
விதி செய்த குற்றத்தைப்போல அந்த க்ளார்க்மார்களின் குடும்பத்தில் பிறந்த ஒரு அழகான பெண்ணாக இருந்தாள் அவள். ஒரு பணக்காரனையோ, உயர்ந்த ஜாதியைச் சேர்ந்த ஒருவனையோ காதலிக்கவோ, திருமணம் செய்யவோ விரும்பக் கூடிய அளவிற்குப் பொருளாதார சூழ்நிலையோ, உயர்ந்த அந்தஸ்தோ உள்ள ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவளாக அவள் இல்லை.
கல்வி இலாகாவில் வேலை செய்து கொண்டிருந்த, உயர்ந்த பொருளாதார நிலை எதுவும் இல்லாத சாதாரண ஒரு க்ளார்க் அவளைத் திருமணம் செய்தான்.
தன்னைச் சிறப்புடன் அலங்கரித்துக் கொள்ளக் கூடிய சூழ்நிலையில் இல்லாததால், சாதாரண ஆடைகளைத்தான் அவள் எப்போதும் அணிந்திருப்பாள். பெண் இனத்திற்கென்றே பொதுவாக இருக்கக்கூடிய திருப்தியற்ற வெளிப்பாடு அவளுடைய முகத்தில் எப்போதும் தெரிந்தது. எந்தக் குடும்பத்தில் பிறந்தவளாக இருந்தாலும், பெண் என்பவள் அப்படித்தான் இருப்பாள். பிறக்கும்போதே இருக்கக்கூடிய சில சாதுர்யங்களும், அழகும், சூழ்நிலைக்கேற்றபடி செயல்படும் புத்திசாலித்தனமும், தாழ்ந்த நிலையில் இருக்கக்கூடிய குடும்பத்தில் பிறந்த ஒரு இளம்பெண்ணை, நல்ல வசதி படைத்த பணக்காரக் குடும்பத்தில் பிறந்த இளம்பெண்ணுக்கு நிகராக இருக்கும்படி செய்கின்றன.
ஆடம்பரமான ஆடைகள் மீது ஈடுபாடு அதிகம் இருந்ததால் அவை நம்மிடம் இல்லையே என்ற வருத்தம் அவளை விட்டுப் போகவில்லை. தாழ்ந்த நிலையில் இருக்கும் தன்னுடைய அப்பார்ட்மெண்டும், அதன் அழகில்லாத சுவர்களும், பழைய நாற்காலிகளும், நிறம் மங்கலாகிப்போன இதர வீட்டுப் பொருட்களும் அவளுக்கு மனக் கவலையை மட்டுமே பரிசாகத் தந்தன. அவளுடைய நிலைமையில் வேறு ஒரு பெண் இருந்திருந்தால், ஒருவேளை அவள் இவற்றையெல்லாம் கவனிக்காமலே கூட இருந்துவிடலாம். மன வருத்தத்தைப் பரிசாகத் தந்ததோடு நிற்காமல் அந்த ஒட்டுமொத்தமான சூழலும் அவளைக் கோபம் வேறு கொள்ள வைத்தது.
அந்தச் சிறிய குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்த அந்தச் சாதாரண மனிதனைப் பார்க்கும்போது அவளுடைய மனதில் கவலையும், ஏமாற்றம் கலந்த கனவுகளும் உண்டாக ஆரம்பிக்கும், சரவிளக்குகளும், நவநாகரீகமான அலங்காரப் பொருட்களும், அழகான அறைகளும், சுகமான நினைவுகளுடன் பெரிய நாற்காலிகளில் காலணிகள் அணிந்தவாறு படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் பணியாட்களும் அவளுடைய நினைவுகளில் வலம் வந்தார்கள். விலை மதிக்கமுடியாத பல்வேறு வகையான பொருட்களும், படு ஆடம்பரமான பட்டாடைகளும், எந்தப் பெண்ணும் விரும்புவதும் பொறாமைப்படக் கூடியதுமான முக்கிய நபர்களுடனும் காதல் ஜோடிகளுடனும் மாலை வேளைகளில் அமர்ந்து சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருப்பதற்காகக் கட்டப்பட்டிருக்கும், நறுமணம் கமழும்-காம உணர்வைக் கிளர்ந்தெழச் செய்யும் அறைகளும் அவளுடைய கனவில் வந்தன.
வட்ட வடிவமாக இருக்கும் அந்த சாப்பாட்டு மேஜையில் உணவை சாப்படுவதற்காக உட்கார்ந்தபோது, அந்த மேஜை விரிப்பு மூன்று நாட்களாக உபயோகப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதை அவள் நினைத்தாள். அவளுக்கு எதிரில் உட்கார்ந்திருந்த அவளுடைய கணவன் “அடடா! உணவு எவ்வளவு அருமையா இருக்கு! இதைவிட சுவையான உணவை நான் சாப்பிட்டதே இல்லை” என்று கூறியவாறு அந்தப் பாத்திரத்தின் மூடியைத் திறந்தபோது, அருமையான இரவு விருந்துகளையும், நாகரீகமாக இருக்கும் மனிதர்களும் பறவைகளும் வரையப்பட்டிருக்கும் சாப்பாட்டு அறையின் மேஜை விரிப்புகளையும், மூக்கைத் துளைக்கும் உணவுப் பொருட்களின் வாசனையையும், வீர வரலாறுகளைப் பற்றிய உரையாடல்களையும், பெண்களின் சிரிப்புகளையும், மீன்களையும், கோழி மாமிசத்தையும் அவள் கனவு கண்டுகொண்டிருந்தாள்.
அவளிடம் விலை அதிகமான ஆடைகளோ, நகைகளோ இல்லை. அப்படிப்பட்ட எந்தப் பொருளும் அவளிடம் இல்லை. அந்த மாதிரியான பொருட்கள் மீது அவளுக்கு நிறைய ஏக்கம் இருந்தது, தான் அதற்காகப் படைக்கப்பட்டவள்தான் என்று அவள் நினைத்தாள். அன்பு செலுத்தவும், அன்பு செலுத்தப்படவும், புத்திசாலியாக இருக்கவும், காதல் கெஞ்சல்களுக்கு ஆளாகவும் அவள் விருப்பப்பட்டாள்.
பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் அவளுக்கு நல்ல வசதி படைத்த ஒரு தோழி இருந்தாள். அந்தத் தோழியின் வீட்டிற்குப் போவது என்றால் அவளுக்கு மிகவும் படிக்கும். ஆனால், அந்தத் தோழி தன் வீட்டிற்கு வந்தபோது, அவள் மிகவும் கவலைப்பட்டாள். தாங்க முடியாத துக்கத்தாலும் ஏமாற்றத்தாலும் அன்று முழுவதும் அவள் கண்ணீர் சிந்திக்கொண்டேயிருந்தாள்.
ஒருமாலை நேரத்தில் அவளுடைய கணவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் கையில் ஒரு கவரை வைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான். “இங்க பாரு... உனக்குன்னு நான் இதைக் கொண்டுவந்திருக்கேன்” என்றான் அவன்.
அவள் ஆர்வத்துடன் அந்தக் கவரைப் பிரித்தாள். அதற்குள் அச்சடிக்கப்பட்ட ஒரு கார்டு இருந்தது. அவள் அதை வெளியே எடுத்தாள். அதில் இப்படி எழுதப்பட்டிருந்தது.
‘வரும் ஜனவரி 18-ஆம் தேதி, திங்கட்கிழமை மாலை, கல்வி அமைச்சரின் இல்லத்தில் ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதில் திரு லாயிஸலையும் திருமதி லாயிஸலையும் கலந்து கொள்ளும்படி இதன்மூலம் அழைக்கிறோம். சம்பந்தப்பட்ட விருந்தில் பெருமதிப்பிற்குரிய அமைச்சரும் திருமதி தார்ஜ் ரம்பானோவும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.’
ஆனால், கணவன் நினைத்ததைப்போல, சந்தோஷப்படுவதற்கு பதிலாக கடுமையான வெறுப்புடன் அந்த அழைப்பிதழை மேஜைமேல் போட்ட அவள் கேட்டாள்: “இந்த அழைப்பிதழை வச்சிக்கிட்டு நான் என்ன பண்ணணும்னு நீங்க நினைக்கிறீங்க?”
“என் தங்கமே, இந்த அழைப்பிதழ் உன்னை மிகவும் சந்தோஷப்பட வைக்கும்னு நான் நினைச்சேன். நீ வெளியே போறதே இல்லையே! அதற்கு ஒரு வாய்ப்பாக இது இருக்குமேன்னு நான் நினைச்சேன். நல்ல ஒரு வாய்ப்பு! இந்த அழைப்பிதழ் கிடைக்க நான் மிகவும் சிரமப்பட்டேன். எல்லோரும் இந்த அழைப்பிதழ் நமக்குக் கிடைக்காதான்னு ஆர்வத்துடன் இருப்பாங்க. ஆனால், அபூர்வமா ஒரு சிலருக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கும். சாதாரண அரசாங்க க்ளார்க்குக்கெல்லாம் இது கிடைக்காது. இந்த நாட்டின் அரசாங்க ஆட்சியாளர்கள் எல்லோரையும் நீ அங்கே பார்க்கலாம்.”
கோபம் குடிக்கொண்டிருக்கும் கண்களுடன் அவனைப் பார்த்துக் கொண்டே அவள் சொன்னாள்:
“இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் நான் எதை அணிந்துகொண்டு போவேன்னு நீங்க மனசுல நினைக்கிறீங்க?”
அதைப்பற்றி அவன் நினைத்திருக்கவில்லை. சிறிது பதைபதைப்புடன் அவன் சொன்னான்: “அதனால் என்ன? நாம தியேட்டருக்குப் போறப்போ அணியக்கூடிய ஆடைகள் போதாதா? உனக்கு அது அருமையாக இருக்கும்.”
மனைவி அழுவதைப் பார்த்து, அதற்குப் பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் பதைபதைத்துப்போய் அமைதியாக அவன் நின்றுவிட்டான். இரண்டு கண்ணீர்த் துளிகள் அவளுடைய கன்னங்கள் வழியாக ஒழுகி உதடுகளில் ஓரத்தில் வந்து நின்றன. தடுமாற்றத்துடன் அவன் கேட்டான்: “என்ன பரச்சினை? என்ன பரச்சினை?”
கடுமையான முயற்சியுடன் தன் கோபத்தை அடக்கிக்கொண்டு, நனைந்த கன்னத்தைத் துடைத்தவாறு மிகவும் அமைதியான குரலில் அவள் சொன்னாள்: “ஒண்ணும் இல்ல.
எனக்குப் பொருத்தமான ஆடைகள் இல்லாததால் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போவது இல்லை. உங்களுடைய நண்பர்கள் யாருக்காவது இந்த அழைப்பிதழைக் கொடுத்திடுங்க. அவங்களோட மனைவிமார்களில் யாராவது என்னைவிடத் தகுதிகள் கொண்டவர்களாக இருக்கலாம்.”
மனதில் கவலை உண்டானாலும் அவன் சொன்னான்: “நாம கொஞ்சம் முயற்சி பண்ணிப் பார்க்கலாமே, மெட்டில்டா! நல்ல ஆடைக்கு என்ன விலை வரும் என்று சொல்லு. வேற விசேஷ சந்தர்ப்பங்களிலும் நாம அந்த ஆடைகளை அணியலாமே!”
சிறிது நேரம் சில கணக்குக் கூட்டல்கள் நடத்தி அவள் என்னவோ தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தாள். பொருளாதார நெருக்கடியை அனுபவித்துக் கொண்டிருக்கும் அந்த க்ளார்க்கின் வாயிலிருந்து பதட்டமோ, மறுப்போ வந்து விடாத அளவிற்கு ஏற்ற ஒரு தொகையைப் பற்றித்தான் அவள் நினைத்துக் கொண்டிருந்தாள். இறுதியில் சிறிது சந்தேகம் கலந்த குரலில் அவள் சொன்னாள்: “மிகவும் சரியாகச் சொல்ல என்னால முடியல. கிட்டத்தட்ட 400 ஃப்ராங்காவது வேணும்னு நான் நினைக்கிறேன்.”
‘நான் ரெய்லே’ சமவெளியில், வரப்போகும் கோடை காலத்தில் நண்பர்களுடன் வேட்டையாடப் போவதற்கு ஒரு துப்பாக்கி வாங்க வேண்டும் என்பதற்காக அவன் 400 ஃப்ராங்கை தன்னிடம் சேர்த்து வைத்திருந்தான். 400 ஃப்ராங்க் என்று கேட்டவுடன் அவனுடைய முகம் ஒரு மாதிரி ஆகிவட்டது. எனினும், அவன் சொன்னான்: “அப்படியா? நான் உனக்கு 400 ஃப்ராங்க் தர்றேன். ஆனால், ஆடைகள் மிகவும் அழகாக இருக்கணும்.”
நடன விருந்திற்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. திருமதி. லாயிஸல் மனதில் கவலையுடனும் பதைபதைப்புடனும் இருந்தாள். அவளுக்கு அந்த நிகழ்ச்சியில் அணியக்கூடிய ஆடை தயாராகிவிட்டது. ஒரு சாயங்கால நேரத்தில் அவளுடைய கணவன் அவளிடம் கேட்டான்: “உனக்கு என்ன ஆச்சு? கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே உன்னை நான் பார்த்துக்கிட்டு இருக்கேன். உன் நடவடிக்கைகள் மிகவும் வினோதமா இருக்கே!”
“நகைகள் எதுவும் இல்லாததால் எனக்கு மிகவும் கவலையா இருக்கு. ஒரு சின்ன ரத்தினக்கல் கூட என்கிட்ட இல்ல. என்னைப் பார்க்கும்போதே நான் ஏதோ வறுமையின் பிடியில் இருக்குற ஒரு குடும்பத்தில் வளர்ந்தவள்ன்றுது தெரிஞ்சிடும். அந்த விருந்துக்குப் போக எனக்கு ஆர்வமே இல்லை - அவள் சொன்னாள்.
அவள் கூறியதற்கு அவன் சொன்னான்: “நீ இயற்கை தரும் பூக்களைச் சூடக் கூடாதா? இந்த சீசனில் பூக்களுக்கு நல்ல மதிப்பு. பத்து ஃப்ராங்க் கொடுத்தால், உனக்கு இரண்டோ மூன்றோ அழகான ரோஜாப்பூக்கள் கிடைக்கும்.”
அவளுக்கு அது சரியான விஷயமாகப் படவில்லை. “இல்லை...” - அவள் சொன்னாள்: “அங்கு வந்திருக்கும் வசதி படைத்த பெண்களுக்கு நடுவில் அது எனக்கு வெட்கக் கேடான ஒர விஷயமாக இருக்கும்.”
அப்போது அவளுடைய கணவன் துள்ளிக்குதித்துக் கொண்டு சொன்னான்: “நாம எந்த அளவுக்கு முட்டாள்களாக இருக்கோம்! திருமதி. ஃபாரஸ்டியர் உனக்கு மகிவும் நெருக்கமான சினேகிதிதானே? அவங்கக்கிட்ட இருந்து நீ ஏதாவது நகையை கடனா வாங்கினா என்ன? அதற்கான நட்பும் நெருக்கமும் அவங்ககூட உனக்குதான் இருக்கே!
சந்தோஷத்தை வெளிப்படுத்தும் ஒரு சத்தம் அவளிடமிருந்து அப்போது உயர்ந்தது: “நீங்க சொல்றது சரிதான். அதைப்பற்றி நான் யோசிக்கவே இல்லை.”
மறுநாளே அவள் தன் சினேகிதி திருமதி ஃபாரஸ்டியரின் வீட்டிற்குச் சென்றாள். தன்னுடைய கவலைக்குள்ளாகக் கூடிய தற்போதைய சூழ்நிலையைப்பற்றி அவள் அந்தப் பெண்ணிடம் சொன்னாள். திருமதி ஃபாரஸ்டியர் தன்னுடைய கண்ணாடி அலமாரியைத் திறந்து அதற்குள்ளிருந்த, ஒரு பெரிய நகைப் பெட்டியை வெளியே எடுத்தாள். தன் தோழிக்கு முன்னால் அந்தப் பெட்டியைத் திறந்து வைத்துக்கொண்டு அவள் சொன்னாள்: “உனக்குத் தேவையானதை நீ தேர்ந்து எடுத்துக்கலாம்.”
ப்ரேஸ்லெட்டுகளும், முத்து பதிக்கப்பட்ட கழுத்தில் இறுகிக் கிடக்கும் மாலைகளும், கலை வேலைப்பாடுகளுடன் பொன்னும் ரத்தினங்களும் கலந்து செய்யப்பட்ட வெனீசிய சிலுவையும் அவளுடைய கண்களில் முதலில் பட்டன. கண்ணாடிக்கு முன்னால் நின்றுகொண்டு அவை ஒவ்வொன்றையும் தன் உடலுடன் சேர்த்து வைத்துக்கொண்டு அது எந்த அளவிற்குத் தனக்குப் பொருத்தமாக இருக்கிறது என்று அவள் சோதித்துப் பார்த்தாள். அப்போது அவளுக்கு ஒரு இக்கட்டான நிலை உண்டானது. அவற்றில் தனக்கு எது தேவை என்பதை முடிவு செய்ய அவளால் முடியவில்லை. “உன்கிட்ட இந்த நகைகள் மட்டும்தான் இருக்கா?” - தன் சினேகிதியிடம் கேட்டாள்.
“இல்ல... இன்னமும் இருக்கு. அவற்றில் எதை வேண்டும் என்றாலும், நீ தேர்ந்தெடுத்துக்கலாம். உனக்கு எது பிடிக்கும்னு எனக்குத் தெரியாதே!”
மற்ற நகைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, கறுப்பு நிற சாட்டின் பெட்டிக்குள் இருந்த அந்த அழகான கழுத்து மாலை அவளை சுண்டி இழுத்தது. அதன்மீது கொண்ட அளவுக்கு அதிகமான ஈடுபாடு அவளுடைய இதயத் துடிப்பை பல மடங்கு அதிகமாக்கியது. அதைத் தன் கைகளில் எடுத்தபோது, அவளுடைய இதயம் நடுங்கியது. அவள் அதைத் தன் கழுத்தில் வைத்துப் பார்த்தாள். அப்போது உண்டான உணர்ச்சிப் பெருக்கில் அவள் சிறிது நேரம் அசையாமல் நின்றுவிட்டாள். சிறிது தயக்கத்துடன் ஆர்வம் கலந்த குரலில் அவள் கேட்டாள்: “இதை ஒரு நாள் மட்டும் நான் அணிய நீ தர முடியுமா? இந்த மாலையை மட்டும்...”
“அதற்கென்ன? தாராளமா நீ இதைக் கொண்டு போகலாம்.”
ஆர்வத்தை அடக்க முடியாமல் அவள் தன் தோழியை இறுக அணைத்துக் கொண்டாள். அதை நினைத்துப் பார்க்க முடியாத பொருளுடன் அவள் அங்கிருந்து கிளம்பினாள்.
நடன விருந்து நடைபெறும் நாள் வந்தது. திருமதி. லாயிஸல் அந்த கூட்டத்தில் ஈர்க்கப்படும் மையப்புள்ளி ஆனாள். அங்கு வந்திருந்த பெண்களிலேயே மிகவும் அழகானவளாகவும், உற்சாகம் நிறைந்தவளாகவும், வசீகரம் உள்ளவளாகவும், எப்போதும் புன்னகை மலர்ந்த முகத்தைக் கொண்டவளாகவும் இருந்தவள் திருமதி லாயிஸல்தான். அங்கிருந்த எல்லா ஆண்களும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள், அவளுடைய பெயரைக் கேட்டார்கள். அவர்களில் பலரும் அவளுடன் அறிமுகமாகிக் கொள்ள விரும்பினார்கள். பல ஆட்சிமன்ற உறுப்பினர்களும் அவளுடன் சிறிது நேரம் பேச மாட்டோமா என்று துடித்தார்கள். கல்வி அமைச்சர் அவளைப் பலமுறை பார்த்துக் கொண்டே இருந்தார்.
மிகுந்த வெறியுடன், சந்தோஷத்துடன், தன்னுடைய வெற்றியில் தன்னையே மறந்து, தன் அழகைப் பற்றிய விஷயத்தில் கர்வம் உண்டாக அவள் நடனம் ஆடினாள். ஆண்களின் சந்தோஷ வெளிப்பாடும் பாராட்டுக்களும் அவள்மீது கொண்ட ஈடுபாடும் அவளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின.
அந்தப் பெண்ணின் மனதில் தான் முழுமையாக வெற்றி பெற்றுவிட்டோம் என்ற திருப்தி உண்டானது. ஆனந்தம் அங்கு பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த வேறு மூன்று பெண்களின் கணவர்களுடன் அவளுடைய கணவனும் அரைத் தூக்கத்தில் இருந்தான்.
வீட்டிலிருந்து கிளம்பும்போது தங்களுடன் கொண்டு வந்திருந்த சாதாரண உடைகளை அவன் அவள்மீது போர்த்திவிட்டான். அந்த ஆடைகளின் கேவலமான தன்மை நடன ஆடைகளின் பகட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தனியாகத் தெரிந்து, அவள் அதை நன்கு உணர்ந்தாள். விலை மதிப்புள்ள உரோமத்தாலான ஆடைகளை அணிந்திருந்த வசதி படைத்த பெண்களுக்கு முன்னால், தன்னுடைய வறுமை நிலையை வெளிப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக அவள் வேகவேகமாக அங்கிருந்து புறப்பட்டாள். லாயிஸல் அவளைப் பிடித்து நிறுத்தினான். “நில்லு... நடந்து போனால் குளிரும். நாம ஒரு வண்டியை அழைப்போம்” என்றான் அவன்.
ஆனால், அவன் கூறியதை அவள் காதிலேயே வாங்கவில்லை. வேக வேகமாக அவள் படிகளில் இறங்கினாள். சாலையை அடைந்தபோது, ஒரு வாகனம்கூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஒரு வண்டிக்காக அவர்கள் அங்கு பல இடங்களிலும் தேடினார்கள். சற்று தூரத்தில் நின்றிருந்த ஒரு வண்டிக்காரனை அவர்கள் உரத்த குரலில் அழைத்துப் பார்த்தார்கள்.
குளிரில் நடுங்கிக் கொண்டு ஸீல் நதிக்கு நேராக அவர்கள் நடந்தார்கள். இறுதியில் இரவு நேரங்களில் மட்டுமே அங்கு சுற்றிக் கொண்டிப்பவர்களுக்காக இருக்கும் தரித்திரத்தின் அடையாளமான அந்தச் சிறிய வண்டி அவர்களுக்குக் கிடைத்தது.
அந்த வண்டி அவர்களை ஏற்றிக்கொண்டு மார்ட்டியர் தெருவில் இருக்கும் அவர்களின் வீட்டு வாசலில் போய் நின்றது. மிகவும் களைத்துப் போய்க் காணப்பட்ட அவர்கள் வீட்டிற்குள் சென்றார்கள். அவளைப் பொறுத்தவரையில் எல்லா விஷயங்களும் முடிந்துவிட்டன. ஆனால், காலையில் பத்து மணிக்கு அவன் தன்னுடைய அலுவலகத்திற்குச் செல்ல வேண்டுமே!
கண்ணாடிக்கு முன்னால் நின்றுகொண்டு அவள் தன்னுடைய உடலில் அணிந்திருந்த மேலாடைகளைக் கழற்றினாள். நடன ஆடைகளுக்குள் மறைந்திருந்த தன் அழகை இன்னொரு முறை பார்த்து ரசிக்க வேண்டும் என்று அவள் நினைத்தாள். திடீரென்று அவள் உரத்த குரலில் கத்தினாள். அவளுடைய கழுத்தில் இருந்த அந்த நெக்லஸ் காணாமல் போயிருந்தது.
“என்ன ஆச்சு?” - ஆடையை மாற்றிக் கொண்டிருந்த அவளுடைய கணவன் கேட்டான்.
“என்... என்... திருமதி. ஃபாரஸ்டியரின் நெக்லெஸ்ஸைக் காணோம்...” - பைத்தியம் பிடித்ததைப்போல அவள் சொன்னாள்.
பதைபதைத்துப் போய் அவன் எழுந்து நின்றான். “என்ன? எப்படி நடந்தது அது? அப்படி நடக்க வாய்ப்பே இல்லையே!” என்றான் அவன்.
ஆடைகளின் மடிப்புகளிலும் பாக்கெட்களிலும் வேறு இடங்களிலும் அவள் தேடிப் பார்த்தாள். அவர்களால் அந்த நெக்லெஸ்ஸைக் கண்டுபடிக்க முடியவில்லை.
“அங்கேயிருந்து புறப்படுறப்போ அது உன் கழுத்துல இருந்ததுன்னு உன்னால உறுதியா சொல்ல முடியுமா?” - அவன் கேட்டான்.
“ம்... நாம வெளியே வர்றப்போ வாசல்ல வச்சு நான் பார்த்தேன். அப்போ அது என் கழுத்துலதான் இருந்தது.”
“நாம சாலையில நடந்து வர்றப்போ அது கீழே விழுந்திருந்தால், அது விழுந்த சத்தம் நமக்குக் கேட்டிருக்கும். ஒருவேளை அந்த வண்டிக்குள் அது விழுந்திருக்கலாம்.”
தாங்க மடியாத மனக் கவலையுடன் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். இறுதியில் லாயிஸல் ஆடை அணிந்துகொண்டு வெளியே போனான்: “நாம வந்த பாதையில் நான் கொஞ்சம் பார்த்துட்டு வர்றேன்.”
அவன் வெளியேறினான். ஆர்வங்களும், யோசனைகளும் இழக்கப்பட்டு, படுக்கையில் படுக்க முடியாமல் அங்கிருந்த ஒரு சாய்வு நாற்காலியில் போய் கால்களை நீட்டிக்கொண்டு படுத்தாள்.
ஏழு மணி ஆகும்போது அவளுடைய கணவன் திரும்பி வந்தான். அவனுக்கு அந்தக் கழுத்து மாலை கிடைக்கவில்லை. போலீஸ் ஸ்டேஷனிலும் வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்த இடங்களிலும் அவன் விசாரித்துப் பார்த்தான். உரிய பரிசு தருவதாகச் சொல்லி பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தான். சந்தேகமும் யோசனையும் தோன்றிய இடங்களிளெல்லாம் அவன் விசாரித்தான். அதற்காகத் தன்னால் முடிந்ததையெல்லாம் அவன் செய்தான்.
அந்தத் துயர நிகழ்ச்சியை நினைத்து அதிர்ந்துபோய் அன்று முழுவதும் அவள் எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்தாள். சாயங்காலம் வேதனை பரவிய வெளிறிப்போன முகத்துடன் அவளுடைய கணவன் திரும்பி வந்தான். அவனுக்குக் கழுத்து மாலையைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
“அந்தக் கழுத்து மாலையின் ஒரு கண்ணி அறுந்து போயிடுச்சு. அதை சீக்கிரம் சரி பண்ணிகொண்டு வர்றேன்னு உன் சினேகிதிக்கு உடனடியாக ஒரு கடிதம எழுது. இதற்கிடையில் இந்த விஷயத்துக்கு என்ன பண்ணலாம்னு நாம யோசிக்க முடியும்” - அவன் சொன்னான். அவன் கூறியதைப்போல அவள் எழுதினாள்.
அந்த வாரத்தின் இறுதி வந்தபோது அவர்களின் நம்பிக்கை முழுவதுமாக இல்லாமற் போனது. அவளைவிட ஐந்து வயது அதிகமான அவளுடைய கணவன் சொன்னான்: “நாம் அந்த நெக்லஸுக்குப் பதிலாக வேறொண்ணை வாங்கிக் கொடுத்திடுவோம்.”
மறுநாளே நகைப்பெட்டியில் எழுதியிருந்த அந்த வியாபாரியைத் தேடி அவர்கள் அந்தப் பெட்டியுடன் சென்றார்கள். தன்னுடைய கணக்குப் புத்தகங்களை எடுத்துப் பார்த்துவிட்டு அந்த மனிதர் சொன்னார் : “அம்மா, இந்த நகையை விற்பனை செய்தது நான் அல்ல. நான் கொடுத்தது இந்தப் பெட்டியை மட்டும்தான்.”
அந்த வியாபாரியிடமிருந்து இன்னொரு வியாபாரியிடம்... அங்கிருந்து வேறொரு வியாபாரியிடம்... தங்களுடைய நினைவில் இருந்த அந்த நெக்லஸைப் பற்றிய விளக்கங்களைக் கூறிய அவர்கள் களைத்துப்போய் ஏமாற்றத்துடன், மனதில் ஆழமான பதைபதைப்புடன் அலைந்து திரிந்தார்கள்.
பலேஸ் சாலையில் இருந்த ஒரு நகைக்கடையில் அதைப் போன்ற ரத்தினங்கள் பதித்த ஒரு கழுத்து மாலையை அவர்கள் கண்டுபிடித்தார்கள். அதன் விலை 40,000 ஃப்ராங்க். அந்த மாலையை 34,000 ப்ராங்கிற்கு அவர்களுக்குத் தரத் தயாராக இருப்பதாகச் சொன்னார் அந்தக் கடைக்காரர். மூன்று நாட்களுக்கு அந்த மாலையை விற்கக்கூடாது என்று அவர்கள் அந்தக் கடைக்காரரிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்கள். பிப்ரவரி மாதம் முடியும்போது காணாமற்போன கழுத்து மாலை கிடைத்துவிட்டால், அதைத் திருப்பிக் கொடுத்துவிடுவதாக அவர்கள் சொல்ல, அதற்கு அந்தக் கடைக்காரரும் சம்மதித்தார்.
அவனுடைய தந்தை கொடுத்திருந்த 18,000 ப்ராங்க் மட்டுமே சம்பாத்தியம் என்று அவனிடம் இருந்தது. மீதிப் பணத்தைப் பலரிடமிருந்தும் அவர்கள் கடன் வாங்கினார்கள். ஒருவரிடம் 1000 ஃப்ராங்க் கடன் வாங்கிய அவர்கள் இன்னொருவரிடம் 500 ஃப்ராங்கைக் கடனாக வாங்கினார்கள். அந்த வகையில் சிறு சிறு தொகைகளாக பலரிடமிருந்தும் அவர்கள் கடனாகப் பணத்தை வாங்கிச் சேர்த்தார்கள்.
வட்டிக்குக் கடன் கொடுப்பவர்களிடமிருந்து வட்டிக்குப் பணம் வாங்கினார்கள். அவன் தன்னிடமிருந்த சொத்து முழுவதையும் அடமானமாக வைத்தான். தன்னுடைய கையெழுத்துக்களை அவன் எல்லா இடங்களிலும் தயங்காமல் போடடான். எதிர்காலத்தைப் பற்றிய பய உணர்வு காரணமாக தான் செய்யும் காரியங்களில் எது நல்லது, எது கெட்டது என்பதை யோசித்துப் பார்க்கக்கூட அவன் முயற்சி செய்யவில்லை. தன்னைச் சூழ்ந்திருக்கும் கடுமையான துயரத்தில் மாட்டிக்கொண்டு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சகல விதமான கஷ்டங்களையும் அவன் அனுபவித்துக் கொண்டிருந்தான். எப்படியோ அந்த நகைக்கடையின் சொந்தக்காரரிடம் 36,000 ஃப்ராங்க் பணத்தைக் கொடுத்துவிட்டு, அவன் அந்தப் புதிய மாலையைத் தன் கைகளில் வாங்கினான்.
அவனுடைய மனைவி அந்தப் புதிய மாலையுடன் திருமதி ஃபாரஸ்டியரின் வீட்டிற்குச் சென்றாள். “எனக்கு இந்த நெக்லஸ் முன்பே தேவைப்பட்டது. நீங்க இந்த அளவுக்கு திருப்பித் தர தாமதித்திருக்க வேண்டாம்” - வெறுப்பு கலந்த குரலில் திருமதி ஃபாரஸ்டியர் திருமதி லாயிஸலிடம் கூறினான்.
ஆனால், லாயிஸல் பயந்ததைப்போல அவளுடைய சினேகிதி அந்தப் பெட்டியைத் திறந்து பார்க்கவில்லை. அவளுடைய பழைய மாலைக்கு பதிலாக தான் புதிய ஒரு மாலையை விலைக்கு வாங்கியிருக்கும் விஷயம் தெரிந்தால் அவள் என்ன நினைப்பாள்? அவள் என்ன கூறுவாள்? அவள் தன்னை ஒரு ஏமாற்றுக்காரி என்று நினைப்பாளோ? - இப்படிப் பலவிதப்பட்ட சிந்தனைகள் அவளுடைய மனதிற்குள் ஓடின.
ஆடம்பரமான உலகத்தைவிட்டு, வாழ்க்கையின் தேவைகளைப்பற்றி திருமதி லாயிஸல் இப்போது புரிந்துகொண்டிருந்தாள். அவள் தன் பங்கை சரிவர நிறைவேற்றினாள். அந்த மிகப்பெரிய கடனைத் தீர்க்க வேண்டுமே! அவள் அதை எப்படியும் கொடுத்துத் தீர்ப்பாள் என்பது வேறு விஷயம். வேலைக்காரியை அவள் வேலையிலிருந்து போகச் சொல்லிவிட்டாள். வசித்துக் கொண்டிருந்த வீட்டைவிட்டு வெளியேறி ஒற்றை அறை மட்டுமே இருந்த வேறொரு வீட்டிற்கு அவர்கள் தங்களின் இருப்பிடத்தை மாற்றினார்கள். வீட்டு வேலைகளின் கடுமையை அவள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டாள். ரோஜாப் பூக்களைப்போன்ற தன்னுடைய நகங்களால் கரி படிந்த முரட்டுத்தனமாக பாத்திரங்களை கழுவ அவள் பழகிக்கொண்டாள். அழுக்கு ஆடைகளையும் உள்ளாடைகளையும் சலவை செய்து அவள் கொடியில் வரிசையாக உலர விட்டாள். வீட்டிற்குள்ளிருந்த குப்பைகளைப் பெருக்கி சுத்தம் செய்து, அவள் வெளியே கொண்டுபோய் போட்டாள். வெளியிலிருந்து நீர் முகந்து கொண்டுவந்தாள். நீர் நிறைக்கப்பட்ட அந்தப் பாத்திரத்தைத் தூக்கிக்கொண்டு ஒவ்வொரு படியாக ஏறும்போது அவள் மேலும்மூச்சு கீழ்மூச்சு விட்டாள். வறுமையில் உழலும் பெண்கள் அணியக்கூடிய ஆடைகளை அவள் அணிய ஆரம்பித்தாள். ஒரு பெரிய கூடையைக் கையில் வைத்துக்கொண்டு மளிகை சாமான்கள் விற்பவனிடமும் காய்கறிகள் விற்பவனிடமும் பொருட்களுக்காக அவள் பேரம் பேசினாள். ஒவ்வொரு மாதமும் புதுப்புது விஷயங்களை அவர்கள் செய்ய வேண்டியதிருந்தது. வேறு சில கடன்களைத் தீர்ப்பதற்காக அவர்கள் அதைச் செய்துதான் ஆக வேண்டும். காலையிலிருந்து மாலைவரை இருக்கக்கூடிய வழக்கமான வேலைக்கு மேல், அவளுடைய கணவன் சில கடைகளில் கணக்கு எழுதுவதற்காகப் போனான். அதுவும் போதாதென்று இரவு நேரங்களில் உறங்காமல் விழித்திருந்து ஒரு பக்கத்திற்கு ஐந்து ஸெனஸ் என்ற கணக்கில் அவன் சில தாள்களைப் பிரதி எடுத்துக் கொடுத்தான். சுமார் பத்து வருடஙக்ள் இந்த வகையில் அவர்களின் வாழ்க்கை ஓடியது.
அந்தப் பத்து வருடங்களின் இறுதியில் வட்டிக்குக் கடன் கொடுத்தவர்களின் அசல், வட்டி, கூட்டு வட்டி எல்லாவற்றையும் அவர்கள் கொடுத்து முடித்திருந்தார்கள்.
திருமதி லாயிஸல் இப்போது ஒரு கிழவியைப்போல ஆகிவிட்டிருந்தாள். வறுமையின் கொடும்பிடியில் சிக்கிக் கிடக்கும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணைப்போல முதிர்ச்சியும் முரட்டுத்தனமும் கொண்ட ஒரு பெண்ணாக அவள் மாறிவிட்டிருந்தாள். தலைமுடியை அழகாக வாரிக்கட்டும் வழக்கமெல்லாம் அவளிடமிருந்து விடைபெற்றிருந்தன. ஆடைகள் நைந்துபோய் விட்டிருந்தன. கைகள் சிவப்பு நிறத்தில் இருந்தன. அவள் உரத்த குரலில் பேசினாள். பெரிய பாத்திரங்களில் நீர் கொண்டு வந்து தரையைக் கழுவி சுத்தம் செய்தாள். தன் கணவன் அலுவலகத்திற்கு போய்விட்டால், அபூர்வமாக பயப்படும் சில வேளைகளில், சாளரத்திற்கு அருகில் உட்கார்ந்துகொண்டு அந்தப் பழைய நடன விருந்தைப் பற்றியும், அன்று தான் வசீகரமான தோற்றத்தில் இருந்ததையும் அவள் நினைத்துப் பார்ப்பாள். அந்தக் கழுத்து மாலை மட்டும் காணாமற் போகாமல் இருந்திருந்தால், அவளுடைய நிலை எப்படியிருந்திருக்கும்? யாருக்குத் தெரியும்? வாழ்க்கை என்பது எந்த அளவிற்கு விசித்திரங்கள் நிறைந்தவையாக இருக்கின்றது. எப்படிப்பட்ட மாறுதல்கள் எல்லாம் வாழ்க்கையில் நடக்கின்றன! இவ்வளவு ஏன்...? ஒரு ஆளை அழிக்கவோ காப்பாற்றவோ ஒரு சாதாரண விஷயம் போதும்!
ஒரு ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய வாழ்க்கையின் அன்றாடச் செயல்களிலிருந்து சற்று விடுபட்டு, சாம்பஸ் எல்ஸுக்கு நடந்து போய்விட்டு வரலாம் என்று போன அவள், சற்று தூரத்தில் ஒரு சிறு குழந்தையுடன் நடந்துபோய்க கொண்டிருந்த அந்தப் பெண்ணை அடையாளம் கண்டுகொண்டாள். திருமதி ஃபராஸ்டியர்தான் அது. அந்த அழகும் இளமையும் வசீகரத் தனிமையும் அவளிடமிருந்து போகாமல் இன்னும் அப்படியே இருந்தன. திருமதி லாயிஸல் அதைப் பார்த்து ஆச்சரியத்தில் உறைந்துபோய் விட்டாள். அவளிடம் பேசினாள் என்ன? அதனால் என்ன... கட்டாயம் பேசலாமே! அவளுக்குத் தரவேண்டியதைத்தான் கொடுத்தாகிவிட்டதே! இனி எல்லாவற்றையும் மனம் திறந்து கூறலாமே! பிறகு எதற்குப் பேசாமல் இருக்க வேண்டும்?
அவள் அந்தப் பெண்ணின் அருகில் சென்றாள். “குட்மார்னிங் ஜீன்.”
அந்த சினேகிதிக்கு அவளை அடையாளம் தெரியவில்லை. இந்த அளவிற்கு நெருக்கத்தைக் காட்டி தன்னிடம் பேசும் அந்தப் பெண்ணை திருமதி ஃபாரஸ்டியருக்கு யார் என்று புரியவில்லை. அவள் சந்தேகத்துடன் பார்த்தாள். “மேடம், உங்களை யார் என்று எனக்குத் தெரியலையே! ஒருவேளை நீங்கள் என்னை வேற யாரோ என்று நினைத்து...” - என்றாள் அவள்.
“இல்ல... நான் மெட்டில்டா லாயிஸல்”
அடுத்த நிமிடம் ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் ஒரு உரத்த குரல் அவளிடமிருந்து வெளிப்பட்டது. “ஓ... என் மெட்டில்டா... உனக்கு என்ன ஆச்சு? என்ன - இப்படி ஒரேடியா மாறிட்டே!”
“சரிதான்... அன்னைக்கு நாம பார்த்து பிரிந்த பிறகு, எனக்குக் கஷ்டங்கள் நிறைந்த நாட்களாயிருச்சு... உண்மையாக சொல்லப்போனால், கடுமையான அனுபவங்கள் நிறைந்த நாட்கள்... அதுக்கெல்லாம் காரணம் நீதான்.”
“நான் காரணமா? அது எப்படி?”
“கமிஷனர் ஏற்பாடு செய்த நடன விருந்தில் கலந்துகொள்வதற்காக வைரக்கற்கள் பதிக்கப்பட்ட உன்னோட கழுத்து மாலையை நான் கடனாக வாங்கியது உனக்கு ஞாபகத்துல இருக்கா?”
“ஆமா... நல்லா ஞாபகத்துல இருக்கு...”
“ம்... அது என்கிட்ட இருந்து தொலைஞ்சிடுச்சு.”
“அது எப்படி? நீதான் அதை எனக்குத் திருப்பித் தந்துட்டியே!”
“அதே மாதிரி இருந்த இன்னொரு நெக்லஸைத்தான் நான் உனக்குத் திருப்பித் தந்தேன். அதனால் உண்டான கடன்களைத் தீர்க்க பத்து வருடங்கள் நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டியதாயிடுச்சு. எதுவுமே இல்லாத எங்களுக்கு அது எந்த அளவுக்கு மிகுந்த கஷ்டங்கள் நிறைந்த ஒண்ணா இருக்கும்னு உன்னால புரிஞ்சிக்க முடியும்னு நினைக்கிறேன். ஆனால், அந்தக் கடன்களெல்லாம் தீர்ந்திடுச்சு. நான் இப்போ நிம்மதியா இருக்கேன்.”
திருமதி. ஃபாராஸ்டியர் அடுத்த நிமிடம் தான் நடந்து கொண்டிருந்ததை நிறுத்தினாள். அவள் சொன்னாள் : “என் அந்த வைரக் கற்கள் பதிக்கப்பட்ட நெக்லஸுக்குப் பதிலாக நீ அதேமாதிரி இருந்த இன்னொரு நெக்லஸை எனக்கு வாங்கித் தந்ததாகவா சொன்னே?”
“ஆமாம் ... அப்போ உனக்கு அந்த விஷயமே தெரியாது... அப்படித்தானே? அது அச்சு அசலா உன்னோட நெக்லஸ் மாதிரியே இருக்கும்” - பெருமையுடன் சிறிது சந்தோஷத்துடன் அவள் புன்னகைத்தாள்.
அதைக் கேட்டு திருமதி ஃபாரஸ்டியர் அதிர்ச்சியில் உறைந்து*ய்விட்டாள். மெட்டில்டாவின் இரண்டு கைகளையும் தன்னுடைய கைகளில் வைத்துக்கொண்டு அவள் சொன்னாள்: “ஓ...! என் அப்பாவி மெட்டில்டா... நான் உனக்கு தந்த நெக்லஸ் ஒரு கவரிங் நகை... அதற்கு ஐந்நூறு ஃப்ராங்க்கிற்கு மேல்விலையே இருக்காது.”