வந்த எனக்குப் போர் ஒரு பாதையைக் காட்டித் தந்தது என்பது உண்மைதான்.


ஆனால் போரே இல்லாமல் என்ன பட்டண வாழ்க்கை? இதற்காகவா நான் எர்ணாகுளத்தில் சாப்பாடு இல்லாமல் கொசுக்கடி அனுபவித்துக் கிடந்தேன்? இரவு நேரத்தில் ரெயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் இருந்த புறம்போக்கு நிலத்தில் ஒரு பெண் என்னைக் கையைக் காட்டி அழைக்க, நான் அவளை நோக்கிப் போனதை நினைத்துப் பார்க்கிறேன். "நான் வேணுமா?"- அவள் என்னைப் பார்த்துக் கேட்டாள். தொடர்ந்து செத்துப்போன மனிதர்கள் வாயில் இருக்கும் சிரிப்பைப் போல, ஒரு சிரிப்பு சிரித்தாள். எனக்கு மனதிற்குள் ஆசை எழுந்ததென்னவோ உண்மை. இருந்தாலும் அவளிடம் நான் சொன்னேன்: "என்னைப் பார்த்தா கேக்குறே? என்னைப் பத்தி நீ என்ன நினைச்சே? நான் பட்டாளத்துக்குப் போய்க்கிட்டு இருக்கேன். உனக்குத் தெரியுமா?" அவள் எனக்கு மிக அருகில் வந்து நின்று சொன்னாள்: "அங்கே போயி சாகப்போற. ஒரு தடவை சுகமா இருந்துட்டு போக வேண்டியதுதானே! எட்டணா கொடுத்தா போதும்." சுத்தமான உடலுடன் பட்டாளத்தில் சேர வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்ததால், நான் அவளை ஒரு பக்கம் தள்ளிவிட்டு, அன்று வேகமாக நடந்தேன். "போடா நாயே... நீயும் உன் பட்டாளமும்" என்று சொல்லியவாறு அவள் என்மீது காரித் துப்பினாள். இதை எல்லாம் நான் அனுபவித்தது எதற்காக? போரில் ஈடுபட வேண்டும் என்பதற்காகத்தானே! இயந்திரத்துப்பாக்கி சைனாக்காரர்கள் கையில் மட்டும்தான் இருந்தது. நம்கையில் இருந்தது சாதாரண ரைஃபிள்தான் என்பதே எனக்கு பின்னால்தான் தெரிந்தது. என்ன இருந்தாலும், அதைக் கேட்ட போது என் மனதில் உண்டான ஏமாற்றத்திற்கு அளவே இல்லை.

சைனாக்காரர்கள் மீது மட்டுமல்ல, எனக்குச் சரியான அறிவில்லாததால், நம்முடைய மகான்களான பெரிய தலைவர்மார்கள் மீதும் எனக்கு பயங்கர கோபம் வந்தது. உடற்பயிற்சி முடிந்து, மைதானத்திற்கு வெளியே நடைபாதையில் போடப்பட்டிருந்த செங்கல்லால் ஆன வரிசைக்கு வெள்ளையடித்துக் கொண்டிருந்தபோது, ஈராற்றுபேட்டைக்காரன் பிரபாகரனிடம் நான் சொன்னேன்: "என்ன கஷ்டம்டா இது, பிரபாகரா! இவ்வளவு பெரிய நம்ம இந்தியாவுக்கு ஆறு மாசம் நீண்டு நிக்கிற மாதிரி ஒரு போர் செய்ய வக்கு இல்லாமப்போச்சு! இந்த நேருவும் மத்த தலைவருங்களும் என்னதான் செய்யிறாங்க? சும்மா தலையில தொப்பிய வச்சிக்கிட்டு, பாக்கெட்ல பூ வச்ச வெள்ளை கோட்டைப் போட்டுக்கிட்டு, நடந்து திரிஞ்சா போதுமா? இந்த மாதிரி ஆளுங்களுக்கு ஓட்டு போடற எங்கப்பாவை மாதிரியான ஆளுங்களைப் பிடிச்சு உதைக்கணும்."

"அப்பாவை அப்படியெல்லாம் பேசாதடா" என்றான் பிரபாகரன். "அந்த மாதிரி ஆளுங்களைச் சாட்டையை வச்சு பின்னி எடுக்கணும். நம்மள இந்த அளவுக்குக் கொண்டு வந்தது அவங்கதானே?" என்று நான் சொல்லிக்கொண்டே குனிந்து வெள்ளையடித்துக் கொண்டிருந்தேன். அப்போது என் பின் பாகத்தில் 'சுரீர்' என்று ஒரு அடி கிடைத்தது. வேதனை தாங்காமல் பின்னால் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன். 'பந்த் கரோ துமாரா பாத்சித், கேரள் காஸுவர்'-சுபேதார் கல்யாண்சிங் மீண்டும் என்னை அடிப்பதற்காக பிரம்பை ஓங்கியவாறு உரத்த குரலில் கத்தினார்.

'நீ அடிக்கிற அடி எனக்கு புல்லு மாதிரிடா, சுபேதாரே'- என் மனதிற்குள் நான் கூறிக் கொண்டேன்: 'என் தந்தை என்னை அடிச்ச அடிகள் முன்னாடி நீ அடிக்கிறதெல்லாம் எனக்கு தூசி மாதிரி!'- மாப்கர்னாஸாப்'- நான் அவருக்கு சல்யூட் அடித்தவாறு சொன்னேன். அந்த ஆள் அந்த இடத்தை விட்டுப் போனதும், பிரபாகரன் தாழ்வான குரலில் சொன்னான்: "மாப் இல்லடா முட்டாள். மாஃப். என்ன இருந்தாலும், பெத்த தகப்பனைக் கன்னாபின்னான்னு பேசினதுக்கு தெய்வம் சரியான தண்டனை உனக்குக் கொடுத்துச்சு". "டேய் பிரபாகரா"- நான் சொன்னேன்: "என்னடா பெரிய தண்டனை! என் பின்னாடி இருக்குற தழும்பை என்ன நீ பார்க்கவா போற?"

ஆனால், என் மனதிற்குள் இருந்த வருத்தம் அதோடு தீர்ந்து விடவில்லை. எனக்குச் சரியாக உறக்கமே வரவில்லை. அப்படியே இலேசாக உறங்கினால்கூட, கெட்ட கெட்ட கனவுகளாக வந்தன. கனவில் குஞ்ஞன்னமோ இயந்திரத் துப்பாக்கியோ வரவில்லை. அதற்கு பதிலாக செத்துக் கிடக்கும் பூனைகள் எழுந்து பெரிய குரலில் 'ம்யாவோ' என்று அழுதவாறு, கண்களை மூடிக்கொண்டு, தொங்கிக் கொண்டிருக்கும் வாலுடன் வரிசையாகப் போய்க் கொண்டிருப்பது மாதிரி கனவு கண்டேன். பூனைகள் வரிசையாகப் போன ஊர்வலத்தின் முன்னால் கருப்புப் பூனையின் மீது என் தந்தை கையில் ஒரு பிரம்பை வைத்துக் கொண்டு பந்தாவாக அமர்ந்திருக்கிறார். சிறிது நேரத்தில் பூனைகளின் கண்கள் பாதியாகத் திறக்கின்றன. அவை என்னையே பார்க்கின்றன. என் தந்தையின் தலை கோணியால் மூடப்பட்டிருக்கிறது. கண்கள் இருக்கும் இடத்தில் இரண்டு துளைகள். அவற்றுக்குப் பின்னால் இருந்தவாறு இரண்டு சிவந்த கண்கள் என்னையே உற்றுப் பார்க்கின்றன. நான் பயந்து நடுங்கியவாறு உரத்த குரலில் அலறுகிறேன், வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுகிறேன். பக்கத்து படுக்கையில் படுத்திருந்த ராமசாமி நான் கண்டபடி உளறுவதைக் கேட்டு, அவனின் கட்டிலுக்குக் கீழே போய் பயத்தால் பம்மிக் கொண்டான் என்று லம்போதரன் என்னிடம் சொன்னான். எழுபத்தொன்றாம் வருடம் நடந்த போரில் அந்த லம்போதரனின் உடலைக்கூடக் கண்டு பிடிக்க முடியவில்லை. உண்மையிலேயே வருத்தமான விஷயம்தான்.

ராமசாமி ஒரு மடையன். அவன் என்னிடம் கூறுவான்: "டேய் தாமஸ், எங்கப்பாவைப் போல நானும் கோவில்ல பூசாரியா ஆகணும்னு மனப்பூர்வமா ஆசைப்பட்டேன். ஆனா, எங்கப்பா விட்டாத்தானே! 'டேய் ராமசாமி... கடவுளுக்கு பூஜை பண்றவங்க தேவையில்ல போல இருக்கு. அப்படித்தான் நான் நினைக்கிறேன். பூஜையை யார் பண்ணச் சொல்றாங்களோ, அவுங்கதான் கடவுளுக்கு வேணும் போல இருக்கு. இல்லாட்டி உனக்கும் ராஜிக்கும் அம்மாவுக்கும் ஒரு வேளை சாப்பாட்டுக்கு இப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியதிருக்குமா? நீ ஒரு நாளும் பூசாரியா ஆக வேண்டாம். அதுக்குப் பதிலா பட்டாளத்துல போய்ச்சேர்ந்திடு. அது போதும்.'னு அவர் சொன்னாரு."

அவனுக்கு பட்டாள வாழ்க்கை கொஞ்சமும் ஒத்து வரவில்லை. கடைசியில் அறுபத்து ஏழில் போர் அறிவிக்கப்பட்ட மறுநாள், அவன் கேம்ப்பில் இருந்த கோவிலுக்குப் போய் கடவுளைத் தொழுதுவிட்டு, ரிப்பேர் முடிந்து வந்துகொண்டிருந்த ஒரு டாங்கிற்குக் கீழே கூப்பிய கைகளுடன் படுக்க, உருளை அவனுக்கு மேலே ஏறியது. இப்படி ஒரு மனிதன்!

தூத்துக்குடிக்காரனான தண்டபாணிதான் என்னுடைய மனரீதியான போராட்டங்களில் இருந்தும், விரக்தியில் இருந்தும் என்னைப் பொதுவாகக் காப்பாற்றினான். கழிவறையில் உட்கார்ந்திருக்கும் பொழுது நான் மன வேதனைப்பட்டு என்னையும் அறியாமல் உரத்த குரலில் சொல்லிவிட்டேன்:


"டேய் தலைவர்மார்களா! என்னடா நீங்க நாட்டை ஆளுறீங்க? என்னை நீங்க ஏமாத்திட்டீங்களே! இப்படிக் கக்கூஸ்ல உட்கார்ந்து மலம் கழிக்கிறதுக்கும் மூத்திரம் இருக்குறதுக்கும் திங்கிறதுக்கும் குடிக்கிறதுக்குமா நான் பட்டாளத்துல வந்து சேர்ந்தேன்? ஒரு போர் வந்ததை ஏன்டா தேவையில்லாம நிறுத்துனீங்க? தேசத் துரோகிகள்! நாத்தமெடுத்த ஜென்மங்கள்! நாய்கள்! பிசாசுகள்!" அடுத்த கழிவறையில் உட்கார்ந்திருந்த தண்டபாணி மலம் கழிப்பதைத் தற்காலிகமாக நிறுத்திவைத்து சத்தம் போட்டுச் சொன்னான்: "யாரு? யாரு? என்னது? பிசாசா? அம்மா, தாயே, பிசாசா?" அவன் ஒரேயடியாகக் கூப்பாடு போட்டவாறு கழிப்பறையை விட்டு வெளியே ஓடி வந்தான். நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன். நான் அப்படி உரத்த குரலில் சத்தம் போட்டதன் விளைவு -மூன்று நான்கு நாட்களாக மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டிருந்த என் வயிறு திடீரென்று குணமாகி, தன் வேலையை ஒழுங்காகச் செய்ய ஆரம்பித்தது. அதை அனுபவித்தவாறு, நான் கழிவறையிலேயே உட்கார்ந்திருந்தேன். வெளியே- தண்டபாணி நான் இருக்கும் கழிவறையின் கதவைத் தட்டினான். "என்னாச்சு? யார் உள்ளே இருக்கிறது? பிசாசு எங்கே? முருகா! முருகா!" நான் கதவை இலேசாகத் திறந்து தலையை மட்டும் வெளியே நீட்டியவாறு சொன்னேன்: "டேய் தண்டபாணி, இங்கே எந்த பிசாசும் இல்ல... நான்தான் இருக்கேன்!" "நீயா?"- தண்டபாணி நிம்மதிப் பெருமூச்சு விட்டவாறு சொன்னான்: "யாரோ இப்ப பிசாசு பிசாசுன்னு கத்தினாங்க!" நான் அவனிடம் சொன்னேன்: "டேய்... பிசாசு பட்டாள கேம்புக்கு வருமா? அதுவும் கழிவறைக்கு. பட்டாளக்காரங்களோட பிசாசுகள் போர் நடந்த இடத்துல இருக்குற மரத்திலும், கிணற்றிலும், குளத்திலும் இருக்கும்" "நீ சொல்றது சரி"- தண்டபாணி சொன்னான்: "பிசாசு கக்கூஸுக்கு ஏன் வரப்போகுது? அது ஏன் மலமா இருக்கப் போகுது?" அவன் திரும்பிப் போய் கதவை அடைத்து தண்ணீர் எடுப்பதை நான் கேட்டேன். "தண்டபாணி...."-நான் மெல்ல அழைத்தேன். "என்ன?"- அவன் கேட்டான். "சைனா போர் முடிஞ்சதுனால உனக்கு ஒண்ணும் வருத்தம் இல்லியா?" "போடா முட்டாள்..."- அவன் சொன்னான்: "பேசாம உட்கார்ந்து மலம் கழிக்கப் பாரு"- தொடர்ந்து அவன் எல்லாத் திசைகளிலும் கேட்கிற மாதிரி ஒரு காற்றை வெளியே விட்டான். அதைக் கேட்டதும், என் கவலையும், கோபமும் இருந்த இடம் தெரியாமல் போய்மறைந்தன. என்னிடமிருந்த விரக்தி உணர்வு என்னை விட்டு நீங்கியது.

ஜெய் ஹிந்த்! ஜெய் ஜவான்! ஜெய் கிஸான்!

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.