Logo

திடீர் திருப்பம் உண்டாகி, பணக்காரராக ஆக முடியுமா?

Category: ஜோதிடம்
Published Date
Written by சுரா
Hits: 3542

திடீர் திருப்பம் உண்டாகி,

பணக்காரராக ஆக முடியுமா?

- மகேஷ்வர்மா 

சிலருடைய வாழ்க்கையில் திடீரென்று திருப்பங்கள் உண்டாகும். எதிர்பாராத சில சம்பவங்களின் மூலம் வளர்ச்சி உண்டாகும். அதற்கு ஜோதிட ரீதியாக காரணம் இருக்கிறதா?

     சிலர் பிறக்கும்போது சாதாரண குடும்பச் சூழலில் பிறந்திருந்தாலும், குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் அவர்கள் பெரிய தொழிலதிபராகவோ, அதிகாரியாகவோ ஆகி விடு வார்கள். சிலர் தங்களுக்கே தெரியாத தொழிலில் நுழைந்து கொடி கட்டிப் பறப்பார்கள். சிலர் அரசியலில் வாய்ப்பு உண்டாகி, பீடத்தில் அமர்வார்கள். சிலர் கல்வி கற்கும் வசதி கூட இல்லாமல் கூலி வேலை செய்து கொண்டிருந்து விட்டு, திடீரென்று பெரிய மனிதர்களாக மாறுவார்கள். இதற்கெல்லாம் ஜோதிடத்தில் காரணங்கள் இருக்கின்றன.

     ஒரு மனிதரின் ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன், புதன், 10இல் குரு, 6இல் சனி இருந்தால், அவர் வாழ்க்கையின் முற்பகுதியில் நிறைய கஷ்டங்களை அனுபவித்திருப்பார். 18 வயதிலிருந்து 28 வயது வரை அவர் விரக்தியடையும் அளவிற்கு சிரமங்களைச் சந்தித்திருப்பார். அவருடைய வாழ்க்கையில் 31 வயது நடக்கும்போது லக்னத்திலிருக்கும் சூரியன் அவருக்கு திருப்பு முனையை உண்டாக்கும். அவர் பலருக்கும் நன்மைகள் செய்யும் அளவிற்கு, பலருக்கும் அறிவுரை கூறும் அளவிற்கு அவருடைய வாழ்க்கை நிலை மாறும்.

     ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன், புதன், ராகுவுடன் இருந்தால், அந்த ஜாதகத்தில் 9இல் குரு, சனி இருந்தால், அந்த மனிதர் தன் 15 வயதிலிருந்து 32 வயது வரை அடிமையாக வேலை செய்திருப்பார். ஆனால், 32 வயதிற்குப் பிறகு திடீரென்று அவர் தொழிலதிபராக மாறி விடுவார். 55 வயதில் பெரிய பணக்காரராக அவர் இருப்பார்.

     லக்னத்தில் செவ்வாய், 10இல் சூரியன், 5இல் குரு இருந்தால், அந்த ஜாதகர் வாழ்க்கையின் முதல் பகுதியில் நிறைய கஷ்டங்களை அனுபவித்திருப்பார். தன் 36ஆது வயதில் அவர் திடீரென்று பெரிய மனிதராக ஆவார். அவருக்கே தெரியாத தொழிலில் கால் வைத்து, பெயரையும் புகழையும் பெறுவார்.

     லக்னத்தில் சூரியன், சுக்கிரன், 5இல் குரு, 10 இல் செவ்வாய், 11இல் சந்திரன் இருந்தால், அவர் தன் வாழ்க்கையின் இரண்டாவது பகுதியில் திடீரென்று பெரிய மனிதராக ஆகி, நல்ல செல்வச் செழிப்புடன் இருப்பார்.

     ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் குரு உச்சமாக இருந்து, 10க்கு அதிபதி நீசமாக இருந்தால், அந்த ஜாதகர் தன்னுடைய 36வது வயதில் திடீர் பணக்காரராக ஆவார். பெரிய தொழிலதிபராக மாறுவார்.

     ஒரு மனிதரின் ஜாதகத்தில் 4இல் சூரியன், லக்னத்தில் குரு, 10இல் செவ்வாய் இருந்தால், அவர் தன் 42 வயதிற்குப் பிறகு பெரிய  பதவிகளைப் பார்ப்பார்.

     ஒரு ஜாதகத்தில் 4இல் சனி, 6இல் உச்ச குரு, 8இல் சுக்கிரன், சூரியன், புதன் இருந்தால், அந்த ஜாதகர் தன் வாழ்க்கையின் பெரும் பகுதியில் ஏராளமான கஷ்டங்களை அனுபவித்திருப்பார். வேலை கிடைக்காமல் அலைந்திருப்பார். அவருக்கு திடீரென்று அதிர்ஷ்டம் வந்து கதவைத் தட்டும். பெரிய நிலைக்கு அவர் உயர்வார்.

     லக்னத்தில் செவ்வாய், சந்திரன், 4இல் குரு, 10இல் சனி இருந்தால், அந்த ஜாதகர் தன் 40 வயது வரை படாத கஷ்டங்களே இருக்காது. 42 வயதிற்குப் பிறகு மிகப் பெரிய மனிதராக அவர் ஆவார்.

     ஒரு ஜாதகத்தில் குருவும் சந்திரனும் கேந்திரத்தில் இருந்தால், அந்த ஜாதகர் தன் 39 வயதிற்குப் பிறகு, பெரிய வாய்ப்புகளை வாழ்க்கையில் பார்ப்பார்.

     ஒரு மனிதரின் ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன், 6இல் சனி, 9இல் ராகு, 10இல் குரு, 11இல் சந்திரன் அல்லது லக்னத்தில் சூரியன், புதன், 3இல் சனி, 9இல் குரு, 11இல் சந்திரன் இருந்தால், முன் பகுதியில் பல சிரங்களை அனுபவித்தாலும், 36 வயதிற்குப் பிறகு பெயர், புகழ், செல்வத்துடன் அவர் இருப்பார்.

     5க்கு அதிபதியான கிரகம் உச்சமாக இருந்தால், அந்த ஜாதகருக்கு புதன் அஸ்தமாக இருந்தால், அவர் தன் வாழ்க்கையின் முன் பகுதியில் ஏராளமான கஷ்டங்களை அனுபவித்திருப்பார். ஆனால், 36 வயதிற்குப் பிறகு அவருக்கு பெயர், புகழ் ஆகியவை கிடைக்கும்.

     ஒரு ஜாதகத்தில் 3இல் கேது, லக்னத்தில் செவ்வாய் அல்லது சூரியன், ராகு அல்லது லக்னத்தில் சூரியன், 3இல் செவ்வாய், 10இல் ராகு இருந்தால், அந்த ஜாதகர் தன் வாழ்க்கையின் பிற்பகுதியில் பெரிய மனிதராக இருப்பார்.

     10இல் ராகு இருந்தால், அந்த ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக இருந்தால், அந்த ஜாதகருக்கு யோகாதிபதி தசை நடந்தால் அல்லது 5க்கும், 11க்கும் உரிய தசை நடந்தால், அந்த ஜாதகர் தனக்கே தெரியாத தொழிலில ஈடுபட்டு, அதில் வெற்றிகரமாக பவனி வருவார். நல்ல பண வசதியுடன், வாழ்வார்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.