Logo

ஒரு பெண் எழுத்தாளர் கடத்தப்படுகிறாள்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6624
oru pen eluthalar kadathapadukiral

ழகான தோற்றத்தையும், நீலக்கண்களையும், மென்மையான கால்களையும் கொண்ட ஒரு எட்டுக் கால் பூச்சி, வலையிலிருந்து ஊஞ்சலில் தொங்குவது மாதிரி தொங்கிக் கொண்டே கீழே வந்து தன் முகத்திற்கு முன்னால் நின்று தன்னை நோக்கிச் சிரிப்பதையும், பிரகாசமான கண்களுடன் தன்னைப் பார்ப்பதையும், பஞ்சுபோன்ற கால்களால் நடனமாடுவதையும் அந்தப் பெண் எழுத்தாளர் தன் கனவில் கண்டாள்.

முகத்தின் மேல் பட்ட நீல வெளிச்சத்தில் புன்சிரிப்பைத் தவழ விட்டவாறு அவள் தன் நீண்டு மெலிந்த அழகான கைவிரல்களை எட்டுக் கால் பூச்சிக்கு நேராக நீட்டினாள். அப்போது அந்தப் பூச்சியும் ஊஞ்சல்போல் தொங்கிக் கொண்டிருந்த நூலும் அவளை விட்டு தூரத்தில் போனார்கள். அந்தப் பெண் எழுத்தாளர் கண்களைத் திறந்து பார்த்தாள். அவள் திரியைக் குறைத்து வைத்திருந்த சிம்னி விளக்கு வெளிச்சம் அவளை இருகரம் நீட்டி அழைத்தது. அந்தச் சிம்னி விளக்கு எங்கோ இருக்கும் ஒரு அழகான மலையில் குடியிருக்கும் மனிதர்கள் தந்தார்கள் என்று, அவளின் மூன்றாவது காதலன் அவளுக்குப் பரிசாகக் கொண்டுவந்து தந்தது. அந்தக் காதலன் இப்போது அவளுடன் இல்லை. காற்றில் பறக்கும் சருகைப்போல அவன் எங்கோ காணாமல் மறைந்தே போனான். என்றாலும், அவன் தந்த அந்த சிம்னி விளக்கொளியில் ஒரு சிறு குழந்தையைப்போலப் படுத்துக்கொண்டு தூங்கவும், எழுதவும் அவள் முழுமையாக விரும்பினாள். அந்த விளக்கு தன்னுடைய ஞாபகச் சின்னமாக அவளிடம் இருக்கும் என்று அந்தக் காதலன் அன்று எதிர் பார்த்திருப்பானா என்ன? யார் கண்டது- காதலிக்கும் இளைஞர்கள் தங்கள் மனதில் பூட்டி வைக்கும் ஆயிரம் எண்ணங்களில் இந்த மாதிரியான நினைவுச் சின்னங்கள் பற்றிய விஷயங்கள்கூட இருக்க வாய்ப்பு இருக்கிறதே!

அவளது முதல் காதலனும், அவன் மனைவியும் ஒருமுறை அந்தப் பெண் எழுத்தாளரைப் பார்க்க வந்திருந்தார்கள். அவள் தன் மனதில் இருந்த பழைய ஞாபகங்களை சற்று நீக்கி வைத்துவிட்டு அவர்களைப் புன்சிரிப்புடன் வரவேற்றாள். தேநீரும் சிப்ஸும் இனிப்பு பலகாரங்களும் தந்து உபசரித்தாள். அவளது காதலன் பழைய ஞாபகங்களை மனதிற்குள் நினைத்தவாறு அவளைக் கூர்மையாகப் பார்க்க, அவளோ மிகவும் களைப்பாக இருப்பது மாதிரி காட்டிக்கொண்டு, பாதி கண்களை மூடியவாறு அவன் மனைவியைப் பார்த்துப் புன்சிரிப்பைத் தவழ விட்டுக் கொண்டிருந்தாள். அவர்கள் போனதும் கதவை இறுக மூடி, மூடிய கதவின்மேல் சாய்ந்தவாறு கண்களை மூடியபடி நீண்ட நேரம் அவள் நின்று கொண்டே இருந்தாள். சிறிது நேரம் சென்றதும், வாசல் கதவை மீண்டும் திறந்து வைத்து, மீதியிருந்த இனிப்பு பலகாரங்களில் ஒன்றை எடுத்து ருசித்தவாறு மீண்டும் அவள் மட்டும் தனியானாள். தன் இரண்டாவது காதலனை அவள் புகைவண்டியில் வைத்துப் பார்த்தாள். அவன் தன் முகத்தை எங்கே அவள் பார்த்துவிடப் போகிறாளோ என்று ஒரு கையால் மறைத்துக்கொண்டே, இந்த கம்பார்ட்மெண்ட்டிலிருந்து அடுத்த கம்பார்ட்மெண்ட்டுக்கு வண்டியின் ஓட்டத்தோடு ஓடியவாறு நடுவில் இருந்த வெஸ்ட்டபிள் வழியாகப் போய் அவள் பார்வையிலிருந்து தப்பித்துக்கொண்டான்.

தனிமையையும், காற்று ஜன்னல் வழியாக உள்ளே நுழைவதையும் அனுபவித்துக் கொண்டிருந்த அந்தப் பெண் எழுத்தாளர், தான் ஆசைப்பட்டு வாங்கி வைத்திருக்கும் பொருட்கள் நிறைந்திருக்கும் தன்னுடைய அறையைப் பார்த்தவாறு சிம்னி விளக்கு வெளிச்சத்தில் படுத்துக் கொண்டிருக்கையில், என்ன நினைத்தாளோ தன் மார்பகத்தை விரலால் தொட்டுப் பார்த்தாள். அவை மென்மையாகவும், குளிர்ச்சியாகவும், பெரிதாகவும் இருந்தன. அவள் தன் இரு கைகளையும், உடலை வருடியபடி கீழ்நோக்கிக் கொண்டு போனாள். “என் உடல் புனிதமானது.'' அவள் தனக்குள் சொன்னாள். அடுத்த நிமிடம் எழுந்து முழங்காலை மடித்து படுக்கையிலேயே உட்கார்ந்தாள். தன் கைகளால் இடுப்பையும் தொடைகளையும் கால்களையும் தொட்டுப் பார்த்தாள். அவற்றைச் செல்லமாக வருடினாள். “கதை சொல்றதுக்கு விருப்பப்படுற உடல்.'' அவள் சொன்னாள். “குழந்தைகளின் உஷ்ணம் எப்படி இருக்கும்னு தெரியாத உடல்.'' கைகளைக் கீழ்நோக்கிக் கொண்டுபோன அவள் கண்களை மூடிக்கொண்டாள். அவள் சொன்னாள்: “அமைதியா இருக்குற உடல்...'' அவள் மீண்டும் படுத்தாள். கைகளை முகத்திற்குக் கொண்டு போய், அங்கு அரும்பியிருந்த வியர்வைத் துளிகளை வாசனை பிடித்தவாறு, தான் கண்ட கனவை மீண்டும் மனதில் நினைத்துக்கொண்டே கண்களைமூடிக் கிடந்த அவள், சிறிது நேரத்தில் உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

சிம்னி விளக்கு புகையை வெளியே விட்டவாறு எரிந்து கொண்டிருந்தது. அதன் ஜுவாலை எந்தவித பரபரப்பும் இல்லாமல் சீராக இருந்தது. ஜன்னல் வழியாக அமைதியாக மின்மினிப் பூச்சிகளின் ஒரு கூட்டம் தீவட்டிக் கொள்ளைக்காரர்களைப்போல அறைக்குள் நுழைந்தது. அவர்கள் "மினுக் மினுக்’’ என்று விளக்கை எரியவிட்டவாறு அறை முழுக்க பறந்து கொண்டிருந்தனர். படுத்துக் கொண்டிருந்த பெண் எழுத்தாளரின் அமைதியான முகத்திற்கு முன்னால் நட்சத்திரங்களைப்போல அந்த மின்மினிப்பூச்சிகள் கண் சிமிட்டிக்கொண்டிருந்தன. அவளின் உதடுகளையும் விரல்களையும் அந்தப் பூச்சிகள் அருகில் பறந்து பார்த்தன. அவை வெளியே பறந்து சென்றபிறகு, இரண்டு ஆந்தைகள் அறைக்குள் நுழைந்தன. அவற்றின் சிறகு வீசலில், சிம்னி விளக்கின் ஒளி இப்படியும் அப்படியுமாய் ஆடியது. அவற்றின் பிரகாசமான கண்களுக்குக் கீழே அந்தப் பெண் எழுத்தாளர் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். அவளின் முகத்தின் அருகில் பறந்தவாறு அந்த ஆந்தைகள் என்னவோ ஆலோசித்துக்கொண்டிருந்தன. சிறிது நேரத்தில்- பாதி இரவு கழிந்திருக்கும் சமயத்தில் அவை நிலவொளியில் போய் மறைந்துவிட்டன.

அப்போது மேல்கூரையில் கலை வேலைப்பாடுகளுடன் அமைந்த பலகைகளில் இருந்து ஊஞ்சலென தொங்கிக்கொண்டிருந்த இழைகள் கீழே இறங்கின. இழைகளின் நுனியில் நீலமும் மஞ்சளும் தங்க நிறமும் கொண்ட கண்கள், பஞ்சுபோன்ற கால்களை ஆட்டியவாறு அந்தப் படுத்துக்கிடக்கும் பெண்ணையே நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் ஊஞ்சல்கள் அவள் எப்போதும் உட்கார்ந்து எழுதப் பயன்படுத்தும் மேஜைக்குமேலே தொங்கியவாறு ஆடின. மேஜைமேல் அவள் பாதி எழுதி வைத்திருந்த ஒரு கதையின் எழுத்துகளை பிரகாசமான கண்களாலும், மென்மையாக அசைந்துகொண்டிருந்த கால்களாலும் அந்த எட்டுக் கால் பூச்சிகள் சோதித்துப் பார்த்தன.

அந்தப் பெண் எழுத்தாளரின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் அமைதியாகப் போய்க்கொண்டிருந்தது. அவளின் வீட்டு வேலைகளுக்கு உதவுவதற்காக வந்த அழகான இளம்பெண், அவளின் உடலுக்கு எண்ணெய் தேய்த்துவிட்டுக் குளிப்பாட்டினாள். இளம் பெண்ணின் பலம் பொருந்திய, அதேசமயம் அழகான விரல்கள் பெண் எழுத்தாளரின் உடலை ஒரு குழந்தையைக் குளிப்பாட்டுவது மாதிரி வருடின. பெண் எழுத்தாளர் அந்த இளம் பெண்ணைப் பார்த்துக் கேட்டாள்:


“என் உடலை உனக்குப் பிடிச்சிருக்கா?'' அவள் அதற்கு பதில் எதுவும் சொல்லாமல், மவுனமாகச் சிரிக்க மட்டும் செய்தாள். பெண் எழுத்தாளர், எண்ணெய் பட்டிருக்கும் அந்த இளம் பெண்ணின் கைகள் இரண்டையும் தன் கையில் எடுத்து நன்றியுடனும், பாசத்துடனும் அவற்றின்மீது தன் உதடுகளைப் பதித்து முத்தம் தந்தாள். பிறகு... லேசாக சுட வைக்கப்பட்டிருக்கும் நீர் தன் உடலில் பட்டு கீழ் நோக்கி வழிந்து போவதை- முழங்காலை மடித்து உட்கார்ந்து கொண்டு, கைகள் இரண்டையும் முட்டியைச்சுற்றிக் கோர்த்தவாறு மனதில் மகிழ்ச்சி பொங்க அவள் பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போதும் அவளின் உதடுகளில் புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது. கண்களை மூடியிருந்த பெண் எழுத்தாளர் வழிந்த நீரைக் கையால் வழித்துவிட்டு, கண்களைத் திறந்து பார்த்தபோது லேசாக அடைக்கப்பட்டிருந்த கதவு வழியாக இரண்டு கண்கள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை அப்போதுதான் பார்த்தாள். அவள் சிரித்தவாறு கேட்டாள்: “நான் குளிக்கிறதை நீ ஏன் பாக்குறே? என்கிட்ட இருக்குறது இதுதான். இந்த சாதாரண உடம்பு... கதை சொல்ற உடம்பு.'' அடுத்த நிமிடம் ஊஞ்சலில் தொங்கிக் கொண்டிருந்த எட்டுக்கால் பூச்சியின் இரு கண்களும் இழையை வேறு பக்கம் செலுத்தியதால் கதவு இடைவெளியை விட்டு மறைந்து போயின.

அன்று மாலை நேரத்தில் அவள் வீட்டு முற்றத்தின் ஒரு மூலையில் இருந்த பழமையான, கறுப்பும் வெள்ளையுமாக காளான் பூத்துப் படர்ந்திருக்கும் கிளைகளைக்கொண்ட செண்பக மரத்திற்குக் கீழே அமர்ந்திருந்தாள். ஒரு கதையின் இறுதிப் பகுதிகளை அவளின் கை விரல்கள் எழுதிக்கொண்டிருந்தன. உதடுகள் மெல்ல வார்த்தைகளை முணுமுணுத்துக் கொண்டிருந்தன. அவள் வாயில் முணுமுணுத்த வார்த்தைகள் காதில் முழங்கிக் கொண்டிருந்தன. அந்தப் பெண் எழுத்தாளர் அவளுக்கே தெரியாத சில வார்த்தைகளால் வலை விரித்துக் காத்திருந்தாள். அப்போது கதையின் நிகழ்ச்சிகள் கூடு தேடிவரும் பறவைகளைப்போல அவளுக்குச் சுற்றிலும் நின்று சிறகடித்துக்கொண்டிருந்தன. அவளைச் சுற்றிலும் செண்பக மலர்கள் காற்றில் விழுந்து கிடந்தன. அமைதியான கண்களுடன் அவள் தூரத்தில் மலையை முழுமையாக ஆக்கிரமித்து விட்டிருக்கும் பனிப்படலத்தைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தாள். அப்போது செண்பக மரத்தின் கிளையிலிருந்த ஒரு செண்பகப் பூவைப் பறித்து தன்னுடன் இணைத்தவாறு ஒரு ஊஞ்சல் மேலேயிருந்து கீழ்நோக்கி நிசப்தமாக இறங்கிக் கொண்டிருந்தது. ஊஞ்சலில் சிக்கியிருந்த செண்பக மலர் வாய்விட்டுச் சிரித்தவாறு காற்றில் ஆடியது. ஊஞ்சல் நுனியில் இரண்டு பொன்நிறக் கண்கள் அவளை நோக்கிப் பிரகாசித்தன. அந்தக் கண்களுக்கு நேராகத் தன் கைகள் இரண்டையும் நீட்டினாள். ஊஞ்சல் நுனியில் தொங்கிக்கொண்டிருந்த எட்டுக்கால் பூச்சி ஒரு முல்லைப் பந்தல்மேல் போய் மறைந்தது. செண்பக மலர் அவளின் மடியில் வந்து விழுந்தது. அவள் அதை எடுத்து அதன் மணத்தை அனுபவித்தவாறு செண்பக மரத்தின் கிளைகளை தலையை உயர்த்திப் பார்த்தாள். சாயங்கால நேரத்தில் சிரித்துக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான செண்பக மலர்களுக்கு இடையே பல வண்ண கண்கள் பிரகாசித்துக் கொண்டிருப்பதாக அவளுக்குப் பட்டது. அவள் இரண்டு கைகளையும் மேல்நோக்கி உயர்த்தி விரல்களை நடனமாடுபவர்கள் ஆட்டுவது மாதிரி ஆட்டிக்கொண்டே சொன்னாள்: “இந்த விரல் நுனியில் எத்தனையோ கதைகள்! கேக்குறீங்களா?''

மறுநாள் அவள், தன் மூன்றாவது காதலனுக்கு, அவனது ஒரு பழைய கடிதத்தில் இருந்த முகவரிக்கு ஒரு கடிதம் எழுதினாள்: "அன்பு காதலனே, நீங்கள் தந்த மண்ணெண்ணெய் விளக்கு இப்போதும் என் எழுத்துகள்மீது வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டு இருக்கிறது. ஆனால், உங்களின் பெயரைக்கூட நான் மறந்துவிட்டேன். என் பெயரை எப்போதோ நீங்கள் மறந்தாகி விட்டது. நான் இப்போது எட்டுக்கால் பூச்சிகளைத்தான் கனவு கண்டுகொண்டிருக்கிறேன். அழகிகளும், அழகர்களுமாக இருக்கிற அவற்றின் பல வண்ணக் கண்களும்... மென்மையான கால்களும்... பஞ்சு போன்ற உடலும்... இந்த எட்டுக்கால் பூச்சிகள் ஊஞ்சலில் ஆடியவாறு எப்போதும் எனக்கு அருகிலேயே இருக்கின்றன. அதோடு நின்றால் பரவாயில்லை. நான் போகும் இடங்களுக் கெல்லாம் அவை என்னைப் பின்தொடர்கின்றன. இதைக் கேட்கிறபோது உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறதா? என் உடல் உங்களின் ஞாபகத்தில் இருக்கிறது அல்லவா? அது சிறியதும் பெரியதுமான சந்தோஷங்களுக்காக உங்களுக்கு நன்றி கூறுகிறது. இனி எங்காவது ஒரு எட்டுக்கால் பூச்சியைக் காண வேண்டி நேர்ந்தால், என் பெயரை ஞாபகப்படுத்திப் பார்க்க முயலுங்கள்.’’ அவள் பேனாவை மூடிவைத்துவிட்டு, சிறிது நேரம் வாய்விட்டு அழுதாள். அவள் வைத்திருந்த அகராதிக்குப் பின்னால் இருந்து மூன்று ஜோடிக் கண்கள் அவளைப் பரிதாபமாகப் பார்த்தன. அவள் நாற்காலியை விட்டு எழுந்து சற்று நீங்கிப்போன பிறகு, மூன்று எட்டுக்கால் பூச்சிகளும் நீண்டு மெலிந்த பாதங்களால் தாள்களுக்கும் வாடிப்போன பூக்களுக்கும் பேனாக்களுக்கும் புத்தகங்களுக்கும் மத்தியில் நடந்து கடிதத்தின்மேல் விழுந்திருந்த கண்ணீர்த் துளிகளை நக்கிப்பார்த்தன. ஒரு நிமிடம் அந்தப் பூச்சிகள் அங்கேயே அசையாமல் நின்றன. பிறகு மேஜைக்குப் பக்கத்தில் நூலை நீட்டி, கீழே போய் மறைந்துகொண்டன.

பெண் எழுத்தாளரின் குளியலறையில் எண்ணெய், சோப், சீயக்காய் தூள் ஆகியவற்றின் வாசனை நிறைந்திருந்தது. தன்னைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த இளம் பெண்ணின் சிவந்த கால் விரல்களையே பார்த்தவாறு அந்தப் பெண் எழுத்தாளர் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தாள். அவள் மேலே பார்த்துச் சொன்னாள்: “பாதத்தைக் கொஞ்சம் தூக்கிக் காட்டு பொண்ணு...'' சூடான நீரில் சிவந்த நகங்களையும், சிவந்த விரல்களையும், சோப், எண்ணெய் ஆகியவற்றின் வாசனையையும் கொண்ட தன் மெலிந்து போன பாதத்தை உயர்த்திக் காட்டிய அந்த இளம் பெண் கீழ்நோக்கிப் பார்த்தவாறு லேசாகச் சிரித்தாள். பெண் எழுத்தாளர் அவளது விரல் நுனிகளில் முத்தம் கொடுத்தாள். எழுந்து நின்று அவளின் இடுப்பில் கையை வைத்து, அவளை அன்புடன் தன்னோடு சேர்த்து அனைத்துக் கொண்டாள். வியர்வையாலும் சுடுநீர் பட்டும் இளம் பெண்ணின் புடவை நனைந்திருந்தது. அவளின் நெற்றியில் இருந்த பொட்டு வியர்வைத் துளிகளுக்கு மத்தியில் "பளிச்’’ எனத் தெரிந்தது. பெண் எழுத்தாளர் இளம்பெண்ணைத் தன்னோடு இறுக அனைத்து, அவளின் வியர்வையும் ஆவியும் கலந்திருந்த நெற்றியில் உதட்டைப் பதித்து முத்தம் தந்தாள். பிறகு அந்தப் பெண்ணைப் பார்த்துச் சொன்னாள்: “உனக்கு என்னோட சாதாரண உடலோட நன்றி.'' அவளின் மலர்ந்த உதடுகளில் பெண் எழுத்தாளர் தன் உதடுகளைப் பதித்தாள். அந்த இளம் பெண்ணின் இளம் மார்பகங்களைத் தன் கைகளில் பிடித்து உயர்த்திய பெண் எழுத்தாளர் சொன்னாள்: “என் அம்மாவோட பால் நிறைஞ்சிருக்கும் மார்பகங்களைப்போல இந்த ரெண்டும் துடிப்பு உள்ளதா இருக்கு...''


இரவில், “பயப்படாதே...!'' என்று யாரோ மெதுவான குரலில் சொல்வது காதில் விழுந்து தூக்கம் கலைந்து எழுந்தாள் பெண் எழுத்தாளர். சிம்னி விளக்கையும், அறையையும் இப்போது காணோம். நட்சத்திரங்கள் அவளுக்கு மிகமிக அருகில் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. ஆனால், அவளுக்கு நட்சத்திரங்களுடன் அதற்கு முன்பு நெருங்கிய உறவு கிடையாது. காற்று மெதுவாக அங்கு வீசிக்கொண்டிருந்தது. அவள் லேசாக நடுங்கியவாறு தன்னைச் சுற்றிலும் பார்த்தாள். காற்றில் ஆடிக்கொண்டிருந்த வெள்ளை நூல்கள் அவளைச் சுற்றிலும் காட்சியளித்தன. ஒரு சர்க்கஸ் கூடாரத்தில் மேலே உட்கார்ந்திருப்பது மாதிரி கண்கள் பார்க்குமிடங்கள் எல்லாவற்றிலும் வெள்ளை நூல்களே காட்சியளித்தன. அவள் தலையை உயர்த்தி மேலே பார்த்தாள். நட்சத்திரங்களுக்குக் கீழே முடிவற்ற வெளியை நோக்கி ஒன்றை அடுத்த இன்னொன்றாய்க் காட்சியளிக்கும் வெள்ளை நூல்கள். “சந்திரன்... என்னோட சந்திரன்...'' அவள் சொன்னாள். நிலவு அப்போது ஆகாயத்தின் ஒரு மூலையில் காய்ந்து கொண்டிருந்தது. மீண்டும்- கடைசிமுறையாக பெண் எழுத்தாளர் கீழே பார்த்தாள். அவளையும் அறியாமல் அவளின் உதடுகளில் இருந்து "வீல்...’’ என்ற சத்தம் எழுந்தது. தான் இருந்த நூலை அவள் இறுகப் பிடித்துக் கொண்டு நடுங்கியவாறு, கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை விட்டுப் போய்க்கொண்டிருந்த உணர்வுகளை அவள் கடிவாளம் போட்டு இழுத்துக்கொண்டிருந்தாள். கீழே... இன்னும் கீழே... அவள் குதித்தாள். ரொம்பவும் கீழே... சில வெளிச்ச சுருள்கள் நீந்திப் போய்க்கொண்டிருந்தன. “அய்யோ...'' பெண் எழுத்தாளர் கத்தினாள். “என் தெய்வமே, என்னைக் கீழே விழ வச்சிடாதே. நான் செஞ்ச பாவங்களுக்கு என்னை தண்டிச்சிக்கோ. உன்னோட உலகத்துல இப்படி அதலபாதாளத்தில் என்னை விழ வைக்காதே. எனக்கு ரொம்பவும் பயமா இருக்கு...''

“பயப்படாதே...'' மீண்டும் யாரோ மெதுவான குரலில் சொன்னார்கள். பெண் எழுத்தாளர் தனக்குத்தானே கூறிக் கொண்டாள்: “ஏய்... எனக்கு பயமெல்லாம் கிடையாது. செத்துப் போயிட்டா, அதுக்குப் பிறகு என்ன பயம் வேண்டிக் கிடக்கு? எனக்கு மரணத்தை மிகவும் பிடிக்குது. ஆனால், அதற்காக இந்த அப்பாவி ஆத்மாவை ஆழத்துல தள்ளி விடலாமா?'' சிறிது நேரம் மவுனமாக இருந்துவிட்டு அவள் சொன்னாள்: “என் கதைகளை எல்லாம் இன்னும் முழுமையாகச் சொல்லி முடிக்கலைன்ற கவலை எனக்கு இருக்கு. ஆனால், பரவாயில்ல... அதனால் என்ன? அடுத்த பிறவியில சொல்லிட்டா போகுது... ஆனால், அடுத்த பிறவியில நான் வேற யாராவதாக இல்ல இருப்பேன்! அப்போ இந்தக் கதைகளை யாரு சொல்றது?''

தன் கண்களில் அரும்பிய கண்ணீரைத் துடைத்தவாறு பெண் எழுத்தாளர் சொன்னாள்: “இதுல அழுறதுக்கு என்ன இருக்கு? கதைகள்ன்றது மோகங்கள் மட்டும்தானே? என்னோட இதயத்தின், உடம்பின் நிறைவேற்றப்படாத எத்தனையோ மோகங்கள், விருப்பங்கள் இனியும் இருக்கு. அதுக்காக நான் அழணுமா?'' தொடர்ந்து கண்களில் இருந்து வழிந்த வண்ணம் இருந்த கண்ணீரை அவள் கையால் துடைத்தாள். அவள் முகம் இப்போது அமைதியே வடிவமானதாகவும், அதே நேரத்தில் ஒருவித கம்பீரம் கொண்டதாகவும் இருந்தது. அவள் படங்களில் பார்த்திருக்கிற ஆத்மாக்களின் முகங்கள் அப்படித்தான் இருந்தன.

“பயப்படக்கூடாது...'' பல குரல்கள் ஒன்று சேர ஒலித்தன. அந்தக் குரல்கள் மேலும் கூறின: “வலையில் இருக்குற யாரும் கீழே போறது இல்ல... வேணும்னா நீயே குதிச்சுப் பாரேன்.'' அந்தக் குரலில் அன்பு இழையோடி இருந்தது. பெண் எழுத்தாளரின் மனதில் ஒருசிறு தடுமாற்றம் உண்டானது உண்மை என்றாலும் அவள் புன்சிரிப்புடன் தலையை ஆட்டினாள். இரு பக்கங்களிலும் அவள் தன் கைகளால் இறுகப் பற்றிக்கொண்டாள்.

அவள் புன்னகை சிந்தியவாறே இருந்தாள். “பிசாசுகளாக இருந்தாலும், ஆவியாக இருந்தாலும், என்னை நான் அறிஞ்சிருந்தா போதும்.'' அவள் தனக்குத்தானே தைரியம் சொல்லிக் கொள்கிற மாதிரி கூறிக்கொண்டாள். தன்னைச் சுற்றிலும் ஒலித்த குரல்களில் ஒருவித அன்பு கலந்திருந்தாலும், மரணத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்த உலகத்தில் உள்ளே இருக்கும் நோக்கங்களை யாரால் புரிந்துகொள்ள முடியும்? அவள் இப்போதும் புன்னகையைத் தவழ விட்டுக்கொண்டுதான் இருந்தாள்.

திடீரென்று அவள்முன் ஒரு ஊஞ்சல் கீழே இறங்கிவந்தது. அதன் நுனியில் தீ நாக்குபோல பிரகாசமான கண்களைக் கொண்ட- நீலமும் சிவப்பும் வண்ணங்களாகக் கொண்ட அழகான ஒரு எட்டுக்கால் பூச்சி தொங்கிக் கொண்டிருந்தது. அது அவளைப் பார்த்துச் சொன்னது: “கதை எழுதும் பெண்ணே... பயப்படாதே. இது உன்னோட மரணமில்ல... இது எங்களின் உலகம். நாங்க உன்னை இங்கே கொண்டு வந்திருக்கோம்...''

பெண் எழுத்தாளர் பதைபதைக்கும் மனதுடன் கேட்டாள்: “நீங்க என்னை சாப்பிடப் போறீங்களா? உங்களுக்கு அப்படிச் செய்ய என்ன உரிமை இருக்கு?''

சிலந்தி ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்துவிட்டு சொன்னது: “நேத்து நீ மீனைப் பொரிச்சு சாப்பிட்டியே! அதற்கு என்ன உரிமை உன்கிட்ட இருக்கு?'' அதற்கு அவளுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அந்த மீனின் திறந்த கண்களையும், மினுமினுத்துக் கொண்டிருந்த செதில்களையும் தன் ஞாபகத்தில் கொண்டு வந்து நினைத்துப் பார்த்தாள் அவள் திடீரென்று ஒருவித உணர்வு தோன்ற, சொன்னாள்: “என்னோட நாக்குக்கு சுகம் தந்த மீனே, உனக்கு நன்றி. நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். நீ எனக்காக தந்த உன் உடலுக்கு நன்றி.'' அவள் தலைகுனிந்து, லேசாகக் கண்களை மூடி தனக்கு முன்னால் நிலவு காய்ந்து கொண்டிருந்த இருட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மீண்டும் சொன்னாள்: “நான் இதுவரை சாப்பிட்டிருக்கும் எல்லா உயிரினங்கள்கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்கிறேன். அவங்களுக்கு நன்றி சொல்றேன். அரிசியைத் தந்த நெல், சேவல், ஆடு, முருங்கைக்காய் எல்லார்கிட்டயும் நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். கரும்பே, மாம்பழமே, பலாப்பழமே... என்னை மன்னிச்சிடுங்க. என்னோட உடம்பு உங்க உடம்புதான். என்னோட கதைகள் உங்களோட மரணத்தின் நினைவுச் சின்னம்தான். என்னை மன்னிக்கணும்.'' அவளின் கண்களில் இருந்து கண்ணீர் தாரைதாரையாக வழிந்தது.

அப்போது அவளுக்கு முன்னால் இருந்த அழகான சிலந்தி சொன்னது: “கதை எழுதும் பெண்ணே... நாங்கள் உன்னை சாப்பிடப் போறது இல்ல... நீ எங்களின் விருந்தாளி. நீ கொஞ்சம் அமைதியா இருந்தா, ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி உன்கிட்ட நாங்க பேச வேண்டியது இருக்கு...''

பெண் எழுத்தாளர் சொன்னாள்: “என்னை இந்த ஆழமான இடத்துல இருந்து முதல்ல மாத்துங்க. இங்கே இருந்துக்கிட்டு நான் எப்படி அமைதியா இருக்க முடியும்?''


எட்டுக்கால் அழகி சிரிப்பது அவள் காதில் விழுந்தது. அது அவளைப் பார்த்துச் சொன்னது: “நான் உன்னோட பயத்தைப் போக்கட்டுமா? தைரியமா இரு...''

ஒரு மென்மையான கால் அவளுக்கு நேராக நீண்டது. அவள் எதையும் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்பு, அந்தக் கால் அவளைக் கீழ்நோக்கித் தள்ளியது. ஒரு பெரிய கூச்சலிட்டவாறு அவள் கீழே விழுந்தாள். கூச்சல் முடியும்போது பார்த்தால் அவள் ஒரு வெள்ளை ஊஞ்சலின் நுனியில் தொங்கியவாறு மெதுவாக ஆடிக் கொண்டிருந்தாள். மேலே வெள்ளை நூல்கள் ஆயிரக்கணக்கில் காட்சியளித்து, வானத்தில் இருந்த நட்சத்திரங்களை மறைத்துக் கொண்டிருந்தன. கீழே இங்குமங்குமாய்த் தெரிகிற வெளிச்சத்தின் அலைகள். நடுங்கியவாறு மேலே பார்த்த பெண் எழுத்தாளர் புன்சிரிப்பைத் தவழ விட்டாள். அவள் சொன்னாள்: “நண்பர்களே, என் வாழ்க்கையிலேயே இந்த அளவுக்கு நான் எப்பவும் பயந்தது இல்ல... என் உடல் என்னை விட்டுப் போகப்போகுதேன்ற பயம்தான். இனி என்கிட்ட எந்த பயமும் கிடையாது. நான் எதையும் கைவிடவும், விழவும் படிச்சுக்கிட்டேன்...''

மேலே இருந்து அழகான சிலந்தியின் குரல் கேட்டது: “இவ்வளவு சீக்கிரத்துல படிச்சிட்டியா என்ன? அப்படின்னா இன்னும் நீண்ட தூரத்துக்கு உன்னை விழ வச்சிருக்கலாமே! பயமும் முழுசா போயிருக்குமே!''

“வேண்டாம்...'' நெஞ்சம் பதைபதைக்க பெண் எழுத்தாளர் சொன்னாள்: “வீழ்ச்சி என்னன்றதை நான் தெரிஞ்சுக்கிட்டேன். அது எனக்குப் போதும்.''

“அப்படின்னா வா...'' சிலந்தி சொன்னது: “நாம பேசிக்கிட்டு இருப்போம்.''

அவள் தொங்கிக் கொண்டிருந்த நூல் அவளை மேலே உயர்த்தத் தொடங்கியது. அதோடு அது அவள் உடலைச் சுற்றவும் ஆரம்பித்தது. “என் கால்களை அசைக்கவே முடியலியே!'' பெண் எழுத்தாளர் சொன்னாள்: “என் கைகளை உடம்போடு சேர்த்து நூல் கட்டுதே! என்னோட கண்ணையும், மூக்கையும், வாயையும் இவங்க அடைக்கிறாங்களே! என் தெய்வமே... நான் சதித்திட்டத்துல மாட்டிக்கிட்டேனே! நான் நினைச்சது மாதிரி இவங்க என்னை ஏமாத்திட்டாங்களே! இந்த நூல்ல மாட்டிக்கிட்டு நான் கொஞ்சம் கொஞ்சமா அழியிறப்போ, இவங்க என்னை பங்கு போட்டு சாப்பிட ஆரம்பிச்சிடுவாங்க.'' அவள் அழ முயற்சித்தாள். ஆனால், பயத்தால் அவள் வாய்க்குள்ளிருந்து சத்தமே வரவில்லை. "என்னைக் காப்பாத்து...' அவள் மனதிற்குள் வேண்டிக்கொண்டாள். அவள் முகம் முழுமையாக நூலிழையால் சுற்றப்பட்டிருந்தாலும், அவளால் நன்கு மூச்சுவிட முடிந்தது. அவள் மேலே செல்வது நின்றது. இந்த நூலிலேயே தொங்கி கொஞ்சம் கொஞ்சமாக மரணத்தைத் தழுவப் போவதை நினைத்து அவளின் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. ஒவ்வொரு முறை  மூச்சு விடும்போதும், இந்த நினைப்பு அவள் மனதில் தோன்றி அவளைப் பாடாய்ப் படுத்தியது. நேரம் செல்லச்செல்ல அவளுக்கு சுயநினைவே அற்றுவிடும் போலிருந்தது. அப்போது சிலந்தி வரும் ஓசை மெதுவாக அவளின் காதில் விழுந்தது. “கைகளால ரெண்டு பக்கமும் தள்ளு.'' சிலந்தி சொன்னது. பெண் எழுத்தாளர் தன் பலம் முழுவதையும் செலுத்தி வேகமாகத் தள்ளினாள். ஆனால், அதற்கு அவ்வளவு சக்தி உண்மையிலேயே தேவையில்லை. அவள் தொட்டதும், அவளைச் சுற்றிக் கட்டியிருந்த வலை முழுவதுமாக அறுந்தது. அவள் அடுத்த நிமிடம் படுவேகமாக எழுந்து நின்றாள். அவளுக்கு முன்னால் ஏகப்பட்ட ஊஞ்சல்கள் ஆடிக்கொண்டிருந்தன. அவற்றில் பல கண்கள் காத்திருந்தன.

“திரும்பவும் பயந்துட்டியா?'' அழகான எட்டுக்கால் பூச்சி கேட்டது. “தொட்டால் அறுந்துபோற அளவுக்கு இருந்த கட்டுகள்தானே? இருந்தாலும் கதை எழுதும் பெண்ணே... நீ இதைப்பற்றி நினைச்சுப் பார்க்கவே இல்லியே!'' மென்மையான தன் கால்களைக் குலுக்கியவாறு எட்டுக்கால் பூச்சி சிரித்தது. அதைக் கேட்டு பெண் எழுத்தாளருக்கு ஒரே நேரத்தில் கோபமும் மகிழ்ச்சியும் உண்டானது. அவள் சொன்னாள்: “நினைச்சுப் பார்த்து கதை எழுதுறது இல்ல... பயந்தும், கவலைப்பட்டும், மகிழ்ச்சி அடைஞ்சும்தான்...''

அப்போது ஊஞ்சலில் தொங்கிக்கொண்டிருந்த எட்டுக்கால் பூச்சிகள் பெண் எழுத்தாளரை மரியாதையுடன் பார்த்தவாறு, அழகான சிலந்தியிடம் கூறின: “இவ அழுததற்கான காரணம் என்னன்னு கேளு...''

அழகான சிலந்தி அந்தப் பெண் எழுத்தாளரிடம் கேட்டது:  “நாங்க ஒரு விஷயம் தெரிஞ்சுக்க விரும்புறோம். கேட்கட்டுமா?''

“கேளு...'' அவள் சொன்னாள்.

“நீ கதை எழுதுறதை நாங்க பார்த்தோம். எழுதி முடிச்சதும், அதுல கண்ணீர் சிந்துறதையும் பார்த்தோம். ஒவ்வொரு கதையையும் எழுதி முடிச்சதும், அதை எழுதின எழுத்தாளர் கண்ணீர் சிந்துவாங்களா என்ன? சந்தோஷமான கதையாக இருந்தாலும் துக்கம் நிறைஞ்ச கதையாக இருந்தாலும்..''

அதைக் கேட்டு அந்தப் பெண் எழுத்தாளர் விழுந்து விழுந்து சிரித்தாள். “முட்டாள் நண்பர்களே... அது கதை இல்லை. என்னை விட்டுப்போன என்னோட காதலனுக்கு நான் எழுதிய கடிதம் அது. நீங்க அதைப் படிச்சுப் பார்த்தீங்களா?'' அவள் கேட்டாள்.

“இல்ல... உன்னோட கண்ணீரைப் பார்த்து நாங்க உண்மையிலேயே பயந்துட்டோம்...''

“அப்படியா?'' பெண் எழுத்தாளர் மகிழ்ச்சியுடன் சொன்னாள்: “கண்ணீர்- சொல்லப்போனால், எங்கள் மனதுக்கு ஆறுதலைத் தரும். நாங்களே அதை வரவைக்கிறோம். நாங்களே அதை ரசிக்கிறோம். நாங்களே அதைத் துடைக்கவும் செய்யிறோம். கண்ணீரோட, சிரிப்போட முடிவுதான் கதை.''

“அப்படின்னா நாங்க கேட்க நினைக்கிறதைக் கேட்கலாமா.'' சிலந்தி கேட்டது.

பெண் எழுத்தாளர் சொன்னாள்: “சொல்லுங்க... நான் பயமே இல்லாம சந்தோஷமா இருக்கேன்...''

பல்லாயிரம் ஊஞ்சல்கள் அவளை நெருங்கி வந்து அவளைச் சுற்றி வளைத்தன. சுற்றிலும் ஒரே நிசப்தம். பெண் எழுத்தாளர் பதைபதைத்துப் போய் சுற்றிலும் பார்த்தாள். அப்போது நீலமும் சிவப்பும் கொண்ட அழகான சிலந்தி தன் கண்களை அகல விரித்துக்கொண்டு அன்புடன் அவளைப் பார்த்துச் சொன்னது: “எங்களுக்கு ஒரு கதை சொல்ல முடியுமா? நாங்க அதற்காகத்தான் உன்னைக் கடத்தி இங்கே கொண்டு வந்திருக்கோம்.'' அவள் அதற்கு அன்பு மேலோங்கச் சொன்னாள்: “நிச்சயம் சொல்றேன். என்ன கதை உங்களுக்கு வேணும்? சந்தோஷமான கதையா- சோகக் கதையா?''

“உன்னோட கதை...'' ஊஞ்சல்களில் ஆடிக்கொண்டிருந்த எல்லா சிலந்திகளும் ஒரே நேரத்தில் கூறின.

“ஆனால், கதை சொல்லி முடிக்கிறப்போ... நான் கண்ணீர் சிந்த வேண்டியிருக்கும்...'' அவள் சொன்னாள்.

“பரவாயில்லை...'' ஊஞ்சல் நுனிகளில் இருந்து மீண்டும் ஒருமித்த குரல்கள்: “அந்தக் கண்ணீர் எங்களையும் ஆறுதல் படுத்தட்டும்...''

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.