Logo

குழந்தைகள் நன்கு படிப்பதற்கு, செய்ய வேண்டிய பரிகாரங்கள்

Category: ஜோதிடம்
Published Date
Written by சுரா
Hits: 7805

   குழந்தைகள் நன்கு படிப்பதற்கு,

செய்ய வேண்டிய பரிகாரங்கள்

- மகேஷ்வர்மா  

குழந்தைகள் நன்கு படிப்பதற்கு எந்தெந்த கிரகங்கள் உதவுகின்றன? என்ன பரிகாரம் செய்தால், நன்றாக படிப்பார்கள்?

     ஒரு குழந்தையின் ஜாதகத்தில் அந்த குழந்தை நன்கு படிப்பதற்கு, அந்த ஜாதகத்தில் புதன், குரு, சந்திரன் ஆகிய கிரகங்கள் நல்ல நிலைமையில் இருக்க வேண்டும். ஜாதகத்தில் புதன் லக்னாதிபதியாக இருந்து, உச்சமாக இருந்தால்,  அந்த குழந்தை நன்கு படிக்கும். பெயர், புகழுடன் வாழும், அந்த ஜாதகத்தில் குரு, அந்த புதனுக்கு கேந்திரமாக இருந்தால் அல்லது குரு, புதனைப் பார்த்தால், அந்த குழந்தை மேற்படிப்பு படிக்கும். ஆனால், அந்த ஜாதகத்தில் புதன் அஸ்தமாக இருந்தால் அல்லது புதன் நீச்சமாக இருந்தால், அல்லது பாவ கிரகத்தால் பார்க்கப்பட்டால், அந்த குழந்தையின் மேற்படிப்பில் பல சிரமங்கள் உண்டாகும். சில நேரங்களில் மேற்படிப்பிற்குச் செல்ல முடியாத சூழ்நிலை கூட உண்டாகும்.

     ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் புதன், சூரியன், 2–இல் செவ்வாய், 6–இல் சனி இருந்தால், அந்த புதன் அஸ்தமாக இருந்தால், அந்த குழந்தை மேற்படிப்பு படிக்க முடியாத நிலையில் இருக்கும்.

     ஒரு குழந்தையின் ஜாதகத்தில் சந்திரன் நீசமாக இருந்தால் அல்லது அஸ்தமாக இருந்தால் அல்லது பலவீனமாக இருந்தால், நவாம்சத்தில் வலு இல்லாமலிருந்தால், அந்த குழந்தையின் மேற்படிப்பில் பிரச்சினை உண்டாகும்.

     கடக லக்னத்தில் லக்னாதிபதியான சந்திரன் 12–இல், 6–இல், 8–இல் இருந்தால், குழந்தைகள் படிப்பதற்கு சிரமப்படுவார்கள். லக்னத்தில் செவ்வாய் உச்சமாக இருந்தால், அதற்கு 2–வது வீட்டில் சனி இருந்தால் அல்லது 12–இல் சூரியன் இருந்தால், அவர்கள் ஒழுங்காக படிக்க மாட்டார்கள்.

     லக்னத்தில் புதன்–சூரியன், செவ்வாய் அல்லது 4–இல் அல்லது 7-இல் இருந்தால், அதற்கு குருவின் பார்வை இல்லாமலிருந்தால், பல நேரங்களில் ஆரம்ப கல்வி கற்பதற்கே படாதபாடு பட வேண்டியதிருக்கும்.

     ஒரு ஜாதகத்தில் 7-இல் உச்ச செவ்வாய், 9-இல் சனி இருந்தால், கோப குணத்தின் காரணமாக, அதிகமாக பேசும் குணத்தால், மேற்படிப்பிற்குச் செல்ல முடியாத சூழல் உண்டாகும்.

     ஒரு குழந்தையின் ஜாதகத்தில் 2வது வீட்டில் செவ்வாய், சூரியன், புதன், சந்திரன் இருந்தால், ஆரம்ப கல்வி கற்பதற்கே சிரமப்பட வேண்டியதிருக்கும்.

     லக்னத்தில் செவ்வாய், 4 இலோ 7 இலோ சனி இருந்தால், படிப்பில் பல பிரச்சினைகள் உண்டாகும்.

     ஒரு ஜாதகத்தில் சந்திரன், சூரியனுடன் அஸ்தமாக இருந்தால், அந்த ஜாதகத்தில் புதன் நீச மடைந்து காணப்பட்டால், கல்வியில் தடைகள் உண்டாகும். லக்னத்தில் புதன், சுக்கிரன், 7-இல் அல்லது 4-இல் சனி, 12 இல் சூரியன், செவ்வாய் இருந்தால், மேற்படிப்பிற்குச் செல்ல முடியாது.

     ஒரு குழந்தை படிக்கும்போது அந்த குழந்தைக்கு ராகு தசை நடந்தால், அந்த ராகு ஜாதகத்தில் 4,8,12 இல் இருந்தால், படிக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். பல தொல்லைகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.

     படிக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால், அதற்கு ராகு தசை நடந்தால், அந்த ராகு தசையில் சுக்கிர புக்தி, சந்திர புக்தி இருந்தால், படிப்பில் கவனம் செலுத்தாமல், தேவையற்ற விஷயங்களில் அந்த குழந்தை கவனத்தைச் சிதற விடும்.

     ஒரு வீட்டிற்கு தென் கிழக்கு வாசல் இருந்து, அந்த வீட்டில் படிக்கும் குழந்தை தென்மேற்கில் இருக்கும் அறையில் படுத்தால், அது ஒழுங்காக படிக்காது.

     ஒரு வீட்டிற்கு தெற்கு வாசல் இருந்து, அந்த வீட்டின் வட மேற்கு திசையிலிருக்கும் அறையில் குழந்தை படுத்தால், ஏதாவது காரணத்தைக் கூறி குழந்தை படிக்காமல் இருக்கும். ஒரு வீட்டிற்கு மேற்கு திசையில் தென் மேற்குவாசல் இருந்தால், அந்த குழந்தை சரியாக படிக்காமல், விளையாடிக் கொண்டே இருக்கும்.

     அதே மேற்கு திசையில் வடமேற்கு வாசல் இருந்தால், அந்த வீட்டில் தென் கிழக்கிலிருக்கும் அறையில் படுத்தால், எழுதும்போது ஞாபக மறதியால் குழந்தை ஒழுங்காக தேர்வை எழுதாது.

     கிழக்கு மத்திய பகுதியில் வாசல் இருந்தால், அந்த இடத்தில், மத்திய பகுதியில் நீர் தொட்டி இருந்தால், அந்த  குழந்தைக்கு நோய் உண்டாகும். அதனால் படிப்பு பாதிக்கப்படும்.

பரிகாரங்கள்

  1. கருப்பு நிற ஆடை அணியக் கூடாது.
  2. கிழக்கில் தலை வைத்து படுக்க வேண்டும்.
  3. வீட்டின் வட கிழக்கில் படுக்க வேண்டும்.
  4. 5க்கு உரிய கிரகத்தின் ரத்தினத்தை அணிய  வேண்டும்.
  5. லக்னாதிபதி பலவீனமாக இருந்தால், லக்னாதிபதியின் ரத்தினத்தையும் அணிய வேண்டும்.
  6. தினமும் விநாயகர் ஆலயத்திற்குச் சென்று வழிபட வேண்டும். முடியவில்லையென்றால், புதன் கிழமை சூரியன் மறைந்த பிறகு, விநாயகர் ஆலயத்திற்குச் சென்று வழிபட வேண்டும்.
  7. ஞாயிற்றுக் கிழமை ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
  8. ஒன்பது ஏலக் காய்களை மாலையாக கோர்த்து, அதை பகவான் ஹயக்ரீவருக்கு வியாழக் கிழமை அணிவிக்க வேண்டும்.
  9. வீட்டில் அடர்த்தியான ப்ரவுன், அடர்த்தியான நீலம், அடர்த்தியான பச்சை வர்ணங்கள் இருக்கக் கூடாது.

10. வீட்டின் சமையலறை சுத்தமாக இருக்க வேண்டும். ஒட்டடை இருக்கக்  கூடாது.

11. படிக்கும்போது, குழந்தை கிழக்கு நோக்கி அமர்ந்து படிக்க வேண்டும்.

12. குழந்தைக்கு படிப்பு சரியாக வரவில்லையென்றால், பகவான் விநாயகரின் யந்திரத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.