Logo

நமக்கு நல்லது காடுகள்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 9057
Namakku Nallathu Kadugal

வைசாகத்தில் நடுப் பகல் நேரம். சூரியன் ‘சுள்’ளென்று சுட்டெரித்துக் கொண்டிருந்தது. வெயில் பட்டு பூமி பயங்கரமாக சுட்டது. கிராமத்தைச் சுற்றியிருக்கும் காடுகள் மீது அலைந்து கொண்டிருந்த வெண் மேகங்கள் கரிய நிழல்களைப் படிய விட்டிருந்தன.

பூர்ணேந்து கிராமத்திலுள்ள தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த கிராமத்து மக்கள் இப்போது கூட அவர்களுக்கு உண்டான அச்சத்திலிருந்து விடுபடவில்லை என்பதே உண்மை.

அவர்களின் ஒருவனான வெங்கய்யாவின் குடும்பத்தில் விழுந்த இடியை அவர்களால் எப்படி மறக்க முடியும்? அதைப் பற்றி நினைத்துப் பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும் அவர்கள் உண்மையிலேயே நடுங்கத்தான் செய்கிறார்கள். இன்று வெங்கய்யாவின் வீட்டில், நாளை தங்களின் வீட்டில் அன்று கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தாழ்ந்த குரலில் தங்களுக்குள்ளேயே பேசிக் கொள்கிறார்கள்.

கரும்பனை ஓலையால் வேயப்பட்ட மண் சுவரால் ஆன குடிசைக்குள் வெங்கய்யா குப்புறப்படுத்து அழுது கொண்டிருந்தான். ஆறுதல் வார்த்தைகள் அவனுடைய துக்கத்தை இரண்டு மடங்கு அதிகமாக்கவே செய்தன. இரண்டு, நான்கு வயது கூட ஆகாத வெங்கய்யாவின் குழந்தைகளை பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் கொண்டு போனார்கள். அவர்கள் வெங்கய்யாவிற்காக கொண்டு வந்த உணவு ஆறிப்போய் விட்டிருந்தது. பசி, தாகம் எதையும் உணர முடியாத நிலையில் இருந்தான் வெங்கய்யா. சொல்லப்போனால் அவன் எந்த உணர்ச்சியும் இல்லாத அளவிற்கு மரத்துப் போயிருந்தான். அவனுடைய வாழ்க்கையில் அவனுக்கென்றிருந்த ஒரே சொத்து அவனிடமிருந்து போய் விட்டது. அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சி முழுமையாக இழக்கப்பட்டிருக்கிறது.

வெங்கய்யாவின் மனைவி காணாமல் போய் நான்கு நாட்களாகி விட்டன. அவளைத் தேடாத இடமில்லை. கிணறு, குளம் எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தாகிவிட்டது. ஒரு பைத்தியம் பிடித்த மனிதனைப் போல தன் மனைவியின் பெயரைச் சொல்லி அழைத்தவாறு பகல் முழுக்க வெங்கய்யா ஒவ்வொரு இடமாக அலைந்து திரிந்தான். அவனுடைய மனைவியை யாருமே பார்க்கவில்லை.

வாழ்க்கையில் இவ்வளவு கொடுமையான ஒரு அவமானத்தை எந்தப் பெண்ணும் அனுபவித்திருக்க மாட்டாள். எந்தக் குற்றமும் செய்யாமலே அவளுக்கு இப்படிப்பட்ட ஒரு கடினமான தண்டனை! அந்தத் தண்டனை அவள் மீது வலிய திணிக்கப்பட்டது என்பது உண்மை.

ஒரு ஞாயிற்றுக் கிழமை ‘எஜமானின்’ வயல்களில் ஆறு நாட்கள் பகல், இரவு என்று வேலை செய்த மனிதர்கள் அவரவர்களுக்குச் சொந்தமான குடிசைகளில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது திடீரென்று அறிமுகமே இல்லாத சிலர் கிராமத்திற்குள் நுழைந்தார்கள். அவர்களின் பார்வையும், நடத்தையும், உடையும் பயப்படக்கூடிய விதத்தில் இருந்தன. அவர்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்களிடம் நகரத்திற்கே உரிய பகட்டுத்தனங்கள் இருந்தன.         

அவர்களைப் பார்த்ததும் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் வியப்புடன் நோக்கினார்கள். கழியை ஊன்றிக் கொண்டு வெயில் காய்ந்து கொண்டிருந்த வயதான மனிதர்களின் குழி விழுந்த கண்களில் பயம் நிழலாடியது.

அவர்கள் வெங்கய்யாவின் வீடு எங்கு இருக்கிறது என்று கேட்டார்கள். வெங்கய்யாவின் வீடு மட்டுமே அவர்களின் குறியாக இருந்தது. சிறுவர்கள் எதுவும் பேசவில்லை. வயதான மனிதர்களும் வாயைத் திறக்கவில்லை. பயமுறுத்தியபோது சிறுவர்கள் அஞ்சி நடுங்கினார்கள். கடைசியில் சற்று வயது கூடுதலான ஒரு சிறுவன் வெங்கய்யாவின் வீட்டை அவர்களுக்கு காட்டினான்.

சிறுவர்கள் ஓடிப் போய் வயதான பெரியவர்களிடம் விஷயத்தைச் சொன்னார்கள். கிராமத்திலுள்ள ஆண்களும் பெண்களும் தங்களின் வீடுகளை விட்டு வெளியே வந்தார்கள். அவர்களிடம் கேள்வி கேட்க முயன்ற நாராயணன் என்ற மனிதனுக்கு நேராக அவர்கள் துப்பாக்கியைத் தூக்கிக் காட்டினார்கள். துப்பாக்கியைப் பார்த்ததும் ஆண்களும் பெண்களும் அவரவர்களின் வீடுகளுக்குள் ஓடிப் போய் ஒளிந்து கொண்டார்கள்.

‘‘வெங்கய்யா...’’ - அவர்களின் நடுங்கச் செய்யும் குரல் கிராமம் முழுவதும் எதிரொலித்தது.

வெங்கய்யாவின் மனைவி வெங்கம்மா குடிசைக்குள் உணவு தயார் பண்ணிக் கொண்டிருந்தாள்.

அவள் காதில் வந்த மனிதர்களின் குரல் கேட்டது. அந்த ஆணின் குரல் அதற்கு முன்பே அவளுக்கு அறிமுகமில்லாத ஒன்று.

மீண்டும் ‘வெங்கய்யா’ என்ற பெயர் முழங்கியபோது அவள் உறங்கிக் கொண்டிருந்த தன் கணவனைத் தட்டி எழுப்பினாள்.

அவன் குடிசையை விட்டு வெளியே வந்தான். அவனுக்கு முன்னால் அந்தப் புதிய மனிதர்கள் நின்றிருந்தார்கள். அவர்கள் வெங்கய்யாவை வெறித்துப் பார்த்தார்கள். வெங்கய்யா குனிந்து அவர்களை வணங்கினான்.

அவர்கள் வெங்கய்யாவின் அருகில் வந்தார்கள். அவர்களைப் பார்த்த வெங்கய்யா பயந்து போய்விட்டான். எதுவும் கேட்க அவனுக்கு நாக்கு வரவேயில்லை.

அவர்களின் ஒருவன் கத்தியைக் காட்டியவாறு கேட்டான்:

‘‘உன் பொண்டாட்டி எங்கே?’’

வெங்கய்யா தாழ்ந்த குரலில் கேட்டான்:

‘‘நீங்கள் யாரு சுவாமிகள்?’’

அதற்குப் பதில் சொல்வதற்கு பதிலாக வெங்கய்யாவிற்கு ஒரு அடி கிடைத்தது. வெட்டப்பட்ட வாழையைப் போல வெங்கய்யா குப்புறப் போய் விழுந்தான். அவனுக்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. காதில் வண்டுகள் ரீங்காரமிடுவதைப் போல் உணர்ந்தான். அவன் மெதுவாக தரையை விட்டு எழுந்தான். அவனின் உதட்டோரத்தில் இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது.

‘‘உன் பொண்டாட்டியை எங்கே?’’

கத்தி முனையை அவனுடைய நெஞ்சின் மீது வைத்தவாறு ஒருவன் உரத்த குரலில் கேட்டான். அவனுடைய குரல் கிராமத்தில் எல்லா பக்கங்களிலும் எதிரொலித்தது.

‘‘அவளை ஒழுங்கா வெளியே கொண்டு வர்றியா இல்லியா?’’ - அவன் மீண்டும் கத்தினான். வெங்கய்யாவிற்கு எதுவுமே புரியவில்லை. அவன் என்னவோ சொல்ல முயன்றபோது, அவர்கள் அவனை அருகிலிருந்த மரத்தோடு சேர்த்து கட்டி வைத்து அடித்தார்கள்.

தன் கணவனை அவர்கள் அடிப்பதைப் பார்த்த வெங்கம்மா கிராமத்திலுள்ள ஒவ்வொரு பெயரையும் சொல்லி அவர்களை உதவிக்கு வரும்படி அழைத்தாள். ஆனால் யாரும் வெளியே வரவில்லை.

வெங்கம்மா தன் குழந்தைகளை மார்போடு சேர்த்து பிடித்துக் கொண்டு பயந்து நடுங்கிக் கொண்டிருந்தாள். குழந்தைகள் வீறிட்டு அழுது கொண்டிருந்தன.

வந்திருப்பவர்கள் ‘‘எஜமான்’’ அனுப்பி வைத்த ஆட்கள் என்பதை அவள் புரிந்து கொண்டாள்.

‘‘எஜமானின்’’ சகோதரி ஒரு புரட்சிக்காரனுடன் வீட்டை விட்டு ஓடிப் போனதற்கு அவள் மாட்டிக் கொண்டாள். அவள்தான் அவர்கள் ஓடியதற்கு உதவி செய்தவள் என்று ‘‘எஜமான்’’ மனதில் நம்பிக் கொண்டிருக்கிறார். தனக்கு அதைப் பற்றி எதுவுமே தெரியாது என்று கண்ணீர் மல்க கூறினாள். வெங்கம்மா ‘‘சௌடம்மாதேவி’’ மீது சத்தியம் பண்ணி சொன்னாள். ‘‘வாழ்க்கை முழுவதும் எஜமானுக்கு விசுவாசமா சேவை செய்தவங்க நாங்க. எஜமானுக்கு நாங்க துரோகம் பண்ணுவோமா? எஜமான், என்னை நம்புங்க. என் குழந்தைகள் மேல சத்தியமா சொல்றேன்’’ என்று அவள் எவ்வளோ சொல்லிப் பார்த்தாள்.


இரண்டு குண்டர்கள் வீட்டிற்குள் வந்தார்கள். அவர்களைப் பார்த்து பயந்து நடுங்கிய குழந்தைகள் தங்கள் தாயைக் கட்டிப் பிடித்துக் கொண்டு உரத்த குரலில் அழத் தொடங்கினார்கள்.

அவர்கள் வெங்கம்மாவைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார்கள். அதைப் பார்த்து வெங்கம்மா நடுங்கினாள். அவள் தரையில் குழந்தைகளை உட்கார வைத்தவாறு அவர்களைப் பார்த்து கைகளைக் கூப்பினாள். கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. தான் எந்தவொரு தப்பையும் செய்யவில்லை என்று அவள் கெஞ்சியவாறு சொன்னாள். தன் கணவனையும் தன்னையும் தேவையில்லாமல் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று அவள் திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டாள்.

அவர்கள் அவள் சொன்னதைச் சிறிது கூட காதில் போட்டுக் கொள்ளவில்லை. அதைக் கேட்பதற்கும் அவர்கள் தயாராக இல்லை. அவர்கள் மெதுவாக அவளை நோக்கி வந்தார்கள். இரை மீது பாய்ந்து விழும் மிருகத்தைப் போல அவர்கள் வெங்கம்மா மீது பாய்ந்தார்கள். அவள் வாய் விட்டு அழுதபோது, அவர்களில் ஒருவன் அவளின் வாயைக் கையால் பொத்தினான். தங்களின் தாயை முரடர்கள் நெருங்கி அட்டகாசம் செய்வதைப் பார்த்த சிறு குழந்தைகள் உரத்த குரலில் அழத் தொடங்கினார்கள். குழந்தைகளின் அழுகைச் சத்தம் பூர்ணேந்து கிராமம் முழுக்க கேட்டது. ஆனால், ஓருவர் கூட அவர்களுக்கு உதவ வெளியே வருவதாகத் தெரியவில்லை. முழு கிராமமும் நடுக்கத்தில் உறைந்து போனது. என்ன செய்வதென்று தெரியாமல் கிராமத்து மக்கள் மரத்துப் போய் விட்டனர்.

அந்த குண்டர்கள் வெங்கம்மாவை வெளியே இழுத்தார்கள். அவளின் ஆடைகளை ஒவ்வொன்றாக அவர்கள் நீக்கினார்கள். அதைத் தடுக்க முயன்றபோது, அவர்கள் வெங்கம்மாவின் கைகளை அவளுக்குப் பின்னால் வைத்து கட்டினார்கள்.

அவளை முழு நிர்வாணமாக்கி வெங்கய்யாவின் முன்னால் அவர்கள் கொண்டு போய் நிறுத்தினார்கள். அவன் ஒரு நிமிடம் கண்களை மூடியபடி நின்றான். தொடர்ந்து தன்னுடைய கட்டில் இருந்து விடுபட முடிந்த மட்டும் முயற்சி பண்ணி பார்த்தான்.

பூர்ணேந்து கிராமம் பயத்தால் நடுங்கி நின்றது. கிராமத்து மக்கள் அடைக்கப்பட்ட கதவுகளின் இடைவெளியில் என்ன நடக்கிறது என்று பார்த்தார்கள். அவர்களின் நாக்குகள் செயல்படாமல் ஒட்டிப் போய் விட்டன. தொண்டை முழுமையாக வற்றிப் போய் விட்டிருந்தது. தங்களுடைய கிராமத்தில் தங்களுடன் சம்பந்தப்பட்ட ஒரு குடும்பத்திற்கு நேர்ந்த துன்பதைப் பார்த்து அவர்கள் பயந்து போய் எதிர்ப்பு கூட காட்டாமல் இருந்தார்கள்.

முழு நிர்வாணமாக ஆக்கப்பட்ட வெங்கம்மாவை அவர்களின் கிராமத்தின் சாலை வழியே நடத்திக் கொண்டு போனார்கள். அவளுக்கு இடது பக்கத்திலும் வலது பக்கத்திலும் முன்னாலும் பின்னாலும் குண்டர்கள் உடன் வந்தார்கள்.

கிராமத்தின் மையப் பகுதியில் வெங்கம்மாவைக் கொண்டு போய் அந்த குண்டர்கள் நிறுத்தினார்கள். அவர்கள் கிராமத்து மக்களின் கதவுகளை காலால் மிதித்தார்கள். எல்லோரையும் வெளியே வரும்படி சொன்னார்கள். கிராமத்து மக்கள் அவர்கள் சொன்னபடி தங்கள் வீட்டு கதவுகளை திறந்து வெளியே வந்தார்கள். ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் எல்லோருமே வெளியே வந்தார்கள். அப்படி வந்தவர்கள் முழு நிர்வாணமாக நின்றிருந்த வெங்கம்மாவைப் பார்த்து அதிர்ச்சியடைந்து போனார்கள். பெண்கள் தங்களின் கண்களை மூடிக் கொண்டு அடுத்த நிமிடம் வீடுகளுக்குள் வேகமாக ஓடி மறைந்து கொண்டார்கள்.

குண்டர்கள் கிராமத்து மக்களைப் பார்த்து சொன்னார்கள்: ‘எஜமான்கிட்ட விளையாடினா இதுதான் நடக்கும்’. வெங்கம்மா அவர்கள் முன்னால் வேட்டையாடப்பட்டு காயம் பட்ட மிருகத்தைப் போல பரிதாபமாக நின்றிருந்தாள். அவளின் கள்ளங்கபடமில்லாத பார்வை கிராமத்து மக்களின் மனதை என்னவோ செய்தது. ஆனால், துப்பாக்கிகளுக்கு முன்னால் அவர்கள் செயலற்றவர்களாகி விட்டார்கள். எதுவுமே பேசாமல் அவர்கள் அமைதியாக நின்றிருந்தனர்.

முழு கிராமமும் பார்த்து நிற்க, அந்த குண்டர்கள் வெங்கம்மாவின் மார்பகத்தைக் கையால் பிசைந்தார்கள். அவளின் கன்னத்தை தங்களின் விரல்களால் தடவினார்கள். அப்போது அவர்கள் செய்த அட்டகாசம் ஒரு எல்லையைத் தாண்டி இருந்தது. பிசாசுத்தனமான ஆனந்தத்தை அனுபவிப்பதைப் போல அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

வெங்கய்யாவின் நண்பன் நாராயணனால் அதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவன் உரத்த குரலில் கத்தியவாறு முன்னால் வேகமாக வந்தான். குண்டர்கள் அவன் மீது பாய்ந்தார்கள். அவனுடைய மனைவியும் தாயும் தந்தையும் குண்டர்களின் கால்களில் விழுந்து அவனை மன்னிக்கும்படி சொன்னார்கள். அவர்கள் நாராயணனை வெறுமனே விட்டார்கள்.

நாராயணனன் உரத்த குரலில் சொன்னான்:

‘‘அடிமைகள்... நீங்க எல்லாரும் அடிமைகள். இவ்வளவு பெரிய அவமானம் நடக்குறப்போ, ஒருத்தன் கூட வாய் திறந்து பேசலைன்னா எப்படி?’’

நாராயணன் தரையைப் பார்த்து காரித் துப்பினான். குண்டர்கள் வெங்கம்மாவிடம் கிண்டல் குரலில் சொன்னார்கள்:

‘‘இனி யாராவது ஏதாவது பண்ணினா இவங்க முன்னாடி நாங்க உன்னை கற்பழிக்க ஆரம்பிச்சிடுவோம். புரியுதாடி?’’

வெங்கம்மா ஒரு வார்த்தை கூட பேசாமல் ஒரு சிலையைப் போல நின்றிருந்தாள்.

ஒரு பெரிய காரியத்தைச் சாதித்து முடித்ததைப் போல குண்டர்கள் கிராமத்தை விட்டு நீங்கியபோது, பெண்கள் ஆடைகளைக் கொண்டு வந்து வெங்கம்மாவின் நிர்வாணக் கோலத்தை மறைத்தார்கள். அப்போதும் எதுவும் சொல்ல முடியாத நிலையில் தூரத்தில் எங்கோ பார்வையைப் பதித்தவாறு ஒரு சிலையைப் போல நின்றிருந்தாள் வெங்கம்மா.

கட்டுகள் அவிழ்க்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட வெங்கய்யா ஒரு சிறு குழந்தையைப் போல வாய்விட்டு அழுதான். அவனுடன் சேர்ந்து கிராமத்து பெண்களும் தங்களின் மார்பில் அடித்துக் கொண்டு உரத்த குரலில் கூப்பாடு போட்டு அழுதார்கள். அவர்கள் சௌடம்மாதேவியிடம் தங்களின் குமுறலைச் சொன்னார்கள். தாங்கள் அப்பிராணி ஏழைகளென்றும், எதுவுமே செய்ய முடியாத நிலையில் இருப்பவர்களென்றும், அவர்கள் தெய்வத்திடம் முறையிட்டார்கள்.

கிராமத்திலேயே மிகவும் வயதான கிழவனான கோவிந்தலு வெங்கய்யாவின் தோளில் கை வைத்து தழ  தழத்த குரலில் சொன்னான்:

‘‘நம்மால என்ன செய்ய முடியும் மகனே?’’

வெங்கய்யா அப்போதும் அழுது கொண்டுதானிருந்தான். ஆனால், வெங்கம்மாவின் கண்கள் வற்றி, வறண்டு போன குளத்தைப் போல இருந்தன.

யாரோ வெங்கய்யாவையும், அவனுடைய மனைவியையும் அவர்களின் குடிசைக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். அன்று இரவு தூங்கிக் கொண்டிருந்த தங்கள் பிள்ளைகளின் அருகில் மனைவியும் கணவனும் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். அவ்வப்போது வெங்கம்மா நீண்ட பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். பூமியிலிருந்து ஆவேசத்துடன் எரிமலையை விட உஷ்ணம் மிக்கதாக இருந்தது அவளின் மூச்சு.

வெங்கய்யா மனைவியின் தலையைப் பாசத்துடன் தடவியவாறு சொன்னான்:

‘‘நீ என்னைக்கும் என்னோடவதான் வெங்கம்மா.’’


வெங்கம்மா அடுத்த நிமிடம் தாங்க முடியாமல் குமுறிக் குமுறி அழுதாள்.

‘‘இல்ல... நான் உங்களுக்கு தகுதி இல்லாதவளா ஆயிட்டேன்...’’

‘‘இல்ல... ஒருநாளும் இல்ல...’’

‘‘நான் எல்லாத்தையும் இழந்துட்டேன்...’’

‘‘இல்ல... செய்யாத தப்புக்கு வாழ்நாள் முழுவதும் ஆத்மார்த்தமா வேலை செய்த நம்மளை ‘எஜமான்’ இரக்கமே இல்லாம தண்டிச்சிட்டாரு.’’

இதைச் சொன்னபோது அவனின் குரல் தடுமாறியது. கண்களிலிருந்து நீர் ஆறென வழிந்தது. அருகில் படுத்திருந்த மகனைக் கையால் தடவியபடி வெங்கம்மா சொன்னாள்:

‘‘இவனோட அம்மாக்கிட்ட காட்டிய அநியாயத்தையும் அநீதியையும் நம்ம மகன்கிட்ட நீங்க கட்டாயம் சொல்லணும்.’’

‘‘எங்கம்மா...’’ - அவன் மனைவியின் தோளில் தன் தலையைச் சாய்த்தவாறு உரத்த குரலில் ஓலமிட்டான்.

தன் கணவனின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி வெங்கம்மா சொன்னாள்:

‘‘நாம எதற்குமே லாயக்கு இல்லாதவங்களா ஆயிட்டோம். நம்ம பிள்ளைங்க பழிக்கு பழி வாங்குவாங்க....’’

இரண்டு பேரும் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு படுத்தார்கள்.

பொழுது புலர்ந்தபோது தனக்கருகில் தன்னுடைய மனைவி இல்லை என்பதை வெங்கய்யா தெரிந்து கொண்டான். முதல் நாள் தன் மனைவியுடன் கட்டிப் பிடித்து படுத்திருந்தது அவனுடைய ஞாபகத்தில் வந்தது.

வெங்கம்மாவின் பெயரைச் சொல்லி அவன் உரத்த குரலில் அழுததைக் கேட்டு முழு கிராமமும் விழித்துக் கொண்டது. கிராமத்து மக்கள் வெங்கய்யாவின் குடிசைக்கு முன்னால் திரண்டு நின்றார்கள். அவன் தன் மார்பில் அடித்துக் கொண்டு அழுதான்.

‘‘என் வெங்கம்மாவைக் காணோம் கோவிந்து காரு.’’

பகல் முழுவதும் அவன் ஒரு பைத்தியம் பிடித்த மனிதனைப் போல தன் மனைவியின் பெயரை அழைத்தவாறு வயல் வெளிகளில் ஓடிக் கொண்டிருந்தான். கிணறுகளையும் குளங்களையும் போய் பார்த்தான். அவனின் குரல் காடுகளில் எதிரொலித்தது.

இரண்டு நாட்கள் வெங்கய்யா எதுவும் சாப்பிடாமல், குடிக்காமல் நெஞ்சில் அடித்தவாறு புலம்பிக் கொண்டு தன் குடிசைக்குள்ளேயே இருந்தான்.

எஜமானின் வயலில் வேலை செய்வதற்காக அவனை அழைக்க கணக்குப் பிள்ளை வந்தார்.

‘‘அவள் போகட்டும் வெங்கய்யா. பெண்கள் கிடைக்கிறதா கஷ்டம்’’

அவ்வளவுதான் - வெங்கய்யா உரத்த குரலில் கத்தியவாறு வெட்டுக்கத்தியை எடுத்துக் கொண்டு அந்த மனிதருக்குப் பின்னால் ஓடினான்.

மூன்றாவது நாள் மீண்டும் அவனை அழைக்க ஆள் வந்தது.

‘‘போலீஸ் உன்னை கூப்பிடுது வெங்கய்யா.’’

வெங்கய்யா வெறித்துப் பார்த்தான் : ‘‘போலீஸா ? என்னையா ?’’

தன்னுடைய மனைவியின் பிணம் ஒரு வேளை போலீஸ்காரர்களிடம் கிடைத்திருக்குமோ ? தண்ணீர் குடித்து வீங்கிப் போய் காயங்களுடன், காட்டு மிருகங்கள் கடித்துத் தின்ற தன்னுடைய மனைவியின் இறந்து போன உடலை அடையாளம் கண்டு பிடிப்பதற்காக தன்னை போலீஸ் அழைக்கிறதோ ? இப்படி நினைத்தவாறு உட்கார்ந்திருந்தாள் வெங்கய்யா.

தான் எங்கிருக்கிறோம், என்ன செய்கிறோம் என்ற உணர்வே அவனுக்கு இல்லாமலிருந்தது.

‘‘வெங்கய்யா காரு, சீக்கிரம் வா...’’

‘‘எதுவும் பேசாமல் கனவில் நடக்கும் ஒரு மனிதனைப் போல வெங்கய்யா தேடி வந்த மனிதனுக்குப் பின்னால் நடந்தான்.

போகும் வழியில் கிராமத்திற்கு வெளியே ஒரு மரத்தின் கீழேயிருந்த சௌடம்மம தேவியின் சிலையின் முன்னால் அவன் நின்றான். அவன் தேவியையே வெறித்துப் பார்த்தான். தேவியின் தலையில் சில நாட்களுக்கு முன்பு பலி தந்த ஆட்டு இரத்தம் காய்ந்து போய் காணப்பட்டது. இப்போது அவன் பலி கொடுத்தது தன்னுடைய மனைவியை... வெங்கம்மாவை... தன்னுடைய எல்லாமுமாக இருந்த வெங்கம்மாவை.

‘‘பழிக்குப் பழி வாங்குற கடவுளாகவும், கோபம் கொண்ட மகா காளியாகவும், கிராமத்தைக் காத்து நிக்கிற தேவியாகவும் இருக்குற நீ என் வெங்கம்மாவை முழு நிர்வாணமாக்கி கிராமத்து வீதிகள் வழியா நடத்திக் கொண்டு போனப்போ... அவளை அவமானப்படுத்தினப்போ... மவுனமா இருந்தே... கண்களை மூடிக்கிட்டு இருந்தே, இல்லியா ? இப்போ என் வெங்கம்மாவைக் காணோம். அவ எங்கே போனா ? நீ ஒரு சிலை சாதாரண சிலை... உன்னால் பார்க்க முடியுமா ?- பேசத்தான் முடியுமா ?’’

வெங்கய்யா தேவியின் மீது காரித் துப்பினான். தேவியை மிதிப்பதற்காக காலைத் தூக்கிய போது உடனிருந்த ஆள் வந்து பிடித்து அவனை அதைச் செய்ய விடாமல் தடுத்தான்.

‘‘என்ன செய்யிறீங்க காரு ?’’

வெங்கய்யா எதுவும் பேசாமல் தலையைக் குனிந்தவாறு அந்த ஆளைப் பின்பற்றி நடந்தான். போகும்போது வெங்கய்யா மெதுவான குரலில் என்னவோ முனகிக் கொண்டே இருந்தான்.

எஜமானின் வீட்டைத் தாண்டியிருக்கும் ஆலமரத்திற்குக் கீழே கிராமத்து மக்கள் ஏராளமாக கூடி நின்றிருந்தார்கள். உயரமான மேடை மீது எஜமான் உட்கார்ந்திருந்தார். அவருக்கருகில் போலீஸ்காரன் நின்றிருந்தான்.

வெங்கய்யாவைப் பார்த்ததும், அங்கு ஒருவித சலசலப்பு உண்டானது. அவன்  எல்லோரையும் பார்த்தான். எஜமானையும், போலீஸ்காரனையும் பார்த்து தலையைக் குனிந்து வணங்கினான். தொடர்ந்து மற்றவர்களுடன் போய் நின்று கொண்டான்.

ஆலமரத்தின் இலைகள் காற்றில் விழுந்து ஓடி ஓசை உண்டாக்கின. மரத்தின் கிளைகளில் அமர்ந்திருந்த பறவைகள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் சத்தம் போட்டுக் கொண்டே இருந்தன. மரத்திற்குக் கீழே வாயை மூடிக் கொண்டு கிராமத்து மக்கள் நின்றிருந்தனர்.

‘‘வெஙகய்யா உன் பொண்டாட்டியை எங்கே ?’’

‘‘நாகு தெலிது சாமி...’’

அடுத்த நிமிடம் போலீஸ்காரனின் குரல் உயர்ந்தது.

‘‘நீ அவளை எங்கேயோ மறைச்சு வச்சிருக்கே !’’

அதைக் கேட்டு வெங்கய்யாவின் மனதிற்குள் நெருப்பு பற்றியெறிந்தது. கண்களில் தீப்பொறி பறந்து கொண்டிருந்தது. உள்ளே சிங்கங்கள் கர்ஜித்தன.

‘‘எஜமானோட சகோதரி இன்னொருத்தன் கூட வீட்டை விட்டு ஓடுறதுக்கு உன் பொண்டாட்டி உதவியா இருந்திருக்கா. உன் மனைவி பேர்ல அரெஸ்ட் வாரண்ட் வந்திருக்கு...’’

வெங்கய்யா எதுவும் பேசாமல் கையைக் கட்டிக் கொண்டு நின்றான்.

நாராயணன் என்ற அந்த இளைஞன் ஆட்களுக்கு மத்தியிலிருந்து எழுந்தான்.

‘‘சாமி... பாவம் இந்த வெங்கய்யாவோட பெண்டாட்டியை மூணு நாட்களுக்கு முன்னாடி குண்டர்கள் முழு நிர்வாணமா ஆக்கி தெருத் தெருவா அழைச்சிட்டு போனாங்க...’’

‘‘நீ பேசாம இருக்கிறியா என்ன ?’’ - போலீஸ்காரன் எச்சரித்தான்.

‘‘உங்களுக்கு நான் சொன்னதுல நம்பிக்கை இல்லைன்னா கிராமத்து ஆளுங்கக்கிட்ட கேட்டு பாருங்க, சாமி...’’

போலீஸ்காரன் எஜமானைப் பார்த்தான்.

எஜமான் சொன்னார் :

‘‘கேட்டு பாரு சாமி...’’

போலீஸ்காரன் கிராமத்து மனிதர்களைப் பார்த்து கேட்டான் :

‘‘இந்த இளைஞன் சொல்றது உண்மையா ?’’

ஒரே அமைதி.


கிராமத்து மனிதர்கள் தலையைக் குனிந்து நின்றிருந்தார்கள். போலீஸ்காரன் திரும்ப திரும்ப கேட்டும் அவர்கள் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தனர். அவர்கள் தங்கள் தலையைத் தூக்கவேயில்லை. உதடுகளைப் பிரிக்கவில்லை. அவ்வப்போது சிலரின் மூச்சு விடும் சத்தம் மட்டும் கேட்டது.

‘‘இதோட அர்த்தம் என்ன தெரியுமா ? உனக்கும் இந்த வழக்குல பங்கு இருக்கு. அப்படித்தானே ?’’

போலீஸ்காரன் நாராயணனைப் பார்த்து சொன்னான்.

‘‘சாமி...’’ - வெங்கய்யா தாழ்வான குரலில் தொழுதவாறு கெஞ்சினான் :

‘‘என் பொண்டாட்டியை ஒரு தடவை பார்க்க எனக்கு உதவ முடியுமா ?’’

அவனின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

‘‘உன் பொண்டாட்டி காணாமல் போனதுல, உனக்கு எஜமான் மேல சந்தேகம் இருக்கா ?’’

வெங்கய்யா ஒரு நிமிடம் என்னவோ சிந்தித்து விட்டு சொன்னான் :

‘‘நான் சந்தேகப்பட்டு என்ன ஆகப் போகுது ? சந்தேகப்படாம இருந்துட்டு என்ன ஆகப் போகுது ?

‘‘உனக்கு சந்தேகம் இல்லைன்னா இந்த தாள்ல எழுதி கையெழுத்துப் போடு...’’

‘‘கையெழுத்துப் போட எனக்குத் தெரியாது சாமி...’’

போலீஸ்காரன் சுட்டிக் காட்டிய இடத்தில் வெங்கய்யா கையொப்பமிட்டான். எஜமானின் உதடுகளின் ஒரத்தில் ஒரு புன்சிரிப்பு மலர்ந்தது.

மக்கள் அந்த இடத்தை விட்டு நீங்கிய போது நாராயணன் வெங்கய்யாவைப் பார்த்து கோபப்பட்டான்.

‘‘நாராயணன்... உன் பொண்டாட்டி விதவையா நிக்கிறதை நான் விரும்பல. நமக்கு சக்தி இல்ல நாராயணன். என் பொண்டாட்டியைக் காப்பாற்ற உன்னைத் தவிர இந்த ஊர்ல ஒருத்தனாவது முன்னாடி வந்து நின்னானா? நம்மால எதுவுமே செய்ய முடியாது. நாம அப்பிராணிங்க...’’

வீட்டிற்கு வந்த வெங்கய்யா தன் பிள்ளைகளை மடியில் உட்கார வைத்து, அவர்களை முத்தமிட்டான். ‘‘அம்மா எங்கே நயினா?’’ என்று கேட்ட அவர்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அவன் தேம்பித் தேம்பி அழுதான்.

கிராமத்தில் யாருக்காவது கஷ்டம் என்று வந்தால் வெங்கம்மா அவர்களுக்கு உதவுவதற்காக போய் நிற்பாள். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வாள். யாரும் கஷ்டப்படுவதை அவளால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஆனால், துன்பம் அவளை வந்து அணைத்தபோது, உதவுவதற்கு யாருமே இல்லை. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார்கள்.

அன்று இரவு அவன் பிள்ளைகளுக்கு சோறு உண்டாக்கிக் கொடுத்தான். ‘‘அம்மா இப்போ வருவா’’ என்று கூறி அவர்களைச் சமாதானப்படுத்தினான். அவர்களை இறுக அணைத்து, நெற்றியில் முத்தமிட்டு தூங்க வைத்தான். அப்போது அவன் மனம் எங்கோ அலைந்து கொண்டிருந்தது.

நடு ராத்திரி நேரத்தில் அவன் உறக்கம் வராமல் படுத்திருந்த போது வெளியே  இருந்து ஒரு இனிய குரல் கேட்டது. அந்தக் குரல் தன் வெங்கம்மாவிற்குச் சொந்தமானது என்பதை அவன் புரிந்து கொண்டான். அவள் அவனை அழைக்கிறாள். காதல் மேலோங்க அழைக்கிறாள்.

‘‘வாங்க... நாம காடுகளை நோக்கி போவோம். அங்கேயிருக்குற மிருகங்கள் கூட  நம்மைத் தொந்தரவு செய்யாது...’’

வெங்கய்யா மெதுவாக கதவைத் திறந்து சுற்றிலும் பார்த்தான்.

யாருமில்லை. ஆனால், அந்த வார்த்தைகள் அடுத்தடுத்து அவன் காதில் கேட்டுக் கொண்டேயிருந்தன. எந்தவித சலனமும் இல்லாமல் இருக்கும் கிராமம்... மூடிக் கிடக்கும் இருட்டு... நட்சத்திரங்களே இல்லாத வானம்....

அடுத்த நாள் காலையில் ஊர் மக்கள் பார்த்தது வெங்கய்யாவின் திறந்து கிடக்கும் வீட்டைத்தான். அந்த வீட்டில் வெங்கய்யா இல்லை. வெங்கய்யாவின் குழந்தைகளும் இல்லை.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.