Logo

கனவுகளால் தூக்கம் கெடுகிறதா? பரிகாரம் என்ன?

Category: ஜோதிடம்
Published Date
Written by சுரா
Hits: 4063

கனவுகளால் தூக்கம் கெடுகிறதா? பரிகாரம் என்ன?

(மகேஷ் வர்மா)

னவுகளால் தூக்கம் கெடுகிறது. கெட்ட கனவுகள் ஏன் வருகின்றன? ஜோதிட ரீதியாக அதற்கு காரணம் என்ன?

மனிதனுக்கு தூக்கம் என்பது அவசியம். ஆனால், பலர் தூங்க முடியாமல் அவதிப்படுவார்கள். கனவுகள் வந்து தூக்கத்தையே இல்லாமற் செய்து விடும். நீரில் மூழ்குவது, காட்டில் தனியாக நின்று கொண்டிருப்பது, படிக்கட்டில் நிற்பது, படியிலிருந்து கீழே இறங்குவது, சேற்றில் மாட்டிக் கொண்டிருப்பது, நிர்வாணமாக அலைந்து கொண்டிருப்பது, கப்பலில் இக்கட்டான சூழலில் சிக்கியிருப்பது – இப்படி எத்தனையோ கனவுகள்!

வானத்திலிருந்து நட்சத்திரங்கள் உதிர்வது, சரீரம் மெலிந்து இருப்பது, புறா, கழுகு, காகம் ஆகியவற்றைப் பார்ப்பது, அரக்கனைப் போன்ற மனிதனைப் பார்ப்பது, நெருப்பு, வறண்டு போன நதி, பற்களைக் கடிப்பது, ஒட்டகத்தின் மீது அமர்ந்து செல்வது,
கழுதையின் மீது அமர்ந்து பயணிப்பது, பள்ளத்தில் மாட்டிக் கொள்வது, நெருப்பில் நடப்பது, மரணத்தைப் பார்ப்பது – இவற்றைக் கனவில் கண்டால் மனித உடலில் ஏதாவது பிரச்சினைகள் இருக்கின்றன என்று அர்த்தம்.

ஊஞ்சலில் அமர்ந்திருப்பது, பாட்டு பாடிக் கொண்டிருப்பது, பொருட்களை உடைத்தல், கருப்பு நிற துணி அணிந்த பெண், அந்த பெண்ணுடன் உடலுறவு கொள்ளுதல், எண்ணெய், சாணம், சோறு ஆகியவற்றை உடலில் பூசிக் கொள்ளுதல், கோழி, நாய், பாம்பு, நரி, ஓநாய், பூனை, கீரி, ஈ, தேள் ஆகியவற்றைக் கனவில் காண்பவர்களும் உண்டு. இவை வந்தால், ஏதாவது தவறு நடக்கும் என்று அர்த்தம்.

விருப்பமான பொருட்கள் காணாமல் போது, சவரம் செய்வது, இனிப்பு சாப்பிடுவது, காய்ந்த மரம், இரும்பு அடிக்கும் கொல்லன், மலை மீது ஏறுவது – இவை  பிரச்சினைகளை அறிவிக்கும் கனவுகள்!

ஒரு மனிதருக்கு இப்படிப்பட்ட கனவுகள் வருவதற்கு ஜாதகத்தில் பல காரணங்கள் இருக்கின்றன. ஒருவரின் உடலில் கபம், பித்தம், வாய்வு சரியாக இல்லாமலிருந்தால், தூக்கத்தில் பல கனவுகள் வரும்.

ஒரு மனிதரின் ஜாதகத்தில் லக்னாதிபதியான கிரகம் நீசமாகவோ, அஸ்தமாகவோ இருந்தால், அந்த ஜாதகத்தில் பலவீனமாக இருந்து, அவருக்கு ரோகாதிபதி தசை நடந்தால், படுத்த பிறகு உடலில் வாய்வு தொல்லை அதிகமாகும்போது,  இரவில் கனவுகள் வரும். ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் 3, 6, 8, 12 இல் இருந்தால், அந்த சந்திரன் பலவீனமாக இருந்தால், அவருக்கு கனவுகள் அதிகமாக வரும்.

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரனிலிருந்து சனி 8 இல் இருந்தால், அவருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்கும். அவர் தான் சம்பாதித்த பணத்தை இழந்து விடுவோமோ என்றும், நம்மை யாராவது ஏமாற்றி விடுவார்களோ என்றும் நினைப்பார். அதனால், தூக்கத்தில் கெட்ட கனவுகள் வரும்.

ஒரு மனிதருக்கு ஏழரை நாட்டு சனி நடக்கும்போது, மாரகாதிபதி தசை நடந்தால், அவர் ஊரை விட்டு வெளியேறுவதைப் போல கனவு காண்பார். ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரன் சேர்ந்து இருந்தால், பல பெண்களுடன் இருப்பதைப் போல கனவு வரும். கனவில் பெண்களிடம் அவர் ஏமாந்து விடுவார். தன் மனைவி தன்னை விட்டு விலகிப் போய் விடுவாளோ என்ற பயத்துடன் அவர் இருப்பார்.

செவ்வாய், சுக்கிரன், ராகு 6, 8, 12 இல் இருந்தால், சண்டை போடுவதைப் போலவும், மற்றவர்களுடன் வாதம் செய்வதைப் போலவும், தன்னை யாரோ ஏமாற்றுவதைப் போலவும் ஒருவர் கனவு காண்பார்.

ஜாதகத்தில் சனியும், ராகுவும் 12வது வீட்டைப் பார்த்தால், தூக்கத்தில் கனவுகள் வரும். பேய், பிசாசு, பாம்புகள் கனவில் வரும். நிர்வாணமாக நடப்பதைப் போல கனவு காண்பார்.

சனி, ராகு, சந்திரன் 12இல் இருந்தால், தான் சேற்றில் மாட்டிக் கொண்டதைப் போல ஒருவர் கனவு காண்பார். குளத்தில் விழுவதைப் போல கனவு காண்பார். சுக்கிரன், சந்திரன், புதன் 12 லோ அல்லது 6 லோ இருந்தால், தூக்கத்தில் பெண்கள் தொல்லை தருவதைப் போல கனவு வரும். 12இல் ராகு, 6இல் சனி இருந்தால், முன்னோர்கள் வந்து கனவில் அழைப்பார்கள்.

சந்திரன், ராகு 12இல் இருந்து, செவ்வாயால் பார்க்கப்பட்டால், சிங்கம், புலி துரத்துவதைப் போலவும், கழுதை, ஒட்டகத்தில் தான் சவாரி செய்வதைப் போலவும், மலைப் பகுதியில் மாட்டிக் கொண்டதாகவும் ஒருவர் கனவு காண்பார். புதன், சந்திரன், சனி 6, 8, 12 இல் இருந்தால் அல்லது சந்திரனுக்கு முன்பும் பின்பும் பாவ கிரகம் இருந்தால், தினமும் கனவு தொல்லைகள் இருக்கும்.

 

பரிகாரங்கள்

1) உரிய நேரத்தில் சாப்பிட வேண்டும். படுப்பதற்கு முன்பு கை, கால்களைக் கழுவிவிட்டு சாப்பிட வேண்டும். வெல்லம் சாப்பிட வேண்டும்.  ஆஞ்சனேயரின் பெயரைக் கூறி விட்டு படுக்கவேண்டும்.

2) வீட்டில் தென்கிழக்கில் நீர் பிடித்து வைக்கக் கூடாது.

3) மேற்கு திசையில் தலை வைத்து படுத்தால், கனவு வரும். தெற்கு, கிழக்கு திசைகளில் தலையை வைத்து படுக்க வேண்டும்.

4) பாம்பு, சேறு, நீரில் மூழ்குவது – இவற்றைக் கனவு காண்பவர்கள் தினமும் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

5) கழுதை, பாம்பு, தேள், நீர், நிர்வாணம் ஆகியவற்றை கனவில் காண்பவர்கள் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி, வழிபட வேண்டும்.

6) வீட்டில் தேவையற்ற பொருட்களை நீக்கி விடவேண்டும்.

7) படுக்கையறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தலைப் பகுதியில் நீர் பிடித்து வைக்கக் கூடாது.

8) லக்னாதிபதியின் ரத்தினத்தை அணிய வேண்டும்.

9) வீட்டில் மகாம்ருத்யஞ்ஜெய யந்திரத்தை வைக்க வேண்டும்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.