Logo

கடல்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6433
kadal

ரு நாள் நானும் என் மனைவியும் சேர்ந்து - அது என்ன தேதி என்பது சரியாக ஞாபகத்தில் இல்லை. போன மாதத்தில் என்பதை மட்டும் சொல்ல முடியும். நாங்கள் ஒரு நாள் மாலை நேரத்தில் கடற்கரையில் உட்கார்ந்திருந்தோம். எங்களுக்குள் பல விஷயங்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். சொல்லப் போனால் நாங்கள் உட்கார்ந்திருந்தோம் என்று கூறுவது கூடத் தப்பு. ஒரு கல்லின் மேல் சாய்ந்து நின்றிருந்தோம் என்று சொல்வதே பொருத்தமானது. கடல் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் தன் ஆக்கிரமிப்பை நீட்டிவிடக்கூடாது என்பதற்காக கொண்டு வந்து போடப்பட்ட கல் அது.

பொதுவாக நானும் என் மனைவியும் சூரியன் மறையும் நேரம் வரை கடற்கரையிலேயே இங்குமங்குமாய் சுற்றிக் கொண்டிருப்போம். சூரியன் மறைந்த பிறகு மக்கள் கூட்டம் இல்லாத இடமாகப் பார்த்து நாங்கள் போய் உட்காருவோம். அன்று அது நடக்கவில்லை. வேறொரு காரணமும் இல்லை. விரும்பத்தகாத ஒரு நிகழ்ச்சி அன்று நடந்துவிட்டதே காரணம். அதற்குப் பிறகு என் மனைவி பல நாட்கள் கடற்கரைப் பக்கமே வரவில்லை. எனக்கும்கூட அங்கு செல்லப் பிடிக்கவில்லை.

காலப்போக்கில் அதை நாங்கள் மறந்தே விட்டோம். மறதி என்பது உண்மையிலேயே ஒரு கொடைதான். ஒரு வகையில் பார்க்கப் போனால் மறதி என்ற ஒன்று மட்டும் இல்லாமற் போயிருந்தால் மனிதர்களுக்கு என்றோ பைத்தியம் பிடித்திருக்கும். ஞாபகங்களின் குவியல்களால் பைத்தியம் பிடிக்காமல் வேறென்ன செய்யும்? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அந்த ஞாபகம் கடந்த கால அனுபவங்களைப் பற்றியோ எதிர்கால ரகசியத்தைப் பற்றியதாகவோ இருந்தால் பரவாயில்லை.

நடக்கப்போகிற விஷயத்தை நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்! அன்று நடந்தது என்ன தெரியுமா? அன்று பகல் முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்தது. சாயங்காலம் ஆனபோதுதான் - வானத்தில் ஒரு தெளிவே உண்டானது. மண் நன்றாக நனைந்திருந்தது - கல்லின் மேல் சாய்ந்தவாறு - நானும் என் மனைவியும் ஒவ்வொரு காரியத்தைப் பற்றியும் வாக்குவாகம் செய்து கொண்டிருந்தோம். அவளுடன் எப்போது பேசினாலும் அதுதான் நடக்கும்.

அவளின் நாக்கு பேச ஆரம்பித்தாலே, நான் சொல்வதற்கு எதிராகத்தான் பேசும். அவள் ஒன்றும் அறிவில்லாதவள் இல்லை. இருந்தாலும் அன்று என்னவோ ஆரம்பத்திலிருந்தே அவள் என்னுடன் தலைக் கனமாகத்தான் பேசிக் கொண்டிருந்தாள். அவள் சொல்வதை நான் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். மனிதக் குழந்தைகளைக் கண்ணாடி பாத்திரத்தில் பிறக்க வைப்பது குறித்து ஏதோ பத்திரிகையில் பிரசுரமான ஒரு பொய்யான செய்தியை அவள் என்னிடம் கூறிக் கொண்டிருந்தாள்.

“நீ போடி...” நான் அவளிடம் சொன்னேன்.

“சோதனைச் சாலைகளில் குழந்தைகளைப் பிறக்க வச்சா, அந்தக் குழந்தைங்க அங்கே இருந்து வர்ற மற்ற பொருட்களை மாதிரித்தான் இருக்கும். பேரையும் நம்பரையும் எழுதி ஒட்டி வச்சு, என்னென்ன பொருட்கள் கலக்கப்பட்டிருக்கு... அவற்றோட சதவிகிதம் எவ்வளவு போன்ற விஷயங்களைத் தெளிவா எழுதிவச்சு... இதைத்தான் உண்மையிலேயே செய்யணும். அப்படி உருவாகி வர்ற குழந்தைகளை ஒன்று விற்பனைக்கு வைக்கலாம். இல்லாட்டி பைத்தியக்கார மருத்துவமனை போன்ற ஒரு இடத்துல அடைச்சு வைக்கலாம்.”

“இதோ வர்றேன் ஒரு பைத்தியக்காரன்” - அவள் சொன்னாள்.

எனக்கு அதைக் கேட்டு கோபம்தான் வந்தது. இது அவள் எப்போதும் செய்யும் ஒரு காரியம்தான். ஏதாவதொரு விஷயத்தைப் பற்றி அவள் தேவையில்லாமல் பேசிய பிறகு நான் பதிலடி கொடுத்தால், அவள் விஷயத்தை வேறு பக்கம் திருப்புவதற்கு முனைவாள்.

“உன் பைத்தியக்காரனைக் கொண்டு போய் மரத்துல தொங்க விடு. நல்லா நெருப்புல காயப்போடு. இங்க பாரு... இனிமேல் நீ என்கூட பேசக் கூடாது. தெரியுதா?” - நான் என் மனைவியிடம் சொன்னேன்.

“பாவம்... சாகப் போறேன்” - அவள் கையால் சுட்டிக் காட்டியவாறு சொன்னாள். எருமையின் வாயில் யார் வேதத்தை ஓதுவார்கள்? நான் அவள் சுட்டிக்காட்டிய பக்கம் பார்த்தேன். சற்று தூரத்தில் ஒரு மனிதன் தலையைக் குனிந்தவாறு மணலில் உட்கார்ந்திருந்தான். குனிந்த தலையை இரு கைகளாலும் பிடித்தவாறு அவன் தரையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“பைத்தியக்காரன் மாதிரி தெரியல... சாப்பாட்டுக்கு வழி இல்லாத ஒரு ஏழை மாதிரி தெரியுது...” நான் சொன்னேன்.

“இல்லை இல்லை... நான்தான் சொல்றேனே அவன் ஒரு பைத்தியக்காரன்னு...” - என் மனைவி சொன்னாள்: “நடந்து வர்றப்போ கடலைக் கையால நீட்டி என்னவோ தனக்கு மட்டும் கேக்குற மாதிரி அவன் சொன்னான்.”

“ஒருவேளை தற்கொலை செய்துக்குற எண்ணத்துல இருப்பானோ?” - என்னையே மறந்துபோய் நான் சொன்னேன். அப்படி நான் சொல்லியிருக்கக்கூடாது. என் தவறுதான். மனிதர்களைத்தான் நாம் வகை வகையாக வாழ்க்கையில் பிரித்துப் பார்க்கிறோமே! கதைகளிலும், நம்முடைய உலக அனுபவங்களிலும் யாரையாவது பார்த்துவிட்டால்... அவ்வளவுதான் இனம்பிரிக்க ஆரம்பித்து விடுவோம்.

“எனக்குத் தெரியும். அந்த மாதிரி மனிதன்தான்” “ ஓ... அப்படிப்பட்ட மனிதன்தான், இல்லே?” - இப்படிப் போய்க் கொண்டிருக்கும் விஷயங்கள். நம் விருப்பப்படி வாளை எடுத்து வீசிக் கொண்டிருப்போம். எனக்கு அந்த மனிதனைப் பார்த்தபோது துயரமுற்ற சோகமயமான கதாநாயகர்கள்தான் ஞாபகத்தில் வந்தார்கள். அதனால்தான் அபத்தமாக அப்படிச் சொல்லிவிட்டேன். காரணம் - என் மனைவி காதில் கட்டாயம் அது விழுந்தாக வேண்டும்.

அவன் தற்கொலை செய்து கொள்வதற்காக வந்திருக்கிறான் என்பதை நான் எப்படித் தீர்மானித்தேன்? அவன் அப்போது என்ன செய்து கொண்டிருந்தான்? அவன் அப்போது உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து விட்டிருந்தான். தூக்கத்தில் இருப்பதைப் போல சில நிமிடங்கள் அதே இடத்தில் நின்றான். அவன் இளைஞனாக இருந்தான்.

முகத்தில் மீசை வளர்ந்திருந்தது. தலைமுடி தாறுமாறாகக் கலைந்து காணப்பட்டது. அவன் உடல் நடுங்கிக் கொண்டிருந்ததை அவனுக்கு அருகில் போனபோதுதான் நானே உணர்ந்தேன். அவன் அணிந்திருந்த ஆடைகள் அவனின் உடலோடு ஒட்டிக் கிடந்தன. காலையில் பெய்த மழையில் அவன் நன்றாக நனைந்திருக்க வேண்டும். வியர்வையாக அது இருக்க வாய்ப்பில்லை. அவனின் கண்களில் - அதாவது ... நீண்ட காலமாக எனக்குப் படுக்கையில் படுத்தவாறே படிக்கும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது. அப்படிப் படிக்காமல் போயிருந்தால் இப்போது இருக்கும் அறிவு எங்கே இருந்து வந்திருக்கும்?


அப்படி தொடர்ந்து படித்ததனால்தான், கண்ணின் பார்வை சக்தி சற்று குறைந்து போனது. எதுவுமே சற்று மங்கலாகத்தான் தெரிகிறது. பிறகு... வயதும் அதிகமாகிவிட்டதே! இப்போது அப்படிப் படிப்பதில்லை. என் மனைவிக்குத் தூங்குகிற போது கண்களில் வெளிச்சம் படுவது பிடிக்காது.

நான் சொல்ல வந்தது இதுதான். பார்வைக் குறைவு காரணமாக என்னால் தெளிவாகக் கூற முடியவில்லை. இருந்தாலும் அவன் அழுது கொண்டிருக்கிறான் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஆமாம்... எனக்குத் திடீரென்று அப்போது தோன்றியது: “ஒரு ஆண் அழலாமா?” சந்தேகமே வேண்டாம். என் மனைவி சொன்னதை நான் நினைத்துப் பார்த்தேன்; “அவன் உண்மையிலேயே பைத்தியம்தான். பட்டப்பகல்ல கண்ணீர் விட்டு அழுதுக்கிட்டு இருக்கான். நீங்க சொன்னது சரிதான். அவன் தற்கொலை பண்ணிக்கத்தான் வந்திருக்கான்!”

“அவன் பைத்தியம் இல்லடி...” - நான் என் மனைவியிடம் சொன்னேன்: “அவன் ஏதோ சங்கடத்துல இருக்கான். துக்கம் தாங்க முடியாத அளவுக்கு மீறிப் போகுறப்போ, மனிதர்கள் பொதுவா இப்படித்தான் நடப்பாங்க...”

“பைத்தியம் இல்லைன்னா இங்க இருக்குற ஆளுங்க முன்னாடி இப்படியா ஒருத்தன் நடப்பான்? கொஞ்சமாவது வெட்கம் வேண்டாமா? வேணும்னா பாருங்க. அவன் சாகணும்னுதான் வந்திருக்கான். அது மட்டும் நிச்சயம்...”

“அடியே முட்டாள்...” - நான் அவளிடம் சொன்னேன்: “சாகுறதுன்றது அவ்வளவு இலேசான ஒரு விஷயமில்லை. மனிதர்களுக்கு மரணத்தைப் பார்த்து பயம் கிடையாதா என்ன? மரணத்தைப் பார்த்து பயப்படலைன்னாகூட மரணத்திற்குப் பிறகு உள்ளதைப் பார்த்து பயப்பட மாட்டாங்களா?”

அவள் மீண்டும் சொன்னாள்: “பைத்தியத்துக்குப் பயம் இருக்குமா என்ன? சீராக சிந்திக்க முடியாதவர்களுக்கு வாழ்றதும், மரணமடையிறதும் எல்லாமே ஒண்ணுதான். அது ரெண்டுக்குமிடையே அவங்களைப் பொறுத்தவரை எந்தவித வித்தியாசமும் இல்லை...”

“அடியே முட்டாள்...” - நான் என் மனைவியிடம் சொன்னேன்: “வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையில், இன்றைக்கும் நாளைக்கும் நேற்றைக்கும் இடையில், தனக்கும் மற்றவர்களுக்கும் இடையில் வேறுபாடு பார்க்க முடியாதவர்கள் பகவத் கீதையில் என்ன பேர் சொல்லி அழைக்கப்படுகிறார்கள்?” உனக்குத் தெரியுமா? அவர்கள்தான் ஸ்திதப்ரக்ஞர்கள். அவர்கள் இந்த உலகத்தின் மகாத்மாக்கள்...”

அப்போதுதான் என் மனைவி நான் இதுவரை சொன்னதைக் கேட்காதது மாதிரி, வேறு விஷயத்திற்குத் தாவினாள். அவள் சொன்னாள்: “இங்க பாருங்க... அந்த ஆளு எங்கே போறான்னு பாருங்க...”

நான் பார்த்தேன். அவன் இலேசாக மேல் மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு மணலில் பதியும் கால்களுடன் சிறிது தூரத்தில் இருந்த கருங்கல்லால் ஆன சுவரை நோக்கி நடந்து கொண்டிருந்தான். எங்களுக்கு அவனின் பின்பக்கம் மட்டுமே தெரிந்திருந்ததால் அவன் அழுகிறானா இல்லையா என்பதை எங்களால் பார்க்க முடியவில்லை. ஆனால், அவனின் தோள்கள் ஏதோ சுமையைத் தாங்கிக் கொண்டிருப்பதைப்போல அவ்வப்போது ஆடின. எதையோ மறந்துவிட்டதைப்போல அவன் நின்று நின்று நடந்து போவதைப் பார்த்த என் மனைவி சொன்னாள்: “தூக்கத்துல நடக்குற மாதிரி இருக்கு...”

“ஆப்பரேஷன் செய்றதுக்காக மயக்க மருந்து கொடுத்து படுக்கப் போட்டுறக்கப்போ, எழுந்து நடக்குற மாதிரி இருக்கு” - நான் சொன்னேன்.

“யாருக்குத் தெரியும்? ஏதாவது பெரிய நோய் வந்தாலும் வந்திருக்கலாம். இல்லாட்டி - சாகுறதுக்காகப் போறானோ?”

எனக்கு அதைக் கேட்டு கோபம் வந்தது. “நீ என்ன கடவுளா அவனோட மனசைத் தெரிஞ்சுக்கிறதுக்கு?” - நான் அந்தக் கழுதையைப் பார்த்து சொன்னேன்: “ஒரு மனிதனைப் பற்றி கண்டபடி பேசறதுக்கு உனக்கு யார்டி அதிகாரம் கொடுத்தது? அவன் நல்லவன்னோ கெட்டவன்னோ சொல்றதுக்கு நீ யாரு? அவனோட வாழ்க்கையை உன்னோட வார்த்தைகளை வைத்து நீயே முடிக்கிறியா? நீ உண்மையாகவே ஒரு கழுதைதான்...”

நான் இப்படிச் சொன்னதும் அவள் ஒரேயடியாகக் குதிக்க ஆரம்பித்து விட்டாள். “நான் வாயில சொன்னதும், அவன் உடம்புக்கு ஏதாவது ஆயிடுச்சா என்ன? ஆமா... நீங்க ஏன் இப்படி ஒரேயடியா ஆர்ப்பாட்டம் பண்றீங்க?”

“அடியே...” - நான் சொன்னேன். “நாக்கோட விஷயம் ஒரு பக்கம் இருக்கட்டும். நீ அந்த ஆளை பார்த்தாகூட, அது ஒரு விதிதான். உன்னோட பார்வையை அவனால தடுக்க முடியுமா? இல்லாட்டி நீ அப்படிப் பார்க்குறதுக்கு முன்னாடி அவன் உன்னோட கண்களைக் குத்தி குருடா ஆக்கணும். இருந்தாலும் உன்னோட மனசு நினைக்கிறதை அவனால தடுக்க முடியுமா? அதற்காக அவன் உன்னைக் கொன்னு இல்லாம ஆக்கணும். புரியுதா?”

கேட்காதது மாதிரி அவள் வேறு பக்கம் பார்த்தவாறு சொன்னாள்: “அதோ பாருங்க. அந்த ஆள் கருங்கல் சுவர் மேல பிடிச்சு ஏறிக்கிட்டு இருக்கான்!” நான் பார்த்தபோது சுவர் மேல் ஏற்கனவே ஏறி உட்கார்ந்திருந்த சிறுவர்கள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, அந்த ஆள் நடுங்கும் கைகளால் பிடித்தவாறு சுவர் மேல் ஏறிக் கொண்டிருந்தாள். கலங்கரை விளக்கைத் தாண்டி ஆரம்பித்த சுவர் கடலுக்குள் முடிந்தது.

“ஏய் பைத்தியம் இல்ல...” - நான் சொன்னேன்: “மனநிலை பாதிக்கப்பட்ட பைத்தியமாக அந்த ஆளு இருந்திருந்தா, இந்தப் பசங்க அவனைப் பார்த்து கலாட்டா பண்ணி இருப்பாங்க. ஆனா, பசங்க அப்படி எதுவுமே செய்யல.. அவங்க அந்த ஆளை எப்படி மரியாதையுடன் பார்க்குறாங்கன்னு பாரு... ஒரு பெரிய ஆளு எதற்காக நாம இருக்குற இடத்துக்கு வர்றான்ற நினைப்பு மட்டும் அவங்கக்கிட்ட இருக்கு...”

“சின்னப் பசங்களுக்கு என்ன தெரியும்? சாக முயற்சி பண்றது பைத்தியக்காரத்தனம் தானே?”

நான் மணலில் படம் வரைந்து கொண்டிருந்தேன். நான் அவளிடம் சொன்னேன்: “அடியே... பைத்தியம்னா என்ன? வாழணும்னு நினைக்கிறதுக்கும், சாகணும்னு நினைக்கிறதுக்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்கு? இரண்டுமே மனசு சம்பந்தப்பட்ட செயல்களே. சுயஉணர்வுடன் நான் என் வாழ்க்கையில எனக்குச் சரின்னு படுறதைச் செய்றதுக்குப் பேரு பைத்தியக்காரத்தனமா? ஆனால் நான் என் வாழ்க்கையில உன் தலையில அடிக்க வந்தால், அது...”

அப்போது என் மனைவி கத்தினாள்: “என் தெய்வமே...!”

நான் திரும்பிப் பார்த்தபோது அவன் கடலில் குதித்து முடித்திருந்தான். கற்சுவர் வழியாக அவன் ஓடுவதை என் மனைவி பார்த்திருக்கிறாள். நீர் தெறித்ததை அவள் பார்த்தாள் என்பது என் எண்ணம். ஆனால், சூரியன் முழுமையாக மறைந்துவிட்டிருந்தது. இந்தச் சம்பவத்தைப் பார்த்த சிலர் சுவரை நோக்கி ஓடிவந்தார்கள்.

என் மனைவியின் நாக்கு எங்கு போனதோ தெரியவில்லை. அவள் ‘கிடுகிடு’வென நடுங்கிக் கொண்டிருந்தாள். இருந்தாலும் அவள் சொன்னாள்: “நான் அப்பவே சொன்னேன்ல, அந்த ஆளு ஒரு முழு பைத்தியம்னு...”நான் அவளிடம் சொன்னேன். “தெரிஞ்சோ தெரியாமலோ செத்துப் போனவங்களைப் பற்றி பொய் சொல்லாதே!”

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.