Logo

மலை

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6443
malai

யர்ந்து கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் கருங்கால் கூட்டத்திற்கு நடுவில் காவேரி ஒரு வளைந்து போகும் பாம்பைப் போல சீறியவாறு நுரையுடன் பாய்ந்து பாறைகள் மேல் மோதிச் சிதறி படுவேகமாக ஓடும் ஒரு இடம் இருக்கிறது. கருங்கல் பாறைமேல் வேகமாக ஏறி கீழ்நோக்கி காவிரி அலறியவாறு ஓடிக் கொண்டிருக்கிறது. சத்தம் உண்டாக்கும் கருங்கல் கத்தி முனைகளுக்கு நடுவில் வளைந்தும் நெளிந்தும் உயர்ந்தும் தாழ்ந்தும் ஒரு நீளமான வெண்மை நிற வாளைப் போல பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் நதி சிறிது தூரம் சென்ற பிறகு பரந்து ஓடவும் செய்யும்.

அப்போது அதன் ஆரவாரமெல்லாம் முற்றிலும் அடங்கிப்போய் படு அமைதியாக அது இருக்கும். மாலை நேர ஆர்ப்பாட்டங்களும், இரவு நேரத்தின் சாந்தமான சூழ்நிலையும் குடிகொண்டிருக்கும் கரைகளுக்கு நடுவே அது ஓடிச்சென்று கடலைப்போய் அடையும். நான் ஒரு மலை உச்சியில் இருக்கும் ஒரு பாறை மீது அமர்ந்திருக்கிறேன். இங்கே அமர்ந்திருந்தால் என்னால் எல்லா விஷயங்களையும் மணிக்கணக்கில் பார்த்துக் கொண்டிருக்க முடியும். கால் பாதத்தில் இருப்பதைப்போல பாறைகளைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் வெண்மை நிற நதியையும், மாலை நேரத்தின் வரவால் உண்டாகும் நிற மாற்றத்தையும் என்னால் இங்கிருந்து தெளிவாகக் காண முடிகிறது. இரண்டு மூன்று நாட்களாகவே இங்கு வருவதாகச் சொன்ன நண்பர்களை எதிர்பார்த்து நான் மலையடிவாரத்தில் இருக்கும் சத்திரத்திலேயே தங்கியிருந்தேன். மரங்களுக்கு நடுவில் மறைந்துபோய் காணப்படும் ஒரு வெள்ளை நிற கட்டிடம்தான் அந்தச் சத்திரம். அங்கு எப்போதும் ஒரு வேலைக்காரன் இருப்பான். ஒவ்வொரு நாளும் நதியில் மீன்பிடித்து சாப்பிடலாம். குளிர் காற்று வீசும் இரவுகள். பிறகு என்ன வேண்டும்? என் மீது அன்பு செலுத்தியவர்களைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். அன்பு காட்டாமல் இருப்பவர்களை நினைத்துப் பார்த்தேன். அன்பு செலுத்த தகுதி இருக்கிறது என்று நினைத்து திருப்திபட்டுக் கொண்டேன். நன்றாக உறங்குவேன். பகல் முழுக்க உட்கார்ந்து எதையாவது படித்துக் கொண்டிருப்பேன். மாலை நேரம் வந்துவிட்டால் காவிரியின் முடிவற்ற ஆரவாரத்தையும், மேகங்களின் நிற மாற்றத்தையும் இருட்டில் கலந்து காணாமல் போகும் மலைகளையும் பார்த்தவாறு நேரத்தைப் போக்கிக் கொண்டிருப்பேன்.

தனிமை.

கீழே உயர்ந்து கம்பீரமாக நின்றிருக்கும் மலைகளுக்கு நடுவில் ஒரு வெள்ளை நிற சத்திரம்.

காட்டுக்கு மத்தியில் ஒரு வாளை உயர்த்தியிருப்பதைப்போல பாய்ந்தோடும் நதி.

வண்டிகள் ஓடும் பாதையைச் சேர்வது என்றால், இடையில் இருக்கின்ற காட்டின் வழியே பத்து மைல் தூரம் கட்டாயம் நடந்தாக வேண்டும். நான் அங்கு வந்தபிறகு சத்திரத்தில் இருக்கும் வேலைக்காரனைத் தவிர, வேறு யாரையும் பார்த்ததே இல்லை. சத்திரத்தைத் தவிர அங்கு வேறு எந்தவொரு கட்டிடமும் இருப்பதாகவும் தெரியவில்லை. அன்றொரு நாள் மாலையில் பாறைகளைத் தாண்டி கீழே நதி ஓடிக்கொண்டிருக்கும் ஓசையைக் கேட்டவாறு நான் சாவதானமாக நடந்து போய்க் கொண்டிருந்தேன். அப்போது நதிக்கரையில் அந்தப் பழைய வீட்டை நான் பார்த்தேன். மேல் பூச்சு முற்றிலும் இல்லாமற் போய், பாசி படர்ந்த சுவர்களையும் செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்திருக்கும் முற்றத்தையும் கொண்ட வீடு. நான் மிகவும் களைத்துப் போய் இருந்தேன். சற்று தூரத்தில் நின்றவாறு அந்த வீட்டையே ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு, நான் திரும்பிப் போக ஆரம்பித்தேன். யாரோ ஒரு பைத்தியக்காரனை அவனுடைய சொந்தக்காரர்கள் அங்கே கொண்டு வந்து தங்க வைப்பார்கள் என்று அந்த வீட்டைப் பற்றி விசாரித்தபோது, வேலைக்காரன் சொன்னான். இப்போதும் அனேகமாக அந்தப் பைத்தியக்காரன் அந்த வீட்டில் இருக்க வேண்டும். காட்டின் அமைதிச் சூழ்நிலையும், கருங்கற்கள் மீது ஏறி பாய்ந்து கொண்டிருக்கும் நதியும் பைத்தியம் பிடித்திருக்கும் ஒரு மனதிற்கு எந்த அளவிற்கு உதவியாக இருக்கும் என்பதை நான் நினைத்துப் பார்த்தேன்.

நண்பர்கள் இன்னும் வரவில்லை.

குளிரில் இலேசாக நடுங்கியவாறு ஒரு மாலை நேரத்தில் மலையின் உச்சியில் உட்கார்ந்திருந்தபோது, நான் அந்த மனிதனைப் பார்த்தேன்.

அப்போது ஆறு மணி இருக்கும். சூரியன் இன்னும் மறையவில்லை. கீழே நதிக்கு மேலே பனிப்படலம் போர்த்தி விட்டிருந்தது. நல்ல குளிர். மலைகளுக்குப் பின்னால் ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து வரும் ஆரவார ஒலிகளும், முரசு சத்தமும், பயங்கர அமைதியுடன் இருக்கும் மலைகளைத் தாண்டி காற்றில் தவழ்ந்து வந்து ஒலிக்கிறது. இருட்டு மூடி இருக்கும் நெருப்பைச் சுற்றிலும் நின்று உடுக்கை அடித்துக் கொண்டிருக்கும் உருவங்களை மனதிற்குள் நினைத்துப் பார்க்கிறேன். காய்ந்துபோன இலைகள் நெருப்பில் எரிகிற வாசனை... குளிரில் அமைதியாக இருக்கும் மாலை நேரம்... பின்னால் கல்லில் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்கவே, நான் திரும்பிப் பார்த்தேன். அந்த ஆள் என்னை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான். சிறிது தூரத்தில் வருகிறபோதே அவன் என்னை உற்றுப் பார்த்தான். மெலிந்துபோய் காணப்பட்ட உடம்பில் தொங்கிக் கொண்டிருந்த கசங்கிப்போன வெள்ளை நிற ஆடைகள். அந்த மனிதனின் முகத்தில் கோபத்தின் அல்லது கவலையின் நிழல் படிந்திருப்பதை என்னால் உணர முடிந்தது.

“உங்களின் இடத்தை நான் பிடித்துக் கொண்டேனா என்ன?” - நான் மரியாதையான குரலில் கேட்டேன்.

அதற்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை.

அவன் என்னை நோக்கி மெதுவாக நடந்து அருகில் வந்து நின்று சொன்னான்: “இல்ல... இல்ல...”  ஒரு நிமிடம் கழித்து சொன்னான்: “என் அமைதியை யாரோ திருடிட்டாங்க...”

அதைக் கேட்டு, எனக்கு உரத்த குரலில் சிரிக்க வேண்டும்போல் இருந்தது. இதென்னடா புது கதையாக இருக்கிறது! நாடகத்தில் போல நடிக்கிறானா என்ன?

“என்ன?” - நான் அந்த ஆளைப் பார்த்து கேட்டேன். வெறுமனே தமாஷுக்காக ஏதோ சொல்கிறானோ என்று நினைத்தேன். அப்போதுதான் நான் அவனின் முகத்தையே சரியாகப் பார்த்தேன். கவலையின் நிழல்கள் அல்ல... ஆழமான பதிவுகளே அங்கு இருப்பதை என்னால் காண முடிந்தது. அந்த முகத்தில் பயத்தின் சாயல்களைக் கூட பார்க்க முடிந்தது. கவலையால் அவன் முகம் துவண்டு போயிருந்தது.

அவன் என் தோள்களைப் பிடித்து பற்றியவாறு சொன்னான்: “என்னால இந்த உலகத்துல வாழ முடியல...”

நான் அவன் சொன்னதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. அவன் முகத்தில் நான் கண்ட கவலையின் ரேகைகள் என் மனதில் மிகவும் வாட்டத்தை உருவாக்கிவிட்டிருந்தன.


“சொல்லு...” - அவன் ஒரு ரகசியத்தைக் கேட்பதைப் போல மெதுவான குரலில் என்னிடம் கேட்டான்: “பயம் மனதைத் தின்னு கொண்டிருக்கிற ஒரு மனிதன் வாழ்க்கையில என்ன செய்யணும்?”

நான் சிறப்பாக எதுவும் சொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை.

“சரி... என்ன நடந்துச்சு?” - நான் கேட்டேன்.

சூரியன் முழுமையாக மறைந்து விட்டிருந்தான். பனிப்படலம் எல்லா இடங்களிலும் போர்த்தி விட்டிருந்தது. கீழே பனிப்படலத்திற்கு மேலே கண்ணால் பார்க்க முடியாத நதியின் ஓசை கேட்டது. மலை முகட்டில் இருண்டு போயிருந்த குளிர்ச்சியான சூழலில் நாங்கள் இருவரும் இரண்டு சிலைகளைப் போல உட்கார்ந்திருந்தோம். நான் ஒரு பாறையில் உட்கார்ந்தவாறு அந்த ஆளிடம் சொன்னேன்:

“நான் யாருக்கும் அறிவுரை சொல்றது இல்லை. வேணும்னா என்ன நடந்ததுன்னு நீங்க சொல்லலாம். நான் நீங்க சொல்றதைக் கேட்க தயாரா இருக்கேன்... உட்காருங்க...”

அந்த மனிதன் உட்கார்ந்தான். தன்னுடைய சிவப்பேறிப் போயிருந்த கண்களால் என்னையே சிறிது நேரம் அவன் உற்றுப் பார்த்தான். கிளை விட்டு படர்ந்து காற்றில் ஆடும் வேர்கள் தொங்கிக் கொண்டிருக்கும் கோவில் ஆல மரத்தைப் போல சிவந்து படர்ந்த நரம்புகள் அந்த மனிதனின் வெள்ளைப் படலத்தில் எதையோ தேடிக் கொண்டிருந்தன. அவற்றுக்குப் பின்னால் கம்பிகளுக்கு இடையே பார்ப்பது மாதிரி பயம் என்னை எட்டிப் பார்த்தது. அவனின் கன்னங்களில் அச்சத்தால் உண்டான பாதிப்பு வெளிறிப் போய் தெரிந்தது. அவன் இலேசாக நடுங்கிக் கொண்டிருந்தான்.

அவன் மீண்டும் சிறிது நேரத்திற்கு முன் நாடக பாணியில் பேசியது மாதிரியே சொன்னான்: “என் மனசுல ஏகப்பட்ட கவலைகள். என்கிட்ட இருக்குற பயத்துக்கும் அளவே இல்லை. பயம் அணுக்களைப் போல என் உடம்பைக் கொஞ்சம் கொஞ்சமா கடிச்சி தின்னுக்கிட்டு இருக்கு. நான் சுவாசிக்கிற காற்றில் பயத்தோட மணம் கலந்திருக்கு. நான் குடிக்கிற தண்ணியில கூட அது கலந்திருக்கு. நான் சாப்பிடுற உணவுலயும் அது இரண்டறக் கலந்திருக்கு. பயத்தோட உயிரில்லாத எலும்புக்கூடு சதா நேரமும் என் மனசோட அறைகளில் தொங்கிக்கிட்டே இருக்கு. எனக்கு உதவி செய்ய முடியுமா? தனியா போக எனக்கு பயமா இருக்கு. பயம் என்னை விடாம துரத்திக்கிட்டு இருக்கு...”

“அப்படி எது உங்களை விடாம பயப்பட வைக்குது?” - நான் கேட்டேன்.

“ஒரு பிசாசு... ஒரு பிசாசு... பயத்தைத் தர்ற ஒரு பிசாசு. கண்ணால பார்க்க முடியாத, அழுவுற, சத்தம் போட்டு கத்துற ஒரு பிசாசு. நான் அறைக்குள்ள இருந்து அதைக் கேட்டு கேட்டு எனக்கே என்னவோ மாதிரி ஆயிடுச்சு. அங்கே... கீழே... நதிக்கரையிலேதான் என்னோட வீடு இருக்கு. நானும் ரெண்டு வேலைக்காரங்களும் மட்டும் இருக்கோம்!”

“சத்திரத்துல இருந்து கொஞ்ச தூரம் கீழே போனா நதிக்கரையில இருக்குற அந்தப் பழைய வீடா?”

அவன் மேலும் அதிகமாக நடுங்கிக் கொண்டிருந்தான். தன்னைச் சுற்றிலும் பார்த்தான். பிறகு என் பக்கமாய் தலையைக் குனிந்தவாறு சொன்னான்: “இல்ல... இல்ல... அதையும் தாண்டி... அதையும் தாண்டி இருக்குது என் வீடு. அங்கேதான் பைத்தியக்காரன்... அங்கேதான்...” - சொல்லிவிட்டு அவன் நடுங்க ஆரம்பித்தான். எனக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்தான். அவன் மிகவும் பயந்து போயிருப்பதை என்னால் உணர முடிந்தது.

“ராத்திரி நேரம் வந்தா என்னால தூங்கவே முடியல...” - அவன் சொன்னான்: “இருட்டுல இருந்து ஞாபகங்கள் இறங்கி வந்து உருவங்களணிஞ்சு என் கட்டிலைச் சுற்றிலும் நின்னுக்கிட்டு இருக்கு. எல்லாம் சேர்ந்து என்னை பயமுறுத்துது. என்னை ஒரேயடியா தொந்தரவு செய்யுது. மூச்சுவிட முடியாமப் பண்ணுது. குளிர்ந்துபோன சங்கிலியால என்னைக் கட்டிப் போடப் பார்க்குது. என்னால ஒழுங்கா தூங்க முடியல. தூக்கம் வராம நான் விளக்கை கொளுத்துறேன். விளக்கு வெளிச்சத்தைப் பார்த்ததும் அதுக்கு ஒரே பயம். வெளிச்சத்துல அது என்னை ஒண்ணுமே செய்றது இல்ல. அதுனால விளக்கை எரிய வச்சிக்கிட்டு நான் மட்டும் தனியா வராந்தாவுல உட்கார்ந்திடுறேன். காற்று பலமா வீசி மரங்களை ஆட வைக்கிறதையும் கருங்கல்லின் மேல் நதி வேகமா பாய்ஞ்சு ஓடுறதையும் நான் கேட்டுக்கிட்டுத்தான் இருக்கேன். நான் மட்டும் தனியாதான் உட்கார்ந்திருக்கேன். எனக்கு எந்தவித பயமும் இல்லை...”

அந்த மனிதன் அந்த வீட்டில் தனியாக இரண்டு வேலைக்காரர்களுடன் என்ன செய்கிறான் என்பதை அவனிடம் கேட்கவில்லை. அந்த வீட்டை நான் பார்த்ததில்லை. நான் அந்த பகுதிக்கே இதுவரை போனதில்லை. நான் அவனைத் தடுக்கவில்லை.

“நிலவு காய்ந்து கொண்டிருக்கும் இரவு நேரம்தான் எனக்கு ரொம்பவும் பிடிச்சது. என் மனசு அப்போ மட்டும்தான் ரொம்பவும் அமைதியா இருக்கும். நிலா வெளிச்சத்தில நான் முற்றத்துல மெதுவா நடப்பேன். நேற்று கூட நான் தூக்கம் வராம வராந்தாவுல படுத்துக் கிடந்தேன். நிலா வெளிச்சத்தில அசைகிற மரங்கள் வராந்தாவில நிழல்கள் உண்டாக்குவதும் அழிப்பதுமாய் இருந்தன. என் மனசு ரொம்பவும் அமைதியா இருந்துச்சு. ஒரே அமைதி. எந்தவிதமான சலனத்துக்கும் அங்கே இடமில்ல. மனசுல சிந்தனைன்ற ஒண்ணு இல்லாமலே நின்னுடுச்சு. ஒரே சூன்யம். திடீர்னு என்னவோ சத்தம் கேட்டது மாதிரி இருந்துச்சு. நான் காதுகளைத் தீட்டிக்கிட்டு கேட்டேன். யாரோ அழுறதைப்போல இருந்துச்சு. அவ்வளவுதான் - நான் எழுந்து நின்னேன். காட்டுல யாரு அழுறது? நான் ஒரு தூணைப்பிடிச்சு நின்னுக்கிட்டு திரும்பவும் கேட்டேன். சந்திரனை மேகம் முழுமையா மறைச்சிருந்தது. நிலா வெளிச்சம் ரொம்பவும் மங்கலா இருந்துச்சு. அந்த மங்கலான நிலவொளியில மரங்கள் அசைவது இலேசா தெரிஞ்சது. காற்று சின்னதா வீச, இலைகள் அசைஞ்சது. இலைகளோட அசைவு சத்தம் காதுல கேட்டது. நான் பாதையில ஒரு காலை வச்சு நடக்க ஆரம்பிச்சப்போ - ஒரு அலறல் சத்தம் கேக்குது. அவ்வளவுதான் - நான் திடுக்கிட்டுப்போய் வராந்தாவுல வந்து நின்னேன். என் உடம்பு கிடுகிடுன்னு நடுங்க ஆரம்பிச்சிடுச்சு. சுவத்துல சாய்ஞ்சு நின்னு சுற்றிலும் நான் வெறிச்சுப் பார்த்தேன். ஏதாவது சத்தம் வருதான்னு காதைக் கூர்மையாக்கிட்டு கேட்டேன். என்னோட இதயம் டக்டக்னு அடிக்கிறது மட்டும் காதுல கேட்டது. நதி ஓடுற சத்தம் கூட கேட்கல. அந்த அலறல் சத்தம் திரும்பவும் கேட்டது. இப்போ அந்தச் சத்தத்துல ஒரு ஏக்கத்தோட சாயல் தெரிஞ்சது.


தாங்க முடியாத துக்கத்தை வெளிப்படுத்துற மாதிரியான ஒரு அலறல் அது. ஒண்ணு ரெண்டு தடவை அந்த அலறல் சத்தம் பெரிசா கேட்டது. கொஞ்ச நேரத்துல அது தேம்பித் தேம்பி அழுவதா மாறி கடைசியில நின்னே போச்சு. என்னோட வாய் முழுசா வறண்டு போயிருந்துச்சு. குளிரா இருந்தாக்கூட என் உடம்பு பயங்கரமா வேர்த்து ஒழுகிச்சு. என்னால நிற்க முடியல - அப்படியே முடியாம உட்கார்ந்துட்டேன். ஆகாயத்துல ஒரே மேகக் கூட்டம். நிலவு காய்ஞ்சுக்கிட்டு இருந்த வராந்தாவுல பயங்கர இருட்டா இருந்துச்சு. நான் நடுங்கிக்கிட்டே அறைக்குள்ளே போனேன். விளக்கு எங்கே இருக்குன்னு தேடினேன். கையில அது அகப்படல. கட்டிலை இருட்டுல தடவி கண்டுபிடிச்சு, அதுல போய் ஒரு பிணத்தைப்போல படுத்துக் கிட்டேன். கொஞ்சம்கூட அசையாம, மூச்சு விடுறதுக்குக்கூட தைரியம் இல்லாம, ஜன்னல் வழியா பார்க்கக்கூட திராணி இல்லாம நான் அப்படியே கிடந்தேன். ஜன்னல்ல என்னென்னவோ உருவங்கள் தெரியிற மாதிரி எனக்கு தோணுச்சு. நான் மனசுக்குள்ளே வேண்டினேன்: இனிமேல் அந்த அலறல் சத்தம் கேட்கக்கூடாது! இனி கட்டாயம் அது என் காதுல விழக்கூடாது! இனி யாரும் அழவே கூடாது!”

அப்போது அந்தத் தேம்பி அழும் சத்தம் மீண்டும் கேட்டுச்சு. மெதுவா அது  உயர்ந்து ஒரு கூப்பாடு மாதிரி ஆச்சு. ஒரு ஏக்கம், ஒரு அலறல்... கடைசியில அது இரத்தத்தை உறைய வைக்கிற அழுகையா மாறுச்சு. நான் சுய உணர்வே இல்லாத ஒரு மனிதனைப்போல கொஞ்சம் கூட அசையாம கட்டில்லே கிடந்தேன். நான் மனசுக்குள்ள பிரார்த்தனை செஞ்சேன். விரல்களை வாய்க்குள்ள விட்டுக்கிட்டு போர்வையை இழுத்து இறுக்கமா என்மேல போத்திக்கிட்டேன். அந்த அழுகை மீண்டும் இருட்டுக்கு மத்தியில ஒரு நெருப்பு மாதிரி உயர்ந்து பரவி கேட்டது.

அடுத்த நிமிடம் நான் கட்டிலை விட்டு எழுந்தேன். வியர்வை வழிஞ்சிக்கிட்டு இருந்த என்னோட முகத்தை வச்சிக்கிட்டு ஜன்னலின் இருட்டு வழியா வெளியே உற்றுப் பார்த்தேன். இப்போதைக்கு பயம் கொஞ்சம் குறைஞ்சிருந்தது. நான் ஜன்னல் கம்பிகளைப் பிடிச்சிக்கிட்டு செத்துப்போன நிலாவோட பிரேதம் இருக்குற அடர்ந்த காட்டையை பார்த்தேன். எனக்கு இப்போ புரிஞ்சு போச்சு அந்தப் பைத்தியத்தோட வீட்ல இருந்துதான் அந்த அலறல் சத்தம் கேட்டிருக்கு. அழுதது அந்தப் பைத்தியம்தான். அவனை யாரோ கொல்ல பார்க்குறாங்க... அவன்தான் ஏங்குறது, தேம்பித் தேம்பி அழுறது எல்லாமே. பாவம்... ஒண்ணுமே முடியாத பைத்தியம். புத்தி கெட்டுப் போனவன், யாருமே இல்லாதவன். பைத்தியத்தோட அறிவு கெட்டுப்போன மனசுதான் கவலைகளின் சாட்டையடியைத் தாங்க முடியாம அப்படி கூப்பாடு போடுது. அவனோட சுய உணர்வு இல்லாத உடம்பை யாரோ போட்டு அடிக்கிறாங்க. அவனை யாரோ கொல்ல பார்க்குறாங்க. பைத்தியம்னா வேதனை இருக்காதா என்ன? நான் வாசல் கதவைத் திறந்து வெளியே இறங்கி ஓடினேன். அந்தப் பைத்தியத்தோட வீட்டை நோக்கி ஓடினேன். அவனை நான் காப்பாத்தணும். அவனுக்கு உதவி செய்யணும். இருட்ல பாதை தெரியாம நதியோட ஓசையைக் கேட்டுக்கிட்டே நான் அந்த வீட்டைத் தேடிப் போனேன். முன்பக்க கதவு மூடி இருந்துச்சு. பாசி பிடிச்சுப் போயிருந்த ஒரு பழைய கதவு. நான் அதை உடைச்சு திறந்தேன். இருட்டுல அறைக்குள்ளே போய் நின்னேன். அதுக்கு முன்னாடி பார்த்தே இராத அந்த அறையையே வெறிச்சுப் பார்த்தேன். அந்த அலறல் சத்தம் அடுத்த அறையில் இருந்து கேட்டிருக்குமா? ஆமாம்... அடுத்த அறையில் இருந்துதான். அங்கேதான் பைத்தியம் இருக்கான். அவனை நான் காப்பாற்றியே ஆகணும். பக்கத்து அறை கதவை நான் அடிச்சுத் திறந்தேன். அப்போ திடீர்னு நிலா வெளிச்சம் தெரிய ஆரம்பிச்சது. திறந்து கிடந்த ஜன்னல் வழியா நிலா வெளிச்சம் அறைக்குள்ளே வந்தது.

அறையில் யாருமே இல்ல.

நான் மட்டும் தனியா நின்னுக்கிட்டு இருந்தேன். பைத்தியத்தோட அறையில நான் மட்டுமே தனியா... அறையில பைத்தியம் இல்ல. நிலா இப்போ முழுசா மறைஞ்சிடுச்சு. யாரோ நிலாவோட முகத்தைப் பொத்திக்கிட்டாங்க. யாரோ சந்திரனோட கழுத்தை நெறிச்சுக் கொன்னுட்டாங்க.

அறையில யாருமே இல்ல.

நான் இருட்டுல அறையோட நடவுல நின்னு திறந்து கிடந்த ஜன்னலையே பார்த்தேன். எனக்கு ஒரே களைப்பா இருந்துச்சு. தனியா... நான் மட்டும் தனியா... அப்போதான் எனக்கே ஞாபகம் வந்துச்சு...

அந்த மனிதன் வெறித்த பார்வையுடன் எனக்கு அருகில் வந்து நடுங்கிக் கொண்டிருந்த குளிர்ந்துபோன கைகளால் என்னைப் பிடித்தவாறு திக்கித் திணறி சொன்னான்:

“அந்தப் பைத்தியம் இறந்து சில வருஷங்களாச்சே...”

அவன் அமைதியாக அந்த இருட்டில் அமர்ந்து அழுதான்.

இருட்டு அமைதியாக அந்த ஆளை என்னால் சரியாகக் காண முடியவில்லை. இருந்தாலும் அவனின் சிவந்துபோன கண்கள் என்னையே பார்த்துக் கொண்டிருந்ததை உணர முடிந்தது. அவனின் கவலை நிறைந்த முகத்தை இருட்டினூடே என்னால் பார்க்க முடிந்தது. இருட்டில் ஒரு மெலிந்துபோன, வெளுத்த, தளர்ந்துபோன உருவம்... பயத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு ஜந்து!

அந்த ஆள் எழுந்தான். மலையை விட்டு இறங்கி பனிப்படலத்திற்கு மத்தியில் பாறைகளைத் தாண்டி குளிர்ச்சியடைந்து அலறி ஓடிக்கொண்டிருந்த நதியின் சத்தத்தோடு இணைந்து அவன் கரைந்தே போனான்.

நான் தட்டுத் தடுமாறி நடந்து சத்திரத்திற்கு வந்தேன். என் நண்பர்கள் வந்து சேர்ந்திருந்தார்கள். சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, கீழே நதிக்கரையில் இருக்கும் கட்டிடத்தில் இருந்த பைத்தியம் வெளியே குதித்து ஓடிவிட்டது என்று வேலைக்காரன் சொன்னான். அவனைப் பார்க்கும் இரண்டு ஆட்கள் இங்கு அவனைத் தேடி வந்திருக்கிறார்கள். பைத்தியத்தை அடைத்து வைத்திருந்த வீட்டிற்கு அப்பால் வேறு ஏதாவது வீடு இருக்கிறதா என்று விசாரித்தற்கு வேலைக்காரன் சொன்னான்:

“இல்ல...”

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.