Logo

இராமாயணம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6561
ramayanam

தெற்குப் பக்கமிருந்த சாளரத்தின் வழியாக சாதாரணமாக உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். தூரத்தில் கடலும் வானமும் ஒரு காலை நேர வளையத்தில் ஒன்றொடொன்று இணைக்கப்பட்டிருப்பதைப்போல் தோன்றியது. ஓசை எழுப்பிக் கொண்டிருந்த கடல், ஒளிமயமான வானம் - இரண்டும் ராதாவையும் கிருஷ்ணனையும் போல ஒன்றொடொன்று சேர்ந்திருந்தன.

அந்த எண்ணமே ஜெயாவிற்குத் தமாஷாகத் தோன்றியது. ராதாவையோ, கிருஷ்ணனையோ அவள் பார்த்ததில்லை. எனினும் எதனால் அவள் அப்படி நினைத்தாள்? ராதாவை அவள் பார்த்ததில்லையா?

கிருஷ்ணனை அவள் பார்த்ததில்லையா?

அவர்கள் ஒவ்வொரு நரம்பிலும் ஊடுருவிக் கொண்டிருக்கவில்லையா? மலர்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு சிவந்த பூவிலும் ராதாவின் பாத அடையாளங்களை அவள் காண்கிறாள். மெல்லிய தென்றல் வீசும்போது அதோடு சேர்ந்து ராதா பெருமூச்சு விடுகிறாள். சவுக்கு மரங்களுக்கு மத்தியில் ஓசை உண்டாக்கியவாறு வீசிக்கொண்டிருக்கும் கடல் காற்று கிருஷ்ணனின் புல்லாங்குழலைத் தன்னிடம் வைத்திருக்கிறது. ராதா, கிருஷ்ணன் - கிருஷ்ணன், ராதா - எல்லா இடங்களிலும் அதுதான். திடீரென்று கீழேயிருந்து யாரோ கதவைத் தட்டுவதைப் போல இருந்தது. ஜெயா காதைக் கூர்மைப்படுத்திக் கொண்டு கேட்டாள். யாராக இருக்கும்?

எஞ்சினியர் கோபாலன்?

ரேடியோலஜிஸ்ட் கோபியின் வெளுத்த உயரமான உருவம் அவளுக்குள் தோன்றி மறைந்தது.

காளையைப் போல பருமனான சரீரத்தைக் கொண்ட வர்கீஸ் மாஸ்டரின் கனமான குரல் காதுகளில் முழங்கியது. “நீங்க எதைக் கேட்டாலும், நான் எப்பவும் தருவேன். நீங்க...” மீண்டும கதவு தட்டப்படும் ஓசை. படிகளில் இறங்கியபோது அவள் நினைத்தாள்: ‘தங்க நகை வியாபாரி குணஷேணாயியாக இருக்குமோ?’ குணஷேணாயி ஒரு நல்ல இரைதான். ஷேணாயிக்குத் தரும் ஒவ்வொரு புன்னகையும் விலை மதிப்புடையது என்பதை ஜெயா நினைத்துப் பார்த்தாள்.

சில நாட்களுக்கு முன்பு ஐந்தெட்டுப் பாம்புகளுடன் அங்கு வந்த பாம்பாட்டியைப் பற்றியும் அப்போது அவள் நினைத்துப் பார்த்தாள். அவனுடைய மகுடியிலிருந்து புறப்பட்டு வந்த ராகங்களுக்கு ஏற்றபடி அந்தப் பாம்புகள் ஆடின.

அந்தப் படம் விரித்த மரணங்களைச் சுற்றிலும் வைத்துக் கொண்டு, பாம்புகளை ஆடச் செய்துகொண்டிருந்த எங்கோ இருக்கும் பாம்பாட்டியை மதிப்புடன் அவள் நினைத்துப் பார்த்தாள். என்ன தைரியசாலி! அவனுக்குப் பணத்தை வீசி எறிவதில் அவள் எவ்வளவு சந்தோஷப்பட்டாள்! இப்போது அதை நினைத்துப் பார்ப்பதற்குக் காரணம் என்ன? ஒன்றுமில்லை. அவள் ஒரு பாம்பையும் அடிக்கவோ, கூடையில் அடைக்கவோ விரும்பவில்லை என்பதுதான் உண்மை.

படிகளில் மேலும் ஒரு படி இறங்கியபோது யோசனை தொடர்ந்தது. யாராக இருக்கும்?

வினாயக்! அந்த பிராமண இளைஞன் நல்ல திறமைசாலி. மிகவும் அருமையாகப் புல்லாங்குழல் வாசிப்பதற்கும், பாராட்டுகிற அளவிற்குக் காதல் சூழ்நிலையை உண்டாக்குவதற்கும் அவனுக்குத் தெரியும். கடந்த பவுர்ணமி நாளன்று அவன் அங்கு வந்திருந்தான் என்பதை ஜெயா நினைத்துப் பார்த்தாள். அன்று அவன் சொன்ன வார்த்தைகளும் அவளுடைய ஞாபகத்தில் வந்தன. “ஜெயா, நீ இந்த சோஃபாவில் முதுகை வளைத்து சாய்ஞ்சு படுத்திருக்கிறப்போ, எங்கோ பயணம் செய்துகொண்டிருக்கும், ஏதோ ஒரு கவலையில் மூழ்கியிருக்கும் வழிப்போக்கனிடமிருந்து புறப்பட்டு வரும் நீலாம்பரி ராகத்தின் அலைகள் என் இதயத்திற்குள் நுழையிற மாதிரி நான் உணர்றேன்” என்றான் அவன். அப்படி அவன் சொன்னதைக் கேட்டபோது, ஜெயாவிற்கு சந்தோஷமாக இருந்தது. அது முகஸ்துதியாக இருக்கலாம். எனினும், அவளுடைய கூந்தலை வருடியவாறு அவன் தொடர்ந்து சொன்னான்: “இதயத்தை பிழியும் இனிய ராக ஆலாபனை அது!”

வினாயக்காக இருந்தால், இவ்வளவு நேரம் அவன் பொறுமையாக இருந்திருக்க மாட்டான். கதவை இடியோ இடி என்று இடித்திருப்பான். தனக்கு எதிரில் இருக்கும் ஒன்றை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டு நின்றிருக்க அவனால் முடியாது. படிகளில் கடைசிப் படியை அடைந்தபோது அவளுக்கு முன்னால் கருங்கல்லாலான சிலையைப்போல நின்றிருந்தாள் வேலைக்காரி மீனாட்சி.

“அம்மா, வெளியே ஒரு ஆள் நின்னுக்கிட்டு இருக்காரு.”

“புரியுது.”

“குடிக்கிறதுக்கு ஏதாவது...?”

“தேவைன்னா சொல்றேன்.”

கற்சிலை முன்னாலிருந்து அகன்றது நிறம் கருப்பாக இருந்தாலும் அழகான பெண் என்ற எண்ணம் அவள் மனதிற்குள் அப்போது உண்டானது. மிஸ்டர் நம்பியார் அவளை ‘ப்ளாக் ப்யூட்டி’ என்று கூறுவதில் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.

கதவைத் திறந்தாள்.

சதுரத்தில் அவளுக்கு முன்னால் வெளிச்சம் மட்டுமே இருந்தது.

போய்விட்டானா?

அவள் வெளியே வந்து பார்த்தபோது சிட் அவுட்டில் ஒரு மனிதன் முதுகைக் காட்டியவாறு நின்றிருந்தான்.

“சார்... நீங்க...?”

காதில் விழுந்திருக்குமா? சிறிதும் அசையவில்லை. ஜெயா தெளிவான குரலில் கேட்டாள்: “யாரைப் பார்க்கணும்?”

அந்த மனிதன் திரும்பி நின்று சொன்னான்:

“உங்களைத்தான்...”

“என்னையா?”

“ஆமா.”

ஜெயா அந்த மனிதனைத் தலையிலிருந்து கீழ்வரை பார்த்தாள். சிக்கப் பிடித்த தலைமுடி, தடிமனான புருவங்களுக்கு இடையில் ஒளிந்து கொண்டு பார்க்கும் விழிகள்... அந்த விழிகள் அசையும்போது சிறுசிறு மின்னல்கள் சிதறுவதைப்போல இருந்தது.

அவன் வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

அவள் அந்த மனிதனைப் பார்த்தாள்.

“தெரியல... அப்படித்தானே?”

“தெரியல...”

அவன் மெதுவாகச் சிரித்தான். தொடர்ந்து கரகரத்த குரலில் சொன்னான்: “ஞாபகம் இல்லாம இருக்குறதுல தப்பு இல்ல. என் பேரைச் சொல்றேன்... எஸ்.ராஜசேகரன்...”

அவளுடைய மனதிற்குள்ளிருந்து ஒரு ஓசை எழும்பி மேலே வந்ததைப் போல் இருந்தது.

“ராஜன்!”

“அப்படித்தான் நீங்க என்னை அப்போ கூப்பிடுவீங்க. நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா? உங்க பேரு இப்பவும் ஜெயாதானா?”

அடக்க முடியாத அளவிற்கு வழிந்து கொண்டிருந்த கண்ணீர்தான் அதற்குப் பதிலாக இருந்தது. எதற்காகத் தான் அப்படிக் கண்ணீர் சிந்துகிறோம் என்று ஜெயாவிற்கே தெரியவில்லை. ராஜன் அவளுடைய காதலன் இல்லை. அவளும் ராஜனுடைய காதலி இல்லை.

“உட்காருங்க...”

“அதுக்காகத்தான் நான் வந்தேன். கொஞ்ச நேரம் ஒரு இடத்துல உட்காரணும்போல இருக்கு.”

அதைச் சொன்ன ராஜன் அருகில் கிடந்த சோஃபாவில் போய் உட்கார்ந்தான்.

“குடிக்க ஏதாவது...?” அந்தச் சாதாரண கேள்வியைக்ககூட ராஜனிடம் கேட்டிருக்க வேண்டியதில்லை என்று ஜெயா நினைத்தாள்.

“மது வேண்டாம் - இருந்தாலும் ஏதாவது குடிக்கணும். சாப்பிடுறதுக்கும் ஏதாவது இருந்தா நல்லா இருக்கும். எனக்குப் பசியா இருக்கு. நான் சாப்பிட்டு ரெண்டு நாட்கள் ஆச்சு.”

“இப்பவே அதுக்கு ஏற்பாடு பண்றேன்....”

மீனாட்சியை அழைத்து அவள் உணவு தயாரிக்கச் சொன்னாள். தொடர்ந்து அவள் அவனுக்கு அருகில் போய் உட்கார்ந்தாள்.


திடீரென்று காலம் ஒரு ஆயிரம்கால் பூச்சியைப்போல ஊர்ந்து வந்து நிற்பதைப்போல் அவளுக்குத் தோன்றியது. அந்தக் காலத்தில் ராஜனுக்கு அருகில் இதே மாதிரி தான் அமர்ந்திருந்த நாட்களை அவள் நினைத்துப் பார்த்தாள்.

அப்போது விரியாத மலரைப் போல பரிசுத்தம் நிறைந்த அழகான ஒரு இளம் பெண்ணாகத் தான் இருந்ததை ஜெயா நினைத்துப் பார்த்தாள்.

ராஜன் ஒரு நெருப்பு ஜுவாலையாக இருந்தான்.

முதல் வகுப்பில் எம்.எஸ்ஸி.யில் அவன் தேர்ச்சி பெற்றான். புகழ்பெற்ற தந்தையின் புத்திசாலி மகன். ராஜனைப் பொறுத்தவரையில் உத்தியோகம் என்பது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. அன்று ராஜன் அதைச் செய்ய வேண்டுமென்று நினைக்க வேண்டும். உத்தியோகம் இருக்கவே செய்தது. ஆனால், “நான் ஒரு நுகத்தடி பூட்டிய எருமையாக இருக்க விரும்பல. என் வானத்து விளிம்பு ரொம்பவும் தூரத்துல இருக்கு. நான் அங்கே பயணம் செய்யணும்- ராஜனுடைய அந்த வார்த்தைகளைக் கேட்டு ஜெயா அதிர்ச்சியடைந்துவிட்டாள். அப்போது அவள் ஒரு சிறு பெண்ணாக இருந்தாள். வேலை கிடைத்து, ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வாழ ஆரம்பித்துவிட்டால், வாழ்க்கை முழுமை அடைந்ததாக அர்த்தம் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய அதிர்ச்சியைப் பார்த்து ராஜன் சொன்னான்: “நீ அதிர்ச்சியடைஞ்சிட்டியா? எதுக்கு? நான் என்னைச் சுற்றி என்ன நடக்குதுன்னு பார்த்துக்கிட்டு இருக்கேன். என் ஒவ்வொரு ரோமக் காம்பு வழியாகவும் சுற்றி இருக்குற அனுபவங்களை உறிஞ்சி எடுக்குறேன். தொழில் இல்லாத ஆண்கள்... வெட்கத்தை மறைக்கத் துணி இல்லாத தாய்மார்கள்... பள்ளிக்குப் போய் படிக்க முடியாத பிள்ளைகள்... இவர்கள் என் கவலை நிறைந்த கனவுகளா இருக்காங்க. இந்த மோசமான நிலைமையை மாற்றி அமைக்கணும். நான் ஒரு சொர்க்கத்திற்காகப் போர் செய்ய விரும்புகிறேன். அந்த சொர்க்கத்தின் நான்கு எல்லைகளும் எப்படி இருக்கும்னு எனக்கு தெளிவா தெரியாது. இருந்தாலும் அதைப் பிடிக்க முயற்சி செய்றப்போதான், அதன் நான்கு எல்லைகளும் தெரியும் ஜெயா.”

அவள் அதைக் கேட்டவாறு நின்றிருந்தாள்.

ராஜன் கூறும்போது, எதிர்த்து எதுவும் கூற முடியவில்லை.  என்ன வாக்கு சாதுர்யம்! ஆயிரக்கணக்கான மனிதர்களிடம் கூறி அவர்களின் மனதை மாற்றக்கூடிய திறமை கொண்ட நாக்கு ஆயிற்றே அது!

“நான் ஒரு திட்டம் வச்சிருக்கேன்” - ராஜன் அன்று சொன்ன வார்த்தைகளை ஜெயா நினைத்துப் பார்த்தாள். “நான் ஒரு குண்டு போடுவேன் ஜெயா. அது பலவற்றையும் சாம்பலாக்கும்.”

“அது ஒரு பிரச்சினைகளை மேலும் அதிகமாகத்தானே செய்யும்?”

“உடைக்காம வேலை செய்ய முடியாது. இப்போ கொல்றதுக்கான காலகட்டம். புரட்சி... எல்லாரையும் கொல்லணும். அதுக்குப் பிறகு ஒரு புதிய உலகம் படைக்கப்படும்...”

“ஏராளமான பாவச் செயல்களைச் செய்த பிறகு...”

“பாவம்... - ராஜன் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். ‘அப்பிராணிப் பெண்ணே!’ என்று அழைப்பதைப் போல் இருந்தது அந்தச் சிரிப்பு! “பாவமும் புண்ணியமும் சூழ்நிலைக்கு ஏற்றபடி மாறும். அர்ஜுனன் அம்பை எடுத்து எய்து கொன்றால் புண்ணியம். அஸ்வத்தாமன் மிதிச்சுக் கொன்றால் பாவம். ரெண்டுமே கொலைதான். செய்யும்போது இருக்குற மனநிலைதான் முக்கியம்.”

ராஜனுடன் வாதம் செய்து வெற்றி பெறுவது என்பது நடக்காத விஷயம் என்று தோன்றியது. அந்த முயற்சியில் அவள் எதற்குத் தேவையில்லாமல் ஈடபட வேண்டும்?

சிறிது நேரம் அவள் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். அவனுடைய மனதை ஏதோ அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது என்பதை அவளால் உணர முடிந்தது. சிவந்த முகத்தை அவளுக்கு நேராகத் திருப்பிய ராஜன் கேட்டான்: “ஜெயா, உன் பாலசந்திரன் உன்னைத் திருமணம் செய்துகொள்வானா?”

“எனக்கு எப்படித் தெரியும்?”

“தெரிஞ்சிருக்கணும். பொதுவாகப் பார்த்தால் அவன் மோசமானவன் இல்ல. அதே நேரத்துல அவன் வசதியானவங்க தோள்ல கைபோட்டு நடக்குறதுல ரொம்பவும் விருப்பம் உள்ளவன். அப்படிப்பட்ட பழக்கம் உள்ளவர்கள் எப்பவும் உண்மையானவர்களா இருக்கமாட்டாங்க. ஞாபகத்துல வச்சுக்கோ... நான் இப்போ சொல்றது உனக்குப் பிடிக்குமான்னு எனக்கு தெரியாது.”

தன் உள்ளத்திற்குள் பாலசந்திரனைப் பற்றி தான் நினைத்து வைத்திருந்த உண்மையை, எச்சரிக்கை என்பது மாதிரி அன்று ராஜன் சொன்னதை ஜெயா விரும்பவில்லை என்பது உண்மைதான். எனினும் அவள் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதே நல்லது என்று நினைத்து அவள் மவுனமாக இருந்தாள்.

“உங்களோட அந்தக் கறுப்புப் பெண் இதுவரை காப்பி கொண்டு வரல” - ராஜன் தன்னுடைய தலைமுடியை விரல்களால் வருடியவாறு சொன்னான்: “என் உள்ளுக்குள் நெருப்பு எரியிற மாதிரி இருக்கு.”

அவன் சொல்லி முடிக்கும் நேரத்தில் மீனாட்சி காப்பியையும் பலகாரத்தையும் எடுத்துக் கொண்டு அங்கு வந்தாள். பற்றி எரிந்துகொண்டிருந்த நெருப்பில் விறகை எடுத்து எறிவதைப்போல ராஜன் வேகவேகமாகச் சாப்பிட்டான்.

அவள் அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

“நான் வாரி எடுத்துச் சாப்பிடுறதைப் பார்த்து உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும். பசின்றது ஒரு கொடுமையான அரக்கி. அவ தின்னாதது எதுவுமே இல்ல.”

சாப்பிட்டு முடித்தவுடன் ஜெயா கேட்டாள்: “இப்போ எங்கேயிருந்து வர்றீங்க?”

புறப்பட்ட இடத்தின் பெயரை ராஜன் சொன்னான். கடந்த இருபத்தாறு நாட்களாக ஒவ்வொரு இடமாக அவன் சுற்றித் திரிந்திருக்கிறான்.

“இப்பவும் அரசியல்தான்... அப்படித்தானே?”

ராஜனின் கிண்டல் கலந்த சிரிப்புச் சத்தம் பெரிதாகக் கேட்டது.

“போதும்... நான் அது போதும்னு நிறுத்திட்டேன்.”

அந்த வார்த்தைகளை நம்புவதற்கு ஜெயாவிற்குக் கஷ்டமாக இருந்தது.

இன்று அழுக்கடைந்த ஒரு மனிதனாகத் தனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் அன்றைய அந்த இளைஞனை அவள் ஞாபகப்படுத்திப் பார்த்தாள். அன்று பேசிக்கொண்டு நிற்கும்போது பல நேரங்களில் மனதில் ஒரு எண்ணம் கடந்து போய்க் கொண்டேயிருந்தது. இந்த அறிவாளி மனிதனுடன் வாழ வேண்டிய சூழ்நிலை உண்டானால்..? ஆனால், ராஜனுக்கு அப்படிப்பட்ட ஒரு எண்ணமே உண்டாகவில்லை.

ஒருவேளை அப்படிப்பட்ட ஒரு எண்ணம் உண்டாகியிருந்தால், அது விஜயலட்சுமியை நோக்கி மட்டுமே இருந்திருக்கும். அரேபியக் குதிரையின் சுறுசுறுப்பையும் இளம் மானின் அழகையும் கொண்ட பெண் அவள். அவளுடைய சொற்பொழிவு மழை பொழிவதைப் போலிருக்கும். அவளுடைய ஒவ்வொரு செயலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவருவதைப் போலிருக்கும். அந்த உதடுகளில் ஓணக்காலத்தில் மலரும் தும்பைப் பூக்கள் வாடாமல் இருந்தன.

ராஜனே பலமுறை கூறி காதில் விழுந்திருக்கிறது “அவள் ஒரு யதார்த்தமான பெண்.”

அவளைப்போல ஆவது என்பது முடியாத ஒன்று என்று ஜெயாவிற்கு ஆரம்பத்திலேயே தோன்றிவிட்டது.


விஜயலட்சுமி அரங்கங்களில் முழங்கிக் கொண்டிருந்தாள்.

ராஜனும் அரங்கங்களில் ஏறி பலத்த கைத்தட்டல்களை வாங்கிக் கொண்டிருந்தான் - ஒரு போர்க்குதிரையைப் போல.

தனது செயல்களுக்குத் தன்னுடைய தந்தை நிச்சயமாக எதிராக இருப்பார் என்று ராஜன் நினைத்தான். ஆனால், அதற்கு நேர்மாறாக நடந்தது. அவர் மிகவும் அன்புடன் பேசினார்.

“எனக்கு வயசாயிடுச்சு. இந்த வயசுல எவ்வளவு சக்தியுள்ள கண்ணாடி அணிஞ்சாலும் மாற்றங்களின் வடிவத்தை உள்ளது உள்ளபடி பார்க்க என்னால முடியாது. உனக்கு எது சரின்னு படுதோ, அதை நீ செய்யலாம். செய்யணும். உன் தலைவர்களுக்குச் சரின்னு தோணினா போதாது. நான் சொல்றது புரியுதுல்ல...?”

“ம்...”

“புரியுதுன்னு வேகமா சொல்லக்கூடாது. எளிமையான பாதைகளைத் தேடுறவங்களோட குணம் அது. நீ சிரமங்கள் நிறைந்த பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கே. நடப்பதற்கு வேறொரு ஆளின் காலைக் கடனுக்குக் கேட்க முடியாது. அப்படியே கிடைத்தாலும், அது உன்னோட நடையா இருக்காது. உன்னோட இலட்சியமும் உன்னோட பாதையும் நீயே யோசித்து முடிவு செய்ததுதானே?”

“ஆமா...”

“ரொம்ப நல்லது. அது போதும் எனக்கு. மனசை உற்றுப்பார். நீ உன்னைப் பின்பற்றி நடக்குறியா? இல்லாட்டி கனவுல பார்த்த ஏதோ ஒண்ணைப் பின்பற்றி நடக்குறியா? பரவாயில்லை... கனவுகளும் நல்லவைதான்... புறப்படு...”

தன் தந்தையின் வார்த்தைகளைக் கேட்டபோது தனக்கு எரிச்சல் உண்டானது என்று அன்று ராஜன் சொன்னான். எனினும், அன்பு கொண்ட அவரை எதிர்த்து அவன் ஒரு வார்த்தைக்கூடப் பேசவில்லை.

“ராஜன், உங்க அப்பா இப்போ...”

மீண்டும் ராஜனின் கிண்டல் கலந்த சிரிப்புச் சத்தம் உரத்து முழங்கியது. “அவரைப் பார்த்தா எவ்வளவு நல்லா இருக்கும்! ஒரு வாழ்க்கைக்குத் தேவைப்படுற கல்வியைத் தந்து பயணம் போகும்படி அனுப்பி வைக்கப்பட்ட நான் வாழ்க்கையில் அடைந்ததை என் தந்தையின் கால்களில் வைத்து வணங்கியிருக்கலாமே!”

அதைக் கூறிவிட்டு மீண்டும் ராஜன் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான்.

அவனுடைய தாயும் அவனைத் தடுக்கவில்லை. சுவரில் சாய்ந்து கொண்டு ராமாயணத்தை வாசித்தவாறு அவள் உட்கார்ந்திருந்தாள். எந்தச் சமயத்திலும் எதற்கும் எதிர்ப்புக் கூறியிராத அவனுடைய தாய்.

அந்தத் தாய் யார்? ராஜனின் வார்த்தைகள் ஜெயாவின் நினைவில் வந்தன. “ஐந்து பிள்ளைகள் பிறந்ததில், முதல் பிள்ளை இறந்துவிட்டது. இரண்டாவது பிறந்தது பெரிய அண்ணன். அவர் தன்னுடைய முப்பத்தியிரண்டாவது வயசுல இரத்த வாந்தி எடுத்து இறந்துட்டாரு. கடைசி நிமிடம் வரை அம்மா மகனை கவனம் எடுத்துப் பார்த்தாங்க. பெரிய அண்ணன் இறந்தப்போ, அம்மா தன் கவலையை பெருசா காட்டிக்கவே இல்லை. அமைதியா அறைக்குள்ளே போயி படுத்துட்டாங்க. பல நாட்கள் அங்கேயே படுத்துக் கிடந்தாங்க. மூணாவது... அக்கா. அவங்க முதல் குழந்தையை வயித்துல வச்சிருந்தப்போ, அவங்களோட கணவர் இறந்துட்டாரு. அக்கா வீட்டுக்கு வந்தப்போ, அம்மா அழவே இல்ல. கண்ணீர் விட்டபடி நின்னுக்கிட்டு இருந்த தன் மகளின் முதுகை அம்மா தடவி விட்டாங்க. நாலாவதா பிறந்தது... சின்ன அண்ணன். தன்னோட இருபதாவது வயசுல வலிப்பு நோய் வந்து தண்ணியில் விழுந்து அவர் இறந்துட்டாரு. இறந்த உடலைக் கொண்டுவந்து படுக்க வச்சப்போ, அம்மா கொஞ்ச நேரம் வந்து பார்த்தாங்க. பெருமூச்சுகூட விடல. பக்கத்துல நின்னுக்கிட்டு இருந்த என்கிட்ட சொன்னாங்க. “இறுதிச் சடங்குகளை ஒழுங்கா செய்...” அதைச் சொல்லிவிட்டு அவங்க உள்ளே நுழைஞ்சு கதவை மூடிக்கிட்டாங்க.

அந்தத் தாய் தன் கடைசி மகன் சொன்ன எல்லாவற்றையும் கேட்டாள். ராமாயணத்தை மடக்கித் தன் மடியில் வைத்துவிட்டு, சிறிது நேரம் அவனுடைய முகத்தையே உற்றுப் பார்த்தாள். பிறகு சொன்னாள்: “மற்ற எல்லாரும் போனப்போ காரணத்தைச் சொல்லல. நீ அதைச் சொல்றே. நல்லது... நான் இறக்குறதுக்கு முன்னாடி இனிமேல் உன்னை நான் பார்க்க முடியுமா?”

ராஜன் அதற்கு பதில் எதுவும் கூறவில்லை.

“சாப்பிட்டுட்டுப் போ...”

அவனுடைய தாய் ராமாயணத்தை விரித்து வைத்துக் கொண்டு தன் வாசிப்பைத் தொடர்ந்தாள். ‘வாழ்க்கை இன்பங்கள் நிறைந்தது என்பதை வாழ்ந்து காட்டு.’

வாழ்க்கை இன்பங்கள் நிறைந்தது அல்ல என்று ராஜன் எப்போதும் நினைத்தது இல்லை. வாழ்க்கையின் அலைகளையும் நுரைகளையும் தாண்டி நீந்திக் கடந்து செல்லத்தான் அவனுடைய மனம் துடித்துக் கொண்டிருந்தது.

“ஜெயா, என்ன யோசிக்கிறீங்க?” ராஜன் இடையில் புகுந்து கேட்டான்.

“ஒண்ணுமில்ல...”

“என்னைப் பற்றி ஏதாவது நினைச்சிருப்பீங்க?”

அதற்கு அவள் பதில் சொல்லவில்லை.

“எதற்காக நான் அரசியலை விட்டுட்டேன்னு நினைச்சீங்களா?”

“ஆமா...”

“கடந்த காலத்தை நான் இப்பவும் நினைச்சுப் பார்க்குறேன். நுரை தள்ளிக்கிட்டு இருக்குற கள்ளுப் பானையை அந்தக் காலத்துல நான் பார்த்து நின்னுக்கிட்டே இருப்பேன். குடிக்கணும்ன்றதுக்காக இல்ல. அந்தப் பானையைப் போலத்தான் நானான்னு அப்போ நினைப்பேன். எனக்கே நான் அடங்காத காலம் அது. ஜெயா, உங்களுக்குத்தான் அது தெரியுமே?”

“ம்... ஒருமுறை கடற்கரை வழியா நடந்து போறப்போ நீங்க சொன்னது ஞாபகத்துல இருக்குது. ‘இந்தக் கடல் என் அண்ணன்னு எனக்குத் தோணுது. நாங்க ரெண்டு பேருமே யாருக்கும் அடங்காதவங்க’ன்னு நீங்க சொன்னீங்க”

“சொல்லியிருக்கலாம். அது உண்மைதான். ஆனா, ஞாபகத்துல இல்ல. அதை நினைக்கிறதுக்கு நேரமும் இல்லாமல் போச்சு. புயலைப் போல நான் நடந்து திரிஞ்சேன். நிழல்கள் வழியா இருட்டுக்கு மத்தியில் ஆழமான குழிகள்ல ஒளிஞ்சிக்கிட்டு... யார் கையிலயும் அகப்படாம.. அப்படி அகப்படாம இருந்ததுக்காகப் பெருமைப்பட்டுக்கிட்டு... அப்போ... அப்போ மட்டும்தான் நான் வாழ்ந்தேன்.”

ராஜன் பேசாமல் இருந்தான். அவன் எதையோ நினைக்கிறான் என்பதை அவனுடைய கண்கள் தெரிவித்தன. நினைத்துப் பார்ப்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கக் கூடிய ஒரு வாழ்க்கை தன்னுடையது என்பது அவனுக்கு நன்கு தெரியும். முள்ளாலான கிரீடத்தை அணிந்தபோது வாழ்க்கை மிகவும் சந்தோஷம் நிறைந்த ஒன்றாக இருந்தது. ஏதோ ஒரு மலைச் சரிவில் ஏராளமான நெருப்பு நாக்குகளை நீட்டிக் கொண்டு நின்றிருக்கும் ஒரு பெரிய மாமரம் எப்போதும் அவனுடைய மனதில் தோன்றிக் கொண்டேயிருந்தது.

“நாங்கள் எல்லாரும் ஆபத்துகள் நிறைந்த ஒரு இடத்துல இருந்தோம். கவலைன்னா என்னன்னு தெரியாது. ஏதோ ஒரு பெரிய விஷயத்துக்காக நாங்க போராடிக்கிட்டு இருந்தோம். எங்களுக்குள் என்ன நம்பிக்கை! ஒரு ஆளோட பார்வையின் அர்த்தத்தை இன்னொரு ஆள் எவ்வளவு வேகமா புரிஞ்சிக்குவான் தெரியுமா? வாயில இரையை எடுத்துட்டுப் போயி முத்தம் தர்ற பறவையைப் போல, நாங்க துப்பாக்கிகள் மூலமா நெருப்புப் பொறிகளை அனுப்பினோம்.


இருந்தாலும் நண்பர்களை விட்டுப் பிரிஞ்சு, தனியா இருக்குறப்போ என் பார்வை என்னோட இதயத்திற்குள் ஆழமாக நுழைஞ்சது. ‘மனசுக்குள் பார்க்காதே. பொருளை மட்டும் பார்’ - இதுதான் எங்களுக்குச் சொல்லித் தரப்பட்ட பாடம். எனினும் குற்ற உணர்வுடன் தனிமையில் இருக்குறப்போ ஆத்மாவுக்குள்ளே நுழைஞ்சு ஆராய்ச்சி பண்ணினேன். அந்தச் சமயத்துல என் தாயின் ராமாயண வாசிப்பு மனசுக்குள்ளே இருந்து மேலே வந்தது. ‘வாழ்க்கை இன்பங்கள் நிறைந்தது என்பதை வாழ்ந்து காட்டு’. இருள் மூடியிருக்கும் கிராமப் பகுதிகளிலும், மலைச்சரிவுகளிலும் விடாது பெய்த மழையில் நனைஞ்சுக்கிட்டு அரைப் பட்டினியுடனும் முழுப் பட்டினியுடனும் அலைஞ்சு திரிஞ்சப்போ களைப்பே உண்டாகல. உள்ளே ஒரு நெருப்பு இருந்தது. அது எரிஞ்சு நரம்புகள் மூலம் பயணம் செய்துக்கிட்டு இருந்தது. வெறும் தரையில வேட்டியை விரிச்சு இருட்டைப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தப்பகூட மனசுல என் தாயின் முகம் தெரிஞ்சது. மெட்டுடன் ராமாயண வாசிப்பு கூடாது. அடிபணியக் கூடாது. பாரம்பரியம் பின் கழுத்தில் ஏறி உட்கார முயற்சி செய்யுது. அதை அங்கிருந்து அகற்ற வேண்டும். உதிக்கப்போகிற ஒரு விடியலுக்காக நான் வாழறேன். அதற்காக எந்தத் தியாகத்தையும் செய்ய நான் தயார்...”

“இப்போ அந்த நம்பிக்கைகளை முழுசா விட்டுட்டீங்களா?”

ராஜன் மீண்டும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான்.

“எத்தனையோ ஆயிரம் மனிதர்கள் இன்று அதை நம்பி பின்பற்றிக் கொண்டுதான் இருக்காங்க. அவங்களோட அந்த உண்மையான நம்பிக்கையை நான் கேள்வி கேட்கத் தயாராக இல்லை. அப்படிப்பட்டவங்க இருக்கத்தான் செய்றாங்க. அதுதான் எனக்குக் கவலையே. என் நரம்புகளைப் போல நான் அவங்கமேல அன்பு வச்சிருகேன்றதுதான் கவலையான விஷயமே, ஜெயா...”

ராஜன் சோர்வடைந்து விட்டதைப்போல சோஃபாவில் சாய்ந்து உட்கார்ந்தான். தொடர்ந்து நீண்ட பெருமூச்சு விட்டவாறு சொன்னான்: “அவங்களுக்கு இளம் வயது... நான் இளைஞனா இருந்ததைப் போல... ஆனா, அவங்களும் அங்கிருந்து திரும்பி வர்ற நாளை நான் பார்க்குறேன்...”

“உலகம் நல்ல நிலைக்கு வராதுன்ற எண்ணமா?”

“இல்ல... நல்லா ஆகுறதுக்கான வழி இது இல்லைன்றதுதான் என்னோட எண்ணம்.”

“அப்படின்னா அந்த இளைஞர்கள் முன்னாடி நடந்து நல்லா ஆகுறதுக்கான பாதையை அவர்களுக்குக் காட்ட வேண்டாமா?”

ராஜன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.

“ஜெயா, சரியான பாதை எதுன்னு எனக்கு உறுதியா தெரிஞ்சாத்தான் நான் மற்றவங்களுக்கு அதைக் காட்டித்தர முடியும். எனக்குன்னு ஒரு லட்சியம் இருக்கு, லட்சியம் இருக்குன்னு வெறுமனே சொல்லிக்கிட்டு திரியிற வயசை நான் தாண்டிட்டேன்.”

“ம்... எனக்கு இப்படிப்பட்ட விஷயங்களெல்லாம் கொஞ்சம்கூட புரியாது. ராஜன், ஆரம்பத்துலயே அது உங்களுக்குத் தெரியும்ல?”

“தெரியும். அப்படி இருக்கறது நல்லதா, நல்லது இல்லையான்னு என்னால இப்போது உறுதியாகச் சொல்ல முடியல. வாழ்க்கைன்றது ஒரு நேர்க்கோடாக எனக்கு முன்னாடி தோணிச்சு. இப்போ அவ்வளவும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைஞ்சு கிடக்கிறதா படுது, ஜெயா. வாழ்க்கைன்றது ஒரு தத்துவம்னு நான் நினைச்சேன். வாழ்க்கை நான் படைச்சது இல்ல... தத்துவம் நான் படைச்சது, இங்கேதான் குழப்பமே...”

“சரி... அதுக்காக இந்த அளவுக்கு, குறைபட்டுக் கொள்ற அளவுக்கு என்ன நடந்தது?”

“ஒண்ணும் நடக்கல. இப்போ பார்க்குறது தத்துவங்கள் இல்லை. வாழ்க்கையும் இல்ல...”

“பிறகு?”

“ஏராளமான கார்கள்...”

“நல்லதுதானே?”

“யாருக்கு நல்லது?”

ராஜன் மீண்டும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். அப்போது ஒரு பையன் அங்கு வந்து ஒரு தாளை நீட்டினான்.

குணஷேணாயி நாளை தன்னுடன் பெங்க*ருக்கு வர முடியுமா என்று அவளைக் கேட்டிருக்கிறான். குணஷேணாயி நல்லவன். அழகன். தாராள மனம் படைத்தவன்.

“வருகிறேன்.”

தாளைத் திருப்பி அனுப்பினாள்.

“ஜெயா” - ராஜன் சொன்னான்: “மீனவர்கள் குடியிருக்குற இடம் பக்கமா நான் போனேன். காகங்களும் உடம்புல துணி இல்லாத வயிறு தள்ளிய குழந்தைகளும் சத்தம் போட்டுக்கிட்டு இருந்தாங்க. அங்கே மக்கள் கூட்டமா நின்னாங்க. ரெண்டு பெண்கள் சண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்க. அவங்க விபச்சாரக் கதைகளை ஒருத்தியோடு ஒருத்தி சொல்லித் திட்டிக்கிட்டு இருந்தாங்க. ஒருத்தியோட புருஷன் யாரோ ஒரு அரேபியப் பணக்காரன் உண்டாக்கிவிட்டுப் போன கர்ப்பத்திற்குத் தான்தான் காரணம்னு ஏத்துக்கிட்டவன்னு இன்னொருத்தி சொன்னா. வாரத்துல மூணு நாட்கள் நல்லா ஆடை அணிவித்து இன்னொருத்தியை ஹோட்டலுக்கு அழைச்சிட்டுப் போயும், அவ கர்ப்பம் தரிக்காததற்குக் காரணம் ‘லூப்’ மாட்டிகிட்டதுதான்றது எதிர்க்கட்சியோட வாதம். மக்கள் ரெண்டு பேரோட வாதங்களையும் கேட்டு உரத்த குரல்ல ஆரவாரம் செஞ்சாங்க. கொஞ்ச நேரம் நான் அதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன்.”

ராஜனின் வார்த்தைகள் தன்னுடைய மனதிற்குள் ஒரு ஊசியால் குத்தி நுழைவதைப் போல் ஜெயா உணர்ந்தாள்.

“வரட்டுத்தனமாக தத்துவங்களைப் பேசிக்கிட்டு ஒருவரோடொருவர் வாதமும் எதிர்வாதமும் செய்றதைக் கேட்டேன். மக்கள் கைத்தட்டுவதையும் பார்த்தேன். பலவற்றையும் பார்த்தேன். பார்த்துப் பார்த்து வெறுத்துட்டேன். என் ஜெயா, ஒண்ணை மட்டும் நான் பார்க்கல.”

“எதை?”

“மனித நேயம்... ஒரு துளியாவது...”

ராஜன் அதைச் சொன்னபோது தானே பேசுவதைப் போல ஜெயா உணர்ந்தாள்.

கொடுக்கிறார்கள். வாங்குகிறார்கள்.

வாங்குகிறார்கள். மீண்டும் கொடுக்கிறார்கள்.

அன்பிற்கு எங்கு இடமிருக்கிறது?

கோபி, வர்க்கீஸ் மாஸ்டர், குணஷேணாயி, வினாயக், வக்கீல் நம்பியார் - எல்லோரும் கொடுக்கிறார்கள்.... வாங்குகிறார்கள்.

அன்பு எங்கே?

ராஜன் ஒரே இடத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

ஒரே அமைதி.

கருங்கல் சிலை மீண்டும் தேநீர் கொண்டு வந்து வைத்தது.

“தேநீர் குடிங்க...”

அப்போதும் ராஜன் ஒரே இடத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

தேநீரை எடுத்து நீட்டியபோது, அவன் அதை வாங்கிக் குடித்து விட்டு பார்வையை எடுக்காமல் தொடர்ந்து சொன்னான்:

“பயங்கரமாக பொசுக்குற பாலைவனத்தைக் கடந்து நடந்து வந்ததைப் போல இருக்கு, ஜெயா. வெப்பக் காற்று உடம்புல இருந்த தோலை முழுசா தின்னு முடிச்சிடுச்சு. மனசும் கரிஞ்சு சாம்பலாயிடுச்சு. பாலைவனத்துல ஓடித்திரிஞ்ச தீர்க்கதரிசி யோஹன்னான் சொல்றதுக்கு ஒரு விஷயம் இருந்தது - நெருப்பு கொண்டும் பரிசுத்த ஆத்மா கொண்டும் ஞானஸ்நானம் செய்து வைக்க ஒருவன் வந்து கொண்டிருக்கிறான்னு. அப்படி ஒரு கிறிஸ்துவோட வரவை என்னால அறிவிக்க முடியல...”

ராஜன் அழுவதைப்போல தன் பேச்சை முடித்தான்.

“விஜயலட்சுமியைப் பார்த்தீங்களா?”

“இல்ல... அவளோட சாயம் பூசிய கேட்டுக்குப் பக்கத்துல கொஞ்ச நேரம் நின்னேன். மிகப் பெரிய மாளிகை வீட்டுக்கு முன்னால நின்றிருந்த காரும் ரொம்ப பெரிசுதான்.


சந்தோஷம்... நல்லா இருக்கட்டும். எதுக்கு தொந்தரவு செய்யணும்னு நினைச்சுத் திரும்பி வந்துட்டேன். பிறகு... “ஜெயா, உங்களைப் பற்றிய எல்லா கதைகளும் எனக்குத் தெரியும்.”

தன் நெஞ்சில் ஓங்கிக் குத்தியதைப் போலிருந்தது. எதுவும் பேசாமல் அமைதியாக ஜெயா நின்றிருந்தாள்.

“பாலசந்திரனைப் பற்றி முதல்ல சொன்னப்போ, என்மேல கோபம் வந்துச்சு... அப்படித்தானே? இப்போ? அவன் விஜயலட்சுமிக்கு சொந்தம்னு ஆயிட்டான்.”

கடலிலிருந்து புறப்பட்டு வந்து காற்று திரைச்சீலைகளை இப்படியும் அப்படியுமாக ஆடச் செய்தது.

“பரவாயில்ல...” - ராஜன் ஜெயாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டே தொடர்ந்தான்: “ஜெயா, வாழ்க்கைன்றது நேர்க்கோடு இல்ல...”

அவன் சாய்ந்து உட்கார்ந்தான். மிகவும் களைத்துப் போயிருந்தது மாதிரி இருந்தது.

“வேணும்னா, படுங்க...”

ராஜன் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்துவிட்டுக் கேட்டான்:

“ஜெயா, இன்னைக்கு நீங்க எங்கேயாவது போகணுமா?

“இல்லை”

“இங்கே யாராவது வருவாங்களா?”

“இல்ல..”

“அப்படின்னா நான் இந்த இரவு இங்கே தங்கட்டுமா?”

“கேக்குறதுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு!”

அவன் குளித்து வேறு ஆடை அணிந்தான். உணவு சாப்பிட்டான்.

தூங்குதவதற்காகப் படுத்த போது அவனுக்கு அருகில் போய் ஜெயா உட்கார்ந்தாள். இரண்டு பேரும் ஒருவரையொருவர் அமைதியாகப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தார்கள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.