Logo

மலைச்சரிவுகளில்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6535
malai charivugalil

வள் பெட்டியில் பொருட்களை அடுக்கி வைக்கும்போதுதான் அவன் வந்தான். மின்சார வெளிச்சம் நிறைந்த அந்த அறையில் அந்தச் சமயத்தில் அவன் வருவான் என்று அவள் சிறிதும் எதிர்பாக்கவில்லை. எனினும், ஓசை உண்டாக்காமல் திடீரென்று அவன் வந்துவிட்டான்.

“பெட்டியை ஏன் தயார் பண்ணிக்கிட்டு இருக்கே?”

அவள் பயத்துடன் தலையை உயர்த்திப் பார்த்தாள். வெளிறிப்போய் காணப்பட்ட அந்த முகத்தில் கண்கள் பிரகாசித்துக் கொண்டிருந்தன. கண்ணாடியைப்போல இருந்த அந்த சரீரம், எப்போதும் வியர்த்துக் கொண்டிருந்த அந்த நெற்றி, கனமான துணியால் இடுப்பில் கட்டப்பட்ட அந்த கட்டு - இவற்றில் எதையும் பார்க்காமல் இருப்பதற்காக அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். குளோரோஃபாமின் மெல்லிய வாசனை அந்த அறையில் பரவிக் கொண்டிருந்தது.

“என்னை விட்டுப் போறியா?”

அப்போதும் அவள் எதுவும் கூறவில்லை. பயம் அவளுடைய நெஞ்சில் ஒரு பறவையைப் போல சிறகடித்துக் கொண்டிருந்தது. எட்டு இரவுகள் சிறிதுகூட தூக்கமும் ஓய்வும் இல்லாமல் அவளுடைய கண்கள் வேதனையால் மரத்துப்போய், முற்றிலும் உயரற்றவையாக ஆகிவிட்டிருந்தன. எவ்வளவு முயற்சி செய்தும், அவளால் கண்களை மூட முடியவில்லை.

“சொல்லு... என்னை விட்டுப் போறியா?”

அவள் பெட்டியை மூடிவிட்டு, அதன்மீது தலையைச் சாய்த்து வைத்துக்கொண்டு அழுதாள். கண்ணீர்த் துளிகள் தொடர்ந்து வழிந்து கொண்டிருக்கவில்லை. ஓசை உண்டாகவில்லை. சோர்வு அவள்மீது கனமான ஒரு போர்வையைப்போல விழுந்து கிடந்தது. குளோரோஃபாமின் வாசனையை அவள் மீண்டும் உணர்ந்தாள்.

“நீ போயிட்டா, நான் என்ன செய்றது?”

அவள் தலையை உயர்த்தினாள். அவனுடைய வெளிறிய நெற்றியில் நீர்த்துளிகள் அரும்பி நின்றிருந்தன. இரக்கம் நிறைந்த ஒரு அலை அவளுக்குள் எழுந்தது. எனினும், அவள் எதுவும் கூறவில்லை. சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தின் பெண்டுலம் ஆடவில்லை. அதுவும் இறந்துவிட்டதோ? - அவள் நினைத்தாள். இவையெல்லாம்கூட அவனைப்போல இறந்துபோய் விட்டனவோ? வெள்ளைநிறச் சுவர்களைக் கொண்ட அந்த மருத்துவமனை, அவ்வப்போது அந்த அறையைத் தேடி ஓடிவரும் நர்ஸ்கள், அந்தப் பெரிய கடிகாரம்- எல்லாம் இறந்து முடிந்தாகிவிட்டனவா? என்னதான் நடந்தது?

கதவை யாரோ தள்ளித் திறந்தார்கள்.

“புறப்பட்டாச்சா?”

அவளுடைய கணவன் சிரித்துக்கொண்டே உள்ளே வந்தான். அவனுடைய கனமான கை அவளுடைய தோள்மீது வந்து விழுந்தது. அவள் அறையின் மூலையைப் பார்த்தாள். அங்கு யாரும் இல்லை. நிம்மதியாக அவள் கணவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

“ஏன் அழறே? இங்கேயிருந்து போனால் எல்லாம் சரியாயிடும். இவ்வளவு நாட்கள் உன்னை இங்கே இருக்க வைத்திருக்க வேண்டியதில்லை. ஆபரேஷன் முடிந்த மறுநாளே அழைச்சிட்டுப் போயிருக்கலாம்”- கணவன். அவளைச் சமாதானப்பத்தும்போது கூறக்கூடியவற்றை மென்மையான குரலில் சொன்னான்.

அவள் முணுமுணுத்தாள்: “எனக்கு பயமா இருக்கு.”

“பயபப்டுறதுக்கு என்ன இருக்கு? நீ தேவையில்லாமல் ஒவ்வொன்றையும் கற்பனை பண்ணி பயந்துக்கிட்டு இருக்கே. நான் சொல்றதை நம்பு. இங்கு அப்படிப்பட்ட ஒரு ஆள் இல்லை. பேய்களை குழந்தைகள் மட்டும்தான் நம்புவாங்க. களைப்பின் காரணமாக உனக்கு ஒவ்வொன்றும் தோணுது.”

“ஆனால்...”

“என்ன ஆனால்? இதெல்லாம் வீட்டுக்குப் போயிட்டா மாறிடும். மீண்டும் நீ பழைய ஆளா ஆயிடுவே. உன்னை பார்க்குறப்பபோ பேபிக்கு உண்டாகுற சந்தோஷத்தை நினைச்சுப் பாரு...”

எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கும் பேபி, பச்சை நிற ஜன்னல் திரைச்சீலைகள் இருக்கும் படுக்கையறை, காசித் தும்பைச் செடிகள் வரிசையாக வளர்ந்திருக்கும் தோட்டம், கணவனும் தானும் ஒன்றாக உணவு சாப்பிடுவதற்காக உட்கார்ந்திருக்கும் போது வாலை ஆட்டிக்கொண்டு வரும் நாய்க்குட்டி... இவை எல்லாவற்றையும் அவள் மீண்டும் பார்க்கப் போகிறாள். மீண்டும் அவள் சந்தோஷத்தில் மூழ்கி இருக்கப் போகிறாள்.

குளிர்ந்து மரத்துப் போயிருக்கும் மலைச்சரிவுகளில் அலைந்து திரிகின்ற பேய்களையும், முழு கவலைகளையும் விட்டுவிட்டு அவள் மீண்டும் பழைய மாதிரி ஆகப் போகிறாள்.

அவள் மெதுவாகச் சிரித்தாள்.

“தைரியமா இரு. இரண்டு மணி நேரத்திற்குள் நாம் வீட்டுக்குப் போயிடலாம். நான் இப்பவே...”

அவனுடைய பேச்சு குறைந்து குறைந்து இல்லாமல் போனது. காரணம்- அவளுடைய காதில் வேறொரு சத்தம் கேட்டது. அதிகரித்து அதிகரித்து வரும் ஒரு இரைச்சல். ஒரு இயந்திரத்தின் இரைச்சலாக இருக்கலாம். இல்லாவிட்டால் கடலின் இரைச்சலாக இருக்க வேண்டும். அது மேலும் மேலும் அதிகமாகி அவளுடைய காதுகளைத் தகர்த்து மேலும் சத்தமாகக் கேட்டது.

“அய்யோ!”

சத்தம் நின்றது. அவள் குளிர்ந்த மணல் இருந்த கடல் பகுதியில் மல்லாக்கப் படுத்திருந்தாள். தாங்க முடியாத அளவிற்குக் களைப்பு. எலும்புகள் ஒவ்வொன்றும் ஒடிந்துவிட்டதைப்போல இருந்தன. கடல்நீர் மேல்நோக்கி மெதுவாக ஏறிக் கொண்டிருந்தது. அவளுடைய தலைமுடி நனைந்து கொண்டிருந்தது. எனினும் மொத்தத்தில் ஒரு சுகம். ஆகாயம் எவ்வளவோ தூரத்தில்... உலகம் முழுவதும் அவளுக்குச் சொந்தமானவை. இதுதான் ஓய்வு...

நீல மலைகளின் சரிவுகள் வழியாக வெளிறிப்போன ஒரு உருவம் நடந்து வந்து கொண்டிருந்தது. குளிர்ச்சியான விரல்கள் தொட்டபோது அவள் கேட்டாள்: “நீங்க என்னை ஏன் இங்கே அழைச்சிட்டு வந்தீங்க?”

அவர்களைச் சுற்றிலும் நிறங்கள் மாறிக் கொண்டிருந்தன. அருகில் நின்றுகொண்டிருந்த மலைச்சிகரங்களுக்கு நடுவில் சிறுசிறு மேகங்கள் நுழைய முயற்சித்துக் கொண்டிருந்தன. அருவிகள் மூடுபனி மூடியிருந்த சரிவுகளில் பாய்ந்து கொண்டிருந்தன.

“உனக்கு எதை விட்டுப் போகிறோம் என்று இந்த அளவிற்குத் தயக்கம்?”

அர்த்தமில்லாத பொழுதுபோக்குகளைக் கூறி சிரித்துக் கொண்டிருக்கும் சில சாயங்கால வேளைகளில், படுத்து கால்களை ஆட்டிக் கொண்டிருக்கும் ஒரு சிறிய குழந்தை, இரவு நேரங்களில் தன்மீது ஓய்வு எடுக்கும் ஒரு கனமான நேரங்களில் கை, சந்தோஷம்... என்ன கூறுவது என்று அவளுக்குத் தெரியவில்லை.

“இங்கு எல்லாம் குளிர்ந்து போய் இருக்கின்றன. எல்லாம்...”

அவனுடைய கண்கள் கண்ணீரால் நிறைந்து வழிந்தன.

அவள் மீண்டும் சொன்னாள்: “எனக்குக் கவலை நிறைந்த பயம்.”

“எனக்குக் கவலையை மட்டுமே தர முடியும். கவலை என்பது மரணமடைந்த ஒரு உணர்வு. சந்தோஷம் மரணமடையும் போதுதானே கவலை வருகிறது? நான் உனக்கு...”

“நிறுத்துங்க...” - அவள் கண்களை மூட முயற்சித்தாள். இவையெல்லாம் கனவுகளாக இருந்தால் எப்படி இருக்கும்? தான் தாய்க்கு அருகில் கட்டிலில் தலையணையைக் கட்டிப்பிடித்துக் கொண்டு படுத்திருக்க வேண்டும்... கண் விழிக்கும்போது குத்த வரும் காட்டு எருமைகளும் இல்லை. காலடியில் ஊர்ந்து செல்லும் பாம்புகளும் இல்லை. குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும் பைத்தியக் காரனும் இல்லை. எதுவும் இல்லை. “இது ஒரு கனவாகத்தான் இருக்க வேண்டும்.”


“கனவுகள் எப்போதும் நிலையாக நின்று கொண்டிருப்பவை. மற்றவை அனைத்தும் அழியும்போதுகூட, கனவுகள் நம்முடன் கூடவே இருந்து கொண்டிருக்கின்றன. நீ குழந்தைப் பருவத்தில் இருந்து கண்ட கனவுகள் மரணத்தின் ஒவ்வொரு துண்டுகளாக இருந்தன.”

“நிறுத்துங்க!”

வெள்ளை நிறத்தில் இருந்த மேகங்கள் பஞ்சுத் துண்டுகளைப் போல மேலே எழுந்து பறந்து கொண்டிருந்தன. அவற்றின் வெளிச்சத்தில் அவனுடைய முகம் மேலும் பிரகாசமாகத் தெரிந்தது.

அவள் கண்களை இறுக மூடினாள். கண்களை மூடிக் கொண்டால், வெளிச்சம் முழுவதும் வெளியேதானே இருக்கும்! கண்ணுக்குள் கருத்த ஆகாயம் இருக்கும். வெள்ளிச் சிறகுகளைக் கொண்ட பறவைகள் இடையில் அவ்வப்போது மட்டும் ஆகாயத்தில் வேகமாகப் பறந்து சென்று கொண்டிருக்கும். ஒரு வேளை அது ஆகாயமாக இல்லாமல் இருக்கலாம். கடலாக இருக்கலாம். அப்படியென்றால் வேகமாகப் பறந்து போய்க் கொண்டிருக்கும் அந்த வெள்ளித் துண்டுகள் படகுகளாக இருக்க வேண்டும்...

“தயவு செய்து இதைக் கொஞ்சம் குடி... தயவு செய்து...”

கண்களைத் திறந்தபோது, ஒரு கையில் பொடியையும் இன்னொரு கையில் நீரையும் வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்த நர்ஸை அவள் பார்த்தாள். தலைப்பகுதியில் உட்கார்ந்திருந்த கணவன் சொன்னான்: “உனக்கு தலைவலி... பரவாயில்லை....”

அவன் மெதுவாக நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். வேதனை.

“வேதனை!”

“பரவாயில்லை. நாம் சீக்கிரம் வீட்டிற்குப் போவோம்.”

“நான்....”

அவள் நன்றியுடன் அவனுடைய கை விரல்களைத் தொட்டாள். “நான் இனிமேல் இந்த மாத்திரைகளைச் சாப்பிட மாட்டேன். வெறுமனே தூங்கி என்ன பிரயோஜனம்?”

“ஆனால்...”

“எனக்குப் பைத்தியம் எதுவும் இல்லை டாக்டர்.”

“யாரு சென்னாங்க பைத்தியம்னு.”

“சோர்வு காரணமாகத்தான் இவையெல்லாம்... வீட்டுக்குப் போய்விட்டால்...”

“உறக்கம் வருதுன்னு நினைக்கிறேன்.”

“இங்கே எதையோ பார்த்து பயந்துட்டீங்கன்னு நான் நினைக்கிறேன்.”

“முட்டாள்தனமா பேசாதீங்க நர்ஸ்.”

பேச்சுக்கள் குறைந்து குறைந்து இல்லாமல் போயின.

தூங்கி முடித்துக் கண் விழித்தபோது, அவள் சொன்னாள்: “நான் கனவு காணவில்லை.”

கணவன் சிரித்தான்.

“வா... நாம போவோம்.”

படிகளில் இறங்கியபோது நர்ஸ் அவளுடைய காதில் சொன்னாள்: “ஒரு தகடு எழுதி கட்டுவதற்கு மறந்துவிட வேண்டாம். உங்களுடைய ஊர்க்காரர்கள் நல்ல மந்திரவாதிகளாச்சே!”

காரில் ஏறிச் சாய்ந்து படுத்துக்கொண்டு அவள் சொன்னாள்: “எனக்கு கனவுகள் மீது விருப்பம் இல்லை.”

அவன் எதுவும் சொல்லவில்லை. காரை ஓட்டும்போது அதிகம் பேசுவது அவனுக்குப் பழக்கமில்லாத ஒன்று. அதனால் அவள் மீண்டும் சொன்னாள்: “பேபி தூக்கத்தில் ஏன் சிரிக்கிறாள்?”

அவள் சிரித்தாள். வரிசை தவறாமல் இருந்த அந்தப் பெரிய பற்கள் முன்னால் இருந்த சிறிய கண்ணாடியில் தெரிந்தன.

“நமக்கு இன்னும் குழந்தைகள் வேணும்.”

“ம்...”

“நான்கு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும்.”

“ம்...”

குழந்தைகள் நிறைந்த ஒரு வீட்டில் இருந்து, இந்த அளவிற்குப் பாசத்தில் இருந்து, சிரிப்புகளும் கிச்சுகிச்சு மூட்டும் முத்தங்களும் நிறைந்த வாழ்க்கையில் இருந்து யாரால் எடுத்துக் கொண்டு போக முடியும்? அவள் சந்தோஷத்துடன் சிரித்தாள்.

“பேய்களைத் தொந்தரவு செய்ய நம்மால் முடியுமா? அவற்றை அடிச்சு விரட்ட முடியுமா?”

“ச்சே... நான்தான் சொன்னேன்ல... அப்படியெதுவும் இல்லைன்னு.”

“நான் சும்மா கேட்டேன். எனக்கும் தெரியும் இல்லை என்று.”

“சோர்வு இருந்தால் நீ கண்களை மூடித் தூங்கு. வீடு வந்தவுடன் நான் எழுப்புகிறேன்.”

அவள் கண்களை மூடினாள். எனினும் வெளியே தெருக்களில் இருந்த வெளிச்சங்கள் அவளுடைய கண்களில் விழுந்து கொண்டு தான் இருந்தன. தூக்கம் ஒரு மூடுபனியைப்போல அவ்வப்போது வந்து தழுவிக் கொண்டிருந்தது. சில வருடங்களுக்கு முந்தைய ஒருநாள் அப்போது அவளுடைய ஞாபகத்தில் வந்தது. எந்தவொரு அழகோ தனிப்பட்ட சிறப்போ இல்லாத ஒரு சாதாரண நாள். ஆனால் அதன் நினைவுகளை அவள் ஒரு மலரைப்போல முகர்ந்து பார்த்து சந்தோஷப்பட்டாள். வெயில் பரவிவிட்டிருந்த ஒரு மத்தியான வேளை. புத்த மதத்தைச் சேர்ந்தவர்ளின் ஒரு கோவிலுக்கு ஓடிக் கொண்டிருந்த காரில், முன்னால் இருந்த இருக்கையில் ஓட்டுநரின் இடப்பக்கத்தில் அவள் அமர்ந்திருந்தாள். பின்னால் இருந்த இருக்கையில் தாயும் தந்தையும் உட்கார்ந்திருந்தார்கள். வெப்பத்தால் காய்ச்சல் உண்டான தெருக்கள். காரின் கண்ணாடிகளில் வெள்ளி அடையாளங்களை வரைந்து கொண்டிருந்த வெயில், கண்களில் கனமாக வந்து விழுந்த உறக்கம், ஓடிக் கொண்டிருக்கும் கார்... சந்தோஷம் அப்படித்தான் இருக்குமா? பெயர் இல்லாமல், ஒரு அறிவிப்பும் தராமல், எந்தவொரு கோஷமும் இல்லாமல் வந்து சேரும் விருந்தாளி? பெட்டிகளும் சாமான்களுமாக வாசற்படிகளைக் கடந்து, தெரு வழியாகத் திரும்பி வரும் உருவத்தைப் பார்த்து அவன் சொல்கிறான்:

“அதுதான் சந்தோஷம்.”

“நீ என்ன சொன்னே? நான் கேட்கவில்லை” - கணவன் கேட்டான்.

“நான் ஒவ்வொன்றையும் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன்.”

“எதைப் பற்றி?”

“நான் முன்பு பார்த்த ஒரு கோவிலைப் பற்றி...”

அவன் சிரித்தான்.

“அங்கு நீ அணிந்துகொண்டுபோன புடவையைப் பற்றி... அப்படித்தானே?”

அவளுடைய சிந்தனைகளும் தனக்கு எளிதில் புரியும் என்று அவன் கூறுவது அவளுக்கு ஞாபகத்தில் வந்தது. கண்ணாடியில் தெரியும் சிரிப்பைப் பார்த்து அவள் சொன்னாள்: “சரி... உங்களுக்கு எப்படிப் புரிந்தது?”

அவன் சிரித்தான். கார் ஒரு வளைவில் திரும்பி பெரிய தெருவை அடைந்தது. தன்னுடைய சிந்தனைகளைச் சொன்னால், அவனுக்குப் புரியுமா? அவள் நினைத்தாள். இல்லாவிட்டால் பெட்டியின் அடியில் கிடக்கும் ஒரு சந்தன உருண்டையைப்போல, தன்னுடைய நினைவுகளை அவனிடம் வெளிப்படுத்தி என்ன பிரயோஜனம்? இளம் சிவப்பு நிறத்தில் இருந்த ஒரு கோவில்... சுற்றிலும் இருந்த படிகளின்மீது சிதறிக் கிடக்கும் பல அளவுகளிலும் இருந்த செருப்புகள்... நதியின் ஓரமாக செருப்புகள் அணியாமல் வெறும் பாதங்களுடன் மெதுவாக நடந்து செல்லும் துறவிகள்.... புல்வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் தாய்... சிரிக்கும் தந்தை. இவையெல்லாவற்றையும் சேர்த்தாலும், அவனுடைய கண்களுக்கு முன்னால் அந்த நாளை வெளிப்படுத்த அவளால் முடியவில்லை. காரணம் - அவன் இயல்பான பொறுமையற்ற தன்மையுடன் கேட்டான்: “அதற்குப் பிறகு என்ன நடந்தது?”

அதற்குப் பிறகு என்ன நடந்தது? எதுவும் நடக்கவில்லை.காட்சிகள் மேலும் மேலும் அதிகமாகத் தோன்றின. இறந்த நாட்கள் ஒவ்வொன்றும் நினைவுகளாக எஞ்சி நிற்கின்றன. நிறங்கள், குரல்கள், வாசனைகள் - எல்லாம் மறைந்துபோய் விட்டன. எனினும் அவள் இடையில் அவ்வப்போது அவற்றை ஞாபகப்படுத்திப் பார்க்கிறாள். அப்போது மரணம் ஒரு முடிவு அல்ல.


“மரணம் ஒரு ஆரம்பமும் அல்ல. ஒரு முடிவும் அல்ல. வாழக்கைக்கு முன்னாலும் பின்னாலும் அது பரவிக் கிடக்கிறது.”

வெளிறிப்போன முகத்தைக் கொண்ட ஒரு ஆள் அவளிடம் கூறுகிறான். அன்று ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த நிலவு வெளிச்சம் அவளுடைய படுக்கைமீது விழுந்து கிடந்தது. வெளியே வராந்தாவில் நர்ஸ்களின் பேச்சு நின்று விட்டிருந்தது. பயத்தால் அவள் தலையணையில் முகத்தை அழுத்தி வைத்துக்கொண்டாள். அப்போது அவன் சொன்னான். “நான் உன்னைக் காதலிக்கிறேன்...”

நினைவுகளை மாற்ற முயற்சித்துக்கொண்டு அவள் கணவனின் பக்கம் திரும்பினாள்: “சீக்கிரம் வீட்டை அடையணும்.”

அவன் சிரித்தான்.

“உங்களுடைய இந்தச் சிரிப்பு எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு. சத்தம் உண்டாக்காமல் மெதுவாக முகத்தில் பரவி, சீக்கிரமே மறையும் இந்தச் சிரிப்பு...”

அதைச் சொல்லிவிட்டு அவள் நிறுத்தினாள். ஆனால் கூறுவதற்கு மேலும் அதிக விஷயங்கள் இருந்தன. முன்பு தேனிலவு காலத்தில் கடற்கரையில், வேகமாக வந்து மோதி ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு முன்னால் நின்றுகொண்டு, தலையைப் பின்னால் திருப்பி அவன் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது, ஒரு விடுமுறை நாளன்று மைதானத்திற்குச் சென்று சிறுபிள்ளைகளைப்போல இரண்டு பேரும் பட்டம் பறக்க விட்டு விளையாடியது, காற்றில் அவனுடைய தலைமுடி பறந்து வந்து கண்களில் விழுந்தது - கூறுவதற்கு என்னவெல்லாம் இருந்தன! ஆனால் அவள் சொன்னாள்: “நான் உங்களை மிகவும் அதிகமாகக் காதலிக்கிறேன்.”

“இப்போது?”

“இப்போதும்!”

அதைச் சொன்னபோது, அவளுடைய குரல் தடுமாறியது. முந்தின நாள்...

“இதோ வீடு நெருங்கிடுச்சு.”

வீட்டின் முன்னால் இருக்கும் தெருவிற்குள் அவர்கள் நுழைந்தார்கள். பெரிய விளக்குகளைக் கொண்டிருக்கும் ஒரு லாரி எதிரே வேகமாக வந்து கொண்டிருப்பதைப் பார்த்து அவள் சொன்னாள்: “கவனம்... இந்த லாரி ஓட்டுபவர்கள் பைத்தியக்காரர்கள்.”

வெளிச்சமும் சத்தமும் அடுத்தடுத்து வந்தன. காரை ஒரு பக்கமாக சாய்க்கும் கணவனிடம் அவள் மீண்டும் சொன்னாள்: “கவனம்...”

அப்போதுதான் அந்த லாரியை ஓட்டிக் கொண்டிருந்த ஆளின் முகத்தை அவள் பார்த்தாள். வெளிறிய முகத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்த கண்கள், வியர்வை அரும்பிக் கொண்டிருந்த நெற்றி...

“அய்யோ!”

நெருப்பு ஜுவாலைகள் அணைந்து, சரீரத்தை கரியச் செய்யும் உஷ்ணம் நின்றது. அவள் கண்களைத் திறந்தாள்.

குளோரோஃபாமின் மெல்லிய இனிய வாசனை பரவி விட்டிருந்தது.

“நான் மருத்துவமனையிலா இருக்கிறேன்?”

பக்கத்தில் இருந்த ஆள் சிரித்தான். அவனுடைய கையைப் பிடித்து எழுந்து உட்கார்ந்தபோது, அவளும் சிரித்தாள். காரணம் - ஆகாயத்தில் வெள்ளி மேகங்கள் பரவிக் கொண்டிருந்தன. அருவிகள் மூடுபனி தங்கி நின்றிருந்த சரிவுகளில் வேகமாகப் பாய்ந்து விழுந்து கொண்டிருந்தன. மரணத்தைப்போல முடிவே இல்லாத ஒரு நீல நதி எங்கோ ஓடிக் கொண்டிருந்தது...

சந்தோஷம்: ஒரு அர்த்தம் இல்லாத வார்த்தை அது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.