Logo

கண்ணாடி வீடு

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6526
kannaadi veedu

றுவடை முடிந்திருந்த வயலில் பனித்துளிகள் விழுந்த சிறு நெல்செடிகள் மீது அதிகாலை நேரத்தின் குளிர்ந்த காற்று வீசியடித்துக் கொண்டிருந்தது. இளம் வெயிலின் மங்கலான கீற்றுகள் ஆங்காங்கே ஒளிந்து கொண்டும் மறைந்து கொண்டும் நகர்வதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். காகங்கள் கரைவதையும் வண்ணாத்திக் கிளிகள் பாட்டு பாடுவதையும் அவன் கேட்டான். வானத்தில் மாடப்புறாக்கள் கூட்டமாகப் பறந்து சென்றன.

கீழே பூமியில் வெள்ளைக் கொக்குகள் வரப்பில் அடி வைத்து அடி வைத்து நடந்து கொண்டிருந்தன. அவனுக்கு மகிழ்ச்சி உண்டானது. வாழ்க்கையில் முதலில் பார்க்கும் பாதைகள் ஏற்கெனவே அறிமுகமானவையாக இருக்கின்றன. சேறு, வைக்கோல் ஆகியவற்றின் வாசனையைக் கொண்ட இங்குள்ள மனிதர்கள் அவனுக்கு மிகவும் வேண்டியவர்கள். நடக்க நடக்க, அறிமுகம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஆழமான ஒரு உறவு அது.

வீடுகளின் களங்களில் கதிர்களை மிதிப்பதும், உதிர்ப்பதும் நடக்கின்றன. காற்றிற்குப் புது நெல்லின் மணம் இருக்கிறது.

இந்த கிராமம் என்னுடையது. இந்த மண்ணின் அம்சம் நான். என்னுடைய உலகம் இது. இதன் எல்லைகளுக்கு வெளியே உலகம் இல்லை. இதுவரையில் ஏதோ மாய வலைக்குள் நான் சுற்றித் திரிந்தேன். கருப்பு நிறத்தில் பைண்ட் செய்யப்பட்ட தடிமனான புத்தகங்களும் கணுக்கால்களை மூடும் கருப்பு நிற ஆடைகளும் உள்ள ஒரு கபட உலகத்தில்.

குளத்தில் குளித்து முடித்து ஈரத்துணி அணிந்து நடந்து செல்லும் இளம் பெண்களைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தபோது அவன் கனவு கண்டான். இவர்கள் என்னுடைய ஆட்கள் - உறவினர்கள். இவர்களில் ஒருத்திக்கு நான் புடவை கொடுப்பேன். பிறகு... இந்த கிராமத்திலிருக்கும் ஒரு சிறிய வீட்டில், ஒரு சிறிய அறையில், ஒரு சிறிய கட்டிலில் நான் என்னுடைய சுகங்களின் சொர்க்கத்தை உண்டாக்குவேன். அந்த வீட்டின் சுவர்களை கலைத்தன்மைகள் கொண்ட ஓவியங்களால் அலங்காரம் செய்ய வேண்டும். வாசலில் நல்ல வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட நாற்காலிகள் இருக்க வேண்டும். முற்றத்தில் பூச்செடிகள் இருக்க வேண்டும். ஒரு துளசித் தரையும். முற்றத்தில் வெள்ளை மணல் கொண்டு வந்து போடவேண்டும். அநத் மணலை வாரித் தின்று என் மகன் வளர வேண்டும். அவனுக்கு ஒரு நல்ல பெயர் வைக்க வேண்டும்.

ஜரிகை போட்ட துணிகளைத் தலையில் சுற்றிக் கட்டிக் கொண்டு, வெள்ளி கட்டிய கழிகளுடன் தேநீர்க் கடையை நோக்கி நடக்கும் வயதான மனிதர்களை அவன் பார்த்தான். இல்லத்தரசர்கள்... வேலை செய்வதற்கும் செய்ய வைப்பதற்கும் பிள்ளைகள் இருப்பார்கள். இந்த மண்ணில் நீண்ட காலம் கஷ்டப்பட்டு உழைத்துவிட்டு இப்போது ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கும் அப்படியொரு சூழ்நிலை வரும். வீட்டுக் காரியங்களை என் மகன் பார்ப்பான். அவன் மிகவும் சந்தோஷப்பட்டான்.

ஆனால், இதற்கெல்லாம் ஒரு ஆரம்பம் வேண்டாமா?

எதற்காக இல்லை?

இது என்னுடைய கிராமம். இங்குதான் என்னுடைய மூதாதையர்கள் பிறந்ததும் வளர்ந்ததும். அவர்களுடைய உழைப்பின் மணம் இந்த மண்ணில் இருக்கிறது. அவர்களுடைய ரத்தம் இங்கே விழுந்து மண் சிவந்திருக்கிறது. அவர்களுடைய பின் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தான் இங்குள்ள மனிதர்கள். அண்ணன்மார்கள், அக்காமார்கள், தங்கைமார்கள், மாமன்மார்கள்...ஓ! உங்கள் மீது நான் எந்த அளவிற்கு அன்பு வைத்திருக்கிறேன்! எந்த அளவிற்கு! நீங்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். நீங்கள் ஏன் என்னை அடையாளம் கண்டுபிடிக்கவில்லை? நங்கள் ஏன் மகிழ்ச்சியடையவில்லை? இழந்துவிட்டதைத் திரும்ப அடைந்துவிட்டோம் என்ற சந்தோஷம் உங்களிடம் உண்டாக வேண்டும். இளவரசனின் திரும்பி வரல் இது!

ஆனால், அவனை யாரும் அடையாளம் தெரிந்து கொள்ளவில்லை. கடந்து சென்றவர்கள் ஒவ்வொருவரும் அவனை சந்தேகத்துடன் பதைபதைப்புடனும் பார்த்தார்கள். அவனுடைய சோர்வடைந்து போயிருந்த கண்கள் அவர்களை நோக்கித் திரும்பியபோது மனம் நிறைய ஒரே ஒரு வேண்டுகோளே இருந்தது. நீங்கள் என்னை அறிமுகமாகும் எண்ணத்துடன் பாருங்கள். அன்பு வேண்டாம்... உதவி வேண்டாம்... அவையெல்லாம் வழியில் தானாகவே கிடைக்கும். எனக்கு அறிமுகம் மட்டும் போதும்... அதை மறுத்து விடாதீர்கள்.

அவனுடைய வேண்டுகோள் யாரும் பொருட்படுத்தாமல் அலைந்து கொண்டிருந்தது. ஆட்கள் அவனை மீண்டும் சந்தேகத்துடன் பார்த்தார்கள். பெண்களும் குழந்தைகளும் அவனைக் கண்டபோது பயந்து ஒதுங்கி வேறு பக்கமாக நடந்து சென்றார்கள். அவனுக்கு ஆச்சரியமும், அதைவிட வருத்தமும் உண்டானது.

என்னிடம் என்ன இருக்கிறது இந்த அளவிற்கு பயப்படுவதற்கு? இந்த அளவிற்கு வெறுப்பதற்கு? இப்படி விலகி நடப்பதற்கு? தயவு செய்து என்னைப் புரிந்து கொள்ளுங்கள் மனிதர்களே! நான் அன்னியன் அல்ல. உங்களுடைய உறவினன்... சொந்தக்காரன்...

வசிக்க இடம் தேடி அவன் அலைந்து திரிந்தான். இடம் கிடைக்கவில்லை. வாடகை கொடுக்க அவன் தயாராக இருந்தான். விலை கொடுப்பதற்கு அவன் தயாராக இருந்தான். எனினும், அவனுக்கு வீடு கிடைக்கவில்லை. ஒரு அறையைக்கூட கொடுப்பதற்கு யாரும் மனம் வைக்கவில்லை. அறிமுகமில்லாத ஆளுக்கு வீடு தருவதை அவர்கள் விரும்பவில்லை. எவ்வளவு பணம் கொடுத்தாலும் வேண்டாம் என்றார்கள். அவன் ஏதோ குற்றவாளியாக இருக்க வேண்டும். சட்டத்திற்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டிருப்பவனாக இருக்க வேண்டும் என்று அவர்கள் சந்தேகப்பட்டார்கள். அவர்களுக்கு இதற்கு முன்பு தெரிந்திராத ஆள் தேவையில்லை. வெளியூர் ஆள் வேண்டாம்.

ஆனால், நான் இதற்கு முன்பு தெரியாதவன் அல்ல. உங்களுடைய சொந்தக்காரன் தான். அவன் அவர்களுடைய கால்களைப் பிடித்துக் கொண்டு கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். புல், கொடிகளில் இருந்த பனித்துளிகளைப் பிரகாசிக்கச் செய்து கொண்டு, வெயில் அதிகரித்த போது அவனுடைய கண்ணீர்த் துளிகளும் பிரகாசித்தன.

மழை இல்லாத காலம... ஏதாவது மரத்திற்கு அடியில் படுத்துத் தூங்கலாம். குளிரைத் தாங்கிக் கொள்ளலாம்.

ஆனால், அந்தச் சூழ்நிலை வரவில்லை. சிவந்து கூர்மையாக இருந்த கண்களையும், பெரிய மீசையையும், தாடியையும் கொண்டிருந்த ஒரு தடிமனான மனிதன் அவனுக்குத் தங்குவதற்கு இடம் தந்தான். அந்த மனிதனும் வெளியூர்க்காரன் தான். இந்த கிராமத்திலிருக்கும் மனிதர்கள் வெளியூர்க்காரர்களைச் சந்தேகத்துடனே பார்த்தார்கள். அவன் இங்கு தனியாக இருப்பவன். இங்கு வந்து நீண்ட நாடகள் ஆகியும் நண்பர்கள் யாரும் இல்லை. பல நாட்களாக தனிமையின் வேதனையைத் தின்று வாழ்ந்து கொண்டிருப்பதாக அந்த தடிமனான மனிதன் சொன்னான். அவர்கள் தூங்குவதற்காகப் படுத்தார்கள். தடிமனான மனிதன் சொன்னதைக் கேட்டபோது, அவனுக்கு இரக்கம் தோன்றியது. அதற்குப் பிறகு எதுவும் தோன்றவில்லை.


உங்களுடைய கவலையில் பங்கெடுக்க என்னால் முடியவில்லை நண்பரே! காரணம் - நம்முடைய கவலைகள் வெவ்வேறானவை. சில நாட்களில் இங்கேயிருந்து நான் விலகிப் போயிருந்தேன். அவ்வளவுதான். இது என்னுடைய கிராமம். மனதில் தோன்றிய இந்த விஷயங்களை அவன் கூறவில்லை. கூறினால் அவனுக்கு இடம் தந்தவன் கிண்டல் பண்ணி சிரிப்பான் என்று அவன் பயந்தான். மறுநாள் முதல் அவனைப் பற்றிய சந்தேகம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதை அவன் பார்த்தான். தடிமனான மனிதன் மீது கொண்டிருந்த பகை தன்மீதும் திரும்புவதை அவன் பார்த்தான். இந்த தாடிக்காரன் இங்கிருந்து போயிருந்தால் நன்றாக இருக்குமே என்று அவன் ஆசைப்பட்டான். நன்றி கெட்ட செயல் என்றாலும், அப்படி ஆசைப்படாமல் இருக்க முடியவில்லை.

கிராமத்தைச் சேர்ந்த மனிதர்களின் நட்பைச் சம்பாதிக்க அவன் முயற்சித் தான். ஆனால், விளைவோ தோல்வியாக இருந்தது. அவன் பலரிடமும் பேசினான். அவர்கள் எல்லோரும் ஒரே வார்த்தையில் பதில் கூறிவிட்டு, அவனிடமிருந்து விலகி ஓடுவதுதான் உண்மையிலேயே நடந்தது. அவர்களுடைய கண்களில் சந்தேகமும் பயமும் இருந்தன. இறுதியில் தனக்குள் என்னவோ ரகசியங்கள் மறைந்திருக்கின்றன என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்பதை அவன் புரிந்து கொண்டான்.

சில நாட்களுக்குப் பிறகு அவனுடைய விருப்பங்களில் ஒன்று நடந்தது. தடிமனான மனிதன் வீட்டை அவனிடம் ஒப்படைத்து விட்டு, அந்த ஊரை விட்டுக் கிளம்பினான். போக ஆரம்பித்த போது தடியன் சொன்னான். இனி நான் திரும்பி வரமாட்டேன்.

அவனுக்கு மகிழ்ச்சி உண்டானது. இனியாவது அவர்களுடைய சந்தேகங்கள் தீரும். எனக்கு வேண்டியவர்கள் என்மீது சந்தேகப்படும் மோசமான சூழ்நிலை மாறும். என்னுடைய மனிதர்களுடன் சேர்ந்து அவர்களில் ஒருவனாக நான் இந்த கிராமத்தில் வாழ்வேன். இங்கு வேலை செய்வேன். இங்குதான் என்னுடைய சொர்க்கம் இருக்கிறது.

அவனுடைய எதிர்பார்ப்புகள் அளவற்றவையாக இருந்தன. தாடிக்காரன் போன பிறகும், மனிதர்கள் அவனிடம் நெருங்கவில்லை. ஒரு காட்சிப் பொருளையோ, காட்டு மிருகத்தையோ பார்ப்பதைப் போல அவர்கள் அவனைப் பார்த்தார்கள். அவனுடைய வீட்டை அவர்கள் சந்தேகத்துடன் பார்த்தார்கள். அவன் பயங்கரமான ஏதோ ரகசியங்களின் இருப்பிடம் என்று அவர்கள் நினைத்தார்கள்.

அவனுடைய கவலை தாங்க முடியாத அளவிற்கு இருந்தது. நான் என்னுடைய இதயத்தை உங்களுக்கு முன்னால் திறந்து வைத்திருக்கிறேன். நீங்கள் அதைப் பார்க்க மறுக்கிறீர்கள். இதோ என்னுடைய ரத்தம். இது உங்களுடையதுதானே என்று பாருங்கள். என்னுடைய ஆடைகள் வேறு மாதிரி இருப்பதை உணர்ந்து, நான் அதைக் கழற்றி எறிந்து விட்டு இங்கு வந்திருக்கிறேன். அப்போது எனக்கும் உங்களுக்குமிடையே ஏதாவது வேறுபாடு இருக்குமா? தோற்றமும் நடவடிக்கைகளும் ஒரே மாதிரிதானே இருக்கின்றன! எனினும், நீங்கள் என்மீது ஏன் சந்தேகப்படுகிறீர்கள்? என்னைப் புரிந்து கொள்ளுங்கள். இது நான்தான்.

பலன் எதுவும் உண்டாகவில்லை. அவன் ரகசியங்களின் இருப்பிடம் என்றும்; அவனுடைய வீடு கெட்ட செயல்களின் மையம் என்றும் அவர்கள் நினைத்தார்கள். அவர்கள் அதை ஒருவருக்கொருவர் கூறிக்கொள்ளவும் செய்தார்கள். மெதுவாக தங்களுக்குள் கூறிக் கொண்டிருந்த விஷயங்களை அவன் காதில் விழும்படி அவர்கள் கூறவும் ஆரம்பித்தார்கள்.

குளிர்ந்த காற்றும் இருட்டும் குள்ள நரிகளின் ஊளையும் மட்டுமே இருந்த இரவு வேளைகளில் அவன் கவிழ்ந்து படுத்து அழுதான். அவர்களுடைய சந்தேகத்தைத் தீர்ப்பதற்கு என்ன வழி? அவனுடைய சிந்தனை அந்தப் பிரச்சினையில் மட்டுமே தங்கி நின்றது. எவ்வளவு யோசித்தும், ஒரு வழியும் தெரியவில்லை. என்னவெல்லாமோ கூறியும், அவர்கள் நம்பத் தயாராக இல்லை. நாக்கு குழைந்து போய் விட்டிருக்கிறது. வார்த்தைகளுக்கு அர்த்தம் இல்லாமல் போயிருக்கிறது. அவன் இருட்டையே பார்த்தான். எதுவும் இல்லை. முழுமையான இருள் மட்டும்தான் இருந்தது. எதற்கும் பதில் இல்லை. இறுதியில் அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. என்னை அவர்கள் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். என் வீட்டில் கெட்ட செயல்களோ ரகசியங்களோ நடக்கின்றன என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்த வீட்டிற்கு சுவர்கள் இல்லாமல் இருந்தால் அவர்களுடைய சந்தேகம் இல்லாமல் போய்விடும். அப்போது என் வீட்டில் என்ன நடக்கிறது என்று அவர்கள் தெரிந்து கொள்ளலாமே! ஆனால், காற்றும் மழையும் வரும்போது எப்படி இருப்பது? அப்போது சுவர்கள் இல்லாமல் இருக்க முடியாதே!

அதைத் தொடர்ந்து அவன் கண்ணாடிச் சுவர் கொண்ட வீட்டை உண்டாக்கினான். முற்றிலும் நன்கு தெரியக்கூடிய கண்ணாடியால் ஆன சுவரைக் கொண்ட வீடு. அதைக் கட்டுவதற்கு ஏராளமான பணம் செலவானது. அவன் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என்னிடம் ரகசியங்கள் எதுவும் இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ளட்டும். அப்போது என்னைப் புரிந்து கொள்வார்கள். என்னை அவர்களுடைய கூட்டத்தில் சேர்த்துக் கொள்வார்கள். என்னுடைய விருப்பங்கள் நிறைவேறும். கனவுகள் நனவாகும். இனிமேல் நான் அழ வேண்டியதில்லை. எந்த நேரத்திலும்... எந்த நேரத்திலும்...

வீட்டின் வேலை முடிந்து விட்டது. படுக்கையறை, சுவர்கள் இருந்த இடத்தில் கண்ணாடியாலான சுவர்களாலான ஒரு வீடு. சூரிய ஒளி அதில் விருப்பம்போல பயணித்தது. நிலவும் அப்படித்தான். அதற்குள் இருந்த எந்தவொரு பொருளும் ரகசியம் இல்லாததாக ஆனது. எல்லாவற்றையும் வழியில் நடந்து செல்பவர்கள் பார்க்கலாம். சமையலறை, படுக்கையறை எல்லாவற்றையும் பார்க்கலாம். அவனுக்கு மகிழ்ச்சி உண்டானது.  உங்களுடைய சந்தேகப் பார்வைக்கு எதிராக இருக்கும் ஒரு சவால்தான் இந்த வீடு. நீங்கள் என்னைச் சந்தேகித்தவர்கள். இப்போது புரிந்து கொள்ளுங்கள். சிவந்த கண்களைக் கொண்ட தாடிக்காரனைப் போல அன்னியம் அல்ல நான். வெறுக்கப்பட வேண்டியவன் அல்ல. என்னிடம் ரகசியங்கள் இல்லை. இதோ... எல்லாவற்றையும் உங்களுக்கு முன்னால் பார்க்கும்படி வைத்திருக்கிறேன். பாருங்கள். கூர்ந்து பாருங்கள். போதும் என்று தோன்றும்வரை பாருங்கள்.

அவன் சிரித்தான்.

அவனுடைய கண்ணாடி வீடு தலையை உயர்த்திக் கொண்டு கம்பீரமாக நின்றிருந்தது - வன்முறைக்கு முன்னால் தளர்ந்தும், தளரத் தயாராகாமல் இருக்கும் மனிதத் தன்மையைப்போல...

மனிதர்கள் ஆச்சரியத்துடன் அவனுடைய வீட்டைப் பார்த்தார்கள். எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுடைய பார்வையில் இல்லை. எதையும் தேட வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை. ஆனால், சந்தேகம் இருந்தது - ஆச்சரியம் இருந்தது - வெறுப்பு இருந்தது. அவர்களுடைய கண்களில் உணர்ச்சிகளைப் பார்த்தபோது அவன் அதிர்ந்துபோய் விட்டான். அவர்கள் சந்தேகப்படுகிறார்கள் - ஆச்சரியப்படுகிறார்கள் - வெறுக்கிறார்கள்.


நான் என்னிடம் இருப்பவற்றையெல்லாம் உங்களுக்கு முன்னால் திறந்து வைத்திருக்கிறேன். நீங்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லையா? இன்னுமா?

ஒரு அற்புத பொருளைப் போல மனிதர்கள் அவனைப் பார்த்தார்கள். அவர்களுடைய சந்தேகம் மேலும் அதிகமாயிருந்தது. அவன் மிகப்பெரிய திருடன் என்பதற்கு மேலாக அவன் ஒரு பைத்தியக்காரன் என்றும் அவர்கள் சொன்னார்கள். அவன் வெளிப்படையாக அவர்களிடம் கெஞ்சினான். நான் அன்னியன் அல்ல. என்னுடைய வீட்டில் ரகசியங்கள் எதுவும் இல்லை என்பதைக் காட்டுவதற்காக நான் கண்ணாடியால் ஆன சுவர்களைக் கொண்ட வீட்டைக் கட்டினேன். அதற்குப் பிறகும் நீங்கள் என்னைப் புரிந்து கொள்ளவில்லை. என் முகத்தை உற்றுப்பாருங்கள். நான் உங்களுக்கு சொந்தமான மனிதன். சில நாட்கள் உங்களிடமிருந்து விலகியிருந்தேன். அவ்வளவுதான். ஏதோ அழகான தவறுகளுக்குப் பின்னால் கைகளை நீட்டிக் கொண்டு போனேன். இதோ... நான் திரும்பி வந்திருக்கிறேன்.

அவர்கள் அவனுடைய வார்த்தைகளைக் காது கொடுத்துக் கேட்கவேயில்லை. அவனைக் கிண்டல் பண்ணினார்கள். சிரித்தார்கள். வெளிப்படையாக வெறுத்தார்கள். திட்டினார்கள். திருடன் என்றும்; பைத்தியம் என்றும் அழைத்தார்கள். சுற்றிலும் இருந்தவர்கள் எல்லோரும் எதிரிகள் என்று தோன்றியதும், அவன் தன்னுடைய கண்ணாடி வீட்டிற்குள் நுழைந்து கதவை மூடிவிட்டுப் படுத்துவிட்டான். அவனுடைய கண்ணீர் கண்ணாடிச் சுவர்கள் வழியாகக் கடந்து வந்த பிரகாசத்தில் ஒளிர்ந்தது.

இந்த உலகமும் பொய்யானது. இங்கும் உண்மை இல்லை. இங்கும் ஆனந்தம் இல்லை. இரவில் எல்லோரும் தூங்கிய பிறகு, அவன் தன்னுடைய கண்ணாடி வீட்டை விட்டு வெளியேறினான்.

புறப்பட்ட இடத்திற்கே திரும்ப போகக் கூடாது. அது நரகம். பிறகு எங்குதான் போவது ?

எங்கு ?

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.