Logo

வைக்கம் முஹம்மது பஷீர்

Category: வாழ்க்கை வரலாறு
Published Date
Written by sura
Hits: 7453
Vaikom_Mohammad_Basheer

தனிமையின் கரையில்...

எம்.டி.வாசுதேவன் நாயர்

தமிழில் : சுரா

ஷீரின் நூற்றாண்டைக் கொண்டாடப் போகிறார்கள் என்ற செய்தியைக் கேட்டபோது, ஆச்சரியம் உண்டானது. பக்கத்து மாநிலத்தில் உள்ள ஒரு அமைப்புதான் என்னிடம் தொலைபேசியில் அந்தத் தகவலைக் கூறியது. ‘நீங்கள் சொல்லும் கணக்கு சரிதானா?’ என்று நான் கேட்டேன். அவர்கள் கோழிக்கோட்டில் உள்ள பஷீரின் இல்லத்திற்குச் சென்று அங்கிருந்த சான்றுகளைச் சோதித்துப் பார்த்தார்கள். சரிதான்.

வேறு பலரையும் போல பஷீரின் நூல்களில் வாழ்க்கையைப் பற்றிய தகவல்கள் அப்படியொன்றும் விளக்கமாக இருக்காது. அவருக்கு ஆர்வம் இல்லாத காரணத்தால், அந்தத் தகவல்களை இடம் பெற வைப்பது என்பது பொதுவாக வழக்கத்தில் இல்லாத ஒன்று. அதனால் உண்டான சந்தேகமே என்னுடைய அந்த கேள்விக்குக் காரணமாக ஆனது. என்னைப் பொறுத்த வரையில், பஷீரின் மரணம் என்பது நேற்று கடந்து சென்ற ஒரு அனுபவம். அவ்வளவுதான். மிகவும் அருகில் இருந்தார், இப்போது சற்று விலகிச் சென்று விட்டார் என்ற ஒரு அனுபவம். தொடர்ந்து அவருடைய படைப்புகளைப் பார்த்தபோதுதான் அவருக்கு நூறு வயது ஆகிவிட்டது என்ற விஷயமே புரிந்தது.

சென்னையில் மலையாளியாக இல்லாத சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நடத்திய பஷீர் நினைவு நிகழ்ச்சியில் நானும் பங்கு பெற்றேன். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. மலையாளம் தெரியாத சில இளைஞர்கள் பஷீரின் நூல்களை மொழி பெயர்ப்பின் மூலம் வாசித்து, அவற்றால் ஈர்க்கப்பட்டு பஷீரின் சில கதைகளை நாடக வடிவத்தில் நடத்தவும், அவருடைய நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவும் தீர்மானித்தார்கள். ‘மாங்கோஸ்ட்டின் மெலடீஸ்’ என்ற பெயரில் எல்லா நாட்களிலும் பஷீருக்கு விருப்பமான பாடல்கள் இடம் பெறும்படி செய்தார்கள். இன்னொரு மொழியில், வேறொரு மாநிலத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இளைஞர்கள் இந்த நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தினார்கள் என்பதைத் தெரிந்து கொண்டபோது, மிகவும் ஆச்சரியம் உண்டானது.

கேரளத்திற்கு வெளியே எல்லா காலங்களிலும் மிகவும் அதிகமாக தெரிந்து வைக்கப்பட்டிருக்கும் எழுத்தாளர் வைக்கம் முஹம்மது பஷீர்தான். அதற்கு ஆஷரைப் போன்ற ஆட்களுக்குத்தான் நன்றி கூற வேண்டும். வேறு பல மொழிகளிலும் பஷீரின் நூல்களின் மொழி பெயர்ப்புகள் வந்திருந்தாலும், ஆங்கில மொழி பெயர்ப்புகளின் மூலம் பஷீரை உலகத்தின் பல பகுதிகளுக்கும் கொண்டு போய் சேர்ப்பது என்ற மிகப் பெரிய ஒரு கடமையை ஆஷர் செய்திருக்கிறார்.

கேரளத்திற்கு வெளியேயும் இந்தியாவிற்கு வெளியேயும் இருப்பவர்களில், அதிகமான மக்கள் வழிபடும் பாத்திரமாக இருந்த ஒரு மலையாள எழுத்தாளர் பஷீர் மட்டுமே. அவருடைய ஒட்டு மொத்த இலக்கிய நூல்களையும் அடுக்கி வைத்தால், மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே அவை இருக்கின்றன என்றுதான் நமக்கு முதலில் தோன்றும். காரணம் – அதே போல ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர் மிகவும் நீண்ட பேரமைதிக்கு ஒரு ஓய்வு கொடுத்து விட்டு, அரிதான அருமையான ஒரு நூலுடன் வெளியே வந்து கொண்டிருப்பார். அவருக்கு மன நலம் பாதிக்கப்பட்டது என்று நாம் கேள்விப்படுகிறோம். எங்கேயோ சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது என்ற தகவலையும் தெரிந்து கொள்ள முடிகிறது. அது முடிந்தவுடன், மிகவும் புகழ்பெற்ற படைப்புகளில் ஒன்றான ‘பாத்தும்மாவின் ஆடு’டன் அவர் வெளியே வருவதை நாம் பார்க்கிறோம்.

மலையாள மக்கள் மனதில் மனப்பாடம் செய்து நடந்து கொண்டிருந்த ‘ப்ரேம லேஹனம்’- தண்டனைக் காலத்தின்போது தன்னுடன் இருந்த கைதிகளை சந்தோஷப்படுத்துவதற்காக பஷீர் கூறிய ஒரு தமாஷ் கதை என்று தெரிய வருகிறது. தமாஷ்கள் என்று அவர் குறிப்பிட்ட ‘ப்ரேம லேஹனம் தமாஷ், வேதனை, துக்கம் – அனைத்தும் நிறைந்தவையாக இருந்தது. அந்தச் சிறிய, மிகப் பெரிய கதை எவ்வளவோ காலம் கடந்து போன பிறகும் மீண்டும் மீண்டும் அதற்குள் நுழைந்து செல்லும்போது, நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் புதிய அம்சங்களையும் புதிய அர்த்தங்களையும் நம்மால் கண்டு பிடிக்க முடிகிறது. அது நம்மை திகைப்பில் கொண்டு போய் நிறுத்துகிறது. அப்படிப்பட்ட நூல்களைத்தான் நாம் ‘க்ளாஸிக்குகள்’ என்று அழைக்கிறோம். முதல் வாசிப்பில் ஏதோ சில விஷயங்கள் தோன்றும். ஆனால், மீண்டும் மீண்டும் அதற்குள் நுழைந்து செல்ல வேண்டும் என்று நம்மை ஈர்த்து, புதிய சில அர்த்தங்கள் விரவியிருக்கும் இடங்களை அது திறந்து காட்டுகிறது. பஷீரின் நகைக் சுவை உணர்வு, தமாஷ் என்றெல்லாம் கூறப்படுபவை இணை கூற முடியாதவை. யாராலும் பின்பற்ற முடியாத விஷயங்கள் அவை. அர்த்தமே இல்லாத சொற்களை ஒன்று சேர்த்து வைத்துக் கொண்டு அவர் புதிய பல விஷயங்களையும் உண்டாக்குவார். அப்படிப்பட்ட தமாஷ்தான் அவருடைய வாழ்க்கையே.

வைக்கம் முஹம்மது பஷீரின் வாழ்க்கைக் கதையை மொத்தமாக பார்த்தால், ஆரம்பக் காலத்தில் அலைந்து திரிவது... அது முடிந்தவுடன், சிறைச்சாலை அனுபவங்களில் ஆரம்பித்து அந்த வாழ்க்கை வரலாற்றை ஆழமாக படித்தால் நமக்கு தெரிய வருவது – தான் எந்தச் சமயத்திலும் ஒரு தொழில் ரீதியான எழுத்தாளராக ஆக வேண்டும் என்று அவர் விரும்பியதே இல்லை என்பதுதான். அவருடைய ஆரம்ப கால படைப்புகள் அனைத்தும் அரசியல் பற்றியவையாக இருந்தன. இந்த மாநிலத்தின் மோசமான நிலையைப் பற்றியும், திவானின் ஆட்சியைப் பற்றியும், அப்போதைய முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைக்கும் தன்மை கொண்ட கட்டுரைகளும்... இவற்றைத்தான் பஷீர் செய்து கொண்டிருந்தார்.

நமக்கு இன்று ஆச்சரியம் உண்டாகும். காரணம் – அந்த நூல்களில் சில தடை செய்யப்பட்டிருக்கின்றன. ‘பால்ய கால சஹி’, ‘ப்ரேம லேஹனம்’, ‘கதிருகள்’ ஆகிய நூல்கள் ‘கறுப்பு லிஸ்ட்’டில் சேர்க்கப்பட்டிருந்தன. அதற்கு என்ன காரணம் என்று கேட்டால், அதற்குத் தடை விதித்தவர்களுக்குக் கூட காரணம் தெரியாது. எனினும், புத்தகம் தடை செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் சிலர் சுதந்திரமாக சிந்திக்கவோ, சுதந்திரமாக எழுதவோ கூடாது என்ற கெட்ட எண்ணத்துடனும் பிடிவாதத்துடனும் அந்தக் காலத்தில் தடை என்ற ஒன்றை உண்டாக்கியிருக்க வேண்டும். அப்படிப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொண்டும், சிறை அனுபவங்களை இருகரம் நீட்டி வரவேற்கவும் செய்த பஷீர் வெறும் சுவாரசியத்திற்காக சில நேரங்களில் சில கதைகளை எழுதியிருக்கிறார். அவற்றில் அவர் எழுதியதைப் பார்த்து இப்போது நான் வேதனையுடன் புன்னகைக்கலாம். வேதனை கலந்த புன்னகை அவருடைய ஒட்டு மொத்த வாழ்வின் ஒரு விளைவாக தோன்றும். அந்த ஆழமான வேதனையை மறைத்துக் கொண்டு வெளிப்படும் ஒரு புன்னகை. பஷீரின் இறுதிக் காலத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டபோது கூட, இந்த நகைச்சுவை உணர்வு நிறைந்த புன்னகை எந்தச் சமயத்திலும் அவரை விட்டு பிரியவே இல்லை.


அவருடைய படைப்புகளில் வேதனை கலந்த ஒரு புன்னகையை நாம் பார்க்கலாம். வாழ்வின் கடுமையான அம்சங்களுக்கு நேராக பார்த்து வேதனையுடன் புன்னகைக்கும் காட்சி. ‘என்னால் வேறெதுவும் செய்ய முடியாது. அதனால் புன்னகைக்கிறேன்’ என்பதைப் போல. அப்படிப்பட்ட சில நூல்களை எழுதி, எல்லா காலங்களிலும் மிகப் பெரிய கதாசிரியராக வைக்கம் முஹம்மது பஷீர் நின்று கொண்டிருக்கிறார். பொதுவாக பார்க்கப் போனால் – கதைகள், நாவல்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், மீண்டும் மீண்டும் காலத்தின் ஆக்கிரமிப்பில் காணாமல் போய் விடாமல் தொடர்ந்து நின்று கொண்டிருக்கிறார்.

என்னுடைய இளம் வயதில் பிரிட்டிஷ் எழுத்தாளர்களின் நூல்களை வாசித்துக் கொண்டிருந்த கூட்டத்தில் ஒரு ஆன்கஸ் வில்ஸன் இருந்தார். அவர் இந்தியாவிலும் இலங்கையிலும் பயணம் செய்து தான் பார்த்த காட்சிகளை வைத்து சில பயண நூல்களை எழுதியிருக்கிறார். சில வருடங்களுக்குப் பிறகு... ஆன்கஸ் வில்ஸன் வாழ்ந்து கொண்டிருந்த காலத்திலேயே அந்த எழுத்தாளரைப் பற்றி பிரிட்டிஷ் வாசகர்கள் மறந்து விட்டார்கள். அப்படிப்பட்ட சம்பவங்கள் வேறு பல இடங்களிலும் நடந்திருக்கின்றன. நூல்களை எழுதியிருக்கும் படைப்பாளி, அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்திலேயே மறக்கப்பட்டு விடக் கூடிய நிலைமை... பஷீரைப் பொறுத்த வரையில் மிகவும் குறைந்த அளவு நூல்களை எழுதி, எல்லா காலங்களிலும் நிலை பெற்று நின்று கொண்டிருக்க, மீண்டும் தலைமுறைகள் அவற்றுக்குள் நுழைந்து சென்று கொண்டிருக்கின்றன. முஸ்லீம்களின் சில பழமையான நடைமுறைகளுக்கு எதிராக எழுதிய கதாசிரியர் என்று ஆரம்பித்து குறுக்குத்தனமான போக்குகளில் பஷீரைச் சேர்த்துக் கொள்ள முடியாது. மானிட சமூகத்தின் வேதனைகள் நிறைந்த கதைகளைக் கொண்டவையே அவருடைய நூல்கள். அதற்கேற்ற சொற்கள் அவருக்கு எங்கேயிருந்து கிடைத்தன என்று நாம் வியந்து போகிறோம். அந்த சொற்களை அவரால் எப்படி ஒன்று சேர்க்க முடிந்தது என்று நாம் ஆச்சரியப்படுகிறோம். அந்த வகையில் அபூர்வமான ஒரு திறமை கொண்ட மனிதர் நமக்கு மத்தியில் இருந்தார். மிகவும் சாதாரண மனிதராக வாழ்ந்து, அசாதாரணமான மொழியில் எழுதி, மிகவும் ஆச்சரியப்படத்தக்க சிற்பங்களையும் கோபுரங்களையும் உண்டாக்க முடிந்ததுதான் வைக்கம் முஹம்மது பஷீர் என்ற எழுத்தாளரின் மிகப் பெரிய திறமை. அவர் இலக்கியத்தில் உண்டாக்கிய மிகப் பெரிய கட்டிடங்களின் மூலமாக நாம் அவரை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கிறோம். அந்த நூல்களின் மூலமாக உள்ளுக்குள் வேதனை நிறைந்த புன்னகைப் பூக்களை ஏராளமாக அவர் மலரச் செய்து கொண்டிருக்கிறார்.

சென்னையில் நடைபெற்ற பஷீர் நினைவுக் கூட்டத்தில் பேசியபோது ஒரு பெண் என்னிடம் கேட்டார்: ‘பஷீரின் இல்லற வாழ்க்கையைப் பற்றி நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், அவருடைய நூல்களை வாசித்தபோது, எனக்கு தோன்றியது – அவர் தனிமை நிறைந்த மனிதராக இருந்தார் என்பதுதான்.’ அது உண்மைதான். காரணம் – தனிமை நிறைந்த கரையின் வழியாகத்தான் பஷீர் பயணம் செய்திருக்கிறார். அந்த மிகப் பெரிய கடலின் கரையின் வழியாக நடந்து கொண்டே அவர் பலவற்றையும் பொறுக்கி எடுத்திருக்கிறார். ஒரு அர்த்தத்தில் கூறுவதாக இருந்தால் – எல்லா இடங்களிலுமே கலைஞன் எப்போதும் தனி மனிதன்தான்.

நம்முடைய காலகட்டத்தில் ஏராளமான கதைகளைக் கூற, அந்தக் கதைகளை வாசித்து நாம் நம்மையே மறந்து போய் நிற்க, இப்படி எழுதக் கூடிய சொற்கள் எங்கிருந்து கிடைத்தன என்று நமக்கு பல நேரங்களிலும் தோன்ற, ஒவ்வொரு வாசிப்பின் போதும் நம்மை வியப்படைய வைத்து, சமீப காலகட்டத்தில் நமக்கு மத்தியிலிருந்து பிரிந்து சென்ற மனிதர்தான் பஷீர். அவர் மானிட சமூகத்தின் பிரதிநிதியாக இருந்தார். அதனால் முஸ்லீம் சமூகத்தைத் திருத்துவதற்காக வந்தவர் என்று பெயர் கூறி அழைப்பதில் எந்தவொரு அர்த்தமும் இல்லை.

ஆரம்ப காலத்தில் பஷீர் எழுதியவை வசன கவிதைகள்தாம். பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றியும், கடவுளின் பெருமையையும் பற்றிய வசன கவிதைகள்... அந்தக் காலத்தில் இளைஞர்களுக்கு அவை மனப் பாடமாகவே இருந்தன. என்னைப் போல உள்ள மனிதர்களுக்கும். ‘நீயும் நானும் என்ற உண்மைத் தன்மையிலிருந்து நீ மட்டும் எஞ்சி இருக்கப் போகிறாய். பயணத்திற்கான நேரம் நெருங்கி வந்து விட்டது’ என்ற அவருடைய வசன கவிதைகளை திரும்பத் திரும்ப வாசித்து மனப்பாடமாக ஆக்கிக் கொண்டவர்கள் ஏராளமான பேர் இருந்தார்கள். அப்படிப்பட்ட அனுபவ அறிவுதான் அவருடைய கதைகளின் பக்கம் மீண்டும் மீண்டும் செல்லும்படி நம்மைத் தூண்டிக் கொண்டிருக்கிறது. அந்த வாசகனை அவர் சிரிக்கச் செய்கிறார், சிந்திக்கச் செய்கிறார், அதிசயிக்க வைக்கிறார், மிகவும் ஒன்றிப் போய் அழவும் வைக்கிறார்.

‘பாத்தும்மாவின் ஆடு’ சிரிப்பதற்காக மட்டுமே இருப்பது. அதில் அந்தக் குடும்பத்தின் உம்மாவின், சகோதரர்களின், பக்கத்து வீட்டில் இருப்பவர்களின், ஆட்டை ஓட்டிக் கொண்டு வரும் பாத்தும்மாவின் பயணங்களில் ஒரு தாங்க முடியாத வேதனையின், துக்கத்தின் ஒரு ஓட்டம் மிகவும் அடியில் ஓடிக் கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடியும். அப்படிப்பட்ட அகக் கண்களின் பார்வையுடன் ஒரு கதாசிரியர் நம் பக்கத்து வீட்டுக்காரராக இருந்து கொண்டு, நமக்கு கதைகளைக் கூறிக் கொண்டு, பல நேரங்களில் சிந்திக்க வைத்த அந்த மிகப் பெரிய எழுத்தாளரின் நூற்றாண்டு கொண்டாடப்படும் வேளையில், படைப்புகளில் அவருடைய கொடைகள் இன்னும் கண்டு பிடிப்பதற்கு எவ்வளவோ இருக்கின்றன. அப்படிப்பட்ட தேடலுக்கு புதிய பார்வைகளுடன் உள்ளே நுழைந்து செல்வதற்கு இப்படிப்பட்ட கொண்டாட்டங்கள் பாதை உண்டாக்கிக் கொடுக்கும் என்று நாம் நம்புகிறேன். அசையாத, ஒரு உயரமான மலைச் சிகரத்தைப் போல அவர் நம்முடைய மனங்களில் ஒரு பிம்பமாக நிறைந்து நின்று கொண்டிருக்கிறார்.

வைக்கம் முஹம்மது பஷீரின் நூல்களின் ஆழங்களுக்குள் நுழைந்து செல்வதற்கு, அந்த மனிதனுக்குள் புகுந்து செல்வதற்கு, மானிட வாழ்வைப் பற்றிய அவருடைய கருத்துக்களைப் பற்றி மீண்டும் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்திற்கு ஞாபகப்படுத்துவதற்கு நூற்றாண்டு கொண்டாட்டம் ஒரு சூழ்நிலையை உண்டாக்கிக் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் எனக்கு சந்தோஷமே.


வால் நட்சத்திரங்களின் விமானி

சிதாரா எஸ். (எழுத்தாளர்)

தமிழில் : சுரா

ல வருடங்களுக்கு முன்பு நாங்கள் வசித்துக் கொண்டிருந்த என்னுடைய பழைய வீட்டிற்குப் பின்னாலிருந்த முற்றத்தில் பெரிய ஒரு கல் இருந்தது. காலங்களின் அடையாளங்கள் பட்டு, கல் மினுமினுப்பு அடைந்தும், பளபளப்பு அடைந்தும் இருந்தது. அதன் அடிப் பகுதியில் ‘பிங்க்’ வர்ணத்தில் பிரகாசமான பாசிகள் முளைத்திருந்தன. இடையில் மிகவும் அருகிலிருந்த கிணற்றின் கரையில் தனியாக வளர்ந்து நின்றிருந்த செண்பக மரத்திலிருந்து பாதி காய்ந்து விட்டிருந்த பூக்கள் காற்றில் பறந்து கொண்டிருந்தன. அந்த கல்லின் மீது காலை தூக்கி வைத்துக் கொண்டு நான் புத்தகங்களை வாசித்துக் கொண்டும், கனவுகள் கண்டு கொண்டும் மத்திய கோடைகால விடுமுறை முடிந்து மீண்டும் செல்லக் கூடிய வகுப்பறைகளைப் பற்றி பயந்து கொண்டும் இருந்தேன். அந்த நிமிடங்களை மனதில் நினைத்து, வாழ்க்கையிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த தருணங்கள் அவை என்று பிறகு நான் பெருமூச்சு விடுவேன் என்று அங்கு இருந்த நாட்களில் நான் எண்ணியதே இல்லை.

அந்த சாயங்கால வேளைகளில் இருந்த பலவும் பிறகு நீர்க்குமிழிகளைப் போல மறைந்து போய் விட்டன. எனினும், காட்டுச் செண்பகம் மற்றும் ஈரமான மண்ணின் வாசனை போன்ற சில விஷயங்கள் மனதில் பசுமையாக நின்று கொண்டிருந்தன. அப்படிப்பட்ட ஒரு சாயங்கால நேரத்தில்தான் மஜீத் என்ற இளைஞனின் காலில் பழுத்து காணப்பட்ட ஒரு கொப்புளத்தைப் பற்றி நான் வாசித்தேன். அதன் வேதனை என் மனதிற்குள்ளும் உண்டானது. அன்று மட்டுமல்ல – அதற்குப் பிறகு வந்த பல வருடங்கள் முழுவதும், காதலியின் முதல் முத்தம் தந்த பூரிப்புகளுக்கு மத்தியில் அந்த கொப்புளம் அவனுக்கே தெரியாமல் உடைந்தது – ஒரு நெருப்பு மலையின் வெடிப்பை விட சற்றும் குறைந்த சக்தியுடன் அல்ல. அதன் காதல் ‘லாவா’, வேதனையின் நீர் வற்றிப் போன என்னுடைய மனதிற்குள்ளும் பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தது. சுஹ்ராவிற்கும் மஜீத்திற்கும் என்ன நடந்தது என்று உண்மையிலேயே கூறுவதாக இருந்தால் – எனக்கு ஞாபகத்தில் இல்லை. எனினும், வாழ்ந்து முடித்த இத்தனை வருடங்களில் நடந்த வாசிப்பு அனுபவங்களுக்கு மத்தியில் இந்த அளவிற்கு ‘ரியலிஸ்ட்டிக்’கான இன்னொன்றை சொல்லப் போனால் – அதற்குப் பிறகு நான் பார்த்ததே இல்லை.

தனக்கு பிடித்த புத்தகங்களின் சில அத்தியாயங்களையும் வரிகளையும் நாங்கள் குழந்தைப் பருவத்தில் இருந்தபோது, எங்களுக்காக வாசித்து கேட்கச் செய்யக் கூடிய பழக்கம் என் தந்தைக்கு இருந்தது. ‘மாலை நேர பயணங்களின் தந்தையே! மந்தாரத்தின் இலைகளைச் சேர்த்து தைக்கப்பட்ட மறுபிறப்பு என்ற இந்த கூட்டை விட்டு நான் பயணிக்கிறேன்…’ என்ற ‘கஸாக்’கின் வரிகள் எப்படிப்பட்ட உணர்வற்ற நிலையிலும் மறைந்து போகாத அளவிற்கு என் மனதிற்குள் பதிந்து போய் இருந்தது இப்படித்தான். அப்படிப்பட்ட கற்பனை மனநிலைகள் எதுவுமில்லையென்றாலும், நாங்கள் இருந்த இடத்திலும் இல்லாத இடங்களிலும் என் தந்தை கூறக் கூடிய இன்னொரு வார்த்தை – ‘இதில் விளக்கமும் விளக்குபவனும் எங்கே?’ என்பது. கதாசிரியரிடம் ஆசிரியரான தம்பி கேட்கும் இந்த கேள்வியை ஒவ்வொரு முறை கேட்கும்போதும், வாசிக்கும்போதும் ‘போடா முட்டாள்! அவனுடைய விளக்கம்!’ என்ற சிறு பிள்ளைத் தனமான ஒரு பழி வாங்கும் சுகத்துடன் என்னுடைய மனமும் பதில் கூறிக் கொண்டிருந்தது. சொல்லப் போனால்- எழுத்தின் எளிமையைப் பற்றிய என்னுடைய முதல் பாடமே அதுவாகத்தான் இருந்தது.

தனித்து கூறக் கூடிய வகையில் அதற்கு நிகரான எவ்வளவோ பயணங்கள், அதற்குப் பிறகு பல நேரங்களில் என்னுடைய வாசிப்பு வாழ்க்கையில் உண்டாயின. என் மனதின் இருண்டு, குளிர்ந்த மண்ணில் அவை பிரகாசமான பச்சை நிறத்துடன் செழித்து வளர்ந்து படர்ந்து இருக்க, அவற்றின் நீருடலில் ஒரு கண்ணாடியில் பார்ப்பதைப் போல நான் என்னைப் பார்த்தேன். பாதையோரத்திலிருக்கும் நிலத்தில் வீட்டின் சொந்தக்காரன், ஆடு தின்னாமல் பத்திரமாகப் பாதுகாத்த நன்கு பழுத்த பூசணிகளை ஆர்வத்துடன் பார்த்தவாறு, புத்தகக் கட்டுகளை கையில் வைத்துக் கொண்டு நடந்து செல்லும் ஒரு கூட்டம் சிறுமிகளுடன் நானும் நடந்து சென்றேன். சிங்கிடி முங்கனுக்கு பக்தர்களிடமிருந்து நேர்த்திக் கடனாகக் கிடைத்த மீன்களைக் கொண்டு கரியாத்தனின் மனைவி தயார் பண்ணிய உணவுப் பொருட்கள் என்னுடைய நாக்கின் அரும்புகளில் சுவையை உணரச் செய்து கொண்டிருக்கின்றன. குஞ்ஞுபாத்தும்மா பருகுவதற்கு கொண்டு வந்து தந்த நீர் குவளைக்கு களிம்பு நாற்றம் இருக்கிறதா என்று நிஸார் அஹமதுடன் சேர்ந்து நானும் முகர்ந்து பார்த்தேன். மூன்று சீட்டுக்காரனின் மகள் முதலில் யாருக்கும் தெரியாமல் சணலைக் கட்டி இழுத்துக் கொண்டு போன நேந்திரவாழைக் குலையுடன் என்னுடைய கால்களும் ஆற்று நீரால் நனைந்தன. வாழ்க்கை இளமையின் பிரகாசத்துடனும், இதயம் காதல் உணர்வுகளுடனும் இருக்கும் அரிதான காலகட்டங்களில் நிறைய புன்னகைத்துக் கொண்டும் காதலித்துக் கொண்டும் இருக்கக் கூடிய பெண்களை நான் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு நின்றேன். என்னைச் சுற்றிலும் இருந்த பிரபஞ்சம் முழுவதும் அழகான, குளிர்ச்சியான ஒரு வெளிச்சத்தில் மூழ்கியது.

மனிதர்களின் வாசிப்பு, வால் நட்சத்திரங்களின் பயணத்தைப் போன்றது. இதற்கு முன்பு தெரிந்திராத பிரபஞ்ச மண்டலங்களிலிருந்து பற்றி எரிந்தவாறு பாய்ந்தோடி வரும். பிறகு… பனி அல்லது வேறு ஏதோவொன்றால் ஆன வால்கள் பின்னால் தெரிய, எல்லையற்றதை நோக்கி வேகமாக போய்க் கொண்டிருக்கும். சில பல வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய இடத்திற்கே, வீட்டிற்குத் திரும்பி வரும் உணர்வுடன் திரும்பி வரும். வேறு சில, மிகப் பெரிய நட்சத்திரங்களின் வெப்பத்திற்கு அடிமையாகி கரைந்து காணாமல் போகும்.

சில வருடங்களுக்கு முன்னால் தூர்தர்ஷனின் மலையாள செய்திக்கு மத்தியில் ‘கதை கூறிக் கூறி கதையாக மாறிய’ பஷீர் என்ற மனிதரின் உயிரற்ற முகத்தைப் பார்த்தபோது, எந்தச் சமயத்திலும் குளிர்ந்து உறைந்து போகாத ஒரு வெப்பம் நிறைந்த வால் நட்சத்திரம், அதன் பிரகாசித்துக் கொண்டிருக்கும் வாலுடன் எனக்குள் மீண்டும் பாய்ந்து வந்தது. புத்தகங்கள் நிறைந்த ஒரு பிரகாசமான துணி துவைக்கும் கல்லின் மீது கால்களை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த சிறுமியை நீண்ட காலத்திற்குப் பிறகு நான் நினைத்துப் பார்த்தேன். ஏராளமான நட்சத்திரங்களின் பயணங்களில் ஆரம்ப வழி காட்டிகளில் ஒருவருடையதாக இருந்தது அல்லவா? செய்தியில் அஞ்சலிகளுடன் காட்டிக் கொண்டிருந்த பழைய படங்களை நான் நன்றியுடனும், சற்று குற்ற உணர்வுடனும் பார்த்துக் கொண்டிருந்தேன். என் மனதின் தேம்பல்களை நோக்கி, வாஞ்சை நிறைந்த ஒரு பற்கள் இல்லாத சிரிப்பு குளிர்ச்சியாக வந்து விழுந்தது.

தொடரும்...

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.