மறக்க முடியுமா? - சுரா (Sura)
ஜெயலலிதாவுடன் நடித்த சிவாஜியின் அண்ணன்!
எத்தனையோ வருடங்களாக வானத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்த ஒரு உச்ச நட்சத்திரம் இப்போது உதிர்ந்து விட்டது.அந்த உதிர்ந்த நட்சத்திரத்தின் பெயர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.சுருக்கமாக...எஸ்.எஸ்.ஆர்.
எம்.ஜி.ஆர்,சிவாஜி இருவரின் பெயர்களும் எப்போது என் காதுகளில் விழ ஆரம்பித்தனவோ,அப்போதே என் செவிகளில் வேறு இரண்டு பெயர்களும் விழுந்தன.ஒரு பெயர்...ஜெமினி கணேசன்.இன்னொரு பெயர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.50,60களில் தமிழ் திரைப்பட உலகை ஆட்சி செய்த அரசர்கள் இவர்கள்தாம்.
எனக்கு 6 வயது நடக்கும்போது எஸ்.எஸ்.ஆர்.என்ற பெயர் முதல் தடவையாக என் காதில் விழுகிறது.அப்போது நான் கேரளா மாநிலத்தின் மூணாறில் முதல் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன்.என் தாயார் எனக்கு தான் பார்த்த 'பராசக்தி' படத்தின் கதையை கூறினார்.சந்திரசேகர்,ஞானசேகர்,குணசேகர் என்ற மூன்று சகோதரர்களும்,கல்யாணி என்ற அன்பு சகோதரியும் அப்போதே என் உள்ளத்தில் இடம் பிடித்து விட்டனர்.அந்தப் படத்தில் குணசேகராக நடித்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.அவரின் அண்ணன் ஞான சேகராக நடித்தவர் எஸ்.எஸ்.ஆர்.அந்தப் படம் திரைக்கு வந்த வருடம் 1952.நான் என் அன்னையிடம் கதை கேட்ட வருடம் 1962.'பராசக்தி'திரைக்கு வந்து 4 வருடங்கள் கழித்துத்தான் நான் பிறந்தேன்.அதற்குப் பிறகு சில வருடங்களுக்குப் பின்னர் நானே திரையரங்கில் அந்தப் படத்தைப் பார்த்தேன்.என் தாயார் கூறிய காட்சிகள் அப்படியே திரையில் ஓடிக் கொண்டிருந்தன.குணசேகரான சிவாஜியும்,ஞானசேகரான எஸ்.எஸ்.ஆரும் என் உள்ளத்திற்குள் நுழைகிறார்கள்.
அதற்குப் பிறகு எஸ்.எஸ்.ஆர்.நடித்த எத்தனையோ படங்களைப் பார்க்கிறேன்.ஒவ்வொரு படமும் என் உள்ளத்தில் இப்போதும் பசுமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில்,கே.எஸ்.கோபால கிருஷ்ணன் கதை-வசனம் எழுதிய 'தெய்வப் பிறவி'.சிவாஜி-பத்மினி இணைந்து நடித்த அப்படத்தில் பத்மினியின் தம்பியாக வருவார் எஸ்.எஸ்.ஆர்.சிவாஜி,தன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட,அதைப் பார்த்து ஆவேசப் படுவாரே எஸ்.எஸ்.ஆர்!அந்தக் காட்சி இப்போது கூட மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது.'காஞ்சித்தலைவன்' படத்தில் எம்.ஜி.ஆருடன் எஸ்.எஸ்.ஆர். இணைந்து நடித்த ஒவ்வொரு காட்சியும் அப்படியே மனதில் ஓடுகிறது.ஜி.ஆர்.நாதன் ஒளிப்பதிவு செய்து இயக்கிய படம் 'வானம்பாடி'.படத்தின் கதாநாயகன் எஸ்.எஸ்.ஆர்.கதாநாயகி தேவிகா.என்ன அருமையான படமது!இருவரும் போட்டி போட்டு நடித்திருப்பார்களே!நடிகர் திலகம் சிவாஜியுடன் எஸ்.எஸ்.ஆர் இணைந்து நடித்த இன்னொரு அருமையான படம் 'பழனி'.அதில் நடித்த அத்தனைப் பேரும் அண்ணன்,தம்பிகளாகவே வாழ்ந்திருந்தார்களே!முக்தா சீனிவாசன் இயக்கிய முதல் படம் 'முதலாளி'.அதன் நாயகன் எஸ்.எஸ்.ஆர்.நாயகி தேவிகா.அவருக்கு அது முதல் படம்.எவ்வளவு பெரிய வெற்றிப் படமது!
ஏவிஎம் தயாரிப்பில் உருவான 'காக்கும் கரங்கள்'படத்தின் நாயகன் எஸ்.எஸ்.ஆர்.சிவகுமார் அதில்தான் அறிமுகமாகிறார்.அதில் இடம் பெற்ற 'அல்லி தண்டு காலெடுத்து'என்ற பாடலையும்,அதில் நடித்த எஸ்.எஸ்.ஆரையும்,விஜயகுமாரியையும் நம்மால் மறக்கத்தான் முடியுமா?ஏவிஎம் தயாரித்த இன்னொரு அருமையான படம் 'நானும் ஒரு பெண்'.மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படமது.ஏ.சி.திருலோகசந்தர் இயக்கிய அந்தப் படத்தில் எஸ்.எஸ்.ஆரும்,விஜயகுமாரியும் இணைந்து நடித்தனர்.அதில் இடம் பெற்ற 'பூப் போல பூப் போல பிறக்கும்'என்ற பாடல் காட்சியையும்,அதில் வாயசைத்து நடித்த நாயகன்,நாயகியையும் நம்மால் எப்படி மறக்க முடியும்?
'சிவகங்கைச் சீமை'-எஸ்.எஸ்.ஆர்.நடித்த வரலாற்று கதை கொண்ட படம்.மருது சகோதரர்களின் கதை.கதாநாயகி குமாரி கமலா.தூய தமிழில் வசனம் பேசி முத்திரை பதித்திருப்பார் எஸ்.எஸ்.ஆர்.
இன்று வரை மக்கள் மறக்காத ஒரு படம் 'ரத்தக் கண்ணீர்'.அதில் எம்.ஆர்.ராதா நடிப்பில் ஆட்சி புரிய,அவரின் உயிர் நண்பராக நடித்தவர் எஸ்.எஸ்.ஆர்.
கலைஞர் கருணாநிதியின் உரையாடலில் எஸ்.எஸ்.ஆர்.நடித்த படம் 'மணி மகுடம்'.அப்படத்தின் கதாநாயகி ஜெயலலிதா.படத்தைத் தயாரித்து,இயக்கியவர் எஸ்.எஸ்.ஆர்.
எஸ்.எஸ்.ஆர்.நடித்த இன்னொரு நல்ல படம் 'ஆனந்தி'ப.நீலகண்டன் அப்படத்தை இயக்கினார்.சிவாஜியுடன் இணைந்து எஸ்.எஸ்.ஆர்.நடித்த ராஜா ராணி,ரங்கூன் ராதா,மனோகரா,சாந்தி,பச்சை விளக்கு,குங்குமம் அனைத்துமே வெற்றிப் படங்கள்தாம்.கே.பாலசந்தர் சிவாஜியை வைத்து இயக்கிய ஒரே படம் 'எதிரொலி'.அதிலும் பேசப்படும் பாத்திரத்தில் எஸ்.எஸ்.ஆர்.நடித்திருந்தார்.
நடிகர் திலகத்துடன் எஸ்.எஸ்.ஆர்.இணைந்து நடித்த ஒரு மிகச் சிறந்த திரைப்படம் 'கை கொடுத்த தெய்வம்'.கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்கி,மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற படமது.சிவாஜியின் உயிர் நண்பராக அதில் வருவார் எஸ்.எஸ்.ஆர்.நான் அப்படத்தைப் பார்க்கும்போது,ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விட்டேன்.இருவரும் நடிக்கவே இல்லை.உயிர் நண்பர்களாகவே உயிர்ப்புடன் வாழ்ந்திருப்பார்கள்.இதைப் பற்றி நான் இயக்குநர் கே.எஸ்.கோபால கிருஷ்ணனிடம் ஒரு முறை நேரில் பாராட்டிப் பேசினேன்.அதைக் கேட்டு அவர் மிகவும் சந்தோஷப்பட்டார்.
எஸ்.எஸ்.ஆர்.நடித்து,மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் 'சாரதா'.கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்குநராக அறிமுகமானது அந்தப் படத்தில்தான்.அதன் வெற்றியின் மூலம் கிடைத்த பணத்தில் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன் வாங்கியதுதான் 'சாரதா ஸ்டுடியோ'.
எஸ்.எஸ்.ஆர்.கதாநாயகனாக நடித்து மக்களின் உள்ளங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் படம் 'தை பிறந்தால் வழி பிறக்கும்'.படத்தின் இயக்குநர் ஏ.கே.வேலன்.பெரிய அளவில் படம் வெற்றி பெற்றது.அந்த லாபத்தில் ஏ.கே.வேலன் வாங்கிய ஸ்டூடியோதான் 'அருணாச்சலம் ஸ்டூடியோ'.
எஸ்.எஸ்.ஆர்.கதாநாயகனாக நடித்து,ஓஹோ என்று ஓடிய படம் 'குமுதம்'.குடும்பப் பெண்கள் அந்தப் படத்தை தலையில் வைத்து கொண்டாடினர்.அவர் நடித்த இன்னொரு வெற்றிப் படம் 'குலதெய்வம்'.அதை பார்க்காதவரும் உண்டோ?
அவன் பித்தனா?,பூம்புகார்-எஸ்.எஸ்.ஆர்.நடித்து,வசனங்களுக்காக பேசப்பட்ட படங்கள் இவை.நடிகர் திலகத்துடன் எஸ்.எஸ்.ஆர்.இணைந்து நடித்து,ரசிகர்களின் மனங்களில் சாகா வரம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் படம்'ஆலயமணி'.பி.எஸ்.வீரப்பா தயாரித்த அப்படத்தை இயக்கியவர் கே.சங்கர்.முக்கோண காதல் கதை.அதில் இடம் பெற்ற 'தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே'என்ற பாடலை நினைக்கும்போது,எஸ்.எஸ்.ஆரும் நம் ஞாபகத்தில் வருவார்.
ஏ.பீம்சிங் இயக்கிய முதல் படம் 'அம்மையப்பன்'அதன் நாயகனே எஸ்.எஸ்.ஆர்தான்.
எஸ்.எஸ்.ஆர்.நடித்திருக்கிறார்...பாடல்கள் எழுதியிருக்கிறார்...பாடியிருக்கிறார்...படங்களை இயக்கியிருக்கிறார்...படங்களைத் தயாரித்திருக்கிறார்...1962ல் சேடபட்டி தொகுதியின் சட்டமன்ற தி.மு.க.உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு,எம்.எல்.ஏ.வான முதல் நடிகர் என்ற பெயரைப் பெற்றிருக்கிறார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்திருக்கிறார்.
இவ்வளவு பெருமைகளுக்கும் உரிய எஸ்.எஸ்.ஆர்.என்று அன்புடனும்,பாசத்துடனும் தமிழக மக்களால் அழைக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் என்ற 'இலட்சிய நடிகர்' தான் புகழ் கொடி நாட்டிய இந்த மண்ணிலிருந்து விடை பெற்றுக் கொண்டார்.நான் இளம் வயதிலிருந்து திரையில் பார்த்து வந்த ஒரு துருவ நட்சத்திரம் என் பார்வையிலிருந்து மறைந்து விட்டது.ஆனால்,நம் அனைவரின் உள்ளங்களிலும் அந்த நட்சத்திரம் நிரந்தரமாக பிரகாசித்துக் கொண்டே இருக்கும்.